- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
Part - 21
அன்றிரவே லாப்பை எடுத்து வைத்து கதை படிக்க ஆரம்பித்தாள் அனன்யா. அவள் சோபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க அவள் பின்னால் சோபாவில் கை ஊன்றி நின்ற சஞ்சய் தானும் அவள் படிப்பதை வாசிக்க ஆரம்பித்தான்.
"அய்யய்யோ"
அவன் புறம் திரும்பிய அனன்யா "என்ன சஞ்சய்? என்ன? என்னாச்சு?" என்றாள் பதட்டமாக.
"இங்கிலீஷ் படம் வேணாம்... கதையே போதும் போலேயே... ச்ச இத்தன நாள் இது தெரியாமப் போச்சே..." என்றுக் கூறி சோபாவை சுற்றி வந்து அவள் அருகில் அமர்ந்தான்.
“ஷப்பா இதுல ஒண்ணும் அப்படி எதுவும் இல்ல. ஓவரா பேசாத” என்று அனன்யா கூறியதும் அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்தான்.
சஞ்சய் “மினி லைப்ரரி” என்று பெயர் சூட்டியிருக்கும் அறைக்குள் சென்று தான் வாங்கிக் குவித்த புத்தகங்களை அலசி ஆராய்ந்து ஒன்றை தேர்வு செய்து எடுத்து வந்து “இந்தா நீ இத படி..." என்றுக் கூறி அவன் கையில் கொடுத்தாள் அனன்யா.
அரை மணி நேரம் அதை வாசித்தவன் "ம்ம்கும்ம்... அது எப்படிடி... கதைல மட்டும் இடிச்சா, மொறச்சா, திட்டுனா, கத்துனா, கொஞ்சுனா, கெஞ்சுனா உடனே லவ் வந்துடுது?." என்று ராகம் பாடினான்.
"பின்ன? என்னப் பண்ணா லவ் வருமாம்??”
"போடி... இதெல்லாம் என்னால படிக்க முடியாது... வேணுன்னா உன் கதையவே திரும்பப் படிக்குறேன்..." என்றுக் கூறி அனன்யா எழுதிய கதைகளுள் ஒன்றை எடுத்து படிக்க ஆரம்பித்தான். அனன்யா எதுவும் கூறாமல் அமைதியாக புன்னகைத்தாள்.
நீண்ட நேரம் கண் விழிக்க முடியாமல் சஞ்சய் எழுந்து சென்று படுத்ததும் "இன்னும் ஏழு பேஜ் தான் சஞ்சய்... படிச்சுட்டு படுக்குறேன்..." என்றுக் கூறி அவன் அருகில் மெத்தையில் அமர்ந்தாள் அனன்யா.
"இன்னைக்கும் லைட்ட போட்டு வெச்சு உக்காரப் போறியா? முதல்ல இதுக்கு ஒரு முடிவுக் கட்டுறேன்" எப்பொழுதும் போல் தலை வரை போர்த்தி உறங்க ஆரம்பித்தான்.
அடுத்த நாள் மாலை வீட்டிற்கு வரும்போது ஒரு பெரிய கவரோடு வந்தான் சஞ்சய்.
"என்ன சஞ்சய்? கொஞ்ச நாளைக்கு ஒரு வாட்டி பெரிய கவர தூக்கிட்டு வர?"
"எல்லாம் உன் இம்சை தாங்காம தான்"
சஞ்சய் கவரை அவள் கையிலேயே கொடுக்க ஆர்வமாக அதைப் பிரித்தாள். உள்ளே ஒரு சிறிய லேப்டாப் டேபிள் இருந்தது. அதில் ஒற்றை லாம்ப் ஒன்றும் பொருத்தப்பட்டு இருந்தது.
"ஹை... சூப்பரா இருக்கு சஞ்சய்" என்று கண்கள் விரிய கூறினாள் அனன்யா. சோபாவில் அமர்ந்து அதை விரித்து மடியின் மேல் வைத்து அந்த லைட்டை ஆன் செய்துப் பார்த்தாள்.
"இனி லைட் போட்டு வெச்சு என் தூக்கத்த கெடுக்காத" என்றுக் கூறி எழுந்து உள்ளே சென்றான் சஞ்சய். மடியில் இருந்த டேபிளை எடுத்து அருகில் வைத்து ஓடிச் சென்று அவனைப் பின்னாலிருந்து அணைத்து "நீ கோவமா இருக்கன்னு நம்பிட்டேன்..." என்றுக் கூறி அவன் முதுகில் முத்தமிட்டு "தேங்க்ஸ் சஞ்சய்" என்றாள்.
புன்னகையுடன் திரும்பி "என்னால உன் மேல கோவப்பட முடியாது அனு" என்றவன் குளியலறையுள் புகுந்துக் கொண்டான்.
அன்று இரவு லாப்புடன் அமர்ந்தாள் அனன்யா. அவளிடம் பேச வேண்டும் என்பதற்காகவே "என்னமோ படிக்கப் போறேன்னு சொன்ன?" என்றுக் கேட்டான் சஞ்சய்.
"அதான் நேத்துப் படிச்சேனே... நான் எழுத ஆரம்பிக்கப் போறேன். டைட்டில் தான் என்ன வெக்கன்னுத் தெரியல"
மெதுவாக சஞ்சையைத் திரும்பிப் பார்த்தவள் "மொத கதைக்கு இவன்கிட்ட டைட்டில் கேட்டப்பமே அந்த பாடு படுத்துனான்... அதுக்கு அப்பறம் எப்போக் கேட்டாலும் எடக்கு மடக்காவே சொல்லுறானே... இப்போ எப்படிக் கேக்குறது?" என்று யோசித்தாள்.
"ஹ்ம்ம்... கேட்டு தான் ஆகணும்..." என்று முடிவெடுத்தவள் மனதை தேற்றிக் கொண்டு "சஞ்சய் இந்த கதைக்கு இந்த டைட்டில் எப்படி இருக்குன்னு சொல்லு" என்றுக் கூறி தலைப்பைக் கூறினாள்.
தலை கவிழ்த்து யோசித்த சஞ்சய் "நீ சொல்லுறது 'ஊருக்கு வரேன் இப்போ நான்' ரேஞ்சுக்கு இருக்கு... ஏதோ தெலுங்கு பட டப்பிங் டைட்டில் மாதிரி... வேற டைட்டிலே கெடைக்கலையா?" என்றான்.
"ஆரம்பிச்சுட்டான்... இனி இவன ஒத்துக்க வெக்குறதுக்குள்ள..." என்று நினைத்த அனன்யா வருசையாக தான் யோசித்தவற்றைக் கூற ஆரம்பித்தாள்.
சிறிது நேரம் அனன்யா கூறிய எல்லாவற்றையும் கிண்டல் செய்த சஞ்சய் அவள் கூறிய ஒரு தலைப்பை ஒத்துக் கொண்டான். "அப்பாடா..." என்றிருந்தது அனன்யாவிற்கு. யோசனையாக அமர்ந்திருந்தவளைப் பார்த்தவன் "இன்னும் என்ன யோசிக்குற?" என்றான்.
"எப்படி ஸ்டார்ட் பண்ணுறதுன்னு யோசிக்குறேன்"
"Once upon a time னு ஸ்டார்ட் பண்ணு" என்று சீரியசாகக் கூறினான் சஞ்சய்.
"நான் ஒண்ணும் நம்மக் கொழந்தைக்கு ஸ்டோரி எழுதல…"
“நம்ம கொழந்த? ம்ம்???”
"அய்யய்யோ... சும்மா இருக்குறவன நம்மளே சொரியுறோமே… என்ன நெனைப்பான்?" என்று யோசித்தவள் "நீ தூங்கு சஞ்சய்... அதான் எனக்கு இந்த டேபிள்லயே லாம்ப் இருக்கே" என்றுக் கூறி வேகமாக விளக்கை அணைத்து வந்து அமர்ந்து டைப் செய்ய ஆரம்பித்தாள்.
"இப்படியேப் பண்ணிட்டிரு... அப்பறம் எங்கேந்து?? ஹ்ம்ம்"
"என்ன?"
"ஒண்ணும் இல்ல... வர வர என்ன கவனிக்கவே மாட்டேங்குற..."
தன் வாய் மேல் கை வைத்த அனன்யா "அட பாவி..." என்றாள். சிரித்துக் கொண்டே "குட் நைட்" என்றுக் கூறி உறங்கினான் சஞ்சய்.
அன்றிரவே நிறைய டைப் செய்த அனன்யா அடுத்த நாள் காலை சஞ்சய் சென்றதிலிருந்து தான் யோசித்தவரை கதையை டைப் செய்து முடித்தாள். மாலை சஞ்சய் வந்தபோது அவனிடம் அதை படிக்க சொல்லிவிட்டு சமைக்கத் துவங்கினாள்.
வேலை செய்தாலும் அவ்வபோது சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தாள். சஞ்சய் அமைதியாக கதையிலிருந்து கண் எடுக்காமல் படித்துக் கொண்டே இருந்தான். இரவு உணவைத் தயாரித்து அவன் அருகில் வந்தமர்ந்தாள் அனன்யா. சஞ்சய் அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
மணி 8.30 ஆகியும் அவன் படித்துக் கொண்டிருந்ததால் "சஞ்சய் சாப்பிடலாம் சஞ்சய். அப்பறம் படி..." என்றாள். லாப்பிலிருந்து கண்ணை எடுக்காமல் "ம்ம்... எடுத்துட்டு வந்து ஊட்டி விடு. நான் படிச்சுட்டே சாப்பிடுறேன்" என்றான்.
எழுந்து சென்று தட்டில் புட்டை எடுத்து வந்து ஊட்ட ஆரம்பித்தாள் அனன்யா.
பாதி சாப்பிடும்போதே படித்து முடித்தவன் "ம்ம்" என்றுக் கூறி லாப்பை மடியிலிருந்து எடுத்து சோபாவில் வைத்தான். கையில் ஒரு வாய் பிட்டை எடுத்தவள் அவன் செய்கையைப் பார்த்து "ம்ம் னா?" என்றாள்.
அவள் கைப் பிடித்து அவள் கையிலிருந்ததை வாயில் வாங்கியவன் "புட்டு சூப்பரா இருக்கு அனு" என்றான்.
"புட்டு நல்லா இருக்கா? சஞ்சய்... வெளயாடாத... கதை படிச்சல்ல... எப்படி இருக்குனு சொல்லு..."
"நல்லா இருக்கு..."
"நல்லா இருக்குன்னா?? ஹேய்... ரெண்டு பக்கம் படிச்சப்பல்லாம் ஆயிரத்தெட்டு கரெக்ஷன் சொல்லுவ... இத மாத்து அத மாத்துன்னுப் படுத்துவ... இப்போ 40 பக்கம் படிச்சிருக்க சஞ்சய்... ஏதாவது சொல்லு பா..."
"ஏன்டி இப்படிக் கெஞ்சுற?" என்றுக் கேட்டு சிரித்தான் சஞ்சய்.
"சொல்லு ப்ளீஸ்”
"40 பக்கம் படிச்சேன். எதுவும் சொல்லல. போர் அடிக்கல. அதுலயே தெரிய வேணாமா? ஸ்டோரி நல்லா இருக்குன்னு... இதுக்கு மேல 'ஐயோ இது நல்லா இருக்கு... அச்சச்சோ இது நல்லாருக்கு'ன்னு சொல்லணுமா?"
அனன்யாவிற்கு என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை. சஞ்சயின் கன்னத்தை கிள்ளி "ஐயோ... எனக்கு சந்தோஷம் தாங்கல..." என்றுக் கூறி எழுந்து சென்றாள்.
கிட்செனில் வேலைகள் அனைத்தையும் முடித்து அவன் அருகில் வந்தமர்ந்தவள் "என்ன பண்ணுற?" என்றுக் கேட்டு அவன் மடியில் இருந்த லாப்பை எட்டிப் பார்த்தாள்.
"இப்போ படிச்சதுக்கு ஏத்த மாதிரி தொடரும் பிக்சர் எடுக்குறேன்"
அவன் கழுத்தைச் சுற்றி கையை மாலையாகப் போட்டு அவனை அருகிலிழுத்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் அனன்யா. கன்னத்தை தடவிக் கொண்டே "என்ன அனு ஆச்சு?" என்றுக் கேட்டான் சஞ்சய்.
"ம்ம்ஹும்..." என்றுக் கூறி தோளைக் குலுக்கி விட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் அனன்யா. சிறிது நேரத்தில் அவன் டி ஷர்ட் காலரின் நுனியைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள்.
"எத்தன தடவ சொல்றது அனு? இப்படிப் பண்ணாதன்னு..."
"இப்போ அதுவா முக்கியம்???"
"எப்போ இத சொன்னாலும் ‘இப்போ அதுவா முக்கியம்?’னு தான் கேக்குற..." என்றுக் கூறி தன் வேலையைத் தொடர்ந்தான் சஞ்சய்.
"சஞ்சய்..."
"ம்ம்"
"சஞ்சய் கேளு..."
"கேட்டுட்டு தான் இருக்கேன்"
"நானு..."
"ம்ம்"
"இன்னைக்கு மாலினி போன் பண்ணா..."
"ம்ம்"
"அவக்கிட்ட பேசுனேன்..."
அனன்யாவை ஒரு முறைத் திரும்பிப் பார்த்து விட்டு "ம்ம்" என்றான் சஞ்சய்.
"அவக்கிட்ட நான் கத எழுதுறேன்னு சொல்லிட்டேன் சஞ்சய்" என்று மெதுவாகக் கூறினாள் அனன்யா.
சட்டென்று அவள் புறம் திரும்பிய சஞ்சய் "அதானப் பாத்தேன். பொண்ணுங்களால ஒரு விஷயத்த சீக்ரெட்டா வெச்சுக்க முடியுமா என்ன?" என்றான்.
"கிண்டல் பண்ணாத பா..."
"அதான் சொல்லிட்டியே... அப்பறம் என்ன?"
"ஒண்ணும் இல்ல... வா தூங்கலாம்"
லாப்பை எடுத்து அருகில் வைத்து வேகமாக அவள் புறம் திரும்பி அமர்ந்தவன் "தூங்கலாமா??? என்ன அதிசயமா இருக்கு? மணி 10 தான் ஆகுது..." என்றான் சஞ்சய்.
"காலையிலேருந்து டைப் பண்ணிட்டே இருக்கேனா... கண்ணெல்லாம் எரியுது சஞ்சய்"
"சரி சரி வா தூங்கலாம்..." என்றுக் கூறி லாப்பை அணைத்து வைத்து விட்டு அவளுடன் சென்றுப் படுத்தான் சஞ்சய்.