- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
பகுதி - 11
தன் குழந்தையின் தலையில் முத்தமிட்டு விட்டு திரும்பியவன், அப்போது தான் சஜு, தன்னையே பார்த்துக் கொண்டு வாசலில் நிற்பதைப் பார்த்தான்.
உடனே, அவன் சுஷ்மியை கையில் தூக்கிக் கொண்டு, "என்னங்க வேணும்?" எனக் கேட்கவும் தான், அவள் தன் எண்ணத்தில் இருந்து விடுப்பட்டு "ஹான்... இல்ல... அது வந்து...” எனத் தடுமாறும் போதே, அவள் பின்னே வந்த சுந்தரி, கையில் ஒரு கிண்ணத்தோடு வந்து, "சுஷ்மி சாப்பிட்டாளா தம்பி?" எனக் கேட்க, "இன்னும் இல்ல மா" எனப் பதில் தந்தான் அக்ஷய்.
"சரி தம்பி, சாப்பாடு ஊட்டிட்டுச் சொல்லுங்க, இந்தச் சாற கொடுக்கணும்" எனச் சொல்லிவிட்டு நகரப் போக, "சுஷ்மி, இங்க வர்றியா? நான் 'ஆ' ஊட்டுறேன்" எனச் சஜு, அவன் தோளில் இருந்தவளிடம் கேட்க, அதுவோ யோசித்து மெல்ல "சரியென" தலையாட்டியது.
பின் சுஷ்மியைக் கீழே இறக்கி விட்டு விட்டு, உள்ளே சென்று விட்டான் அக்ஷய். அங்கு வந்த லக்ஷ்மியம்மா "வாங்க சஜுமா... உட்காருங்க...” என அவர்களை அமர வைத்து, சுஷ்மியின் கஞ்சி சாப்பாட்டையும், துவையலையும் சஜுவிடம் தர, அவளும் அவளைத் தூக்கிக் கொண்டு தங்கள் வீட்டிற்குச் சென்று ஊட்டி விட்டாள்.
பின் சிறிது நேரம் லக்ஷ்மியம்மாவிடம் பேசி விட்டு, வந்த சுந்தரி, சுஷ்மிக்கு இலைச்சாறை வாயில் ஊற்றினார்.
இப்போதும் முன் போலவே, அவள் கையைப் பிடித்து, அவளை அமுக்கி தன் மடியில் அமர்த்தினார் சுந்தரி. ஆனால் சுஷ்மியோ வேண்டாம் என அழுது, வாயை இறுக மூட, சுந்தரி "நான் வாயத் திறக்க வைக்கிறேன், நீ ஒரு ஒரு ஸ்பூனா அவள் வாயில விடு" எனச் சஜுவிடம் சொன்னார்.
அவளும் சரியெனத் தலையாட்டினாலும், சுந்தரியிடம் இருந்த சுஷ்மியின் நிலையைப் பார்த்து, அவள் அழுவதால் இரக்கப்பட்டு, "அம்மா... பாவம் மா...” எனச் சொல்ல, "பாவம்ல பார்த்தா... குணமாக வேண்டாமா? நீ முத சாற ஊட்டு... சின்னப் பிள்ளைங்க அப்படித் தான் அழுவாங்க... நீயெல்லாம் இவள மாதிரி இருக்கும் போது, சாப்பாடே இப்படித் தான் ஊட்டுவேன். நம்ம சுஷ்மியாவது பரவாயில்ல" என அவளின் வண்டவாளத்தையும் சேர்த்து சொல்லி, அதட்டி, ஒரு வழியாய் சுஷ்மிக்கு இலைச்சாறை கொடுத்தார்.
குழந்தையும் சுந்தரி விட்டவுடன், "சசு... ஊஊ...” என அவளிடம் அழுது கொண்டே தாவி, அவளைத் தூக்க சொன்னது.
அவளும் தூக்கிக் கொண்டு, சமையலறை சென்று சுஷ்மிக்கு சிறிது தண்ணீரும்... ஒரு சின்ன ஸ்பூனில் சீனியும் தந்தாள். அப்படி இருந்தும் சிணுங்கிக் கொண்டே இருந்தவளை "இதுலாம் குடிச்சா தான் டா... வயிறு வலியெல்லாம் போய், சுஸு பாப்பா என்னோட விளையாட முடியும். என்ன?" எனக் கேட்டுப் பார்த்தாள். அதற்கும் சுஷ்மி அழுகை நிற்கவில்லை.
"அழுகக்கூடாது டா... சுஷ்மி குட் கேர்ள்ல...”
“ஆஆ... ஆ...”
"நான் உனக்குப் பெரிய டெடி காமிக்கவா?... இல்ல நாம பொம்ம படம் பார்ப்போமா டா?...”
“ஹாஆ... ம்ம்ம்... ஹ்ஹா...” என அழுகை தேம்பலாய் குறைய...
"என்ன படம் பாப்பாக்கு வேணும்? என்ன பார்க்கலாம் சொல்லு டா. . .” என வித விதமாய்ப் பேசி, சுஷ்மியின் அழுகையை நிறுத்தினாள்.
பின் சுஷ்மி கேட்டது போலவே, சஜு 'டாம் அண்ட் ஜெர்ரி'யை தன் கணினியில் போட்டு காண்பிக்க, அவளும் அழுகையை நிறுத்தி, அதில் ஒன்றி, சஜு அவள் உடலை, தலையில் இருந்து வருடிக் கொடுக்க, அப்படியே அந்தச் சுகத்தில், குழந்தையும் உறங்கி விட்டது.
உறங்கிய குழந்தையைக் கொடுத்த சஜுவிடம், அக்ஷய் "ரொம்பத் தேங்க்ஸ்ங்க... பாவம் உங்கம்மாக்கு வேற சிரமம் கொடுத்திட்டேன். இதுக்கெல்லாம் என்ன கைம்மாறு பண்ணப் போறேன்னே தெரியல" என நீண்ட நன்றியுரையைக் கூற, அவளோ வழக்கம் போல "பரவாயில்ல சார்... இருக்கட்டும். குழந்தைக்குத் தான செய்யுறோம். இதுக்கெல்லாம் போய் யாராவது நன்றி சொல்வாங்களா?" எனப் புன்னகைத்து விட்டு, "வரேன் சார்" என்று சென்று விட்டாள்.
அவளும் சாப்பிட்டு விட்டு, சிறிது ஓய்வாய் படுக்கப் போக, விஜய் அலைப்பேசியில் அழைத்தான்.”ஹலோ... சொல்லுங்க அத்தான்...” எனச் சாதாரணமாய் வினவ,
"சஜு... இப்படி என்ன ஏமாத்திட்டியே... நீயே என்கிட்ட சொல்லுவன்னு பார்த்தா... மாமாக்கிட்டா சொல்லி, மாமா அப்பாக்கிட்ட சொல்லி, அப்பா என்கிட்ட சொன்னார். போ... சஜு... ஐம் பீலிங் பேட்" எனச் செல்லமாய்ச் சோக கீதம் வாசித்தான்.
அவன் எதைச் சொல்கிறான் என ஒரு நொடி குழம்பினாலும், பின் புரிந்தவளாய் "ஐயோ... அத்தான்... இதெல்லாம் பெரியவங்க சொன்னா தான் நல்லா இருக்கும்...”
"சரி... மாமா அப்பாக்கிட்ட சொன்னார், நீ என்ட்ட சொல்லியிருக்கலாம்ல?" என மீண்டும் அவன் குறைப்பட,
அவளோ தலையில் கை வைத்து, "ஸ்ஸ்... காலையிலேயே உங்கக்கிட்ட பேசணும்னு நினைத்தேன் அத்தான்... ஆனா அதுக்குள்ள... இங்க சுஷ்மிக்கு உடம்பு முடியாம போய், அப்பாவும் அம்மாவும் அவங்கப்பா கூடப் போயிட்டாங்களா... அதான் மறந்துட்டேன்...” என அவள் பாதிப் பாதியாய் சொல்ல...
அவனோ "காலையில் நீ எந்திரிக்கிறதே ஒன்பது மணி... இதுல இப்படி வேற ஆகிடுச்சா... மாமாவும் அத்தையும் போனாங்களா?... ஆமா, அப்படிப் பேபிக்கு என்ன ஆச்சு?" என எதுவும் புரியாமல் கேட்டான்.
பின் சஜு விவரம் சொல்ல, "ஓ... மை காட்!... இப்ப எப்படி இருக்கா பேபி?... ஹாஸ்பிடல் போகாம, ஏன் அங்க போனீங்க?" எனப் பொரிந்தான்.
"எனக்கும் தெரியாது அத்தான். அவங்க எல்லோரும் தான் முடிவு பண்ணிப் போனாங்க...” எனத் தனக்கும் இந்த வைத்திய முறைப் புதிது தான் என்பது போல் சொன்னாள்.
"சரி... நான் ஈவனிங் வந்து பேபியப் பார்க்குறேன்... அப்படியே உன்னையும் பார்த்திட்டு போக ஒரு சான்ஸ் வந்திருக்கு" என அந்தப்பக்கம் கண்ணடித்து விஜய் கூற,
"ம்ச்சு... போங்க அத்தான்... நானே சுஷ்மிக்கு இப்படி ஆகிடுச்சேன்னு... கவலைப்பட்டுட்டு இருக்கேன்... நீங்க வேற... விளையாடாதீங்க...” என்று சலிப்பாய் கூற...
"ஏன் சஜு... கவலைப்படுற... அதெல்லாம் சரியாகிடும் பேபிக்கு... நாளைக்கே உங்க வீட்டுக்கு வந்து நிற்பா பாரேன்...” என ஆறுதல் படுத்தினான்.
"ஏன் அத்தான்... நாம அன்னிக்கு மால் கூட்டிட்டு போய், குஜராத்தி சாப்பாடு சுஷ்மிக்கு வாங்கித் தந்தோமே... அதுனால எதுவும் இப்படி ஆகிடுச்சோ...” எனத் தன் மனதை அரித்த கவலையைக் கேட்டாள்.
"இம்ஹும்... அப்படியெல்லாம் இல்ல சஜுமா... அப்போ குஜராத்ல இருக்கப் பசங்களுக்கு எல்லாம் இப்படி ஆகுமா? அவங்க எல்லோரும் இந்த புட் தான சாப்பிடுவாங்க?" என விவரமாய் எடுத்துரைத்தான்.
இருந்தும்...”இம்ம்... இல்ல... தான் அத்தான்... ஆனா இது சுஷ்மிக்கு பழக்கமில்லாத சாப்பாடு ஆச்சே... அதுனால குழந்தைக்குச் சேரலையோ?" என மீண்டும் அவளின் கவலையிலேயே அவள் நிற்க,
"ஹே... விட்டா... அவங்கப்பாட்ட போய் நான் தான் இதுக்குக் காரணம். என்ன போலீஸ்ல பிடிச்சுக் கொடுங்கன்னு சொல்வ போல" என லேசாய் சிரித்து, அவளை மாற்றும் பொருட்டுச் சிறிது கேலி செய்தான்.
ஆனால் அவளோ பதிலளிக்காமல், அமைதியாய் இருந்தாள்.”சரி... சஜு... நீ... இதையே நினைக்காம... அத்தான் ஈவ்னிங் வரப்போறேனே... எனக்கு என்ன ஸ்வீட்லாம் பிடிக்கும்னு திங்க் பண்ணி செஞ்சு வை. சோ தட், யூ வில் பீ ரிலாக்ஸ்ட்...” எனக் காதலாய் அறிவுறுத்தினான்.
மாலையும் வந்தது, சொன்னது போலவே விஜயும் வந்தான். கையில் அமெரிக்காவில் வாங்கிய ஒரு பொம்மையோடு தான் வந்திருந்தான். ஆனால் சஜு தான், அவன் சொன்னதைச் செய்யாமல் சுஷ்மியையே நினைத்துக் கொண்டிருந்தாள். அவள் வாடிய முகத்தைக் கண்டவன், சுஷ்மியின் வீட்டிற்குச் சென்று, அக்ஷய்க்கு ஆறுதல் சொல்லி விட்டு, அவன் மறுத்தும் குழந்தையிடம் பொம்மையைத் தந்து, அவளைத் தூக்கிக்கொண்டு வந்தான்.
"ஏன் பேபி... இப்போ உங்களுக்கு வயிறு வலி இல்லேல்ல? சரியாகிடுச்சுல பேபி...” எனக் கேட்க, சுஷ்மியோ அவன் தந்த பொம்மையைப் பார்த்துக் கொண்டே, "ஆம்" எனத் தலையாட்டினாள்.
அப்போது சுந்தரி, விஜய்க்கு டம்ளரில் டீ கொண்டு வர, அதைக் கண்ட சுஷ்மியோ, "இல்ல இல்ல...” என விஜயிடம் இருந்து நழுவி, சஜுவிடம் ஓடிப் போய் அழ தயாரானாள். அவளுக்குப் பயம், எங்கே திரும்பவும், அந்த... பச்சை... நிற... தண்ணியைச் சுந்தரி தந்து விடுவாரோ என்று மறுத்தாள்.
சுந்தரியும் சிரித்துக் கொண்டே "உனக்கு இனிமே தான் கொடுக்கணும் சுஷ்மி... இது மாமாக்கு" என விஜயிடம் டம்ளர் தரவும் தான் அமைதியானாள் சுஷ்மி.
சஜுவே "என்னமா... திரும்பவுமா?" எனக் குரலை உயர்த்திக் கேட்க...”அப்புறம் சரியாக வேணாமா?" என அவளுக்குப் பதில் சொல்லும் போதே,
"ஏன் அத்த... இங்கெல்லாம் போயிட்டு... பேசாம ஹாஸ்பிட்டல் போயிருக்கலாம்ல" எனக் கேட்க, "ஏன் விஜய், ஹாஸ்பிடல்ல டாக்டர், மாத்திர தந்தா... மூனு வேளையும்... அதுவும் இரண்டுமூனு நாளைக்குப் போட்டு தானே ஆகணும்... அது மாதிரி தான் இந்த மருந்தும். ஆனா இன்னிக்கு ஒரு நாள் தான். நாளைக்குச் சரியாகிடும்" என்று சொன்னார்.
பின் சிறிது நேரம் இருந்து விட்டு, நைட் போன் செய்வதாக, ரகசியமாய்ச் சஜுவிடம் சொல்லி சென்றான். இரவு அலைப்பேசியில், விஜய் "ஹே சஜு... நாளைக்கு நல்ல நாளாம். அதுனால, நாளைக்கு உன்ன பெண் பார்க்க நாங்க வர்றோம்... நாளைக்காவது சீக்கிரம் எந்தரிச்சு ரெடியாகி... அத்தான பார்க்க அப்படியே கொஞ்சம் வெட்கத்தோடு இரு சஜு" என்று விஷயத்தைச் சொல்லி, கேலியில் முடிக்க...
அவளோ "அத்... தான்...” எனக் கோபப்பட்டாலும், "ஆமா, எனக்கு... அம்மா அப்பா யாரும் சொல்லவே இல்ல" எனச் சீரியஸாய் கேட்டாள்.
"எனக்கே இப்ப தான் தெரியும் சஜு. சாயந்திரம் தான் அப்பா யாரோ ஒரு ஜோசியர்ட்ட கேட்டுட்டு வந்திருக்கார் போல, மாமாக்கு போன் பண்ணி சொல்லியிருப்பாங்க. நாளைக்கு ஈவ்னிங் தான வர்றோம்னு... உனக்குக் காலைல சொல்லலாம்னு இருந்திருப்பாங்க" என விவரம் சொல்ல, அவளோ "சரி அத்தான்... போனை வைக்கவா?" எனக் கேட்க,
விஜய் நொந்து போனான்...”ஏன் சஜு... இப்படி இருக்க?"
"எப்படி இருக்கேன்?" அவள் புரியாமல் கேட்க,
"ம்ம்ம்... நல்லா தான் இருக்க... ஆனா என் நிலைமை தான் கஷ்டம் போல...” எனக் காதலாய் பேசலாம் என்று இருந்தவனின் எண்ணத்தை, வெகுளியாய் கேள்வி கேட்டு மாற்றி இருந்தாள் சஜு.
"என்ன கஷ்டம்... ?" எனத் திரும்பவும் அவள் கேட்க, "ஐயோ... சஜு... ப்ளீஸ்... லீவ் மீ... போதும்... கேள்வி. நான் உன்ட்ட பேசலாம்னு நினைச்சா நீ வைக்கவான்னு கேட்குற?" என்று புரிய வைக்க முயற்சித்தான் விஜய்.
"ஓ... இல்லத்தான்... நீங்க தான சீக்கிரம் எந்திரிக்கச் சொன்னீங்க... அதான் தூங்கலாம்னு நினைச்சேன்" என்று அறிவாளியாய் பதில் சொல்ல...”சரி மா... நீ தூங்கு மா...” என்று பெருமூச்சு விட்டான்.
"சரி அத்தான். குட் நைட்" என நல்ல பிள்ளையாய் சொல்லி, அலைப்பேசியை அணைத்தாள்.
மறு நாள் காலை, பூக்கார அம்மா வந்து சத்தம் கொடுக்கவும், லக்ஷ்மியம்மா "நாம் வர சொல்லவில்லையே...” என எண்ணியப்படியே வெளிய வர, அங்குச் சுந்தரி சஜுவுக்காகப் பூ வாங்கிக் கொண்டிருந்தார்.
சுந்தரியிடம், லக்ஷ்மியம்மா "என்ன சஜுமா... காலையிலேயே பூ வாங்குறீங்க? எதுவும் விசேஷமா?" எனக் கேட்க, அவரோ "ஆமாம் மா... சஜுவ பொண்ணு பார்க்க வர்றாங்க. என் நாத்தனார் பையன் தான்மா. நேற்று கூட வந்திருந்தாப்ல... அந்தப் பையன் தான் மா" என்று கூற,
"ரொம்பச் சந்தோஷம் மா... எல்லா நல்ல படியா நடக்கும்" என்று மனமாறக் கூறினார்.
இதையெல்லாம் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அக்ஷய் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். கேட்டவனுக்கோ, ஏதோ நெஞ்சினில் வித்தியாசமாய்த் தோன்ற, சஜுவின் வீட்டைப் பார்த்தான்.
அங்கு வழக்கம் போல், வரவேற்பறையின் மெத்திருக்கையில் அமர்ந்து, டீயை ரசித்து, ருசித்துப் பருகிக் கொண்டிருந்தாள் சஜு.
அவளைப் பார்த்த அக்ஷயோ "இவள் இன்னும் திருந்தவே இல்லையா? பெண் பார்க்க வரப்போகிறார்கள் என்று சொல்கிறார்கள்... இன்னும் குளிக்காமல் கூட இருக்கிறாள். மணி வேறு எட்டரையாகி விட்டது. அவள் அம்மாவும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் போல...” என எண்ணினான்.
ஏனெனில் அவன் தங்கையெல்லாம் இவள் வயதில், எல்லோருக்கும் டீ போட்டு... அதுவும் ஆறு மணிக்கே போட்டு, எல்லோருக்கும் விநியோகம் செய்து கொண்டிருப்பாள்.
பாவம் அக்ஷய்க்கு என்ன தெரியும்? அவள் இன்று தான், வழக்கமாய் இல்லாமல், சீக்கிரமாய்ச் சற்று நேரம் முன்னதாக, எட்டு மணிக்கு எழுந்திருக்கிறாள். அதனால் தான் அவள் அன்னை, அவளை அர்ச்சிக்காமல்இருக்கிறார் என்று எப்படி அவனுக்குத் தெரியும்?
இன்று தன் அன்னை, தந்தை வருவதால், அவர்களுக்காக இன்றும் வீட்டில் இருந்தான் அக்ஷய். சுஷ்மி நேற்று இரவு இருந்து வயிற்றாலை போகாமல் நன்றாகத் தான் இருக்கிறாள், இருந்தும் சோர்வாய், சுனக்கமாய்த் தான் இருந்தாள். அதனால் இன்றும் விடுமுறை எடுத்துக் கொண்டு, தன் அன்னை தந்தையின் வரவுக்காகக் காத்திருந்தான்.
அவர்கள் வரும் வரை சுஷ்மியை கவனித்துக் கொண்டு, அவள் விளையாட பொம்மைகளைத் தந்து விட்டு, மதிய சமையலுக்கு லக்ஷ்மியம்மாவுக்கு உதவினான். அவர்களும் மதியம் இரண்டு மணி போல வந்து விட, அக்ஷயிடம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சுஷ்மி, அவர்களைக் கண்டு "வையும்... பாட்டி... தா... தா...” என ஓடினாள்.
ஓடி வந்த சுஷ்மியை, அக்ஷையின் தந்தை திருச்சிற்றம்பலம் தூக்கிக் கொண்டு, "என்ன ஆத்தா... மேலுக்கு முடியலையாமே... வயிறு வலிச்சதா கண்ணு" எனக் குழந்தையின் வயிற்றைத் தொட்டு கேட்க, சுஷ்மியோ உதட்டைப் பிதுக்கி, "ஆம்" என்று தலையை மேலும் கீழுமாய் ஆட்டினாள்.
இதற்கிடையில் "வா... மா, வாங்க ப்பா...” என வரவேற்றான் அக்ஷய்.
"அச்சோ என் ராசாத்திக்கு ரொம்ப வலிச்சுடுச்சாமே" என அவள் முகத்தைக் கையால் அணைத்து, தன் தோளில் சாய்த்துக் கொண்டே, மெத்திருக்கையில் அமர்ந்தார்.
அவர் அருகே அமர்ந்த வைரமோ "சின்னக் குட்டி... இந்தா...” எனத் தான் கொண்டு வந்திருந்த வாழைப்பழத்தை உரித்து, "இதெல்லாம் சாப்பிட்டா தான் வயிறு வலி போகும் த்தா...” எனச் சொல்லியப்படியே ஊட்டினார்.
பின்னர் கொண்டு வந்த பழங்கள் பையை, எடுத்துக் கொண்டு சமையலறையில் இருந்த லக்ஷ்மியம்மாவிடம் கொடுத்து விட்டு, "நல்லா இருக்கியாத்தா... இந்தா ஆத்தா... பத்திரமா எடுத்து வை... நீயும் சாப்பிடு...” எனக் கூறினார்.
"வா... வைரம்... இப்ப தான் வந்தீகளா... தம்பியும் வந்திருக்காரா?" என அவரிடம் கேட்டுக் கொண்டே, சொம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு போய் "வாங்க தம்பி...” எனத் தண்ணீரை திருவிடம் தந்தார்.
"நல்லா... இருக்கீகளா ஆத்தா... உமக்கும் முடியலன்னு சொன்னான் அய்யன்" என நலம் விசாரித்து விட்டு, ஊர் நடப்பு, வயல்வெளி, தோப்பு, அக்ஷையின் தங்கை, தங்கை கணவன், அவர்கள் வீடு என அவர்களின் பேச்சு ஒரு பக்கம் நீண்டு கொண்டே போனாலும், அனைவரும் சாப்பிட சென்றனர்.
சுஷ்மி "வையும் பாட்டி" எனக் கத்திய சத்தத்தில் எட்டிப்பார்த்த சஜுவின் கண்களில், அக்ஷையின் அன்னை தந்தை பட்டனர். சுஷ்மியைத் தூக்கி கொண்ட அக்ஷையின் தந்தை வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையிலும், அக்ஷையின் அன்னை சேலையைக் கண்டாங்கி போலெல்லாம் கட்டாமல் சாதாரணமாய், அந்தக் காலத்தவர் போல, சின்ன முந்தி விட்டு, அதில் ஒற்றை முந்தியை இடுப்பில் செருகியப்படி தான் இருந்தார். அவர்களைப் பார்த்தால் கிராமத்தில் இருப்பவர்கள் போல் தெரியவில்லை, ஆனால் அவர்கள் பேச்சில் தெரிந்தது, அவர்கள் ஊரின் வாசம்.
மாலை சுஷ்மியை பெண் பார்க்க விஜய் குடும்பத்தினர் மட்டும் வந்தனர். சஜு பட்டு சேலை அணிந்து, அழகாய் தயாராகி இருந்தாள். சித்ராவை சுந்தரி, அறையில் இருந்த சஜுவிடம் அழைத்துச் செல்ல, அவர் சஜுவின் தலையில் பூ வைத்து, வரவேற்பறைக்கு அழைத்து வர, அனைவருக்கும் பொதுவாய் விழுந்து வணங்கினாள்.
பின் குணா தான், அவளை அவர்களுடனே உட்காரச் சொல்லிப், பேசினார். ஏனோ சஜுவுக்குப் பட்டு சேலை அணிந்திருப்பது அசௌகரியமாய்ப் பட, அதோடு அவர்கள் முன் அமர்ந்து... தன் தாய் அறிவுறுத்தியதுப் போல், அவர்கள் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி விட்டு, குனிந்துக் கொண்டாள். விஜய்க்கு ஆச்சரியமாய் இருந்தது, தலைக் குனிந்திருந்த சஜூவை கண்டு, அப்போது சரியாய் "சசு...” என வாசலில், சுஷ்மி நின்று அழைக்க, சடாரென நிமிர்ந்தாள் சஜு.