- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
அறிமுகம்
__________________________________
மகாபாரதத்தில் பகவத் கீதை ஒளிந்துள்ளது போல் பதினெட்டு புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில் உத்தர காண்டத்தில் சிப்பிக்குள் முத்துப் போல அமைந்துள்ளது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமமும், லலிதோபாக்யாணம் என்னும் ஶீ லலிதையின் சரிதமும்.
பராம்பிகையின் லீலாவினோதங்கள் என்றுமே கேட்பதற்கு இனியது. அதனை பற்பல புராணங்கள் பலவாக பேசும். தேவி பாகவதம் புவனேஸ்வரியாக அவளை புகழும், தேவி மாஹாத்மியம் சன்டியாக பாடிப் பரவும் . தத்தாத்ரேயரின் த்ரிபுரா ரகஸ்யம் முதல் சங்கரரின் ஸெளந்தர்ய லஹரி வரை வேறு எந்த தெய்வ வடிவம் கொண்டிராத அளவுக்கு பராசக்தியான அம்பிகையின் பெருமையை பறைசாற்றும் நூல்கள் அநேகம். அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் விளங்குவது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். தேவாதி தேவர்க்கும் மூவர்க்கும் முன்னவளாய் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக விளங்கும் ஸ்ரீ மாதாவின் பெருமையை பாடுவது லலிதையின் ஸஹஸ்ரநாமம். மற்ற ஸஹஸ்ரநாமங்கள் தேவர்களாலும் ரிஷிகளாலும் சொல்லப்பட்டிருக்க, லலிதையின் ஆயிரம் நாமங்களையும் சொன்னது சாட்சாத் அம்பிகையின் சக்திகளான வாக் தேவிகளே.
நாம் வசிக்கும் இந்த பிரபஞ்சம் போல் அண்டவெளி எங்கும் தனித்தனியே பல கோடி உலகங்கள் உண்டு. அந்த ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் அதற்கென உலகங்களும் மக்களும் தேவர்களும், மும்மூர்த்திகளும் தனித்தனியே உண்டு. இந்த அண்டசராசரங்கள் அனைத்துக்கும் நாயகியாக விளங்குபவள் அகிலாண்டேஸ்வரியான ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி.
ஒருமுறை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அம்பிகையை தரிசிக்க பற்பல அண்டங்களின் அனைத்து தேவர்களும் மும்மூர்த்திகளும், சித்தர்களும் ரிஷிகளும் கூடினர். அனைவரையும் ஒருங்கே கூடி இருந்ததை கண்ட அம்பிகையின் தாய் உள்ளம் உருகியது. அவர்கள் உய்யும் வண்ணம் ஒரு எண்ணம் கொண்டு சங்கல்பித்தால். தன் அருட்பார்வையை வாக்குக்கு அதிபதிகளான வசினி முதலான வாக் தேவிகளை நோக்கி , என் தத்துவம் விளங்க என்னுடைய ஸஹஸ்ர நாமங்களை வெளிப்படுத்துங்கள் . இதனைக் கொண்டு என் பக்தர்கள் என்னை துதிக்கும் போது
நான் மிக எளிதில் பிரீத்தி கொள்கிறேன் என்று கட்டளையிட,. "ரகஸ்ய நாம ஸஹஸ்ரம் "என்று போற்றப்படும் லலிதா ஸஹஸ்ரநாமம் தோன்றியது. . இதில் ஒவ்வொரு நாமாவும் மந்திர சாரமாகவே விளங்குகிறது. ஸஹஸ்ரநாமம் போற்றும் இந்த லலிதையின் சரிதம் மஹோன்னதமானது. இந்த சகஸ்ரநாமத்தில் முதல் 100 நாமங்கள் லலிதாம்பிகையின் கதையை நமக்கு தெளிவாக காட்டுகிறது. அம்பிகையின் சரிதம் மந்திர வடிவமானது, பல ரகஸ்யார்த்தங்களை கொண்டது.
அணடங்களுக்கெல்லாம் நாயகியாக ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியை கூறுகிறோம். யார் இந்த லலிதை . அவள் தோன்றியது எவ்வாறு. அவள் எங்கிருக்கிறாள் என்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை தருவது ஸ்ரீ லலிதோபாக்யானம். லலிதா ஸஹஸ்ரநாமத்தை அளித்த பிரம்மாண்ட புராணம் தன் இறுதிப்பகுதியில் லலிதையின் கதையைக் கூறி நிறைவு செய்கிறது.
கோடி கோடி விஷ்ணுக்களும், ருத்ரர்களும் தேடிவந்து தொழும் அந்த பரதேவதையை சிந்திப்பது பலப்பல ஜென்மங்களின் செய்த புண்ணியத்தின் பலனே ஆகும். "குருமூர்த்தி" எனப்படும் அம்பாளின் பாதத்தை வணங்கி , ஹயக்ரீவருக்கும் அகஸ்தியருக்கும் இடையே நடக்கும் சம்பாஷணையாக அமைந்திருக்கும் ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி சரிதம் என்னும் அமுதத்தை ஒரு துளியேனும் பருக முயல்வோம்.