• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வன தேவியின் மைந்தர்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 20

தானிய மணிகளை உரலில் இருந்து எடுத்து, அஜயன் வாரி இறைக்கிறான். குருவிகள், மைனாக்கள், புறாக்கள், என்று பல வண்ணங்களில், செண்டுகட்டினாற் போன்று வந்து குந்தி அந்த மணிகளைக் கொத்துகின்றன. அவை மகிழ்ச்சியில் வெளியிடும் குரலொலியும் ஏதோ ஓர் இனிய ஒலிச் செண்டாக இன்ப மூட்டுகிறது.

"எத்தனை அழகான பறவைகள்! அம்மா! வந்து பாருங்கள்" அஜயன் தாயைக் கூவி அழைக்கும் போது, விஜயன் சிரிக்கிறான்.

"அதோ பார்த்தாயா, மரத்தின் மேல்? ஒரு 'மூப்பு' பார்த்துக் கொண்டு இருக்கிறது. நீ செய்யும் இந்தத் தானம், அந்த 'மூப்பு'க்குக் கொண்டாட்டமாக இருக்கிறது! லபக்கென்று குதித்து ஒரு கொத்தாக வாயில் கவ்விக் கொண்டு செல்ல நல்ல சந்தர்ப்பம் கொடுக்கிறீர் அல்லவா?"

"ஓ... அதெல்லாம் நம் அன்னை இருக்கும் இந்த இடத்தில் நடக்காது. அதனால் தான் நான் தைரியமாக இந்தப் பறவைகளுக்கு விருந்து வைக்கிறேன்."

"அப்படியா? நம் அன்னை ஏதேனும் மந்திர - தந்திரம் வைத்திருக்கிறார்களா? அப்படியெல்லாம் நடக்காது என்று நீர் உறுதி மொழி வைக்க! அன்றொரு நாள் இதே இடத்தில் தான் இங்கு வந்து குந்திய கிளியை, இதே போல் ஒரு 'நாமதாரி' மூப்பு லபக்கென்று விழுங்கிச் சீரணம் செய்தது."

"அப்போது ஒருகால் நம் அன்னை இங்கே இருந்திருக்க மாட்டார். அவர் சுவாசக்காற்று இங்கே கலந்திருக்காது..."

"இந்த விதண்டா வாதம் தேவையில்லை. நீர் என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். ஒரு விஷயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு." அஜயன் மிகவும் கூர்மையாக முகத்தை வைத்துக் கொள்வதைப் பூமகள் குடிலின் வாயில் ஓரம் நின்று பார்க்கிறாள். அவளுக்குச் சிரிப்பு வருகிறது.

மெல்ல நழுவிக் குடிலின் பக்கம் புதிதாகக் கன்று போட்ட பசுவுக்குப் புல் வைக்கிறாள்.

"அதென்ன, இரண்டு பக்கம்?"

"அம்மா இருக்குமிடத்தில் வன் கொலை நடக்காதென்றீர். அதற்கு இன்னொரு பக்கம் உண்டென்றேன்."

"இன்னொரு பக்கம் என்று ஒன்றும் கிடையாது. நடக்காது என்றால் நடக்காது. உண்மை, சத்தியம் என்றால் முழுமை. இதை எடுத்தாலும் குறைத்தாலும் முழுமையே. உண்மை; சத்தியம்; தூய்மை..."

"எனக்குப் புரியவில்லை."

"புரியவில்லை என்றால் இந்த மரமண்டை தமனகனிடம் கேள்! மிதுனபுரியில் இருந்து வந்தானே, காவலன், அவனிடம்..."

"நீர் தாம் இப்போது எனக்கு விளங்கத் தெரியாத மரமண்டை போல் பேசுகிறீர்!..."

இவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கையில் மரத்தில் இருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கிழட்டு நாமதாரிப் பூனை, கரகரவென்றிரங்கி நொடிப் பொழுதில் ஒரு புறாவைக் கவ்விச் சென்றுவிட்டது. அது சென்றதைப் பார்த்த பூமகள் திடுக்கிடுகிறாள். விஜயனின் சிரிப்பொலி கேட்கிறது.

"உம் சத்தியத்தைப் பூனை கவ்விக் கொண்டு சென்று விட்டது?"

அஜயன் எத்தகைய சலனமுமின்றி அதே கூர்மையுடன் விடையிறுக்கிறான். "இதுவும் சத்தியமே. அந்தப் பூனை பசியாக இருந்திருக்கும். அது மூப்பினால் ஓடியாடி இரை பிடிக்க முடியாது. பறவைக்குத் தானியம் தூவியதால், பறவைகள் சேர்ந்து வந்தன. அவற்றில் ஒன்று பூனையின் பசிக்குமாகிறது. எனவே, இதுவே சத்தியம் தான்!"

"ஒரு பறவையை யமனிடம் இருந்து உம்மால் காப்பாற்ற முடியவில்லை. இதை ஒத்துக் கொள்ளுங்கள். பின் எதற்காக, நமது குருநாதர் வில் - அம்பு, போர்ப் பயிற்சி என்று கற்பித்திருக்கிறார்? வில் - அம்பு - வித்தை இந்த மாதிரியான நேரங்களில் பயன்படவில்லை என்றால், விரோதிகளிடம் இருந்து எப்படி மக்களைக் காப்பாற்ற முடியும்?"

"விரோதிகள் என்பவர் இருந்தால் தானே, அந்தச் சங்கடம் வரும்?" விஜயன் கேலியாகச் சிரிக்கிறான்.

"இது மிக நல்ல யோசனைதான். அப்படியானால் குருநாதர், நமக்கு 'மந்திர அஸ்திரம்' என்ற வித்தையையும் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லையே?"

"தெரிந்திருக்க வேண்டும். ஆனால் பயன்படுத்த வேண்டியதில்லை; பறவைகளும், விலங்குகளும் நமக்குப் பகைவர்கள் இல்லை. நம்மைப் போன்று அறிவு பெற்ற மனிதர், தங்கள், சினம், பேராசை ஆகிய தீக்குணங்கள் மேலிட, மற்றவரை அழிக்க அத்தகைய வித்தையைப் பயன்படுத்தி நிரபராதிகளை அழிக்க முன் வரும் போது நாம் அவற்றைப் பயன்படுத்தி, சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும். அதுவும் நம் குருநாதர், அனுமதிக்கும் போதுதான்..."

"சரி, ஒத்துக் கொள்கிறேன் - நமக்குள் இப்போது சண்டை எதற்கு?" என்று விஜயன் இறங்கி வருகையில் பூமகள் குடில் மறைவில் இருந்து வெளிப்பட்டு வருகிறாள்.

"அம்மா, நமக்கு விரோதிகள் இருக்கின்றனரா?"

விஜயனின் வினாவில் ஒரு கணம் அவள் தடுமாறிப் போகிறாள்.

ஆனால் அஜயனே இதற்கு மறுமொழி கூறுகிறான்.

"எல்லோருக்கும் இதம் நினைக்கும் அம்மா இருக்கையில் எங்கிருந்து விரோதிகள் வருவார்கள்?... இல்லையா அம்மா?"

"அக்கரையில் இருக்கும் குருகுலத்து அந்தணப் பிள்ளைகள் சிலர் நாங்கள் விளை நிலங்களில் ஏர் பிடிக்கையில் ஏளனமாகச் சிரித்தார்கள். நாங்கள் அந்தண குலத்துக்கும் க்ஷத்திரிய குலத்துக்கும் பொருந்தாத நீசர்களாம். அப்படி என்றால் என்ன அம்மா?" விஜயனின் இந்த வினாவுக்கும் அவள் மவுனமாக இருக்கிறாள்.

"அம்மா! நாங்கள் எல்லோரும் உணவு சேகரிக்கின்றோம். தாங்கள் அதை எல்லாம் நாம் சுவையாக உண்ணும்படி பக்குவம் செய்து தருகிறீர்கள். வேள்வித் தீயில் இட்டு, அதன் விளைவான மிச்சத்தை உண்பதுதான் அந்தண தருமமாம். நாம் உபநயனம் செய்து வைக்கத் தகுதி இல்லாதவராம்!"

அவள் முகத்தில் சூடேறுகிறது.

"குழந்தைகளே, அவர்கள் சொல்லும் வேள்வி, கொல்லும் செயல். சத்திய முனிவரும், நந்த சுவாமியும் மேற்கொண்டு நம்மையும் ஈடுபடுத்தும் வாழ்க்கையே வேள்விதான். வேள்வி என்பது ஓம குண்டத்தில் போடும் சமித்துகளும் உயிர்ப்பிண்டங்களும் அல்ல. நல்ல உணவைப் பக்குவப்படுத்துவதும் வேள்வித் தீதான். அதை நாம் காத்து வைக்கிறோம். அதே தீ, நமது நல் ஒழுக்கங்களாகிய சமித்துகளால் நம்முள் எப்போதும் அணையாமல் நம்மைப் பாதுகாக்கிறது. அது நம் உணவைச் செரிக்கச் செய்கிறது. நமக்கு ஆற்றலைத் தருகிறது. அது நமக்கு அறிவைத் தருகிறது. அது நமக்கு நல்ல தெளிவைத் தருகிறது; வீரியத்தையும் தருகிறது. அந்த ஒளி என்றும் அணையாமல் இருக்க, மேலும் மேலும் நம்மைப் புதுப்பித்துக் கொள்வோம். மூர்க்கத்தனம், பேராசை, சினம் எல்லாவற்றையும் அத்தீயில் இட்டுப் பொசுக்கிக் கொள்வோம். வேள்வி என்பது வெறும் சடங்குகளில் இல்லை. அன்றாடம் காலை, மாலைகளில், வானத்து தேவனையும், காற்றையும் மண்ணையும் நாம் தொழுதேற்றி நிற்பது, இந்த வேள்விக்கு ஆதாரசுருதிகள். 'காயத்ரி' மந்திரத்தை எவரும் உச்சரித்து அறிவொளியும் வீரியமும் நல்கும் தேவனை வழிபடலாம். நம் சித்தத்தைத் தூய்மையாக்கிக் கொள்ள, முப்புரி நூல் அடையாளம் எதற்கு? நம்முள் இச்சக்திகளை எழுந்தருளச் செய்து ஆற்றலைப் பெற அடையாளம் எதற்கு?..."

அன்னையின் குரலில் அவர்கள் கட்டுண்டவர்களாய் இருக்கிறார்கள். கச்சலன் வந்து சென்று, இரண்டு பருவங்கள் கடந்து விட்டன. மாரிக் காலம் முடிந்து, பனிமலர்கள் பூக்கும் பருவம். ஆனால் இந்தச் சூழலில், எது இளவேனில், எது முதுவேனில் எதுவும் தெரிவதில்லை. முன்பு, பிள்ளைகள் சுவைத்துத் துப்பிய மாங்கொட்டைகளில் இரண்டு இந்நாள் இளமரங்களாகப் பூரித்து, பூக்குலைகளுடன் பொலிகின்றன.

பிள்ளைகள் இருவரும், கூரைக்குப் புல் சேகரிக்கக் கிளம்புகின்றனர். பெரியன்னை வருகிறார்.

"தனியாக எங்கே செல்கிறீர்கள் குழந்தைகளே?... நீலன், கேசு, மாதுலன் யாரையும் காணவில்லை?"

"அவர்கள் தேனெடுக்கப் போயிருக்கிறார்கள் பெரியம்மா..."

"மாதுலனுமா?" என்று விழியைச் சரித்துக் கொண்டு பார்க்கிறார். அவள் உடல் அந்த வெயிலிலும் குளிரில் இருப்பது போல் நடுங்குவது தெரிகிறது.

"ஏன் இப்படி நடுங்குகிறீர்கள், தாயே! அம்மம்மா... இப்போது, குளத்தில் நீராடினீர்களா?"

"நான் தனியாக இல்லையடி பெண்ணே, புல்லி இருந்தாள். உடலெல்லாம் புழுதியாக இருந்தது. அழுக்குப் போக நீராடினேன். நீர் பட்டதும் இதமாக இருந்தது..."

பூமகள் விரைந்து உள்ளே சென்று, உலர்ந்ததோர் ஆடையைக் கொண்டு வருகிறாள். அவளை மெல்ல அழைத்துச் சென்று, ஆடையை மாற்றச் சொல்கிறாள். பிறகு ஈர ஆடையைப் பிழிந்து, ஓரத்து மரக் கிளையில் போடுகிறாள்.

"கண்ணம்மா, பிள்ளைகளை எங்கும் போகச் சொல்லாதே! நம் கண்முன்னே இருக்கட்டும்..."

"நீங்கள் அஞ்ச வேண்டாம் பெரியம்மா. அவர்கள் குழந்தைகள் இல்லை. யாரும் தூக்கிச் செல்ல. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் போது நான் ஊமையாகிறேன்..."

முதியவர் நிமிர்ந்து பார்க்கின்றார். கனிந்த பழத்தின் விதைகள் போல் முதிர்ந்த விழிகள் ஒளிருகின்றன. "என்ன பேசிக் கொள்கிறார்கள்?"

"அந்தண குலம், க்ஷத்திரிய குலம் என்பதெல்லாம் எப்படி என்று பேசிக் கொண்டார்கள். சத்திய முனிவருக்கும் நந்த சுவாமிக்கும் உபநயனம் செய்து வைக்கத் தகுதி இல்லை என்று அக்கரை குருகுலக் கொழுந்துகள் சொன்னார்களாம். என்னிடம் கேட்டார்கள்."

"ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையே கடிக்கச் சொல்லி வைத்தார்களா?..."

தாயின் இழிந்து தொங்கும் செவிகளைப் பார்த்த வண்ணம் நிற்கிறாள். கன்னங்கள் வற்றி... சப்பிய மாங்கொட்டையாய்த் தலையும், அகன்ற நெற்றியும்... எந்த இரகசியத்தைக் கட்டிக் காக்கின்றன?

"அடி, கண்ணம்மா, புல்லின் ஆண், பெரிய பன்றி அடித்துக் கட்டிக் கொண்டு போகிறான். வலையில் விழுந்தது என்றான்... அவன் சொன்ன சேதி கேட்டதிலிருந்து எனக்கு வெலவெலத்து வருகிறது. கச்சலன் வந்த போது அரசல் பொரசலாகக் கேள்விப்பட்டது, நிசந்தான். யாகம் செய்கிறார்களாம், யாகம். மந்திரம் சொல்லி நீர் தெளித்துக் குதிரையை விரட்டியாயிற்றாம். அந்தக் குதிரை அடி வைத்த மண்ணெல்லாம் அவர்களுக்குச் சொந்தம். மிதுனபுரிப் பக்கம் வந்திருக்கிறதாம். அவர்கள் கோட்டைக் கதவுகளை மூடி விரட்டி விட்டார்களாம். என்ன அநியாயம் பாரடி?" அவள் எதுவும் பேசவில்லை.

"இந்தப் பிள்ளைகளும் மற்ற பிள்ளைகளுடன் தேனெடுக்கப் போகிறோம் என்று நின்றார்கள். உடம்பெல்லாம் பச்சிலையைப் பூசிக் கொண்டு தேனெடுக்கப் போவது விளையாட்டாக இருக்கிறது... எனக்கென்னமோ இன்று அனுப்ப வேண்டாம் என்று தோன்றிற்று. அடுத்த முறை போகலாம் என்றேன்..." என்று காரணம் புரியாமல் மழுப்புகிறாள்.

இவளுடைய அடிமனதில் கச்சலர் கூறிய 'யாகம்' மனதில் படிந்து இருக்கிறது. இப்போது கேள்விப்பட்டிருக்கும் செய்தி...?

யாகக் குதிரையுடன் ஒரு படையும் வரும்...

"அவன் வேறு என்னவெல்லாமோ உளறுகிறான். யாகம் செய்யும் ராசாவுக்கு ராணி இல்லையாம். ராணியைப் போல் தங்கத்தால் ஒரு பிரதிமை செய்து வைத்திருக்கிறார்களாம். பெரிய பெரிய ரிசி முனிவர்கள், ராசாக்கள், எல்லாரும் கூடிச் செய்யும் யாகமாம். ஒரு வருசம் ஆகுமாம்..." முதியவள் முணுமுணுத்துவிட்டு அவளைப் பார்க்கத் தலை நிமிருகிறாள். "என்னது? தாயே? என் தந்தைக்குப் பட்டத்தரசி இருக்கிறார்களே? ஊர்மிளியின் தாயார்? அவர் எதற்குப் பொற் பிரதிமை செய்து வைக்க வேண்டும்?..."

அன்னை பேசவில்லை. தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு புற்றரைக்கு நகர்ந்து போகிறாள்.

மாதுலன் குழலூதிக் கொண்டு வருகிறான். அஜயன், விஜயன், நீலன், காந்தன் எல்லோரும் வருகிறார்கள். அரிந்த புல் கட்டைக் கூரை பின்னுவதற்கு வசதியான இடத்தில் போடுகிறார்கள்.

"நாம் நீராடி வருவோம்... அம்மா, இன்றைக்கு நாங்கள் எல்லோரும் இங்கு உணவு கொள்ளவில்லை. சாந்தன் வீட்டுக்குப் போகிறோம்..." உடலைத் தட்டிக் கொண்டு ஆடிப்பாடிக் கொண்டு குளக்கரைக்குச் செல்கிறார்கள்.

பூமகளுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. மலைகள் கரைவது போலும், ஆறுகள் பொங்குவது போலும் கடல் ஊரை அழிப்பது போலும் மனசுக்குள் விவரிக்க இயலாத அச்சம் கிளர்ந்து அவளை ஆட்கொள்ளுகிறது.

"கண்ணம்மா? பிள்ளைகள் எங்கே போகிறார்கள்?"

"சாந்தன் கூட்டிப் போகிறான். யாவாலி ஆசிரமத்துப் பக்கம் போகிறார்கள். மானோ, மீனோ எதுவோ சமைத்து இருப்பார்கள். சத்தியரும், நந்த முனியும் அங்கே தானே இருப்பார்கள்? அவர்களுக்குத் தெரியாமல் இருக்குமா?"

"... அடியே கண்ணம்மா, உனக்கு, அரண்மனையில், இளவரசுப் பட்டம் கட்டி நாடாள வேண்டிய பிள்ளைகளை இங்கே வேடக் கூட்டத்துடன் வைத்திருக்கிறோம் என்ற மன வருத்தம் இருக்கிறதா? சொல்!"

இறுகிப் போன உணர்வுகளைப் பெரியம்மா தூண்டில் கொக்கிப் போட்டு நெம்புவது போல் வேதனை தோன்றுகிறது.

ஒருகால் மந்திரக் குதிரை இங்கு வந்துவிட்டால்? வராது என்று என்ன நிச்சயம்? இந்தப் பிள்ளைகளுக்குத் தந்தையைப் பற்றி விவரங்களைக் கூறாமல் எத்தனை நாட்கள் இரகசியமாக வைத்திருக்க முடியும்?...

தாய்-தந்தை இவளை மண்ணில் விட்டார்கள்; வளர்த்தவர், உனக்குச் சகலமும் நாயகனே என்று தாரை வார்த்துக் கொடுத்தார். அவரோ உன் பந்தம் வேண்டாம் என்று வனத்துக்கனுப்பிக் கை கழுவிக் கொண்டார்.

இவள் தன் வயிற்றில் பேணி வளர்த்தாலும், குமரப் பருவத்து எழுச்சியில், அரும்பி மலருவது, அந்த வித்தின் 'பௌருசம்' அல்லவோ? குதிரையின் வாலைப் பற்றிக் கொண்டு அடி பணிந்து போய் விடுவார்களோ? உடல் நினைக்கவே நடுங்குகிறது.

அந்நாள் கானகத்தில் இவள் நிராதரவாக விடுபட்ட போது இவளை முத்தை ஏந்தும் சிப்பி போல் காத்துக் கொண்டு வந்தாரே, அந்த நந்த முனி என்ன சொல்வார்!

எது நீதி? எது அநீதி?

அவள் முதியவளுக்கு இலைக் கிண்ணத்தில் கூழ் கொண்டு வந்து வைக்கிறாள். கிழங்குக் கூழ், ஒரு துண்டு இனிப்புக் கட்டியும் வைத்துவிட்டு,

"அம்மா, நான் இப்போது, சத்தியமுனிவரையும் நந்த சுவாமியையும் பார்த்து விட்டு வருகிறேன். போகும் போது புல்லியோ, கும்பியோ தென்பட்டால் இங்கே வந்து இருக்கச் சொல்கிறேன்... வரட்டுமா?" என்று நிற்கிறாள்.

அப்போது, கூட்டமாகத் தேனெடுக்கச் சென்ற பிள்ளைகள் வரும் கலகலப்புக் கேட்கிறது. மரங்களுக்கும் புதர்களுக்கும் இடையில் எங்கேனும் உறங்கிவிட்டு மறுநாள் பகலிலோ, மாலையிலோ தானே திரும்புவார்கள்?...

அவர்களை எதிர் கொள்ள பூமகள் விரைகிறாள்.

அவர்கள் மூங்கில் குழாய்களில் தேன் கொண்டு வரவில்லை. வெற்றுக் குழாய் கயிறு என்று சென்ற கோலத்திலேயே காட்சியளிக்கிறார்கள்.

"வனதேவி... நாங்கள் ஓர் அதிசயம் பார்த்தோம்..."

மீசை அரும்பிவிட்ட பூவன், ஐம்பின்னல் போட்டிருக்கும் சிறுபிள்ளை, ரெங்கியின் மகளின் மகள், எல்லோரும் ஒரே குரலில், "குதிரை வந்திருக்குது... குதிரை..!" என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

இந்த வனங்களில் குதிரை என்ற பிராணி கிடையாது. அவர்கள் வரும் போது கூட தேர்களில் காளைகள் கட்டி இழுப்பதாகவே சொல்லியிருக்கிறார்கள்.

"மிதுனபுரியில் இருந்து வந்ததா?"

"இல்லை வனதேவி! இது வெள்ளைக்குதிரை. பசு மாட்டை, காளையை விடப் பெரிசு. குச்சமாக... பெரிய வால்..." என்று இரண்டு கைகளை நீட்டி, நிமிர்த்திச் சைகையாகவும் சொல்கிறார்கள். கழுத்தில் மணியாரம் போட்டிருக்கிறதாம். ஒரு பட்டுப் போர்வை போர்த்து, கால்களில் பொன் மின்ன அது நடந்து வருகிறதாம்.

தலையை அப்படியும் இப்படியும் ஆட்டி அது வருவதைச் சோமன் விவரிக்கிறான்.

"எங்கே வந்திருக்கிறது?"

"கிழக்கே... வேம்புவனம் தாண்டி மலை போல் மேடாக இருக்குமே, அங்கே தான் நாங்கள் பாறைத்தேன் எடுக்கப் போனோம். அங்கே ஆற்றுப் பக்கம் புல் தரையில் அது மேய்ந்து கொண்டிருந்தது. நாங்கள் கிட்டச் சென்று தொட்டுப் பார்க்கலாம் என்று போனோமா? அது ஓர் உதை விட்டது... யாரு. இவன் தான்! பின்னே போய்ச் சுகமாக உட்கார்ந்திட்டான்..." என்று பூவனைக் காட்டிச் சோமன் சிரிக்கிறான்...

"இல்லை வனதேவி. அது என்னை விரட்டவில்லை. அங்கே ஒரு குரங்கு வந்தது. அதை விரட்டியது. வனதேவி, அந்தக் குதிரை, ராசா வீட்டுக் குதிரையா?" என்று பூவன் கேட்கிறான். அவள் கலவரமடைகிறாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 21

பூமகளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

"வாருங்கள். நாம் சத்திய முனியிடம் போய்ச் சொல்வோம். அஜயன், விஜயன், நீலன் எல்லோரும் அங்குதான் போயிருக்கிறார்கள்..."

அவர்கள் செல்கிறார்கள். வாழை வனத்தின் குறுக்கே நடந்து செல்கின்றனர். உச்சிக்கு வந்த பகலவன் மேற்கே சாயும் தருணம். கானகத்தின் ஆரவாரங்கள் இனிமையான சில ஓசைகளுள் அடங்கும் நேரம்.

ஆசிரமத்தில் பிள்ளைகள் எல்லோரும் இருக்கிறார்கள். நந்தமுனி மட்டுமே அவர்களுக்கு ஏதோ ஓர் ஆட்டம் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார். மரங்களின் மேலிருந்து பிள்ளைகள் பறவை போலும், விலங்குகள் போலவும் ஓசை எழுப்புகிறார்கள்.

எந்தப் பறவை எந்த மரத்தில் இருந்து ஓசை எழுப்புகிறது என்று கீழிருக்கும் பிள்ளை சொல்ல வேண்டும். அவன் பார்வை மறைக்கப் பட்டிருக்கிறது.

ஒரே காலத்தில், பல்வேறு பறவைக் குரல்கள் ஒலிக்கின்றன.

பையன் இங்கும் அங்கும் ஓடுகிறான். அஜயன் தான்.

இதோ நாகண வாய்ப்புள்... இதோ, நீலகண்டப் பறவை.

இதோ... இதோ இதுதான் செம்போத்து...

"ஹி ஹி... ஹி... ஈ... ஈ..." என்ற ஒலி விசித்திரமாகக் கேட்கிறது.

மகிழமரக் கிளையில் அவள் பார்க்கிறாள். விஜயன்.

"இது ஒன்றும் பறவை இல்லை!"

"பொய்... பறப்பது எதுவும் பறவை தானே?"

"ஒத்துக் கொள்ள முடியாது. ஈ... ஈ... என்ற ஒலி, குதிரைக் கனைப்பு" என்று அஜயன் கண் கட்டை அவிழ்த்துப் போடுகிறான்.

"குதிரை பறக்குமோ?..."

"ஏன் பறக்காது? அந்த அசுவமேதக் குதிரை பறந்துதானே நம் வனத்துக்கு வந்து இறங்கி இருக்கிறது?"

பூமகள் அடுத்த அடியை எடுத்து வைக்காமல் மரத்தோடு சாய்ந்து நிற்கிறாள்.

"குதிரை பறப்பது என்பது புரளி. அப்படியே பறந்தாலும் ஈ... ஈ... என்று கனைக்காது, விர் விர்ரென்று பெரிய சிறகுகளை அடித்துக் கொண்டு நீண்ட ஒலி எழுப்புமாக இருக்கும்!"

"சரி அப்படியே வைத்துக் கொள்வோம். அது எப்படி ஆறு தாண்டி, நமது வனத்துக்குள் வந்தது?"

"நீந்தி வந்திருக்கும்!..."

"அதன் மேலுள்ள பட்டுப் போர்வை, நனையவில்லை, கலையவில்லை, உடம்பு நனைந்திருக்கவில்லை..."

"சூரியனின் ஒளியில் ஈரம் காணாமல் போகும் என்பது கூடவா தெரியாது?"

"அஜயா, விஜயா, அந்தப் பக்கம் இருந்து ஓடத்தில் ஏற்றி, இங்கே கொண்டு விட்டிருக்கலாம் இல்லையா?" என்று நீலன் கூறுகிறான்.

"எதற்கு அப்படி விட வேண்டும்? யார் விட்டிருப்பார்கள்?"

"மிதுனபுரிக்கப்பால் ராசா படை வந்திருக்குதாம். நேத்தே எங்க அப்பன் பார்த்துச் சொன்னார். மிதுனபுரி போய், தோல் கொடுத்து விட்டு, பெரிய பானை வாங்கிட்டு வரப் போனார். அப்ப குதிரை, யானை, கொடி, குடை, எல்லாம் பார்த்தாராம். கோட்டைக்கு வெளியே, பெரிய மரத்தடியில் கூரை கட்டி அங்கு ராசா இருந்தாராம்!"

"மிதனபுரிக் கோட்டைக்குள் போக அங்கே இடமே இல்லையாம். 'தோலை எல்லாம் ராசாவின் ஆளுங்களே வாங்கிட்டு, தங்கக்காசு குடுத்தாங்களாம். எங்காயா சண்டை போட்டுது. தோலைக் கொண்டு குடுத்திரே, பானையிலே கூழு பண்ணுவோம், புளிக்க வைப்போம். இந்தக் காசில என்ன பண்ண? வேதவதியில் கொண்டு வீசு'ன்னு கத்தினாங்க..."

"ராசன்னா தங்கக் காசுங்கதா சாப்புடுவாங்களா?"

ஒரு பொடிப்பயல் மென்று 'அம் அம்' என்று உண்பதைப் போல் கேலி செய்கிறான். எல்லோரும் அதையே செய்து சிரிக்கிறார்கள்.

"அப்பாடா..." என்று விஜயன் வயிற்றைத் தடவி ஏப்பம் விடுகிறான்.

அப்போதுதான் அவள் அங்கு இருப்பதைப் பிள்ளைகள் பார்க்கிறார்கள்.

மரங்களில் உள்ள பிள்ளைகள் அவளை வந்து சூழ்கிறார்கள். "அம்மா...! நாங்கள் அந்தக் குதிரையைப் பார்க்கப் போகிறோம்! இதோ இந்த மாயன் பார்த்து விட்டானாம். கதை கதையாகச் சொல்கிறான். வெண்மையாகப் பால் நுரை போல் இருக்கிறதாம். கறுப்பு மூக்காம். பச்சைப் பசேலென்று மொத்தை மொத்தையாகச் சாணி போடுகிறதாம்!" என்று விஜயன் இரு கைகளாலும் அதன் அளவைக் காட்ட கொல்லென்று எல்லோரும் சிரிக்கிறார்கள்.

"எங்கே இருக்கிறதாம், அது?"

"வேம்பு வனத்து அருகில் புல் தரையில் மேய்கிறதாம்..."

"அதன் பின் யாரும் உரியவர்கள் வரவில்லையா?"

"யாரும் இல்லை வனதேவி. அவர்கள் அந்தக் குதிரையை அதன் கால் போன போக்கில் மேய விடுவார்களாம். அது தடம்பதித்த இடமெல்லாம் அரசருக்குச் சொந்தமாம்?"

"அதெப்படி நாம் நடக்கும் இடத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்? நாம் இங்கே நடமாடுகிறோம்; உணவு சேகரிக்கிறோம்; படுத்து உறங்குகிறோம். இது வனதேவிக்கு உரிய இடம். அந்த வனதேவிதான் இவர்கள் என்று எங்கள் குடியில் எல்லோரும் சொல்கிறார்கள். நாம் எல்லோரும் வனதேவியின் பிள்ளைகள். அவர்கள் இங்கு வந்தால் நம்மை மகிழ்ச்சியாக இருக்க விடமாட்டார்கள்!"

"அதெப்படி குதிரையை விரட்டிவிட்டு ஒன்றுமறியாத நம் இடத்தை ராசா பறிப்பது?"

"மந்திரம் போட்டிருக்கிறார்கள் சடா முடி முனிவர்கள்... மந்திர சக்தியில் நெருப்பு எரியும்; வெள்ளம் வரும்; காற்று அடிக்கும்."

"...முன்னே சம்பூகன் இறந்தது நினைவிருக்கா?" என்று பூவன் கேட்கிறான்.

சம்பூகன் பெயர் கேட்டதுமே அவள் நடுநடுங்கிப் போகிறாள்.

"அம்மா நாம் எல்லோரும் அங்கே போய்ப் பார்க்கிறோம்! பூவன், காட்டுகிறாயா?" விஜயனுக்குத்தான் துருதுருப்பு.

நந்தமுனி ஒற்றை யாழின் சுருதி இல்லாமலே வருகிறார். அது மவுனமாகத் தொங்குகிறது.

பிள்ளைகள் அவரைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.

"குருசுவாமி, யாகக்குதிரை வந்திருக்கிறது! நாங்கள் போய்ப் பார்க்க வேண்டும்!"

"பார்க்கலாமே? அதைச் சுற்றி நின்று கொண்டு பாட்டுப் பாடுவோம். அது வந்த வழியே போகிறதா என்று பார்ப்போம்!"

இது நல்ல முடிவாக அவளுக்குத் தோன்றுகிறது...

பிள்ளைகள் கூறிய இடத்தைக் குறிப்பாக நோக்கி அவர்கள் நடக்கிறார்கள். அவர்களுக்கு நன்கு பரிசயமான தாவரங்கள்; பறவைகள்; சிறு விலங்குகள்; நீர் நிலைகள்...

வேம்பு வனத்தில் புதிய சாணம் இருக்கிறது.

"ஓ! இங்குதான் அது வந்திருக்கிறது! இது அதன் சாணம் தான்!" என்று அதன் மேலேறிக் குதிக்கிறான் மாயன்.

"இல்லை... இது போன்ற சாணம் இதுவரையில் இந்தக் காட்டில் நான் பார்த்ததில்லை..." என்று உடன் வந்த இளம் பெண் கும்பி கூறுகிறாள்.

புற்றரை பசுமையாக ஆற்றுக்கரை வரை விரிந்து கிடக்கிறது.

ஆனால் அங்கு எந்தக் குதிரையும் மேயவில்லை. இவர்கள் ஆற்றுக்கரையின் ஓரம் அடர்ந்த கோரைப் புற்கள், புதர்கள் இடையிலெல்லாம் குதிரைக்காகத் தேடுகிறார்கள். அது தென்படவில்லை. காட்டுப் பன்றிகள், எருமைகள், மான்கள் கூடத் தென்படுகின்றன. தேடி வந்த குதிரை இல்லை.

"நான் அந்தக் குதிரையைப் பிடித்து அதன் முதுகில் ஏறிச் சவாரி செய்ய ஆசைப்பட்டேன்..."

"அது பின்னங்காலால் உதைக்க முடியாதபடி நாங்கள் பிடித்துக் கொள்வோம்!"

"இந்தக் காட்டில் எத்தனையோ மிருகங்கள் இருக்கின்றன. குதிரைகள்... அதுவும் வெள்ளைக் குதிரைகள் தென்படவே இல்லையே?..."

"முன்பே வந்து ராசாவின் ஆட்கள் வலை வைத்துப் பிடித்துப் போயிருப்பார்கள்!"

"அந்த வெள்ளைக் குதிரை, சூரிய ராசாவின் தேரில் பூட்டிய குதிரை போல் இருந்தது!"

ஆற்றோரமாக அவர்கள் நடந்து வருகிறார்கள். மாதுலன் குழலிசைக்க, நாதமுனி ஒற்றை நாணை மீட்ட அவர்கள் குதிரையை வரவேற்கச் செல்வது போல் நடப்பதாக அவளுக்குப் படுகிறது.

"எனக்கு அந்தக் குதிரையில் ஏறி இந்தப் பூமண்டலம் முழுதும் ஒரு சுற்று வர வேண்டும் என்று தோன்றுகிறது..." என்று விஜயன் வழியில் பட்ட கருப்பந்தடிகளை உடைத்துக் கொண்டு கூறுகிறான்.

கரும்புத் துண்டுகள் கடிபடுவது போல், குதிரை பற்றிய கற்பனைகளும் சுவைக்கப்படுகின்றன. "ஒரு கால் மாயன் சொன்னாற் போல் அது பறந்து அக்கரை போய்விட்டிருக்கும்!"

"அதெல்லாமில்லை, இவர்கள் அப்படியே தூங்கி, கனவு கண்டிருப்பார்கள். குதிரை துரத்தி வருவதாக நினைத்துத் தேனெடுக்காமல் ஓடி வந்திருப்பார்கள்!"

"இல்லை அஜயா? நாங்கள் இரண்டு கண்களாலும் பார்த்தோம்! அது உதைத்ததில் எனக்குப் பாரும், காயத்தை!"

"ஒரு கால் இங்கே வரவேற்பு இருக்காது என்று ஆற்றின் மேல் பறந்து அது மிதுனபுரிப் பக்கம் போயிருக்கும்!"

"அங்கே தமனகனோ, சரபனோ உள்ளே விடாமல் கோட்டைக் கதவுகளை அடைத்திருப்பார்கள். அது அவ்வளவு உயரக் கோட்டைச் சுவர் மேல் பறக்க முடியுமா?... அப்படி உள்ளே போனால், தேவதைக்குப் பலியாகும்!" நந்தமுனி ஒற்றை நாண் அதிரும்படி மீட்டுகிறார்.

"பிள்ளைகளே, இந்தக் குதிரைப் பேச்சை விட்டு இப்போது எல்லோரும் பாடிக் கொண்டே நம் இருப்பிடம் போகலாம்! இந்தக் காட்டுக்கு எத்தனையோ பேர் நமக்கு நண்பர்களாக வருகிறார்கள். அப்படி அதுவும் வந்து விட்டுப் போகட்டுமே?... பாடுங்கள்..." அவர் ஒற்றை நாணை மீட்டுகிறார்.

"வனதேவி பெற்ற மைந்தர்கள் யாம்...
அவள் மடியில் நாங்கள் வாழ்கின்றோம்"

ஏற்றமும் இறக்கமுமாகக் குரல்கள் ஒலிக்கின்றன.

  • "தன தானியங்கள் அவள் தருவாள்!
    தளரா உழைப்பை யாம் தருவோம்!
    அத்திர சாத்திரம் அறிந்தாலும்,
    ஆருக்கும் தீம்புகள் செய்யோம் யாம்!
    கோத்திர குலங்கள் எமக்கில்லை.
    குண தேவி பெற்ற மைந்தர்கள் யாம்..."

  • மனசுக்கு இதமாக இருக்கிறது. திருப்பித் திருப்பிப் பாடிக் கொண்டே அவர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு வருகிறார்கள்.

    அங்கே இலுப்பை மரத்தின் அடியில்... வெண்மையாக, பசுவோ? காத்யாயனிப் பசுவுக்கு இப்படி வாலில்லை.

    அஜயனும் விஜயனும் பிள்ளைகளும் கூச்சல் போட்டு ஆரவாரம் செய்கிறார்கள்...

    "அதோ... நம் குடிலுக்குப் பக்கத்தில், குதிரை, நம்மைத் தேடி வந்திருக்கிறது. நாம் அதைத் தேடிப் போயிருக்கிறோம்!"

    ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் அச்சம் மறந்து அஜயன் ஓடுகிறான்.

    விஜயன் அவனை முந்திக் கொண்டு அதன் முதுகில் கை வைக்கிறான்.

    அது உடலை ஒரு குலுக்குக் குலுக்குகிறது. வண்ணப் பட்டுத்துண்டு போர்த்து, தோல் வாரால் பிணித்திருக்கும் முதுகு வானவில்லின் ஏழு நிறங்கள் கொண்டாற் போன்று கண்களைக் கவருவதுடன், 'அருகே வந்து தொடாதீர்கள், நான் எட்டி உதைப்பேன்' என்று அச்சுறுத்துவது போலும் இருக்கிறது.

    இவர்கள் பின்னே நகர, பூமகள் எச்சரிக்கை செய்கிறாள்.

    "பிள்ளைகளே, நீங்கள் யாரும் அருகிலே போகாதீர்கள். சத்திய முனிவர் யோசனையின்படி நாம் நடப்போம்..."

    "குருசாமி மூலிகை தேடி மலைப்பக்கம் போனார். நத்தியின் குழந்தைக்கு இரண்டு கால்களும் பின்னினாற் போல் நிற்க முடியவில்லை. அதற்காக ஒரு மூலிகை கொண்டு வரச் சென்று நான்கு நாட்களாகின்றன. கூடவே சிங்கனும் போயிருக்கிறான்..." என்று அவர் செய்தி தெரிவிக்கிறார்.

    இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, குதிரை பொன்மின்ன, பின் கால்களால் பூமியைச் சீய்க்கிறது.

    "குளம்புக்குப் பூண் கட்டியிருக்கிறார்களா?" விஜயன் கேட்கிறான்.

    "அறியேன், குழந்தாய்... நீ அருகில் போகாதே!"

    "இதை நமக்கே வைத்துக் கொண்டால் என்ன?... இப்போது கூட இதன் முதுகில் நான் தாவி ஏறி அமர்ந்து விடுவேன்..."

    அவன் இளமுகத்தில் ஆவல் மின்னுகிறது.

    "குழந்தைகளே, இது யாகக் குதிரை. இதை ஏவியவர்கள் எங்கேனும் மறைந்து இருப்பார்கள். அவர்களால் நமக்கு வீணான சங்கடம் உண்டாகும். இதை மெள்ள அப்பால் துரத்தி விடுவோம். நீங்கள்... ஒரு கூடையில் தானியமோ, புல்லோ காட்டுங்கள். அது அந்தப் பக்கம் நகரும்..." என்று அப்போது மெல்ல பெரியன்னை வருகிறாள்.

    "நீங்கள் எல்லோரும் எதற்கு இப்படி அதைச் சூழ்ந்து ஆரவாரம் செய்கிறீர்கள்? இருந்து விட்டுப் போகட்டும்! கண்ணம்மா, பொழுது சாய்ந்து அந்தி வேளையாகிறது. அவரவர் வீண் விவாதம் செய்யாமல் உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். அந்தி வந்தனம் செய்து விட்டு, இருப்பதை உண்டு, உறங்குமுன் உட்கார்ந்து யோசனை செய்யுங்கள்... போங்கள்!"

    அவள் குரலுக்கு அனைவரும் கட்டுப்பட்டாலும், அஜயன் மட்டும் அன்னையின் காதோடு, "அதற்கு அடைக்கலம் என்று பெரியன்னை ஏன் சொன்னார்? அதை யார் கொல்ல வந்தார்கள்?" என்று வினவுகிறான்.

    "மேதாவி அண்ணா, மிதுனபுரிக்காரியின் கோபத்துக்குத் தப்பி இங்கே வந்திருக்கிறது! புரிகிறதா? இதை எந்த தேசத்து மன்னர் ஏவி விட்டிருந்தாலும், அவர்கள் எவ்வளவு பராக்கிரமசாலிகளானாலும், மிதுனபுரி எப்போதும் தலை வணங்காது. அவர்கள் சுதந்திரமானவர்கள்; நண்பருக்கு நண்பர்கள்!"

    விஜயன் இவ்வாறு கூறுவது அவளுக்கு ஆறுதலாக இருக்கிறது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 22

பூமகள் காலையில் வழக்கம் போல் முற்றம் குடில் சுத்தம் செய்துவிட்டுக் காலை வந்தனம் செய்யச் சென்றிருக்கும் பிள்ளைகளை எண்ணியவாறு, தயிர் கடைந்து கொண்டிருக்கிறாள். மரத்தில் கடைந்த அந்த மத்து, அழகாகக் குழிந்தும் நிமிர்ந்தும் வரைகளை உடையதாகவும், எட்டு மூலைகளை உடையதாகவும் இருக்கிறது. மிதுனபுரிக் கலைஞர்கள், இத்தகைய சாதனங்களை எப்படி உருவாக்குகிறார்கள்? இம்மாதிரியான பொருட்களை நந்தமுனி அவளுக்கு வாங்கி வந்து தருகிறார். அருமை மகளுக்குச் சீதனம்... ஒரு கால்... அவர்... ஒரு காலத்தில் அபசுரம் எழுப்பி இருப்பாரோ? நெஞ்சு உறுத்துகிறது. இல்லை. அபசுரம் இழைத்த நாணை நீக்கி, வேறு நாண் போட்டு எனக்கு, இந்த சுரம் எழுப்ப உயிர்ப்பிச்சை அளித்தவர் குருசுவாமி... இப்படி ஒரு நாள் பேச்சு வாக்கில் வந்தது செய்தி. நேர்ச்சைக் கடனுக்கு, மகனைப் பலி கொடுக்க இருந்த போது சத்தியர் மீட்டு, பாலகனைத் தமக்குரியவனாக்கிக் கொண்டாராம். காலை நிழல் நீண்டு விழுகிறது.

"மகளே! வெண்ணெய் திரண்டு விட்டதே! இன்னமும் என்ன யோசனை?" சத்திய முனிவரும் நந்தசுவாமியும் தான்.

அவள் உடனே எழுந்து கை கழுவிக் கொண்டு அவர்கள் முன் பணிந்து ஆசி கோருகிறாள்.

"எழுந்திரு மகளே, உனக்கு மங்களம் உண்டாகும். இந்த வனம் புனிதமானது..." இருக்கைப் பாய் விரிக்கிறாள். உள்ளே மூதாட்டி இருக்கிறாள்.

"பார்த்தீர்களா? குதிரையை இங்கு அனுப்பி மேலும் பதம் பார்க்கிறார்கள், இது நியாயமா? நீங்கள் தருமம் தெரிந்தவர்கள்... சொல்லுங்கள்?" அவள் முறையிடும் குரல் நைந்து போகிறது.

"வருந்தாதீர்கள் தாயே! எப்படிப் பார்த்தாலும் தருமம் நம் பக்கலில் இருக்கிறது..."

"என்ன தருமமோ? இந்தப் பிள்ளைகள், விவரம் புரியாத முரட்டுத் தனத்துடன் விளையாடப் புறப்பட்டாற் போல் குதிரையுடன் போகிறார்கள். அச்சமாக இருக்கிறது சுவாமி! விஜயன் அந்தக் குதிரை மீது ஏறிக் கொண்டு உலகை வலம் வருகிறேன் என்கிறான். அஜயன் அதை ஒரு தும்பு கொண்டு மரத்தில் கட்டு, யாரும் கொண்டு போகக் கூடாது என்று பாதுகாக்கிறான். நம் பிள்ளைகள் கபடற்றவர்கள். விருப்பம் போல் கானக முழுவதும் திரிவார்கள். மிதுனபுரியோடும் நமக்குப் பகை எதுவும் இல்லை. சம்பூகனுக்குப் பிறகு இத்தனை நாட்களில் நமக்கு அந்த கோத்திரக்காரர்களுடனும் மோதல் இல்லை. இப்போது, இந்தக் குதிரையினால் விபரீதம் வருமோ என்று அஞ்சுகிறேன் சுவாமி!"

"வராது, நம் எண்ணங்களில் களங்கம் இல்லை..."

"வெறும் குதிரை மட்டும் வந்திருக்குமா? பின்னே ஒரு படை வந்திருக்குமே?"

"ஆம் மகளே, கோசல மன்னன் சக்கரவர்த்தியாக வேண்டுமே? படைகள் நாலுபக்கங்களிலும் இருக்கும். குதிரையை ஆறு தாண்டி எவர் அனுப்பி இருப்பார்கள்? ஒன்று மட்டும் நிச்சயம். நம் பிள்ளைகள் என் ஆணையை மீறி வில் அம்பு எடுக்க மாட்டார்கள். ஆனால், மிதுனபுரிக்காரர்கள், இந்தப் பூச்சிக் காட்டு வேடர்களுடன் சேரும்படி, ஏதேனும் நிகழ்ந்தால்... அப்படி நிகழக்கூடாது என்று அஞ்சுகிறேன். ஏனெனில், இவர்களும் நச்சுக்கொட்டை - நரமாமிச பரம்பரையில் வந்தவர்கள். வழி திரும்புவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். ஆனால், சத்தியத்திலிருந்து அசத்தியத்துக்கு ஒரு நொடியில் சென்று விட முடியும்!... எதற்கும் நீ கவலைப்படாமல், கலக்கம் இல்லாமல் இருப்பாய். நான் அக்கரை சென்று, யாகக் குதிரையுடன் யார் வந்திருக்கிறார்கள், யாகம், யார் எங்கே செய்கிறார்கள் என்பன போன்ற விரிவான தகவல்களைப் பெற்று வருகிறேன்..."

அவர் விடை பெற்றுச் செல்கிறார் என்றாலும் பூமகளுக்கு அமைதி கூடவில்லை.

"கண்ணம்மா."

முதியவளின் குரல் நடுங்குகிறது.

பூமகள் விரைந்து அவள் பக்கம் சென்று அன்புடன் அணைக்கிறாள்.

"உனக்கு ஏனம்மா இத்தனைச் சோதனைகள்? ஆறு தாண்டி அசுவமேதக் குதிரையை அனுப்பலாமா? உன்னிடமிருந்து பிள்ளைகளைக் கவர்ந்து செல்ல இது ஒரு தந்திரமா? குழந்தாய், உன் பிள்ளைகள் இளவரசுப் பட்டம் சூட்டிக் கொண்டு அரசாளும் பேறு பெற வேண்டாமா? தவறை உணர்ந்து உன்னையும் அழைத்துச் செல்வார்களோ?"

பூமகளுக்கு இதயம் வெடித்து விடும் போல் கனக்கிறது.

"தாயே, அப்படியானால் யாகத்துக்குப் பொற் பிரதிமை செய்து வைப்பார்களா?"

தாய் விக்கித்துப் போனாற் போல் அமர்ந்திருக்கிறாள்.

"பொற் பிரதிமையின் கையில் புல்லைக் கொடுத்தால் அது பெற்றுக் கொள்ளுமோ? இவர்களுக்கு உயிரில்லாத பொம்மை போதும்... இப்படி ஓர் அநீதி, பெண்ணுக்கு நடக்குமா? இவன் சக்கரவர்த்தி, குல குருக்கள், அமைச்சர் பிரதானிகள், பெண் மக்கள்... யாருக்குமே இதைக் கேட்க நாவில்லையா? ஒரு தாய் வயிற்றில் அவள் சதையில் ஊறி, அவள் நிணம் குடித்து, உருவானவர்கள் தாமே அத்தனை ஆண்களும்? அவர்கள் வித்தை ஏந்தவும் ஒரு பெண்தானே வேண்டி இருக்கிறது? அப்போது தங்கப் பிரதிமை உயிருடன் வேண்டும்! இதெல்லாம் என்ன யாகம்? உயிரில்லா யாகம்! பசுவை குதிரையைக் கொல்லும் யாகம்! தருமமா இது...?..."

பூமகள் இந்தச் சூனியமான நிலையில் இருந்து விடுபடுபவள் போல், பிள்ளைகளைத் தேடிச் செல்கிறாள். அப்போதுதான் அன்று தானிய அறுவடை நாள் என்று கூறியது நினைவுக்கு வருகிறது. பிள்ளைகள் விளை நிலத்தில் கதிர்கள் கொய்கிறார்கள். அஜயனும் விஜயனும் அந்தக் கூட்டத்தில் தனியாகத் தெரிகிறார்கள். உழைப்பினால் மேனி கறுத்தாலும், கூரிய நாசியும், உயரமும் அவர்கள் வித்தியாசமானவர்கள் என்று தோற்றம் விள்ளுகிறது.

ஆனால் இவர்கள் ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் அறுத்த கதிர்களை ஒரு புறம் அடுக்குகிறார்கள். புல்லியும், கவுந்தியும் பெரியவர்களாக நின்று கதிர்களில் இருந்து சிவந்த மணிகள் போன்ற தானியங்களைத் தட்டுகிறார்கள்.

பிள்ளைகள் கையில் அள்ளி இந்தப் பச்சைத் தானியத்தை வாயில் போட்டு மென்று கொண்டே பால் வழியும் கடைவாய்களுடன் உழைப்பின் பயனை, எடுக்கிறார்கள். மேலே பறவைக் கூட்டம் எனக்கு உனக்கு என்று கூச்சல் போடுகின்றன.

புல்லி ஒரு வைக்கோல் பிரியை ஆட்டி விரட்டுகிறாள்.

"இத இப்ப எல்லாத்தையுமா எடுப்போம்? நீங்க தின்ன மிச்சந்தான். எங்களுக்கு இது குடுக்கலேன்னா, உங்களையே புடிப்போம். ஓடிப் போங்க!" என்று அவற்றுடன் பேசுகிறான்.

"வனதேவி... வாங்க. இன்னைக்கு, இதெல்லாம் கொண்டு போட்டிட்டு, நாளைக்குப் பொங்கல்... எங்க முற்றத்தில், எல்லாரும் சந்தோசமா பூமிக்குப் படைச்சி, விருந்தாடுவோம்..."

பூமகள் சுற்று முற்றும் பார்க்கிறாள்.

"குதிரை எங்கே?... மாடுகள் மேயும் இடங்களில் இருக்குமோ?"

"மாடுகள் இங்கே இல்லை. இருந்தால் எல்லாத் தானியத்தையும் தின்று போடும். அங்கே விரட்டி விட்டிருக்கிறோம். குதிரையை, தோப்புப் பக்கம் கட்டிப் போட்டு, காவல் இருக்கிறாங்க. யாரோ சொன்னார்களாம், ராசா வந்திருக்கிறாரு. புடிச்சிட்டுப் போவாங்கன்னு. நம்ம இடத்துல அது வந்திருக்கு. வுடறதில்லைன்னு சொல்லி, அந்தப் பக்கத்துப் பிள்ளைங்க புடிச்சிக் கட்டிப் போட்டிருக்காங்களாம்..."

"யாரு அப்படிச் செய்தது? வீண் வம்பு? நந்தசுவாமி இல்லையா?"

"அவங்க இருக்காங்க. இந்தப் பூவன், குழலூதும் மாதுலன் எல்லாம் அங்கே தான் இருக்கிறாங்க..."

"அஜயா, விஜயா, எல்லோரும் போய் குதிரையை அவிழ்த்து விடுங்கள். அது எங்கே வேண்டுமானாலும் போகட்டும்! நமக்கெதற்கு?" அஜயனும் விஜயனும் மேனியில் படிந்த கதிர்களை, தொத்தும் வைக்கோல் துகள்களைத் தட்டிக் கொள்கிறார்கள். வாதுமை நிற மேனி கறுத்து மின்னுகிறது. அஜயனுக்கு விஜயன் சிறிது குட்டை. முக வடிவம் ஒரே மாதிரி; அவள் நாயகனை நினைவுபடுத்தும் விழிகள்; முகவாய்; காதுகள்...

நெஞ்சை யாரோ முறுக்கிப் பிழிவது போல் தோன்றுகிறது. ஆனால், பிள்ளைகளே, நீங்கள் உயர்ந்த வாழ்கிறீர்கள்; பிறர் உழைப்பில் ஆட்சி புரியவில்லை!

"அம்மா! நந்த சுவாமியே எங்களை இங்கே அனுப்பி வைத்தார். அரசகுமாரர் யாரோ வந்திருப்பதாகச் செய்தி வந்ததாம். அவர்கள் வந்தால் கட்டிப் போட்ட குதிரையை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் அங்கேயே காவல் இருக்கிறார். மாதுலன் குழலூத, அது சுகமாகப் பாட்டுக் கேட்டுக் கொண்டு அசை போட்டுக் கொண்டிருந்தது..."

"யாரிடமும் வில் அம்பு இல்லையே?"

"நாங்கள் குருசுவாமி சொல்லாமல் தொடுவோமா?"

அப்போது, சங்கொலி செவிகளில் விழுகிறது; பறையோசை கேட்கிறது. எல்லோரும் நிமிர்ந்து பார்க்கிறார்கள்.

"ராசா... பிள்ளைங்களா! தானியத்தைக் கூடையில் அள்ளுங்க!" எல்லோரும் விரைவாகக் கூடைகளில் அள்ளுகிறார்கள். தானியம் உதிர்க்காத கதிர்களைக் கட்டுகிறார்கள். ஏதோ ஓர் அபாயம் நம் உழைப்புப் பறி போகும் வகையில் வந்து விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.

பூமகளும், தங்கத் தட்டுகளில், அப்பமும், பாலன்னமும் வேறு பணியாரங்களும் அடுக்கிய காட்சியை நினைக்கிறாள். இப்படி உழைத்து, அந்த விளைவைத் தானே மேல் வருக்கம் ஒரு துன்பமும் அறியாமல் உண்ணுகிறது! தேனீக் கொட்டல்களுக்குத் தப்பித் தேன் சேகரித்தல்; காடு காடாகச் சென்று பட்டுக்கூடு சேகரித்தல்...

இவை எதுவும் அறியாத அறிவிலிகள், அசுவமேதம் செய்கிறார்கள்! இந்த இடத்தில் ஓர் அம்பு விழக்கூடாது. விழுந்தால் வனம் பற்றி எரியும்! முற்றம் முழுதுமாகத் தானியக் கதிர்கள் அடைந்து விடுகின்றன.

அவர்கள் நீராடி வரும் போது கூழ் சித்தமாக்கி, கனிகளுடனும் தேனுடனும் வைக்கிறாள். வேடர்குடியில் இருந்து அவித்த உணவும் வருகிறது. "நந்தசுவாமி, பூவன், மாதுலன் எல்லோருக்கும் யார் உணவு கொடுப்பார்கள்?"

விஜயனின் உச்சி மோர்ந்து நெற்றியில் முத்தம் வைக்கிறாள் அன்னை.

"நந்தசுவாமிக்கு, யாவாலி ஆசிரமத்துப் பெண்களும் ஆண்களும் எல்லாம் கொடுப்பார்கள். கவலைப்படாதீர்கள்!"

"பூமியில் எல்லாத் தானியங்களும் ஒட்ட எடுக்கவில்லை. ஒட்ட எடுத்தால் இரண்டு கூடை இருக்கும். நல்லா தீட்டிப் புடைத்து, இடிச்சி மாவாக்கி, கூழு கிளறிக் கொஞ்சம் வெல்லக்கட்டி கடிச்சிட்டா..." நாக்கை சப்புக் கொட்டுகிறது வருணி.

"ஒரு பானை கூழு பத்தாது!"

"முன்பெல்லாம் இந்தக் கூழே தெரியாது. நான் சின்னப்புள்ளயா இருக்கையில், புகையில் கட்டிப் போட்ட இறைச்சிதா. கடிச்சி இழுத்து தின்னுவம்..."

"வனதேவி, யாகக் குதிரைன்னா என்ன அது? வெள்ளையாக இருந்தா யாகக் குதிரையா?"

"எனக்குத் தெரியாது, புல்லி அக்கா!"

"வனதேவிக்குத் தெரியாதது இருக்குமா? பெரியம்மா, நீங்க சொல்லுங்கள்!"

"அது வர்ற எடமெல்லாம் ராசாக்கு சொந்தம்னு அர்த்தம். முதல்ல நச்சுக்கொட்ட அம்பு தயாரா வச்சிக்குங்க!" என்று பெரியம்மை கடித்துத் துப்பும்போது திக்கென்று பூமகள் குலுங்குகிறாள்.

"அய்யோ, அதெல்லாம் வாணாம்மா! நாம குதிரைய அவுத்துவிட்டாப் புடிச்சிட்டுப் போறாங்க. அது என்னமோ வழி தவறி வந்திட்டது..."

உழைப்பின் அயர்வில் அவர்கள் படுத்தவுடன் உறங்கிப் போகிறார்கள். வேடர்குடிப் பிள்ளைகள் சற்று எட்டி உள்ள தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்று விட்டனர். புல்லி இங்கே தான் முற்றத்தில் உறங்குகிறாள். பசுக்கள் கொட்டிலுக்குள் திரும்பிப் படுத்து விட்டன. உறங்காத இரண்டே உயிர்கள்... அவளும் அன்னையுமே... அவர்களுக்குள் பேசிக் கொள்ள நிறைய இருக்கின்றன. ஆனால் பேச்சு எழவில்லை.

ஒரு சிறு அகல் விளக்கு குடிலின் மாடத்தில் எரிகிறது. கீழே மூதாட்டி கருணை போல் குந்திக் கொண்டு இருக்கிறார்கள். அருகில் வனதேவி, ஒரு புல் மெத்தை விரிப்பில் படுத்திருக்கிறாள். உறக்கம் பிடிக்கவில்லை. கடந்த காலத்துக் காட்சிகள்... படம் படமாக அவிழ்கின்றன. அவந்திகா, தேர் கிளம்பும் சமயத்தில் பெட்டியைத் தூக்கி வந்ததும், அப்படியே பார்வையில் இருந்து மறைந்ததும்... "அடி, சாமளி, ஏதேனும் நல்ல பண் பாடு என்றால் துக்கம் இசைக்கிறாயே?" என்று கடிந்த காட்சி... "அம்மா, இது, இளையராணி மாதா அனுப்பிய பானம், பருகினால் சுகமாக உறக்கம் வரும்..." பொற் கிண்ணத்தில் வந்த அந்தப் பானம்...

"மகளே, இந்த நேரத்தில் நீ துன்புறலாமா? நீ பட்டதெல்லாம் கனவு என்று மறந்துவிடு! இனி அதெல்லாமில்லை..." என்று இதம் கூறிய ராணி மாதா...

இவர்களெல்லோருக்கும் அவள் நிலைமை தெரியுமா?

அந்தப்புரம் என்ற கட்டை மீறிக் கொண்டு ஒருவரும் வெளியில் வர முடியாதா?... ஆற்றுக்கரை வேடர் குடியிருப்பில் ஒரு நாள் உறங்கினாளே?...

"செண்பக மலர் அலங்காரம் வேண்டாம்! மன்னர் காத்திருப்பார். நேரம் ஆகிறது!..."

துண்டு துண்டாய்க் காட்சிகள்... பேச்சொலிகள்... வழக்கமான பள்ளி எழுப்பும் பாட்டொலிகள்... அரண்மனையின் அலங்காரத்திரைகள், பளபளப்புகள், எல்லாமே ஒன்றுமில்லாத பொய்யாக விளக்கமாகிவிட்டன.

அவளைப் போல் குலம் கோத்திரம் அறியாத பெண்ணுக்கு மகாராணி மரியாதையா?

அடி வயிறோடு பற்றி எரிகிறது.

எழுந்து சென்று, குடிலுக்குள், மண் குடுவையில் இருந்து நீர் சரித்துப் பருகுகிறாள். முற்றத்தில் இருந்து பார்க்கையில் வானில் வாரி இறைத்தாற் போல் தாரகைகள் மின்னுகின்றன. கானகமே அமைதியில் உறங்குகிறது.

மீண்டும் படுத்துப் புரண்டு எப்போது உறக்கம் வந்தது என்று தெரியவில்லை. அமைதியைப் பிளந்து கொண்டு ஓர் அலறல் ஒலி கேட்கிறது. அவள் திடுக்கிட்டுக் குலுங்குகிறாள். குடிலின் பக்கம் ஓர் ஓநாய், வாயில் எதையோ கவ்விக் கொண்டு செல்கிறது. அது மானோ, ஆடோ, பசுவின் பகுதியோ என்று இரத்தம் உறைய நிற்கிறாள். மயில் கூட்டம் கூட்டமாகப் பறந்து ஓலம் இடுகிறது. மயில் அகவும்; அதன் ஓலமா இது? கானகமே குலுங்குவது போல் இந்த ஓலம் நெஞ்சைப் பிளக்கிறது. ஓநாய், மயிலையா கவ்விச் சென்றது? ஓநாய்... சம்பூகன் ஓநாய்க் குட்டிக்குப் பால் கொடுத்து வளர்த்தான். சம்பூகன்... அவளுக்கு அடி வயிற்றில் இருந்து சோகம் கிளர்ந்து வருகிறது. "அம்மா..." என்று துயரம் வெடிக்கக் கதறுகிறாள். ஆனால் என்ன சங்கடம்? குரலே வரவில்லையே?...

ஓ... இதுதான் மரணத்தின் பிடியோ?... என்னை விட்டு விடு... நானே உன் மடியில் அமைதி அடைகிறேன் தாயே...

"கண்ணம்மா... கண்ணம்மா!..."

அன்னையின் கை அவள் முகத்தில் படிகிறது. "மகளே, கெட்ட கனவு கண்டாயா?"

"புரண்டு புரண்டு துடித்தாயே!... நீ எதையோ நினைத்து அச்சம் கொண்டிருக்கிறாய். நந்தசுவாமியும், சத்திய முனிவரும் இருக்கையில் ஒரு துன்பமும் வராது. கிழக்கு வெளுத்து விட்டது. எழுந்திரு குழந்தாய்?..."

அவள் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். பிள்ளைகள் எழுந்து காலைக்கடன் கழிக்கச் சென்று விட்டனர். புல்லி முற்றம் பெருக்கிச் சுத்தம் செய்கிறாள்.

இவளால் ஓநாய் வாயில் நிணம் கவ்விச் சென்ற காட்சியை மறக்க முடியவில்லை.

"தாயே எனக்கு நந்த முனிவரின் அருகே சென்று ஆசி பெறத் தோன்றுகிறது..."

"போகலாம். புல்லியையோ வருணியையோ அழைத்துச் செல். அவனே வருவான், மகளே என்று அழைத்துக் கொண்டு. நீராடி, கிழக்கே உதித்தவனைத் தொழுது வருமுன் பிள்ளைகள் வந்து விடுவார்கள். வருணியோ, புல்லியோ உணவு பக்குவம் செய்யட்டும். நீ அமைதியாக இரு, குழந்தாய்..."

அவள் எழுந்து நீர்க்கரைக்குச் செல்கிறாள். நீராடி வானவனின் கொடையை எண்ணி நீரை முகர்ந்து ஊற்றும் போது, அவள் முகத்தில் அவன் கதிர்கள் விழுந்து ஆசி கூறுகின்றன. தடாகத்தில் மலர்ந்திருக்கும் மலர்களைப் பறிக்க அவளுக்கு மனமில்லை. "வானவனுக்கு நீங்களே காணிக்கை! மகிழுங்கள்! நான் கொய்ய மாட்டேன்!" என்று உரையாடுவது போல் மனதை இலேசாக்கிக் கொள்கிறாள். புத்துயிர் பெற்று ஈர ஆடையுடன் அவள் திரும்பி வருகையில்... அவர்கள் முற்றத்தில் அந்த யாகக் குதிரை நிற்கிறது. அஜயன், விஜயன், மாதுலன், பூவன், நீலன், எல்லோரும் ஆரவாரம் செய்கின்றனர். குதிரை சதங்கை குலுங்கத் தலை அசைக்கிறது. தும்பு ஒன்றும் இணைத்திருக்கவில்லை.

"அம்மா! பாருங்கள்! குதிரை தானாக இங்கு வந்துவிட்டது! அதிகாலையிலேயே புறப்பட்டு நம் முற்றத்துக்கு வந்திருக்கிறது! மூத்தம்மையே, வந்து பாரும்! குதிரை... சூரியனார் தேர்க் குதிரைகளில் ஒன்று நம் முற்றத்துக்கு இறங்கி வந்திருக்கிறது! நம் விருந்தினர் இன்று இவர். புதிய தானியம் வைப்போமா?"

அஜயன் முதல் நாள் சேகரித்த தானிய மணிகளை ஒரு மூங்கிற்றட்டில் போட்டு வைக்கிறான்.

"உமக்கு முறை தெரியவில்லை! விருந்தினருக்கு, முதலில் கால் கழுவ நீர் தந்து உபசாரம் செய்ய வேண்டாமா?..." என்று விஜயன், நீர் முகர்ந்து வந்து அதன் கால்களில் விடப் போகிறான்.

"குதிரையாரே, குதிரையாரே வாரும்! எங்கள் விருந்தோம்பலை ஏற்று மகிழ வாரும்!"

இவன் பாடும் போது அது கால்களைத் தூக்கி உதறுகிறது.

விஜயன் பின் வாங்குகிறான்.

"அது பொல்லாத குதிரை; உதைத்தால் போய் விழுவாய்! கவனம்!" என்று நீலன் எச்சரிக்கிறான்.

தானியத்தைச் சுவைத்துத் தின்னுகிறது. அங்கேயே அது சாணமும் போடுகிறது.

கலங்கிப் போயிருக்கும் பூமகள், வேறு ஆடை மாற்றிக் கொண்டு குடிலின் பின்புறம் நடந்து செல்கிறாள். நந்தமுனியின் சுருதியோசை கேட்கிறது. அவரைத் தொடர்ந்து தாவரப் பசுமைகளினிடையே, அரண்மனைக் காவலரின் பாகைகள் தெரிகின்றன. வில்லும் அம்பும் தாங்கிய தோள்கள் அவள் குலை நடுங்கச் செய்கின்றன.

பின்னே... ஒரு பாலகன்... அஜயனையும் விஜயனையும் போன்ற வயதினன்... வருகிறான்.

பட்டாடை, முத்துச்சரங்கள் விளங்கும் மேலங்கி; செவிகளில் குண்டலங்கள். கற்றையான முடி பளபளத்துப் பிடரியில் புரள, முத்து மணிகள் தொங்கும் பாகை; அவளுக்கு மயிர்க்கூச்செறிகிறது.

இவன் யார்? ஊர்மியும் அப்போது கருவுற்றிருந்தாள். அவள் மகனோ? அந்தப் பாலகனை ஆரத்தழுவி மகிழும் கிளர்ச்சியில் முன் வருகிறாள்.

"மைந்தா! வாப்பா, நீ எந்த நாட்டைச் சேர்ந்த அரசிளங் குமரன்?" என்று வினவுகிறாள்.

நந்தமுனிக்கு கண்ணீர் வழிகிறது.

பையன் தயங்கி ஒதுங்கி நிற்கிறான்.

"இவளும் உன் அன்னையைப் போல்... வனதேவி அன்னை!... வனதேவி, குதிரையைத் தேடி வந்திருக்கிறார்கள்..."

"அப்படியா? அது இங்கே தான் முற்றத்தில் வந்து நிற்கிறது. உங்கள் குதிரையா? இந்த வில் அம்பெல்லாம் எதற்கு? அது சாதுவாக நிற்கிறது. யாரும் கட்டிப் போடவில்லை. அழைத்துச் செல்லுங்கள்!"

வானவனுக்கு நன்றி செலுத்துபவளாக அரசகுமாரனை அவள் முற்றத்துக்கு அழைத்து வருகிறாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 23

"கண்ணம்மா!..." என்று குடிலுக்குள் இருந்து நைந்த குரல் வருகிறது. நைந்திருந்தாலும், அதில் ஒரு தீர்மானம் ஒலிப்பதைப் பூமகள் உணருகிறாள். உடனே உள்ளே செல்கிறாள்.

"யாரம்மா?..."

"அ... அவர்கள்... குதிரைக்கு உரியவர்கள்!"

"யார், உன் நாயகனா? அவன் தம்பியா?"

"இருவரும் இல்லை. ஒரு பிள்ளை. நம் அஜயன் விஜயன் போல் ஒரு பிள்ளை..."

"படை வந்திருக்குமே?"

அவள் வாளாவிருக்கிறாள்.

"ஏனம்மா மவுனம் சாதிக்கிறாய்! வந்திருப்பவன் பட்டத்து இளவரசனா? உன் பிள்ளைகளின் உடம்பிலும் க்ஷத்திரிய ரத்தம் தான் ஓடுகிறது. நினைவில் வைத்துக் கொள்!"

"நான் என்ன செய்யட்டும் தாயே? அந்தப் பிள்ளை வில் அம்பு சுமக்கவில்லை. காவலர் மட்டும் இருவர் வந்திருக்கிறார்கள்."

"நீ தலையிடாதே. எப்படியேனும் குதிரையைக் கொண்டு செல்வார்கள். ஒன்றுமே நடவாதது போல் இரு!"

"எப்படி?" என்று பூமகள் சிந்திக்கிறாள். வந்திருப்பவன் ஊர்மிளையின் மகன். அவள் சாயல், அப்படியே இருக்கிறது... ஊர்மி... கவடில்லாமல் இருப்பவள். அவள் பிள்ளை, அவன் வில்லும் அம்பும் இல்லாமல் தான் வந்திருக்கிறான். அவனைக் கூப்பிட்டு உட்கார வைத்து, நம் பிள்ளைகளுடன் ஒரு வாய் கூழோ, எதுவோ கொடுக்காமல் பாரா முகமாக இருக்கலாமா?

"கண்ணம்மா? நீ என்ன நினைக்கிறாய் என்று புரிகிறது. நீ இவர்களை உறவு கண்டு புதுப்பிக்கப் போகிறாயா? அவர்கள் தந்திரமாக உன் பிள்ளைகளை வெல்ல வந்திருக்கிறார்கள். கோத்திரம் தெரியாத பெண்ணின் வயிற்றுப் பிள்ளை பட்டத்து இளவரசனாக முடியாது..."

இந்த முதியவள் எதற்காக இன்னமும் இருக்கிறாளோ என்று கூட பூமகளுக்கு இப்போது தோன்றுகிறது.

"குதிரையை நாங்கள் கட்டிப் போடவில்லை. நீங்கள் அழைத்துச் செல்லலாம்" என்று நந்தமுனி கூறுகிறார்.

காவலர்களில் ஒருவன் குதிரையின் அருகில் சென்று அதன் பின்புறம் தட்ட முற்படுகிறான். மின்னல் வெட்டினாற் போல் இருக்கிறது. அடுத்த கணம் அவன் எங்கோ மரத்தில் சென்று மோதிச் சுருண்டு விழுகிறான். குதிரை ஓர் எழும்பு எழும்பிக் காற்றாய்ப் பறந்து தாவரப் பசுமைகளுக்கு அப்பால் செல்வதும் தெரிகிறது.

பூமகள் கண் கொட்டாமல் நிற்கையில் பிள்ளைகள் எல்லோரும் ஹோவென்று கைகொட்டிச் சிரிக்கின்றனர். அரசகுமாரனுக்கு முகம் கறுத்துச் சிறுக்கிறது. நந்தமுனிதான் அமைதியாக, "குதிரை சென்று விட்டது அரசகுமாரா, கூட்டிச் செல்லுங்கள்!" என்று கூறுகிறார். நீலனும் சாம்பனும் குதிரை உதைவிட்டதைப் போல் செய்து காட்டிச் சிரித்து மகிழ்கின்றனர். அரசகுமாரன், அந்தக் காவலனுடன் திரும்பிச் செல்கிறான்.

பூமகள் பெருமூச்செறிகிறாள்.

"பிள்ளைகளே, விளையாடியது போது! காலைக் கடன்களை முடியுங்கள்" என்று அவர்களைத் தூண்டி விட்ட பின் அவள் தன் பணிகளில் ஈடுபடுகிறாள். வழக்கம் போல் நீராடி, அகழ்ந்தெடுத்த கிழங்குகளைப் பக்குவம் செய்ய, அக்கினியை எழுந்தருளச் செய்ய முனைகிறாள். பிள்ளைகளும் அவளுடன் சேர்ந்து கொள்கிறார்கள். சுற்றியுள்ள மண்ணனைக்குள் தீக்குண்டம். பானை நீர், கிழங்கு, இந்த அக்கினி உயிர்களை வதைக்காது, வாழ வைக்கும்.

"சத்தியத்தின் நித்தியமாக ஒளிர்பவரே! ஒரு குழந்தை தந்தையை அணுகும் எளிமையுடன் அணுகுகிறோம். எங்களுக்கு நயந்து, எந்நாளும் அருள் பாலிப்பீராக! உங்கள் மக்கள் யாம்! எங்களை வாழ வைப்பீர்!"

குண்டத்தில் தீக்கங்குகள் மாணிக்கமாய் மின்னுகின்றன. பானையில் நீர் கொதித்துக் கிழங்குகள் வேகும் போது ஓர் இனிய மனம் கமழ்கிறது.

"இந்த வேள்வி பயனுடையதாகட்டும்!

இந்த வேள்வி அழிவில் இருந்து உயிர்களைக் காக்கட்டும்!

இந்த வேள்வி தீய எண்ணங்களைப் பொசுக்கட்டும்!"

மனசுக்கு இதமாக இருக்கிறது. ஒன்றும் நேரவில்லை. குதிரை தானாக வந்தது; தானாகவே அது இந்த எல்லையை விட்டுப் போய்விட்டது. பிள்ளைகள் காலைப் பசியாறி வழக்கம் போல் நந்தமுனிவருடன் செல்கிறார்கள். பூமகளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதியவளை அழைத்துச் சென்று நீராட்டுகிறாள்.

"பெரியம்மா, அந்த அரசகுமாரனின் பெயர் கூடக் கேட்கவில்லை. ஆனால் அவன் ஊர்மிளையின் மகன் என்பதில் ஐயமேயில்லை. அந்தக் காதோரச் செம்மை, மோவாய், அகன்ற துருதுருத்த விழிகள் எல்லாம் அப்படியே இருக்கின்றன..."

"நீ வந்தவருக்கு விருந்து படைக்க நினைக்கிறாய், என் கண்ணம்மா! உனக்கு எத்தகைய மனசு! அதை அந்த வாயில்லாக் குதிரை கூடப் புரிந்து கொண்டிருக்கிறது! முற்றத்தில் நின்று உன்னை வணங்கிவிட்டு, அது... ஓடிவிட்டது..."

"வெறுமே ஓடவில்லை. காவலனை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு ஓடிற்று..."

"அப்படியா? அட அறிவிலிகளா! இது வனதேவி வாசம் செய்யும் மங்கள பூமி. இங்கே உங்கள் கரிச்சுவடுகளைப் பதிக்காதீர்கள் என்று உதைத்துத் தள்ளிவிட்டுப் போயிருக்கும்...!"

சிறுவர்கள் அன்றிரவு, குடிலுக்குத் திரும்பவில்லை.

அடுத்த நாளும் திரும்பவில்லை. அவர்கள் அப்படி இருப்பது சாதாரண வழக்கம் தான். யாவாலி ஆசிரமத்தில் தங்கி விடுவார்கள். இந்த வனத்தில் அவர்கள் எங்கு திரிந்தாலும் அச்சமில்லை. ஆனால், இப்போது ஒரு 'முட்டு' தடுக்கிறது. வேடுவர் குடியிருப்பின் பக்கம் கூட்டமாக இருக்கிறது.

"என்னம்மா?..."

"மாயன்... மாயன்" என்று எதையோ சொல்ல முன் வந்து விழுங்குகிறாள் புல்லி.

"மாயனுக்கென்ன?"

மாயன் கேலனுக்கும் மரிசிக்கும் பிறந்த மகன். அவனுக்கு ஒழுங்காகப் பேச்சு வராது. ஆனால் மிகவும் வலிமையுள்ள, முரட்டுத்தனமான பையன். இவர்களுடன் சேர்ந்து இருக்க மாட்டான். பச்சை நிணம் உண்பான் என்று அவர்களுக்குள்ளே மறைவாகப் பேசிக் கொண்டது இவள் செவிகளில் விழுந்திருக்கிறது. நந்தமுனி அவனுக்குப் பேச்சுச் சொல்லிக் கொடுக்க வேதவதி ஆற்றுக்கரைக்கு அழைத்துச் சென்று முயற்சி செய்கிறார் என்று சொல்வார்கள். அவன் பக்கம் ஒரு சிறு குழந்தையைத் தனியே கூட விட்டு வைத்திருக்க மாட்டார்களாம். அவன்.. அவனுக்கு என்ன?...

"ஒண்ணுமில்ல வனதேவி..." என்று மென்று விழுங்குவதை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது...

"யாரையேனும் அடிச்சிட்டானா?"

"அதெல்லாம் அவன் ஒண்ணும் செய்யிறதில்ல. இப்பல்லாம் நந்தசாமி சொல்லி, சொல்லி, வூட்டுல வச்சதுதான் தின்னுறான்..."

"பின் இந்தக் கலவரம் எதுக்கு?"

"பய நச்சுக்கொட்டை எடுத்து அம்புக்குப் பூசித் தயார் பண்ணுறான். அதால் குறி தவறாமல் அடிக்கிறான். ராசா படையைக் கொன்னு இழுத்திட்டு வருவேன்னு நிற்கிறான்."

அவள் திகைத்து நிற்கிறாள்.

"ராசா படைதான் இல்லையே? குதிரை போய் விட்டதே?..."

"எங்கே போயிருக்குது? அது, புல்லாந்தரையில் மேயுது. அந்த ராசா புள்ள, படை எல்லாம் அங்குதா கூடாரம் போட்டிருக்காங்க, ஆத்துக்கு அந்தக்கரையில். குதிரை என்ன முடுக்கியும் நகராம நிக்கிதாம். இல்லாட்டி உதைத்துத் தள்ளுதாம்!" என்று சோமா விவரிக்கிறாள்.

"தெய்வமே!" என்று பூமகள் கலக்கத்துடன் வானைப் பார்க்கிறாள்.

"நம் பிள்ளைகள் யாரும் அதனால் தான் இங்கே வர வில்லையா?"

"எப்படி வருவார்கள் தேவி! இவர்கள் பின்னே தான் அந்தக் குதிரை வருதாமே? நந்தசாமி கூட இருக்காங்க. அதனால் நமக்கு எதுவும் வராது. இப்ப இந்த மாயன் 'நச்சுக் கொட்டை அம்பு போட்டுத் துரத்துவேன். இல்லாது போனால் இவர்கள் இங்கே புகுந்து நம்மை அழிப்பார்கள்' என்று ஒரே குறியில் இருக்கிறான். பாட்டா, அடிக்கக் கூட அடிச்சிட்டார். ஏலேய், உன்னுடைய பெண்டாட்டி, ரெண்டு பிள்ளைங்க சுகமா இருக்க வாணாமா? ரெட்டையாப் பொண்ணு பிறந்திருக்குங்க... இப்பவே அது முகம் பார்த்துப் பேசுதுங்க, இவ மரக்கட்ட போல் கிடந்தான்... நல்லவளவா, அழகா இருக்கு. நீங்க வந்து புத்தி சொல்லுங்க வனதேவி!" என்று அவள் பூமகளை அழைக்கிறாள்.

அவன் குடிலின் முன் ஓர் அழகிய மரம், வட்டமாகக் கிளை பரப்பி இருக்கிறது. மஞ்சள் மஞ்சளாகப் பூக்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்து, அழகாக இருக்கிறது. சுத்தமாகப் பெருக்கிய மண் தரையில், கலயத்தில் நஞ்சு வைத்துக் கொண்டு, மாயன் கூரிய அம்பை இன்னமும் கூரியதாக்கிக் கொண்டிருக்கிறான்.

"வனதேவி... வனதேவி வாராங்க... டேய், எந்திருந்து கும்பிடு! கால் தொட்டுக் கும்பிடு! அந்த மிதி மண்ணை எடுத்து வச்சுக்க!" என்று அவனுடைய அன்னை நெட்டித் தள்ளுகிறாள். ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. கூரிய அம்பு முனையை இன்னும் கூர்மையாக்குவதிலேயே முனைந்திருக்கிறான்...

"உள்ளே வாங்க வனதேவி! வாங்க..." என்று பெண்கள் அவளை ஒரு குடிலுக்குள் அழைத்துச் செல்கிறார்கள். மாட்டுக் கொம்பில் சீப்பு அராவிக் கொண்டிருந்த ஒரு வேடன், நிமிர்ந்து அவளுக்கு வணக்கம் சொல்கிறான். அந்தச் சீப்பு மிக அழகாக இருக்கிறது. மேலே கைப்பிடி ஒரு பூங்கொடிபோல் நேர்த்தியாக அமைக்கப்பட்ட சீப்பு.

'ஓ, கைத்திறமை இங்கே எப்படி மலர்ந்திருக்கிறது!...'

அவள் வியந்து நிற்கையிலே அவளைப் பாயில் உட்காரச் செய்கிறார்கள் அந்தப் பெண்கள். கைவசமுள்ள புளிப்பிலந்தைக் கனிகளைக் கொண்டு வந்து உபசரிக்கிறார்கள். பிறகு, அந்தப் பெண் இரட்டைக் குழந்தைகளை அவள் மடியில் கொண்டு வந்து வைக்கிறார்கள். மடி கொள்ளவில்லை, ஒரு குழந்தைக்கே. குழந்தை அவளைப் பார்த்துச் சிரிக்கிறது. உள்ளமெல்லாம் பாலில் குளிர்ந்தாற் போல் மகிழ்கிறாள். இனிப்புப் பகுதிப் பழத்தைக் கையில் தொட்டு அதன் வாயில் வைக்கிறாள். இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன.

"வனதேவி, உங்களுக்கு இரண்டு பிள்ளைகள்... இவை இரண்டும் பெண்கள்..." என்று முகத்தில் மகிழ்ச்சி பொங்கச் சிரிக்கிறாள். வந்த வேலையே நினைக்கவில்லை. குதிரை இங்கே இருக்கிறது; மாயன் நச்சம்பு தயாரிக்கிறான். யார் சொல்லுக்கும் அவன் வளையவில்லை. இவள் மகிழ்ச்சிப் பாலைக் கருநிலா வந்து மூடிவிட்டது.

இந்த மக்கள் எளியர் தாம். ஆனால் இறுகினால் அசைக்க இயலாத இயல்புடையவர்கள். இனம் புரியாத அச்சம் அவளைப் பிள்ளைகளைத் தேடிச் செல்லச் செய்கிறது. ஆற்றுக்கரைப் புற்றரையில் தான் இருப்பதாக அவள் தெரிவித்ததை இலக்காக்கிக் கொண்டு செல்கிறாள். வானவன் சுள்ளென்று சுடுவதாகத் தோன்றுகிறது. புற்றரையில் எல்லோரும் உட்கார்ந்திருக்கிறார்கள். அரசகுமாரனுக்கு ஒரு பாதுகாவலன் குடை பிடிக்கிறான். குஞ்சம் தொங்கும் பட்டுக்குடை. அவள் புதல்வர்களுக்கும் அந்த மரியாதை உரியதே!...

பொங்கும் இதயத்துடன் அவள் அருகே செல்கிறாள். அரண்கட்டினாற் போல், தாழைப் புதர்கள் இருக்குமிடத்தில் அவள் நிற்கிறாள். அங்கிருந்து நான்கு முழத் தொலைவில் அரசகுமாரன் இருக்கிறான். அங்கிருந்து பார்க்கையில், எட்ட, குதிரை வெள்ளையாக நிற்பது தெரிகிறது. காவலர்கள் ஏழெட்டுப் பேர் இருக்கின்றனர். ஒருவன் மூட்டு முறிவில், பச்சிலை போட்டுக் கொண்டு குந்தி இருக்கிறான்.

அப்போது, பல வண்ணங்களுடைய கொண்டையுடன் வால் நீண்ட காட்டுச் சேவல் ஒன்று கண்கவரும் வகையில் பறந்து, ஓரத்தில் உள்ள மரத்தில் அமருகிறது.

"இந்த வனம் மிக அழகாக இருக்கிறது..." என்று அரசகுமாரன் கூறுகிறான்.

"உங்கள் அரண்மனைத் தோட்டத்தை விடவா?"

"... அரண்மனைத் தோட்டம் அழகுதான். அங்கு இப்படிச் சேவல், அழகாகப் பறந்து செல்லாது. கூட்டமாக மான்கள் போவதைப் பார்க்க முடியாது."

அஜயன் புருவங்களைச் சுருக்கிக் கொண்டு பார்க்கிறான்.

"ஏன்? தோட்டத்துக்கப்பால் வனங்கள் இருந்தால் மான்கள் வரும் இல்லையா? இங்கே எல்லா விலங்குகளும் வரும்..."

"நீங்கள் வேட்டையாட மாட்டீர்களா?..."

"வீணாக எதற்கு வேட்டையாட வேண்டும்? மான்கள், பறவைகள் எல்லாமே அழகு... ஆனால் எப்போதேனும் வலை வைத்து, பன்றி அல்லது எருமை பிடிப்பார்கள். நாங்கள் வில் அம்பு வைத்து அடிக்க மாட்டோம்..."

"ஏன்? நீங்கள் வில் வித்தை பயிலவில்லையா? உங்கள் குரு என்று சொல்கிறீர்கள். நீங்கள் க்ஷத்திரியர் போலும் இருக்கிறீர்கள்; அந்தணர் போலும் பேசுகிறீர்கள். விசுவாமித்திரர் க்ஷத்திரியர்; அவர் ராஜருஷியானார். காயத்ரி மந்திரமே அவர் அருளிச் செய்தது. எங்கள் குல குரு உயர் குலம்..."

"அதனால் மான்களை வேட்டையாடச் சொல்லிக் கொடுப்பார்களா?" என்று அஜயன் கேட்கிறான்; விஜயன் சிரிக்கிறான். வேடப்பிள்ளைகள் எல்லோரும் சிரிக்கிறார்கள்.

காவலர்களில் ஒருவன் எழுந்து தரையைத் தட்டி உரக்கக் கத்துகிறான்.

"துட்ட வேடப்பிள்ளைகளே! எங்கள் அரசகுமாரன் சந்திர கேதுவையும், அரசகுலத்தையும் பழிப்பதே உங்கள் நோக்கமாக இருக்கிறது! நீங்கள் ஏழுலகும் புகழும் அயோத்தி மாமன்னரின் வழித்தோன்றலுடன் பேசுவதாக நினைவிருக்கட்டும். இப்போது எங்கள் யாகக் குதிரை இங்கே தடம் பதித்ததால், இந்த இடம் எங்கள் மாமன்னருக்கு உரியதாகிறது..." என்று கையில் உள்ள தண்டத்தினால் மீண்டும் தட்டுகிறான்.

குதிரையின் அருகில் நின்றிருந்த நந்தமுனி, யாழை மீட்டியவாறு வெளிப்பட்டு வருகிறார்.

"குதிரை தடம் பதித்தால் உங்களுக்குச் சொந்தமோ? அது என்ன சாத்திரம் ஐயா? நீங்கள் இங்கே வரும் முன்பே நாங்கள் தடம் பதித்து விட்டோம்! உங்கள் குதிரையின் குளம்படிகளை விட எங்கள் தடம் சிறந்தது. இந்த வனதேவியின் மைந்தர்கள் நாம்!..."

நந்தமுனி புன்னகை செய்கிறார்.

"அதெப்படி? நீங்கள் க்ஷத்திரிய குலமல்ல; அந்தணரும் அல்ல; முப்புரி நூல் இல்லை; வில் வித்தை பயிலவில்லை... பூமி சொந்தமோ?" சிரிப்பு ஏளனமாக ஒலிக்கிறது.

"ஏ, மூட அரசகுமாரா? யார் வில் வித்தை பயிலாதவர்கள்! எங்கள் குரு எங்களுக்குச் சகல வித்தைகளையும் கற்பித்துள்ளார். ஆனால் அந்த வித்தையை உயிர்க் கொல்லியாகப் பயன்படுத்த மாட்டோம்! நீங்கள் விளையாட்டுக்கு வேட்டையாடுவீர்கள்; கொல்வீர்கள்..."

விவாதம் கூர்மையாக முற்றுகிறது. ஆனால் இதில் நன்மை விளையும் என்று தோன்றவில்லை. கனி இனிமை; அதன் சதையில் முள் இருப்பதை நீக்கியாக வேண்டும்?

"க்ஷத்திரிய தர்மம் கொல்வதை அநுமதிக்கிறது. எங்கள் மாமன்னர், யாரும் இது நாள் கண்டிராத அளவில் பெரும் வேள்வியைச் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் அவர் பெருமையை அறியாமல் குதிரையை, மடக்கி வைத்திருக்கிறீர்கள்! நாங்கள் உங்களையே கட்டித் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டி இருக்கும்!"

"ஆஹாஹா..." என்று விஜயன் சிரிக்கிறான்.

"நாங்கள் குதிரையைக் கட்டியா போட்டிருக்கிறோம்? அதுவாக வந்தது. நீங்கள் கை வைத்ததால் உதைத்துத் தள்ளுகிறது. அந்தக் குதிரையை விரட்டி ஏவி விட்டதும் நீங்கள். இப்போது நாங்கள் மடக்கி இருக்கிறோம் என்று பழி சுமத்துகிறீர்கள்! உங்கள் தருமம் மிக நன்றாக இருக்கிறதைய்யா?..." என்று அஜயன் கேட்கும் போது பூமகள் பூரித்துப் போகிறாள்.

"குதிரையை ஓட்டிச் செல்ல முடியாத நீங்கள், எங்களைத் தூக்கிச் செல்லப் போவதாக அச்சுறுத்துகிறீர்கள்! என்ன நியாயமய்யா? உங்களுக்கு முடிந்தால் குதிரையைத் தூக்கிச் செல்லுங்கள்! அதை விடுத்து வீணாக நீங்கள் வேறு வழிகளில் இறங்கினால் நாங்கள் கையைக் கட்டிக் கொண்டிருக்க மாட்டோம்!..."

பூமகள் மறைவிடத்தில் இருந்து வருகிறாள்.

"வேண்டாம் குழந்தைகளே, நாம் நம்மிடம் செல்வோம், எழுந்திருங்கள். அவர்கள் குதிரையைப் பற்றிக் கொண்டு செல்லட்டும்!"

அவள் தன் மைந்தர்களையும் வேடப் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு நடக்கிறாள். நந்தமுனி பாடுகிறார்; மாதுலன் குழலிசைக்கிறான். இரவு தீப ஒளியில், மகிழ்வுடன் உணவுண்டு, ஆடிப்பாடிக் களைத்து எல்லோரும் உறங்குகின்றனர். பூமகளும் துன்ப நினைவுகளைத் துடைத்து விட்டு உறங்குகிறாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 24

அதிகாலையில் புள்ளினங்களின் ஓசை கேட்டதும், அவள் குடத்தை எடுத்துக் கொண்டு தடாகக் கரைக்கு வருகிறாள்.

அங்கே, அவள் காண்பது மெய்யா?...

கண்களைத் துடைத்துக் கொண்டு பார்க்கிறாள். குதிரை.

'நான் தான் வனதேவி' என்று சொல்வது போல் அது கனைக்கிறது.

ஒரு பக்கம் மகிழ்ச்சி; ஒரு புறம் அச்சம்; அதோடு இணையும் கவலை... அவள் இதைத் தெரிவிக்கவில்லை என்றாலும் பிள்ளைகள் காணாமல் இருப்பார்களா?

மகிழ்ச்சி ஆரவாரம்; ஆட்டபாட்டங்களுடன் குதிரை வனத்தை வலம் வருகிறது.

"இந்தக் குதிரைக்கு க்ஷத்திரிய தருமம் பிடிக்கவில்லை..."

"பிள்ளைகளா, பேசாமல் ஆற்றுக்கரையில் இறக்கி விடுங்கள். இப்போது நீர் வற்றிச் சுருங்கிய இடத்தில் இறக்கி விட்டால் தாண்டி அக்கரை போய் விடும். நமக்கு எதற்கு வீணான வேதனைகள்!"

நந்தமுனியினால் எந்த ஒரு தீர்வையும் கொண்டு வர இயலவில்லை.

அன்று பகல், வனமே கலகலத்துப் போனாற் போல் பறவைக் கூட்டங்கள் கல்லடியோ வில்லடியோ பட்டாற் போல் விழுகின்றன. அமைதியாகக் கிடந்த நாகங்கள் அமைதி குலைந்தாற் போல் வெளியே நடமாடுகின்றன.

பூமகள் கனவு கண்டாளே, அது மெய்ப்பட்டு விட்டாற் போல் நடுங்குகிறாள். பிள்ளைகளைத் தேடியவாறு செல்கையில், பச்சைக்கிளி ஒன்று அவள் காலடியில் வீழ்கிறது. நெருப்பில் துவண்டாற் போல் விழுந்த அதை அவள் கையில் எடுத்துத் தடவுகிறாள். நெஞ்சம் பதைபதைக்க அவள் "அஜ்யா, விஜயா, நீலா!... புல்லி..." என்று கூவுகிறாள். இது வேனில் காலம். எங்கேனும் காட்டுத் தீயா? காட்டுத் தீ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால் கண்டதில்லை. குடில்களனைத்தும் காய்ந்த புல்லினால் வேயப்பட்டவை. மரங்கள் எதுவும் மொட்டையாக இல்லை. பட்டிலவுகூடத் துளிர் விட்டிருக்கிறது. அது காய் வெடித்துப் பட்டிழைகளைப் பறக்க விடும்போது சிறுமியர் அதைச் சேகரித்து வருவார்கள். இப்போது அந்த மரத்தினும் செந்துளிர்... அவள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே புறாக்கள், மைனாக்கள், காகங்கள் வீழ்கின்றன.

எங்கோ சிங்கம் உறுமுவது போல் ஒரு பேரோசை கேட்கிறது.

அப்போது அங்கே மாயன் எதிர்ப்படுகிறான்.

"மாயா? நீயா நச்சம்பு விட்டாய்?"

அவன் கையில் வில்லும் கூரம்பும் இருக்கின்றன.

"இனிமேல் தான் விடவேண்டும். என்ன செய்திருக்கிறார்கள் பார்த்தீரா வனதேவி? 'மந்திர அஸ்திரம்' என்று விட்டிருக்கிறார்கள். பேய் பிசாசுகள், பறவைகளைச் சாக அடிக்கின்றன. பசுக்கள் மூர்ச்சித்து விழுந்திருக்கின்றன..."

அவன் பேசுவது சாடையாகவே இருக்கிறது.

"நீ நச்சம்பா வைத்திருக்கிறாய்?"

"ஆமாம்..."

"வேண்டாம். நம்மவருக்கு அதனால் ஆபத்து வரும்..."

"வராது. அவர்களெல்லாரும், அருவிக்கரை தடாகத்தில் பத்திரமாக இருக்கிறார்கள். நான் ஒரே ஒரு அம்பு போட்டு இவர்களுக்கு நம்மை யாரென்று காட்டுவேன். வனதேவி! இதோ பாரும் பட்சி துடிதுடித்து விழுவதை?..."

கொத்தாகத் தேன் சிட்டுகள் புற்றரையில் விழுந்திருக்கின்றன.

"குதிரையை விரட்டி விடவில்லையா?"

"அது போக மறுக்கிறது... வனதேவி, அதை அறுத்து யாகம் செய்வார்களாம். அதற்கு அது தெரிந்துதான் போக மறுக்கிறது. இந்த உயிர்களுக்கெல்லாம், நம்மை விட முன்னுணர்வு..."

"சரி, நீ இப்போது யாரைக் கொல்லப் போகிறாய்?"

"யாரை என்று குறி இல்லை. ஆறு கடந்து அவர்கள் கூடாரத்துக்கு முன் நின்று கூப்பிடுவேன். 'கோழை போல் பசு பட்சிகளைச் சாக அடிக்கும் 'மந்திர அம்பு' விட்டிருக்கிறாயே, என் எதிரே வா' என்று கூப்பிடுவேன்..."

"வேண்டாம், மாயா, நான் சொல்வதைக் கேள்! சத்திய குரு வந்து விடுவார். அவர் வந்ததும் அவர் சொல் கேட்டு நடப்போம்!"

"அதற்குள் நம் வனம் அழியும். வனதேவி, என்னைத் தடுக்காதீர்கள்!"

அவன் விரைந்து போகிறான்.

பிள்ளைகளை அவள் தடுத்தும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. நந்தமுனியோ, தனியிடத்தில் அமர்ந்து, ஒற்றை நாணை மீட்டிய மவுனத்துள் மூழ்குகிறார்.

பூமகள் முதியவளிடம் வந்து அரற்றுகிறாள்.

"அம்மா, மந்திர அஸ்திரம் பட்சியை அழிக்குமோ?"

"எனக்கென்னம்மா தெரியும்? நீதான் க்ஷத்திரிய நாயகனுடன் வாழ்ந்தவள். பெரிய பெரிய போர்களை, வதங்களை, 'அஸ்திர' சாகசங்களைக் கண்டிருக்கிறாய்!"

அவளுக்கு நினைவுக்கு வருகிறது. ஓர் அரக்கன், ஓடிச் சென்று கடலில் வீழ்ந்து வீழ்ந்து எழுந்தானாம். அப்படி அத்திரம் துரத்திச் சென்றதாம்... அது, தீயாய், வெப்பம் உமிழுமோ?...

மனம் பதைப்பதைக்கிறது. இந்தக் கவடறியாப் பிள்ளைகளின் மேனி கருகும் வெப்பத்தை உமிழும் அத்திர வித்தைகளை அவிழ்த்து விடுவார்களோ, தெய்வமே! வானத்தில் இருந்து ஆட்சி செய்யும் மாசக்தியே! நீ கொடுப்பது தானே வெப்பக்கதிர்? அது இவ்வாறு மனித நேயமற்ற செயல்களுக்கு உதவலாமோ? மந்திரமாக இருந்தால் அது பயன்படாதவாறு நீயே தடுப்பாய்? ஒரு மழையைப் பொழிவிப்பாய். குளிர் காற்றோடு எங்கள் உள்ளங்களைக் குளிரச் செய்வாய்..." என்று பலவாறு வேண்டி நிற்கிறாள். அன்று முழுவதும் அவள் தீயை உயிர்ப்பிக்கவில்லை. பிள்ளைகளுக்காக உணவு சேகரித்துப் பக்குவம் செய்யவில்லை.

வானில் கருமேகங்கள் கவிந்தாற் போல் ஒளி மங்குகிறது. ஒரே இறுக்கம். ஓர் இலை அசையவில்லை. ஓர் உயிரின் சலசலப்பும் தெரியவில்லை. நந்தமுனியைத் தேடி அவள் செல்கிறாள். அவர் மரத்தடியில் வீற்றிருந்த கோலத்தில் காணப்படவில்லை.

நீண்ட மவுனம்... நீண்ட நீண்ட நிழல்கள் தென்படவில்லை. கிழட்டுக் கத்யாயனியப் பசுவும், பெரியன்னையும் மூச்சுப் பேச்சின்றி முடங்கி இருக்கிறார்கள். அந்த அரக்கர் கோனுடனான போரின் போது கூட அவள் மனமழியவில்லையே? இப்போது... இது போரும் இல்லை... அமைதியும் இல்லை. போர்க்களத்துக்குப் பெண்கள் சென்றதாக அவள் அறிந்திருக்கவில்லை.

எனினும், உயிரின் ஒரு பகுதியாகவே உள்ள பிள்ளைகள் அவளிடம் இருந்து பறிக்கப் படுவார்களோ? இரவும் பகலுமாக ஒரு நாள் செல்கிறது. இருப்புக் கொள்ளவில்லை.

பூமகள் ஓடுகிறாள் வாழைவனம் தாண்டி, கருப்பஞ் சோலைகள் சின்னாபின்னமாக்கப்பட்ட பகுதிகள் கடந்து, பெரிய ஆலமரம்... அங்கே என்ன நடக்கிறது? அவள் காலடியில், அந்தி மங்கும் அந்த நேரத்தில் யாரோ விழுந்து கிடப்பது புலனாகிறது. நா அண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறது. ஒரு காவலன் வீழ்ந்திருக்கிறான். எங்கு பார்த்தாலும் மரக்கிளைகள் முட்செடிகள் ஒடிந்து கிடக்கின்றன.

மங்கி வரும் பொழுதில் இனம் புரியாத ஒரு வேடப்பிள்ளை விரைந்து வருகிறான். அவள் கையைப் பற்றி இழுத்துச் செல்கிறான். "வனதேவி, அங்கே சண்டை நடக்கிறது. அவர்கள் அம்பு போட்டு நம் மாடுகளைக் கொன்று விட்டார்கள். நீலனும் மாலியும் மரங்களை ஒடித்து அவர்களை அடித்தார்கள். குருசுவாமி சொல்லாமல் வில் அம்பைத் தொடக்கூடாதல்லவா? இப்ப மாயன் அம்பு விட்டு எல்லோரையும் ஆற்றுக்கு அக்கரையில் துரத்தி விட்டான்... ஆற்றில் காவலர் ஒருவர் விழுந்து போய்விட்டார்..."

"அஜயன் விஜயன் எங்கே? நந்தசுவாமி போரிடச் சொன்னாரா?"

"நந்தசுவாமி படகில் அக்கரை செல்கிறார். அஜயனும் விஜயனும் அவருடன் செல்கின்றனர். அங்கே போய் நியாயம் பேசப் போகிறார்கள். வனதேவி, நம் பசுக்கள், கன்றுகள், காளைகள் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து அந்தக் காவலர்கள் கொல்கையில் நம்மால் கைகட்டிக் கொண்டு இருக்க முடியுமா?... அங்கே வந்து பாருங்கள்!"

அவன் அவளை அழைத்துச் செல்கிறான். மேய்ச்சல் இடம்... மங்கி வரும் இருளில், ஏதோ கனவுக் காட்சி போல் மாடுகள், உயிர் கொடுக்கும், உணவு கொடுக்கும், உழைப்பாளி மாடுகள் மலை மலையாகச் சாய்ந்து கிடக்க, காகங்கள் அவற்றின் மீது குந்திப் பறந்து சோகமாகக் கரையும் காட்சியைக் காண்கிறாள். 'உம்மீது குந்தி இருந்து விருந்தாடுவோமே, உங்கள் உடல்களில் சிலிர்ப்போடும் போது எங்களுக்கும் அது ஓர் அநுபவமாக இருக்குமே. இப்போது உயிரோட்டம் இல்லாமல் விழுந்து விட்டீர்களே' என்று அவை கரைவதாகத் தோன்றுகிறது. கண்ணீர் குருதி போல் பொங்குகிறது. குடிலுக்குத் திரும்பி வந்தவளின் விம்மல் ஒலி முதியவளை உலுக்குகிறது.

புல்லி வந்து ஒளித்திரி ஏற்றி வைக்கிறாள்.

"கண்ணம்மா, குழந்தாய்..." என்று அழைக்கும் குரல் நடுங்குகிறது.

"இந்நேரம் உன் பிள்ளைகள் யாரென்று அவர்களுக்குத் தெரிந்திருக்கும். இவர்கள் பக்கம் குதிரை அவர்கள் விரட்டாமல் வந்ததும் நன்மைக்கே... இப்போது, உன் நாயகனோ, மைத்துனர்களோ வரக்கூடும். பிள்ளைகள் அவர்களுடன் ஒளிரட்டும்!" பூமகள் இறுகிப் போகிறாள்.

அந்த அழுத்தத்தினிடையே இருந்து சன்னமான நாண் எழுப்பினாற் போன்று உறுதியான குரல் ஒன்று ஒலிக்கிறது.

"தாயே, பெற்றவர் கை கழுவினர்; வளர்த்தவர் கை கழுவினார்; கணவர் கை கழுவினார். இப்போது, என் உதரத்தில் ஊறிய இவர்களை நான் அனுப்புவேனா? மாட்டேன், அவர்கள் என் உயிரின் உயிர்!"

மூதாட்டி வாஞ்சையுடன் அவள் முகத்தை இதமாகத் தடவுகிறாள்.

"உனக்கு உன் நாயகர், குழந்தைகளுடன் சேர வேண்டும் என்ற தாபம் இல்லையா?"

அவள் சிறிது நேரம் பேசவில்லை.

"அந்தத் தாபம் குளிர்ந்து சாம்பற் குவியலாகி நெடு நாட்களாகி விட்டன தாயே!"

ஊனுறக்கமின்றி அன்றிரவு பொழுது ஊர்ந்து செல்கிறது. அதிகாலைப் பொழுதில் யாரோ சங்கு ஊதுகிறார்கள். அது வெற்றி முழக்கச் சங்காக இல்லை. நரிகளின் ஊளையொலி போல் ஒலிக்கிறது. திடுக்கிட்டு அவள் வெளி வருமுன் பிள்ளைகளின் அரவம் கேட்கிறது. வேடுவப் பெண்களின் அலறலொலி உதயத்தின் கீழ்வானச் செம்மையை குருதிக் குளமாகக் காட்டுகிறது.

"என்ன அநியாயயம்மா! மாயன், நீலன், பூவன் எல்லோரும் மாண்டு மடிந்தார்கள். குரு ஏனம்மா, அம்பெடுக்க வேண்டாம் என்று சொன்னார்? அவர்கள் நம் விளை நிலங்களை அழித்தார்கள்..."

அவள் தன் இரு மைந்தர்களையும் தழுவிக் கொள்கிறாள். அப்போது அங்கே, அந்த யாகக் குதிரை, பட்டப் போர்வை கிழிக்கப்பட்டு, பொன்மாலை அகற்றப்பட்டு மங்கலமிழந்த நிலையில் வந்து கனைக்கிறது.

"ஏ குதிரையே! நீ வந்த வழியே திரும்பிச் செல்! எங்கள் அமைதியில் இப்படிப் புகுந்து கொலைக் களமாக்கினாயே! போய்விடு!" அவள் அதன் பின் பக்கத்தைப் பிடித்துத் தள்ளி விடுகிறாள்.

"அம்மா, மாயன், நூறு நூறாக அவர்கள் படையைக் கொன்று குவித்து விட்டான். நாங்கள் குரு சொல்லை மீறவில்லை. மரக்கொம்புகளையும் கற்களையுமே எறிந்து தற்காத்துக் கொண்டோம்..."

"நந்தசுவாமி எங்கே?..."

"அவர் ஆற்றங்கரையில் நின்று சந்திரகேதுவைப் பின் வாங்கச் சொன்னார். நம் முனிவர் தூது சென்றுள்ளார். வரும் வரையிலும் அவர்கள் வன்முறையில் ஈடுபடலாகாது என்று சொல்லிக் கொண்டிருந்த போது தான் மாயனின் நச்சம்பு, படையினரின் மீது பாய்ந்து கொன்றது. சந்திரகேது கூட மூர்ச்சையாகி விட்டான் என்று நளன் கூறினான். நாங்கள் ஆற்றிலிருந்து இக்கரை வந்து, ஓடி வருகிறோம்..."

"நந்தமுனி எங்கே?..."

அவள் மனம் கட்டுக்கடங்காமல் நின்று கனைக்கிறது.

பிள்ளைகள் விரைகின்றனர்.

அடுத்த கணம், "அம்மா...!" என்ற ஒலி கானகம் முழுதும் எதிரொலிக்கிறது.

உதயத்தின் கதிர், நந்தமுனிவரின் நிச்சலன முகத்தில் வீழ்கிறது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 25
அவளால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இது போரா? இரவு நேரத்தில் நடந்த வன்முறையா? எப்போது பிள்ளைகள் ஆறு கடந்தார்கள்? எப்போது மாயன் அவன் கூட்டத்தாரின் மானம் காக்க நச்சம்பு விட்டான்? படைகள் திரும்பி அம்பெய்தி... கூட்டத்தில் யார் வேண்டுமானாலும், மாடு, கன்று, பறவை, மனிதர், மரம், மட்டை என்று அழிக்க முனைந்தார்களா?...

குனிந்து நந்தமுனையை அசைவற்று நோக்குகிறாள்.

"மகளே கலங்காதே..." என்று அவளுக்கு ஆறுதல் சொல்கிறாரா?... புன்னகை வாடாத சாந்தம் ததும்பும் முகம். முடி அதிகமில்லாத தாடி, ஒட்டிய தாடைகள், கண்கள்... எல்லா உலகமும் அமைதியுடன் வாழ வேண்டும் என்று பாட்டிசைத்த அந்த நா... எல்லாம் நிலைத்து விட்டன. வேதவதியே, நீ ஓடுகிறாயே, எனக்கு இது தகுமா? அஜயன் அவர் விலாவில் அம்புதைத்த இடம் பார்க்கிறான். யாரோ அந்த நாசகார அம்பைக் கொண்டு வருகிறார்கள். தர்புர்... ஒற்றை நாண், அது ஓய்ந்து விட்டது.

சம்பூகனை இழந்த போது சோகம் கரைபுரண்டு வர அரற்றினாள். இப்போது நாவே எழவில்லை.

இளமைப் பருவ நினைவுகள் படலங்களாக உயிர்க்கின்றன. அவர் மடியில் அமர்ந்து, மழலையில், "தாயே, தயாபரி..." என்று அவருடன் இணைந்து பாடியதும், அந்த ஒற்றை நாணைப் பிஞ்சு விரலால் மீட்டியதும் நினைவில் வருகிறது.

"என் தாய் யார் சுவாமி?"

"இந்த பூமிதான். நீ பூமகள், பூமிஜா, பூமா... எல்லாம் நீதான்!" என்று சிரிப்பார்.

"காட்டிலே எப்படி பயமில்லாமல் இருப்பீர்? பாம்பு, யானை, புலி, சிங்கம் எல்லாம் இருக்குமே?"

"அவையும் இந்த பூமியில் வாழலாமே? இந்த பூமித்தாய் அவற்றையும் படைத்திருக்கிறாள் அல்லவா?..."

நீண்ட முகம்... கூர்மையான நாசி... ஒழுங்கில்லாத பற்கள்... அந்நாள் பார்த்த அதே வடிவம். சிறிதும் மாறவில்லை. மேல் முடியைக் கோதி உச்சியில் சுற்றி இருக்கிறார். அதில் எப்போதுமே அடர்த்தி இல்லை... வற்றி மெலிந்த மார்புக் கூடு. அது எழும்பித் தணியவில்லை.

சோகம் தன்னைச் சுற்றிப் பிரளயமாகக் கவிந்த போதும் அவள் அசையவில்லை. யாரோ, மாதுலனைத் தூக்கி வருகிறார்கள். அவனால் நடக்க முடியவில்லை. அதனால் தூக்கி வந்து அவள் அருகில் அமர்த்துகிறார்கள்.

குழலை அவன் கையில் ரெய்கி கொடுக்கிறாள். அவன் மறுக்கிறான். கண்களில் இருந்து ஆறாய் நீர் வழிகிறது. மாயனின் இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொண்டு வந்து அவள் பக்கம் விடுகின்றனர். அவை சோகம் புரிந்தோ, புரியாமலோ வீரிட்டுக் கத்துகின்றன.

ஒரு தடவை அவர் உயிர்ப் பாம்பைக் கழுத்தில் போட்டுக் கொண்டு வந்தார். அவந்திகாவுக்கு ஆத்திரம் வந்தது.

"என்ன சாமி இது? குழந்தை பயப்பட மாட்டாளா?" என்று கடிந்து அவளைப் பற்றிச் செல்ல முயன்றாள்.

"ஒன்றும் ஆகாது. அஞ்சாதே, குழந்தாய்... இதோ பார், இது உனக்கு நண்பர்... தொடு..." என்று அவள் பூங்கரம் பற்றி அதைத் தொடச் செய்தார்... அது பூவைப் போல் குளிர்ச்சியாக இருந்தது. 'இன்னும் இன்னும் இன்னும்...' என்று தலையோடு வால் பூங்கரத்தால் தடவிக் கொடுத்தாளே?...

இந்நாள் கானகத்தில் தன்னந்தனியளாய் அவள் வந்து விழுந்த போது, நாகங்கள் வந்து வரவேற்றதை எண்ணிக் கண்ணீர் பொங்குகிறது.

"அத பாருங்க! பாம்பெல்லாம்..."

அந்த வனமே சோகத்திலிருக்கிறது. ஊர்வன, பறப்பன், நடப்பன ஆகிய அனைத்து உயிர்களுக்கும் தோழனாக ஓம் ஓம் என்று ஒலிக்கும் தம்புருடன் இதம் செய்தவர். அந்த இசைக் கருவி நாதனை இழந்துவிட்டது. பகல் உச்சிக்கு ஏறி இறங்கத் தொடங்குகிறது. அவர் வீழ்ந்த இடம், மரமல்லிகைகள் சொரியும் அரண். பூச்சிக்காட்டையும், வாழை வனங்களையும், பிரிப்பது போல் அரணாக நிற்கும் மரங்கள்... உச்சிக்கு ஏறிய ஆதவன் திடீரென்று குளிர்ந்தாற் போல் சாரல் வீசுகிறது. அந்த வேனிலில், சரேலென்று ஒரு சாரல் விசிற, வானவன் அவர் பொன்மேனியை நீராட்டுவது போல் குளிர் பூஞ்சாரலாகப் பொழிகிறான். இத்தகைய சாரல் வந்தாலே மரமல்லிகை பொல்லென்று மணம் சொரிந்து அவனியை அலங்கரிக்கும். நந்தமுனியை இயற்கை நீராட்டி அலங்கரிக்கிறது...

அப்போது... மத்தன்... யானைக்கூட்டம் பிளிறலுடன் வந்து அஞ்சலி செய்ய வருகின்றது. வேடமக்கள் அனைவரும் ஒதுங்குகின்றனர். அவள் அந்த யானையின் அருகில் சென்று அதன் காலைப் பற்றிக் கொண்டு கண்ணீர் உகுக்கிறாள்.

"இம்சையில் இருந்து அனைவரையும், விலகச் செய்த எந்தையை யாரோ கொடிய அம்பு கொண்டு துளைத்திருக்கின்றனர், மத்த ராஜனே!" என்று புலம்புகிறாள்.

மிதுனபுரியில் இருந்து ஒரு கூட்டம் வருகிறது. பாதம் வரை தொங்கும் ஆடை அணிந்த பெண்கள்... தலையில் துண்டு அணிந்து திறந்த மார்புடன் ஆண்கள், மூங்கில் கொம்புகளாலான ஒரு பல்லக்கில், ராணியம்மாவைச் சுமந்து வருகிறார்கள்.

"பெரிய ராணி வாராங்க!..."

பூமகள் கண்கள் அகலப் பார்க்கிறாள். ஒரு கால் கேகயத்து மாதாவோ?

சிவிகையைக் கீழே வைக்கிறார்கள். மெல்ல இருவர் சிவிகையில் இருந்த அவளைத் தூக்கிப் புற்பரப்பில் அமர்த்துகின்றனர். அந்த அன்னை, கூரிய நாசியும் அகன்ற நெற்றியும்...

ஓ... இவர் தாம் மிதுனபுரி ராணி மாதாவா? தலை மூடிய துண்டு. பாதம் வரை, ஆடை. அந்த அன்னை மயிலிறகுகளால் ஆன ஒரு விசிறி போன்ற சாதனத்தால், கால் முதல் தலைவரை தடவுகிறாள். சுருங்கிய விழிகள் பளபளக்கின்றன. மெல்லிய சுருங்கிய உதடுகள் துடிதுடிக்கின்றன. பேச்சு எழவில்லை. அப்போதுதான் சத்திய முனிவர் விரைந்து வருவதை அவள் பார்க்கிறாள். அவர் முகத்தை மூடிக் கொண்டு விம்முவதை அவள் முதல் தடவையாகப் பார்க்கிறாள்.

மிதுனபுரி ராணி மாதாவின் பக்கம் வந்து நின்று குலுங்குகிறார்.

"அம்மையே பாவத்தின் கருநிழல் விழுந்துவிட்டது."

அந்த அம்மை முனிவரின் பாதங்களில் நெற்றியை வைக்க முன் நகருகிறாள். அவர் குனிந்து அவளைத் தூக்குகிறார்.

"தாயே, நான் வந்தனைக்குரியவன் அல்ல. தாங்களே வந்தனைக்குரியவர்கள். எனக்கு இந்த மரியாதை உகந்ததல்ல. தங்களுக்குக் கொடுத்த வாக்கை, என் எல்லையில் வன்முறை நிகழாது என்ற வாக்கை, நான் நிறைவேற்றத் தவறிவிட்டேன்..." என்று அரற்றுகிறார்.

பூமகளுக்கு இதெல்லாம் கனவோ, நினைவோ என்று தோன்றுகிறது. இந்தப் பிரமையில் நின்றவள், அங்கு கோசலத்து ராணி மாதா கேகயத்து அன்னை வந்ததையோ, அவந்திகா உரத்த குரலில் கதறியதையோ கூடப் புரிந்து கொள்ளவில்லை.

அவரை, வில்வ மரத்தின் பக்கம் அம்பு தைத்திருக்க வேண்டும் என்று இடம் காட்டுகிறான், சோமன். அங்குதான் நாலைந்து அம்புகள் மரத்திலும் கீழும் சிதறி இருந்தனவாம். அங்கிருந்து நடந்து வந்து வீழ்ந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இறந்தவரின் சடலங்களை எல்லாம் கொண்டு வந்து, வேதவதியில் இருந்து நீர் கொணர்ந்து வந்து அந்திமம் செய்கிறார்கள். நந்தமுனிவரின் அருகில் மாயன், பூவன், நீலன்... எல்லோரும் இடம் பெறுகிறார்கள். நந்தமுனியின் தம்பூரை, அஜயன் எடுத்துக் கொள்கிறான். அதைக் குழியில் வைக்க அவன் அநுமதிக்கவில்லை.

மாதுலன் தன் சோகமனைத்தையும் கரைக்கும் வண்ணம் இசைக்கிறான். தேனாய், தீயாய், தீங்குழலாய் அது கானகத்தில் ஒலிக்கிறது. வானத்து ஒளி மங்க, கரும்பட்டுப் படுதா விரிகிறது. ஆயிரமாயிரமாக விண்மீன்கள் அவர்களை வரவேற்க உதயமாகின்றன. சத்தியமுனி குரலெழுப்ப, அஜயன் அந்த ஒற்றை நாண் யாழை மீட்ட, அது ஓம்... ஓம்... ரீம்... என்று ஒலிக்கிறது.

  • "எங்கள் அன்னை நீ! இறைவி நீ!
    நீயே நாங்கள்! நாங்களே நீ!
    வையம் நீ! வானம் நீ!
    இந்த நீரும், மாமரங்களும் மூலிகைகளும்,
    அறுசுவையும் எண்ணற்ற வடிவங்களும்,
    நீயே யாவாய்!
    துன்பம் நீ! இன்பமும் நீ!
    நீயே மரணம்! நீயே பிறப்பு!
    பாவத்தின் கருநிழல்கள் படிந்துவிட்டன.
    அன்னையே உன்னைப் போற்றுவோம்!
    அவை எங்களை விழுங்காமல் காத்தருள்வாய்!"

  • கீதம் முடியும் போது விம்மி விம்மி அழாதவர் எவரும் இல்லை என்று தோன்றுகிறது. அஜயனும் அந்தச் சோகத்தில் கரைகிறான். ஆனால் விஜயன் மட்டுமே வேறாக நிற்கிறான்.

    "தாத்தா! பாவத்தின் கருநிழல் என்று எதைச் சொன்னீர்கள்? எங்களை வில் அம்பு எடுக்கக் கூடாது என்று ஆணையிட்டு விட்டுத் தாங்கள் இங்கே இல்லாமல் போய் விட்டீர்களே. அவர்கள் குறிபார்க்கத் தேவையில்லாத போர்க்கால வில்-அம்பு சாதனங்களால் மரம் மட்டை பசுக்கள் இன்னார் இனியவர் என்றில்லாமல் நம்மை அழிக்க முன் வந்தது எதனால்? நம் பசுக்கள் கண் முன் இறந்தன. மாயன் பொங்கி எழுந்து நச்சம்பு போட்டு, பத்துப் பத்தாக, நூறாக, அவர்கள் பக்கம் ஆறு கடந்து கொன்றான். அவன் வீரன்! வீரனாக உயிரைக் கொடுத்தான். நாங்கள் குரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, கோழை போல் நின்றோம். எது பாவத்தின் கருநிழல்?"

    "விஜயா!" என்று பூமகள் கத்துகிறாள்.

    "பாவத்தின் கருநிழல் எங்கிருக்கிறது என்று என்னிடம் கேள்! இவர்கள் பாவத்தின் கருநிழலைத் துடைக்க வாழ்கிறார்கள். அத்தகைய ஒரு பெருமகனை இப்போது அந்த நிழல் விழுங்கிவிட்டது. மகனே, உன் அன்னை கர்ப்பத்தில் உங்களைச் சுமந்து கொண்டு எந்நாள் அநாதரவாகத் திக்குத் தெரியாத கானகத்தில் விடப்பட்டாளோ அன்றே பாவத்தின் கருநிழல் விழுந்துவிட்டது. பெண்ணொருத்தி எந்நாள் கோத்திரமில்லாதவள் என்று சபிக்கப்பட்டாளோ, அன்றே பாவத்தின் கருநிழல் இந்த பூமியில் படிந்து விட்டது. மண் அன்னை, தன் மக்களுக்கு அமுதூட்ட கோத்திரம் பார்ப்பதில்லை; குலம் பார்ப்பதில்லை. ஆனால்... மனிதகுலம் எந்நாள் தம்மைப் பெற்ற அன்னைக் குலத்துக்கு இத்தகைய விலங்குகளைப் பூட்டிற்றோ, அந்நாளே பாவத்தின் கருநிழல் இந்தச் சமுதாயத்தில் படிந்து விட்டது!..."

    பூமகளின் இந்தக் குரலை எவரும் கேட்டதில்லை.

    அமைதித் திரை கொல்லென்று படிகிறது.

    சத்திய முனிவர் அவள் அருகில் வருகிறார்.

    அவள் முடியில் கை வைக்கிறார். "மகளே, அமைதி கொள். பாவம், புண்ணியம், இருள், ஒளி ஆகிய இருமைகள் வையகத்தின் இயக்கத்தில் வரும் இயல்புகள். அந்த இரண்டையும் கடந்த மேலாம் ஞானத்தை எய்தும் முயற்சியே அமைதிப் பாதை! அமைதி கொள்வாய்."

    "தாயே, நீங்கள் சொல்லும் செய்திகள் புரியவில்லை. கோத்திரமில்லாதவர் என்பவர் யார்? அந்தக் கருநிழல் எப்படி உங்கள் மீது விழுந்தது? நாங்கள் துடைத்தெறிவோம்!..."

    பூமகள் மக்களை அணைத்துக் கொள்கிறாள்.

    "மக்களே, நான் பேறு பெற்றவள். என் மீதும் உங்கள் மீதும் எந்தக் கருநிழலும் விழாது. இந்த வனமே பாவனமானது..."

    அப்போதைக்கு இந்த வினாக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதே தவிர, பூமகளின் உள்மனம் ஓலமிட்டுக் கொண்டுதானிருக்கிறது.

    நந்தமுனி வீழ்ந்த பிறகு, மிதுனபுரி மக்கள் வாளாவிருப்பாரா? மாயனும், பூவனும் நீலனும் அழிந்த பிறகு இந்த மக்களும் இன்னமும் அஹிம்சை என்று கைகட்டி இருப்பாரோ? விஜயன்... விஜயனின் துடிப்பை, கிளர்ச்சியை அவளால் உணர முடிகிறது. அஜயன் அவள் பக்கம் இருப்பான். ஆனால் விஜயனின் உடலில் அன்னை கூறினாற் போல் க்ஷத்திரிய இரத்தம் தான் ஓடுகிறது. அவன் பழிவாங்கத் துடிக்கிறான். மின்னலைத் தொடர்ந்து இடி வரும்.

    இடி வருகிறது. அண்ட சராசரங்களை உருட்டிப் புரட்டும் இடி.

    மிதுனபுரிப் பெண் படை, சந்திரகேதுவின் படையோடு மோதுகிறது.

    தலைகள் உருள்கின்றன; பயிர்கள் அழிகின்றன; வனவிலங்குகள் அமைதி குலைந்து தறி கெட்டு ஓடுகின்றன. வேதவதியில் குருதி கலக்கிறது.

    அஜயனும் விஜயனும் சோமனும், வேதவதிக்கரை, எல்லைக் கோட்டில், தங்கள் வில் - அம்பு கொலைக் கருவிகளுடன் நிற்கின்றனர்.

    இவர்கள் அனைவருமே யாவாலி அன்னையின் ஆசிரமத்தில் தான் குடியேறி இருக்கிறார்கள்.

    கேகயத்து மாதாவும், பெரியன்னையும், ஒரு புறம் முடங்கி இருக்கிறார்கள். அவந்திகா, கின்னரி, ரீமு ஆகியோர் உணவு தயாரிப்பதும் நீர் கொண்டு வருவதுமாக இயங்குகின்றனர்.

    சத்திய முனியும் பிள்ளைகளுக்குக் காவல் போல் செல்கிறார்.

    அன்று வானம் கறுத்து, மழைக்காலத்தின் துவக்கத்தை அறிவிக்கிறது.

    ஆவணிப் பௌர்ணமிக்கு இன்னமும் நாட்கள் இருக்கின்றன.

    இவ்வாண்டு முன்னதாக மழைகாலம் தொடங்கிவிடுமோ?

    எரிபொருள், காய் - கனி கிழங்குகள் முன்னதாகச் சேமித்துக் கொள்வார்கள். இவ்வாண்டு...

    "பிள்ளைகளே, நாம் இன்று உணவு சேகரித்து வருவோம்!" என்று அழைக்கிறார்.

    யாவாலி அன்னையின் சமாதி மேட்டுக்கருகில் இருந்து, அவர் நெஞ்சுருகக் காலை வணக்கம் சொல்லி இறைஞ்சுகிறார்.
    • "வானும் மண்ணும் அமைதியடையட்டும்!
      வளி மண்டலம் அமைதியடையட்டும்!
      நீரும் காற்றும் அமைதியடையட்டும்!
      உயிரின் துடிப்புகள் விளங்கட்டும்!
      தறிகெட்ட ஒலிகள் சீர் பெறட்டும்!
      சுருதியும் இலயமும் இணையட்டும்!
      சோகங்கள் யாவும் கரையட்டும்!
      சுருதி நாயக! உனை நம்பினோம்!"
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 26

மழையில் நனைந்தவண்ணம், கனிகளும் கிழங்குகளும் சேகரித்து வந்து பிள்ளைகள்; குடிலில் வைப்பதைப் பூமகள் எடுத்துச் சீராக்கிப் பதனமாக வைக்கிறாள்.

நெருப்பு... அதைக் காத்து வைப்பது மிகக் கடினமாக இருக்கிறது. பசுக்களும் காளைகளும் அழிந்து போன நிலையில் சாண எரி முட்டைகள் சேமிக்கப்படவில்லை. கிழட்டுக் காத்யாயனிப் பசு மட்டுமே ஓர் ஓரம் ஒண்டி இருக்கிறது. காட்டு நாய்கள், மரக்கிளைகளில் தங்கி இருக்கும் பறவைகள் அவ்வப்போது தங்கள் மீதுள்ள நீரை விசிறியடிக்கும் போது மேனிகளை ஆட்டி அசைக்கும் ஓசைதான், மழையின் இசைக்குத் தாளமாக இருக்கிறது.

கல்திரிகையில் அவந்திகாவும் ரீமுவும் தானியம் அரைக்கிறார்கள்.

"குழந்தாய்..." என்று குரல் எழுப்பும் போதே அவந்திகாவுக்கு உணர்வுகள் மேலோங்கித் தழுதழுக்கிறது.

அந்த மாவில் சிறிது தேனை ஊற்றிப் பிசைந்து, கரைத்துப் பிள்ளைகளுக்கு ஊட்டமாகக் கொடுக்கிறார்கள்.

பெரிய கொட்டிலில் அமர்ந்து முனிவர் அவர்களுக்கெல்லாம் பாடல்களாகக் கல்வி கற்பிப்பார். அவர்களும் சேர்ந்திசைப்பார்கள்.

பூமகள், அவர்கள் அருகில் இருப்பதால், 'மழையே, நீ வாழ்க! எங்கள் இன்னல்களை நீயே இப்போதைக்குத் துடைக்கிறாய்!' என்று வாழ்த்துகிறாள். வீட்டைச் சுற்றி நச்சமைந்த நாகங்களும், கொடிய விலங்குகளும் சூழ்ந்தாலும் அச்சமில்லை. ஆனால், அக்கரையில் உள்ள படைகள் இங்கே வரலாகாது. இத்துணை குழப்பங்களுக்கும் தானே காரணம் என்பதை உணர்ந்திராத அந்த வெள்ளைக் குதிரையும் அவர்கள் வளைவில் மரத்தடியில் வந்து ஒதுங்குகிறது.

"அம்மா, குதிரை வந்திருக்கிறது!" என்று அவந்திகா கத்துகிறாள்.

"அடித்து விரட்டு!" என்று கடித்துத் துப்புகிறாள் கேகய அன்னை.

"குதிரை என்ன செய்யும்? அது காட்டில் திரிந்த பிராணி தானே? நாடு பிடிக்க ஓடி வா என்று மனிதர் சொன்னதைக் கேட்காதது அதன் உரிமை இல்லையா?"

"தாயே, நீங்கள் யார் என்று தெரியவில்லை, சத்திய முனிவர் யாவாலி அன்னை பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். நந்தமுனியும் பூமையும் இளம்பருவத்தில் இருந்தே அறிமுகமானவர். ஆனால் தாங்கள்...?"

"நானும் நல்லது செய்கிறேன் என்று ஒரு பாவத்தைச் செய்தேன். எதற்காக இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்றே புரியவில்லை சகோதரி!"

"காரணம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. இந்தப் பன்னிரண்டாண்டுகள், இந்த அவந்திகாவும் நானும், நினைத்து நினைத்து வெதும்பிக் கொண்டிருந்தோம். கோத்திரம் அறியாதவர், கோத்திரம் அறிந்தவர் எல்லோருக்கும் நியாயங்கள் ஒரே மாதிரி என்று நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.

கேகய மன்னனின் புதல்வி நான். ஆனால் என்னை வளர்த்தவள் என் அன்னை அல்ல. அந்த அன்னை, என் தந்தையிடம், அவளுக்குத் தெரிவிக்காத இரகசியம் ஒன்றைச் சொல்லும்படி வற்புறுத்தினாள். காரணம் ஒன்றுமில்லை. அவருக்கு ஈ, எறும்பு, பறவை மொழிகள் எல்லாம் தெரியுமாம். அவை ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தன. இவர் சிரித்தார்; அருகில் இருந்த என் அன்னை ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டாள்.

'உனக்குச் சொல்ல முடியாது' என்று மறுத்தார். ஏன், ஏன்... என்று அவள் கேட்ட போது, அதைச் சொல்ல முடியாது என்று பிடிவாதமாக இருந்தார். இந்த அரசர்கள் நாளொரு மங்கையரை விரும்பி மாளிகைக்கு கொண்டு வரும் வழக்கம் தானே. என் தாய் சந்தேகப்பட்டுச் சொல்லியே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தார். 'சொன்னால் தலை வெடித்துவிடும்' என்று எந்த முனிவனோ அச்சுறுத்தினானாம். அதற்காகப் பிடிவாதம் பிடித்த என் அன்னையை, என் தந்தை அங்கேயே பாழுங்கிணறொன்றில் தள்ளிவிட்டார் என்ற செய்தியை நான் எப்படி அறிவேன்? அன்னைக்காக நள்ளிரவிலும், பகலிலும் கூவி அழுவேன். மந்தராதான் என்னை அரவணைத்து வளர்த்தவள். அரசகுலத்தின் துரோகங்களை அறியாத பணிப் பெண்டிர் யார்?...

அப்போது, இந்தப் பூமகளைக் கானகத்துக்கு அனுப்ப அவளே கருவியானாள். ஆனால் சகோதரி, பெற்ற மகனாலும் வெறுத் தொதுக்கப்பட்ட பாவி நான். இந்த சீதேவியை, கருப்பிணியாகக் கானகத்தில் விட்டு வா என்று சொன்னவனின் குடையின் கீழ் நான் முள்ளில் இருப்பது போல் இருந்தேன். சகோதரி உங்கள் வரலாற்றை அறிவதில் எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. இந்த பூமகளை, அந்த நிலையில் அரவணைத்து அன்புடன் பேணி வாழ வைத்திருக்கிறீர்கள். இதுவே என் வாழ்வில் நான் அடையும் அமைதி..."

மழை பயிர்களை, உயிர்களைத் தழைக்கச் செய்கிறது. குளம், குட்டைகள், ஆறுகளில் மீன்கள் களித்துப் பெருகுகின்றன. நெருப்புக் காத்துப் பக்குவப்படுத்தி, பிள்ளைகளுக்காக மாதுலன் மீனுணவு கொண்டு வருகிறான்.

பெரியன்னை உணவே கொள்வதில்லை. நாளுக்கு நாள் நலிந்து, பேசுவதும் நூலிழையாக நைந்து போகிறது.

"தாயே, சிறிது கூழ் அருந்துங்கள். ஏதேனும் உட்கொண்டு மூன்று நாட்களாகின்றன."

பூமகளின் முகத்தை நலிந்த கரங்களினால் தடவுகிறாள்.

"பிள்ளைகள் எங்கே?..."

பூமகள் குடிலின் வெளியே வந்து பிள்ளைகளைக் கூப்பிடுகிறாள். அந்த முற்பகல் நேரத்தில் சுற்றுச் சூழல் தோட்டம் சீரமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மழைக்காலம் ஓய்ந்ததற் கடையாளமாக, வானவன் வயிரச் சுடர் பொலிகிறான். அமுதம் அருந்திய தாவரங்கள் எத்துணை வண்ணங்களில் அவனுக்கு நன்றி சொல்கின்றன? ரீமுவின் செவலைப் பசு கன்றை ஈன்றிருக்கிறது. அது நிலை கொள்ளாமல் துள்ளி விளையாடுகிறது. யாகக் குதிரை... அதுவும் சற்று எட்ட, இந்த வானகத்திலேயே புல் மேய்ந்து கொண்டிருக்கிறது. தாறு மாறாக வளர்ந்திருக்கும் பசுமைகளைச் சீராக வெட்டிக் கழிக்கிறான் விஜயன். அஜயன் அவற்றை ஓரமாக அப்புறப்படுத்துகிறான்.

"அஜயா, விஜயா, நாநியம்மா கூப்பிடுகிறார். வாருங்கள்!" அவர்கள் உடனே கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு வருகிறார்கள். வரும் போது அழகிய மலர்க்கொத்துகளைக் கொய்து கொண்டு வருகிறார்கள்.

"நாநியம்மா, அஜயனும் விஜயனும் வணங்குகிறோம்..."

பூங்கொத்துக்களை அவள் நலிந்த கரங்களில் வைக்கின்றனர். வெண்மையாக மலர்ந்த அடுக்கு நந்தியாவட்டை, அரளி ஆகிய மலர்கள்.

முதியவளுக்குப் பார்வை துள்ளியமில்லை. இருந்தாலும் அவள் காட்டிக் கொள்வதில்லை. மலர்களைக் கண்களில் ஒத்திக் கொள்கிறாள்.

"குழந்தைகளா, அம்மா சொல்லித்தான் நாநியம்மாவை வந்து பார்ப்பீர்களா?" அவர்களை அருகில் வைத்து, தழுவி உச்சி மோந்து கண்ணீர் சொரிகிறாள் பெரியன்னை.

சூடு செய்த நீர் சிறிது கொண்டு வந்து பிள்ளைகளிடம் தருகிறாள் பூமை. மிதுனபுரியில் இருந்து நந்தசுவாமி வாங்கி வந்த மரக்குடுவையில் வெதுவெதுப்பான நீரை, பிள்ளைகள் வாங்கி, அவளை அருந்தச் செய்கின்றனர்.

ஓமப்புல்லின் வாசனை...

நிறைவுணர்வுடன் அருந்துகிறாள்.

"குழந்தைகளா?... நீங்கள்... இந்தக் காட்டிலேயே இருப்பதை விரும்புகிறீர்களா?" அவர்கள் வியப்புடன் அவளை நோக்குகின்றனர்.

"இந்த இடம் எங்கள் இடம்; எங்கள் அன்னையின் இடம்; நாங்கள் இங்கே இருப்பதை விரும்பாமல் எப்படி இருப்போம்...?"

குடிலின் இன்னொரு புறத்தில் இதுகாறும் அமைதியாக இருந்த கேகய அன்னை, உடனே, "குழந்தைகளா, உங்கள் தந்தை மாமன்னர் என்பது தெரியுமோ உங்களுக்கு?" என்று பருத்தி வெடித்தாற் போல் உண்மையைச் சிதற விடுகிறாள்.

அவர்கள் சட்டென்று திரும்பிப் பார்க்கின்றனர்.

"ராஜமாதா, என்ன சொல்கிறார்?..."

"குழந்தைகளா, நான் உங்களுக்கு ராஜமாதா இல்லை; உங்கள் பாட்டி... நீங்கள் ஆசையோடு 'நாநியம்மா' என்றழைக்க வேண்டியவள்... இங்கே வாருங்கள்..."

அவர்கள் திகைத்து நிற்கையில் பூமகள் தலைகுனிந்து மவுனம் சாதிக்கிறாள். "பூமகளே, ஏன் மவுனம் சாதிக்கிறாய்? எத்தனை நாட்களுக்கு இப்படி ஒருவரை ஒருவர் அறியாத வண்ணம் கண்ணாமூச்சி ஆட முடியும்? ஊர் அபவாதம் என்று உனக்குப் பெரும்பாதகம் செய்து விட்ட உன் நாயகனைப் பற்றிய உண்மையை இந்தப் பிள்ளைகளும் தெரிந்து கொள்ளட்டும்! பாவத்தின் கருநிழல் எங்கே தொடங்கியது என்று புரிந்து கொள்ளட்டும்!"

"அம்மா...!" என்று நடுங்கும் குரலுடன் அவள் காலில் வீழ்ந்து பணிகிறாள்.

"அதெல்லாம் தெரியாத உண்மைகளாக மேடிட்ட குவியல்களுள் இருக்கட்டும் தாயே!..."

அந்த அன்னை, அன்புடன் அவள் முகத்தில் விழுந்தலையும் கூந்தலை ஒதுக்குகிறாள். "வாழ்நாளெல்லாம் தவக்கோலத்தில் கழியும் உன்னால் இந்த மனித குலமும் பாவனமாகிறதம்மா! குமரப்பருவத்தின் தலை வாயிலில் நிற்கும் பிள்ளைகள் தம் தந்தையின் செய்கை பற்றி அறியட்டும்! அசுவமேதக் குதிரை, அவர்களுக்கு உயிர்கொடுத்த தந்தையின் அரசிலிருந்து ஏவி விடப் பட்டதென்று அறியட்டும்! உயிர் விளக்கை இருட்கானகத்துக்கு அனுப்பிவிட்டு உயிரில்லாப் பொற்பதுமையை வைத்து வேள்வி செய்யும் பொய்மையை உணரட்டும்!... குழந்தாய், உனக்கிழைக்கப்பட்ட இந்த அநீதி உலகறிய வேண்டும்!..."

கிளர்ந்தெழுந்த சொற்கள் எதிரொலியில்லாமல் நிற்கின்றன. அன்னைக்கு மூச்சு வாங்குகிறது. மரக்குவளையில் நீர் கேட்டு வாங்கி அருந்துகிறாள்.

சத்திய முனியும் அங்கே நிற்கிறார். "மகளே, உன் மைந்தர்களின் எதிர்காலம் பற்றி நீ எதுவும் சிந்திக்கவில்லையா?..."

அவள் தரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். "தாங்கள் போர் மூளக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்களிடம் தூது சென்றீர்கள். ஆனால் தூது செல்லக்கூடிய தகுதியே இல்லை என்பது போல் இங்கே வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன. க்ஷத்திரிய வம்சத்தின் பராக்கிரமங்கள், வில்-வாள், தோள் வலியில் தான் இருப்பதாக நிரூபித்து வருகிறார்கள். என் மைந்தர்களுக்கு அவர்கள் யார் என்று தெரிந்து விட்டது. இனி முடிவெடுக்க வேண்டியது அவர்களே!..."

"போர் இப்போதும் தொடர்ந்திருக்கிறது. ஒரே ஆறுதல் ஆறு தாண்டி வரவில்லை. மிதுனபுரியையே அழிக்க முனைந்திருக்கிறார்கள். யாருடைய வெற்றி, எதற்கு வெற்றி என்று புலப்படவில்லை. குதிரை இங்கே இருக்கிறது. அது இப்போது யாகக் குதிரை இல்லை..."

"யாகம் செய்யும் ஆசான்களுக்கு, இப்படிக் குதிரை கட்டறுத்துக் கொண்டு ஏவியவரை உதைத்தால் என்ன செய்வது என்ற சிக்கலில் இருந்து மீளத் தெரியவில்லை போலும்!..."

இப்போது யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி?... நந்தமுனியைக் கொன்ற காரணத்தால், மிதுனபுரியே போர்க்கோலம் கொண்டு இவர்கள் படையை அழிக்க முன்வந்து விட்டது...

மாதுலன் வருகிறான்...

அவன் ஏதோ செய்தி கொண்டு வந்திருக்கிறான் என்று புரிகிறது.

"என்னப்பா?..."

"ராஜா!... சேனை... குடை" என்று சைகை செய்கிறான். முனிவர் வெளியே செல்கிறார். பையன்களும் வெளியே தயக்கத்துடன் நின்று பார்க்கின்றனர்.

"வரவேண்டும் மாமன்னா?... வாருங்கள்..."

உள்ளே வந்து, அவர்களை உபசரிக்க, நீர், இருக்கை எல்லாம் எடுத்துச் செல்கின்றனர்.

"அஜயா, விஜயா, பாட்டனை வந்து வணங்குங்கள்! குழந்தாய், மகளே, வேதபுரி மன்னர்..."

வேதபுரி மன்னர்...

அந்நாள் அரக்கமன்னன் அவரை வெட்டிவிட்டதாக அவள் முன் தலையைக் கொண்டு வந்து காட்டச் செய்த போது அவள் சுருண்ட அடிவயிறு தொய்ய அழுது துடித்தாளே, அது நினைவுக்கு வருகிறது. அந்த உணர்வுகள் அனைத்தும் இப்போது இறுகி விட, அவள் கல்லாகி விட்டாள்.

மகிமை பொருந்திய, மாமன்னர், தருமபரிபாலனம் செய்யும் கோசல நாட்டுப் பிரான், அந்தத் திருமகனின் பக்கம் தானே இவருடைய வெண்கொற்றக் குடையும் சாயும்? அத்துணை இடைஞ்சலிலும் கடல் தாண்டித் தூது வந்த வானர வம்சத்தினனும் இவள் பக்கம் இளகவில்லையே? நியாயங்கள் மண்ணையாளும் வேந்தர் பக்கமே! நியாயங்கள் எல்லாம் மேற்குல ஆதிக்கங்களுக்கே...

"கண்ணம்மா..."

நைந்த குரல் அவளை உலுக்குகிறது. பெரியன்னைக்கு மூச்சுத் திணறுகிறது.

"அவரைப் பணிந்து கொள்ளம்மா! நீயும் உன் மக்களும் இந்தக் கானகத்தில் உணவுக்கும் உடைக்கும் இருப்புக்கும் நெருப்புக்கும் பொழுதெல்லாம் போராடும் வாழ்வுக்கோ உனை விதித்தது? மேலும் இந்தப் போர் முடிவு பெற வேண்டும். அவரே நடுநிலையில் நிற்கக் கூடியவர்..."

பூமகள் அவள் கையை அழுந்தப் பற்றுகிறாள். அவள் எழும்பும் மார்பை மடியில் சாத்திக் கொண்டு நீவி விடுகிறாள்.

"குழந்தாய், நாம் எதிர்த்துக் கேட்க இயலாத அபலைகளாகிப் போனோம். அதனால் இலகுவில் தியாகிகள் என்ற பெயரை வாங்கிக் கொள்ள வருத்திக் கொள்கிறோம். நீ தியாகியாகி இந்த மண்ணில் மடிய வேண்டாம். உன் தந்தை உன்னை மீண்டும் ஏற்க வந்துள்ளார்..."

"இல்லை தாயே, நான் இப்போது சுதந்தரமானவளாக இருக்கிறேன். என் மைந்தர்களுக்கும் தம் ஆதிக்க குலம் பற்றிய தன்னுணர்வு வரவேண்டாம். இந்தக் கானகத்தில் மனிதர்களோடும் விலங்குகளோடும், இயற்கையோடும் வாழும் வாழ்வே எங்களுக்கு ஏற்புடையது!"

"மகளே, உன் மீது அபாண்டப் பழி சுமத்தியவர்களுக்கு உன் நியாயத்தை நிரூபிக்க வேண்டாமா?..."

கேகய அன்னைக்கு அவள் தலையசைக்கிறாள்.

"யாருக்கு யாரும் நிரூபிக்க வேண்டாம்; அவரவர் உள்ளங்களில் விழுந்துவிட்ட நிழலே வதைக்கும். அதையும் நான் விரும்பவில்லை. தேவி, அந்த அரண்மனை வாழ்வு நான் ஏற்க முடியாமல் விட்ட வாழ்வு..."

அப்போது வேதபுரி மன்னரின் நெடிய உருவம், குடிலுக்குள் தலை வணங்கி நுழைவதைப் பூமகள் காண்கிறாள்.

அவள் முன் தலை மீது கைவைத்து ஆசி மொழிகிறார்.

"மகளே, என் மீது உன் மனத்தாங்கல் புரிகிறது. என்னால் எதையும் செய்ய முடியவில்லை. உன் மகத்துவத்தை நீ உன் மவுனத்தினாலேயே புரிய வைத்துவிட்டாய். இந்த சத்திய முனிவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்..." என்று தழுதழுக்கிறார்.

"அதற்காகத் தங்கக் கொப்பி போட்ட மாடுகளும் அடிமைகளும் பரிசாக வழங்குவீர்களா என்று கேளுங்கள் முனிவரே!..."

இந்தக் காரமான குரல் எங்கிருந்து வருகிறது என்று திடுக்கிட்டாற் போல் பூமகள் திரும்பிப் பார்க்கிறாள்.

மன்னர் தலை குனிந்து நிற்கிறார்.

"எந்தையே, மகளைப் பார்த்துவிட்டீர்கள்; போய் வாருங்கள். நான் தங்களை வருத்தத்துடன் போகச் சொல்லவில்லை. எனக்கு இனி எந்த அரண்மனையிலும் இடமில்லை. தேடித் தேடி வில்லை வளைத்தொடித்த வெற்றி வீரர் என்று கோத்திரம் தெரியாத மகளைத் தாரை வார்த்துக் கொடுத்தீர்கள். இத்துணை அவலங்களுக்கும் நானே காரணமாயிருக்கிறேன். முதலில் பதினான்காண்டுகள்; இப்போது பன்னிரண்டாண்டுகள்... எனக்கு உகந்த இடம் இதுவே..."

"மகளே, சக்கரவர்த்தித் திருமகனின் உள்ளத்தை நான் அறிவேன். ஒவ்வொரு கணமும் நெக்குருகிக் கொண்டு இந்த வேள்வியைத் தொடங்கினார். இது நிமித்தமாக, பிள்ளைகள் தந்தையைக் கண்டு சேர வேண்டும், நீங்கள் உரிய வாழ்வுக்கு வர வேண்டும் என்பது என் அவா... இந்த வேள்வி இப்படி இரணகளத்தில் முடியாமல் நிற்கலாமா, மகளே?"

கேகய மாதா வெடிக்கிறாள். இது பூகர்ப்பத்தில் இருந்து பிறக்கும் அனல் பொறிகளைப் போல் சிதறுகின்றன.

"வேள்வி! ஆயிரம் பதினாயிரங்களாகப் பொன்னை இறைத்து யாகசாலை அமைக்கும் போது, குடியிருந்த வேடுவ மக்கள் நிலைகுலைகிறார்களே, அது வேள்வியா? திரவியங்கள் சேகரிப்பதும் மந்திரங்கள் சொல்பவரைக் கூப்பிடுவதும், மேற்குலத்தாருக்கே தானங்கள் என்று வாரி வழங்கி அகந்தைக் கிழங்கை ஆழ இறக்குவதும், பிறர் மண்ணை ஆக்கிரமிக்கக் குதிரையை விரட்டுவதும், பிறகு அதையே பலியிடுவதும் வேள்வியா? அதைப் புரிந்து கொண்ட அந்த உத்தமப் பிராணி, காவலரை உதைத்துத் தள்ளி இங்கே அடைக்கலம் புகுந்திருக்கிறது. எனக்குப் பட்டும் பொன்னும் அலங்காரமும் வேண்டாம் என்று சுதந்தரமாகத் திரிகிறது. கண்டீரா? உமது மகள் தியாகம் என்ற அக்கினி வேள்வியில் இருபத்தெட்டு ஆண்டுகளாகக் குளித்துப் பொன்னாய் ஒளிருகிறாளே, அந்த வேள்வி எப்போது, யாரால் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதற்கு மறுமொழி கூறுங்கள்!"

இந்த வேள்விக் குண்டத்தில், யாருடைய சுகங்களை, யாருடைய தருமங்களை ஆஹூதியாக்கியிருக்கிறார்கள்?

காலம் காலமாக ஒவ்வொரு தாயின் கருப்பைச் சுவர்களையும் உதைந்து கொண்டு வளர்ந்து முழுமையும் அறிவும் ஆண்மையும் பெறும் வருக்கம், யாருடைய நலன்களை வேள்விக் குண்டத்தில் ஆஹூதியாக்கிக் கொண்டிருக்கிறது?...

தாயையும் பிள்ளைகளையும் ஒதுக்கிவிட்டு வேள்வியாம். பரிபூரணமம்? பொற் பிரதிமை...

ஆஹாஹா என்று அந்த அன்னை சிரித்த சிரிப்பு, ஏதோ ஊழித்தாண்டவத்துக்கான முன்னுரை போல் பூமகளுக்கு விதிர்விதிர்ப்பைத் தோற்றுவிக்கிறது.

குனிந்து அந்த அம்மையின் தோள்களைப் பற்றித் தழுவுகிறாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 27

போரின் சுவடுகள் இக்கரையில் பதியவில்லை. வேதபுரி மன்னர் வந்து சென்ற பிறகு, ஓரளவுக்கு அமைதியாக இருப்பதாகவே பூமகளுக்குத் தோன்றுகிறது. என்றாலும், இதை அமைதிக்கான நிறைவு என்று கொள்வதை விட, ஒரு புயலுக்கு முந்தைய கட்டமோ என்றும் தோன்றுகிறது.

கேகய மாதாவின் அனல்பொறிச் சிரிப்பில் உதிர்ந்த எது வேள்வி? எது வேள்வி? என்ற வினா பூமகளுக்கு இரவிலும் பகலிலும், நீரெடுக்கும் போதும், பிள்ளைகள் கொண்டு வரும் கனிகளையும் கிழங்குகளையும் பக்குவம் செய்யும் போதும், தானியங்களை மாவாக்கும் போதும் ஒலிக்கின்றன. திடீரென்று அரண்மனையில் பணிபுரிந்த பிஞ்சுச் சிறுவர் சிறுமிகளை நினைக்கிறாள். கல்திரிகையைக் கட்டி இழுக்கும் தளிர்விரல்களைப் பார்ப்பது போல் தோன்றும். வேள்வி... குஞ்சும் பிஞ்சும் தம் உழைப்பை எந்த வேள்விக்கு நல்குகின்றன...

இவள் தானியம் குற்றும் போது, வேடுவர் குடியில் இருந்து பூரு வருகிறது. கொழுவிய கன்னங்கள், ஆறே வேனில் பருவங்கள் தாண்டாத சிறுமி. இடையில் வெறும் இலை மறைவுதான். வேனில் பருவமாயிற்றே? கூந்தல் கற்றை கற்றையாக விழுகிறது. மாநிற மேனி... சிரிப்பு... முன்பற்கள் விழுந்து முளைக்கும் கோலம். ஈறுகள் கறுத்து, வெள்ளையாகப் பற்கள்... இது விடுதலைச் சிரிப்பு; கொத்தாக மீன் கொண்டு வந்து அவந்திகாவிடம் கொடுத்துவிட்டு மீண்டும் சிரிக்கிறது.

இந்தச் சிரிப்பு மொழிக்குத் தேவையில்லாத அடையாளம். இவர்கள் பேசும் திருத்தமில்லாத மொழி முதலிலெல்லாம் பூமகளுக்குப் புரியாது. ஆனால் அவள் மைந்தர்கள் அதே மொழியில் தான் வளர்ந்தார்கள். சத்திய முனிவரின் பயிற்சியில் பல்வேறு மொழிகளை அவர்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள்.

தானியம் புடைக்கும் பூமகள், தேய்த்த பால் மணியரிசியை அந்தக் குழந்தையிடம் கொடுக்கிறாள். பூரு, சிரித்துக் கொண்டே வாங்கித் தின்னும் அழகை மகிழ்ச்சியைப் பார்க்கிறாள்.

அப்போது, சிரித்துக் கொண்டே பால்கிழங்குகள் சருகுப்பை நிறையச் சுமந்து கொண்டு வந்து போடுகிறாள், அதன் அன்னை...

"தீனியா? எப்போதும் வாய் அரைபடுகிறது! இதுதான் இதற்கு யாகம்..." என்று சொல்லி எச்சில் பதியும் முத்தமொன்று அதன் கன்னத்தில் வைக்கிறாள். பூமகளுக்கு ராதையின் நினைவு வருகிறது. தாய் மக்கள் என்ற இயல்பான கசிவுகள் கூட வறண்டு ஊசிக் குத்தல்களாகும் அரண்மனை உறவுகள்...

"வனதேவி! பெரியம்மா, படுத்தே கிடக்கிறாரே? ஏதேனும் கஞ்சி குடித்தாரா?..."

பூமகள் உதட்டைப் பிதுக்குகிறாள்.

இந்த ஆசிரமத்தின் வாயிலில் வரிசையாக அசோக மரங்கள் எழும்பியிருக்கின்றன. இவற்றைச் சிறு பதியன்களாக வைத்த நாட்களைப் பூமகள் அறிவாள். அவள் பிஞ்சுப் பாலகர்கள் கையால் முனிவர் நடச் செய்தார். அந்த மரங்கள் குளிர்ச்சியான இலைகளுடன் இருண்ட மேகம் போல் கவிந்து இடை இடையே செங்கொத்து மலர்களுடன் மிக அழகாக இருக்கின்றன. மரத்தில் பறவைகள் வந்து தங்குகின்றன. முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துப் பாதுகாக்கின்றன. வேனிலின் வெம்மையே இல்லை. பின்புறமுள்ள தாமரைக் குளத்தில் நீர் படிகமாகத் தெரிகிறது. கேகயத்து மாதாவுக்குக் குளக்கரையும், தோப்பும் மிகவும் உவப்பாக இருக்கின்றன. பூருவின் தாய் குந்தி, இன்று பல செய்திகளைப் பாடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

முற்றத்தில் அவற்றைச் செவி மடுத்துக் கொண்டே தனக்குள் சிரித்தவளாய், பூமகள் தானியம் உலர வைக்கையில் பேச்சுக்குரல் கேட்கிறது.

அவள் முற்றத்து ஓரம் நடைபாதையிலே காவலர், குடை வருவதைப் பார்க்கிறாள். உடலிலும் உள்ளத்திலும் ஒரு சிலிர்ப்பு ஓடுகிறது. அசோக மரத்தடியில் தான் அன்னை இருக்கிறார் போலும்!

பேச்சுக் குரல் கேட்கிறது...

மெல்லிய இழையைச் சுண்டினால் ஏற்படும் அதிர்வுகள் போல் அதிர்வுகள்...

"தாங்கள் யாருக்கும் எதுவும் தெரிவிக்காமல் தனியே வரலாமா? தங்கள் விருப்பம் இதுவென்பதை அறிவித்திருந்தால் தக்க பாதுகாப்புடன் கூட்டிக் கொண்டு வந்திருப்போமே, தாயே?"

இவர்... குரலுக்குரியவர்... இளையவர்...

"ஆமாமப்பா! பாதுகாப்பாக வனத்தில் கொண்டு வந்து விடுவதில் அநுபவம் வாய்ந்த பிள்ளையாயிற்றே!... இப்போது என்னைத் தேடி இங்கு வர, உன் தமையன், சக்கரவர்த்தி ஆணையிட்டானா?..."

"மன்னிக்க வேண்டும் தாயே! தமையனாரும் இங்கு வந்துள்ளார்; அக்கரையில் இருக்கிறார்..."

பூமகளுக்கு உடல் முழுவதும் குப்பென்று வெம்மை பரவுகிறது. கையில் பற்றியுள்ள முறம் நழுவுகிறது.

அவர் வந்திருக்கிறாரா? எதற்கு? எதற்கு?

வில்லும் அம்புமாய், யாகக்குதிரையை மீட்டுச் சென்று யாகத்தை நிறைவேற்ற வந்திருக்கிறாரா? குலகுரு, குலமில்லாத குரு என்று தர்மசாத்திரங்கள் அனுப்பி வைத்திருக்கின்றனவா?

ராணி மாதாவின் வினாக்களை ஏந்த அவள் செவி மடல்கள் சித்தமாகின்றன.

"ஏனப்பா? யாகக் குதிரை யாகம் வேண்டாம் என்று அடைக்கலம் புகுந்திருப்பதை அறிந்து அதைப் பற்றிச் செல்ல வந்தீர்களா? அது யாகக் குதிரையுமில்லை; போகக் குதிரையுமில்லை. எந்தப் பொற்பிரதிமை பட்ட மகிஷியையும் அது மகிழ்விக்காது!"

"தாயே! தாங்கள் சாந்தமடைய வேண்டும். தமையனார், சக்கரவர்த்தி. க்ஷத்திரிய தர்மம் மீறி எந்தச் செயலையும் செய்யவில்லை. குடிமக்களின் அவநம்பிக்கையை அகற்ற வேண்டியது அரச தருமம்..."

"இந்த அரச தருமம் நிறை சூலியை வனத்தில் விட்டு வரச் செய்யும். அத்தகைய அரச தருமத்தில் எங்களுக்கு ஏது இடம்? இந்தத் தரும உரையாற்றத்தான் அண்ணனும் தம்பியும் வந்திருக்கிறீர்கள்?"

"மீண்டும் மன்னிப்புக் கோருகிறேன். தாயே, மன்னரின் ஆணையை நிறைவேற்ற வேண்டிய நிலையில் நான் எப்போதும் இருக்கிறேன். எனக்கென்று தனியான விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை..."

பூமகள் அவர்களை மறைவாக நின்று பார்க்குமிடம் தேடி நிற்கிறாள். இளையவன் தான். அந்தக் காலத்து இளமையின் செறிந்த முகம் வாடியிருக்கிறது. முடியும் உடலும் மாசுபடிந்திருக்கின்றன. வில்-அம்பு இல்லாமல் வெறும் மேலாடை போர்த்திய மேனி... கீழ் நோக்கிய பார்வை...

சத்திய முனிவர் அங்கு வந்து, தேவியும் மைந்தர்களும் வனத்தில் வாழ்வதைத் தெரிவித்து, அவர்கள் அங்கு இருக்கையில் வெறும் பொற் பிரதிமையை வைத்து வேள்வி செய்வது தருமம் அன்று என்று எடுத்துரைத்தாராம். இது யுகயுகத்துக்கும் சக்கரவர்த்தித் திருமகன் பெயருக்குக் களங்கம் விளைவிக்குமே ஒழிய, புகழ் பரப்பாது என்றும் அறிவுறுத்தினாராம்... மன்னர் தம் அமைச்சர், குலகுரு ஆகியோரைக் கலந்தாலோசித்த போது, அவர்கள் இந்த யோசனை கூறினார்களாம்...

அவன் அந்த யோசனையைப் பற்றி எதுவும் முத்துத் தெறிக்குமுன், கேகயத்து அன்னையின் குரல் அனலில் காய்ந்த வெம்மையுடன் வெளிப்படுகிறது.

"என்ன யோசனை? பிள்ளைகள் வயிற்றில் இருக்கும் போது அக்கினிப் பிரவேசம் தகாது; வனத்துக்கு விரட்டினீர்கள். இப்போது ஓர் அக்கினிப் பிரவேசம் செய்து அழைத்துக் கொண்டு அசுவமேதம் புதிதாகச் செய்யலாம் என்றார்களா?"

"தாயே, மன்னருக்குத் தேவியைப் பிரிந்திருந்த காலம் சுகமென்று கருதிவிட்டாற் போன்று சொல்லால் சுடுகிறீர்கள். அவர் படும் வேதனை சொல்வதற்கரியது... இப்போது யோசனை நான் சொல்கிறேன். குழந்தைகள் இருவரும் சென்று தந்தையைப் பார்க்க வேண்டும். அவருடைய புண்ணான இதயத்துக்கு அது ஓரளவு ஆறுதலாக இருக்கும். நான் குழந்தைகளை அழைத்துச் செல்ல அநுமதி தர வேண்டும்..."

பூமகள் இதை எதிர்பார்க்கவில்லை.

அஜயனும் விஜயனும் அங்குதான் நிற்கிறார்கள். ஆனால் சத்திய முனிவர் இதில் தாம் தலையிடக்கூடாதென்று கருதினாற் போன்று, "மகளே, வந்திருப்பவர் நம் விருந்தினர். அவரை முற்றத்துக்கு அழைத்துச் சென்று, நீரும் இருக்கையும் தந்து உபசரிக்க வேண்டும். பிறகு மாதாவின் யோசனைப் படி செய்யுங்கள்" என்று கூறிவிட்டு நழுவுகிறார்.

பூமகள் நீர் கொடுக்கிறாள்; அவந்திகா இருக்கையளிக்கிறார்.

கனிகளும், தாவர உணவுமாகக் கொண்டு வைக்கின்றனர்.

"தேவிக்கு வணக்கம்" என்று நடுங்கும் குரலில் கூறி இளையவன் அவளை வணங்குகிறான். அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை.

கேகய அன்னை, பேரப்பிள்ளைகளை அருகில் அமர்த்திக் கொள்கிறாள்.

"குழந்தைகளே, உங்கள் தந்தை கோசல மாமன்னரைச் சென்று பார்க்கிறீர்களா? அக்கரையில் தங்கி இருக்கிறாராம்! அசுவமேதக் குதிரையை இங்கு அனுப்பியவர். உங்களுக்கு வேறு ஏதேனும் விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து, குதிரையை மீட்டு விடலாம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது. நீங்கள் க்ஷத்திரியர் தாம். போர் செய்வீர்களா?"

"நாநியம்மா, எங்கள் குரு சொற்படி நாங்கள் நடப்போம். இந்தச் சக்கரவர்த்தித் தந்தையை எங்களுக்குத் தெரியாது! எங்களுக்கு குருசாமிதாம் எல்லாமும்!"

சத்தியமுனிவர் அங்கு வந்து, "போய் வாருங்கள். பார்த்து விட்டு வாருங்கள்..." என்று விடை கொடுக்கிறார்.

உடனே எதிர்க்க முடியவில்லை. ஆனால் பூமகளுக்கு மனம் அமைதியிழக்கிறது.

பிள்ளைகளை அனுப்பியது சரிதானா?

இளையவன் உணவு கொள்ளும் போது கசிந்துருகிக் கண்ணீர் கலங்க, அவர்களை அழைத்து உச்சிமோந்தான். தான் எடுத்த கனிகளைப் பிளந்து அவர்கள் வாயில் ஊட்டிவிட்டுத் தானருந்தினான். அவளுக்கே நெஞ்சு கசிந்தது. ஆனாலும், அவள் ஏமாந்திருக்கிறாள்; பேதை என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறாள்... வந்தவர் நேராக இங்கே வர வேண்டியது தானே? அக்கரையில் நின்று கொண்டு இளையவனை அனுப்பி எதற்காக நாடகம் ஆட வேண்டும்?

சத்திய முனிவரும் அவருடன் சேர்ந்து நாடகம் ஆடுகிறாரா?...

நந்தசுவாமியின் இழப்புணர்வு இப்போது குழி பறிக்கிறது. துயரம் தாளாமல் வெதும்புகிறாள்.

பெற்றோர், வளர்ப்புத் தந்தை, கணவர் எல்லோரும் அவளைத் தனிமைப் படுத்தினார்கள். இப்போது இந்தப் பிள்ளைகளும் அவளை அந்நியப்படுத்தி விடுமோ?...

அவள் குடிலுக்குள் சுருண்டு கிடக்கும் முதியவளிடம் சென்றமருகிறாள். கேகய அன்னை வந்த பிறகு, தன் பொறுப்பை அவளிடம் ஈந்துவிட்டதாகத் தோன்றுகிறது. மூலையில் ஒடுங்கிச் சுருண்டு கிடக்கிறாள்.

"பெரியம்மா..." என்று எழுப்புகிறாள். விழித்துப் பார்க்க வெகு நேரம் ஆகிறது.

"கண்ணம்மாவா? அரண்மனையில் இருந்து எப்போது வந்தாயம்மா?..."

"நான் இங்குதான் உங்களுடன் இருக்கிறேன் தாயே... அக்கரையில் மன்னர், என் நாயகர் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறாராம். அவர் பிள்ளைகளைப் பார்க்க விரும்புகிறாராம். இளையவர் வந்திருந்தார். சத்திய முனிவர் அனுப்பலாம் என்றார்; அழைத்துச் சென்றிருக்கிறார்... எனக்கு என்ன செய்வதென்று புரியாமல் கவலையாக இருக்கிறது, தாயே!" அவளுக்கு இவள் குரல் கேட்டதாகவே மறுமொழி வரவில்லை.

"அம்மா... எனக்கு... ஒரு வேளை பிள்ளைகளை வைத்துக் கொண்டு என்னைத் தனிமைப்படுத்தி விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது..."

அன்னை ஓய்ந்து போயிருக்கிறாள். எல்லாத் துடிப்புகளும் ஓய்ந்து இறுதிச் சொட்டுகளில் நிலை பெற்றிருக்கின்றன. அணையும் பொறி... சாம்பல் மூடிவிடாது.

"அம்மா... பெரியம்மா, உங்கள் கண்ணம்மா, என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்!"

"எனக்குக் களைப்பாக இருக்கிறது. மகளே, ராணி மாதாவிடம் கேள். உனக்கு ஒன்றும் வராது; உன் பிள்ளைகள் உன்னை விட்டுப் போக மாட்டார்கள்..."

பொழுது சாய்ந்து இருள் பரவிவிட்டது. அவர்கள் வரவில்லை. ராணிமாதாவுக்குப் பாலைக் கறந்து கொடுக்கிறாள்.

அந்தி வந்தனத்துக்குப் பிறகு, வேடுவக்குடி சீடப்பிள்ளைகளுடன் முனிவர் இனிய குரலில் தெய்வங்களைப் போற்றும் பாடல் ஒலியில் சிறிது மன ஆறுதல் கிடைக்கிறது. மாடத்தில் திரி போட்டுத் தீபம் ஏற்றி வைத்துச் செல்கிறாள் குந்தி. பொக்கை வாயுடன் முற்றத்தில் பூரு குதித்தாடுகிறது. நிலவும் நட்சத்திரங்களும் செய்யும் மாயம் தோன்றுகிறது.

ஒருகால் இரவு நிலவில் நடந்து வருவார்களோ?

என்ன பேதமை...?

"ஆமாம் அவந்திகா எங்கே?... அன்னையே, அவந்திகா எங்கே? வேடுவர் குடிக்கு, இறைச்சி பக்குவம் படிக்கப் போய் இரவு தங்குகிறாளா? அவர்கள் குடில்களில் மதுக்குடங்களுக்கும் பஞ்சமிருக்காது..."

"இல்லை மகளே, அவள் பிள்ளைகளுடன் சென்றிருக்கிறாள். நாளை பிள்ளைகளை அவளே திரும்ப அழைத்து வருவாள். ஒருமுறை ஏமாற்றப்பட்டது அவளால் மறக்க முடியாத வடுவாகி உறுத்திக் கொண்டிருக்கிறது..."

அவந்திகா... நம்பற்குரிய தாய். அரண்மனை, க்ஷத்திரிய குலம், தரும சாத்திரங்கள், எல்லாம் அறிந்தவள். குழந்தைகள் மீது அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தீவிரமாக நடப்பாள். இந்த ஆறு, வனம், காயும் பரிதி, வளி மண்டலம், இவை எல்லோருக்கும் பொதுவானவை. 'க்ஷத்திரிய' ஆண் வாரிசுகள் என்று உரிமையாக்கிக் கொள்ள முடியாது... பூமகள் ஆறுதல் கொண்டு இரவைக் குழப்பமின்றிக் கழிக்கிறாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 28

பொழுது ஊக்கமும் உற்சாகமுமாகப் புலருகிறது.

இலைகளும் துளிர்களும் அசையக் கானகமே எழில் முகம் காட்டுகிறது. விதவிதமான வண்ணத்துப் பூச்சிகள் கும்பல் கும்பலாகச் செல்கின்றன. மணவிழாவா? யாருக்கு...? என்று கேட்டுக் கொண்டே வானவனுக்கு நீர்ப் பூசனை செய்கிறாள். சத்தியர் ஒன்றிரண்டு பசுக்களை அவிழ்த்து விட்டுத் துப்புரவு செய்கிறார்.

நேரம் செல்லச் செல்ல இறுக்கம் மேலிடுகிறது. பெரியம்மா, "கண்ணம்மா!" என்று கூப்பிடும் குரலில் மலர் கொய்து கொண்டிருந்த பூமகள் விரைகிறாள்.

தூய்மையான நீரால் முகம் துடைத்து, சுத்தம் செய்கிறாள்.

அவள் இவளையே உற்றுப் பார்க்கிறாள்.

"கண்ணம்மா? பிள்ளைகளை அழைத்துச் சென்று விட்டார்களா? உன் மாமி ராஜமாதா இதற்குத்தான் வந்தாளா? கண்ணே! உன்னை, இதற்காகவா தாயின் மடியில் இருந்து பிரித்து மண்ணில் பதித்தேன்? ஏர் முட்டும்; அரசமகளாவாள் என்று கணக்குப் போட்டேன்..."

பூமகள் ஒரு கணம் உலக இயக்கமே நின்று விட்டாற் போல் உணருகிறாள். சிப்பி வெடித்து முத்துக்கள் சிதறுகின்றன.

"என் வாரிசு... அரச வாரிசு... ஆனால் அரண்மனை மதில்களுக்குள் அரச தர்மம் என்பது, பெண்களின் உரிமைகளைத் தறிக்கும் கொடுவாள் என்பதை உணர்ந்தும்... மதி மயங்கி உன்னை அரச மாளிகையில் சேர்த்தேன்... மேல் வருண தருமங்களில், மண், பொண், பெண் ஆதிக்கங்களே முதன்மையானவை. அங்கே மனித தருமத்துக்கே இடமில்லை... கண்ணே... உன் பிள்ளைகளை அனுப்பாதே!"

"போதும்... போதும் அம்மா!" என்று பூமகள் அலறுகிறாள்.

அந்தக் குரல் சத்திய முனிவரை அங்கு வரச் செய்கிறது.

"இந்தக் கானகத்தின் உயிர் இவள். இவள் வனதேவி. இவள் மைந்தர்கள் இந்த வனதேவியின் மைந்தர்கள். அரச வாரிசுகளாகப் போக மாட்டார்கள். அவர்கள் அருந்திய பால்... மனித தருமப் பால், அன்னையே அமைதி கொள்வீர்!" என்று ஆறுதல் அளிக்கிறார்.

உச்சி கடந்து பொழுது இறக்கும் நேரம், பாதையில் தலைகள், குடை தென்படுகிறது.

ஆனால், தாரை, தப்பட்டை, சங்கொலி, ஆரவாரம் எதுவும் இல்லை. அவந்திகா தான் விரைந்து முன்னே வருகிறாள்.

பூமகளும் சத்திய முனியும் முற்றத்தில் நிற்கின்றனர். கேகய அன்னை அசோக மரத்தின் கீழ்ப் புற்றரையில் அமர்ந்திருக்கிறாள்.

முதலில் அவளை வணங்குகிறார்கள்.

"தேவி, மன்னர், இளையவர் இருவரும் வருகிறார்கள்..."

பூமகள் சரேலென்று குடிலுக்குள் செல்கிறாள்.

அவந்திகா, விருந்தினர் உபசரிப்புக்கான நீர், இருக்கைப் பாய்கள், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு செல்கிறாள்.

"அரசே... அமர வேண்டும்... இங்கே வந்தது பெரும் பாக்கியம்..."

குந்தியும் கும்பியும் இறைச்சி பக்குவம் செய்து கொண்டு வரும் மணம் அவள் நாசிக்கு எட்டுகிறது. பிள்ளைகள் இருவரும் வந்து அவள் இருபக்கங்களிலும் நிற்கிறார்கள். வாழை இலைகள் அறுத்துச் செல்கிறான் களி. இதெல்லாம் வெறும் கனவோட்டங்கள். நிகழப் போவது என்ன? இந்த விருந்துபசாரம், சந்திப்பு, பேச்சு வார்த்தைகள், எந்தக் கருத்தை மையமாக்குகின்றன?

"முனிவரே, நாங்கள் முடிவு செய்து விட்டோம். பிள்ளைகள் இருவரும், இக்ஷவாகு பரம்பரையின் சந்ததி என்று ஒப்புகிறோம். எங்களுடன் அழைத்துச் செல்ல அநுமதி கொடுக்க வேண்டும்!"

இந்தக் குரல் அவள் இதயத்தைக் கீறும் கூர் முள்ளாக ஒலிக்கிறது. முனிவர் கூறுகிறார்.

"நான் யார் அனுமதி கொடுக்க? உங்கள் பிள்ளைகளை, அவர்கள் தாயைக் கேளுங்கள் அரசே! அவர்களை அழைத்துச் சென்றீர்கள். இரவு தங்க வைத்துக் கொண்டீர்கள்... கேளுங்கள்..."

பிள்ளைகள் தாயிடம் வருகிறார்கள்.

"அன்னையே, இவர் - இந்த மன்னர், எங்கள் தந்தை என்றும் நாங்கள் அவருடன் செல்ல வேண்டும் என்றும் விரும்புகிறார். ஆனால், மன்னர் பொற்பிரதிமையை வைத்து எதற்காக யாகம் செய்ய முனைந்தார்? இந்தக் காட்டில் நாம் ஏன் தங்க வேண்டி வந்தது என்பதெல்லாம் புரியவில்லை... நாங்கள் எப்படித் தங்களை விட்டு அங்குச் செல்வோம்..." என்று அஜயன் கேட்கிறான்.

"மக்களே, மன்னரிடமே இதைக் கேளுங்கள்!" என்று பூமகள் அவர்களுக்குக் கேட்கும் குரலில் கூறுகிறாள்.

அவர்கள் வெளியே வந்து மன்னரைப் பணிகின்றனர்.

விஜயன் தான், 'பிசிறில்லாத குரலில்' பேசுகிறான்.

"மாமன்னரே! நாங்கள் வனதேவியின் மைந்தர்கள். வனமே எங்கள் தாயகம். நாங்கள் ஒரு போதும் தங்களுடன் வந்து வாழச் சம்மதிக்க மாட்டோம். இங்கு நாங்கள் சுதந்திரமானவர்கள்! உழைத்து விளைவைப் பகிர்ந்துண்டு, எல்லோரும் வாழ நாங்களும் இன்பமுடன் வாழ்வோம். உங்கள் குதிரையை நாங்கள் பிடிக்கவில்லை; கட்டவில்லை. அதுவே இந்த எல்லையை விட்டு அகல மறுத்து உங்கள் காவலரை விரட்டியடித்தது. அதன் விளைவாக, எங்கள் கண்ணுக்குக் கண்ணான நந்தசுவாமி மறைந்தார். எனவே எங்கள் அன்னை இசைந்தாலும் நாங்கள் சம்மதியோம். மன்னிக்க வேண்டும் மாமன்னரே!"

கரங்கள் குவித்து, அவன் மறுப்பைத் தெரிவிக்க இருவரும் உள்ளே வருகின்றனர்.

"கண்ணம்மா..." என்ற குரல் வெளிப்பட, பூமகள் திரும்பிப் பார்க்கிறாள். பெரியன்னையின் மூச்சுத் திணறுகிறது; கண்கள் நிலைக்கின்றன.

(முற்றும்)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top