- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
Part - 1
நீ வந்து முற்றுப் புள்ளி வைக்காத வரை
என் கவிதை முழுமை அடைவதில்லை...
நீ வந்து தீண்டாத வரை
என் வீட்டு மொட்டுக்கள் மலர்வதில்லை...
நீ என் கண்ணில் தென்படாத வரை
அந்த நாள் புதிய நாளாவதில்லை...
நீ வந்து அமர்ந்திடாத அந்த ஒரே ஒரு இருக்கையால்
என் சபை நிரம்புவதில்லை...
எல்லாம் இப்படி இருக்கையில்
நீ காட்டாத நேசத்தாலா
நான் நானாக இருக்கப் போகிறேன்?
-Prajodh
இன்றோடு அவளை தினமும் அலுவலகத்தில் பார்க்கமுடியாது... இதோ அவள் இருக்கையில் அமர்ந்திருப்பவள் நாளை அங்கே இருக்க மாட்டாள்... இனி என் உணவு இடைவேளைகளில் அவளுடன் பேசி சிரித்து உணவை பகிர்ந்துண்ண முடியாது... மாலை வீடு திரும்பும்போது அவளை பின்னால் அமர வைத்து செல்லும் பைக் பயணம் தனக்கு வாய்க்கப்போவதில்லை...
நமது எண்ணவோட்டம் ஒளியின் வேகத்தைக் காட்டிலும் வேகமாக பயணிக்கக் கூடியதாம். அதை உண்மை என்று நிரூபித்துக் கொண்டிருந்தான் சஞ்சய். எதிரில் அமர்ந்திருக்கும் அனன்யாவை கண் இமைக்காமல் பார்த்தவனின் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள்.
“சஞ்சய்... நான் பேசுறதுக் கேக்குதா? இந்த மெயில் நேத்து வந்தது. இதுக்கு என்ன ரிப்ளை பண்ணட்டும்? இல்ல நீங்க பதில் அனுப்புறீங்களா? எத்தன தடவ கேக்குறது?”
அனன்யாவின் கேள்விகள் சஞ்சயின் எண்ணவோட்டத்தை தடை செய்தன. “ஹான்... என்னது?” அவள் என்ன கேட்டாள்? எத்தனை முறை கேட்டாள்? என்று எதுவும் அவனுக்கு நினைவில்லை. அவள் பேசினாளா என்றுக் கூட தெரியாதே...
“சரியா போச்சு. உங்க இன்பாக்ஸ் செக் பண்ணுங்க. மேனேஜர் ஸ்டேடஸ் கேட்டு மெயில் அனுப்பியிருக்காரு. நேத்து ஈவ்னிங் பார்த்தேன். கிளம்புற அவசரத்துல ரிப்ளை பண்ணல. இன்னைக்கு ஆபீஸ்ல என்னோட லாஸ்ட் டே. சோ நாளையில இருந்து நீங்கதான் எப்படியும் இத follow up பண்ண வேண்டியிருக்கும். அதான் கேக்குறேன்... நீங்களே மெயில் பண்ணுறீங்களா?”
இதுதான்... இந்த தெளிவான பேச்சுதானே தன்னை அவளிடம் ஈர்த்தது. பார்த்ததும் பிடித்துவிட்டது என்பதை விட அவளிடம் பேசி பழகியப் பிறகு வந்த பிடித்தம். அதன் பிறகு அவள் பேசியதை ரசித்ததை விட பேசும் விதத்தை ரசித்தது தான் அதிகம்.
“சஞ்சய்??? காலையிலிருந்து நீங்க சரியே இல்ல. என்னமோ பண்ணுங்க. நான் ரிப்ளை பண்ண மாட்டேன். மேனேஜர் வந்து கேப்பாரு... பதில் சொல்லிக்கோங்க”
அனன்யா இருக்கையில் இருந்து எழுந்து அவர்கள் அமர்ந்திருந்த க்யூபிக்களை விட்டு வெளியே செல்ல எத்தனிக்கவும் “ஹே இரு இரு... எங்கப் போற? வா காண்டீன் போகலாம். ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாம். வந்து நான் மெயில் பார்க்குறேன். ஒகேவா?”
“ப்ரேக்பாஸ்ட்டா? அப்போ காலையில வீட்டுல சாப்பிட்டது?”
வயற்றில் கொஞ்சம்கூட இடம் இல்லாதபோது இரண்டாம் முறை காலை உணவை உண்பதா? அனன்யாவால் எப்போதுமே அதிகம் சாப்பிட முடியாது. மூன்று வேலை சாப்பிட வேண்டும் என்ற உலக நியதியை மதிப்பதற்காக தினமும் மூன்று வேலை சாப்பிடுபவள்.
அதற்காக அவள் உண்ணும் உணவே அதுதான் என்றில்லை. இடையிடையே கண்ணில் பட்டது கையில் சிக்கியது என்று எல்லாவற்றையும் கொறிக்கும் ரகம். சாப்பாடு சாப்பிட மட்டும்தான் கசக்கும்...
“சாப்பிட வரமாட்டியா? இன்னைக்கு மட்டும்தான நான் உன்கூட cafeteria போய் சாப்பிட முடியும்?”
இப்படி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்பவனிடம் எப்படி மறுப்பது? “காலங்காத்தால சாட் ஐடம்ஸ் கூட எதுவும் இருக்காதே... சரி போகட்டும்… போய் கொஞ்சமா ஏதாவது சாப்பிட்டு வருவோம்”
“சரி போகலாம். ஆனா நான் கொஞ்சம்தான் சாப்பிடுவேன்”
“நீ என்கூட வந்து உட்கார்ந்து சாப்பிட்டாலே போதும்”
“அப்போ சரி வா”
இருவருக்கும் தோசை வாங்கினான் சஞ்சய். வரிசையில் அவளுடன் நின்றபோது முதல் முறை அவளை cafeteria உள் பார்த்தது நினைவு வந்தது. அன்று அவள் வரிசையில் நின்றுக் கொண்டிருக்க கூட்டம் அதிகமாக இருந்ததால் தன்னுடைய கூப்பனையும் அவளிடம் கொடுத்து உணவு வாங்க சொன்னான்.
அவள் கொண்டு வந்த தட்டை வாங்கியவன் “நீங்க யார்கூட வந்தீங்க?” என்றுக் கேட்க “தனியாதான் வந்தேன்” என்றாள் அனன்யா.
“தனியா எப்படி சாப்பிடுவீங்க? வாங்க எங்கக்கூட சாப்பிடுங்க...”
தன் நண்பர்கள் கூட்டம் அமர்ந்திருக்கும் டேபிளை கை காட்டினான். கிட்டத்தட்ட அவர்கள் டீம் மொத்தமும் அங்கே இருந்தது. எல்லோரும் ஒன்றாக ஒரே பிராஜக்டில் வேலை பார்ப்பவர்கள் என்பதால் தயங்காமல் அவளும் அவனுடன் சென்று சாப்பிட்டாள்.
“சஞ்சய்... தட்ட பிடிங்க”
அனன்யா கூறவும் பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்தவன் அவள் நீட்டிய தட்டை வாங்கினான். இருவரும் ஒரு டேபிளில் வந்து அமர்ந்தனர்.
“இப்படிதான ஒரு நாள் நான் உங்களுக்காக லஞ்ச் வாங்கிக் கொடுத்தேன்? அன்னையிலேருந்து ஒண்ணா சாப்பிடுறோம் இல்ல?”
“ஹ்ம்ம்... அன்னைக்கு மொத்த டீமோட சாப்பிட ஆரம்பிச்சோம். போக போக அது அப்படியே கம்மி ஆகி... கடைசியில நம்ம ரெண்டு பேரு மட்டும் உக்காந்து சாப்பிட ஆரம்பிச்சுட்டோம். இன்னைக்கு மாதிரி”
சஞ்சய் சிரிக்க அனன்யாவும் வெட்கப்பட்டு தலைக் குனிந்து சிரித்தாள். “எல்லாம் உங்களால வந்தது... ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி எல்லாரயும் கழட்டி விட்டுட்டு என்கூட தனியா உக்காந்து சாப்பிட்டது நீங்கதான?”
சஞ்சய் புன்னகையுடன் அமைதியாக சாப்பிட்டு முடித்தான். அனன்யா அப்போதும் பாதி தோசை கூட சாப்பிட்டிருக்கவில்லை. மெல்ல காலியான தனது தட்டை அவள் பக்கம் நகர்த்தி வைத்தவன் அவள் தட்டை இழுத்து அதிலிருந்த தோசையை சாப்பிட ஆரம்பித்தான்.
“இதுக்குதான் என்னால சாப்பிட முடியாதுன்னு சொன்னேன்... சொன்னாக் கேட்டாதான?”
“அதனால என்ன? நான் சாப்பிட்டுட்டுப் போறேன்... இன்னும் கொஞ்ச நேரம் உன் பக்கத்துல இருக்கலாமே...”
“ஆஹா... எப்படியும் இப்போ பிளேஸ்கு திரும்பிப் போனாலும் என் பக்கத்துலதான உக்காரப் போறீங்க?”
“அது பிளேஸ்ல... இது cafeteria ல...”
“முடியலடா சாமி......”
சாப்பிட்டு எழுந்து கை கழுவி வெளியே வந்ததும் “கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாமா? அங்கப் போனா அப்பறம் வேலை இருந்துட்டே இருக்கும். இடத்த விட்டு நகர முடியாது” என்றான் சஞ்சய்.
அனன்யாவிற்குமே அவனுடன் நடக்க வேண்டும் போல் இருந்தது. இருவரும் மெளனமாக சிறிது தூரம் நடந்தனர். இத்தனை நாட்களில் அவர்கள் நடந்த பாதை... நின்ற இடங்கள்... பேசிய வார்த்தைகள் என மனம் எங்கோ சென்றுக் கொண்டிருந்தது.
இதற்கு மேலும் தாமதிக்க முடியாது... முடிக்க வேண்டிய வேலைகள் அதிகம் இருந்ததால் “வேலை இருக்கு. வா போகலாம்” என்றான் சஞ்சய். மனமே இல்லாமல் தலையசைத்த அனன்யா திரும்பி நடந்தாள்.
சஞ்சய் சொன்னதுப் போல் அவன் இடத்திற்கு வந்தப் பிறகு அவளை திரும்பியும் பார்க்க முடியாதபடி அவனுக்கு வேலை இருந்தது.
அனன்யா இன்றுடன் வேலையை விட்டு போகப் போகிறாள் என்பதால் அவளுக்கு யாரும் எந்த வேலையும் தராமல் ஒருவர் பின் ஒருவராக வந்துப் பார்த்து பேசிவிட்டு சென்றனர். அவர்களுடன் அரட்டை அடிப்பதிலேயே அவளுக்கு பொழுதுப் போனது.
சரியாக பத்தரை மணிக்கு “ப்ரேக் போகலாமா?” என்றுக் கேட்டான் சஞ்சய். தினமும் வாடிக்கையாகக் கேட்கும் கேள்விதான்... இருப்பினும் இன்று அவன் அதைக் கேட்க மாட்டானா என்று கடந்த ஒரு மணி நேரமாக அவள் தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள்.
அவன் கேட்டதுமே எழுந்தவள் அவனுக்கு முன்னால் க்யூபிக்களை விட்டு வெளியேறினாள். இருவரும் காபி அருந்திய சமயம் “நீ இல்லாம எனக்கு போர் அடிக்கும். ஏன் வேலைய விடுறேன்னு சொன்ன? இனிமே நான் யாரோட இப்படி காபி குடிப்பேன்?” என்றுக் கேட்டான் சஞ்சய்.
“உங்களோட காபி குடிக்குறதுக்காக நான் வேலைக்கு வரணுமா? அது சரி...”
அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டான் சஞ்சய். அவளைப் பார்த்துக் கொண்டே அருந்தும்போது கசப்பான காபி கூட இனிக்கிறதென்று எப்படி புரியவைப்பான்?
ஆனால் அனன்யாவோ வேறு யோசித்தாள். “இப்படியே கேட்டுட்டு இருந்தா அப்பறம் வேலைய விடுறேன்னு நான் எடுத்த தீர்மானம் தப்போன்னு தோண ஆரம்பிச்சுடாது?”
அதன்பிறகு சஞ்சய் மீட்டிங் இருப்பதாகக் கூறி கான்பெரன்ஸ் ரூமிற்கு சென்றுவிட அனன்யா அதே க்யூபிக்களில் அமர்ந்திருந்த மற்ற இரு பெண்களுடன் பேச ஆரம்பித்தாள்.
ஒன்றரை மணிக்குதான் சஞ்சய் வெளியே வந்தான். நேராக அனன்யாவிடம் வந்து “சாப்பிட போகலாமா?” என்றுக் கேட்டு அவளை அழைத்துச் சென்றான்.
அப்போதும் அவன் அமைதியாகவே இருக்க “என்னாச்சு?” என்றுக் கேட்டு அவன் முகம் பார்த்தாள் அனன்யா.
“மீட்டிங், ஸ்டேடஸ் கால், டெட்லைன் இப்படி எனக்கிருக்க டென்ஷன் எல்லாம் உன்னோட ஒண்ணா சேர்ந்து உக்கார்ந்து சாப்பிடுறப்போ மறந்துடுது. ஆனா நாளையிலிருந்து...”
“ஐயோ போதும் நிறுத்துங்க... காலையிலிருந்து ஒரே சோக கீதம் வாசிக்குறீங்க... இப்படி இருந்தா அப்பறம் எப்படி நான் சந்தோஷமா போக முடியும்?”
“நீ சந்தோஷமா போவ... நான்???”
அனன்யா முறைக்கவும் அமைதியானான் சஞ்சய். அன்று மாலை அவளுக்கு farewell ஏற்பாடு செய்திருந்தனர். அவளை கேக் வெட்ட சொல்லி சுற்றி நின்று அவளுடைய டீம் மேட்ஸ் அனைவரும் அவளை கேள்விக் கேட்டு ஒரு வழி செய்தனர்.
அனைத்திற்கும் எப்படியோ சிரித்தபடியே மழுப்பலாக பதில் சொல்லி தப்பித்தவளை புன்னகையுடன் பார்த்திருந்தான் சஞ்சய்.
அலுவலகத்திலிருந்துக் கிளம்பும் நேரமும் வர தன் இருப்பிடத்திலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய தன் பொருட்களை சேகரித்து கைபையில் வைத்து இறுதியாக அனைவரிடமும் விடைப் பெற்றாள் அனன்யா.
சஞ்சய் அவளுடன் வர இருவரும் நான்காவது தளத்தில் இருந்து லிப்டின் மூலம் கீழே இறங்கி வந்தனர். சஞ்சய் பைக்கை எடுக்க அனன்யா அவன் பின்னால் அமர்ந்தாள்.
வெளியே வந்ததும் கேட்டில் செக்யூரிட்டி இருவரின் பையையும் பரிசோதிக்க அனன்யா ஒரு முறை அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் பிரம்மாண்டத்தை திரும்பிப் பார்த்துவிட்டு சஞ்சயின் பின்னால் அமர்ந்தாள்.
“நல்லா யோசிச்சுக்கோ... கண்டிப்பா வேலைய விடணுமா? இப்போக்கூட உன் முடிவ மாத்திக்கோ... சொன்னாக் கேளு...”
“இப்போ நீங்க பேசாம வண்டி ஓட்டல... நான் இறங்கி ஆட்டோல போயிடுவேன்”
சஞ்சய் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து சென்ற ஒரு சந்தினுள் வண்டியை செலுத்தியவன் இரண்டு தளங்கள் கொண்ட ஒரு வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான்.
அனன்யா இறங்கி கேட்டை திறந்துவிட பைக்கை உள்ளே பார்க் செய்து அவளுடன் படிகளில் ஏறினான். முதல் தளத்தில் இருந்த வீட்டின் முன் நின்றவள் தன் கைபையில் சாவியை துழாவ பொறுமை இழந்த சஞ்சய் தன் லேப்டாப் பேகில் முன்னால் எப்போதும் சாவி வைக்கும் இடத்தில் கைவிட்டு வீட்டு சாவியை எடுத்தான்.
கதவைத் திறந்து உள்ளே வந்ததும் “வீட்டுலயே உட்கார்ந்து என்ன அனு பண்ணப் போற? கண்டிப்பா உனக்கு மண்ட காஞ்சுடும்” என்றவனை அலட்சியமாகப் பார்த்து “அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது” என்றாள்.
இன்னும் சில நாட்களிலேயே அவன் கூறியது எவ்வளவு உண்மை என்பதை உணரப் போகிறோம் என்றுத் தெரியாமல்.
“இதே தான் அனு கல்யாணத்துக்கு ஒரு மாசம் முன்னாடி பேப்பர் போட்டதுலேருந்து சொல்லுற. கொஞ்சமாவது புருஷன் சொல்லுறத கேக்குறியாடி நீ?”
“ம்ம்கும்... காலையிலிருந்து உங்க இம்ச தாங்க முடியல... ஏன் சஞ்சய் இப்படி பண்ணுற? ப்ரேக்பாஸ்ட் சாப்பிட வா... ப்ரேக் வா... லஞ்ச் வா... முடியல. வீட்டுலேருந்து சாப்பிட்டுதானே கிளம்பினோம்? அப்பறமும் எதுக்கு காலையில சாப்பிடக் கூப்பிட்டீங்க?”
“போ அனு... இதுக்கப்பறம் நான் தனியாதான சாப்பிடணும்?”
“ரொம்ப பண்ணாதீங்க... அபீஸ்ல வேற யாருமே இல்லையா? சரி இன்னைக்கு Friday. ஏதாவது படம் பார்க்கலாமா?”
“டீ வீ யில உருப்படியா ஏதாவது இருக்கா பாரு. நான் போய் குளிச்சிட்டு வரேன். ‘எனக்கு போர் அடிக்குது சஞ்சய்’னு என்னைக்காவது ஒரு நாள் என்கிட்ட வந்து நிப்ப... அன்னைக்கு கவனிச்சுக்குறேன் அனு உன்ன”
அவன் சொன்னது போலவே தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கியவள் அன்று இரவு அவர்களுக்குப் பிடித்த படம் ஒளிபரப்பாக உள்ளதை அவனிடம் தெரிவித்தாள். அன்று அந்த படத்தை பார்த்துவிட்டே உறங்கினர்.
அடுத்த இரண்டு நாட்களும் சஞ்சய்க்கு விடுமுறையாதலால் காலை முதல் இரவு வரை அவன் உடன் இருந்தான். பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாமல் அனன்யா எப்போதும் போல் வேலைகள் செய்தாள்... அவனை கொஞ்சினாள்... அவனின் செல்ல சீண்டல்களுக்கு சினுங்கினாள்.
திங்கள்
சஞ்சய் அலுவலகம் செல்ல வேண்டிய திங்கட்கிழமை காலையும் அழகாக விடிந்தது. தினமும் எழும் நேரத்திற்கே எழுந்த அனன்யா வீட்டு வேலைகளை கவனிக்கத் துவங்கினாள்.