Dhivyabharathi
மண்டலாதிபதி
ஊர் திரும்பியவுடன் தமிழ் முதலில் கவியை அழைத்து பேச எண்ணிணாள்..
“நீ எடுத்த மார்க்குக்கு வேற கோர்ஸ் படிக்கலாம்ல.. எதுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கறேனு சொல்ற” -தமிழருவி
“எனக்கு உன் கூட இருந்தாலே போதும்.. அதான் நீ படிக்கற கோர்ஸ்லேயே, படிக்கற காலேஜ்லயே நான் சேர்ந்தேன்.. “- கவி
“பைத்தியம் மாதிரி பேசாத கவி, உன் மார்க்குக்கு நீ வேற பெரிய படிப்பெல்லாம் படிக்கலாம்.. சொல்றத கேளு “-தமிழ்
“நீ என்ன சொன்னாலும் நான் கேக்க போறது கிடையாது.. டைம் வேஸ்ட் பண்ணாம பெட்டி படுக்கை எல்லாம் எடுக்கற வழியை பாரு.. அடுத்த வாரம் சென்னை கிளம்பனும் “—கவி
கவியின் அன்பை எண்ணி தமிழுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.. கவியிடம் தான் நிறைய விஷயங்கள் மறைத்ததை எண்ணியும்….தான் உண்மையான தோழியாக அவளிடம் எதுவும் கூறவில்லை என்பதை எண்ணியும் கலங்கினாள். சென்னை சென்றதும் அவளிடம் கூறிவிட வேண்டும் என்று எண்ணினாள்..
தமிழ், கவி, செல்வி மூவரும் சென்னை செல்லும் நாளும் வந்தது..
சேதுபதி, மூவரும் சென்னையில் சேர்ந்து தங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
மூவரும் சென்னை வந்து சேர்ந்தனா்.. செல்வியை அங்கிருந்த பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு சேர்த்து விட்டாள் தமிழ்..
கவியும் தமிழும் முதல் நாள் கல்லூரி சென்றனர்.. அங்கே அவர்களுக்கு முதலில் அறிமுகம் ஆனது செல்லம்மா தான்.. செல்லம்மா வின் குணநலன்கள் கவி மற்றும் தமிழுக்கு மிகவும் பிடித்து போனதால் அவளையும் தம் நட்பு வட்டத்தில் இணைத்து கொண்டனர்…
நாட்கள் மெல்ல நகர்ந்தது.. செல்விக்கான மருத்துவம் நல்ல முறையில் சென்றுக் கொண்டு இருந்தது.. ரகுவும் கவிக்கு தெரியாமல் அவளை கவனித்து கொண்டு இருந்தான்..
ரகு, பாரியின் பெற்றோர்கள், ரகு, பாரி தெரியாமல் தமிழை கண்காணித்து கொண்டு இருந்தனர்.. பாரி மற்றும் ரகுவிற்கு தங்கள் பெற்றோர்களின் நடவடிக்கை புதிதாக இருந்தது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை எண்ணி இருவரும் மகிழ்ந்தலும் அது என்ன என்பதை அறிய முயற்சி செய்து முடியாமல் இருந்தனர்… தங்களிடம் சொல்லாமல் எதோ ரகசியமாக செய்வதை அவர்கள் அறியவில்லை.
நாட்கள் வேகமாக நகர்ந்தது. படிப்பில் முதல் மாணவியாக வந்தாள் தமிழ், சிறந்த செப் (சமையல் கலைஞர்) ஆக ஆசை பட்ட தமிழ், அதற்கான பயிற்சிகளையும் தேடி பயின்றாள்… தமிழுடன் இணைந்தே கவியும் செல்லம்மாவும் பயணித்தனர்… இருவரும் தமிழின் தயவால் பரிட்சையில் பெயில் ஆகாமல் தப்பித்தனர்…
புரபசர்கள் கண்டபடி கவியையும் செல்லம்மாவையும் திட்டி தீர்த்தாலும் காதில் எதுவும் விழாதது போல வலம் வந்தனர்…
இறுதி வருட படிக்கும் போது அந்த நிகழ்ச்சி நடந்தது..
வகுப்பு அறையில் செல்லம்மா திடீரென மயங்கி விழ, அவளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவள் விஷம் அருந்தியிருப்பதாக கூறினர்..
கவியும் தமிழும் இதை கேட்டு அதிர்ந்தனர்… நீண்ட போராட்டத்திற்கு பிறகு செல்லம்மா காப்பாற்றப்பட்டாள்.. செல்லம்மாவை பார்க்க தமிழ் செல்ல, கவியோ வர மறுத்தாள்..
“ஏன் கவி இப்படி பண்ற.. வா அவ கண்ணு முழிச்சிட்டா… நம்மல தான் தேடுவா.. வா போகலாம் “-தமிழ்
“நான் வரல”-கவி
“ஏன்”-தமிழ்
“சாகற அளவிற்கு அவளுக்கு எதோ பிரச்சனை இருந்திருக்கு.. ஆனால் அவ நம்ம கிட்ட எதுவும் சொல்லல… சொல்லனும்னு அவளுக்கு தோணல… நம்மல பிரண்டா நினைச்சி இருந்தா நம்ம கிட்ட சொல்லி இருப்பா… நானும் இனி பிரண்டா நினைக்க போவதில்லை “ என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் கவி
கவியின் கோபத்தை பார்த்து அதிர்ந்த தமிழ், தன்னுடைய விசயம் அவளுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என பயந்தாள்.
உடல் நலம் தேறும் வரை செல்லம்மாவிடம் தமிழ் எதையும் கேட்க வில்லை..
உடல் நலம் நன்கு முன்னேறியவுடன் கல்லூரி வந்தாள் செல்லம்மா… கவியிடம் அவள் எவ்வளவு முயற்சித்தும், அவள் பேச மறுத்தாள்…
கல்லுாரி முடிய இன்னும் சில வாரங்கள் இருந்த போது, தமிழ், கவி, செல்லம்மா மூவருக்கும் ஹோட்டல் பாரதஜோதியில் வேலை கிடைத்ததற்கான கடிதம் கிடைத்தது.. கவி மற்றும் செல்லம்மாவிற்கு எப்படி தங்களுக்கு அங்கே வேலை கிடைத்தது என்று குழப்பமாக இருந்தது..
சேதுபதி வேண்டாம் எவ்வளவு கூறியும், கேட்காமல் கவி வேலைக்கு செல்ல ஆயத்தமானாள்…
கல்லூரி இறுதி நாள் வந்தது… மாணவிகள் அனைவரும் தங்கள் பிரிவை எண்ணி அழுதுகொண்டு இருக்க.. கவி, தமிழ், செல்லம்மா மூவரும் பேசாமல் அமைதியாக இருந்தனர்..
செல்லம்மா தமிழிடம் “நான் பாரதஜோதிக்கு வேலைக்கு வரல”
“ஏன்டீ வரல “ ௭ன்று பதட்டமாக கேட்டாள் தமிழ்.
“நான் அங்கே வேலைக்கு வந்தால்.. திரும்ப திரும்ப கவியை என்கிட்ட பேச சொல்லி டிஸ்டர்ப் பண்ணுவேன்.. அவ ஆல்ரெடி என்னை வெறுத்துட்டா.. திரும்ப அவ முன்னாடி நின்னா அவளுக்கு தான் தர்ம சங்கடமா இருக்கும் அதான் “-செல்லம்மா
செல்லம்மா பேசுவதை கேட்ட கவி, “ நான் 6 மாசமா பேசாம இருக்கறதையே உன்னால தாங்கிக்க முடியலையே… நீ விஷம் சாப்பிட்டு சாக போனியே.. அப்படியே ஒரே அடியா போயிருந்த எங்கள் நிலைமையை கொஞ்சமாவது யோசிச்சியா??... நீ இல்லாமல் போனா நாங்கள் சாகற வரைக்கும் திரும்ப உன்கிட்ட பேசற வாய்ப்பு கிடைக்குமா சொல்லு “ என்றாள்.
தன் தவற்றை எண்ணி வருந்திய செல்லம்மா, “இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்.. என்கிட்ட பழைய மாதிரி பேசு கவி “ என்றாள்.
“சரி அழாதே, மூஞ்சியை பாக்க முடியலை “ என்று கூறி சிரித்தாள்..
செல்லம்மா ஏன் தான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என்பதை அவள் தோழிகள் இருவரிடமும் கூற எண்ணினாள்… ஆனால் அதற்கு சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை…
மூவரும் வேலைக்கு சேரும் நாளுக்காக காத்திருந்தனர்… அவர்களை தவிர மேலும் 6 பேர் அவர்களின் வருகைக்கு காத்திருந்தனர் (மக்களே லிஸ்டில் பாரி கிடையாது… யார் அந்த ஆறாவது ஆள்)
கவி மற்றும் செல்லம்மாவால் தமக்கு வர போகும் அவ பெயரை தமிழ் அப்போது அறியவில்லை..
செல்விக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்ப ஆரம்பித்தது…