மென்மைக்குள், வன்மையும்
வன்மைக்குள்,மென்மையும்
தாய்மைக்குள், நேர்மையும்
நேர்மைக்குள்,தாய்மையும்
என அனைத்தும் கலந்த கலவையை பெண்மை!!
பெண்ணை
உடல் வலிமையற்றவள் என
யார் சொன்னது ?
புதுஉயிரை பெற்றெடுக்க ,
தன் உடல் உருக்கி,
உயிர் உறையும்,
பிரசவவலி கொண்டு ,
கண்கள் சொருகும்,
மயக்க நிலையிலும் பெற்றெடுத்த மழலையின்
பூ முகம் பார்த்து ,
வலிகளை மறந்து ,
புன்னகைப்பாளே!
அதை விடவா ,உடல் வலிமைக்கு சான்று வேண்டும்?
ஒரு குழந்தை பெற்றெடுத்த போது அனுபவித்த, அத்தனைவலியும்
நினைவில் நின்றாலும் இன்னொரு குழந்தை பெற இன்முகத்தோடு துணிந்து நிற்பாளே பெண்!
அதை விடவா மனவலிக்கு சான்று வேண்டும்??
ஆதலால்,
பெண்ணை
உடல் வலிமையற்றவள்
மனவலிமையற்றவள்
என யாரும் சொல்லாதீர் எப்போதும்!
உலகையே ஆளும் திறமை இருந்தாலும் ,
சமையலறை கரண்டியே
அவள் செங்கோலாய்,
இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இங்கே வேரூன்றி இருக்கிறது!
அந்த வேருக்கு
வெந்நீர் ஊற்றுங்கள்!
பெண்களே ,உங்கள் சிந்தைக்குள் புரட்சி நெருப்பை ஏற்றுங்கள்!
ஆடைகள் குறைப்பதும் ஆபரணங்கள் நிறைப்பதும் அலைபேசியில் தொலைவதும் முன்னேற்றத்தின் அடையாளம் இல்லை!
அறிவியல் அறிவு கொள்வதும்
போர்த்தொழில் பழகுவதும்
எண்ணங்களில் மேன்மை,
எழுத்தில், இலக்கியத்தில் ,விஞ்ஞானத்தில்,
தொழில்நுட்பத்தில் ,என எதிலுமே தேர்ச்சி அடைவதே
முன்னேற்றத்தின் முகவரிகள்!
அந்த முகவரிகளே,
உங்கள் முகங்களை உலகிற்கு காட்டும் கண்ணாடிகள்!
அழகியல் தேடி உங்கள் இயல்பியல் தொலைக்காதீர்!
உங்களால்,சுயமரியாதையை ,
எப்பொழுதும் ,எந்த கணமும் விட்டுக்கொடுக்காமல்
வாழ முடிகிறதா? அப்படியென்றால்
உலகிலேயே அழகி நீங்கள்தான்!
பெண்ணின் பேரழகு
அவள் சுயமரியாதையில் இருக்கிறது!
என்கணவருக்கு நானின்றி
வாழத்தெரியாது என
பெண் சொன்னால், அது மனைவியாய் ,அவளின் வெற்றி!
என் குழந்தைகள் நானின்றி இருக்க மாட்டார்கள்
என பெண் சொன்னால்,
அது தாயாய், அவள் அடையும் வெற்றி!
ஆனால்,
அவளாய், அவளுக்காக ,
அவள் அடையும் வெற்றி எது?
அவளாய், அவளுக்காக
அவள் வாழும் கணங்கள் எத்தனை?
தனக்கே, தனக்கென்று ,
ஒரு தனி அடையாளத்தை எத்தனைபேர் தேடிக்கொள்கிறார்கள் ?
அதை எப்போதும் தன்னுடனே,தக்க வைத்துக் கொள்கிறார்கள்?
சொற்பமான, சிலரே,
சிற்பமாய் மாறி நிற்கிறார்கள்!
மற்றவர்கள்
அர்ப்பணித்து வாழ்வதாக எண்ணி, அற்பமாய் வாழ்ந்தே,
இத்துப் போகிறார்கள்!
பணிச்சுமையும்,வீட்டுச் சுமையும் என்னை நிமிடமும் ,நிமிர விடாமல் அழுத்தும்போது ,
எனக்கான நேரம்
எங்கே இருக்கிறது?
என்பதே,இங்கே,
பெண்கள் மனதில் இருக்கும் கேள்வி!
தன்னைச்சுற்றி, கூடுகட்டி வாழும் கூட்டுப்புழு கூட ,
பறக்கத் தோன்றினால், அதை உடைத்து, பட்டாம்பூச்சியாய் மாறி ,
வானை சிறகால்
அளந்து திரிகிறது!
மண்ணுக்குள் ஆழமாய் ,
புதைத்து வைக்கப்பட்ட விதைதான் ,
முளைக்க, ஆசைப்பட்டால் மண்ணை பிளந்து ,
வெளியே வருகிறது!
அவற்றுக்கெல்லாம் உதவ , இங்கே யாரும் இல்லை!
இங்கே நமக்கு உதவவும்
யாருமில்லை!
நமக்கான நேரத்தை,
நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்!
நமக்கான அடையாளத்தை நாம்தான் செதுக்கிக் கொள்ள வேண்டும்!
திரிகள் கருகாது
தீபங்கள் ஒளிராது!
இமைகள் பிரியாது
காட்சிகள் தெரியாது!
இரவின் இறுதியில்
விடியலின் வரவு!
வேதனைகளின் ரணத்தில் சாதனைகளின் ஜனனம்!
ஆதலால்,
இதுவரை
ஆணின் வெற்றிக்குப் பின்னால் நின்றவர்களே!
உங்கள் வெற்றிக்கு,
கொஞ்சம்,
நீங்களே முன்னால் வாருங்கள்!
நீங்கள் நினைத்தால்,
பெண்களே நீங்கள் நினைத்தால்,
மலையைத் தகர்த்து
துகள்கள் ஆக்கலாம்!
துகள்களை சேர்த்து,
மலையாய் மாற்றலாம்!
மண்ணில் உள்ளவர்களை ஆள மணிமகுடம் சூட்டலாம்!
விண்ணைத்தாண்டி
வெற்றிக் கொடியும் நாட்டலாம்!
நீங்கள் நினைத்தால் ,
பெண்களே
நீங்கள்
நினைத்தால் மட்டுமே!!