உன் தாயின் பேச்சையும் என் தாயின் பேச்சையும் கேட்காத நீ...
நான் கேட்ட தற்காக பலவற்றை செய்து வந்தாய்...
நான் சாய்ந்து கொண்ட முதல் தோளும் உன்னுடையது தான்...
உன் மார்பில் உதைத்த என் கால்களுக்கு கொடுத்த முதல் முத்தமும்
உன்னுடையது தான்...
கண்டிப்பான முகத்தை மட்டுமே முகத்தில் காட்டி...
என் மீது கொண்ட அன்பையும் பாசத்தையும் மனதில் பூட்டி...
கோபத்திலும் அன்பு இருப்பதை உணர்ந்தேன் இன்று...
உணர்த்திவிட்ட நிம்மதியில் என்னை விட்டு பிரிந்து செல்ல துணிந்தது ஏனோ?
கதவுக்கு பின் ஒளிந்திருக்கிறேன் என்று உன்னிடமே சொல்லி...
உன்னையே என்னை தேட வைத்து...
அதிலும் நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியாமல் தவிப்பாய்...
இன்று அதே தவிப்பை நான் உணர்கிறேன்...
மரணம் என்ற கதவிற்கு பின் ஒளிந்து கொண்டு...
இந்த கண்ணாமூச்சி ஆட்டம் வேண்டாம்...
அனைவரும் தூங்கும் நேரம்
மௌனத்தில் நாம் பேசும்
மொழியில் கடவுளும் தூங்காமல் கேட்பார்...
நம் மௌன பாஷை மிகவும் பிடித்து விட்டது போல...
தன் அருகில் வைத்துக் கொள்ள உன்னை என்னிடம் இருந்து பிரித்து செல்ல வந்து விட்டார்...
என் வெற்றிகளில் என் தோல்விகளில் என்னை விட அதிகம் மகிழ்ச்சியும் சோகமும் பெற்றது நீயே...
காலை வேளையில் தாய் என்னை எழுப்புகையில் "இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கட்டும் விடேன்" என்ற பரிவு...
எழுந்தவுடன் நான் தேடும் பெட் காப்பியை என் கையில் கொடுத்து குட் மார்னிங் டா என்று கூறும் அன்பு...
பள்ளிக்கு போகும் அவசரத்தில் கண் முன் இருக்கும் சாக்ஸ் காணமல் போக அவற்றை காலில் போட்டு விடும் பாசம்...
பள்ளி போட்டிகளில் பதக்கம் வென்ற என்னை என் பையன் என்று பக்கத்தில் இருப்பவரிடம் கூறும் கர்வம்...
பள்ளி இறுதி தேர்விற்கு இரவில் படிக்கும் போது பக்கத்தில் வைக்கும் ஏலக்காய் பாலின் சுவை...
கல்லூரி செல்லும் காலகட்டத்தில் வில்லனாக தோன்றும் உருவம்...
வேலை கிடைக்காமல் நான் தவித்த போது நண்பர்களுடன் கவலை இல்லாமல் சுற்றி திரிய பாக்கெட்டில் வைக்கும் பணம்...
அப்பா என்பது உன் புருஷன் என்று மாறிய போதும், புள்ளய எதுக்கு கோச்சிக்குற என்று கூறும் நேசம்...
நான் வாழ்க்கையில் தோல்வி பெறாமல் இருக்க தினம் தினம் நீ தோற்கும் அந்த தியாகம்...
புரியாமல் தவித்தேன்...
புரிந்த நொடியில் விட்டு பிரிந்து செல்லாதே...
பல நாள் கழித்து அப்பா என்று கூப்பிடுகிறேன்...
கேட்காத தூரத்தில் நீ...
வந்து விடு...
வருந்த விட்டு விடாதே...