தரதர வென இழுத்து அவளைத்
தாறுமாறாக எழுதச் சொன்னேன்;
தற்குறியாய் அவள் எழுதி வைத்தச்
சொற்களைக் காண் பீரே!
கல்லூரி காலத்தில் கவியெழுத எனக்குக்
கட்டளையிட்ட ஆசிரியர்; நான்
அலையலையாய் எழுதிக் குவிக்கத்
தலைச் சாய்த்தவர் எழும்பவில்லை!!
முன்னும் பின்னும் மாலையைப் போல
மனதிற்ப் பட்ட பதங்களைக் கோர்த்து;
மின்னும் கவிதையென எண்ணும் எனக்கு
மரபுக் கவியெழுத ஆசைவர லாமோ??
ஒல்காப் புகழ்கொள் தொல்காப் பியரோ
வான்புகழ் பெற்ற வள்ளுவக் கிழவரோ
கபில பரண ஔவைக் கீரரோ
சேரன் தம்பியொடு கம்பசேக் கிழாரென
ஆயிர மாயிரம் அருந்தமிழ்ப் புலவர்
வாழ்ந்துசென் றனரிவ் வரமிகு நாட்டில்
யாரும் கருவிலே யாத்தரோ கவிதைகள்?
’ம்மா’வெனக் குழந்தைதன் மழலையில் பிதற்றினால்
மகிழ்வுடன் அணைத்திடும் அன்னையைப் போலநம்
தமிழெனும் தாயுந்தன் புலமைப் பாலுக்கு
அழுதிடும் குழந்தையை அணைத்திடு வாளிவண்...
முயற்சியால் முனம் இறைவன் மறுத்ததும்
முடிந்திடும் என வள்ளுவம் சொல்லுமால்
பயிற்சியும் அதன் பக்கம் சேர்ந்திடின்
படிய மறுப்பதும் பாரில் இல்லையே...
ஐயந் தொலைத்தெழு, அன்பொடு தமிழ்க்கவி
பைய படித்திடு வோமினி தடையிலை
வையத் தலைமைகொள் வான்புகழ் கவிதைகள்
செய்யும் நாளதும் சீக்கிரம் சேருமே!