• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பொய்மான் கரடு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பொய்மான் கரடு

சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் வழியில், டிரைவர் கல்கிக்கு பொய்மான் கரடைக் காட்டுகிறார். விசித்திரமான அந்தப் பாறையைப் பற்றி உள்ளூருக்குள் வழங்கி வரும் கதையை அப்படியே பயணத்தின் போது டிரைவர் எடுத்துவிட, அது ‘பொய்மான் கரடு‘ எனும் அமர இலக்கியமாக நமக்கு கிடைத்து விட்டது. கதாநாயகன் செங்கோடன் ஐந்து ஏக்கரா காட்டுக்கு ராஜா;அநாதை;கருமி. கதாநாயகி செம்பவளவல்லி அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவள். இவர்களுக்கு இடையில் குமாரி பங்கஜா என்னும் மாயமான் வர, அதைத் துரத்திக் கொண்டு ஓடும் செங்கோடன், பங்கஜாவின் கூட்டாளிகளின் திட்டத்தை முறியடிக்கப் போய் கொலைகாரனாகிறான் “குமாரி பங்கஜாவின் கூட்டாளிகள் யார்? அவர்களின் திட்டம் என்ன? செங்கோடன் சேர்த்து வைத்த புதையல் என்ன ஆனது? செங்கோடன் கொலை வழக்கிலிருந்து விடுபட்டானா?” இது போன்ற பல முடிச்சுகளை அழகாய் அவிழ்த்திருக்கின்றார் ‘பொய்மான் கரடு’ நாவலில் கல்கி. இருக்கிறத விட்டுட்டு, பறக்கறதுக்கு ஆசைப்படுறவங்களுக்கு ‘பொய்மான் கரடு’ பாடம்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முன்னுரை



ஆஸ்தான கவிஞர்களுக்குப் பாராட்டு உபசாரங்கள் நடத்துவதும் அவர்களுக்குப் பணமுடிப்பு அளிப்பதும் மிக நல்ல சம்பிரதாயங்கள். அத்தகைய வைபவத்துக்கு என்னையும் அழைத்துவிட்டார்களானால், அதன் மகிமையைச் சொல்லத்தரமன்று!

ஆஸ்தான கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு அவருடைய சொந்த ஊராகிய நாமக்கல்லில் பாராட்டு உபசாரம் நடத்தினார்கள். அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். நானும் சென்றிருந்தேன். இவையெல்லாம் நடந்திராவிட்டால் உலகத்துக்கு எப்பேர்பட்ட அமர இலக்கியம் நஷ்டமாய்ப் போயிருக்கும் என்பதை நினைத்தால் நெஞ்சு திடுக்கிடுகிறது!

நான் எழுதுகிற கதைகள் அமர இலக்கியங்கள் என்பது அடியேனுடைய தாழ்மையான அபிப்பிராயம். (தாழ்மையான அபிப்பிராயமே இப்படியிருந்தால் உயர்வான அபிப்பிராயம் எப்படியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா!) மற்றக் கதைகள் விஷயம் எப்படியிருந்தாலும், இந்தப் 'பொய்மான் கரடு' என்கிற கதை, அமர இலக்கியம் என்பது பற்றிச் சிறிதும் ஐயம் இல்லை.

'அமர இலக்கியம்' என்பது என்ன? பச்சைத் தமிழில் 'சாகாத இலக்கியம்' என்று சொல்லலாம் நல்லது! இந்தப் 'பொய்மான் கரடு' என்னும் கதையில் ஒரு பயங்கரமான கொலை நடக்கிறது; ஆனாலும் யாரும் சாகவில்லை! ஒரு பயங்கரமான தீ விபத்து நேரிடுகிறது; அதிலும் ஒருவராவது சாகவில்லை! ஒரு பெரிய கேணி, வாயை 'ஆ' என்று திறந்து கொண்டிருக்கிறது; அதுவும் ஏமாந்து போகிறது! கதாபாத்திரங்கள் அவ்வளவு பேரும் கதை முடிவில் நன்றாகப் பிழைத்திருக்கிறார்கள்! இப்படிப்பட்ட கதையை 'அமர இலக்கியம்' என்று சொல்லாவிட்டால், வேறு எதைச் சொல்லுவது?

மேனாட்டுக் கீழ்நாட்டுப் பிரபல கதை ஆசிரியர் பலர், 'நான் கதை எழுதுவது எப்படி' என்பது பற்றி எழுதியிருக்கிறார்கள். என்னையும் அப்படிப்பட்ட பிரபல ஆசிரியராக்கி விடவேண்டுமென்று சதியாலோசனை செய்த சில நண்பர்கள், 'நீர் கதை எழுதுவது எப்படி?' என்று கேட்பது உண்டு. 'நான் கதையே எழுதுவதில்லையே என் கையில் பிடித்த பவுண்டன் பேனா அல்லவோ எழுதுகிறது?' என்று பதில் சொல்லிச் சமாளிப்பேன். அதைக்கூடச் சிலர் நம்புவதில்லை. 'நீர் உண்மையில் பவுண்டன் பேனாவைக் கொண்டுதானா எழுதுகிறீர்? சில சமயம் நீர் போடுகிற போட்டைப் பார்த்தால், கடப்பாரையைப் பிடித்துக்கொண்டு எழுதுவது போலத் தோன்றுகிறதே!' என்பார்கள்.

அது எப்படியாவது இருக்கட்டும். இந்தப் 'பொய்மான் கரடு' என்னும் கதையை நான் எழுதியது எப்படி என்று மட்டும் சொல்லிவிடுகிறேன்.

ஆஸ்தான கவிஞர் ஸ்ரீராமலிங்கம்பிள்ளை அவர்களுக்கு நாமக்கல்லில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு நான் சென்றபோது வழியில் 'பொய்மான் கரடு' என்னும் இடத்தைப் பார்த்தேன். அந்தக் காட்டின் குகையில் தோன்றிய மாயமானையும் பார்த்தேன். அந்த மாயமான் மலைக் குகையிலிருந்து என் மனக் குகையில் வந்து புகுந்து கொண்டது. மிகவும் தொந்தரவு படுத்திக்கொண்டிருந்தது. எத்தனைதான் நல்ல வார்த்தையாகச் சொல்லியும் என் மனதைவிட்டுப் போக மறுத்துவிட்டது. கனவிலும் நனவிலும் வேண்டாத இடங்களிலும் எதிர்பாராத சமயங்களிலும் அந்தப் பொய்மான் என் கவனத்தைக் கவர்ந்து பிராணனை வாங்கிக்கொண்டிருந்தது. ஒரு நாள் எனக்குக் கடுங்கோபம் வந்து, 'ஓ, பொய்மானே! நீ என் மனதை விட்டுப்போகிறாயா இல்லையா? போகாவிட்டால் உன்னைப்பற்றி ஒரு கதை எழுதி ஊர் சிரிக்க அடித்து விடுவேன்!' என்று சொன்னேன். அதற்கும் அந்தப் பொய்மான் அசைந்து கொடுக்கிறதாக இல்லை. கடைசியில் ஒரு கதை எழுதியே தீர்த்தேன். பாத்திரங்கள் பெரும்பாலும் சேலம் ஜில்லாவைச் சேர்ந்த பாத்திரங்கள். திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நான் தங்கியிருந்த காலத்தில் பார்த்துப் பழகிய பாத்திரங்கள்.

பாத்திரங்கள் சிலர் முரடர்களாயிருப்பதாகவும், கதையும் சில இடங்களில் கரடு முரடாயிருப்பதாகவும் வாசகர்களுக்குத் தோன்றினால், அது கதை நடந்த இடத்தின் கோளாறே தவிர, என் குற்றமன்று என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சமயம் பொய்மான்கள் எதிர்ப்படுகின்றன. அந்தச் சமயத்துக்கு அவை உண்மையாகவே தோன்றுகின்றன. அந்தப் பொய் மான்களைத் துரத்திக்கொண்டு நாம் ஓடுகிறோம். துரத்திப் போகும்போது அம்மம்மா, எத்தனை பரபரப்பு! எவ்வளவு மனக்கிளர்ச்சி! என்ன தீவிர உணர்ச்சி! ஆனால் எவ்வளவு தூரம் தேடிப் போனாலும் பொய்மான் வெறும் மாயைத் தோற்றந்தான் என்பதைக் கடைசியில் உணர்கிறோம். ஏமாற்றம் அடைகிறோம்.

நம்மில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்பட்ட கடமையை உணர்ந்து அதை நன்கு நிறைவேற்ற முயல்வோமானால், அதில் மனத்திற்கு உண்டாகும் திருப்தியும் நிம்மதியும் வேறெதிலும் ஏற்படுவதில்லை. இந்த உண்மையைப் 'பொய்மான் கரடு' என்னும் இக்கதையை எழுதும் போது நான் நன்கு உணர்ந்தேன்.

ரா. கிருஷ்ணமூர்த்தி
'கல்கி'
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முதல் அத்தியாயம்


ஒரே தொழிலைச் சேர்ந்தவர்கள் நாலு பேர் ஓரிடத்தில் கூடினால் தங்கள் தொழிலைப் பற்றிப் பேசுவது இயற்கையேயாகும். நகைக் கடை வியாபாரிகள் நாலு பேர் ஓரிடத்தில் சேர்ந்தால் தங்கம், வெள்ளி விலைகளைப் பற்றிப் பேசுவார்கள். மளிகைக் கடைக்காரர்கள் துவரம் பருப்பு மிளகாய் வற்றல் அல்லது மிளகு விலையைப் பற்றிப் பேசுவார்கள். பத்திரிகையாளர்கள் சிலர் ஓரிடத்தில் கூடினால் அந்த அந்தப் பத்திரிகைகளின் 'சர்க்குலேஷன்' என்ன, யார் அதிகப் பொய் சொல்லுகிறார்கள் என்பது பற்றி விவாதிப்பார்கள்.

ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் ஐந்தாறு பேர் சேர்ந்தால் எதைப்பற்றிப் பேசுவார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? சில நாளைக்கு முன்னால் ஒரு 'டீ பார்ட்டி'க்குச் சென்றிருந்தேன். கொஞ்சம் தாமதித்துச் சென்றபடியால் எங்கே உட்காரலாமென்று அங்குமிங்கும் பார்க்க வேண்டியதாயிற்று. ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் சிலர் சேர்ந்திருந்த மூலையிலே தான் ஓர் இடம் காலியாக இருந்தது. அங்கே சென்று உட்காரும்படி நேர்ந்தது.

அவர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் தெரியுமா? 'கொலைக் கேஸுகளைப் பற்றித்தான். கொலை வழக்குகள் எந்த எந்த ஜில்லாக்களில் குறைந்திருக்கின்றன எந்த ஜில்லாக்களில் அதிகமாயிருக்கின்றன என்னும் விஷயத்தைப்பற்றி அபிப்பிராய பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். 'மதுவிலக்குச் சட்ட அமுலுக்குப் பிறகு திருநெல்வேலி ஜில்லாவில் கொலைக் குற்றங்கள் குறைந்திருக்கின்றன' என்று ஒரு ஹைக்கோர்ட் ஜட்ஜு அபிப்பிராயப்பட்டார். அதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. "கோயமுத்தூர் ஜில்லாவில் கொலைக் குற்றங்கள் முன்போலவே இருக்கின்றன; குறையவும் இல்லை. அதிகமாகவும் இல்லை" என்றார் ஒரு ஹைக்கோர்ட் ஜட்ஜு. அதையும் யாரும் ஆட்சேபிக்கவில்லை.

இன்னொருவர், "சேலம் ஜில்லாவில் கொலைக் குற்றம் அதிகமாகியிருக்கிறது" என்று சொன்னார். "அப்படியா? அது எப்படி சாத்தியம்?" என்று ஒருவர் கேட்டார். "எப்படி என்றால், அப்படித்தான்! உண்மை அப்படியிருக்கிறது!" என்று முதலில் பேசிய ஹைக்கோர்ட் ஜட்ஜு கூறினார். இதற்கு அப்பீல் ஏது?

பார்ட்டி முடிந்தது. அவரவர்களும் எழுந்துசென்றார்கள். ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் தனித்தனியே பிரிந்ததும் வெவ்வேறு விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்யத் தொடங்கியிருப்பார்கள். ஆனால் சேலம் ஜில்லாவில் கொலை அதிகமாயிருக்கிறது என்று ஒரு ஜட்ஜு சொன்ன வார்த்தையை என்னால் மறக்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு சேலம் ஜில்லாவுக்கு நான் போயிருந்தேன். அங்கே தற்செயலாக ஒரு கதை கேள்விப்பட்டேன். அந்தக் கதையில் முக்கியமான சம்பவம் ஒரு கொலைதான்! குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்படாத மர்மமான கொலை! அதன் வரலாறு என் மனத்தில் வந்து வட்டமிட்டது. அதை சுற்றிச் செங்கோடக் கவுண்டன், செம்பவளவல்லி, பங்காருசாமி, சுந்தரராஜன், குமாரி பங்கஜா முதலியவர்கள் வட்டமிட்டு வந்தார்கள். இதற்கெல்லாம் பின்னணியில் பொய்மான் கரடு, ஒரு பெரிய கரிய பூதம் தன்னுடைய கோரமான பேய் வாயைத் திறந்துகொண்டு நிற்பது போல் நின்று கொண்டேயிருந்தது.

சேலத்திலிருந்து நாமக்கல்லுக்கு ஒரு சிநேகிதரின் மோட்டார் வண்டியில் போய்க்கொண்டிருந்தேன். காலை நேரம். வானத்தை நாலாபுறமும் மேகங்கள் மூடியிருந்தன.

"இந்த ஜில்லாவில் மழை பெய்து ஆறு மாதம் ஆயிற்று. இன்றைக்குத்தான் மேகம் மூடியிருக்கிறது. மழை பெய்தால் நல்லது. ஒருவேளை மேகம் இன்றைக்கும் ஏமாற்றிவிட்டுப் போய்விடுமோ, என்னமோ?" என்று மோட்டார் டிரைவர் கூறினான்.

"இந்த ஜில்லாவில் மட்டும் என்ன? தமிழ்நாடு முழுவதிலுந்தான் மழை இல்லை!" என்றேன்.

"மற்ற ஜில்லாக்களில் மழை இல்லாததற்கும் இந்த ஜில்லாவில் மழை இல்லாததற்கும் வித்தியாசம் உண்டு ஸார்! இங்கே கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. இன்னும் கொஞ்சநாள் மழை பெய்யாவிட்டால் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது!" என்றான்.

மேகத்துக்கும் மழைக்கும் மனிதனுடைய வாழ்க்கைக்கும் உள்ள நெருங்கிய சம்பந்தத்தைப் பற்றிச் சிந்தனை செய்யத் தொடங்கினேன். கார் 'விர்' என்று போய்க்கொண்டிருந்தது. சாலையின் இருபுறங்களிலும் சேலம் ஜில்லாவில் சாதாரணமாகத் தென்படும் காட்சிகள்தான். விஸ்தாரமான சமவெளிப் பிரதேசங்கள், இடையிடையே கரிய நிற மொட்டைப்பாறைகள். சோளமும் பருத்தியும் முக்கியமான பயிர்கள். மழையில்லாமையால் சோளப் பயிர்கள் வாடி வதங்கிக் கொண்டிருந்தன.

பாலைவனத்து ஜீவ பூமிகளைப்போல் அபூர்வமாக அங்கங்கே பசுமையான சிறு தோப்புகள் காணப்படும். அந்தத் தோப்புகளுக்கு மத்தியில் ஒரு கேணி இருக்கிறதென்று ஊகித்தறியலாம். ஒவ்வொரு கேணியைச் சுற்றிலும் ஐந்தாறு தென்னை, ஒரு வேம்பு, இரண்டு வாழை, அப்பால் சிறிது தூரம் பசுமையான பயிர் இவற்றைக் காணலாம். கேணிகளில் கவலை ஏற்றம் போட்டுத் தண்ணீர் இறைத்துக் கொண்டிருப்பார்கள். கேணிகளில் ஒரு சொட்டு ஜலம் இருக்கும் வரையில் விடாமல் சுரண்டி எடுத்து வயலுக்கு இறைத்து விடுவார்கள்!

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு, குடியானவர்களின் வாழ்க்கையில் உள்ள இன்ப துன்பங்களைப் பற்றி எண்ணிக்கொண்டு, மணிக்கு முப்பது மைல் வேகத்தில் போய்க்கொண்டிருந்தேன். அரை மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு தூற்றல் போடத் தொடங்கியது. சாலையில் சென்றவர்கள் மழைக்குப் பயந்து ஓடவும் இல்லை; ஒதுங்க இடம் தேடவும் இல்லை. வேகமாய் நடந்தவர்கள் கூடச் சிறிது நின்று வானத்தை அண்ணாந்து பார்த்து மழையின் இன்பத்தை அநுபவித்தார்கள்.

சற்றுத் தூரத்தில் ஆடுகள் ஓட்டிக்கொண்டு போன சிறுவன் ஒருவன் குஷாலாகப் பாட ஆரம்பித்தான்.

தூற்றல் போட்டுக் கொண்டிருக்கும்போதே மேகங்கள் சற்று விலகிச் சூரியன் எட்டிப் பார்த்தது. காலைச் சூரிய கிரணங்களில் மழைத் துளிகள் முத்துத் துளிகளாக மாறின. வானம் அச்சமயம் முத்து மழை பெய்வதாகவே தோன்றியது.

சாலை ஓரத்துக் கிராமம் ஒன்று வந்தது. ஒரு பக்கத்தில் பத்துப் பன்னிரண்டு குடிசை வீடுகள் இருந்தன. ஒரு குடிசையின் வாசலில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் பெரியவர் ஒருவர் உட்கார்ந்து மழையை அநுபவித்துக் கொண்டிருந்தார். கட்டிலில் விரித்திருந்த ஜமக்காளத்தை கூட அவர் சுருட்டவில்லை.

குடிசைகளை யொட்டியிருந்த சில்லறைக்கடை ஒன்றில் ஒரு வாழைப்பழக் குலையும், ஒரு முறுக்கு மாலையும் தொங்கிக் கொண்டிருந்தன. வீதி நாய் ஒன்று முறுக்கு மாலையை எட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருந்தது. அதைக்கூடக் கவனியாமல் கடைக்காரப் பையன் மழையைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

மோட்டார் வண்டி நின்றது. சாலையின் ஒரு பக்கத்தில் குடிசைகள் இருந்தன என்று சென்னேனல்லவா? இன்னொரு பக்கத்தில் ஒரு செங்குத்தான கரிய பாறை. அதற்கு முன்புறம் ஓர் அரசமரமும் வேம்பும் பின்னித் தழுவி வளர்ந்திருந்தன. அரச வேம்பு மரங்களைச் சுற்றிக் கருங்கல் மேடை எடுத்திருந்தது.

டிரைவர் வண்டியிலிருந்து இறங்கினான். வேறு ஏதோ காரியமாக இறங்குகிறான் என்று நினைத்தேன்.

"ஸார்! கொஞ்சம் கீழே இறங்குங்கள்! உங்களுக்கு ஒரு வேடிக்கை காட்டுகிறேன்!" என்றான்.

வேண்டா வெறுப்புடன், "இந்த வம்புக்காரனிடம் அகப்பட்டுக் கொண்டோ மே?" என்று அலுத்துக்கொண்டு வண்டியிலிருந்து இறங்கினேன்.

"என்ன வேடிக்கை? எங்கே?" என்று கேட்டேன்.

"அதோ பாருங்கள்!" என்று சாலைக்கு ஐம்பது அடி தூரத்தில் செங்குத்தாக உயர்ந்திருந்த கரிய பாறையைக் காட்டினான்.

"என்னத்தைப் பார்க்கிறது? மொட்டைப் பாறையாக நிற்கிறதே! ஒரு மரம் செடி புல் பூண்டுகூடக் காணோமே?" என்றேன்.

"இல்லை, ஸார்! அவசரப்படாமல் நிதானமாய்ப் பாருங்கள்! பாறையில் ஒரு பொந்து மாதிரி இருக்கிறதே அதற்குள் பாருங்கள்! நீங்கள் கதை எழுதுகிறவர் ஆச்சே, அதற்காகத்தான் பார்க்கச் சொல்லுகிறேன். உங்கள் மாதிரி ஆட்கள்தான் இதைப் பார்க்கவேண்டும்!", என்றான்.

இதைக் கேட்டதும் நானும் அவன் சொல்வதில் ஏதோ இருக்கவேண்டும் என்று கவனமாகப் பார்த்தேன். கரிய பாறையின் இருண்ட பொந்துக்குள் ஏதோ ஒன்று தெரிந்தது.

"தெரிகிறதா? மான் தெரிகிறதா?" என்று டிரைவர் கேட்டான்.

ஆம்; அவன் சொன்னபிறகு பார்த்தால் அந்தப் பாறையின் பொந்துக்குள்ளேயிருந்து ஒரு மான் எட்டிப் பார்ப்பது நன்றாய்த் தெரிந்தது. ஆனால் அந்த மான் அசையாமல் நகராமல் நின்ற இடத்திலேயே நின்றது.

"ஆமாம்; அந்தப் பொந்தில் மான் நிற்பது தெரிகிறது. உள் பாறையில் அப்படி மான்போல் செதுக்கி வைத்திருக்கிறதா?" என்று கேட்டேன்.

"அதுதான் இல்லை. அருகில் போய்ப் பொந்துக்குள் பார்த்தால் ஒன்றுமே இல்லை. வெறும் இருட்டுத்தான் இருக்கிறது. இங்கிருந்து பார்த்தால் மட்டும் அந்த மாயமான் தெரிகிறது!" என்றான்.

"நீ சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. அதோ மான் நிற்பது நன்றாகத் தெரிகிறதே! அங்கிருந்து நம் பேரில் அப்படியே தாவிக் குதிக்கத் தயாராக நிற்கிறதே!" என்றேன்.

"அதுதான் ஸார், வேடிக்கை! அதற்காகத்தான் உங்களை இறங்கிப் பார்க்கச் சொன்னேன். உண்மையில் அந்தப் பொந்துக்குள் ஒன்றுமேயில்லை. இங்கிருந்து பார்த்தால் மான் நிற்பது போலத் தெரிகிறது. இன்றைக்கு நேற்றைக்கு இல்லை. வெகுகாலமாக இப்படி இருக்கிறது. அதனாலேதான் இந்தப் பாறைக்குப் 'பொய்மான் கரடு' என்ற பெயரும் வந்திருக்கிறது. உங்களையும் என்னையும் போல் எத்தனை ஆயிரம் பேர் எத்தனை காலமாக இங்கே நின்று அந்தப் பொய் மானைப் பார்த்து ஏமாந்து போயிருக்கிறார்களோ?" என்றான் டிரைவர்.

"நான் ஒன்றும் ஏமாறவில்லை! கட்டாயம் அங்கே ஒரு மான் இருக்கிறது!" என்றேன்.

"உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை போல் இருக்கிறது. வாருங்கள், என்னுடன்!" என்றான்.

அவனைப் பின்பற்றித் தட்டுத் தடுமாறி மலைப் பாறையில் ஏறினேன். குகைக்குச் சமீபத்தில் சென்று எட்டிப் பார்த்தேன். அதற்குள் ஒரு மான் - பாறையில் செதுக்கிய மான் - கட்டாயம் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு பார்த்தேன். ஆனால் ஏமாந்துதான் போனேன். வெறும் இருட்டைத் தவிர அந்தப் பொந்துக்குள் வேறு ஒன்றுமே இல்லை.

"இப்போது நம்புகிறீர்களா?" என்று டிரைவர் கேட்டான்.

கீழே இறங்கி வந்தோம். சாலையில் நின்று மறுபடியும் பார்த்தேன். பொய் மான் சாக்ஷாத்தாக நின்று எட்டிப் பார்த்து என்னைக் கேலி செய்தது.

முண்டும் முரடுமாக நின்ற நெடும் பாறையில் ஏதோ ஒரு பகுதியின் நிழல் அந்தப் பொந்துக்குள் விழுந்து மாயமான் தோற்றத்தை உண்டாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

இதற்குள்ளே அந்த ஊரிலுள்ள சின்னப் பசங்கள் எல்லோரும் வந்து எங்கள் வண்டியைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களை விலக்கிவிட்டு டிரைவர் வண்டிக் கதவைத் திறந்தான். நான் ஏறி உட்கார்ந்ததும் வண்டி நகர்ந்தது.

"ஒருவராவது இந்த நாளில் ராமேசுவரம் காசி போகிறதில்லை. ஆனால் ஊருக்கு ஊர் பிள்ளைகள் வசவசவென்று பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்!" என்றான் டிரைவர்.

என்னுடைய ஞாபகமெல்லாம் அந்தப் பொய்மான் பேரிலேயே இருந்தது. அதைப்பற்றி உள்ளூரில் ஏதாவது கதை வழங்கி வரவேண்டும் என்று நினைத்தேன்.

"அந்தப் பொய்மான் கரடு ரொம்ப விசித்திரமானதுதான். அதைப்பற்றி ஏதாவது பழைய கதை உண்டா?" என்று கேட்டேன்.

"பழைய கதை ஒன்றும் இல்லை. நான் கேள்விப் படவில்லை. ஆனால் புதிய கதை ஒன்று உண்டு; ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால் நடந்தது. ஐயாவுக்குக் கேட்க இஷ்டம் இருந்தால் சொல்லுகிறேன்" என்றான்.

"இது என்ன வார்த்தை? இஷ்டம் இருந்தால் என்ன வந்தது? நான் தான் காதைத் தீட்டிக்கொண்டு காத்திருக்கிறேனே! நடக்கட்டும்; நடக்கட்டும்! காரை மட்டும் எதிரே வரும் லாரிகளுடன் மோதாமல் ஜாக்கிரதையாக விட்டுக்கொண்டு கதையைச் சொல்; கேட்கலாம்! நாமக்கல் போய்ச் சேருவதற்குள்ளே கதை முடிந்துவிடும் அல்லவா? அப்படியானால் சரி, உடனே ஆரம்பி கதையை!" என்றேன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இரண்டாம் அத்தியாயம்



பொய்மான் கரடுக்குச் சுமார் ஒரு மைல் தூரத்தில் செங்கோடக் கவுண்டனின் காடும் கிணறும் இருந்தன. சேலம் ஜில்லாவில் காடு என்றால், வயல், நிலம், பண்ணை என்று அர்த்தம். செங்கோடனுடைய ஐந்து ஏக்கரா நிலம் அவனுக்குத் தியாக வீர மான்யமாகக் கிடைக்கவில்லை. ஆயினும் அவனுடைய பெற்றோர்கள் அந்த நிலத்தைப் பண்படுத்துவதற்கும் கேணி எடுப்பதற்கும் செய்த தியாகங்களின் பலனை இன்றைக்குச் செங்கோடன் அனுபவித்து வந்தான். அவனுடைய ஐந்து ஏக்கரா நிலத்தில் பொன்னும் மணியும் முத்தும் பவளமும் விளையும். இவற்றைக் காட்டிலும் விலை உயர்ந்த பொருள்களான நெல்லும் சோளமும் பருத்தியும் மிளகாயுங்கூட விளையும். செங்கோடனுடைய கேணி, புதையல் எடுக்கும் கேணி. வருஷம் முழுவதும் அதில் புதையல் எடுத்துக்கொண்டே இருக்கலாம். அப்படி வற்றாமல் தண்ணீர் சுரக்கும் கேணி அது. மூன்று வருஷமாக மழை பெய்யாமல் சுற்று வட்டாரத்துக் கேணிகளில் எல்லாம் தண்ணீர் வற்றிவிட்ட போதிலும் செங்கோடன் கேணியில் மட்டும் தண்ணீர் சுரந்து கொண்டேயிருந்தது. செங்கோடனும் தினந்தோறும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வீணாக்காமல் வயல்களுக்கு இறைத்துக் கொண்டிருப்பான். மூன்று போகம் பயிர் செய்து பலன் எடுப்பான்.

செங்கோடன் அநாதை. அவனுடைய தாய் தந்தையர் காலமாகிவிட்டனர். அக்கா, தங்கை, அண்ணன், தம்பி பிச்சுப் பிசிறு ஒன்றும் கிடையாது. வயதான கிழ அத்தை ஒருத்தி சில காலம் அவன் வீட்டில் இருந்து சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்குச் சோறு போட மனம் இல்லாமல் செங்கோடன் அவளை அடித்து விரட்டிவிட்டான் என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். ஆனால் உண்மை அப்படியல்ல; அந்த அத்தைக் கிழவி தன் தங்கை மகளைச் செங்கோடன் கழுத்தில் கட்டி விடப் பிரயத்தனம் செய்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனாலேதான் அவளைத் துரத்தி விட்டான்.

செங்கோடனைக் கலியாண வலையில் சிக்கவைத்து இல்லறத்தில் அமர்த்திவிட இன்னும் பல முயற்சிகளும் நடந்து கொண்டிருந்தன. அதே ஊரிலும் சுற்று வட்டாரத்திலும் பல பெண்கள் அவனுக்காக மற்றவர்களால் பேசப்பட்டார்கள். ஆனால் செங்கோடன் ஒன்றுக்கும் பிடிகொடுக்கவேயில்லை; யாருடைய வலையிலும் சிக்கவில்லை. கடைசியில் அவன் இந்தக் கலியாணப் பேச்சுத் தொல்லை பொறுக்க முடியாமல் ஒரு காரியம் செய்தான். ஊருக்குள் இருந்த குடிசையைக் காலி செய்துவிட்டு அவனுடைய காட்டின் நடுவில் கேணிக் கரையில் ஒரு குடிசை போட்டுக்கொண்டு குடியிருக்கத் தொடங்கினான். அதிலிருந்து செங்கோடனுக்கு மனநிம்மதி ஏற்பட்டது. ஆனால் ஊரில் கெட்டபெயர் பரவிற்று. அவன் தரித்திரம் பிடித்த கருமி என்றும், பெண்டாட்டியைக் கட்டிக் கொண்டால் அவளுக்குச் சோறு போட வேணுமே என்பதற்காகப் பிரமச்சாரி வாழ்க்கை நடத்துகிறான் என்றும் அக்கம்பக்கத்து ஊர் ஜனங்கள் பேசிக்கொண்டார்கள். இது ஒன்றும் செங்கோடன் காதில் விழவில்லை. அவன் உண்டு, அவன் கேணி உண்டு, அவன் விவசாயம் உண்டு என்று வாழ்க்கை நடத்தி வந்தான்.

ஆனாலும் அவனுடைய மனநிம்மதி ஒவ்வொரு சமயம் குலைவதற்குக் காரணமாயிருந்த ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் செம்பவளவல்லி. 'செம்பா' என்று கூப்பிடுவார்கள். செம்பா பெரிய குடும்பத்தில் பிறந்தவள். தாய், தகப்பன், பாட்டி, அத்தை, தம்பிமார்கள், தங்கைமார்கள் வீடு நிறைய இருந்தார்கள். செம்பாவின் தகப்பனுக்குக் காடு, கேணி எல்லாம் இருந்தபோதிலும் பெரிய குடும்பம் ஆகையால் ஓயாமல் தரித்திரம் குடி கொண்டிருக்கும். வயலில் எவ்வளவு விளைந்தாலும் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவதற்குக் காணாது. வீட்டில் சாப்பாட்டுக்கு ஆட்கள் அதிகமே தவிர, உழைக்கக் கூடியவர்கள் அதிகமில்லை. இப்படிப்பட்ட பெரிய குடும்பத்தில் ஓயாத தரித்திரத்துக்கும் ஒழியாத கூச்சலுக்கும் மத்தியில் செம்பவளம் வாழ்ந்து, வளர்ந்து வந்தாள். சேற்றுத் தவளைகளுக்கு மத்தியில் செந்தாமரையைப் போலவும், குப்பைக் கோழிகளுக்கு மத்தியில் தோகை மயிலைப் போலவும், சப்பாத்திக் கள்ளிகளுக்கு மத்தியில் செம்பருத்திச் செடியைப் போலவும் அவள் பிரகாசித்து வந்ததாகச் செங்கோடன் அடிக்கடி எண்ணுவான்.

இவ்வாறு தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருந்த செம்பாவைக் கலியாணம் செய்துகொள்வது பற்றியும் அவன் அடிக்கடி யோசனை செய்யாமல் இல்லை. அவன் மனத்தில் தானாக அந்த யோசனை உதித்திராவிட்டாலும், செம்பாவின் பெற்றோர்களும் உற்றார் உறவினரும் அவனைச் சும்மா விடவில்லை. செங்கோடனை அவர்களில் யாராவது சந்திக்க நேர்ந்த போதெல்லாம், "ஏண்டா அய்யாக் கவுண்டன் மகனே! எங்கள் செம்பவளவல்லியை நீ கட்டிக்கொள்ளப் போகிறாயா, இல்லையா? இரண்டில் ஒன்று கறாராகச் சொல்லிவிடு! எத்தனை நாள் அவளைக் கன்னி கழியாமல் உனக்காக வைத்திருப்பது? நீ இல்லாவிட்டால் இன்னும் எத்தனையோ பேர் 'கண்டேன் கண்டேன்' என்று கொத்திக் கொண்டு போய்விடக் காத்திருக்கிறார்கள்" என்று பச்சையாகக் கேட்டுவிடுவார்கள். ஆனால் செங்கோடன் அதற்கெல்லாம் கொஞ்சமும் அசைந்து கொடுப்பதில்லை. "அப்படி மேலே விழுந்து யாராவது பெண் கேட்க வந்தால் கட்டிக்கொடுத்து அனுப்புங்களேன்! நானா குறுக்கே விழுந்து மறிக்கிறேன்?" என்று பிடிகொடாமல் பதில் சொல்லுவான்.

எல்லோரும் சேர்ந்து சூழ்ச்சி செய்து செம்பாவைத் தன் கழுத்தில் கட்டிவிடப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பீதி செங்கோடன் மனத்தில் குடிகொண்டிருந்தது. செம்பாவைக் கட்டிக் கொள்வதில் அவனுக்கு ஆசை இல்லாமல் இல்லை. பகலில் கேணியிலிருந்து தண்ணீர் இறைக்கும் போதும் சரி, காட்டில் மண்வெட்டி பிடித்து வேலை செய்யும் போதும் சரி, இரவில் தூக்கத்தில் கனவிலும் சரி, செம்பாவின் முகமும் புன்சிரிப்பும் கண் சுழற்றலும் அவன் மனத்தில் அடிக்கடி வந்து கொண்டிருக்கும். குடிசைக்குள் அடுப்பு மூட்டி உலைப்பானையைப் போடும் போதெல்லாம், 'வீட்டில் ஒரு பெண்பிள்ளை இருந்தால் எவ்வளவு சல்லிசாக இருக்கும்! இந்த அடுப்பு மூட்டும் வேலையெல்லாம் நாம் செய்ய வேண்டியதில்லையல்லவா?' என்று தோன்றும். ஆனாலும், கலியாணம் என்று செய்துகொண்டால் செம்பாவின் குடும்பத்தார் அனைவரும் தன் வீட்டில் வந்து உட்கார்ந்து அட்டூழியம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்றும், நாலைந்து வருஷமாகத் தான் அரும்பாடு பட்டு இராப்பகலாக உழைத்துச் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைப் பரிசம் என்றும், சேலை என்றும், கலியாண விருந்து என்றும் சொல்லிச் சூறையிட்டு விடுவார்கள் என்றும் அவன் மனத்தில் பெரும் பீதி குடிகொண்டிருந்தது. செம்பாவின் பேரில் அவனுக்குள்ள ஆசையும், சேர்த்துப் புதைத்து வைத்திருந்த பணத்தின்மேல் அவனுக்கிருந்த ஆசையும் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டிருந்தன. இரண்டையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவன் விரும்பினான். ஆனால் எதாவது ஒன்றைக் கை விட்டுத்தான் ஆகவேண்டும் என்று ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று தயங்கினான். சில சமயம், 'செம்பாவைப்போல் நூறு பெண்கள் கிடைப்பார்கள்; ஆனால் வெள்ளி ரூபாய் எண்ணூறு இலேசில் கிடைக்குமா? நாலு வருஷம் பாடுபட்டால் அல்லவா கிடைக்கும்?' என்று தோன்றும். 'பணமாவது பணம்! பணம் இன்றைக்கு இருக்கும்; நாளைக்குப் போகும். ஆனால் செம்பாவைப் போல் ஒரு பெண் ஆயிரம் வருஷம் தவம் செய்தாலும் கிடைப்பாளா?' என்று இன்னொரு சமயம் அவனுக்குத் தோன்றும். இந்த இரண்டுவித எண்ணங்களுக்குமிடையே நிச்சயமான ஒரு முடிவுக்கு வர முடியாமல் செங்கோடன் திகைத்தான்; திணறினான்; திண்டாடினான்.

இப்படி இருக்கும்போது ஒருநாள் காலையில் செங்கோடன் கேணியிலிருந்து தண்ணீர் இறைத்துவிட்டு, மாட்டைக் கவலை ஏற்றத்திலிருந்து அவிழ்த்து விட்டு, விட்டு, கிணற்றங்கரையில் மரத்து நிழலில் இளைப்பாற உட்கார்ந்தான். அப்போது அவன் மனம் தன்னை அறியாமல் செம்பாவின்மேல் சென்றது. 'பணச்செலவைப் பாராமல் செம்பாவைக் கட்டிப்போட்டு வைத்திருந்தால் இச்சமயம் கஞ்சியோ, கூழோ, அல்லது நீராகாரமோ கொண்டு வருவாள் அல்லவா?' என்று நினைத்தான். அந்தச் சமயத்தில் ஏதோ பின்னால் சலசலவென்று சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கே இடுப்பில் சோற்றுக் கூடையுடன் செம்பா நின்றாள்.

மனத்தில் எவ்வளவு வியப்பும் மகிழ்ச்சியும் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், "அப்படியா! ஓகோ! நீதானா? யாரோ என்று பார்த்தேன்" என்றான் செங்கோடன்.

"என்னைப் பார்ப்பதற்குப் பிடிக்கவில்லையாக்கும்? நான் வந்தது பிசகுதான்!" என்றாள் செம்பா.

"யார் சொன்னது பிடிக்கவில்லை என்று? வா வா! வந்து விடு! இங்கே வந்து என் பக்கத்தில் உட்காரு!" என்றான் செங்கோடன்.

"இல்லை, நான் போகிறேன்!" என்று அரை மனத்துடன் செம்பா திரும்பிப்போகப் பார்த்தாள்.

செங்கோடன் எழுந்து ஓடிச் சென்று அவளை வழி மறித்து நின்று, "வா! வா! வந்துவிட்டுக் கோபித்துக் கொண்டு போகலாமா?" என்று சொல்லி, அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான்.

சிறிது நேரம் அவர்கள் சும்மா இருந்தார்கள். உச்ச ஸ்தாயில் முறை வைத்துப் பாடிய இரண்டு குயில்களின் குரல் கேட்டது. அணிப்பிள்ளைகள் 'கிளிக்' 'கிளிக்' என்று சப்தித்தன. குருவி ஒன்று 'சிவ்' என்று பறந்து சென்றது.

"செம்பா! எங்கே இப்படி வந்தாய்? ஏதாவது காரியம் உண்டா?" என்றான் செங்கோடன்.

"ஒரு காரியமும் இல்லை; சும்மா உன்னைப் பார்க்கத் தான் வந்தேன்?"

"காரியம் இல்லாமல் வெறுமனே பார்ப்பதற்கு வருவார்களா?"

"ஏன் வரமாட்டார்கள், கவுண்டா! போன சனிக்கிழமை சின்னமநாயக்கன்பட்டிக்கு சினிமா பார்க்கப் போயிருந்தோம். அதிலே மோகனாங்கி என்று ஒருத்தி வருகிறாள். அவள் தன் புருஷனுக்காக என்னென்ன கஷ்டமெல்லாம் படுகிறாள், தெரியுமா? அதைப் பார்த்து விட்டு அழாதவர்கள் கிடையாது."

"ஓஹோ! சினிமா பார்க்கப் போயிருந்தீர்களா? ஏதோ கூடார சினிமா வந்திருக்கிறது என்று சொன்னார்களே அதற்கா போனீர்கள்? யார் யார் போயிருந்தீர்கள்?"

"அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பி, எல்லாருமாகத்தான் போயிருந்தோம். தலைக்கு இரண்டே காலணா டிக்கெட். மொத்தம் ஒரு ரூபாயும் மூன்று அணாவும் செலவு. 'போனால் போகட்டும்! இந்த மாதிரி அதிசயக் காட்சிகளை எங்கே பார்க்கப் போகிறோம்? ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் பார்க்க முடியுமா?' என்று அப்பா சொன்னார். நிஜமாக எவ்வளவு நன்றாயிருந்தது தெரியுமா? நீ கூடப் போய்ப் பார்த்துவிட்டு வா" என்றாள் செம்பவளம்.

"உங்களுக்கென்ன, கொழுத்த பணக்காரர்கள்! இஷ்டப்படி செலவு செய்கிறீர்கள்! நான் எங்கே போக அம்மட்டுப் பணத்துக்கு?" என்றான் செங்கோடன்.

நமது சென்னை முதன் மந்திரி கனம் குமாரஸ்வாமி ராஜாவும் நமது கதாநாயகன் செங்கோடக் கவுண்டனும் சினிமா விஷயத்தில் ஒன்றுபட்டவர்கள். இரண்டு பேரும் சினிமா பார்த்தது கிடையாது!

ஊர் உருப்படாமல் போய்க்கொண்டிருப்பதற்கும் காலா காலத்தில் மழை பெய்யாமல் தேசம் நாசமாய்ப் போய்க் கொண்டிருப்பதற்கும் சினிமாதான் காரணம் என்பது செங்கோடனுடைய சிந்தாந்தம்!
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
மூன்றாம் அத்தியாயம்



செங்கோடக் கவுண்டன் சினிமாவைப் பற்றித் தன் கொள்கையை வெளியிட்டதும் செம்பவளவல்லியின் முகம் சுருங்கிற்று. சற்றுத் தலையைக் குனிந்துகொண்டு சும்மா இருந்தாள்.

பிறகு, "கவுண்டா! ஊரிலே எல்லாரும் உன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டாள்.

"ஊரிலே இருக்கிறவர்கள் என்ன பேசிக்கொண்டால் எனக்கு என்ன? நான் எதற்காக அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ள வேண்டும்?" என்றான் செங்கோடன்.

"அப்படியில்லை, கவுண்டா! நாலுபேர் பேசுவது உனக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்!"

"அப்படியானால் நீதான் சொல்லேன், நாலு பேர் பேசுவது உனக்குத் தெரியும் போல் இருக்கிறதே!"

"தெரியாமல் என்ன? ஊரெல்லாம் பேசிக்கொள்வது என் காதில் விழாமல் இருக்குமா? நீ இங்கே கேணிக் கரையில் வந்து தனியாகக் குடிசை போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பதனால் உன் காதில் விழவில்லை."

"என்னதான் ஊரில் பேசிக்கொள்கிறார்கள், சொல்லி விடேன்! இவ்வளவு தூரம் ஏன் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகிறாய்?"

"எனக்குச் சொல்லவே தயக்கமாயிருக்கிறது. வாய் கூசுகிறது. நீ கருமியாய்! பணத்தாசை பிடித்தவனாம், விநாயகருக்குக் கலியாணம் ஆகிறபோதுதான் உனக்கும் கலியாணமாம். யாராவது ஒருத்தியைக் கட்டிக் கொண்டால் அவளுக்குச் சோறு போட்டுத் தொலைக்க வேணுமே என்பதற்காக நீ கலியாணம் பண்ணிக்கொள்ளாமல் தானே பொங்கித் தின்று கொண்டிருக்கிறாயாம்! நீ பணத்தைச் சேர்த்து புதைத்து வைத்திருக்கிறாயாம். புதையலைப் பூதம் காக்குமாம். ஒரு நாளைக்கு அந்தப் பூதம் உன்னையும் அடித்துக் கொன்றுவிடுமாம். நீ இரத்தம் கக்கிச் சாவாயாம்! போதுமா? இப்படியெல்லாம் கண்டபடி ஜனங்கள் பேசுகிறார்கள்; எனக்குக் கேட்கச் சகிக்கவில்லை" என்று சொல்லி விட்டுச் செம்பவளவல்லி விம்மத் தொடங்கினாள். அவளுடைய கண்களிலிருந்து முத்து முத்தாகக் கண்ணீர் வடிந்தது.

"சேச்சே! ஊரிலே எந்த நாயாவது ஏதாவது குரைத்தால், அதற்காக நீ ஏன் அழ வேண்டும்? அழாதே, செம்பா!" என்றான் செங்கோடன். செம்பாவின் கண்ணீர் செங்கோடனுடைய பணத்தாசை பிடித்த மனத்தைக் கூடக் கொஞ்சம் கரைத்துவிட்டது. அவளுடைய கண்ணீரைத் துடைக்கலாமா, வேண்டாமா என்று தயங்கித் தயங்கிக் கையை நீட்டினான்.

செம்பாவின் விம்மல் சிறிது குறைந்தது. "கவுண்டா! நாங்கள் பார்த்த சினிமாவில் மோகனாங்கி கண்ணீர் விட்டபோது மதனசுந்தரன் என்ன செய்தான் தெரியுமா?" என்று சொல்லிக்கொண்டே செம்பா செங்கோடனுடைய கைகளைப் பிடித்து இழுத்து சினிமாவில் கதாநாயகன் செய்தது போல் செய்து காட்டினாள்.

"சீச்சீ! அவர்களுக்கெல்லாம் வெட்கம், மானம் ஒன்றும் இராதுபோல் இருக்கிறது. மிருக சென்மங்கள் போல் இருக்கிறது. ஆயிரம் பேர் பார்த்துக் கொண்டிருக்கையில் இப்படியா செய்வார்கள்?" என்றான் செங்கோடன்.

"நிஜமாக இல்லையே? திரையிலே தானே?" என்றாள் செம்பா.

"திரையிலே என்றாலும் ஆயிரம் பேர் பார்க்கிறார்கள் இல்லையா?"

"ஆயிரம் பேர் என்ன? லட்சம் பேர் பார்க்கிறார்கள். உன்னைத் தவிர எல்லாரும் சினிமா பார்க்கிறார்கள். அது கிடக்கட்டும், தள்ளு!.....கவுண்டா! ஊரார் பேசுகிறதெல்லாம் பொய்தானே? உன் பேரிலே பொறாமையினால்தானே அவர்கள் அப்படியெல்லாம் பேசுகிறார்கள்?"

"எதைப்பற்றிச் சொல்கிறாய்?"

"பெண்டாட்டிக்குச் சோறுபோடப் பயந்துகொண்டு நீ கலியாணம் பண்ணிக்கொள்ளாமல் இருக்கிறாய் என்கிறார்களே! அதுதான்...."

"முட்டாப் பயல்களுக்குப் பிறந்த பயல்கள்தான் அப்படிச் சொல்வார்கள்! நான் உன்னைக் கட்டிக்கொண்டால், அதனால் எனக்கு லாபமா, நஷ்டமா? இன்றைக்கெல்லாம் உன் சாப்பாட்டுக்காக மாதம் ஏழு, எட்டு ரூபாய் ஆகலாம். நீ செய்கிற வேலையினால் எனக்கு இருபது ரூபாய் மிச்சமாகுமே? இந்தக் கணக்குத் தெரியாத சோம்பேறிப் பயல்கள் ஏதாவது உளறினால் அதை நீ ஏன் காது கொடுத்துக் கேட்க வேண்டும்? அதற்காக ஏன் வருத்தப்பட வேண்டும்?" என்று செங்கோடன் ஆத்திரமாகப் பேசினான்.

"எங்கே அந்தக் கணக்கு உனக்கும் தெரியவில்லையோ என்று பார்த்தேன். அத்தனை பெரிய குடும்பத்தில் இரவும் பகலும் உழைத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு என்று சொந்தக் குடித்தனம் ஏற்பட்டுவிட்டால் இன்னும் எப்படி உழைப்பேன்? என்னால் உனக்கு ஒரு நஷ்டமும் இராது. ஓர் எருமை வாங்கி கட்டிக்கொண்டால் அதிலே மட்டும் மாதம் இருபது ரூபாய்க்கு மேலே செட்டுப் பிடிக்கலாம். என்னால் உனக்கு லாபமே தவிர நஷ்டம் ஒன்றும் ஏற்படாது" என்றாள் செம்பவளவல்லி.

"அதெல்லாம் நான் யோசனை செய்துதான் வைத்திருக்கிறேன். செம்பா! வேறொரு காரியத்தை உத்தேசித்துக் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறேன். என் காட்டைச் சேர்ந்தாற்போல் சேலம் முதலியாருக்கு ஓர் ஏக்கரா நிலம் இருக்கிறது. அது எனக்கு ரொம்ப இடைஞ்ச மடைஞ்சலாயிருக்கிறது. கேணியிலிருந்து என் நிலத்துக்குத் தண்ணீர் இறைக்கச் சுற்றி வளைத்துக்கொண்டு வாய்க்கால் போகிறது. தண்ணீர் ரொம்ப வீணாகிறது. அந்த ஓர் ஏக்கரா நிலத்தை வாங்கிவிட்டேனானால் அப்புறம் கவலை இல்லை. பிறகு நம்முடைய கலியாணத்துக்குத் தேதி வைக்க வேண்டியதுதான்."

"அதற்காக ரொம்ப நாள் தள்ளிப் போடுவது நல்லதல்ல. நீ கலியாணப் பேச்சை எடுக்க மாட்டாய் என்று சொல்லி, அப்பா எனக்கு வேறு இடம் பார்க்க ஆரம்பித்து விட்டார்....."

"நான் ஒருவன் இருக்கிறபோது, வேறு எந்தப் பயல் மகன் வந்து உன்னைக் கட்டிக்கொண்டு போய்விடுவான்? யாராவது உன் கிட்ட வந்தால் அரிவாளால் ஒரே வெட்டாய் வெட்டிப் போட்டுவிட மாட்டேனா? அந்த எண்ணத்தை மட்டும் உன் அப்பன் அடியோடு விட்டு விடட்டும்" என்றான் செங்கோடக் கவுண்டன்.

செம்பவளவல்லியின் முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. "உன்னுடைய மனசு எனக்குத் தெரிந்திருக்கிறபடியால் தான் நானும் பொறுமையாயிருக்கிறேன். வேறு மாப்பிள்ளை தேடும் பேச்சே உதவாது என்று வீட்டில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கவுண்டா! காலையிலேயிருந்து நீ பசியோடுதானே வேலை செய்துகொண்டிருந்தாய்? இந்தா, இந்தக் கஞ்சியில் கொஞ்சம் குடி" என்று பரிவுடன் சொன்னாள்.

"உங்கள் வீட்டுக் கஞ்சி எனக்கு வேண்டாம். உன் அப்பன் உன்னைச் சண்டை பிடிப்பான்."

"அதெல்லாம் யாருக்கும் தெரியாது. அப்படித் தெரிந்து கேட்டால் கஞ்சி சாய்ந்து கொட்டிவிட்டது என்று சொல்லி விடுகிறேன்."

"இதோ பார், செம்பா! இப்போதான் எனக்கும் நினைவு வந்தது; நம்ம தென்னையிலிருந்து ஓர் இளநீர் பிடுங்கிக் கொண்டு வந்து உனக்கு வெட்டித் தருகிறேன்" என்று செங்கோடன் கையில் அரிவாளுடன் எழுந்தான்.

"நன்றாயிருக்கிறது! யாராவது இளநீரைப் பிடுங்குவார்களா? இளநீர் முற்றித் தேங்காய் ஆனால், சந்தையில் ஆறு அணாவுக்கு விலை போகுமே?" என்றாள் செம்பா.

"ஆறு அணாவைத் தள்ளு குப்பையில்! நமக்காகப் பணமா, பணத்துக்காக நாமா?" என்று சொல்லிக் கொண்டு செங்கோடன் சென்று கையெட்டுகிற தூரத்தில் காய்த்துத் தொங்கிய இளந் தென்னையிலிருந்து ஓர் இளநீர் அறுத்துக் கொண்டுவந்து தன் காதலிக்குக் கொடுத்தான். அதை அவன் தனக்காகச் செய்த ஒரு மகத்தான தியாகம் என்றே செம்பவளம் கருதி இறுமாந்து மகிழ்ந்தாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நான்காம் அத்தியாயம்


அன்று சாயங்காலம் செங்கோடக் கவுண்டன் சின்னம நாயக்கன்பட்டிக்குப் போனான். கொல்லனிடம் செப்பனிடக் கொடுத்திருந்த மண்வெட்டியை வாங்கிக்கொண்டு, ஹரிக்கன் லாந்தரில் மண்ணெண்ணெய் வாங்கிப் போட்டுக் கொண்டு, இன்னும் சில சில்லறைச் சாமான்களும் வாங்கி வருவதற்காகப் போனான். ஹரிக்கன் லாந்தரைச் சில்லறைச் சாமான் கடையில் வைத்துவிட்டுக் கொல்லன் உலைக்குப் போய்ச் செப்பனிட்ட மண்வெட்டியை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தான்.

அன்றைக்கெல்லாம் அவன் மனமாகிய வண்டு செம்பவளவல்லியின் முக மண்டலத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. ஒரு சமயம் கண்ணீர், ததும்பிச் சோகமயமாயிருந்த அந்தப் பெண்ணின் முகமும், மற்றொரு சமயம் மலர்ந்த புன்னகையுடன் குதூகலம் ததும்பிக் கொண்டிருந்த அவள் முகமும் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன. ஊரார் பேச்சைப் பொருட்படுத்தாதவன் போல் அவளிடம் செங்கோடன் வீம்பாகப் பேசியிருந்தபோதிலும் அவன் மனநிலையில் சிறிது மாறுதல் ஏற்பட்டுத்தான் இருந்தது. செம்பவளத்துக்கும் தனக்கும் திருமணத்தைக் கூடிய சீக்கிரத்தில் முடித்துவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு அவன் வந்துவிட்டான்.

இதே ஞாபகமாகச் சின்னம நாயக்கன்பட்டி வந்தவனுடைய கவனத்தை அந்த ஊர்ச் சாவடிச் சுவர்களிலும் சாலை மரங்களிலும் ஒட்டியிருந்த சினிமா விளம்பரங்கள் ஓரளவு கவர்ந்தன. அந்த வர்ண விளம்பரங்களில் ஒரு பெண் பிள்ளையின் முகம் முக்கியமாகக் காட்சி அளித்தது. அந்த முகம் அழகாயும் வசீகரமாயும் இருந்தது என்பதைச் சொல்லத்தான் வேண்டும். அப்படி வசீகரமாவதற்காக அந்த சினிமாக் கன்னிகை முகத்தில் எத்தனை பூச்சுப் பூசிக் கொண்டிருக்கிறாள், கண்ணிமைகளையும் புருவங்களையும் என்ன பாடுபடுத்திக்கொண்டிருக்கிறாள், உதடுகளில் எவ்வளவு வர்ணக் குழம்பைத் தடவிக் கொண்டிருக்கிறாள் என்பதெல்லாம் செங்கோடனுக்கு எப்படித் தெரியும்? 'செம்பவளம் பார்த்ததாகச் சொன்னாளே, அந்த சினிமாவில் வரும் மோகனாங்கி என்னும் பெண் இவள்தானோ? 'மோகனாங்கி' என்ற பெயர் இவளுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது; நான் கூட இந்த சினிமாவை ஒரு தடவை பார்த்துவிட வேண்டியதுதான், இரண்டே காலணாக் காசு போனால் போகட்டும்! இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்தக் கூடார சினிமா இந்த ஊரில் நடக்குமோ, என்னவோ விசாரித்துத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது...'

இப்படி நினைத்துக் கொண்டே சில்லறைக் கடையை நோக்கிச் சாலையோடு போய்க் கொண்டிருந்த செங்கோடன் 'பொய்மான் கரடு'க்குச் சமீபமாக வந்தான். அங்கே இருந்த அரசமரத்தின் அடியில் ஒரு காட்சியைக் கண்டான். அந்தக் காட்சி அவனை அப்படியே திகைத்து ஸ்தம்பித்து நிற்கும்படி செய்து விட்டது. அரசமரத்தின் கீழ்க் கிளையொன்றில் ஒயிலாகச் சாய்ந்துகொண்டு ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். சுவர்களில் ஒட்டியிருந்த சினிமா விளம்பரங்களில் கண்ட கன்னிதான் அவள் என்று செங்கோடனுக்குத் தோன்றியது. உண்மையில் அப்படியல்ல. ஆனால் அந்த சினிமாக் கன்னியைப் போலவே இந்தப் பெண்ணும் குறுக்கு வகிடு எடுத்துத் தலைவாரிப் பின்னிச் சடையைத் தொங்கவிட்டுக்கொண்டும், மேல் தோள்வரையில் ஏறிச் சென்றிருந்த ரவிக்கை தரித்துக் கொண்டும், காதில் குண்டலங்கள் அணிந்து கொண்டும், நட்சத்திரப் பூப்போட்ட மெல்லிய சல்லாச் சேலை அணிந்து கொண்டும், நெற்றியில் சுருட்டை மயிர் ஊசலாட, எங்கேயோ யாரையோ பார்த்து, எதையோ நினைத்துக் கொண்டிருந்தவள்போல் நின்றபடியால், அவளே சினிமா விளம்பரத்தில் உள்ள பெண் என்று செங்கோடனுக்குத் தோன்றியது. பார்த்தது பார்த்தபடி பிரமித்துப் போய்ச் சிறிது நேரம் நின்றான்.

அந்தப் பெண் தன்னைப் பார்த்து ஒரு பட்டிக்காட்டான் விழித்துக் கொண்டு நிற்பதைக் கவனித்தாள்.

"என்னப்பா, பார்க்கிறாய்?" என்று அவள் கேட்டாள்.

செங்கோடனுடைய காதில் கிணுகிணுவென்று மணி ஒலித்தது. பூங்குயில்களின் கீதம் கேட்டது.

எங்கிருந்தோ ஒரு முரட்டுத் தைரியம் அவனுக்கு ஏற்பட்டது.

"வேறு என்னத்தைப் பார்க்கிறது? உன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றான்.

அந்தப் பெண்ணுக்குப் பொங்கிவந்த கோபம் ஒரு கணத்தில் எப்படியோ மாறியது. அவள் முகம் மலர்ந்தது. பல் வரிசை தெரிந்தது.

அதைப் பார்த்த செங்கோடனும் முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டு புன்னகை புரிந்தான்.

"என்னப்பா, சிரிக்கிறாய்?" என்று அவள் கேட்டாள்.

"பின்னே, அழச் சொல்கிறாயா?" என்றான் செங்கோடன்.

"பாவம், அழ வேண்டாம்! உன் பெண்சாதி தேடிக் கொண்டு வந்துவிடப் போகிறாள்!"

"எனக்குக் கலியாணம் இனிமேல்தான் ஆகவேண்டும். எத்தனையோ பேர் பெண் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் தான் இதுவரையில் சம்மதிக்கவில்லை!" என்று செங்கோடன் சொல்லிவிட்டு அர்த்த புஷ்டி நிறைந்த பார்வையை அந்தப் பெண் மீது செலுத்தினான்.

ஆனால் அந்த அர்த்தம் அப்பெண்ணின் மனத்தில் பட்டதாக அவள் காட்டிக்கொள்ளவில்லை.

"ரொம்ப சரி; நீ சம்மதம் கொடுத்துக் கலியாணம் நிச்சயமாகிறபோது எனக்குக் கட்டாயம் கலியாண கடுதாசி போடு" என்றாள்.

"கடுதாசி கட்டாயம் போடுகிறேன். ஆனால் பெயரும், விலாசமும் தெரிந்தால் தானே கடுதாசி போடலாம் உன் பெயர் என்ன?" என்று செங்கோடன் கேட்டான்.

"பெரிய வம்புக்காரனாயிருக்கிறாயே? என் பெயர் குமாரி பங்கஜா. உன் பெயர் என்ன?"

'குமாரி பங்கஜா' என்று அவள் சொன்னது 'ராஜகுமாரி பங்கஜா' என்று செங்கோடன் காதில் விழுந்தது. 'அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்; நினைத்தது சரியாய்ப் போயிற்று' என்று மனத்தில் எண்ணிக் கொண்டான்.

"உன் பெயர் என்ன? சொல்லமாட்டாயா?" என்று மறுபடியும் குமாரி பங்கஜா கேட்டாள்.

"சொல்லுவதற்கு என்ன தடை? என் பெயர் ராஜா செங்கோடக் கவுண்டன்" என்றான்.

குமாரி பங்கஜா குலுங்கச் சிரித்தாள். "வெறும் ராஜாவா? மகாராஜாவா?" என்று கேட்டாள்.

"என்னுடைய பத்து ஏக்கரா காட்டிற்கு நான் தான் ராஜா, மகாராஜா, ஏக சக்ராதிபதி எல்லாம்!" என்றான் செங்கோடன் பெருமிதத்துடன்.

"சரி, போய், உன்னுடைய ராஜ்யத்தைச் சரியாகப் பரிபாலனம் பண்ணு! இங்கே நடு ரோட்டில் நின்றால் என்ன பிரயோஜனம்?" என்றாள் குமாரி பங்கஜா.

"ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் போய் விடுகிறேன்" என்றான் செங்கோடன்.

"அது என்ன கேள்வி?"

"சுவரிலே, மரத்திலேயெல்லாம் சினிமாப் படம் ஒட்டியிருக்கிறதே, அதிலே ஒரு அம்மா இருக்காங்களே, அது நீதானே?" என்று கேட்டான்.

"சேச்சே! அந்த மூவன்னா தேவி நான் இல்லவே இல்லை! நான் சினிமாவிலே நடித்தால் அவளைக் காட்டிலும் நூறு பங்கு நன்றாக நடிப்பேன்" என்றாள் பங்கஜா.

"சேச்சே! போயும் போயும் அந்தக் கேவலமான தொழிலுக்கு நீ போவானேன்?" என்றான் செங்கோடன்.

"எதைக் கேவலமான தொழில் என்று சொல்லுகிறாய்?"

"சினிமாவில் நடிக்கிறதைத்தான் சொல்கிறேன். சினிமாவில் நடித்தால் மானம், மரியாதையை விட்டு...."

"இதற்குத்தான் பட்டிக்காடு என்று சொல்கிறது" என்றாள் பங்கஜா.

இத்தனை நேரமும் அவளுடன் சரிக்குச் சரியாகச் சாமர்த்தியமாகப் பேசிக்கொண்டு வந்த செங்கோடன் இப்போது தான் பிசகு செய்துவிட்டதாக உணர்ந்தான். சினிமா விஷயமாகச் செம்பாகூடத் தன்னை இடித்துக் காட்டியது நினைவுக்கு வந்தது. ஆகையால், முதல் தர அரசியல்வாதியைப் போல் தன் கொள்கையை ஒரு நொடியில் மாற்றிக் கொண்டான்.

"எனக்குக்கூட சினிமா என்றால் ஆசைதான். இன்று இராத்திரி இந்த ஊர்க் கூடார சினிமாவுக்குப் போகப் போகிறேன்" என்றான்.

"அப்படியா? இந்த முக்கியமான செய்தியைப் பேப்பருக்கு அனுப்பிப் போடச் சொல்ல வேண்டியதுதான்" என்றாள் குமாரி பங்கஜா.

"பேப்பரிலே போட வேண்டியதில்லை; உனக்குத் தெரிந்தாலே போதும்!" என்றான் செங்கோடன்.

"எனக்கு ஏன் தெரிய வேணும்?"

"என்னை அங்கே பார்க்கலாம் என்பதற்காகச் சொன்னேன். நீயும் இன்றைக்கு இராத்திரி சினிமாவுக்கு வருவாயல்லவா?"

"நான் வராமல் சினிமா நடக்குமா? கட்டாயம் வருவேன்."

"அப்படியானால் அங்கே உன்னை அவசியம் பார்க்கிறேன்."

"டிக்கெட்டுக்குப் பணம்?"

"அதைப்பற்றிக் கவலைப்படாதே, டிக்கெட்டு நான் வாங்கி விடுகிறேன். இரண்டே காலணாவுக்குப் பஞ்சம் வந்து விடவில்லை."

குமாரி பங்கஜா வந்த சிரிப்பை அடக்கி கொள்ள முடியாதவளாய் வேறு பக்கம் பார்த்து வாயை மூடிக் கொண்டு சிரித்தாள்.

இதற்குள் அங்கே ஊர்ப் பிள்ளைகள் ஏழெட்டுப் பேர் கூடிவிட்டார்கள்.

அதைப் பார்த்த பங்கஜா இனி அங்கே நின்று அந்தப் பட்டிக்காட்டானோடு விளையாட்டுப் பேச்சுப் பேசக் கூடாதென்று மேடையிலிருந்து கீழிறங்கி நடக்கத் தொடங்கினாள்.

அவளோடு நாமும் போவோமா என்று செங்கோடன் ஒரு நிமிஷம் யோசித்தான். வீட்டுக்குத் திரும்பிப்போய் சினிமாவுக்குப் பணம் கொண்டு வரவேண்டிய அவசியத்தை உத்தேசித்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

குமாரி பங்கஜா ஐம்பது அடி தூரம் போனபிறகு "சினிமாக் கூடாரத்திலே அவசியம் சந்திக்கிறேன்" என்று ஒரு மைல் தூரம் கேட்கும்படி இரைந்து கூவினான்.

பங்கஜா திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்தாள்.

அந்தப் புன்னகையில் செங்கோடனுடைய உள்ளம் சொக்கித் தன்னை மறந்து லயித்தது.

அந்த நிலையில் அவன் சில்லறைக் கடைக்குச் சென்றான்.

"என்னப்பா, செங்கோடா, அந்த அம்மாவுடன் நெடு நேரம் பேசிக்கொண்டு நின்றாயே? என்ன பேசினாய்?" என்றான் கடை முதலாளி.

"என்னத்தைப் பேசுகிறது? வெறுமனே க்ஷேம சமாசாரந்தான் பேசிக்கொண்டிருந்தோம்."

"அந்த அம்மாளை முன்னாலேயே உனக்குத் தெரியுமா என்ன?"

"நல்ல கேள்வி! ரொம்ப நாளாய்ப் பழக்கமாயிற்றே!"

கடைக்குச் சாமான் வாங்க வந்த இன்னொரு மனிதரிடம் கடை முதலாளி, "கேட்டீர்களா, முதலியார், நம்ம ஊர்ப் பஞ்சாயத்து மானேஜர் புதிதாக வந்திருக்கிறார் அல்ல? அவருடைய தங்கை - ஒரு படித்த அம்மாள் - வந்திருக்கிறாள் அல்ல? அந்த அம்மாளுக்கும் நம்ம செங்கோடனுக்கும் வெகு நாளாய்ச் சிநேகிதமாம்!" என்று சொன்னார்.

"ஆமாம்; வெகுநாளாகச் சிநேகிதம்" என்று செங்கோடன் சொல்லிவிட்டு ஹரிக்கன் லாந்தரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான். மேலே அவர்கள் இன்னும் ஏதாவது அந்த அம்மாளைப் பற்றிக் கேட்டால் தன்னுடைய குட்டு உடைந்துவிடும் என்று கொஞ்சம் அவனுக்குப் பயம் இருந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஐந்தாம் அத்தியாயம்



அன்றைக்குச் செங்கோடன் தரையில் நடக்கவில்லை. வானத்தில் பறந்து கொண்டிருந்தான்; கடலில் அலைகளுக்கு மத்தியில் மிதந்து கொண்டிருந்தான்; மேகக் குதிரைகளில் சவாரி செய்தான்; மரத்துக்கு மரம், கிளைக்குக் கிளை தாவினான். தேர் திருவிழாக்களுக்குப் போவதற்காக அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்த சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு, சட்டைப் பையில் எட்டணாக் காசையும் எடுத்துப் போட்டுக் கொண்டு தலையில் ஜோராக முண்டாசு கட்டிக்கொண்டு ஒரு மணி நேரத்துக்கு முன்னாலேயே சினிமாவுக்குக் கிளம்பிச் சென்றான்.

பொய்மான் கரடு ஓரமாகப் போன சாலைக்கு அரை மைல் கிழக்கே செங்கோடனுடைய கேணியும் காடும் குடிசையும் இருந்தன. அந்தச் சாலைக்கு அரை மைல் மேற்கே சின்னம நாயக்கன்பட்டிக்கு வந்திருந்த 'டூரிங் சினிமா'வின் டேரா இருந்தது. செங்கோடன் அங்கே போய்ச் சேர்ந்தான். கொஞ்ச நேரம் கூடாரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். குமாரி பங்கஜா வந்திருக்கிறாளா என்று பார்ப்பதற்காகத்தான். ஆனால் அவளுடைய தரிசனம் கிட்டவில்லை. சினிமாப் பார்ப்பதற்காக வந்திருந்த சில ஸ்திரிகள் அங்குமிங்கும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடைய அருகில் சென்று செங்கோடன் உற்றுப் பார்த்தான். அவர்கள் இவனை சற்று ஏளனமாகப் பார்த்துச் சிரித்தார்கள். ஒருவருக்கொருவர் செங்கோடனைப் பற்றிப் பரிகாசமாகப் பேசிக் கொண்டார்கள். அவர்களில் ஒருத்தி அவனைப் பார்த்து, "என்ன மச்சான்! புகையிலை இருக்குதா?" என்று கேட்டாள். "தூ! பட்டிக்காட்டு ஜன்மங்கள்!" என்று செங்கோடன் முணுமுணுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

சினிமாப் பார்க்க வந்தவர்கள் எல்லாரும் டிக்கட் வாங்கத் தொடங்கினார்கள். செங்கோடன் மட்டும் காத்துக் கொண்டிருந்தான். முதல் மணி அடித்தாகி விட்டது. அப்படியும் அந்தக் குமாரி பங்கஜாவைக் காணவில்லை. ஒருவேளை அவள் வந்ததைத் தான் கவனிக்க வில்லையோ என்னவோ, டிக்கட் வாங்கிக்கொண்டு கூடாரத்துக்குள் போய்விட்டாளோ என்னவோ என்ற சந்தேகம் செங்கோடன் மனத்தில் உதித்தது. உடனே அவசரமாகச் சென்று இரண்டேகாலணா கொடுத்து ஒரு டிக்கட் வாங்கிக் கொண்டான். அப்போது கூட ஒருவேளை வெளியில் வந்து கொண்டிருக்கிறாளோ என்று பார்த்துக் கொண்டே விரைவாக நடந்து கூடாரத்துக்குள் சென்றான். இரண்டு மூன்று இடத்தில் அவன் நுழையப் பார்த்த இடங்களில் அவனுடைய டிக்கட்டைப் பார்த்துவிட்டு, "முன்னுக்குபோ!" "முன்னுக்குப்போ!" என்றார்கள். செங்கோடனும் எட்டி எட்டிப் பார்த்துவிட்டு, முன்னுக்குப் போனான். இரண்டே காலணா டிக்கட் வாங்கிய ஜனங்கள் அதற்குள் கொட்டகையில் நிறைந்துவிட்டார்கள் செங்கோடன் எல்லாருக்கும் முன்னாடி சென்று திரைக்குச் சமீபத்தில் உட்கார்ந்து கொண்டான். இவ்வளவு நேரம் கழித்து வந்தும் படத்துக்கு இவ்வளவு அருகாமையில் தனக்கு இடம் கிடைத்தது பற்றி மனத்திற்குள் சந்தோஷப்பட்டான்.

'அதிர்ஷ்டம் வரும்போது அப்படித்தான் வரும்' என்று எண்ணிக்கொண்டான். ஆனால் அதிர்ஷ்டம் பூரணமாகவில்லை என்பது நினைவு வந்தது. உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பி எழும்பி நாலாபுறமும் பார்வையைச் செலுத்தினான். குமாரி பங்கஜாவை எங்கும் காணவில்லை.

திரையில் படம் ஆரம்பமாயிற்று. செங்கோடன் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து பார்க்கையில் திரையில் வந்த ஒவ்வோர் உருவமும் செங்குத்தாக வளர்ந்து பூதாகார வடிவமாகத் தோன்றியது. பேசுவதற்கோ, பாடுவதற்கோ வாயைத் திறந்தபோது பூதம் வாயைப் பிளப்பதுபோலவே இருந்தது. ஆயினும் இதுதான் சினிமாவில் தமாஷ் என்று செங்கோடன் நினைத்துக் கொண்டான். மற்றவர்களைக் காட்டிலும் நாலு மடங்கு சிரித்தான். எட்டு மடங்கு கையைக் கொட்டினான். சினிமாவில் வந்த உருவங்கள் சொல்லும் வார்த்தையை இவனும் திருப்பிச் சொல்லத் தொடங்கினான். பக்கத்திலிருந்தவர்கள் அவனை அடக்கப் பார்த்தார்கள். "இந்தக் குடிகாரனை வெளியில் பிடித்துத் தள்ளு" என்றது ஒரு குரல். "அது யார் குடிகாரப்பயல் இங்கே வந்தது? நான் பிடித்துத் தள்ளுகிறேன்" என்று சொல்லிவிட்டுச் செங்கோடன் சுற்று முற்றும் பார்த்தான்.

கூடார சினிமாக்களில் சுமார் ஆயிரத்துச் சொச்சம் அடி படம் காட்டியதும் படத்தை நிறுத்திவிட்டு விளக்குப் போடுவார்கள். முதல் தடவை விளக்குப் போட்டதும் செங்கோடன் 'படம் முடிந்துவிட்டது' என்று எண்ணிக் கொண்டு எழுந்தான், பக்கத்திலிருந்தவர்கள் "உட்காரு உட்காரு!" என்று இரைந்தார்கள்.

"இன்னும் கொஞ்சம் படம் பாக்கி இருக்கிறதா?" என்று செங்கோடன் கேட்டான்.

"அட பட்டிக்காடு! ஆயிரம் அடிதான் ஆகியிருக்கிறது இன்னும் பதினேழாயிரம் அடி பாக்கியிருக்கிறது" என்றார் ஒரு சினிமா ரசிகர்.

"என்ன ஐயா, விளையாடுகிறாய்? பதினேழாயிரம் அடியை எவனாலே தாங்கமுடியும்? கடோ த்கசனாலே கூட முடியாதே" என்றான் செங்கோடன்.

இப்படிச் சொல்லிக்கொண்டே அவன் பின்னால் பார்த்தபோது, சினிமாக் கூடாரத்தின் அந்தப் பக்கத்து ஓரத்தில், குமாரி பங்கஜா உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அவளுக்குப் பக்கத்தில் இரண்டு ஆண் பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் அவர்களை அவன் பொருட்படுத்திக் கவனிக்கவில்லை.

"ஐயோ! பாவம்! அவ்வளவு தூரத்திலே போய் உட்கார்ந்திருக்கிறாளே! படம் ஒன்றுமே தெரியாதே! தாமதித்து வந்ததனால் அங்கேதான் இடம் கிடைத்ததுபோல் இருக்கிறது" என்று எண்ணி அநுதாபப்பட்டான். அவனுக்குப் பக்கத்திலேயிருந்த ஓர் ஆள் அவனுடைய ஆர்ப்பாட்டம் பொறுக்காமல் எழுந்து போய்விட்டான். அந்த இடம் காலியாக இருந்தது. செங்கோடன் சட்டென்று தன் தலையிலிருந்த முண்டாசை எடுத்து விரித்து அந்த இடத்தில் போட்டான். குமாரி பங்கஜா இருந்த இடத்தைப் பார்த்துக் கையினால் சமிக்ஞை செய்து கொண்டே, "வா! இங்கே இடம் இருக்கிறது, வந்து விடு!" என்றான். குமாரி பங்கஜா அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை; அவள் காதில் இவன் அழைப்பு விழுந்ததாகவும் தோன்றவில்லை. ஆனால் இவனுக்குப் பக்கத்திலிருந்தவர்கள் அத்தனை பேரும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள். "அந்தப் பட்டிக்காட்டான் தலையில் அடித்து உட்காரவை" என்றது ஒரு குரல்.

மறுபடியும் விளக்கு அணைந்தது; கூடாரம் இருண்டது; திரையில் படம் ஓடத் தொடங்கியது. செங்கோடனுக்கு இந்தத் தடவை படம் பார்ப்பதில் உற்சாகம் மிகக் குறைந்துவிட்டது. உண்மையில், படத்தின் பேரில் அவன் மனம் செல்லவே இல்லை. குமாரி பங்கஜா வெகுதூரத்தில் படம் தெரியாத இடத்தில் உட்கார்ந்திருக்கிறாளே என்ற கவலை அவனைப் பிடுங்கித் தின்றது.

அடுத்த தடவை விளக்கு எரியத் தொடங்கியதும், செங்கோடன் தன் தலைக்குட்டையை நன்றாகத் தரையில் இரண்டு பேருக்கு இடம் காணும்படி விரித்துவிட்டு எழுந்து போனான். கூடாரத்தின் பின்னால் சென்ற குமாரி பங்கஜா உட்கார்ந்திருந்த இடத்திற்குள் நுழையப் பார்த்தான். அங்கே காவலுக்கு நின்றவன் அவனைத் தடுத்தான்.

"எங்கே போகிறாய்?" என்றான்.

"அந்த அம்மாவிடம் பேசவேண்டும்" என்றான் செங்கோடன்.

"இங்கே பேச முடியாது. சினிமா கொட்டகையிலே பேச்சு என்ன வந்தது? வெளியில் வந்த பிறகு இஷ்டம் போலப் பேசிக்கொள்!"

"என்ன ஐயா! இப்படி ஏறுமாறாய்ப் பேசுகிறாய்! அங்கே திரைக்குப் பக்கத்தில் இடம் சௌகரியமாயிருக்கிறது. அந்த அம்மாளிடம் சொல்லி அழைத்துப் போக வந்தேன். நீ உள்ளேயே விடமாட்டேன் என்கிறாயே!"

அந்தா ஆசாமி செங்கோடனை ஏற இறங்கப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, "ஆமாம் அப்படித்தான்! உள்ளே விடமுடியாது! போ!" என்று சொன்னான்.

"என்ன ஐயா, யாரைப் பார்த்தாலும் ஒரே இளிப்பா இளிக்கிறீங்க! சினிமா என்றால் இப்படித்தானோ? என்னிடம் டிக்கட் இருக்கிறது, ஐயா!" என்று செங்கோடன் எடுத்துக் காட்டினான்.

"கோபித்துக்கொள்ளாதே, அப்பனே! நீ வைத்திருக்கிற டிக்கெட் இரண்டே காலணா டிக்கெட்; அந்த அம்மாள் ஒன்றே கால் ரூபாய் ஸீட்டில் உட்கார்ந்திருக்காங்க! நீ கூப்பிட்டால் வருவாங்களா, அப்பா! ஆமாம், நீ என்னத்துக்கு இவ்வளவு சிரமப்படுகிறாய்? உனக்கு அந்த அம்மாளைத் தெரியுமா?" என்றான்.

செங்கோடன் காதில் மற்றதெல்லாம் விழவில்லை. ஒன்றேகால் ரூபாய் டிக்கெட் என்பதுமட்டும் நன்றாக விழுந்தது. அவன் மனத்தில் ஏற்பட்ட ஆச்சரியம் அவனுடைய வாய் அகலமாகப் பிளந்ததிலிருந்து தெரிந்தது.

"என்ன ஐயா, நிஜமாகச் சொல்கிறாயா? அல்லது கேலி செய்கிறாயா? இவர்கள் எல்லாரும் தலைக்கு ஒன்றே கால் ரூபாய் கொடுத்துவிட்டா இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறார்கள்?" என்றான் செங்கோடன்.

"இவர்கள் எதற்காக டிக்கெட் வாங்குகிறார்கள்? ஓசி டிக்கெட்டில் வந்தவர்கள்தான்!" என்று தணிந்த குரலில் சொன்னான் 'கேட்' ஆசாமி.

ஓசி டிக்கட் என்றால் என்னவென்று செங்கோடனுக்குத் தெரியவில்லை.

"அப்படி ஒரு டிக்கட்டா! அதிலே எனக்கும்தான் ஒன்று கொடேன்!" என்றான் செங்கோடன்.

"நான் கொடுக்க முடியாது. அந்த அம்மாளுக்கு வலப் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிறார், பாரு! அவர் இந்த சினிமாவுக்கு மானேஜர். அவரை நாளைக்குக் கேளு. இப்போது உன் இடத்துக்குப் போ!"

"அந்த அம்மாளுக்கு இடப்பக்கத்திலே உட்கார்ந்திருக்கிறாரே, அவர் யார் தெரியுமா?"

"அவர் இந்த ஊர்ப் பஞ்சாயத்துச் சபையின் மானேஜர்....போ! போ! படம் ஆரம்பித்தாகிவிட்டது."

"இது என்னடா வம்பாயிருக்கிறது! வலது பக்கத்திலே ஒரு மனேஜர், இடது பக்கத்திலே ஒரு மானேஜர்!" என்று முணுமுணுத்துக்கொண்டே செங்கோடன் தன் இடத்துக்குப் போய் சேர்ந்தான். படம் ஆரம்பித்த பிறகு இருட்டில் தட்டுத் தடுமாறிப் போய்ச் சேர்ந்தபடியால் பலரும் அவனைத் திட்டினார்கள். ஆனால் அதெல்லாம் அவன் கவனத்துக்கு வரவேயில்லை. தன்னைச் சினிமாவுக்கு வரச்சொல்லிவிட்டு அந்தக் குமாரி பங்கஜா எங்கேயோ தூரத்தில் இரண்டு ஆண்பிள்ளைக்கு மத்தியில் உட்கார்ந்திருப்பதைப் பற்றியே யோசனையாயிருந்தது.

நடுவில் அவகாசம் கிடைத்தபோதெல்லாம் பக்கத்திலிருந்தவர்களை விசாரித்து, சினிமாவில் குறைந்த விலை டிக்கட் வாங்குகிறவர்கள் திரைக்குப் பக்கத்தில் உட்காருவார்கள் என்றும், அதிக விலை டிக்கட் வாங்குகிறவர்கள் தூரத்தில் உட்காருவார்கள் என்றும் செங்கோடன் தெரிந்து கொண்டான். இந்த ஏற்பாடு தலைகீழ்ப் பாடமாகவே அவனுக்குத் தோன்றியது.

படத்தில் சுவாரஸ்யமான கட்டம் ஒன்று வந்தது. செம்பவளவல்லி சொன்னாளே, அந்தக் கட்டந்தான். கண்ணீர் விட்ட கதாநாயகியைக் கதாநாயகன் தேற்றிச் சமாதானம் செய்யும் இடம். செங்கோடன் அதில் கவனத்தைச் செலுத்தியிருந்தபோது, திடீரென்று படம் நின்றது. ஒரு கணம் ஒரே இருட்டாயிருந்தது. அடுத்த கணம் பின்னால் எங்கேயோ வெளிச்சமாய்த் தெரிந்தது. 'நெருப்பு!', 'நெருப்பு!' என்ற கூக்குரல் கிளம்பியது. உடனே கூடாரத்திற்குள் இருந்தவர்கள் விழுந்தடித்து ஓடத் தொடங்கினார்கள். பெண் பிள்ளைகள் 'ஐயோ!' 'ஐயோ!' என்று கத்தினார்கள். குழந்தைகள் வீரிட்டு அழுதன.

செங்கோடன் எல்லோரையும் போல் எழுந்து நின்றான். வெளியே ஓட எத்தனித்தான். சட்டென்று ஒரு ஞாபகம் வந்தது. நெருப்பு பின்னாலேதான் பிடித்திருக்கிறது. குமாரி பங்கஜா அங்கே தான் இருக்கிறாள்! செங்கோடனின் தலை சுழன்றது!
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஆறாம் அத்தியாயம்



'நெருப்பு' என்ற சத்தத்தைக் கேட்டு மூளை குழம்பி நின்ற செங்கோடனுக்குச் சட்டென்று தான் செய்ய வேண்டியது இன்னதென்று புலப்பட்டுவிட்டது. சினிமாப் பார்த்தவர்கள் எல்லாரும் கூடாரத்திலிருந்து வெளியேற முயன்று கொண்டிருந்தார்கள் அல்லவா? செங்கோடன் அதற்கு மாறாகக் கூடாரத்தின் பின்பக்கம் நோக்கி ஓடினான். வழியில் அங்கங்கே நின்று கொண்டிருந்த ஜனங்களை இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடினான். வழியில் இருந்த மரச் சட்டங்கள் முதலிய தடங்கல்களைத் தவிடு பொடியாக்கிக் கொண்டு ஒரே மூச்சில் ஓடிப் பின்புறத்தில் நாற்காலிகள் போட்டிருந்த இடத்தை அடைந்தான். 'நெருப்பு' என்ற கூச்சல் எழுந்ததும் மின்சார இயந்திரத்தை நிறுத்திவிட்டிருந்தார்கள். ஆகையால் கூடாரத்துக்கு வெளியே இருந்த விளக்குகளும் அணைந்து போயிருந்தன. எங்கேயோ ஒரு மூலையில், டிக்கட் விற்பனை செய்யப்பட்ட இடத்தில், நெருப்புப் பற்றி எரிந்ததனால் உண்டான மங்கலான வெளிச்சம் தெரிந்தது. அந்த இடத்தைச் சுற்றிலும் ஏகப்பட்ட ஜனங்கள் கும்பல் கூடி நின்று 'காச்சு மூச்சு' என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த இடம் செங்கோடனுடைய கவனத்தை ஒரு கணம் கவர்ந்தது. ஆனால் ஒரு கணம் மாத்திரந்தான்; உடனே அவன் இத்தனை அவசரமாய் ஓடி வந்ததன் காரணம் இன்னதென்பதை ஞாபகப்படுத்திக் கொண்டான். அவன் நின்ற இடத்தில் அங்குமிங்குமாகச் சிலர் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் பெண் பிள்ளைகளும் இருந்தனர். புருஷர்களும் இருந்தனர். அவர்களில் குமாரி பங்கஜா இருக்கிறாளா? அவளை அந்த இருட்டில் எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது? ஆனால் அப்படித் தேடிக் கண்டுபிடிக்கும் சிரமம் செங்கோடனுக்கு ஏற்படவில்லை. ஓடிக்கொண்டிருந்தவர்களில் ஒரு ஸ்திரீ அவன் மீது முட்டிக் கொள்ளவே, செங்கோடன் அவளுடைய தோள்களைப் பிடித்து நிறுத்தி முகத்தை உற்றுப் பார்த்தான். அதிர்ஷ்டம் என்றால் இதுவல்லவா அதிர்ஷ்டம்? கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுமில்லாமல் பக்தன் மேலேயே வந்து முட்டிக்கொண்டது! அவள் குமாரி பங்கஜா தான் என்று அறிந்ததும் செங்கோடன் பரவசமடைந்தான். அவளைக் காப்பாற்றுவதற்கு வழி என்ன? தூரத்தில் தெரிந்த நெருப்பு அப்போது குப்பென்று பற்றிப் பெரு நெருப்பாவது போலத் தோன்றியது. செங்கோடன் மீது முட்டிக்கொண்ட பங்கஜாவோ அவன் இன்னான் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், "ஐயோ! ஐயோ! என்னை விடு" என்றூ அலறினாள். "நான் தான் ராஜா செங்கோடக் கவுண்டன். பயப்படாதே! உன்னை நான் காப்பாற்றுகிறேன்!" என்று சொல்லிக்கொண்டே, சிறு குழந்தையைத் தூக்குவதுபோல் செங்கோடன் குமாரி பங்கஜாவைக் குண்டு கட்டாகத் தூக்கிக் கொண்டு கூடாரத்திலிருந்து வெளிப் பக்கம் நோக்கி ஓடினான். குமாரி பங்கஜா கால்களை உதைத்துக் கொண்டாள். கைகளினால் அவனுடைய மார்பைக் குத்தித் தள்ளினாள், கீழே குதிக்க முயன்றாள். ஒன்றும் பலிக்கவில்லை; செங்கோடக் கவுண்டனுடைய இரும்புக் கைகளின் பிடியிலிருந்து அவள் தப்ப முடியவில்லை.

கூடாரத்துக்கு வெளியில் அவளைக்கொண்டு வந்ததும் செங்கோடன் தானாகவே அவளைக் கீழே இறக்கிவிட்டான். "பயப்படாதே! நான் இருக்கும்போது பயம் என்ன?" என்றான். அதற்குப் பதிலாக குமாரி பங்கஜா அவனது வலது கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டாள்.

மிக்க பலசாலியான செங்கோடனுக்கு அந்த அடியினால் கன்னத்தை வலிக்கவில்லை; ஆனால் நெஞ்சில் கொஞ்சம் வலித்தது. அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. கன்னத்தைத் தடவிக்கொண்டே நின்றான்.

திடீரென்று கூடாரத்துக்கு வெளியே விளக்குகள் பிரகாசமாக எரியத் தொடங்கின.

தன் எதிரில் நின்றதும், தன் கன்னத்தில் அறைந்ததும் குமாரி பங்கஜா தான் என்பதைச் செங்கோடன் இன்னொரு தடவை நல்ல வெளிச்சத்தில் பார்த்துச் சந்தேகமறத் தெரிந்து கொண்டான். அதைப்பற்றி அவளைக் கேட்க வேண்டும் என்று மனம் விரும்பியது. "உன் உயிரைக் காப்பாற்றினேன். உன்னுடைய பூப்போன்ற மேனியில் நெருப்புக் காயம் படாமல் தப்புவித்தேன். அதற்கு நீ எனக்கு கொடுத்த பரிசு கன்னத்தில் அறைதானோ?" என்று கேட்க அவன் விரும்பினான். ஆனால் நாவில் வார்த்தை ஒன்றும் வரவில்லை. பங்கஜாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே பிரமை பிடித்தவன் போல நின்றான்.

அப்போது தான் குமாரி பங்கஜா அவனை உற்றுப் பார்த்தாள். "ஓகோ! நீயா? நீதானா இப்படிப்பட்ட அக்கிரமம் பண்ணினாய்? இப்படிப் பண்ணலாமா?" என்றாள்.

செங்கோடன் அதற்குப் பதில் சொல்வதற்குள் "பங்கஜா! பங்கஜா!" என்ற குரல் கேட்டது.

"இதோ இருக்கிறேன், அண்ணா!"

திடுதிடுவென்று ஏழெட்டுப் பேர் ஓடி வந்து அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டார்கள். ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.

"இந்தத் தடியன்தானா கலாட்டா ஆரம்பித்தது?"

"ஆமாம்; இவனேதான்!"

"குறவனைப்போல் விழித்துக்கொண்டு நிற்பதைப் பார்!"

"படம் ஆரம்பித்ததிலிருந்து இவன் குட்டி போட்ட பூனை மாதிரி அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தான். அப்போதே சந்தேகப்பட்டேன்."

"ஏண்டா, தடியா! படம் பார்க்க வந்தாயா? கலாட்டா பண்ண வந்தாயா?"

"போலீஸ் கான்ஸ்டேபிள்! இங்கே சீக்கிரம் வாருங்கள்! இந்த ரௌடியை அரெஸ்ட் செய்யுங்கள்!"

"பங்கஜம்! இன்று சாயங்காலம் உன்னிடம் கயவாளித்தனமாகப் பேசினான் என்று சொன்னாயே. அந்த மனிதன் இவன்தானே?"

இப்படியெல்லாம் அவனைச் சுற்றி யார் யாரோ, என்னென்னவோ பேசிக்கொண்டது செங்கோடனுடைய காதில் விழுந்தது. ஆனால் அவனுடைய மனத்திலே ஒன்றும் பதியவில்லை; அவர்களுடைய பேச்சு அவனுக்குப் புரியவும் இல்லை. தன்னைப் பற்றியா இப்படியெல்லாம் பேசுகிறார்கள்? தன்னை எதற்காக 'அரெஸ்ட்' செய்ய வேண்டும் என்கிறார்கள்? தான் செய்த குற்றம் என்ன? ஒரு பெண்பிள்ளையை நெருப்பிலிருந்து காப்பாற்றியது குற்றமா? இதென்னடா வம்பாயிருக்கிறதே? பிள்ளையார் பிடிக்கக் குரங்காக முடிந்ததே?

அப்போது குமாரி பங்கஜா யாரோ ஒருவனுடைய கையைப் பிடித்துகொண்டு, "ஸார், இப்படிக் கொஞ்சம் தனியே வாருங்கள்! ஒரு விஷயம்" என்று சொல்லி, அவனை அப்பால் அழைத்துக் கொண்டு போனதைச் செங்கோடனுடைய கண்கள் கவனித்தன. துரை மாதிரி உடுப்புத் தரித்த அந்த மனிதன் யார்?-யாரோ பெரிய உத்தியோகஸ்தன்போல் இருக்கிறது. எதற்காகப் பங்கஜா அவனை அவ்வளவு அருமையாக அழைத்துப் போகிறாள்? அவனிடம் இரகசியமாக என்ன விஷயம் சொல்லப் போகிறாள்? போகும்போது அவள் தன்னை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துப் புன்சிரிப்புச் சிரித்துவிட்டுப் போனதன் காரணம் என்ன? தன்னைப்பற்றி அந்த மனிதனிடம் ஏதோ சொல்லப் போகிறாள் போலிருக்கிறது. நல்லது சொல்லப் போகிறாளோ, அல்லது கெட்டது சொல்லப் போகிறாளோ?

இதற்குள் ஒரு போலீஸ் கான்ஸ்டேபிள் அங்கே வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்ததும் செங்கோடனுடைய மார்பு பதைபதைத்தது. நெஞ்சு தொண்டைக்கு வந்தது. உடம்பு வியர்த்தது. சிவப்புத் தலைப்பாகை ஆசாமிகள் இருக்குமிடத்துச் சமீபத்திலேயே செங்கோடன் போவது கிடையாது. ஆகா! போலீஸ்காரர்கள் பொல்லாதவர்கள். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிப் பணம் பறிக்கப் பார்ப்பார்கள். செங்கோடனுக்கோ பணம் என்றால் உயிர். ஆகையால் எங்கேயாவது அவன் போகும் சாலையிலே போலீஸ்காரன் நின்றால், செங்கோடன் சாலையை விட்டு இறங்கித் தூரமாக விலகிப்போய் ஒரு பர்லாங்கு தூரத்துக்கு அப்பால் மறுபடியும் சாலையில் ஏறுவான்.

இப்போது ஒரு போலீஸ்காரன் தலையில் சிவப்புத் தொப்பியும் குண்டாந்தடியுமாகச் செங்கோடனை நெருங்கி வந்து கொண்டிருந்தான். தப்பித்துக்கொண்டு ஓடலாமென்று பார்த்தால் சுற்றிலும் ஜனக்கூட்டமாயிருந்தது. ஆனால் எதற்காக அவன் ஓடவேண்டும்? அவன் செய்த குற்றந்தான் என்ன? அதைத்தான் தெரிந்து கொள்ளலாமே?

அந்தப் போலீஸ்காரனுடைய ஒரு கையில் குண்டாந்தடி இருந்தது. இன்னொரு கையில் ஒரு ஹரிக்கன் லாந்தர் இருந்தது. அது செங்கோடனுடைய ஹரிக்கன் லாந்தர். டிக்கட் வாங்கிய இடத்தில் அவன் விட்டுவிட்டு வந்த லாந்தர். 'அது எப்படி இந்தப் போலீஸ்காரன் கைக்கு வந்தது? ஆ! இதில் ஏதோ மர்மம் இருக்கிறது; நமக்கு ஏதோ ஆபத்து அதன்மூலம் வரப்போகிறது!"

போலீஸ்காரன், "விலகுங்கள்! விலகுங்கள், ஐயா!" என்று மற்றவர்களை அதட்டி விலக்கிக்கொண்டே செங்கோடனின் அருகில் வந்தான்.

"ஏண்டாப்பா! என்ன கலாட்டா பண்ணுகிறாய்?" என்று அவன் செங்கோடனைப் பார்த்துக் கேட்டான்.

செங்கோடனுக்கு வார்த்தை சொல்லும் சக்தி வந்தது. ஒரு முரட்டு தைரியமும் பிறந்தது.

"என்னைக் கேட்கிறீர்களா? நான் ஒரு கலாட்டாவும் பண்ணவில்லை. கலாட்டா என்றால் கறுப்பா, சிவப்பா என்றே எனக்குத் தெரியாது!"

"பின்னே எதற்காக இங்கே இவ்வளவு கூட்டம் கூடி இருக்கிறது?"

"எல்லாரும் சினிமாப் பார்க்க வந்தவர்கள் போலத் தோன்றுகிறது. வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்!"

"வெகு கில்லாடித்தனமாய்ப் பேசுகிறாயே? ஒண்ணாம் நம்பர் ரௌடி போல் இருக்கிறதே!" என்றான் போலீஸ் கான்ஸ்டேபிள்.

பக்கத்தில் நின்றவர்கள் தலைக்கு ஒன்று சொல்லத் தொடங்கினார்கள்.

"இந்தத் திருட்டுப் பயலை விடாதீர்கள், ஸார்!"

"இருட்டிலே இவன் ஒரு பெண்பிள்ளையின் கழுத்துச் சங்கிலியை அறுக்கப் பார்த்தான்!"

"கழுத்துச் சங்கிலியை அறுக்கப் பார்த்தானா? அல்லது கழுத்தையே அறுக்கப் பார்த்தானா?"

"முழிக்கிற முழியைப் பார்த்தால் தெரியவில்லையா, எது வேணுமானாலும் செய்யக்கூடியவன் என்று!"

"நீங்கள் எல்லாரும் கொஞ்சம் சும்மா இருங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் கலாட்டாவே பெரிய கலாட்டாவாயிருக்கிறது!" என்றான் போலீஸ்காரன்.

இதற்குள் குமாரி பங்கஜா சற்று முன் கையைப் பிடித்து அழைத்துப் போன மனிதர் திரும்பி வந்தார். அவரைத் தொடர்ந்து சிறிது தூரத்தில் பங்கஜாவும் வந்து தனியாக நின்றாள்.

"இதோ சினிமா மானேஜர் வந்துவிட்டார்! அவரையே கேளுங்கள்!" என்றான் கூட்டத்தில் ஒருவன்.

சினிமா மானேஜர் வந்து போலீஸ்காரன் காதில் ஏதோ சொன்னார். அவன் உடனே, "நீங்கள் எல்லோரும் உள்ளே போங்கள்! படம் மறுபடியும் காட்டப் போகிறார்கள்!" என்றான்.

"நெருப்பு அணைந்துவிட்டதா, ஸார்! சேதம் ஒன்றும் இல்லையே?" என்று ஒருவன் கேட்டான்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. இந்த ஹரிக்கன் லாந்தரில் எண்ணெய் ஆகிப்போய் விட்டது. அணையும்போது திரி 'குப்'பென்று எரிந்தது. அதைப் பார்த்துவிட்டுத்தான் யாரோ 'நெருப்பு' 'நெருப்பு' என்று கூச்சல் போட்டுக் கலாட்டா பண்ணிவிட்டார்கள். உள்ளே போங்கள்! படம் ஆரம்பமாகப் போகிறது."

உண்மையாகவே படம் ஆரம்பிப்பதற்கு அறிகுறியாகக் 'கிணுகிணு'வென்று மணி அடித்தது.

எல்லோரும் அவசர அவசரமாக உள்ளே போனார்கள்.

செங்கோடன், போலீஸ்காரன், சினிமா மானேஜர், குமாரி பங்கஜா இவர்கள் மட்டும் பாக்கி இருந்தார்கள்.

"அடே! உன் பெயர் என்ன?" என்று போலீஸ்காரன் அதட்டிக் கேட்டான்.

"என் பெயர் செங்கோடக் கவுண்டன். எதற்காகக் கேட்கிறீர்கள்?"

"சொல்லுகிறேன், அவசரப்படாதே! இந்த லாந்தர் யாருடையது?"

"என்னுடையதுதானுங்க!"

"இதை நீ எங்கே வைத்துவிட்டு வந்தாய்?"

"டிக்கட் வாங்குகிற இடத்திலே விட்டுவிட்டு வந்தேன். ஏனுங்க? இதை யாராவது களவாடிக் கொண்டுபோகப் பார்த்தானா?"

"இந்த ஓட்டை லாந்தரை எவன் களவாடப் போகிறான்?"

"உங்களுக்கு இந்த ஊர் சமாசாரம் தெரியாதுங்க. நீங்கள் இந்த ஊருக்குப் புதிதுபோல் இருக்கிறது. இந்த ஊரிலே ஒட்டை லாந்தரையும் திருடுவாங்க! உங்களையே கூடத் திருடிக்கொண்டு போய்விடுவாங்க!"

"அடே, அதிகப் பிரசங்கி! வாயை மூடுகிறாயா இல்லையா?" என்று சொல்லிக்கொண்டு போலீஸ்காரன் தன் கையிலிருந்த தடியை ஓங்கினான்.

செங்கோடனுடைய கோபம் எல்லை கடந்தது. அடுத்த நிமிஷம் அவனுக்கும் போலீஸ் ஜவானுக்கும் துவந்த யுத்தம் ஆரம்பமாயிருக்கும். நல்லவேளையாக குமாரி பங்கஜா அச்சமயம் குறுக்கிட்டாள்.

"கான்ஸ்டேபிள் ஸார்! அவர் மேலே ஏன் கோபித்து கொள்ளுகிறீங்க! அவர் மேல் குற்றம் ஒன்றுமில்லையே?" என்றாள்.

"இவ்வளவு பெரிய இடத்திலேயிருந்து சிபாரிசு வந்த பிறகு நான் என்ன செய்கிறது?" என்றான் போலீஸ்காரன்.

சினிமா மேனேஜர், "ஆமாம், கான்ஸ்டேபிள்! இன்றைக்கு இங்கே ஒன்றும் வேண்டாம். மறுபடியும் ஏதோ கலாட்டா என்று எண்ணிக்கொண்டு சினிமா பார்க்கும் ஜனங்கள் கலைந்துவிடுவார்கள்! இவனுடைய லாந்தரை இவனிடம் கொடுத்துவிடுங்கள்!" என்றார்.

"விஷயத்தைச் சொல்லிக் கொடுப்பது நல்லது" என்றாள் பங்கஜா.

"அவசியம் சொல்ல வேண்டியதுதான். அப்பனே! இந்த லாந்தரை நீ அணைக்காமல் டிக்கட் கொடுக்கும் இடத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டாய். யாரோ ஒருவன் சுருட்டுப் பற்ற வைப்பதற்காக லாந்தரின் கண்ணாடியைக் கழற்றித் தூக்கி இருக்கிறான். அப்போது திரி 'புஸ்' என்று எரிந்து பக்கத்தில் உள்ள தட்டிப் பாயில் பிடித்துக் கொண்டது. அதனால் தான் இவ்வளவு காபராவும்!" என்றார் சினிமா மானேஜர்.

"இந்தா அப்பா! உன் லாந்தரை வாங்கிக் கொள். வேற எங்கேயும் வைக்காமல் உன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு பாக்கி சினிமாவையும் பார்த்து விட்டுப் போ!" என்றான் போலீஸ்காரன்.

செங்கோடன் கைநீட்டி லாந்தரை வாங்கிக் கொண்டான். சினிமாக் கொட்டகையிலிருந்து வெளியேறும் திசையை நோக்கி விடுவிடு என்று நடக்கத் தொடங்கினான்.

"அவர் ஏன் போகிறார்? பாக்கி சினிமா பார்க்கவில்லையா?" என்று குமாரி பங்கஜா கேட்டது செங்கோடன் காதில் விழுந்தது. வெட்கத்தினாலும் கோபத்தினாலும் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்த செங்கோடன் குமாரி பங்கஜாவைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இன்னும் சற்று வேகமாக நடந்தான்.

"கவுண்டர் கோபித்துக்கொண்டு போகிறார்போல் இருக்கிறது!" என்றான் போலீஸ் சேவகன்.

கான்ஸ்டேபிளின் சிரிப்புடன் இன்னும் இருவரின் சிரிப்புச் சத்தமும் கலந்து கேட்டது.

செங்கோடன் மனத்தில் மிக்க கோபத்துடனேதான் போனான். ஆனால் அந்தக் கோபமெல்லாம் செம்பவளவல்லியின் பேரில் பாய்ந்தது.

"சும்மா இருந்தவனைக் கிளப்பிவிட்டுக் 'கட்டாயம் போய் இந்த அழகான சினிமாவைப் பார்த்துவிட்டு வா' என்று சொன்னாள் அல்லவா? அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டு நானும் புறப்பட்டு வந்தேன் அல்லவா? இரண்டே காலணாவைத் தண்டமாகத் தொலைத்தேன் அல்லவா? பெண்பிள்ளையின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வந்த எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!" என்று செங்கோடன் தன் மனத்திற்குள் சொல்லிக் கொண்டான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஏழாம் அத்தியாயம்




மறுநாள் காலையில் செங்கோடக் கவுண்டன் வழக்கத்தைக் காட்டிலும் அதிக ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் கேணியிலிருந்து நெல் வயலுக்குத் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். கவலை ஏற்றத்தில் பூட்டியிருந்த மாடுகளைச் சக்கையாக வேலை வாங்கினான். 'டிரேய்!' 'டிரேய்!' என்று அவன் மாடுகளை அதட்டிய சத்தம் அரை மைல் தூரம் கேட்டது.

செங்கோடனுடைய உள்ளமோ அடுப்பில் வைத்த சோற்று உலையைப்போல் அடிக்கடி கொதித்துக் கொண்டும் பொங்கிக் கொண்டும் இருந்தது. குமாரி பங்கஜாவைப் பற்றி அடிக்கடி நினைவு வரத்தான் செய்தது. அதோடு அவளைப் பார்த்த இடமாகிய அரசமரமும் அதற்குப் பின்னாலிருந்த பொய்மான் கரடும் கண் முன்னால் வந்தன. பொய்மானைத் தேடிப் போவது பற்றிப் பெரியவர்கள் எத்தனையோ கதை சொல்லுவார்களே? அது தன் விஷயத்தில் சரியாகப் போய் விட்டதல்லவா?

இத்தனை நாளாகத் தன்னை விரும்பிக் கட்டிக் கொள்ளக் காத்துக் கொண்டிருந்த செம்பவளவல்லியை விட்டுவிட்டு அந்தத் தளுக்குக்காரியிடம் தன் மூட மனம் போயிற்று அல்லவா? அதற்குச் சரியான தண்டனை கிடைத்துவிட்டது. பலர் முன்னால் அவமானப்பட நேர்ந்துவிட்டது! போதும்! போதும்! இந்த ஜன்மத்துக்குப் போதும்!

செங்கோடனுடைய உள்ளக் கொதிப்பை அதிகப் படுத்தும்படியான காரியங்கள் அன்று காலையிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக நேர்ந்து கொண்டிருந்தன.

வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஒரு ஹரிஜனச் சிறுவனைச் செங்கோடன் அவ்வப்போது கூலிக்கு அமர்த்திக்கொள்வது வழக்கம். அந்தச் சிறுவன் தான் முதன்முதலில் அவனுடைய வயிற்றெரிச்சலைக் கிளப்ப ஆரம்பித்தான்.

"என்ன எசமான்! நேற்று சினிமாக் கொட்டகையிலே ஏதோ கலாட்டாவாமே..." என்று அந்தப் பையன் மேலே பேசுவதற்குள், செங்கோடன் அவனுடைய தலையில் பலமாக ஒரு குட்டுக் குட்டி, "போடா! படவா ராஸ்கோல் சினிமாவாம்! கலாட்டாவாம்! ஓடிப்போய் மடையைச் சரியாக வெட்டிவிடு! இங்கே வம்பு பேசிக்கொண்டு நின்றாயோ, மண்வெட்டியால் உன்னை ஒரே வெட்டாய் வெட்டிவிடுவேன்!" என்றேன்.

"என்னாங்க இன்றைக்கு இவ்வளவு கோபம்! போலீஸ்காரன் கிட்டப் பூசை வாங்கிக்கிட்டது நெசந்தான் போலிருக்கு!" என்று சொல்லிக்கொண்டே சின்னான் தன்னை அடிக்கவந்த செங்கோடனிடம் அகப்படாமல் ஓடித் தப்பினான்.

பிறகு கிராமத்திலிருந்து ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். வேறு வழியாகப் போக வேண்டியவர்கள் கூடச் செங்கோடனைப் பார்த்து விசாரித்து விட்டுப் போகலாம் என்று அந்தப் பக்கமாக வந்தார்கள். ஆனால் செங்கோடன் அவர்களுடைய விசாரணை விஷயத்தில் அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை.

"என்னப்பா, செங்கோடா?"

"ஓகோ! நீங்கதானா? எப்போது வந்தீங்க? கவனிக்கவே இல்லையே!"

"எங்களையெல்லாம் நீ கவனிப்பாயா? பெரிய மனுஷனாய்ப் போய்விட்டாய்!"

"அதுதான் தெரிஞ்சிருக்கே! பின்னே எதற்காக வந்தீங்க?"

"நேற்று ராத்திரி சினிமாக் கொட்டகையிலே ஏதோ கலாட்டா என்று சொன்னார்கள்! அதைப்பற்றிக் கேட்கலாம் என்று வந்தேன்."

"அதைப்பற்றி என்ன கேட்கலாம் என்று வந்தீங்க?"

"அது நெசமா, என்னதான் நடந்தது என்று கேட்பதற்காகத்தான்!"

"நெசமில்லாதது உங்கள் காதில் வந்து விழுமா?-ட்ரேய்! ட்ரேய்! சுத்தப் படுக்காங்குளி மாடு! நீயும் வெறும் வம்பு கேட்டுக்கொண்டா நிற்கிறாய்? வேலை வெட்டி இல்லாத பெரிய மனிதர்கள் தான் வம்பு பேசுவதற்காக வருகிறாங்க! உனக்கு என்ன கேடு! ட்ரேய்! ட்ரேய்!"

இப்படியாக மாட்டைத் திட்டுகிறதுபோல் வம்பு பேச வந்தவர்களையெல்லாம் திட்டிச் செங்கோடன் அனுப்பிக் கொண்டு வந்தான்.

கடைசியாக, ஒரே ஓர் ஆசாமியிடம் அவனுடைய ஜம்பம் பலிக்கவில்லை. அன்றைக்குச் செம்பா வராமலிருந்தால் நல்லது என்று செங்கோடன் எண்ணிக் கொண்டிருந்தான். தன்னுடைய மனம் சரியில்லாத நிலைமையில் தாறுமாறாக ஏதாவது தான் பேசிவிட்டால் என்ன செய்கிறது என்று அவனுக்குக் கவலையாயிருந்தது. ஆனால் நாம் விரும்பியபடி இந்த உலகத்தில் என்னதான் நடக்கிறது? செம்பா வழக்கமாகத் தன் அப்பனுக்கு சோறு கொண்டு போகும் வழியில் செங்கோடன் கேணிக்கு வந்து சேர்ந்தாள்.

செங்கோடன் அவளை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துவிட்டு, மறுபடி 'ட்ரேய்' 'ட்ரேய்' என்று மாட்டை ஓட்டத் தொடங்கினான்.

கேணித் தண்ணீர் வாய்க்காலில் விழும் சலசலப்புச் சத்தம் தொடர்ந்து கேட்டது.

செம்பா கொஞ்சம் நேரம் நின்று பார்த்தாள். செங்கோடன் அவளைப் பார்த்துப் பேசாமலிருக்கவே அவளுக்கும் கோபம் வந்துவிட்டது.

"ஓகோ! இதற்குள் அவ்வளவு ராங்கி வந்துவிட்டதா? என்னைப் பார்த்துப் பேசக்கூட பிடிக்காமல் போய்விட்டதா? ஒரு நாளிலேயே இப்படியா? சரி; நான் போய்விட்டு வாரேன்!" என்றாள் செம்பா.

"போவானேன்? அப்புறம் திரும்பி வருவானேன்?" என்றான் செங்கோடன்.

"நான் திரும்பி வந்தால் உனக்கு இனிமேல் பிடிக்காதுதான்! ஒரே போக்காக நான் தொலைந்து போய்விட்டால் உனக்குச் சந்தோஷமாயிருக்கும்! இல்லையா?"

"எதற்காக இவ்வளவு கோபதாபம் என்று தெரியவில்லை. இப்போது என்ன வந்துவிட்டது? நேற்றைக்கு இந்த நேரத்திலேதான் எல்லாம் பேசி முடிவு செய்து கொண்டோமே!"

"நேற்றுச் சங்கதி நேற்றோடு போய்விட்டது. இன்றைக்கு என்ன? எல்லாம் எனக்குத் தெரியும். என்னிடம் மறைக்கலாம் என்று பார்க்காதே!"

"என்னத்தை நான் செய்துவிட்டேன். என்னத்தை உன்னிடம் மறைக்கப் போகிறேன்?"

"ஏ ஆத்தாடி! இந்த ஆண்பிள்ளைகளின் புனை சுருட்டை என்னவென்று சொல்ல? நேற்றுச் சாயங்காலம் அரசமரத்தடியில் நீ அந்தப் பெண்பிள்ளையைப் பார்த்து இளிச்சிக்கிடு நின்றது, அப்புறம் சினிமாவிலே அவளைத் தூக்கிக்கிட்டு ஓடியது எல்லாம் எனக்குத் தெரியாது என்றா எண்ணிக் கொண்டாய்?"

செங்கோடனுடைய மனத்தில் சுருக்கென்றது; முகத்தில் அசடு வழிந்தது. ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு, "நேற்றுச் சங்கதி நேற்றோடு போயிற்று என்று நீதானே சற்று முன்பு சொன்னாய்?" என்றான்.

"நம்முடைய பேச்சைப்பற்றியல்லவா சொன்னேன்? அந்தப் பெண்பிள்ளை அப்படி நேற்றுச் சங்கதி என்று விட்டு விடுவாளா! அந்த...." என்று செம்பவளவல்லி இங்கு எழுதத் தகாத வசை ஒன்றைச் சொன்னாள்.

"இந்தா! இதோ பார்! என்னை நீ என்ன வேணுமானாலும் ஏசிக்கொள்! என் முட்டாள்தனத்துக்கு வேண்டியதுதான் என்று ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அந்நியப்பெண் பிள்ளையைப்பற்றிக் கன்னாபின்னாவென்று பேசாதே! நாக்கு அழுகிப் போகும்!" என்றான் செங்கோடன்.

"என் நாக்கு எதற்காக அழுகவேண்டும்! பொய்யும் புனைசுருட்டும் சொல்லுகிறவர்கள் நாக்கு அழுகட்டும்! அவள் அந்நியப் பெண்பிள்ளையாயிருந்தால், இங்கே எதற்காகப் பட்டப் பகலில் உன்னைத் தேடிக்கொண்டு வருகிறாள்? பட்டிக்காட்டுக் குடியானவன் வயலுக்குத் தண்ணீர் இறைக்கும் இடத்தில் பட்டணத்துச் சீமாட்டிக்கு என்ன வேலை?" என்றாள் செம்பா.

"செம்பா! என்ன உளறுகிறாய்? பட்டணத்துச் சீமாட்டியாவது, இங்கே என்னைத் தேடிக்கொண்டு வரவாவது? எப்போது வந்தாள்? ஒரே புளுகாய்ப் புளுகுகிறாயே?"

"நான் புளுகினால் என் நாக்கு அழுகிப் போகட்டும். என் தலையில் இடி விழட்டும், மாரியாத்தா என்னைக் கொண்டு போகட்டும். நீ சொல்லுவது பொய்யாக இருந்தால்?"

"ஐயையோ! எதற்காக இப்படியெல்லாம் கோரமான சபதங்களைச் செய்கிறாய்?"

"இங்கே இந்த மேட்டிலே ஏறி வந்து நீயே பார்த்துக் கொள்; வருகிறாளா, இல்லையா என்று. நான் இச்சமயம் வந்தது உனக்கு ஏன் பிடிக்கவில்லையென்று இப்போதல்லவா தெரிகிறது! பூசைவேளையில் கரடி புகுந்தது போல் நான் வந்துவிட்டேன். ஆனால் நான் வெட்கத்தையும் மானத்தையும் விட்டவள் அல்ல. யாராவது காலிலே விழுந்து கேட்டுக்கொண்டாலும் இங்கே ஒரு நிமிஷங்கூட நான் தாமதிக்க மாட்டேன். நீயும் உன் மோகனாங்கியும் கழுத்திலே கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றிலே விழுந்தாலும் சரிதான்!"

செம்பாவின் வார்த்தைகள் செங்கோடன் மனத்தில் ஓர் ஆசையையும் ஒரு நம்பிக்கையையும் உண்டு பண்ணின. கொஞ்சம் பயமும் ஆவலுங்கூடத் தோன்றின. கவலை மாடுகளை அப்படியே விட்டுவிட்டு, கிணற்றங்கரை வாய்க்கால் மேட்டில் ஏறிப் பார்த்தான். செம்பா சொன்னது உண்மைதான். சற்றுத்தூரத்தில் குமாரி பங்கஜா வந்து கொண்டிருந்தாள். ஆனால் தனியாக வரவில்லை. அவளுக்கு இருபுறத்திலும் இரு ஆண்பிள்ளைகள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சினிமாக் கொட்டைகையில் செங்கோடன் அரைகுறையாகப் பார்த்த மனிதர்கள் என்றே தோன்றியது.

செங்கோடன் முகத்தில் அவனை அறியாமல் ஒரு மலர்ச்சி, ஒரு புன்னகை தோன்றியது. அதோடு கொஞ்சம் அசடும் வழிந்தது. செம்பா அதைப் பார்த்துப் பொங்கினாள்.

"அடே! அப்பா! சந்தோஷத்தைப் பார்! வாயிலுள்ள அத்தனை பல்லுந் தெரிகிறதே?" என்றாள்.

"அவர்கள் வேறு எங்கேயாவது போகிறார்களோ, என்னமோ? என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று எதனால் சொல்கிறாய்?" என்றான் செங்கோடன்.

"எல்லாம் எனக்குத் தெரியும், கவுண்டா! பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். பின்னே எதற்காக அந்த அல்லி ராணி இந்தக் காட்டிலும் மேட்டிலும் நடந்து வருகிறாள்? ஒன்று சொல்கிறேன்; அதை மட்டும் மனசில் நன்றாகப் பதித்து வைத்துக்கொள்! நன்றாய்த் தீட்டிக் கூராக்கி ஒரு கத்தி வைத்திருக்கிறேன். சமயம் பார்த்திருக்கிறேன். அந்தக் கத்தியினால் குத்திக் கொன்றும் விடப்போகிறேன். அப்படிச் செய்யாவிட்டால் என் பெயர் செம்பா அல்ல; என் பெயரை மாற்றி அழை!"

"செம்பா! எதற்காக இந்த மாதிரி கொடுமையான வார்த்தை சொல்லுகிறாய்? அந்தப் பெண் உன்னை என்ன செய்தாள்? நான் தான் அப்படி என்ன செய்துவிட்டேன்?"

"அவள் என்ன செய்தாளோ? நீ என்ன செய்தாயோ! இரண்டு பேரும் கோவலன்-மாதவி நாடகம் நிஜமாகவே நடத்தப் பார்க்கிறீர்கள். ஆனால் கண்ணகியைப் போல் நான் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டேன். என்னுடைய பாட்டன் ஒன்பது பேரைக் கொலை செய்து விட்டு, 'எல்லாக் கொலைக்கும் ஒரே தூக்கு மேடைதானே' என்று சொன்னவன்! தெரியும் அல்லவா? அவனுடைய இரத்தம் என் உடம்பிலும் ஓடுகிறது என்பதை மனசில் வைத்துக்கொள்!"

இப்படிச் சொல்லிவிட்டுச் செம்பா விடுவிடு என்று வேறு பக்கமாக நடந்து போனாள்.

குமாரி பங்கஜாவும் மற்ற இருவரும் கேணியை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். செங்கோடன் கேணிக் கரையில் மடித்து வைத்திருந்த பட்டுச் சட்டையை அவசர அவசரமாக எடுத்துப் போட்டுக் கொண்டான்!
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
எட்டாம் அத்தியாயம்



அவசரத்தில் சட்டை போட்டுக் கொள்வதென்பது சட்டையுடன் பிறந்த பட்டணத்து நாகரிக மனிதர்களுக்கே கொஞ்சம் கடினமான காரியந்தான். செங்கோடனின் பட்டுச் சட்டையோ அந்த அவசரத்தில் அவனை எகத்தாளம் செய்து, "உனக்குப் பட்டுச் சட்டை வேறேயா?" என்று கேட்பதுபோல ஏறுமாறாக நடந்து கொண்டது. சட்டையின் வலது கைத் தொங்கலில் செங்கோடனின் இடது கைபுகுந்து கொள்ளவே, வலது கையை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடினான். அந்த நிலையிலேயே சட்டையைத் தலையில் மாட்டிக்கொள்ள முயன்றபோது, சட்டை முகத்தை மறைத்ததே தவிர, கீழே இறங்க மறுத்துவிட்டத். வெளியில் கழற்றி எறியவும் முடியவில்லை. அப்படிக் கழற்ற முயன்றபோது சட்டை 'தறார்' என்று கிழிந்தது. கிழிந்தால் கிழிந்து தொலையட்டும்! முகத்தை மறைப்பதற்குப் பதிலாகக் கழுத்தின் கீழே இறங்கிவிட்ட தல்லவா?

வந்தவர்கள் மூன்று பேரும் இதற்குள் கீழே பள்ளத்திலிருந்து மேலே கேணியின் கரைக்கு ஏறிவிட்டார்கள். அவர்கள் தங்களுக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள முயன்றார்கள். அடக்க முடியாமல் சிரிப்பு பீறிக்கொண்டு வந்தது. செங்கோடனும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான். வந்தவர்களில் ஒருவன், "கவுண்டர் ஸார்! தங்களுடைய தங்கத் திருமேனிக்குச் சட்டை இல்லாவிட்டால் என்ன? நாடறிந்த பாப்பானுக்குப் பூணூல் எதற்கு?" என்றான்.

அதற்குள் இன்னொருவன், "என்னப்பா, எஸ்ராஜ்! நம்முடைய ஜமின்தார் செங்கோடக் கவுண்டரைப் பஞ்சாங்கப் பிராமணனோடு ஒப்பிட்டுப் பேசுகிறாயே?" என்றான்.

"அழகாய்த்தான் இருக்கிறது! ராஜா செங்கோடக் கவுண்டரை நீங்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து வெறும் ஜமீன்தார் ஆக்கிவிட்டீர்களே! இன்னும் கொஞ்சநேரம் போனால் அவருடைய பத்து ஏக்கரா நிலத்தையும் பிடுங்கிக் கொள்ளுவீர்களோ, என்னமோ?" என்றாள் பங்கஜா.

"அவர்கள் பிடுங்கிக் கொண்டால் நான் விட்டு விடுவேனா? என் உயிர் இருக்கிறவரையில் அது முடியாத காரியம்!" என்றான் செங்கோடன்.

"பங்காரு! பார்த்தாயா? நாம் என்னமோ தமாஷாய்ச் சொல்லப்போக, கவுண்டர் அவருடைய நிலத்தைப் பிடுங்கிக் கொள்ளத்தான் நாம் வந்திருக்கிறோம் என்று எண்ணி விட்டார்!" என்றான் 'எஸ்ராஜ்' என்கிற சுந்தரராஜன்.

"கவுண்டர், ஸார்! அப்படியெல்லாம் ஒன்றும் தப்பாக எண்ணிக்கொள்ள வேண்டாம். முக்கியமாக, உங்களுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போவதற்காகவே வந்தோம்!" என்றான் பங்காருசாமி.

"எனக்கு நன்றி சொல்ல வந்தீர்களா? அது எதற்கு?" என்று செங்கோடன் கேட்டான்.

"இந்த லேடியை நேற்றைக்கு நீங்கள் காப்பாற்றினீர்கள் அல்லவா, அதற்காகத்தான்."

"அந்த அம்மாளையா, நானா காப்பாற்றினேன்? நன்றாய் விளக்கமாய்ச் சொல்லுங்கள்! நேற்று ராத்திரி நடந்தது ஒன்றும் எனக்கு ஞாபகமில்லை. மூளை குழம்பிக் கிடக்குது!" என்றான் செங்கோடன்.

"அது என்ன, அப்படிச் சொல்லுகிறீர்? நேற்று சினிமாக் கூடாரத்தில் நெருப்புப் பிடித்தது அல்லவா?"

"நெருப்புப் பிடித்ததா, என்ன? நீங்கள் எல்லோருமாய்ச் சேர்ந்துகொண்டு, 'நெருப்புப் பிடிக்கவே இல்லை' என்றீர்களே!"

"அந்தப் போலீஸ்காரன் ஒருவன் வந்தானே, அவனுக்காக அப்படிச் சொன்னோம். இல்லாவிட்டால், 'நெருப்பு ஏன் பிடிச்சுது? என்னமாய்ப் பிடிச்சுது?' என்று ஆயிரம் கேள்வி கேட்பான். அப்புறம் நெருப்புப் பிடிச்சதற்குக் காரணமாயிருந்தவனை 'அரெஸ்ட்' செய்ய வேண்டும் என்பான். உங்களை அப்படியெல்லாம் நாங்கள் காட்டிக் கொடுத்து விடுவோமா? நெருப்புப் பிடிச்சது என்னமோ வாஸ்தவம். அதிலே அறுநூறு ரூபாய்க்கு அதிகமாய்ப் பண நோட்டு எரிந்து போய்விட்டது!..."

"எத்தனை ரூபாய்?" என்று செங்கோடன் ஒரு மைல் தூரம் கேட்கும்படி இரைந்து கேட்டுவிட்டு, திறந்த வாய் மூடாமல் இருந்தான்.

"ஆமாம்; அறுநூறு ரூபாய்க்கு அதிகம். நேற்றைக்கு இரண்டு வேளை சினிமாவில் டிக்கெட் வசூல் அவ்வளவும் போய்விட்டது."

"என்ன ஐயா, அதிசயமாயிருக்கிறது! ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாயா? நான் வருஷம் பூராவும் உழைத்துப் பாடுபடுகிறேன். எனக்கு வருஷத்துக்கு இருநூறு ரூபாய் மிச்சமாகிறதில்லை. ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாய் வசூலா?" என்று செங்கோடன் சத்தம்போட்டுக் கேட்டான்.

"அறுநூறு ரூபாய் ஒரு பிரமாதமா! பார்த்துக் கொண்டே இருங்கள்! இந்த அம்மாளை நாங்கள் சினிமாவில் சேர்த்துவிடப் போகிறோம். அப்போது ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் வசூலாகும். ஒரு தியேட்டரில் இரண்டாயிரம் ரூபாய். இந்த மாதிரி இருநூறு தியேட்டரில் தினம் தினம் இரண்டாயிரம் ரூபாய்க்குமேல் வசூல் ஆகும்."

"அடே அப்பா" என்று செங்கோடன் அதிசயத்துடன் குமாரி பங்கஜாவைப் பார்த்தான். பார்க்கப் பார்க்க, பங்கஜா வளர்ந்து வளர்ந்து பொய்மான் கரடு அவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாள். குமாரி பங்கஜாவின் உருவம் மறைந்து அவ்வளவும் வெள்ளி ரூபாய் மயமாகச் செங்கோடனுக்குத் தோன்றியது!

இந்தச் சமயத்தில் பங்கஜா தானும் சம்பாஷணையில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று தீர்மானித்து, "கவுண்டரே! நான் கூட உங்களைப்பற்றி நேற்றுத் தவறாக எண்ணிக்கொண்டு ஒரு காரியம் செய்துவிட்டேன். அதற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறேன். தயவுசெய்து என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்" என்று உருக்கமான குரலில் கூறினாள்.

அதைக் கேட்ட செங்கோடன் மனம் உருகி, "அதற்கென்ன, மன்னித்துவிட்டால் போகிறது! நீ வருத்தப்பட வேண்டான்" என்றான்.

"அதெப்படி நான் வருத்தப்படாமல் இருக்கமுடியும்? என்ன நடந்தது தெரியுமா? இருட்டிலே யாரோ ஒருவன் என் கழுத்துச் சங்கிலியை அறுக்கப் பார்த்தான். அதனாலேதான் நான் அப்படி ஓடி உங்கள் மேலே முட்டிக் கொண்டேன். நீங்கள் என்னைப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போகவே, திருடன் நீங்கள் தான் என்று எண்ணிக் கன்னத்தில் அடித்து விட்டேன். வெளிச்சம் போட்டதுந்தான் உங்களைத் தெரிந்தது" என்றாள் பங்கஜா.

செங்கோடனுடைய கை அவனையறியாமல் கன்னத்தைத் தடவிக் கொண்டது. இப்போது உண்மை தெரிந்துவிட்டபடியால் அவன் அந்த அறையைக் குறித்து வருந்தவில்லை. அதை நினைத்தபோது அவனுக்கு இப்போது ஒரு விசித்திரமான மகிழ்ச்சி உண்டாயிற்று.

"எந்த களவாணிப் பயல் அப்படி உன் கழுத்தில் கை வைத்து நகையைக் கழற்றப் பார்த்தான்? அப்போதே சொல்லியிருந்தால் அவனைக் கைப்பிடியாய்ப் பிடித்துச் செம்மையாய்க் கொடுத்து அனுப்பியிருப்பேனே!" என்றான் செங்கோடன்.

"இருட்டிலே யார் என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் சொல்லியிருப்பேன்" என்றாள் பங்கஜா.

"சினிமாவிலே அதுதான் ஒரு கெடுதல். விளக்கை அணைத்து இருட்டாகச் செய்துவிடுகிறார்கள்! விளக்கைப் போட்டுக்கொண்டு சினிமாக் காட்டினால் என்ன? பணம் கொடுத்து வந்தவர்கள் இன்னும் நன்றாகப் பார்க்கலாம் அல்லவா?"

இதைக் கேட்ட மூவரும் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பு எதற்காக என்று செங்கோடனுக்கு விளங்கவில்லை. ஆனால் அவனும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான்.

"சரி, எஸ்ராஜ்! நாம் வந்த காரியம் ஆகிவிட்டது, புறப்படலாமா?" என்று கேட்டான் பங்காரு.

"அதற்குள் என்ன அவசரம்? இன்னும் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போங்கள்!" என்று செங்கோடன் உபசரித்தான்.

"எனக்கு இந்த இடம் ரொம்பப் பிடித்திருக்கிறது. கேணிக்கரையும் தென்னை மரமும் பசேல் என்ற நெல் வயலும் சோளக் கொல்லையும் பார்க்க எவ்வளவு அழகாயிருக்கிறது! சினிமாவில் காதல் காட்சி எடுத்தால் இப்படிப்பட்ட இடத்தில் அல்லவா எடுக்க வேண்டும்?" என்றாள் பங்கஜா.

"அதற்கென்ன? நீ சினிமாவில் சேர்ந்து காதல் காட்சி எடுக்கும்போது இங்கேயே வந்து எடுத்துவிடலாம்!" என்றான் எஸ்ராஜ்.

"ஆகா! அதோ குயில் கூவுகிறது. பாருங்கள்! அடடா! என்ன இனிமை! என்ன இனிமை!" என்றாள் பங்கஜா.

"இந்தப் பக்கத்துக் குயில்களே இப்படித்தான்! ரொம்ப ரொம்ப இனிமையாகக் கூவும்!" என்றான் செங்கோடன்.

"அப்படியா? இங்கே நிறையக் குயில்கள் உண்டோ?"

"இருபது முப்பதுக்கு மேலே இருக்கிறது. நான் இங்கே ஒருத்தன் தானே? அவ்வளவு போதுமே?"

"இருபது முப்பது குயிலும் ஓயாமல் கூவிக்கொண்டிருக்குமோ?"

"கூவாவிட்டால் யார் விடுகிறார்கள்? தவடையில் இரண்டு அறை அறைந்து கூவச் சொல்ல மாட்டேனா? உங்களுக்கு இஷ்டமான போதெல்லாம் வந்து கேட்கலாம், டிக்கெட் கிடையாது!" என்றான் செங்கோடன்.

"பார்த்தாயா, எஸ்ராஜ்! கவுண்டர் எவ்வளவு வக்கணையாகப் பேசுகிறார்!" என்றான் பங்காரு.

"நீங்கள் என்னமோ குயில் கியில் என்று பிராணனை விடுகிறீர்கள். ஏற்கனவே வெயிலில் வந்ததில் எனக்குத் தாகமாயிருக்கிறது. இப்போது தொண்டை அடியோடு வறண்டுவிட்டது. ஏதாவது குடிக்காவிட்டால் உயிர் போய் விடும் போல் இருக்கிறது."

இதைக் கேட்டவுடனேதான் செங்கோடனுக்கு வந்தவர்களை இத்தனை நேரமும் நிற்க வைத்துப் பேசுகிறோம், உட்காரச் சொல்லி உபசாரம் செய்யவில்லையென்பது நினைவு வந்தது.

"அடாடா! தாகம் என்று அப்போதே சொல்லக் கூடாது? குடிசைக்குப் போகலாம், வாருங்கள். பானையில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கிறேன். ஜில் என்று குளிர்ச்சியாயிருக்கும்" என்றான் செங்கோடன்.

"கவுண்டரே! குடிசை என்று சொல்லாதீர்; அரண்மனை என்று சொல்லும்!" என்றான் எஸ்ராஜ்.

"குடியானவனுக்கு அவன் குடியிருக்கும் குடிசைதான் அரண்மனை. அதில் சந்தேகம் என்ன?" என்றான் பங்காருசாமி.

"இந்தக் கிணற்றுத் தண்ணீரைச் சாப்பிடலாமே? அங்கே போவானேன்?" என்றாள் பங்கஜா.

"இல்லை, இல்லை. கிணற்றுத் தண்ணீர் இறைத்துக் கலங்கிப் போய்விட்டது. காலையிலேயே தெளிவாகத் தண்ணீர் எடுத்துப் பானையில் கொட்டி வைத்திருக்கிறேன். வாருங்கள்! உங்களைப் போன்றவர்கள் இங்கே வருவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா?"

"சரி; அப்படி என்றால் போகலாம். ராஜா செங்கோடக் கவுண்டரின் அரண்மனையையும் பார்த்து வைக்கலாம்!" என்றான் பங்காரு.

எல்லாரும் குடிசைக்குப் போனார்கள். வாசலில் குறுகலான திண்ணை ஒன்று இருந்தது. செங்கோடன் கயிற்றுக் கட்டிலையும் பழைய பாய் ஒன்றையும் எடுத்துப் போட்டு, "உட்காருங்கள், இதோ தண்ணீர் கொண்டு வருகிறேன்!" என்றான்.

"வேண்டாம், வேண்டாம்! அவ்வளவு சிரமம் உங்களுக்கு எதற்கு? நான் எடுத்து வந்து கொடுக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே பங்கஜாவும் உள்ளே நுழைந்தாள். அவளைத் தொடர்ந்து மற்ற இருவரும் குடிசைக்குள் வந்தார்கள்.

செங்கோடனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. சட்டியும் பானையும், சுத்தம் செய்யாத சாம்பல் குவிந்த அடுப்பும் அழுக்குத் துணிகளும், மூலைக்கு மூலை தானிய மூட்டைகளும், மண் வெட்டியும், அரிவாளும், தவிடும் பிண்ணாக்குமாயிருந்த அந்தக் குடிசையைப் பார்த்து இந்தப் பட்டணத்துச் சீமான்களும் சீமாட்டியும் என்னவென்று நினைத்துக்கொள்வார்கள்! இவர்கள் வரப் போவது தெரிந்திருந்தால் குடிசையைச் சுத்தப்படுத்தி வைத்திருக்கலாமோ?

பங்கஜா உள்ளே நுழையும்போதே "அடாடா! இங்கே எவ்வளவு குளிர்ச்சியா யிருக்கிறது? வெளியிலே வெயில் கொளுத்தி ஒரே உஷ்ணமா யிருக்கிறது! இங்கே ஊட்டி, கொடைக்கானல் மாதிரி ஜில்லென்று இருக்கிறது. ஓட்டு வீட்டிலும் மச்சு வீட்டிலும் என்ன சுகம் இருக்கிறது! கூரை வீட்டுக்குச் சமம் வேறொன்றும் கிடையாது!" என்று சொல்லிக்கொண்டே வந்தாள்.

"அதற்கென்ன சந்தேகம்" என்றார்கள் மற்ற இருவரும்.

செங்கோடன், "எல்லாரும் சேர்ந்தாற்போல் உள்ளே வந்தால் இங்கே நிற்பதற்குக்கூட இடங் கிடையாது" என்றான்.

"அழகாயிருக்கிறது! வேண்டிய இடம் இருக்கிறதே! ஆனந்தபவன் பங்களாமாதிரி அல்லவா இருக்கிறது!" என்றான் பங்காரு.

"மனம் விசாலமாயிருந்தால் இடமும் விசாலமாய் இருக்கும்!" என்றாள் குமாரி பங்கஜா.

பானையில் ஊற்றி வைத்திருந்த குளிர்ந்த தண்ணீரைச் செங்கோடன் தகரக் குவளையில் எடுத்து மூன்று பேருக்கும் கொடுக்க வந்தான். அப்போது அவனுக்கு ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றியது. அதாவது, அந்த இரண்டு ஆண்பிள்ளைகளும் குடிசையின் உட்புறத்தைக் கவனமாக உற்றுப் பார்க்கிறார்கள் என்ற சந்தேகம் ஜனித்தது. அப்படி என்னத்தைப் பார்க்கிறார்கள்? மூலை முடுக்குகளை எதற்காக உற்றுப் உற்றுப் பார்க்கிறார்கள்? எதற்காக இப்படி விழிக்கிறார்கள்? ஆ! இந்தப் பட்டணத்துப் பேர்வழிகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்! இந்தக் காலத்தில் யாரையும் நம்புவதற்கில்லை!

எல்லாரும் தண்ணீர் குடித்ததும், "வாருங்கள் போகலாம்! வெளியில் காற்றாட உட்காரலாம்!" என்று சொல்லி விட்டுச் செங்கோடன் வெளியே வந்தான் பங்கஜாவும் அவனுடன் வந்தாள். மற்ற இருவரும் மேலும் குடிசைக்குள் இருந்து, மூலை முடுக்குகளைக் குடைந்து, "இது பிண்ணாக்கு! இது நெல்லு!" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

"வாருங்கள்! வாருங்கள்! அங்கே என்ன இருக்கிறது, பார்க்கிறதற்கு" என்று செங்கோடன் சத்தம் போடவே இருவரும் வெளியில் வந்தார்கள்.

"போகலாமா?" என்றான் ஒருவன்.

"கொஞ்சம் உட்கார்ந்துவிட்டுப் போகலாம்" என்றான் இன்னொருவன்.

கயிற்றுக் கட்டிலிலும் திண்ணையிலும் நிரவி உட்கார்ந்ததும் செங்கோடன், "உங்களை ஒன்று கேட்கவேண்டும் என்றிருக்கிறேன்" என்றான்.

"பேஷாய்க் கேளுங்கள், கவுண்டர்வாள்! ஒன்று என்ன? பத்து வேண்டுமானாலும் கேளுங்கள்!" என்றான் எஸ்ராஜ்.

"இந்த அம்மாள் உங்கள் இரண்டு பேருக்கும் என்னமாய் வேணுங்க?" என்று கேட்டான்.

"எனக்கு இந்த அம்மாள் தங்கை!...."

"நிஜமாகவா? முகத்தைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லையே?" என்றான் செங்கோடன்.

"என் சொந்தத் தங்கை இல்லை; சித்தப்பாவின் மகள். இந்த எஸ்ராஜ் தடியன் இவளைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறான்!"

"என்னங்க? என்னால் நம்பவே முடியவில்லையே! இந்த அம்மாளைப் பார்த்தாள் தேவலோகத்து அரம்பை, ஊர்வசி மாதிரி இருக்கிறது! இவரைப் பார்த்தால்..."

"ஆமாம், அனுமார் மாதிரி இருக்கிறது. அதனால் என்ன, கவுண்டரே! காதலுக்குக் கண்ணில்லை என்று கேட்டதில்லையா?"

"கண் இல்லாமற் போனாற் போகட்டும்! அறிவு கூடவா இல்லாமற் போய்விடும்?" என்றான் செங்கோடன்.

அப்போது குமாரி பங்கஜா குறுக்கிட்டு, "இவர்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டாம். சும்மாவாவது சொல்கிறார்கள்! நான் கலியாணமே செய்து கொள்ளப் போவது இல்லை! அப்படிச் செய்துகொண்டால் என் மனசுக்குப் பிடித்தவரைத் தான் கலியாணம் செய்து கொள்வேன்!" என்றாள்.

"அது போனால் போகட்டும். இப்போது பங்கஜாவின் கலியாணத்துக்கு அவசரம் ஒன்றுமில்லை. நீர் கட்டாயம் ஒரு நாள் சின்னமநாயக்கன்பட்டிக்கு எங்கள் ஜாகைக்கு வர வேண்டும். நீங்கள் செய்த உதவிக்காக உங்களுக்கு ஒரு டீ பார்ட்டி கொடுக்கப் போகிறோம்."

"எனக்கு டீ பிடிக்காது. சாப்பிட்டுப் பழக்கம் இல்லை. ஒரு நாள் எங்கேயோ சாப்பிட்டு மயக்கம்கூட வந்து விட்டது."

"டீ சாப்பிடுவது கட்டாயம் இல்லை. மோர் கொடுக்கிறோம். சாப்பிடலாம். அதைத் தவிர, நீங்கள் அன்றைக்கு சினிமா பூராவும் பார்க்கவில்லை. ஒருநாள் வந்து பார்க்க வேண்டும்."

"வருகிறேன், ஆனால் என்னைப் பின்னால் கொண்டு உட்கார வைத்துவிடக் கூடாது!"

"எங்கே இஷ்டமோ அங்கே உட்காரலாம். திரைக்குப் பக்கத்திலேகூட உட்காரலாம்."

"அப்படியானால் சரி."

மூன்று பேரும் புறப்பட்டுச் சென்றார்கள். மற்ற இருவரும் ஏதோ பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் போனார்கள். பங்கஜா மட்டும் செங்கோடனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு சென்றாள்.

செங்கோடன் தன் மனசிலிருந்த தராசின் ஒரு தட்டில் குமாரி பங்கஜாவையும் இன்னொரு தட்டில் செம்பவளவல்லியையும் வைத்து நிறுத்துப் பார்த்தான். யார் அதிகம், யார் குறைவு என்பதை அவனால் அவ்வளவு சுலபமாக நிர்ணயிக்க முடியவில்லை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top