முள்ளோடு முத்தாட வா...
அத்தியாயம் – 31
View attachment 33749
தன் அன்னையின் நினைவில் கலங்கியவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடி கன்னங்களில் பட்டுத் தெறிக்க அர்ஜூனின் முகம் சுருங்கியது.
“ இந்த அர்ஜுனை கட்டிக்க உனக்கு அவ்வளவு கசக்குதா? உன்னை அடக்கியாள நேரம் வந்துவிட்டது பாரதி ” அகம்பாவியின் குரல் உள்ளே ஓங்கி ஒலித்தது.
திருமணத்தின் மூலம் பாரதியை வெற்றி பெற்றதாக நினைத்த அர்ஜுன், தன் வெற்றியை பறைசாற்றும் பொருட்டு பாரதியின் தோள்களைத் தன் கையால் அணைத்து அவளை இறுக்கிக் கொண்டான்.
பதிலுக்கு பாரதியோ தன் கையால் அர்ஜூனின் இடுப்பை இறுக்கமாக வளைத்துக் கொண்டாள்.
விழி வழியே அவன் வினவிய வினாவிற்கு இமை நகர்த்தி பதிலுரைத்தாள்.
கண்களில் கவிதை படித்த இந்த அருமையான காட்சியை புகைப்படங்களும் தம்மில் புதைத்துக் கொண்டன.
அர்ஜூனின் இல்லத்திற்கு அனைவரும் கிளம்ப, தன் காரில் டிரைவர் இருக்கையில் ஏறி அமர்ந்தான் அர்ஜூன். பாரதியோ மணப்பெண் கோலத்தில் கைகளைக் கட்டியபடி வாசலிலேயே நின்றாள்.
“ கண்ணம்மா மாப்பிள்ளை காத்துட்டு இருக்கார். காரில் ஏறு “ ராம்பிரசாத் மகளை வேகம் செய்தார்.
“ பாரதி... நல்ல நேரம் முடியறதுக்குள்ள வீட்டுக்குள் போக வேண்டும். சீக்கிரம் வாம்மா “ அபிராமி வாஞ்சையாய் அழைத்தார்.
ஆனால் பாரதியோ யாருடைய குரலையும் சட்டை செய்யாமல், தன் கைகளைக் கட்டியபடி நாக்கின் நுனியால் கன்ன கதுப்பை நிரடியபடி நின்றாள்.
அனைவரும் அர்ஜூனின் கோபத்தை எதிர்பார்க்க, அர்ஜுனோ காரிலிருந்து இறங்கி வந்தான்.
கால் வரை இறங்கியிருந்த வேட்டியை ஏத்திக் கட்டினான்.
இடது புற மீசையை முறுக்கியபடி பாரதியின் கண்களை உற்று நோக்கினான்.
அர்ஜுனின் பார்வையை பார்த்து, “பச்.. “ என்று ஒலி எழுப்பியபடி தன் முகத்தை வேறு புறம் திருப்பினாள் பாரதி.
“அனைவரின் முன்னால் என்னை உனக்காக மண்டியிட வைக்க முயற்சி செய்கிறாயா பாரதி? “ காதோரமாய் ஒலித்தது அர்ஜுனின் குரல்.
தன் கீழ் உதட்டை பிதுக்கி, மிகவும் ஸ்டைலாக தன் தோள்களை குலுக்கினாள் பாரதி.
அடுத்தகணம் பாரதி அர்ஜூனின் கைகளில் மிதந்தாள். சுற்றியிருந்த கூட்டம் ஆவென பார்த்தது.
கார் கதவை திறக்க வந்தவன், அவளுடைய வினைக்கு எதிர்வினையாய், காதல் மன்னனாய் மாறி அவளை கைகளில் ஏந்தியிருந்தான்.
அவனுடைய அதிரடியில் அசந்த பாரதியோ, தன் கைகளை மலர் மாலையாய் அவன் கழுத்தில் சூட்டிக்கொண்டு அவன் விழிகளையே உற்று நோக்கினாள்.
அவளது விழி வீச்சில் கட்டுண்ட அர்ஜுனோ, அவளின் முகத்தருகே குனிந்து சென்று அவளை கடிப்பது போல் பற்களால் பாவனை செய்தான்.
அவனது செய்கையில் வெட்கம் மேலிட, தன் கைகளால் முகத்தை மறைத்துக் கொண்டாள் பாரதி.
பெண்மையின் இந்தப் பரிமாணம் அர்ஜுனை திகைக்க வைக்க, உலக அதிசயம் போல் பாரதியை பார்த்தபடியே நின்றான்.
தன் விரல் இடுக்குகளின் வழியே அர்ஜுனை கண்ட பாரதி, அர்ஜூனின் சட்டை காலரை இழுத்து, “வீடு போகும் எண்ணம் இருக்கிறதா? ஃபார்முலா ஒன் கார் ரேஸர், இப்படி வெயிட் லிப்டிங் மேன் போல் என்னை சுமந்து கொண்டே நிற்க போகிறீர்களா?
எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. காற்றில் மிதப்பதும் சுகமாகவே உள்ளது” என்று கூறியபடி தன் கால்களை அசைத்து கொலுசொலி எழுப்பினாள்.
தன் மனதின் எண்ணப் போக்கை உணரமுடியாத அர்ஜுன், தன் தலையை உலுக்கிக் கொண்டு பாரதியை கீழிறக்கினான்.
அர்ஜூனின் இல்லத்தில் திருமகள் திருவிளக்கு ஏற்ற அனைவரின் உள்ளம் போல் அந்த இல்லமும் ஒளிர்ந்தது.
பாரதியைத் தேடி வந்த ராம் பிரசாத் “கண்ணம்மா, நீ உன் அம்மாவை அர்ஜுனிடம் தேடாதே. நீ தோற்று விடுவாய்.
உனக்கான அன்பை மட்டுமே தேடு. நிச்சயம் நீ ஜெயித்து விடுவாய்.
இது அர்ஜூனின் வாழ்க்கை மட்டுமல்ல. உன் வாழ்க்கையும் தான்.
உறவுகளை புரிந்து கொள்வது அல்ல வாழ்க்கை. உணர்வுகளை புரிந்து கொள்வதே வாழ்க்கை” மென்மையாக உரைத்தார் ராம்பிரசாத்.
“அர்ஜுனிடம் பிடிக்காத விஷயங்கள் எனக்கு ஆயிரம் இருக்கலாம் அப்பா. ஆனால் அதையெல்லாம் மீறி அவனிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் ஒன்று இருக்கிறதே....
அனைவருடைய அன்பையும் மறக்க வைக்கிறது அர்ஜூனின் கோபம்.
ஆனால் அந்த அர்ஜுனின் கோபத்தையே மறக்க வைக்கும் என் அன்பு.
உண்மையான அன்பு எவ்வளவு காயப்படுத்தினாலும், இன்னும் அதிகமாக நேசிக்குமே தவிர விட்டு விலகிச் செல்லாது.
அப்பா நான் உங்கள் கண்ணம்மா. என் வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டும் என்பதற்காக நான் அர்ஜுனை திருமணம் முடிக்கவில்லை அப்பா.
சந்தோஷமே வாழ்க்கையாக மாற அர்ஜுனை உண்மையாக நேசிக்கத் தொடங்கி விட்டேன்.
என் அன்னை உறங்கவில்லை. அவன் உள்ளே உறைந்துள்ளார். என் அன்னையின் விழி வழியே அவன் உயிர் நுழைந்து அவன் உலகத்தை ஆள போகிறேன்.
சாதனைகளைக் கடந்த நான் சில சோதனைகளையும் கடந்து வெற்றி பெறுவேன் அர்ஜுனோடு “ என்றாள் கண்ணில் பளபளப்பு மின்ன.
“ அர்ஜூனின் இதயத்திற்குள் நுழைந்ததோடு நின்று விடாதே பாரதி. அவன் துடிப்போடு கலந்துவிடு.
கற்கண்டாய் எண்ணியது கண்ணாடித் துண்டாய் கிழித்தாலும், துவண்டு விடாதே. வைரமாய் பட்டை தீட்டி விடு.
உன்னிடம் பாடு படப் போகும் அர்ஜுனை நினைத்தால் எனக்கு சிறிது பாவமாகவும் உள்ளது” என்று கூறியபடி மென்னகை புரிந்தார் ராம்பிரசாத்.
அவருடனான சிரிப்பில் கலந்துகொண்டு நகைத்தாள் பாரதி.
மெல்ல இரவும் தன் வரவைத் தொடங்கியது. பாரதிக்கு நறுமண மலர்கள் சூடி , மருமகளை பொற்பாவையாக அலங்காரம் செய்து முடித்தார் அபிராமி.
தன் மருமகளுக்கு திருஷ்டி எடுத்து தன் கண்களில் அவளது அழகை நிரப்பி மகிழ்ந்தார்.
அபிராமியின் செய்கையில் பாரதியின் கன்னங்கள் செம்மையுற்றது.
“ தேவதை மாதிரி இருக்கேன்னு சொல்லணும். ஆனால் நீயே அந்த வரம் தரும் தேவதை தான் பாரதி.
நீயும் அர்ஜுனும் இணையும் இந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று மனமார ஆசீர்வதித்து பாரதியை அர்ஜுனின் தளத்திற்கு அனுப்பி வைத்தார்.
அர்ஜூனின் தளத்திற்கு மாடியேறி வந்தாள் பாரதி. அர்ஜுனின் அறைக்குள் நுழைந்தவளை அங்கு சூழ்ந்திருந்த இருளே வரவேற்றது.
யோசனையுடன் விளக்கை ஒளிரச் செய்ய சுவிட்சை ஆன் செய்தாள். தன் எதிரே கைகளை கட்டிக்கொண்டு தன்னை அழுத்தமாக பார்த்த அர்ஜுனைப் பார்த்து திகைத்து பின் தன்னை சமாளித்துக் கொண்டாள்.
“ முதலிரவுக்கு விளக்கு தேவையில்லை என்று அணைத்து வைத்திருந்தேன். பரவாயில்லை உனக்கு வெளிச்சம் ஓகே என்றால் எனக்கும் வெளிச்சம் ஓகே தான் மிஸஸ் அர்ஜுன்“ என்றான் இளித்தவாறு.
“ஓ... முதலிரவு கொண்டாட வேண்டுமா அர்ஜுன்? அதற்கு முன் அர்ஜூனின் பலத்தையும் பலவீனத்தையும் சோதித்துப் பார்க்கலாமா? “ என்றாள் அழுத்தமான பார்வையுடன்.
அவளின் கேள்வியில் சீண்டப்பட்ட அர்ஜுன், “என்னை நீ சோதிக்கப் போகிறாயா?.... “ என்றான் நக்கலாக.
பூவிதழ்களில் சிரிப்பினை சுமந்துகொண்டு,மென் நடையுடன், இளம்தென்றல் உருவம் எடுத்து வந்ததுபோல் அசைந்தபடி அர்ஜுனை நோக்கி நகர்ந்தாள்.
கண்களில் லேசான சுருக்கத்துடன் பாரதியின் செய்கைகளை ஆராய்ச்சி பார்வை பார்த்தான் அர்ஜுன்.
அருகில் வந்தவள் அவனருகே நெருங்கி வந்தாள். அவன் விழியோடு தன் விழியை கலக்க விட்டாள்.
தன் தளிர்க் கரங்களை அர்ஜூனின் முரட்டுக் கரங்களோடு பிணைத்துக் கொண்டாள்.
தன் கைகளின் சூட்டை அர்ஜூனின் கைகளுக்கு இடம் மாற்றினாள்.
அவளது செய்கைகளுக்கு எதிர்வினை ஆற்றாமல் கல்போன்ற இறுகிய முகத்துடன் நின்றிருந்தான் அர்ஜுன்.
தன் உயிர்க் காற்றை தேக்கி இதழ் வழியே அர்ஜுனின் கண்களைப் பார்த்து ஊதினாள்.
பூக்களின் சுகந்தம் அவன் நாசியை நிரடிய அடுத்த நொடி தன் கண்களை அனிச்சையாக மூடினான்.
மையல் சிரிப்புடன், பாரதி தன் கைகளை மேலே உயர்த்தி, அவன் சிகையின் பின்னே தன் கைகள் கோர்த்து பத்து விரல்களை அலைய விட்டாள்.
அர்ஜுனின் ரோமக் கால்கள் குத்திட்டு எழுந்து நின்றன. தன்னை மீறி அவளை அணைக்க துடித்த தன் இரு கரங்களை இறுக்கி மூடிக்கொண்டான்.
கண்களைத் திறக்காத அவன் நிலையை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட பாரதி, சட்டென்று அவன் தலையை தன்புறம் சாய்த்து அவன் விழிகளில் ஆழ்ந்த தன் உயிர்முத்தத்தை பதித்தாள்.
கண்களின் கரையை கடக்கத் துடித்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.
அவளது முத்தத்தில் மொத்தமும் பித்தமான அர்ஜுன், தன் விழிகளை படக்கென்று திறந்தான்.
பாரதியோ அர்ஜுனை பார்த்து, தன் கட்டை விரலை கீழ்நோக்கி காட்டி, தலையை சாய்த்து பரிகாசம் செய்யத் தொடங்கினாள்.
அடுத்த நொடி சினம் தலைக்கேறிய அர்ஜுன், பாரதியை முரட்டுத்தனமாக பற்றி இழுத்து அணைத்தான்.
“என் உடல் இச்சைகளை தூண்டிவிட்டுதான் நீ வெற்றி பெற வேண்டுமென்றால் அது உன் பெண்மைக்கு அவமானம் பாரதி.
என் தன்மானத்தை நீ சீண்டிப் பார்க்காதே பாரதி. இதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்” என்றான் கோபக்கனலுடன்.
“ தன் கணவனின் பலத்தையும் பலவீனத்தையும் சோதிப்பதில் எந்தப் பெண்ணின் பெண்மையும் கலங்கப்படுவதில்லை அர்ஜுன் பேபி.
அது தெரியாமல் இருந்தால்தான் என் பெண்மைக்கு கேவலம்” அவனின் சொல் அம்புகளை செல்லாததாக்கி விட்டு தலை நிமிர்ந்தாள் பாரதி.
அவளை காற்றும் உள்ளே புகாதபடி இன்னும் இறுக்கியவன், “அப்படி என்றால் என் பலவீனத்தை சோதித்த நீ என் பலத்தையும் சோதிக்கலாமே....
என் பலத்தை நான் காட்டட்டுமா ரதி? “ என்றான் அவள் காதோரமாக.
“அங்கத்தை புசிப்பதுதான் ஆண்மையின் பலம் என்றால், மிருகங்கள் கூட ஆண்களின் வரிசையில் நிற்க வேண்டுமே” என்றாள் அவன் காதோரமாக.
அவளைத் தள்ளி நிறுத்தி, “என்ன உளறுகிறாய் பாரதி? “ என்றான்.
“என் உடலை ஜெயிப்பது உங்களுக்கு எளிதான விஷயம். உங்களால் என் இதயத்தை ஜெயிக்க முடியுமா?“ என்றாள் கண்களில் சவாலுடன்.
“பெண்களின் இதயத்தை வெல்வது வெகு சுலபம். எத்தனை பெண்களிடம் கண்டு இருக்கிறேன்.
நீ கண்ணை மூடி திறப்பதற்குள் நீ வேண்டும் பரிசை வாங்கி உன்முன் குவித்து உன் இதயத்தை எளிதாக வென்று விடுவேன்” என்றான் இறுமாப்புடன்.
“எனக்கு உங்கள் பரிசுகள் தேவை இல்லை அர்ஜுன் “
“ பிறகு வேறென்ன வேண்டும் பாரதி சொல். இமைக்கும் நொடிக்குள் தருவேன்”
“ உங்களது வெற்றி வேண்டும் அர்ஜூன்”
“வாட்...? “
“ உலகம் திரும்பிப் பார்த்த உங்கள் தோல்வியிலிருந்து உங்களை மீட்டெடுக்கும் வெற்றி வேண்டும்.
எனக்கு ஐஸ் மேன் அர்ஜுன் வேண்டும்”
அர்ஜூனின் இதயக்கதவை பாரதியின் வார்த்தைகள் தட்டியது. பாரதியிடம் இருந்து எதிர்பாராமல் கிடைத்த இந்த பதிலால் அர்ஜூனின் அகம் ஆட்டம் கண்டது.
முதல்முறையாக பாரதியை இதயத்தின் மூலையில் முனுக்கென்று தோன்றிய அன்புடன் பார்த்தான்.
நம்பிக்கையும் அவநம்பிக்கையும் போட்டியிட பாரதியைப் பார்த்து, “என் வெற்றியில் உனக்கு என்ன கிடைக்கும்? “
“ என்னவனின் வெற்றியே என் வெற்றி “ என்றாள் கர்வமாக.
அவளின் கர்வத்தில் இவனது சர்வமும் ஆட்டம் கண்டது.
இதுவரை எந்தப் பெண்ணிடமும் தான் காணாத அந்த கர்வத்தில் மயங்கிய அர்ஜுன், “ என் பலத்தையும் பலவீனத்தையும் சோதித்தாயே பாரதி, உன்னைச் சோதிக்கலாமா? “ என்றான்.
புதிதாக முளைவிட்ட அவள் காதல் அவனை அழைக்க, அவனை புறம் தள்ளச் சொல்லி மூளை கட்டளையிட இரு கரை நடுவே ஓடும் ஆறாக அவள் மனது பெருக்கெடுத்தது.
பெண்ணவளின் விழி விரித்த நிலையைக் கண்ட அர்ஜுன், அவள் பிறை நெற்றியில் சுருண்டிருந்த கார்குழலை தன் சுட்டு விரலால் சுருட்டினான்.
உடலில் உள்ள அனைத்து ரத்தமும் உச்சி நோக்கி பாய்ந்தது பாரதிக்கு.
அவள் காதின் பின்னே கார்குழலை ஒதுக்கிவிட்டு, “உன் அன்னைக்காக உன்னையே பணயம் வைத்தாய்.
நானே மறந்திருந்த என் வெற்றியை நீ மீட்டெடுக்க துடிக்கிறாய்.
அர்ஜுனை சாய்க்கும் ஆயுதமாக உன்னை நீ மாற்றினால்,
இந்த அர்ஜுனின் கையால் மாய்ந்து விடுவாய்.
மரணத்தோடு முத்தாட போகிறாயா பாரதி? “ என்றான்.
மயக்கும் மோகனப் புன்னகையுடன் பாரதி அர்ஜூனின் இதயத்தை தன் இதழ்களால் தீண்டி, “நான் மரணிக்கப் போகுமிடம் இதுவென்றால் எனக்கு முத்தாட சம்மதமே” என்றாள்.
அவளின் முத்தத்தின் சத்தத்தில் அர்ஜுனின் உடல் சுகவேதனையில் உழன்றது.
“முத்தாட சம்மதம் தெரிவித்து இப்படி தலைகுனிந்து இருந்தால் என்ன அர்த்தம் பாரதி? “ என்றான் அவளை சீண்டியபடி.
மையிட்ட விழியால் மன்னவனை ஏறிட்டுப் பார்த்தாள் பாரதி.
பாரதியின் கன்னங்களை தன்னிரு உள்ளங்கைக்குள் அடக்கிக் கொண்டு அவள் மதி முகத்தை பார்வையால் விழுங்கினான்.
தன் பெருவிரலால் அவள் கீழுதட்டை அளவெடுத்தான்.
மன்னவனின் சிறு தீண்டலுக்கு பாரதியின் முகம் ரத்தம் எனச் சிவந்தது.
அர்ஜுனின் மூச்சுக்காற்று பாரதியின் முகத்தில் மோதி மோகத் தீயை பற்ற வைத்தது.
அச்சம், வெட்கம், ஆர்வம் என அனைத்தும் கலந்து பாரதியின் கண்களில் நர்த்தனம் ஆடியது.
பாரதியின் நெற்றியில் வியர்வை பூக்கள் பூக்க, காதோரம் வடிந்த வியர்வைத் துளியை தன் விரல்களால் சுண்டி விட்டு சிதறச் செய்தான் அர்ஜுன்.
பதறிய மங்கையவளோ படபடப்புடன் அர்ஜூனின் மார்பில் கையை வைத்து அவனை தள்ளினாள்.
அசையாத அந்த அரிமா, தன்னை தள்ளிய அந்த பூங்கரத்தை வளைத்து தன்னோடு இறுக்கிக் கொண்டது.
எந்தப்பெண்ணிடமும் மயங்காமல் தலைநிமிரும் தன் ஆண்மை பாரதியிடம் மட்டும் பள்ளம் கண்ட வெள்ளமாய் துடிப்பது ஏன்? அர்ஜுனின் மனம் அவனைக் கூறு போட்டது.
புது மஞ்சள் கயிறு பளபளக்க தன் முன்னே நின்றவளைப் பார்த்தவனின் இதயத்தில், தன் மனைவி என்ற உரிமை ஏகாந்தமாய் மலர, மலரிதழ்களைப் போல் இருந்த பாரதியின் இதழோடு தன் இதழைச் சேர்த்தான்.
அதிர்ந்து விழித்தவளின் கண்களை தன் உள்ளங்கை கொண்டு மூடினான்.