ரட்சகியின் ராட்சசன்
பலவண்ண ரோஜாக்கள் பூத்துக்குலுங்க அவற்றின் நடுவே நடைப்பாதையுடன் அமைக்கப்பட்ட சீமேந்து மேடையில் அமர்ந்திருந்தனர் அமிர்தகிருஷ்ணனும், ராகவியும்.
பனிமறைந்து கருநீலவானில் பட்டை தீட்டப்பட்ட வைரமாய் நிலவு ஜொலிக்க அதன் சிதறிய சிறு துகள்களாய் நட்சத்திரங்கள் மின்னின. குளிர் காற்று ஸ்வெட்டரையும் தாண்டி உடலை சிலிர்க்கச்செய்ய ;சற்று தூரத்தில் தோட்டத்தில் ஒளிர்ந்த மஞ்சள் நிற மின்குமிழிற்கு நிகராய் மின்மினிகள் மெழுகுச்சுடராய் ஒளிர அவ் ஏகாந்த இரவுப்பொழுதில் தன்னவன் தோள் சாய்ந்திருந்தாள் பெண்ணவள்.
மகாலட்சுமி என்ற பெயருக்கிணையான முகவாக்கு கொண்டு கோவில் சிற்பம் போன்ற ராதையவளை அணைத்தவாறு அமர்ந்திருந்தான் கார்முகில் வண்ணனான அமிர்தகிருஷ்ணன். அவர்களின் கைகள் ஒரு நாளும் உன்னை பிரியேன் என உறுதி கூறும் வகையில் இணைந்திருந்தன.
"இன்னையோட நம்ம காதலுக்கு பன்னிரண்டு வருஷம்டா" என்றான் கிருஷ்ணன். கல்லூரியில் தொடங்கிய காதல் கல்யாணத்தில் இணைந்தது."ம்ம்" என்றாள் இன்னும் அவன் தோளில் அழுத்தமாக முகத்தை புதைத்து .
" ஃபர்ஸ்ட் டைம் உன்ன அந்த கொன்றை மரத்திக்கு கீழ ஒரு கைல புக்கும் , மத்த கை உன் நெத்தில விழுந்த முடிய காதோரம் அடக்க அப்ப உன் ஃப்ரெண்டு என்னமோ சொல்ல நீ உன் தெத்துப்பல் தெரிய சிரிச்ச !! ஏதிர்பாராமதான் பார்த்தேடி! அப்பவே !! அந்த செக்கனே விழுந்திட்டன் காதல்ல " என சிரித்தவன் " என்னொட காதல ஆசிர்வதிக்கிற மாதிரி பொன் வானம் பன்னீர் சிந்த நீயும் ஓடி மறஞ்சிட்ட .அப்பறம் தான் தெரிஞ்சது அது ஆசிர்வாதம் இல்ல ஆப்புனு " என கூறி வாய்விட்டு சிரித்தவன் " எல்லாரும் நோட்ஸ் தேடி எடுத்த டைம் நா மட்டும் டிபார்ட்மெண்ட் டிபார்ட்மெண்ட்டா உன்ன தேடி அழஞ்சேன். கடைசில என் தேவதையையும் கண்டுப்புடிச்சிட்டன் ." என கண்ணில் கரைகாணாத காதலுடன் கூறினான். அதே காதலுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவனின் கவி.
இதை அவன் பலமுறை கூறியதுண்டு. அத்தனை முறையும் முதல் முறை அவளிடம் காதல் சொல்லும் அவன் கண்ணில் தெரிந்த காதலில் அணுவளவும் குறைந்ததில்லை.
தேடி வந்து காதல் கூறியவனின் காதலில் மனம் காதல் கொண்டாலும் அவனின் கல்வி, இவளின் பெற்றோர் அற்ற நிலை, அதற்கு மேல் அவளின் பயம் என தடைகள் அவள் காதலை மனதினுள் மறைக்கச் செய்ய ; மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும் முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும் என்பதை போல் அத்தனை தடைகளையும் உடைத்து அவளை காதலிக்க செய்தவன்; தீரா காதல் மழையையும் அவள் மீது பொழிந்தான்.
அவள் ஆசைகளை அவள் கூறாமலே செய்து முடிப்பவன். இந்த வீடு கூட அவற்றில் ஒன்றுதான். அவர்களின் காதலின் மொத்த உருவமாய் சரித்ரா. அவள் வாழ்க்கையை முழுமையடைய செய்தவனின் மார்பில் புதைந்தவள் தலையை மட்டும் நிமிர்த்தி " ஐ லவ் யூ அமிர் " காதலுடன் கூற "ஐ லவ் யூ டூ கவி" என அவள் நெற்றியில் இதழ் பதித்தவன் அவளை தூக்கிக்கொண்டு நடந்தான். சரித்ரா நடுவில் தூங்க அவளை இருபுறமும் அணைத்தவர்கள் அவர்களின் மகிழ்ச்சியான வாழ்வை எண்ணியப்படியே கண்ணயர்ந்தனர்.
☆☆ _____________________________☆☆
கோடைக்கால சூரியன் சற்று உக்கிரமாககதிர் வீச தென்றலும் தன் பலம் கொண்ட மட்டும் குளிர்விக்க முயன்றது. மக்களின் கூட்டம் அலை மோதும் கடைத்தெருக்கள் , அரசாங்க கட்டிடங்கள் ,சுற்றுலா பயணிகள் , பெரிய தார்சாலை என இருந்தது அந்த சிறிய நகரம்.
ஒரு கையில் வெண்ணிலா ஐஸ்கிரீம் கோனுடன் , முகம் மலர்ந்த சிரிப்புடன் சாலை ஒரத்தில் தாயும் தந்தையும் அமர்ந்திருந்த காரை நோக்கி உருகும் ஐஸ்கிரீமை சுவைத்தப்படி ஒடினாள் சரித்ரா. சற்று தூரத்தில் கார் இருக்க ; தன்னை யாரோ அழைப்பது போலிருக்க திரும்பி பார்த்தால். மக்கள் கூட்டத்தினிடையே அவளை கவர்ந்தது ஒரு சோடி ஆழி வண்ண கண்கள். அக் கண்களுக்கு உரிமையானவனின் வதனம் பார்க்கும் முன்னே கலைத்தது செவிப்பறையை கிழிக்கும் பேரோலி. சத்தம் வந்த திசையை பார்த்தவள் கண்ட காட்சியில் கண்கள் இருட்ட, கால்கள் வலிமையிழக்க , அதிர்ச்சியில் மூளை செயலிழக்க மயங்கி சரிந்தாள் சரித்ரா. அவளிதழ்கள் கடைசியாக அம்மா அப்பா என்று உரைத்தது .
_______________________________________
ஆகிவிட்டது!! இன்றோடு ஒரு மாதம் ஆகிவிட்டது! அந்த கோர விபத்து நிகழ்ந்து. சரித்ராவின் வாழ்வில் கொடிய இருள் சிறப்பாக தன் முதல் அடியை வைத்து விட்டது. கடைசியில் அவளுடைய பெற்றோர் முகத்தை கூட பார்க்கவில்லை. அனைத்தும் முடிந்துவிட்டது. அவளின் சிவந்த விழிகள் இன்றுவரை துளி கண்ணீரை கூட சிந்தவில்லை. ஏன் என்று அறிய யாரும் இல்லை! அவளும் அறியவில்லை. அவள் வாழ்வே நொடிப்பொழுதில் மாறி விட்டது. அவளின் யாதுமானவர்கள் இன்று இல்லை. அவர்களின் அழகிய உலகத்தின் அவள் இல்லை.
சுற்றி இருக்கும் சிறுவர்களுடன் அவளால் ஒன்றமுடிய வில்லை. ஆம் சரித்ரா இப்போது இருப்பது ஒரு ஆச்சிரமத்தில். அமிர்தகிருஷ்ணனின் நண்பன் சீனிவாசன்தான் அனைத்து கடமைகளையும் முடித்து அவளையும் இங்கே சேர்த்தார்.
அவருக்கும் அவளை தன்னுடன் அழைத்து செல்லத்தான் ஆசை. ஆனால் முடியாது காரணம் அவரின் மனைவிக்கு அவரின் நண்பர் என்றாலே வேப்பங்காய். வேம்பின் வாரிசு மட்டும் இனிக்கவா செய்யும். ஆனால் அவளுக்கு பாதுகாப்பான இடம், நல்ல கல்வி , ஏனைய வசதிகள் , அவரின் நம்பிக்கை என அனைத்தையும் கருத்திற்கொண்டுதான் இங்கு சேர்த்தார்.
தன்னை சுற்றிநிகழும் மாற்றங்களை ஏற்காத சரித்ராவின் மனம் அம்மா அப்பா என்ற வார்த்தைகளை ஜெபமாக உச்சரித்து கொண்டிருந்தது.
☆☆____________________________☆☆
சில்லென்ற காற்று இரவில் பூத்த பூக்களின் நறுமணத்தை கொள்ளை கொண்டு வேகமாக தப்பியோடும் போது தோட்டத்தில் வானை ரசித்துக் கொண்டிருந்த தேவதை மேல் மோதி அவள் குழல் கலைத்து விட்டு மன்னிப்பு கோராமலே ஓடி மறைந்தது.
" ஹாய் பிரின்ஸஸ்" என்ற விளிப்பில் வானின் மீதான பார்வையை பக்கவாட்டில் திருப்பியவள் சிரித்த முகத்துடன் "good evening father .பிரேயர் முடிந்ததா பாதர் ?" என்றாள் அந்த தேவதை. " எஸ் மை ஏஞ்சல். பிரின்ஸஸ் என்ன செய்ரிங்க?"
என பதில் தெரிந்தும் கேள்வி கேட்டார் பாதர்.
மீண்டும் வானை நோக்கியவள் " அம்மா அப்பா கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன் பாதர்." என கூறியது சாட்சாத் சரித்ராவே தான். அதே நேரம் ஒரு பெல் அடிக்க உடனே எழுந்தவள் ஓகே பாதர் நா போகனும், நாளைக்கு மீட் பண்ணலாம்.குட் நைட் பாதர்." என்றவளின் தலையில் கை வைத்து " God bless you child " என்றார். அவளும் அவருக்கு டாட்டா காட்டிவிட்டு ஒரு பெரிய கட்டிடத்தை நோக்கி ஓடினாள்.
அவள் செல்வதை பார்த்தவரின் எண்ணவோட்டம் அவளை முதல் முறை பார்த்ததை நினைவூட்டியது. ஆச்சிரமத்தை நிர்வாககிக்க புதிதாய் நியமிக்கப்பட்டவர்தான் பாதிரியார் ஜோசப் மைக்கல்.
அவரின் பார்வை! எப்போது சோகமாக, உடல் மெலிந்து, மௌனமொழி ஏற்று, ஜீவனற்ற விழிகளுடன் எப்போதும் தனிமையில் இருக்கும் சரித்ராவின் மேல் விழுந்தது. அவள் கதையறிந்தவரின் மனதில் சரித்ரா மீது அனுதாபமும், அன்பும் ஒருங்கே உருவானது.
உறவுகளை இழந்தவளுக்கு ஆதரவாய்யானார்.
வார்த்தைகள் மூலம் அவளை மாற்றினார். அவளும் நிதர்சனத்தை ஏற்று கடந்து போக கற்றுக் கொண்டாள்.
இப்போது அவள் வானத்தை பார்ப்பது கூட அவர் வார்த்தைகளால் தான். "உன்னோட அம்மா அப்பா உன்னவிட்டு எங்கேயும் போகல பிரின்ஸஸ். அந்த வானத்தில நட்சத்திரங்களா உன்ன எப்பவும் பார்த்திக்கிட்டு இருப்பாங்க.
அவங்களுக்கு தெரியும் நீ ப்ரேவ் கேர்ள்னு அதனாலதா உன்ன தனியா விட்டிட்டு போய்ருக்காங்க. அவர்களுக்கு பிரின்ஸஸ் சோகமா இருந்தா பிடிக்காதுதானே. சோ நீங்க இனி எப்பவும் ஹப்பியா சிரிச்சிக்கிட்டு குட் கேர்ளா இருக்கனும். " என்ற வார்த்தைகள் பால் மனதில் ஆழமாக பதிந்ததோ என்னவோ இப்போது அவளிடம் அத்தனை மாற்றங்கள்.
நான்கு வருடங்கள் கடந்து விட்டன. அவள் இதழ்களில் சிரிப்பு ஒரு நொடியும் பிரியவில்லை. கல்வி, விளையாட்டு, மற்ற கலைகள் என அனைத்திலும் சிறந்து விளங்குபவளின் குரலிற்கு அனைவரும் அடிமையாவர். அதில் அத்தனை இனிமை நிறைந்திருக்கும்.
வயதுவரம்பின்றி அனைவரிடமும் நட்புபாராட்டுவாள். கண்சிவக்க அழுபவரையும் கணப்பொழுதில் சிரிக்க வைக்கும் பேச்சித்திறனையும் , வயதுக்கு மீறிய தைரியமும், புரிதலும் உடையவள்.
நட்சத்திரங்களாகிய பெற்றோருடன் கதையளப்பது அவள் வழமை.
சரித்ராவை பற்றி எண்ணிக்கொண்டு இருந்தவரின் மனம் "ஆண்டவரே! அந்த குழந்தை அனுபவித்த கஷ்டங்கள் போதும். இனியும் துன்பம் நேராமல் காத்தருள்வீர்." என வேண்டினார்.
"அது வெறும் டீஸர்தான் மூவிய பாக்காம டீவிய ஆப்பண்ணா நியாயமா? "என சரித்ராவின் வாழ்க்கையை எண்ணி எள்ளி நகையாடியது இன்விசிபல் சகுனியாகிய விதி.
ராட்சசன் வருவான்........