• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விசிறி வாழை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
குருத்து பத்தொன்பது



"அடுத்தாற்போல் எங்கே போகலாம்?'' என்று கேட்டாள் பாரதி.

”சொர்க்கத்துக்கு...'' என்றான் ராஜா.

“அந்த 'ரூட்'டுக்கு நம்ம வண்டிக்கு பர்மிட் இல்லீங்க!.......” என்றான் டாக்ஸி டிரைவர் சிரித்துக்கொண்டே.

ராஜாவும் பாரதியும் சிரித்து விட்டனர்.

”டிரைவர்! நீங்க ரொம்பத் தமாஷாகப் பேசறீங்களே! சில டாக்ஸி டிரைவருங்க மூஞ்சியை 'உம்' மென்று வைத்துக் கிட்டிருப்பாங்க. அவங்களைக் கண்டால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது...'' என்றான் ராஜா.

”எப்பவும் சந்தோஷமா இருக்கத் தெரியணுங்க. எந்த நேரமும் கவலைப் பட்டுக்கிட்டு இறக்கிறவங்களை வாழத் தெரியாதவங்கன்னுதான் சொல்லணும்...'' என்றான் டிரைவர்.

''பலே, பலே! நீ என் கட்சி!'' என்றான் ராஜா.

”எந்தப் பக்கம் போகணுங்க?... டிரைவர் கேட்டான்.

”மவுன்ட் ரோடு பக்கம் தான்..."

"ஆறரை மணிக்குத்தானே சினிமா? இன்னும் ரொம்ப நேரம் இருக்குதே!'' என்றாள் பாரதி.

"அத்தை லைப்ரரியிலிருந்து புத்தகம் வாங்கி வரச் சொல்லியிருக்காங்க. அங்கே அரை மணி நேரம். அப்புறம் ஓட்டல்லே முக்கால் மணி நேரம்... ஆமாம்; நீ அத்தை கிட்டே சினிமாவுக்குப் போறதாச் சொல்லிட்டு வந்தாயா?....”

"...ம்.....”

"அத்தை என்ன சொன்னாங்க?....''

''யாரோடு சினிமாவுக்குப் போகப் போகிறாய் என்று கேட்டாங்க... சிநேகிதிகளோடு போகப் போறதாச் சொன் னேன். 'சரி'ன்னுட்டாங்க...”

“நான் சொல்லலையா? இன்றைக்கு அத்தை நல்ல மூட்லே இருக்காங்க. நீ போய்க் கேளு. உடனே பர்மிஷன் கொடுத்துடுவாங்கன்னு...''

"ஆமாம்; நீங்க இன்றைக்கு லேட்டாக வீட்டுக்கு வந்தால் பிரின்ஸிபால், எங்கே போயிருந்தேன்னு கேட்பாங்களே!....?

”கேட்கட்டுமே...''

"நீங்க என்ன பதில் சொல்லுவீங்க?''

”எங்க கல்லூரியிலே இன்றைக்கு ஆண்டு விழான்னு ஒரு 'டூப்' அடிச்சுட்றேன்....”

”என்னை மட்டும் சினிமாவுக்குப் போறதாக நிஜம் சொல்லச் சொல்லிவிட்டு நீங்க பொய் பேசலாமா?” என்று கேட்டாள் பாரதி.

''இது பொய் இல்லை,பாரதி!

'பின் என்னவாம்?’

”புளுகு!”

'புளுகுக்கும் பொய்க்கும் என்ன வித்தியாசம்!''

''புளுகிலே பிறத்தியாருக்குத் தீங்கு கிடையாது..... பொய்யிலே அது உண்டு...''

''அப்படின்னா நான் சிநேகிதிகளோடு சினிமாவுக்குப் போறதாச் சொன்னது பொய்தானே?”

''இல்லை ; புளுகு...”

''எனக்கென்னவோ பயமாயிருக்குது... நாம் ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டுச் சினிமாவுக்குப் போயிருக்கோம்னு பிரின்ஸிபாலுக்குத் தெரிஞ்சுதானா?....''

"ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நீ தான் பர்மிஷன் வாங்கியிருக்கியே!”

"நீங்க வாங்கலையே!”

''நான் சினிமாவுக்குப் போகலையே. கல்லூரி ஆண்டு விழாவில் இருந்தல்லவா வர்றேன். அதனாலே லேட்!”

"சுத்தப் பொய்!”

"மறுபடியும் பார்த்தாயா! புளுகுன்னு சொல்லு!”

"எல்பின்ஸ்டனுக்குப் போறீங்களா?' டிரைவர் கேட்டான்.

''முதல்லே லைப்ரரிக்குப் போ. அதோ தெரியுது பார் ! அந்தக் கட்டடத்துக்கு முன்னாலே நிறுத்து...'' என்றான் ராஜா.

டாக்ஸி அங்கே போய் நின்றதும் ராஜாவும் பாரதியும் இறங்கி லைப்ரரிக்குள் சென்றனர்..

''என்னை அனுப்பிடுங்க ஸார்! வெயிட்டிங்லே போடாதீங்க. சம்பாதிக்கிற நேரம்" என்றான் டிரைவர்.

''அதுவும் சரிதான்!'' என்று கூறிய ராஜா, அவனுக்கு மீட்டருக்கு மேல் அதிகப்படியாகவே ஒரு ரூபாய் கொடுத் தனுப்பினான்.

''ரொம்ப சந்தோஷங்கள்” என்று கூறிச் சென்றான் டிரைவர்.

அரை மணி நேரம் கழித்து ராஜாவும் பாரதியும் வெளியே வந்து டாக்ஸிக்காகக் காத்திருந்தபோது அதே டாக்ஸி அருகில் வந்து நின்றதும் பாரதிக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை.

''நீயே வந்து விட்டாயா?'' என்றான் ராஜா.

”ஆமாங்க. இதுக்குள்ளே மாம்பலத்துக்கு ஒரு சவாரி கிடைச்சுது. போயிட்டு வந்தேன். ஏறிக்குங்க.... ஓட்டலுக் குத்தானே?....''

"ஆமாம்...''

”எந்த ஓட்டலுக்கு ?' என்று கேட்டான் டாக்ஸி டிரைவர்.

”முன்னொரு நாள் திறந்த வெளி மாடியில் சாப்பிட்டோமே.-அந்த ஓட்ட்லுக்கே போகலாம்” என்றாள் பாரதி.

டாக்ஸியை அந்த ஓட்டலுக்கு விடச் சொன்னான் ராஜா.

”பக்கத்திலே தான் சினிமா. நாங்கள் நடந்தே போய் விடுகிறோம். நீ காத்திருக்க வேண்டாம்” என்று கூறிய ராஜா, டிரைவரிடம் பணத்தைக் கொடுத்தனுப்பினான்.
பிறகு இருவரும் அந்த ஓட்டலுக்குச் சென்று திறந்த வெளி மாடிக்குப் போய் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த வட்ட மேஜைக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டனர்.

"என்ன சாப்பிடறீங்க?'' என்று கேட்டுக்கொண்டே வந்தான் ஸர்வர்.

அவனிடம் இரண்டு மசாலா தோசைக்கு ஆர்டர் கொடுத்தான் ராஜா.

”எனக்கு மசாலா தோசை பிடிக்கும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்" என்று கேட்டாள் பாரதி.

"எனக்குத் தெரியாது; மசாலா தோசைக்குச் சொன்னால் அது வருகிற வரைக்கும் கொஞ்சம் பொழுது போகுமே என்பதற்காகச் சொன்னேன்...'' என்றான் ராஜா.

பாரதி சிரித்துக்கொண்டே அந்த லைப்ரரி புத்தகத்தை எடுத்துப் புரட்டினாள்.

''மசாலா தோசை வருவதற்குள் நீ இதைப் படித்தே முடித்துவிடலாம்” என்றான் ராஜா.

''ரொம்ப ட்ரை ஸப்ஜெக்ட்! பிலாஸபி இதைப் போய் வாங்கி வந்தீர்களே!' என்றாள் பாரதி.

”இது உனக்கல்ல; அத்தைக்கு. இந்த மாதிரி ட்ரை ஸப்ஜெக்ட்தான் அவங்களுக்குப் பிடிக்கும்...''

சற்று நேரத்துக்கெல்லாம் மசாலா தோசை இரண்டைக் கொண்டு வந்து வைத்தான் ஸர்வர். பாரதி தோசையின் முறுகலான பாகங்களை மட்டும் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினாள்.

''மசாலா தோசையைக் கண்டுபிடித்தானே அவனுக்கு ஒரு சிலை கட்டி வைக்க வேண்டும்...' என்றான் ராஜா.

"ஐஸ்க்ரீம் கண்டுபிடித்தவனுக்கும் தான்” என்றான் பாரதி.

"இப்போது ஐஸ்க்ரீம் வேணும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறாயா?'' என்று கேட்டுவிட்டுச் சிரித்தான் ராஜா.

"இல்லை, இல்லை'' என்றாள் பாரதி.

ஸர்வரைக கூப்பிடுவதற்காக ராஜா திரும்பிப் பார்த்த போது வேறொரு மூலையில் அவனுடைய காலேஜ் பிரின்ஸி பால் உட்கார்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அவன் 'திருதிருவென்று விழிப்பதைக் கண்ட பாரதி, ''ஏன் ராஜா! ஏன் இப்படி இஞ்சி தின்ற மாதிரி விழிக்கிறீங்க...?'' என்று கேட்டாள்.

''நிஜமாகவே இந்த மசாலாவிலே இருந்த ஓர் இஞ்சித் துண்டைத் தின்னு விட்டேன். அதுதான்...'' என்று கூறி மழுப்பினான் ராஜா.

"பொய், பொய்! எதையோ என்னிடம் சொல்லாமல் மறைக்கப் பார்க்கிறீங்க...''

"எங்க பிரின்ஸிபால் வந்திருக்காரு. நாம ரெண்டு பேரும் அவர் பாக்கறதுக்கு முந்தி எழுந்து போயிடணும்...''

''அவர் சினிமாவுக்கும் வந்து சேர்ந்தால்?...”

''வர மாட்டார். சினிமான்னா அவருக்குப் பிடிக்காது...''

அடுத்த நிமிடம் இருவரும் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு விட்டனர்.

''இன்னும் ஆறு மாத காலத்துக்குப் பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். காலையிலும் மாலையிலும் சற்று நேரம் தோட்டத்துக்குள் உலாவும் நேரம் தவிர, வெளியில் எங்குமே செல்லக்கூடாது'' என்று கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தாள் டாக்டரம்மாள்.

அறைக்குள்ளாகவே கட்டுப்பட்டுக் கிடக்கும் கொடுமையைப் பார்வதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கல்லூரிக்குப் போகாமல், கல்லூரியைக் காணாமல், கல்லூரி மாணவிகளுடன் பேசாமல், கல்லூரியில் தன்னுடைய கடமைகளை நிறைவேற்றாமல் இருப்பதை அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
அந்தக் கல்லூரியிலேயே படித்து, அங்கேயே உத்தி யோகத்தில் அமர்ந்து, அங்கேயே புரொபஸராகி, கடைசியில் அந்தக் கல்லூரிக்கே பிரின்ஸிபாலும் ஆகிவிட்டாள் அவள். படித்த காலத்தில் கூரை வேய்ந்த சிறு சிறு ஷெட்டுகளே வகுப்பறைகளாக இருந்தன. இப்போது அந்தப் பழைய தோற்றமே அடியோடு மாறிப் புதிய புதிய கட்டடங்களாக உயர்ந்து நிற்கின்றன. அந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு செங்கல்லும், அவளுடைய முயற்சிக்கும் உழைப்பிற்கும் ஊக்கத்துக்கும் சான்று கூறிக் கொண்டிருக்கின்றன.

புறத் தோற்றத்தில் மட்டும் அந்தக் கல்லூரிக்குக் கவர்ச்சி தேடித் தரவில்லை அவள். அங்கே படித்துத் தேறிய மாணவிகளில் பெரும்பாலோர் இன்று பல்வேறு துறைகளில் புகழுடன் விளங்கி வருகின்றனர். பண்புக்கும், ஒழக்கத்துக் கும் உறைவிடமாகத் திகழும் அந்தக் கல்லூரியை அவள் ஒரு தெய்வத் திருக்கோயிலாகவே போற்றி நடத்தி வருகிறாள். மற்ற கல்லூரித் தலைவர்கள் பார்வதியிடம் மிக்க மதிப்பும் மரியாதையும் கொண்டு ஒருவித அச்சத்துடனேயே பழகி வந்தனர்.

பார்வதியின் உடல் நிலையைப்பற்றி விசாரித்துவிட்டுப் போக இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தினமும் பலபேர் வந்து போய்க்கொண்டிருந்தனர். கல்வித் துறையில் புகழ்பெற்ற நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், வேதாந்திகள், டாக்டர் பட்டம் பெற்ற அறிவாளிகள், பழைய மாண வர்கள், இதரக் கல்லூரித் தலைவர்கள் எல்லோருமே வந்தனர்.

நம் நாட்டுக்கேற்ற வகையில் கல்வித் துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிப் பார்வதி அவர்களிடம் விவாதித்தாள். அவளுடைய பேச்சைக் கேட்ட பிறகு, அவர் களுக்குப் பார்வதியிடமிருந்த மதிப்புப் பன்மடங்காக உயர்ந்தது.

அன்று, கார்னேஷன் கல்லூரி பிரின்ஸிபால் வேதாந்தம் வந்திருந்தார். தூய தமிழிலேயே அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த பார்வதி, அவர் புறப்படும் நேரத்தில் ஞாபகமாக, "மீனா - கோபாலன் நட்பு இப்போது எந்த மட்டில் இருக்கிறது?' என்று கேட்டாள்.

வேதாந்தம் சிரித்துக் கொண்டே, "நல்ல முறையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. தாங்கள் கூட மீனாவின் தந்தைக்குக் கடிதம் எழுதியிருந்தீர்களாம். அவளுடைய தந்தை என்னைக் காண வந்திருந்தபோது கூறினார். கோபாலனைப்பற்றி எல்லா விவரங்களையும் விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவனையும் நேரில் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார். அநேகமாகத் திருமணத்துக்கு ஏற்பாடானாலும் வியப்பதற்கில்லை'' என்றார்.

அவர்கள் இருவருக்கும் என் மனப்பூர்வமான ஆசிகள்) என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினாள் பார்வதி.

இரவு மணி ஒன்பதரை இருக்கலாம். பார்வதி கண்களை மூடியபடியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. "ஒருவேளை சேதுபதியாயிருக்குமோ?" என்று யோசித்தாள்.

ஞானத்தை அழைத்து "வாசலில் கார் சத்தம் கேட்டதே, யார் வருகிறார்கள் என்று பார்'' என்றாள்.

"பாரதி..." என்றாள் ஞானம்.

"ராஜா இன்னும் வரவில்லையா? " பார்வதி கேட்டாள்.

"இன்னும் இல்லை...''

"சரி; சாப்பிட்டு முடிந்ததும் பாரதியை இங்கே வரச் சொல்!" என்று கூறி அனுப்பினாள் பார்வதி.

முதலில் பாரதியை டாக்ஸியில் கொண்டுவந்து விட்ட ராஜா பத்து நிமிடம் கழித்து அதே டாக்ஸியில் வந்து இறங்கினான்.

அவன் வந்து இறங்கியபோதும் கார் சத்தம் கேட்கவே, ”ராஜாவாகத்தான் இருக்கவேண்டும்” என்பதைப் பார்வதி எளிதில் ஊகித்துக்கொண்டாள்.

பாரதி சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஹார்லிக் ஸ்டன் பரம சாதுவாக மாடிக்குச் சென்றாள். பாரதியைக் கண்ட பிரின்ஸிபால் ”என்ன பாரதி! சினிமா நன்றா யிருந்ததா? என்ன படம் யாரெல்லாம் போயிருந்தீங்க?” என்று அன்போடு விசாரித்தாள்.

"இங்கிலீஷ் பிக்சர் மேடம்! அன்னாகரீனா!.” என்றாள் பாரதி.

”டால்ஸ்டாய் எழுதினது. ரொம்ப நல்ல கதையாச்சே! லவ் ஸ்டோரிதான்... ஆமாம்... ராஜா வந்து விட்டானா?''

”இப்பத்தான் வந்திருக்கிறார்...''

''அவனைக் கூப்பிடு இங்கே...”

”கூப்பிட்டீங்களா அத்தை!'' என்று இறைந்து சத்த மிட்டபடியே மாடிப்படிகள் அதிர ஏறி வந்தான் ராஜா.

தான் எதுவுமே தவறு செய்யாதவன் போல் காட்டிக் கொள்ள வேண்டுமென்பதற்-காகவே அவசியமின்றி உரத்துச் சத்தமிட்டுக் கொண்டு வந்தான் அவன்.

"ஏண்டா இவ்வளவு நேரம் உனக்கு?''

”இன்றைக்கு எங்க காலேஜிலே ஆண்டு விழா அதனாலே லேட்” என்று பொய் சொன்னான் ராஜா. இல்லை; புளுகினான்.

”ஓகோ! ஆண்டு விழாவா? ரொம்ப ஜோராக நடந் திருக்குமே! உ பார்ட்டி உண்டா? பிரின்ஸிபால் என்ன பேசினார்?”

"ஆமாம்; ரொம்ப கிராண்ட்! பிரின்ஸிபால் ரொம்ப நல்லாப் பேசினாரு...'' என்று பொய் சொன்னான் ராஜா. இல்லை; புளுகினான்.

”அப்புறம் டீ பார்ட்டியிலே என்னடா ஐட்டம்?”

"...ம்.... மசாலா தோசை!....”

"என்னடா உளறுகிறாய்?... டீ பார்ட்டியிலே மசாலா தோசையா?”

"ஆமாம், அத்தை! மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து கேட்டுக் கொண்டோம், மசாலா தோசை வேண்டும் என்று...'' என்று பொய் சொன்னான் ராஜா. இல்லை; புளுகினான்.

''சரி; லைப்ரரியிலிருந்து புத்தகங்கள் வாங்கி வரச் சொன்னே, வாங்கி வந்தாயா?”

''ஓ!' என்று கூறிய ராஜா, லைப்ரரிப் புத்தகங்களை எடுத்து அத்தையிடம் கொடுக்க வந்தான். அப்போது அந்தப் புத்தகம் ஒன்றிலிருந்து இரண்டு சினிமா டிக்கெட்டு கள் கீழே உதிர்ந்தன.

''இதென்னடா சினிமா டிக்கெட்?”

''யாரோ இதுக்கு முன்னாலே இந்தப் புத்தகத்தை லைப்ரரியிலிருந்து வாங்கிக் கொண்டு போனவங்க சினிமாவுக்குப் போயிருப்பாங்க. அவங்க இந்தப் புத்தகத்திலே அந்த டிக்கெட்டுகளை வைத்திருப்பாங்க" என்றான் ராஜா.

பார்வதிக்கு எல்லாம் புரிந்து விட்டது. அவள் புன்முறுவலோடு அவனை ஏற இறங்கப் பார்த்தாள். அந்தப் பார்வையிலும் சிரிப்பிலும் ''ஏன் பொய் சொல்கிறாய்?" என்ற கேள்வி பொதிந்து கிடந்தது.

"ராஜா! உங்க கல்லூரிப் பிரின்ஸிபாலுக்குத் துளிக்கூட கடமையுணர்ச்சி என்பதை கிடையாது?”

''ஏன் அத்தை அப்படிச் சொல்றீங்க. அவர் எதிலேயும் ரொம்ப கரெக்ட் ஆச்சே!''

''இல்லே... கல்லூரியிலே ஆண்டு விழா நடக்கிறபோது அங்கே இல்லாமல், என்னைப் பார்க்க வந்து விட்டாரே. இன்று மாலை இங்கே வந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தாரே!'' என்றாள் பார்வதி.

”அடப்பாவி மனுஷா! இங்கேயும் வந்து விட்டாரா?'' என்று எண்ணிக்கொண்ட ராஜா, இஞ்சி தின்ற மாதிரித் திருதிருவென விழித்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
குருத்து இருபது



பார்வதி எதிரில் அசடு வழிய நின்று கொண்டிருந்த ராஜா, ’தான் கூறிய பொய்களையெல்லாம் அத்தை புரிந்து கொண்டு விட்டாளே! இனிமேல் ஒருவேளை என்னையும், பாரதியையும் வெளியே செல்ல அனுமதிக்கவே மாட்டாளோ?' என்று எண்ணமிட்டான்.

"போடா! போய்ச் சாப்பிடு; மணி பத்தரை ஆகப் போகிறது. பாவம்! உனக்காக ஞானமும், காமாட்சி அம்மாளும் எத்தனை நேரமாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள், பார் ! இனிமேல் சினிமாவுக்குப் போவதாயிருந்தால் என்னிடம் சொல்லிவிட்டுப் போக வேண்டும், தெரிந்ததா? சினிமாவே பார்க்கக்கூடாது என்கிற கட்சியைச் சேர்ந்தவளல்ல நான்.”

''மக்களின் உள்ளத்தில் ஒழுக்கத்தையும், பண்பையும் வளர்ப்பதற்குப் பயன்படுத்த வேண்டிய அந்தச் சாதனம், பெரும்பாலும் நேர்மாறான முறையிலேயே உபயோகப் படுத்தப்படுகிறது. அதனால்தான் சினிமாவை நான் வெறுக் கிறேன். நல்ல படங்கள் பார்ப்பதை நான் எப்போதுமே ஆட்சேபித்ததில்லை. ராஜா!.... எனக்கு இரண்டே இரண்டு கண்கள் தான் உண்டு. அவை என்ன தெரியுமா? ஒன்று சாரதாமணிக் கல்லூரி ; இன்னொன்று நீ! என்னுடைய கண்களில் ஒன்று என் கண்ணெதிரிலேயே கெட்டுப் போவதை நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? நீ சிறு குழந்தையா-யிருந்தபோதே உன் தாயார் உன்னைப் பிரிந்து சென்று விட்டாள். அன்று முதல் உன்னை ஆசை யோடு, பாசத்தோடு வளர்த்து வருகிறேன். வருங்காலத் தில் நீ எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருக்கிறேன்.''

"ஏன் அத்தை வருத்தப்படறீங்க? நான் இப்ப என்ன செய்துட்டேன்?... சினிமாவுக்குப் போகக் கூடாதுங்கறீங்க. அவ்வளவுதானே! இனிமே போகல்லே! அப்படிப் போனாலும் உங்ககிட்ட பர்மிஷன் வாங்காமல் போவதில்லை. சரி தானே!”

“ரொம்ப சரி; சாப்பிடு போ.........”

''எனக்குப் பசியே இல்லை அத்தை !''

''எப்படிப் பசிக்கும்? டீ பார்ட்டியிலே மசாலா தோசை சாப்பிட்டிருக்கியே!'' என்று சிரித்தாள் பார்வதி.

”கேலி செய்யாதீங்க அத்தை !...' என்று கூறிக் கொண்டே ராஜா கீழே இறங்கிச் சென்றான். ’ஒரு மட்டில் அத்தையிடம் தப்பினோம்' என்ற உற்சாகத்தில் போகும் போதே சினிமாப் பாட்டு ஒன்றை நீட்டி முழக்கிச் சீட்டி யடித்துக் கொண்டு போனான்!

”பாரதி ! நீ சாப்பிட்டாயிற்று அல்லவா? இப்படி என் பக்கத்திலேயே படுத்துக்கொள்...'' என்று பிரின்ஸிபால் கூறியதும் பாரதி, அதிக வெளிச்சமின்றிக் குளுமையாக ஒளி வீசும் நீலவிளக்கைத் தவிர, மற்ற விளக்குகளை அணைத்து விட்டுப் படுத்துக் கொண்டாள்.

மணி பதினொன்றுக்கு மேல் ஆகியும் பார்வதிக்குத் தூக்கமே வரவில்லை சந்தடிகள் குறையக் குறைய, ஊர் அடங்கி உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தது. எங்கோ தொலைவில் செல்லும் கார்களின் ஹாரன் ஒலி மட்டும் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தன அவளுக்கு.

அவர் இப்போதெல்லாம் முன்போல் இங்கே வருவதில்லையே, ஏன்? ஒரு வேளை அவர் கொண்டுவந்த மாதுளம் பழங்களை நான் ஆர்வத்துடன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலோ? இருக்காது; அவர் தம்முடைய கையால் எடுத்துக் கொடுத்ததை நான் என் கை நீட்டி வாங்கிச் சாப்பிட்டேனே! அவருக்கு எத்தனையோ அலுவல்கள்! எவ்வளவோ காரியங்கள். அவற்றுக்கிடையில் என்னை வந்துகாண அவகாசம் சிறிதாவது வேண்டாமா?... ஒரு வேளை உண்மையிலேயே என் மீது அவருக்கு அன்பேதான் இல்லையோ? சே! ஒரு நாளும் அப்படி இருக்காது. என்மீது அவருக்கு அன்பு இல்லையென்றால் தம்முடைய தங்கை காமாட்சி அம்மாள், மகள் பாரதி இரண்டு பேரையும் இங்கே கொண்டுவந்து விட்டிருப்பாரா? காமாட்சி கூட அடிக்கடி சொல்லுவாளே, உங்களைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டால் மட்டும் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பார்'' என்று... அன்பும் அக்கறையும் இல்லையென்றால் அப்படி ஓயாமல் பேசுவாரா? டாக்டரம்மாளிடம் என் தேகநிலை பற்றி அடிக்கடி விசாரித்துக் கொண்டிருக்கிறாராமே! எனக்கு உடல் நலம் சரியில்லை என்பதற்காகத் தம்முடைய வெளியூர்ப் பயணங்களை யெல்லாம் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறாராமே! இங்கே வராமலிருப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அவற்றை-யெல்லாம் அவர் கூற முடியாமலிருக்கலாம்.'

பார்வதி புரண்டு படுத்துக் கொண்டாள்.

”சேதுபதியை மறந்து விடுவதற்கு, என் உள்ளத்தில் புகுந்து வேரூன்றிவிட்ட அந்த எண்ணத்தை அப்புறப் படுத்துவதற்கு வழியே கிடையாதா? இப்படியே,மனத்திற் குள்ளாகவே மறைத்து வைத்து அவர் நினைவாகவே அவர் கவலையாகவே, படுத்த படுக்கையாகவே இருந்து, ஒரு நாள் மறைந்து போக வேண்டியதுதானா? இந்த எண்ணம் என்னுள்ளேயே அழிந்து போக வேண்டியது தானா? நான் ஏன் அழிய வேண்டும்? என்னை அணு அணுவாக அரித்துக் கொண்டிருக் கும் இந்த எண்ணத்தை, நான் அழியாமலேயே அழித்து விடுகிறேன். அவருடைய உள்ளத்தில் அந்த எண்ணமிருந்தா லும் நாளையோடு ழித்து விடுகிறேன். அப்புறம் நானும் அவரும் நிம்மதியாக வாழலாம். எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்” பார்வதியின் உள்ளத்தில் ஒரு திடமான முடிவு ஏற்பட்டுவிட்டது. நீண்ட காலமாக அரித்துக் கொண்டிருந்த வேதனை அந்த விநாடியோடு தீர்ந்து போயிற்று. மிகுந்த நிம்மதியுடன் ஒரு பெருமூச்சு விட்டாள் அவள்.

கடிகாரத்தில் மணி பதினொன்றரை அடித்தது.

''இப்போது அமைதியாகத் தூங்கப் போகிறேன்'' என்று தனக்குத்தானே எண்ணிக் கொண்டவளாய்க் கண்களை மூடித் தூங்குவதற்குப் பிரயத்தனப்பட்டாள். என்றுமில்லாத நிம்மதி காரணமாக, உள்ளத்தில் வியாபித்திருந்த மகிழ்ச்சி காரணமாக உணர்ச்சி பரவசமாகியிருந்த பார் வதிக்குத் தூக்கமே வரவில்லை.

திடீரென்று, கீழே, காமாட்சி யாருடனோ மெல்லிய குரலில் இரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பது பார்வதி யின் காதில் விழுந்தது.

இன்னொரு குரல் யாருடையது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் அவள் உற்றுக் கவனித்தாள். அவள் ஊகித்தபடி அது சேதுபதியின் குரலேதான்! அவளுக்கு வியப்புத் தாங்கவில்லை.

மாடிப் படிகளில் யாரோ ஏறி வரும் ஒசை கேட்கவே, பார்வதி கண்களை மூடிக்-கொண்டு தூங்குவது போல் படுத்திருந்தாள்.

அறைக்கு வெளியே வந்து நின்ற சேதுபதியும் காமாட்சியும் ஜன்னலினூடே நிழலுருவமாகத் தெரிந்தனர்.

நீல விளக்கின் லேசான ஒளியில் தெரிந்த பார்வதியின் முகத்தையே சற்று நேரம் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் சேதுபதி.

”எழுப்பட்டுமா, அண்ணா ?...” காமாட்சி கேட்டாள்.

"வேண்டாம்; நான் இங்கு வந்து போவதே அவருக்குத் தெரியக்கூடாது. அதற்காகவே-தான் நான் இங்கு இவ்வளவு நேரம் கழித்து வருகிறேன். நான் காரில் வந்தால் அந்தச் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டுவிடப் போகிறாரே என்பதற்காகவே நடந்து
வருகிறேன்.''

"டாக்டர் என்ன சொல்கிறார் அண்ணா?” காமாட்சி கேட்டாள்.

”அதிர்ச்சியாலும் கவலையாலும் அடிக்கடி மயக்கம் வருகிறதாம். ஆகையால் இன்னும் கொஞ்ச காலத்துக்குப் படுக்கையிலேயே இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டு-மென்கிறார். இந்த நிலையில் அவரை நான் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்-காகவே தினமும் இந்த நேரத்தில் வந்து பார்த்து விட்டுப் போகிறேன்.....”

"இன்று கூட உன்னைப்பற்றி விசாரித்தார். எங்காவது வெளியூர் போயிருக்கிறாரா என்ன? இங்கே வருவதே இல்லையே என்று கேட்டார்.''

""நீ என்ன பதில் கூறினாய்?"

”ஊரில் தான் இருக்கிறார். டெலிபோனில் அடிக்கடி விசாரித்துக் கொண்டிருக்கிறார் என்றேன். நீ இப்போது இங்கு வந்திருப்பது தெரிந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார் தெரியுமா அண்ணா ? எழுப்பட்டுமா?....'' என்று கேட்டாள் காமாட்சி.

”வேண்டாம், வேண்டாம்... அதோ அந்தப் பக்கம் படுத்துக்கொண்டிருப்பது யார்? பாரதியா?....” என்று கேட்டார் சேதுபதி.

"ஆமாம்; பாரதியை எப்போதும் தம் பக்கத்திலேயே தான் படுக்கவைத்துக் கொள்கிறார். பாரதியிடம் எவ்வளவு அன்பு தெரியுமா அண்ணா அவருக்கு?...”

"ஓ.. சரி காமாட்சி! நான் போய் வருகிறேன் பார்வதியின் உடம்பை ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள். அதற்காகத்தான் உன்னையும், பாரதியையும் இங்கேயே இருக்கச் சொல்லியிருக்கிறேன்..” சேதுபதியும் காமாட்சியும் பேசியபடியே மாடிப்படிகளில் இறங்கிச் செல்லும் சத்தம் கேட்கிறது.

தன் கண்களில் படர்ந்த நீர்த்துளிகளைத் துடைத்துக் கொள்கிறாள் பார்வதி.

பொழுது விடிந்தது. காமாட்சி ஹார்லிக்ஸ்ட ன் பார்வதியின் அறைக்குள் வரும்போதே, "இன்றைக்கு எனக்கு இட்லி சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. சாயந்தரம் அஞ்சு மணிக்கு எனக்கு இரண்டு இட்லியும் கொஞ்சம் காரமாகத் தக்காளிப் பச்சடியும் செய்யச் சொல்லி ஞானத் திடம் சொல்லி விடுங்கள்'' என்றாள் பார்வதி.

''அதெல்லாம் சாப்பிட்டால் ஜீரணம் ஆகுமா?”

”பேஷாக ஆகும். எனக்கென்ன ஜூரமா என்ன? ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளி-களுக்குக்கூட இட்லி கொடுக்கிறார்களே!” என்றாள் பார்வதி.

”இட்லி என்றால் என் அண்ணாவுக்கு ரொம்பப் பிடிக்கும்......” என்றாள் காமாட்சி.

''முன்னொரு நாள் கூடச் சொல்லி யிருக்கீங்க. இன்றைக்குச் சாயந்தரம் உங்க அண்ணாவை இங்கே வரச் சொல்லப் போகிறேன். அவர் ஊரில் இருக்கிறாரா?” என்று கேட்டாள் பார்வதி.

”இருக்கிறார்; நான் போன்லே பேசி, அவரை வரச் சொல்லட்டுமா?'' என்று கேட்டாள் காமாட்சி.

''வேணாம். அது மரியாதை இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்திலே நானே அவரைப் போனில் கூப்பிட்டுப் பேசுகிறேன், அதுதான் மரியாதை!'' என்றாள் பார்வதி.

பார்வதி அவருக்குப் போன் செய்தபோது அவருடன் வேறு யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். அரைமணி நேரம் கழித்துப் பார்வதி மீண்டும் டெலிபோன் செய்தபோது சேதுபதியின் குரல் கேட்டது.

"ஓ நீங்களா? வணக்கம், உங்கள் உடல் நிலை பற்றித் தான் இத்தனை நேரம் டாக்டரம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். தங்களுக்குத் துளிக்கூட கவலையே இருக்கக் கூடாதாம். மனத்துக்கு நிம்மதியும் உடலுக்கு ஓய்வும் இருந்தால் ஆறே மாதத்தில் குணமாகிவிடும் என்கிறார் என்றார் சேதுபதி.

”அப்படியா! ரொம்ப மகிழ்ச்சி. எனக்குக் கூட அப்படித் தான் தோன்றுகிறது. இப்போது தங்களை நான் போனில் அழைத்தது கூட அதற்காகத்தான். உங்களிடம் ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும். தயவுசெய்து இன்று மாலை ஐந்து மணிக்கு இங்கே வந்து போகமுடியுமா? உங்களுக்குச் சிரமம் கொடுப்பதற்காக மன்னிக்கவேண்டும்” பணிவோடும் கனி வோடும் ஒலித்தது பார்வதியின் குரல்.

”ஓ! வருகிறேனே.. இதென்ன சிரமம்? நானும் உங்களைப் பார்த்து வெகு நாளாயிற்று. அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதற்காகவே வருவதில்லை. மாலையில் அவசியம் வருகிறேன்.....”

”ரொம்ப சந்தோஷம்...'' என்று கூறி ரிஸீவரை வைத்த பார்வதிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

"ராஜா! இன்று மாலை பாரதியின் அப்பா இங்கே வரப் போகிறார், டிபனுக்கு இட்லியும் காரமாகத் தக்காளிச் சட்னிவும் போடச் சொல்லியிருக்கிறேன். நம் வீட்டு வாசல் தோட்டத்திலேயே காற்றாட உட்கார்ந்து பேசுகிறோம். ஐந்து மணிக்கு அங்கே இரண்டு நாற்காலிகள் போட்டு வைக்கச் சொல்லு...'' என்றாள்.

”ஆகட்டும் அத்தை !'' என்றான் ராஜா.

மாலையில் சேதுபதியைச் சந்திக்கும்போது அவரை எவ்வாறு வரவேற்க வேண்டும்? எப்படி உபசரிக்க வேண்டும்? எவ்வாறு பேச்சைத் தொடங்கி முடிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் சிந்தித்துத் திட்டமிட்டு வைத்துக் கொண்டாள் அவள்.

மணி ஐந்தடிக்கும்போதே சேதுபதியின் கார் உள்ளே வந்து கொண்டிருப்பதைக் கண்ட பார்வதி, என்றுமில்லாத குதூகலத்துடன் அவரை வரவேற்க எழுந்து நின்றாள்.

தன்னை வரவேற்கத் தோட்டத்திலேயே காத்துக் கொண்டிருந்த பார்வதியைப் பார்த்து, "நீங்கள் ஏன் கீழே இறங்கி வந்தீர்கள்? நானே மாடிக்கு வந்திருப்பேனே!'' என்றார் சேதுபதி.

"நான் தினமும் கீழே இறங்கித் தோட்டத்துக்குள் கொஞ்ச நேரம் நடக்க வேண்டும் என்று டாக்டர் கூறியிருக்கிறார். ஆகையால் இன்று தங்களுடன் பேசிக் கொண்டே சற்றுநேரம் நடக்கலாம் என்று எண்ணினேன்.''

"அப்படியா? ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்லுங்கள்'' என்றார் சேதுபதி சிரித்துக் கொண்டே.

''இப்படி உட்கார்ந்து பேசுவோமா?” என்று கேட்டாள் பார்வதி.

''இந்த இடம் ரொம்ப அமைதியாகவும் அழகாயுமிருக்கிறது...'' என்றார் சேதுபதி ஆசனத்தில் அமர்ந்தபடியே,

பாரதி சுடச்சுட இட்லியும், தக்காளிச் சட்னியும் கொண்டு வந்து வைத்தாள்.

''பேஷ்! எனக்குப் பிடித்த டிபன்!'' என்றார் சேதுபதி.

”எனக்கும்தான்'' என்று கூறினாள் பார்வதி.

”தக்காளிச் சட்னி ரொம்பக் காரமாயிருக்குமே! நீங்கள் இவ்வளவு காரம் சாப்பிடக்கூடாது'' என்றார் சேதுபதி.

"எனக்கு ஜுரம் ஒன்றுமில்லை. எது பிடிக்கிறதோ அது சாய்பிடலாம் என டாக்டரே கூறியிருக்கிறார்'' என்றாள் பார்வதி.

"இளம் வயதில் கல்லையும் ஜீரணம் செய்து கொள்ள லாம். ஐம்பதைத் தாண்டிவிட்டால் ஆகாரம் சாதுவா யிருக்கவேண்டும். ஆவியில் வெந்த இட்லி எளிதில் ஜீரணமாகி விடக்கூடியது. வாய்க்கு ருசியாகவும் இருக்கிறது. ஆமாம், எனக்கு இட்லி பிடிக்கும் என்று உங்களுக்கு யார் சொன்னது?'' என்று கேட்டார் சேதுபதி.

''யாரும் சொல்லவில்லை. எனக்குப் பிடிக்கும் என்பதற்காகவே செய்யச் சொன்னேன். இது உங்களுக்கும் பிடித்த பண்டமாக அமைந்துவிட்டது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றாள் பார்வதி.

''இந்த இட்லியும், தக்காளிச் சட்னியும் ரொம்பப் பொருத்தமாக அமைந்து விட்டன. நல்ல காம்பினேஷன்'' என்றார் சேதுபதி.

”மண வாழ்க்கையும் இப்படி அமைந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?'' என்றாள் பார்வதி.

சேதுபதி அவளை ஏறிட்டுப் பார்த்தார்; அந்தப் பார்வையில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்ற கேள்வி தொக்கி நின்றது.

”தங்களிடம் இன்று ஒரு முக்கியமான விஷயம் பற்றிப் பேசப் போகிறேன். நான் கூறப்போவதைத் தாங்கள் முழு மனத்துடன் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்ற பீடிகையுடன் பேச்சைத் தொடங்கினாள் பார்வதி.

"என்ன விஷயம் அது?'' என்று நிதானமாகக் கேட்டார் சேதுபதி.

''திருமண விஷயம்தான்'' என்று கூறிவிட்டுப் பார்வதி, சேதுபதியின் முகத்தையே கண்கொட்டாமல் கவனித்தாள். அவர் முகத்தில் எவ்வித வியப்புக் குறியும் தோன்றவில்லை, சலனமற்ற அவர் முகம் எப்போதும் போல் அமைதியாகவே இருந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
குருத்து இருபத்தொன்று



'திருமண விஷயம்’ என்று தான் கூறியதும், அந்த விஷயத்தை அறிந்து கொள்ள சேதுபதி மிகுந்த ஆர்வம் காட்டுவார் என்று பார்வதி எதிர்பார்த்தாள். ஆனால், விஷயம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தபோதிலும் நிதானமிழந்து பரபரப்புக் காட்டுவது அவருடைய சுபாவ மல்லவே!

சேதுபதி கூறப்போகும் பதிலை எதிர்பார்த்தவளாய், அவர் முகத்தையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண் டிருந்தாள் பார்வதி.

சற்று நேரம் புன்முறுவலோடு மெளனமாகவே அமர்ந் திருந்த சேதுபதி, "எனக்கு இதில் துளியும் ஆட்சேபணை இல்லை... ஆனால்...” என்று பாதியில் பேச்சை நிறுத்திக் கண்களை மூடிக்கொண்டார்.

”தேவி இவர் மனத்தில் என்ன எண்ணிக்கொண்டிருக்கிறார். ஒரு வேளை நான் கூறுவதை விபரீதமாகப் புரிந்து கொண்டு விட்டாரோ?” பார்வதியின் உள்ளத்தில் திக் கென்றது.

''ராஜா, பாரதியின் சம்மதம் தான் இதில் முக்கியம். திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்கள் அவர்கள் தானே” என்று பேச்சை முடித்தார் சேதுபதி.

நிதானம், உறுதி, மன ஆழம் இம்மூன்றையும் மீறி நின்றது அவருடைய அறிவுக் கூர்மை!

’திருமண விஷயம் என்றதும், அது ராஜா - பாரதி திருமணம் பற்றியதுதான் என்பதை எவ்வளவு எளிதில் ஊகித்து விட்டார் ஊகித்ததோடு மட்டுமின்றி, தம் யூகத்தில் சந்தேகமே இல்லாதவர்போல் தீர்மானமாக ’அவர்கள் இரண்டு பேர் சம்மதம்தானே இதில் முக்கியம்?’ என்றல்லவா கூறுகிறார்? ராஜா - பாரதி திருமணம் பற்றித் தான் நான் பேசுவேன் என்பதை அவர் எவ்வாறு அறிந்து கொண்டார்? ஒருவேளை என் உள்ளத்தில் மறைந்துகிடக்கும் ரகசியங்களை யெல்லாம் கூடத் தெரிந்து கொண்டு தெரியாதவர் போல் நடித்துக் கொண்டிருப்பாரோ?’

அவருடைய அறிவை, ஆற்றலை, நெஞ்சத்தின் ஆழத்தை அளக்கும் சக்தி பார்வதிக்கு இல்லை. வியப்புக் காரணமாகச் சிறிது நேரம் பேசவே இயலாமல் கிடந்த பார்வதி, கடைசியாகக் கேட்டாள் :
"ராஜா - பாரதி திருமணம் பற்றித்தான் நான் பேசப் போகிறேன் என்பதைத் தாங்கள் எப்படி ஊகித்தீர்கள்? என்னால் உங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை...!” உணர்ச்சி வசப்பட்டிருந்த பார்வதியின் குரலில் வியப்பும் தடுமாற்றமும் கலந்திருந்தன.

”எனக்குத் தெரியும், பாரதியைத் தாங்கள் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருவதை நான் அறிவேன். அவள் ராஜாவுடன் நெருங்கிப் பழகத் தாங்கள் இடமளித்திருப்பதும் தெரியும். பாரதியிடம் தாங்கள் கொண்டுள்ள அன்பு உள்ளத் தோடு ஒட்டியது. எவ்வளவோ தொந்தரவுகளுக்கும் கவலைகளுக்குமிடையில் பாரதியின் எதிர்காலத்தைப்பற்றி மிகுந்த அக்கறை காட்டி வருகிறீர்கள். ஒரு கல்லூரியின் பிரின்ஸிபாலாக இருந்தும், அவளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்க முன்வந்தீர்கள். இப்போது உடல் நிலை சரியில்லாத போதும் அவளைத் தங்களுடனேயே வைத்துக்கொண்டு, தங்களுக்குப் பக்கத்திலேயே படுக்கச் சொல்லி அன்பு பாராட்டி வருகிறீர்கள். இதுக்கெல்லாம் என்ன காரணம் இருக்க முடியும்? தங்களுடைய அந்தரங்கத்தைப் புரிந்து கொண்டுதான் பாரதியும் ராஜாவும் நெருங்கிப் பழகுவதை நான் ஆட்சே பிக்கவில்லை ”

"அப்படியானால் தங்களுக்கு இத்திருமணத்தில் பூரண சம்மதம் என்று சொல்லுங்கள்...''

”அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதால் நம் எதிர்கால வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும் என்றே நினைக்கிறேன்...''

''ஐயோ! என் உள்ளத்தில் இருக்கும் ரகசியத்தை இவர் ஞான திருஷ்டியால் அறிந்தது போலல்லவா சொல்கிறார்? பார்வதிக்கு வியப்புத் தாங்கவில்லை.

உண்மையில் அவள் எண்ணிக் கொண்டிருந்ததும் அது தானே? ’ராஜாவை, அவனுடைய குழந்தைப் பருவம் முதல் சொந்தத் தாயைப்போல் அன்புடன் சீராட்டி வளர்த்து வருகிறேன். ராஜாவுக்கு அவன் தாய் தந்தை இருவரையுமே தெரியாது. அவனை என் மடியிலே போட்டு அமுதூட்டி வளர்த்திருக்கிறேன். அவன் நோயுற்ற காலங்களில் தோளிலே சுமந்து சென்று சிகிச்சை செய்து வந்திருக்கிறேன். ராஜா இன்று பெரியவனாக வளர்ந்து, படித்து, பாஸ் செய்து திருமணம் செய்து கொள்ளும் பருவத்தை அடைந்துவிட் டான். ராஜாவின் திருமணமும் நடந்துவிட்டால் என் வாழ்க்கையின் லட்சியம் பூர்த்தியாகிவிடும். ஆனால் இந்த நேரத்தில், காலம் கடந்த காலத்தில், பருவமற்ற பருவத்தில் என் உள்ளத்தில் வீண் சபலத்துக்கு இடமளித்து விட்டேன். திருவாளர் சேதுபதியைச் சந்தித்தபோது என் இதயத்தில் தோன்றிவிட்ட உணர்வு, காலம் கடந்த உணர்வு தான். அந்த வித்து முளைவிட்டு, இலைவிட்டுச் செடியாகி இப்போது பெரிய மரமாகவே வளர்ந்துவிட்டது. முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டிய செடியை மரமானபின் வாள் கொண்டு அறுக்க முற்பட்டிருக்கிறேன்.'

'சோடாபுட்டியின் நெஞ்சுக்குள்ளே புகுந்து ஊசலாடும் கண்ணாடிக் கோலியைப்போல் அந்த உணர்வு என் உள்ளத்தில் புகுந்து அழைத்துக் கொண்டிருக்கிறது. இதை என்னால் விழுங்கி ஜீரணம் செய்து கொள்ளவோ, வெளியே துப்பவோ முடியவில்லை. இப்படி எத்தனைக் காலத்துக்கு அந்த உணர்வை என்னுள்ளேயே வைத்து மறுகுவேன்? இதற்கு முடிவே கிடையாதா?’

'என் அந்தரங்கத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்தச் சேதியை அவரிடம் வெளிப்படையாக எடுத்துச் சொல்லிவிட வேண்டும் என்று நானும் எத்தனையோ முறை முயன்று பார்த்துவிட்டேன். ஆனால் அதற்குரிய தைரியம் எனக்கு வரவே-யில்லை. அவரை நேரில் காணும்போது என் தைரியமெல்லாம் பறந்து போய் விடுகிறது. உணர்ச்சி வசப்பட்டுப் பேசும் ஆற்றலையே இழந்து விடுகிறேன். அவர் நினைவாகவே, அந்த நினைவின் பயனாக ஏற்பட்ட கவலையின் விளைவாகவே உள்ளம் திடம் குலைந்து, உடல் பலவீனமுற்று மயக்கமாகக் கீழே சாய்ந்து விட்டேன்.

'அன்று முதல் படுத்த படுக்கையாகவே கிடக்கிறேன். இந்த நிலையிலும் என் நெஞ்சம் அவருடைய நேசத்தை மறக்க மறுக்கிறது. அவரும் என்னை மறந்துவிடுவார் என்று தோன்றவில்லை. அவர் மன ஆழத்தை என்னால் காணவே முடியவில்லை தான். ஆனாலும் அவர் உள்ளம் எனக்குப் புரி கிறது. அவர் அன்பு உள்ளத்தில் எனக்கு இடமளித்திருக் கிறார் என்பதை நான் அறிவேன். இருவருமே ஒருவரை யொருவர் நேசிக்கிறோம். அந்த நேசத்தை வாய்விட்டுக் கூற முடியாத நிலையில் பழகி வருகிறோம். இந்த நிலை இனியும் நீடிக்கக் கூடாது. அதற்குள்ள ஒரே வழி ராஜா - பாரதியின் திருமணம்தான். பாரதி அவருடைய சொந்த மகள். ராஜா என்னுடைய சொந்த மகனைப் போல் வளர்ந்தவன். அதாவது ராஜாவுக்கு நான் தாய். பாரதிக்கு அவர் தந்தை. பாரதிக்கும் ராஜாவுக்கும் திருமணத்தை நடத்தி விட்டால் எங்களிரு வருக்குமிடையே உள்ள உறவு மாறிவிடும். அவர் எனக்குச் சம்பந்தியாகி விடுவார். அப்புறம்? அவர் மகளுக்கும் என் மகனுக்கும் கலியாணம் செய்து வைத்துவிட்ட பிறகு, எங்களிருவருக்குமிடையே வளர்ந்து வரும் அந்த உணர்வுக்கு இடமில்லாமல் போய்விடுமல்லவா? ராஜா திருமணத்தின் மூலமாகத்தான் என் உள்ளப் போராட்டத்துக்கு முடிவு காண முடியும்? அப்புறம் தான் நானும் அவரும் அமைதியாக வாழ முடியும். சஞ்சலமின்றிப் பழக முடியும்.''

இதுதான் பார்வதியின் திட்டம். நீண்ட சிந்தனைக்குப் பிறகு ஏற்பட்ட முடிவு. இப்போது சேதுபதியிடம் விஷயத்தைச் சொல்லியும் விட்டாள். ராஜா - பாரதி திருமணத்தின் அடிப்படையில், பார்வதியின் அந்தரங்கமான திட்டம் மறைந்து கிடப்பதை சேதுபதி அறிவாரா? அவர் சர்வ சாதாரணமாக, பாரதி - ராஜா திருமணத்தால் ஏற்படப் போகிற உறவை எண்ணிப் பாராமலேயே, ஒப்புக்கொண்டு விட்டாரா?

”பார்வதியும் அவரும் வெகு தூரத்துக்கு வெகுதூரம் மீண்டும் நெருங்க முடியாத அளவுக்குப் பிரிந்து போய்விடப் போகிற சூழ்ச்சியை அறியாமல் தான் இந்தச் சம்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டாரா? அல்லது அறிந்து தான் ஒப்புக்கொண்டாரா?”

சலனமற்ற அவர் முகத்திலிருந்து, அமைதியான பதில் விருந்து, பார்வதியினால் எதையுமே விளக்கிக் கொள்ள முடியவில்லை.

அவர் பச்சைக் குழந்தை போல் கள்ளம் கபடமின்றிச் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

பார்வதியைப் பொறுத்தவரை பெரும்பாரம், நீண்ட நாட்களாகச் சுமந்து கொண்டிருந்த இதயச்சுமை அந்தக் கணமே கீழே இறங்கிவிட்டத்தைப் போல் தோன்றியது.

அடுத்த வாரத்திற்குள்ளாகவே திருமணத்துக்கு முகூர்த்தம் வைத்து விடுகிறேன்... எனக்கும் கூடப் பாரதியின் திருமணத்தைச் சீக்கிரமே முடித்துவிட வேண்டுமென்ற ஆசைதான். ராஜா. என்ஜினியரிங் படித்திருக்கிறான். என்னுடைய தொழிற்சாலையின் முழுப்பொறுப்பையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு நான் வெளிநாடுகளுக்குச் சென்று வரப் போகிறேன். நாளைக்கே திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனிக்கிறேன். கலியாணத்தைக் கூட இந்த வீட்டிலேயே நடத்திவிடலாம். தங்களுக்கு உடல் நலம் சரியில்லாததால் தாங்கள் இங்குமங்கும் அலையக் கூடாது. தாங்கள் இருக்குமிடத்திலேயே திருமணத்தை நடத்துவதுதான் நல்லது...''

”பாரதியும் காமாட்சியும் இந்த வீட்டுக்கு வந்த வேளை நல்லவேளை தான்...'' என்றாள் பார்வதி உற்சாகத்தோடு.

"ஆமாம்; தங்களுக்கும் உடம்பு குணமாகி விட்டால் அப்புறம் எல்லாம் சந்தோஷமாக முடிந்துவிடும். நேரமாகிறது... நான் போய்விட்டு நாளைக்கு வருகிறேன். தாங்கள் இரவு நிம்மதியாகத் தூங்குங்கள்'' என்று கூறி விட்டுப் புறப்பட்டார் சேதுபதி.

சேதுபதி காரில் ஏறிச் செல்லும் வரை அவரையே கண் கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தாள் பார்வதி அவளுடைய மனவேதனையும் நெஞ்சத்தின் நீங்காத நிழலும் அகன்று உள்ளம் லேசாகிவிட்ட உணர்வு, சேதுபதியின் மீது தோன்றிய இரக்க உணர்வு, ராஜா பாரதிக்குத் திருமணம் என்கிற மன நிறைவு. இவ்வளவும் கதம்பமாக அவளைக் குழப்பி உணர்ச்சி வசமாக்கிவிட்டன.

கார் மறைந்ததும், அவள் மெதுவாகத் திரும்பி நடந்தாள். உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றித் தோன்றி அவளைச் சஞ்சலத்தில் ஆழ்த்தின. அவள் மெதுவாக அடிமேல் அடி வைத்து நடந்தாள். கால்கள் தள்ளாடின. கண்களில் லேசாக இருள் கவிந்து மின்மினிப் பூச்சிகள் பரக்கத் தொடங்கின. பார்வதிக்கு எதுவுமே தெரியவில்லை. மாடிப் படிகள் வரை சென்று படிகளைக் கடந்து மேலேயும் போய் விட்டாள். தாழ்வாரத்தை நெருங்கிய போது ஒரேயடியாக இருட்டிக் கொண்டு வந்தது. தாழ்வாரத்துச் சுவர், படிகள் அனைத்தும் சுழன்று சுழன்று வந்தன.

”ராஜா!” என்று சத்தமிட்டுக் கூப்பிட எத்தனித்தாள். நாக்குத் தடுமாறி நெஞ்சு உலர்ந்து வார்த்தைகள் வெளி வர மறுத்துவிட்டன. அடுத்த கணமே, தான் கீழே விழுந்துவிடப் போகிறோம் என்கிற உணர்வு தோன்றவே, மாடிப் படிகளின் கைப்பிடியை ஆதாரமாகப் பிடித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தபோதே அவள் மயக்க
முற்றுச் சாய்ந்து விட்டாள்.

"அத்தை! அத்தை” என்று அலறிக்கொண்டே ஓடி வந்த ராஜா, பார்வதியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

அதே சமயம் பாரதி, காமாட்சி, ஞானம் மூவரும் பரபரப்புடன் ஓடிவந்து பார்வதியைக் கட்டிலுக்குத் தூக்கிச் சென்றனர்.

அடுத்த கணமே டாக்டருக்கும், சேதுபதிக்கும் தகவல் கொடுக்க போனுக்கு ஓடினான் ராஜா.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
குருத்து இருபத்திரண்டு



''தங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும் தயவுசெய்து இன்று மாலை இங்கே வந்து போக முடியுமா?” என்று பார்வதி டெலிபோனில் அழைத்தபோது, சேதுபதி ஒரு கணம் ஒன்றும் புரியாமல் திகைத்தார். ’எதற்காக அழைக்கிறாள்? அப்படிப்பட்ட முக்கிய விஷயம் என்னவா யிருக்கும்?' என்ற ஆவலும் பரபரப்பும் அவர் உள்ளத்தில் எழுந்தன. அவரால் இன்னதென்று ஊகிக்க முடியவில்லை. பார்வதியை முதன்முதலாகச் சந்தித்ததிலிருந்து அவர் மன அமைதி இழந்து எந்நேரமும் அவளைப் பற்றியே எண்ண மிட்டுக் கொண்டிருந்தார். அவளை அடிக்கடி சந்திக்கவும் அவளோடு உரையாடிக் கொண்டிருக்கவும் அவர் அந்தரங்கத்தில் அடங்காத ஆர்வம் இருந்து வந்தது. ஆயினும், தம்முடைய இதயத்தில் பொங்கிக் கொண்டிருந்த அந்த உணர்வை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நீறுபூத்த நெருப்பாக மறைத்து வைத்திருந்தார்.
பார்வதியை நேரில் சந்திக்கும் சமயங்களில் அவருடைய துணிவு, ஆற்றல் அனைத்தும் மறைந்து போய் சின்னஞ் சிறு குழந்தையாகி விடுவார். உள்ளத்தில் பொங்கும் ஆசைகளை யெல்லாம் அடக்கிக் கொண்டு பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டுத் திரும்பி விடுவார்.

பார்வதி அன்று டெலிபோனில் அழைத்தபோது அவர் உள்ளத்தில் மீண்டும் அந்த ஆசை கொழுந்துவிடத் தொடங்கியது. ”ஒரு வேளை இன்று தன் அந்தரங்கத்தை வெளியிடத்தான் அழைக்கிறாளோ?" என்று பரபரப்படைந்தார்.

''இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது. சற்றும் தயக்கமின்றி என் இதயத்தை அவள் அறியச் செய்யப் போகிறேன். அவளாகவே சங்கோசமின்றித் தன் எண்ணத்தை எடுத்துக்கூறும் அளவுக்குச் சூழ்நிலையை உண்டாக்கப் போகிறேன். இவ்வாறு முடிவு செய்து கொண்டவராய் "ஓ! வருகிறேன். அவசியம் வருகிறேன்” என்று பார்வதிக்குப் பதில் கூறினார்.

அன்று மாலை இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது சேதுபதி ஒவ்வொரு கணமும் பார்வதியிடமிருந்து வரப்போகும் அந்த வார்த்தைகளை எதிர்பார்த்துக் கொண் டிருந்தார்.

அவர் எதிர் பார்த்தபடியே அவள் பேச்சைத் தொடங்கினாள். திருமணம் பற்றிய பேச்சுத்தான்.

ஆனால், அது அவர்களுடைய சொந்தத் திருமணம் பற்றியதல்ல. ராஜா - பாரதியைப் பற்றியது.

சேதுபதி ஏமாற்றத்தை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. உண்மையில் அவருக்கு அது ஏமாற்றமும் இல்லை. பார்வதியின் அழைப்பு எதற்காக இருக்கும் என்று அவர் பலவாறு யோசித்துப் பார்த்த போதிலும் எந்த ஒரு நிச்சயமான முடிவுக்கும் வந்துவிட-வில்லை.

ஆகவேதான், திருமணம் விஷயம் என்று பார்வதி கூறியபோது அவர் சிறிதும் பரபரப்படையவில்லை. பார்வதி பின் குரலில் உணர்ச்சியோ பரபரப்போ இல்லாமற் போகவே சேதுபதிக்கு உடனேயே விளங்கி விட்டது. மிக அமைதியாகச் சற்று நேரம் மெளனப் புன்னகையில் ஆழ்ந்திருந்தவர், ரோஜா - பாரதியின் சம்மதம் தான் இதில் முக்கியம். திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்கள் அவர்கள் தானே?'' என்று வெகு சாவதானமாகப் பேச்சை முடித்தபோது பார்வதிக்கு வியப்புத் தாங்கவில்லை.

பார்வதி மயக்கமுற்றுக் கீழே சாய்ந்து விட்டாள் என்று செய்தியை ராஜாவின் மூலம் அறிந்த சேதுபதி திடுக்கிட்டு நின்றார். அடுத்த சில நிமிடங்களுக்குள் பார்வதியின் இல்லத்துக்கு வந்துவிட்ட அவர், தமக்குத் தெரிந்த டாக்டர்களை யெல்லாம் டெலிபோனில் அழைத்துப் பார்வதிக்குச் சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தார்.

”மறுபடியும் அதிர்ச்சிக்கு ஆளாகி யிருக்கிறார். இந்த பலவீனமான நிலையில் எந்த ஒரு சிறு கவலைக்கும் மனத்தில் இடம் வரக்கூடாது. ரத்தக் கொதிப்பு அதிகமாயிருப்பதால் ரொம்ப எச்சரிக்கையோடு கவனித்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தாக முடியும்'' என்று கூறிய டாக்டர்கள், மருந்துகளின் பெயரைச் சீட்டில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்கள்.

பார்வதி மயக்க நிலை தெளிந்து கண் விழித்துப் பார்த்த போது மணி இரண்டு. சேதுபதி மெளனமாகத் தன் அருகில் அமர்ந்திருப்பதைக் கண்டபோது பார்வதிக்குத் துக்கம் நெஞ்சை அடைத்தது. கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்தபடியே ''நீங்களா?'' என்று ஈனமான குரலில் கேட்டாள்.

அவளுடைய குரலில், பார்வையில் உலகத்துக் காதல் மகா காவியங்களின் சோகமனைத்தும் ஏக்கமனைத்தும் பிரதி பலித்தன. மெலிந்த தன் கரங்களை உயர்த்தி ஏதோ சொல்ல வாயெடுத்தாள்; பேச முடியவில்லை.

''நீங்கள் பேசக்கூடாது...'' மனத்தில் எந்தக் கவலையும் வைத்துக் கொள்ளக்கூடாது... சேதுபதி அவள் கரங்களைத் தீண்டி அமர்த்தி நிதானமான குரலில் பேசினார்.

''எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இனி நான் நிம்மதியாக வாழ்வேன். ராஜா - பாரதி திருமணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள் - பார்வதி தட்டுத் தடுமாறிக் கூறி முடித்தாள்.

" அவர்கள் திருமணத்துக்கு இப்போது என்ன அவசரம்? தாங்கள் பூரணமாகக் குணமடைந்து பழையபடி கல்லூரிக்குப் போகத் தொடங்கியதும் வைத்துக் கொள்ளலாமே'' என்றார் சேதுபதி.

"தயவு செய்து எந்தக் காரணத்துக்காகவும் ராஜா - பாரதி திருமணத்தைத் தள்ளிப் போடாதீர்கள். என்னுடைய உடல் நலம் சரியில்லாததாலேயே தான் அவர்கள் திரு மணத்தை உடனே நடத்திவிட வேண்டுமென்று துடிக்கிறேன்....”

இந்தத் திருமணத்தால் தனக்கும் பார்வதிக்கும் ஏற்படக் கூடிய உறவு முறைபற்றிச் சேதுபதி எண்ணிப் பார்க்காமலில்லை, பார்வதியின் மன அமைதிக்காக அவர் தம்முடைய ஆசைகளை யெல்லாம், உள்ளத்தில் நீண்ட காலமாகப் புதைத்து வைத்திருந்த கனவுகளையெல்லாம் தியாகம் செய்துவிடத் தீர்மானித்து விட்டார்.

''தங்கள் விருப்பப்படியே திருமணத்தைக் கூடிய சீக்கிரம் நடத்தி விடுகிறேன். இன்னும் சில தினங்களுக்குள் இந்த வீட்டிலேயே அவர்கள் திருமணம் நடைபெறும்...'' சேதுபதியின் உறுதிமொழி பார்வதிக்கு மட்டற்ற மகிழ்ச்சி யைத் தந்தது.

“தாங்கள் இனி எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது. நாளைக் காலையில் நான் மீண்டும் வந்து பார்க்கிறேன்.... காமாட்சி! நீ பார்த்துக் கொள்கிறாயா? தூங்கிவிடப் போகிறாய்.... பாவம்! உனக்குத்தான் சிரமம்” என்று கூறி விட்டுப் புறப்பட்டார் சேதுபதி.

திரும்பிச் செல்லும்போது அவர் உள்மனம் அவரைக் கேட்டது.

'சேதுபதி! அவள் மீண்டும் மயக்கமுற்றுக் கீழே விழுவானேன்? உன்னுடன் ராஜா - பாரதி திருமணம் பற்றிப் பேசியபோது மகிழ்ச்சியோடு தானே காணப்பட்டாள்? அதிர்ச்சிக்கோ, கவலைக்கோ அதில் என்ன இருக்கிறது? உனக்கும் அவளுக்கும் ஏற்பட இருந்த உறவு முறை மாறி விட்டது என்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணமோ? அப்படி யானால், ’அமைதி நிம்மதி ' என்பதெல்லாம் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் பேச்சுத்தானா?’

ஒரு வாரம் கடந்தது. பார்வதியின் உடல் நிலையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. எழுந்து நடக்கவும் சக்தியற்ற வளாய்ப் படுத்த படுக்கையாகவே கிடந்தாள் அவள்.

டாக்டர்கள் மட்டும் வேளை தவறாமல் வந்து போய்க் கொண்டிருந்தனர். ஆனால் அவள் உடல் நிலையில் மட்டும் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. இந்த நிலையில் திரு மணத்தை நடத்துவதற்கு வேண்டிய உற்சாகமோ ஊக்கமோ சேதுபதிக்கு எங்கிருந்து வரும்? ’திருமணத்தைத் தள்ளிப் போடுவதால் நிலைமை மாறலாம். இதற்குள் பார்வதியின் மனமும் மாறலாம்' என்ற சபலம் அவர் உள்ளத்தில் ஒரு பக்கம் ஒளிந்து கொண்டிருந்தது.

ஆனாலும் பார்வதிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் அவர் சிறிதும் தயக்கம் காட்டவில்லை. திருமண ஏற்பாடுகள் ஜாம் ஜாம் என்று நடந்து கொண்டிருந்தன.

”காமாட்சி! அடுத்த வெள்ளிக் கிழமை முகூர்த்தம். நிச்சயம் செய்திருக்கிறேன். இன்னும் ஏழே நாட்கள் தான்.... கலியாணத்தை இந்த வீட்டிலேயே நடத்திவிட வேண்டியதுதான். இப்போதுள்ள நிலையில் பார்வதியால் ஓர் அடியும் அப்பால் நகர முடியாது...” என்றார் சேதுபதி.

"ஆயிரம் காலத்துப் பயிர்; ஆறஅமர யோசித்துக் கொஞ்சம் நிதானமாகச் செய்யலாமே..” என்றாள் காமாட்சி.

"முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் பார்வதியோ அவசரப் படுகிறாள். இந்த விஷயத்தில் அவள் விருப்பத்திற்கு மாறாக நடந்துகொள்ள எனக்குச் சம்மதமில்லை. எப்படியும் பாரதியும் ராஜாவும் ஒரு நாளைக்குக் கணவன் மனைவியாக வாழ வேண்டியவர்கள் தானே?... சுப காரியங்களைச் சீக்கிரமே முடிப்பது நல்லது தான்'' என்றார் சேதுபதி.

"அதுவும் சரிதான்; நீயே மாடிக்குப் போய் சேதியைச் சொல்லிவிடு...'' என்றாள் காமாட்சி.

சேதுபதி மாடிக்கு ஏறிச் சென்றபோது பார்வதி மிக்க மகிழ்ச்சியுடன் “அடுத்த வெள்ளிக் கிழமையா முகூர்த்தம்? ரொம்ப சந்தோஷம்! முகூர்த்தப் புடவைகளெல்லாம் நானேதான் 'ஸெலக்ட்’ செய்யப் போகிறேன். பாரதிக்கு நகை நட்டுகளெல்லாம் ரொம்ப வேண்டாம். கலியாணத்தை ஆடம்பரமாகச் செய்ய வேண்டாம். முக்கியமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பினால் போதும். மேளத்தைக் கொட்டித் தாலியைக் கட்டி ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டு விடலாம். அதுவே போதும். பந்தல் கூட ரொம்பப் பெரிதாக வேண்டாம்'' என்றாள் பார்வதி.

"எனக்கும் அதே ஐடியாதான். கலியாணங்களின்போது ஆடம்பர முறைகளில் பணத்தை விரயம் செய்வது எனக்கும் கட்டோடு பிடிக்காது.”

''பல விஷயங்களில் நாம் இருவரும் ஒரே மாதிரியான கருத்துகளையே கொண்டிருக்கிறோம்...'' என்று மறை பொருளாகக் கூறிக் கண் சிமிட்டினாள் பார்வதி.

"ஆமாம்; அந்தக் கருத்துகளை ஒருவருக்கொருவர் மனம் விட்டுச் சொல்லிக் கொள்ளச் சந்தர்ப்பம் தான் ஏற்படுவதில்லை...' என்று சூட்சுமமாகவே பதில் கொடுத் தார் சேதுபதி.

''அண்ணா ! ஜவுளிகளை இங்கேயே கொண்டு வர சொல்லு ; பார்வதியே பார்த்து முடிவு செய்யட்டும்...” என்றாள் காமாட்சி.

”ஏழெட்டு ஜவுளிக் கடைகளை இங்கு அனுப்பி வைக்கிறேன், போதுமா?” என்று சிரித்துக் கொண்டே புறப்பட் டார் சேதுபதி.

கலியாண ஏற்பாடுகள் துரித காலத்தில் நடந்து கொண்டிருந்தன. ராஜாவும் பாரதியும் தாங்கள் மணமக்கள் என்பதைக்கூட மறந்து ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்!

”இன்னும் மூன்றே தினங்கள் தான் இன்னும் இரண்டே நாட்கள் தான்” என்று ஒவ்வொரு நாளும் கவலையோடு சொல்லிக்கொண்டிருந்தாள் காமாட்சி.

பார்வதி கட்டிலில் படுத்த வண்ணமே எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.
ராஜாவும் பாரதியும் கூட்டாகவே ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்ட அவள், "பாரதி! நாளை மறுதினம் ராஜா உனக்குக் கணவனாகப் போகிறான். ஆகையால் நீ அவனிடம் கொஞ்சம் வெட்கப்படுவதுபோல் நடிக்க வேண்டும்'' என்று கேலி செய்தாள்.

''போங்க அத்தை! எனக்கு வெட்கமாயிருக்கிறது!” என்றான் ராஜா.

''இதோ பார்த்தீர்களா, வேஷ்டி சட்டை” என்று கூறிக் கொண்டே கையில் ஜவுளிகளுடன் வந்து சேர்ந்தார் சேதுபதி.

”வேட்டி சட்டையா? யாருக்கு? ராஜாவுக்கா?.... ரொம்ப சீப்பாக வாங்கி விட்டீர்களே! சிக்கனத்தை மாப்பிள்ளை டிரஸ்ஸிலேயே ஆரம்பித்து விட்டீர்களோ?'' என்று கேட்டாள் பார்வதி.

''இது மாப்பிள்ளை டிரஸ் இல்லை; வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறானே, செவிட்டுப் பெருமாள், அவனுக்கு” என்றார் சேதுபதி,

பார்வதி சிரித்து விட்டாள்.

"ஆமாம், திருமணம் நடக்கப்போகிற விஷயம் அவனுக்குத் தெரியுமா?....''

”மேளம் வாசிக்கிறபோது என்ன சத்தம் என்று கேட்காமலா இருப்பான்? அப்போது தெரிந்துகொள்கிறான்” என்று கூறிச் சிரித்தான் ராஜா.

நேற்றுப் பந்தல் போடும்போதே, "என்ன விசேஷம்!” என்று கேட்டான். நான் சங்கதியைச் சொன்னபோது அவனுக்கு ஆனந்தம் தாங்கவில்லை'' என்றார் சேதுபதி.

''பாவம்! ரொம்ப காலமாக நம்ம வீட்டிலேயே கிடக்கிறான்.... ஆமாம்; இந்தப் புடவை யாருக்கு? ரொம்ப நன்றாக இருக்கிறதே!'' என்று கேட்டாள் பார்வதி.

''பிடித்திருந்தால் நீங்கள் தான் கட்டிக் கொள்ளுங்களேன். பனாரஸ் பட்டு - நல்ல கலர்...'' என்றார் சேதுபதி. அப்போது பார்வதியின் முகம் வெட்கத்தால் சிவந்து மாறியதைச் சேதுபதி கவனிக்கத் தவறவில்லை.

"இம்மாதிரி ஒரு புடவை வாங்கிக் கொள்ள வேண்டுமென்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை...' என்றாள் பார்வதி.

”தங்களுக்கு இம்மாதிரி ஒரு புடவை வாங்கித் தர வேண்டுமென்று எனக்கும் தான் ரொம்ப நாளாக ஆசை!'' என்று சேதுபதி கூறவில்லை. மனத்தில் எண்ணிக்கொண்டார்.

’இந்தப் புடவை தனக்குப் பிடிக்குமென்று அவருக்கு எப்படித் தெரிந்தது?'
மனத்திற்குள்ளாகவே ஒரு வியப்புக் குறியை எழுப்பிக்கொண்டு யோசிக்கலானாள் பார்வதி.

ஹாஸ்டல் திறப்பு விழாவன்று பார்வதி இதே மாதிரி புடவை ஒன்று தான் கட்டியிருந்தாள். அந்தக் கலர் அவள் தேக அமைப்புக்கு மிகவும் பொருத்தமா-யிருந்ததைச் சேதுபதி அன்றே குறிப்பாகக் கவனித்து வைத்திருந்தார். இப்போது அதை மறந்துவிட்ட பார்வதிக்குச் சேதுபதி வாங்கி வந்த சேலையைக் கண்டதும் வியப்புத் தாங்கவில்லை.

வெள்ளிக்கிழமை காலை குறித்த நேரத்தில் கெட்டி மேளம் முழங்க பெரியோர்கள் ஆசீர்வதிக்க ராஜாவுக்கும் – பாரதிக்கும் அக்னி சாட்சியாகத் திருமண வைபவம் நடந்தேறியது.

மாடியில் கட்டிலில் படுத்தபடியே திருமணக் காட்சி களைத் தன் அகக் கண்ணால் கண்டு களித்துக் கொண்டிருந்தாள் பார்வதி. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோட மானசீகமாக மணமக்களை வாழ்த்திக் கொண்டிருந்தாள் அவள்.

திருமணச் சடங்குகள் யாவும் முடிந்ததும் ராஜாவும் பாரதியும் சேதுபதியை வணங்கி எழுந்தனர்.

”முதலில் மாடிக்குச் சென்று அத்தைக்கு நமஸ்காரம் செய்யுங்கள்'' என்று கூறி, அவர்களை மேலே அழைத்துச் சென்றார் சேதுபதி.

தான் வாங்கிக் கொடுத்த அந்த பனாரஸ் பட்டுப் புடவையை அணிந்து கொண்டு பார்வதி கட்டிலில் படுத் திருப்பதைக் கண்ட சேதுபதிக்கு மெய் சிலிர்த்தது.

”அத்தை! நமஸ்தாரம் பண்ணுகிறோம்'' என்றான் ராஜா.

”தீர்க்காயுசுடன் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ வேண்டும்” என்று கூறியபடியே படுக்கையில் சாய்ந்திருந்த பார்வதி எழுந்து உட்கார்ந்து மணமக்களைத் தன் இரு கைகளாலும் தழுவிக் கொண்டாள். ”என் ஆசை நிறைவேறி விட்டது; இனி எனக்கு நிம்மதி தான்; இப்படியே கண்களை மூடி விட்டாலும் கவலையில்லை. பாரதி! என் அருகில் வா...'' என்று பாரதியின் கரங்களைப்பற்றி அழைத்த பார்வதி, அவள் தலையை அன்போடு வருடி, நீ இன்று ரொம்ப அழகாக இருக்கிறாய்?'' என் ராஜா ரொம்ப அதிஷ்டக்காரன்" என்றாள்.

பாரதியின் மணக் கோலத்தைக் கண்டபோது சேதுபதிக்குத் தமது மனைவி சரஸ்வதியின் ஞாபகம் தோன்றி விடவே துக்கம் நெஞ்சை அடைத்தது. சரஸ்வதியின் சாயலாகவே காட்சி அளித்த தம் மகளைப் பார்த்தபோது சேதுபதியின் கண்களில் நீர் துளித்தது. அவர் கண்கள் கலங்குகுவதைக் கண்ட பார்வதியின் நெஞ்சம் உணர்ச்சி வசத்தால் நெகிழ்ந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
குருத்து இருபத்து மூன்று



வாசலில் காட்டியிருந்த வாழை மரங்களும், மாவிலைத் தோரணங்களும் வாடி வதங்கிச் சருகாகிக் கொண்டிருந்தன. திருமணம் நடந்த வீட்டில் காணக் கூடிய குதூகலம், ஆரவாரம், விருந்து வைபவம், விருந்தாளிகள் நடமாட்டம் எதுவுமே அங்கு இல்லை.

பார்வதியின் நிலை வரவர மோசமாகிக் கொண்டே போயிற்று. இப்போதெல்லாம் அவள் மாடியை விட்டுக் கீழே இறங்கிச் செல்லவும் சக்தியற்றவளாகிப் படுத்த படுக்கையாகவே கிடந்தாள். ராஜாவும் பாரதியும் எந்நேரமும் அவள் அருகிலேயே இருந்து பணிவிடை புரிந்து கொண்டிருந்தனர். சேதுபதி பெரிய பெரிய டாக்டர்களை அழைத்து வந்து, பார்வதிக்குச் சிகிச்சை அளிக்கச் செய்து, அவளைப் பழைய நிலைக்கு மீட்டு விடுவதில் முனைந்திருந்தார்.

''பார்வதி குணமடைந்து பழையபடி சந்தோஷமாக வாழவேண்டும்” - இதுதான் அவருடைய லட்சியமாக இருந்தது. அவளுடைய உயிருக்காக, வாழ்வுக்காக அவர் எதையுமே தியாகம் செய்யத் தயாராயிருந்தார்.

கண்களை மூடியபடியே சேதுபதியைப்பற்றி எண்ண மிட்டுக் கொண்டிருந்த பார்வதிக்கு வியப்புத்தான் மேலிட் டது. என் மீது அவர் ஏன் இத்தனை அக்கறை காட்டவேண் டும்? அன்று அவர் எனக்காக ஆசையோடு வாங்கி வந்த மாதுளம் பழங்களை நான் ஏறிட்டுப் பாராமல் அலட்சியம் செய்ததைக் கூட அவர் பொருட் -படுத்தவில்லை ! எவ்வளவு பெருந்தன்மையான குணம்? நான் பண்பற்றவள். அவரோடு ஒப்பிடும்போது மிக மிக அற்பமானவள். அவருடைய பெருந்தன்மையோடு உயர் குணத்தோடு நற்பண்போடு என்னை நான் ஒப்பிட்டுப் பார்க்கவே தகுதியற்றவள்.... எனக்காக அவர் எதையும் தியாகம் செய்யத் தயாராயிருக்கிறார் என் மகிழ்ச்சிக்காக, மன அமைதிக்காகத் தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கவும் சித்தமாயிருக்கிறார்.

''ராஜா - பாரதி திருமணத்தை உடனே முடிக்கவேண்டு மென்று நான் கேட்டுக் கொண்டபோது சற்றும் தயங்காமல் யோசிக்காமல், தாமதிக்காமல் ஆகட்டும்; முடித்து விடுகிறேன்' என்று பதில் கூறினாரே? தம்முடைய ஒரே மகளின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிச் சிறிதேனும் சிந்தித்துப் பாராமல் திருமணம் செய்துவைக்க இசைந்தாரே! இதற் கெல்லாம் என்ன காரணம்?

'அந்த உத்தமரை நான் அலட்சியம் செய்யவில்லை. என் இதயக் கோயிலில் அவரை நிரந்தரத் தெய்வமாக்கிப் போற்றிக் கொண்டிருக்கிறேன். அவரிடம் நான் கொண்டுள்ள மாசற்ற அன்பு காரணமாகவே சில சமயங்களில் தவறு இழைத்து விட்டுப் பின்னர் அதைப்பற்றி எண்ணி எண்ணி வேதனைப் படுகிறேன். தேவி ! என்னை நீதான் மன்னிக்க வேண்டும் என்று அன்னையை வேண்டிக் கொள்கிறேன். அன்று அவர் ஆசையோடு வாங்கி வந்த மாதுளம் பழங்களை நான் அலட்சியம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்தான். ஆயினும் அந்தக் குற்றத்தை அவர் பெருந்தன்மையோடு மறந்து விட்டார். மீண்டும் அம்மாதிரி அவர் ஏதேனும் எனக்காக வாங்கி வரும்போது அதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தச் சந்தர்ப்பம் எனக்கு விரைவிலேயே கிடைத்துவிட்டது. திருமணத்தின்போது அவர் எனக்காக வாங்கி வந்த பனாரஸ் பட்டுப் புடவையை நான் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டேன். அந்தப் புடவையை நான் உடுத்தியிருப்பதை கண்டதும் அவர் கண்களில் வீசிய ஒளி, என்னை மெய் சிலிர்க்கச் செய்தது. என் வாழ் நாள் முழுவதும் நினைவில் வைத்துக் குதூகலப்படுவதற்கு அந்த ஒரு நிகழ்ச்சியே போதும் எனக்கு.'

"அத்தை தங்கள் பெயருக்குத் திருமண அழைப்பிதழ் ஒன்று வந்திருக்கிறது...'' என்று கூறிக்கொண்டே விரைந்து வந்தான் ராஜா.

''யாருக்குத் திருமணம்?... படித்துச் சொல்லு?" ஆவலுடன் கேட்டாள் பார்வதி.

"மீனாட்சிக்கும் - கோபாலனுக்கும் வருகிற ஞாயிற்றுக் கிழமையன்று மதுரையில் திருமணமாம். அது யார் அத்தை மீனாட்சி ? மதுரை மீனாட்சி அம்மனுக்குத்தான் ஏற்கெனவே திருமணம் நடந்தாகி விட்டதே?'' என்று சிரித்துக்கொண்டே கேட்டான் ராஜா.

”எங்கே? அழைப்பிதழை இப்படிக் காட்டு பார்க்கலாம்...'' என்று கேட்டாள் பார்வதி.

"வேண்டாம் அத்தை! உங்களால் படிக்க முடியாது. நானே முழுதும் படிக்கிறேன்'' என்று கூறிப் படிக்கத் தொடங்கினான் ராஜா.

'மீனா என்கிற மீனாட்சிக்கும்' என்று அவன் தொடங்கிய போதே "ஓகோ, நம்ம மீனாவுக்கா?” என்றாள் பார்வதி.

”யார் அத்தை அது மீனா?''

''என் காலேஜில் வாசித்துக் கொண்டிருந்த பெண். டென்னிஸ் நன்றாக விளையாடுவாள். சரி... சரி... இப்போது எல்லாம் புரிந்துவிட்டது. ரொம்ப சந்தோஷம். வருகிற ஞாயிற்றுக்கிழமையன்றா முகூர்த்தம்... ம்..... இந்தக் கலி யாணத்துக்கு நான் நேரில் போகவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். உன் கலியாணத்தையே கீழே வந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை எனக்கு...'' என்று பெருமூச்செறிந்தாள்.

''ராஜா ! இவர்களுக்கு என் பெயரால் ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பிவிடுகிறாயா?''

''ஆகட்டும் அத்தை?'' ராஜா கீழே போய்விட்டான்.

பார்வதிக்கு மூச்சுத் திணறியது. 'ரத்தக் கொதிப்புள்ள வர்கள் உடம்பையோ, மனசையோ அலட்டிக் கொள்ளக் கூடாது. மூச்சு விடாமல் பேசவும் கூடாது’ என்று டாக்டர்கள் கூறிய வார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்தன.

அன்றிரவு சேதுபதி பார்வதியைக் காண வந்தபோது மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. காமாட்சி மாடி வராந்தாவில் தூங்கிக் கொண்டிருந்தாள். உள்ளே எட்டிப் பார்த்தபோது கட்டிலில் பார்வதி அசைவற்றுப் படுத்துக் கொண்டிருப்பது நிழலாகத் தெரிந்தது. சேதுபதி மெதுவாக நடந்து போய், கட்டிலுக்கருகில் நின்று பார்வதியைக் கவனித்தார். மூச்சு லேசாக இழையோடிக்கொண்டிருந்தது. பலவீனமாகத் திராணியற்றுக் கிடந்த அவள் நிலையைக் கண்ட சேதுபதியின் உள்ளம் வேதனைக்-குள்ளாயிற்று. மெளனமாகவே, சந்தடியின்றி வராந்தாவுக்குத் திரும்பி வந்தவர், ”காமாட்சி!”என்று மெதுவான குரலில் அழைத்தார்.

பகலெல்லாம் உழைத்துக் களைத்துப் போயிருந்த காமாட்சிக்குச் சேதுபதியின் குரல் எங்கோ பாதாளத் திலிருந்து ஒலிப்பது போல் கேட்டது. அவள் திரும்பிப் படுத்துக் கொண்டாள். மீண்டும் காமாட்சி!' என்று சேதுபதி அழைத்த பிறகே, அவள் விழிப்படைந்து எழுந்து உட்கார்ந்தாள்.

"ரொம்ப நேரமாயிற்றா அண்ணா நீ வந்து...''

''இல்லை, காமாட்சி! இப்போது தான் வந்தேன்.... பார்வதி ஏதாவது ஆகாரம் சாப்பிட்டாளா? அவளுக்கு இப்போது எப்படி இருக்கிறது?”

”எதுவுமே சாப்பிடவில்லை. சாயந்திரம் கொஞ்ச பழரசம் பிழிந்து கொடுத்தேன். அதில் பாதியைக் குடித்து விட்டுப் பாதியை அப்படியே வைத்து விட்டாள். எனக்கென்னவோ அவள் நல்லபடி பிழைத்தெழுந்திருக்க வேண்டுமே என்று ஒரே கவலையாயிருக்கிறது, அண்ணா !''

''நம்மால் முடிந்ததையெல்லாம் செய்து பார்த்து விடலாம் காமாட்சி! எப்படியும் அவள் பிழைத்து விடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.''

”நீயும் பணத்தைப் பணம் தான்று பாராமல் தான் செலவழித்துக் கொண்டிருக்கிறாய்! மூன்று மாதமாக இதே கவலை தான் உனக்கு நல்ல படியாக அவள் பிழைத்தெழுந்-திருக்க வேண்டும்”. பெருமூச்சு விட்டாள் காமாட்சி.

''நீ உடலால் உழைக்கிறாய். நான் பொருளைத்தானே செலவழிக்கிறேன்? உயிருக்கு விலை கிடையாது. பணம் இன்று வரும். நாளை போகும். பார்வதியின் உயிர் விலை மதிப்பற்றது. அவள் உயிரைக் காப்பாற்ற நான் எதையுமே இழந்துவிடத் தயாராயிருக்கிறேன். பார்வதியைப் போன்ற ஓர் அறிவாளியை, உத்தமியை, உழைப்பாளியை அபூர்வ மாகத்தான் காண முடியும்...''

கண்களை மூடியபடியே கட்டிலில் சாய்ந்து கிடந்த பார்வதிக்குச் சேதுபதியின் வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன. அவள் கண்களில் நீர் மல்கியது.

“உயிருக்கு விலை கிடையாது. பார்வதியின் உயிர் விலை மதிப்பற்றது என்ற வார்த்தைகள், அவள் இதயத்தை நெகிழ வைத்தன. அன்றொரு நாள் தொழிற்சாலை தீப்பற்றி எரிந்துவிட்டதென்ற செய்தியைக் கேட்டபோது கூட, அவர் பாபரப்புடன் உயிர்ச்சேதம் உண்டா? என்று கேட்டது அவள் நினைவுக்கு வந்தது. 'பணத்தைக் காட்டிலும் உயிரை அவர் எவ்வளவு உயர்வாக மதிக்கிறார்?’ அவருடைய குரல் மீண்டும் கேட்கவே பார்வதி அவர் பேச்சை ஆவலோடு கவனித்தாள்.

”காமாட்சி! இந்தக் கலியாணத்தை முடிப்பதில் நான் அவசரப்பட்டு விட்டதாக உன் நினைப்பு அல்லவா?' நான் அப்போது சொன்ன காரணம் உனக்கு அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும். உண்மைக் காரணத்தை இப்போது சொல்கிறேன், கேள்.

நான் சரஸ்வதியை மணக்கு முன் ஒரு நாள் பார்வதியைப் பெண் பார்க்கப் போயிருந்தேன். மாமாவும் மாமியும் என்னோடு வந்திருந்தார்கள். பார்வதி அப்போது சாம்பசிவம் என்ற பெரியவர் ஒருவருடைய ஆதரவில் இருந்து வந்தாள். நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது தூளியில் படுத்திருந்த குழந்தை ஒன்று வீரிட்டு அழத் தொடங்கியது. பார்வதி ஓடிச்சென்று அந்தக் குழந்தையை எடுத்துத் தன் இடுப்பிலே வைத்துக் கொண்டாள். மாமாவுக்கும் மாமிக்கும் இந்தச் சம்பந்தத்தில் அவ்வளவாகத் திருப்தி இல்லை. எனவே, பின்னால் தெரியப்படுத்துகிறோம்' என்று கூறிவிட்டு வந்து விட்டார்கள். எனக்குப் பார்வதியைப் பிடித்திருந்த போதிலும், அவனையே மணந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பம் இருந்த போதிலும், மாமாவின் விருப்பத்துக்கு மாறாகப் பேசும் திலையில் அப்போது நான் இல்லை. எனவே மெளன மாகத் திரும்பி விட்டேன். அப்புறம் தான் சரஸ்வதிக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. பின்னர், சரஸ்வதியின் மூல மாகப் பார்வதியைப்பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டேன். அவளுடைய அன்பிலும் ஆதரவிலும் அப்போது வளர்ந்து கொண்டிருந்த குழந்தை வேறு யாரு மல்ல. அவளுடைய அண்ணன் மகன் ராஜாவேதான் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

அன்று முதல், பார்வதியின் எதிர்கால வாழ்வுக்கு இடையூறு செய்துவிட்ட பெரும் குற்றம் என் உள்ளத்தை அரித்து கொண்டேயிருந்தது. அந்தக் குற்றத்துக்குப் பிராயச் சித்தமாக ஏதேனும் ஒருவகையில், என்றாவது ஒருநாள், ஏதாவது ஒன்றைச் செய்துவிட வேண்டுமெனச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தை ஆண்டவன் எனக்கு இப்போதுதான் ஏற்படுத்திக் கொடுத்தார். பாரதியை ராஜாவுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவள் வெளியிட்ட போது நான் சற்றும் யோசிக்காமல், தயங்காமல், தாமதிக்காமல் சட்டென 'ஆகட்டும்' என்று பதில் கூறியதற்கு இதுவே காரணம்.''

சேதுபதி பேச்சை முடித்தார். இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி, 'ஓகோ, பெண் பார்க்க வந்த விஷயத்தை இவர் இன்னமும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்-கிறாரா? மறந்துவிட்டார் என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன்?' என்று தனக்குள் வியந்து கொண்டாள்.

"நான் வருகிறேன் காமாட்சி! நேரமாகிறது.... பாரதியை எங்கே காணோம்?” சேதுபதி விசாரித்தபடியே புறப்பட்டார்.

”அவளும் ஞானமும் கீழே படுத்திருக்கிறார்கள் அண்ணா ! ராஜா வெளியே போயிருக்கிறான். அவனுடைய நண்பர் களெல்லாம் சேர்ந்து கொண்டு அவனுக்கு 'டீ பார்ட்டி' வைத்திருக்கிறார்களாம்...''

"அப்படியா? சேதுபதி கீழே இறங்கிப் போய் விட்டார்.

கோடை விடுமுறை தீர இன்னும் ஏழெட்டு நாட்களே இருந்தன. சாரதாமணிக் கல்லூரி அடுத்த திங்களன்று மீண்டும் திறக்கப்பட்டுவிடும். பார்வதிக்குக் கல்லூரியைப் பற்றிய கவலை வந்துவிட்டது. விளையாட்டுப் போல் மூன்று மாதங்கள் ஓடி மறைந்துவிட்டன. இந்த இடைக்காலத்தில் எத்தனை மாறுதல்கள்!

தான் பூரண குணமடைந்து, மறுபடியும் கல்லூரிக்குச் செல்லும் நாளை அவள் கற்பனை செய்து பார்த்துக்கொண் டாள், அந்த நினைப்பில் அவள் உடலெங்கும் ஓர் இன்பம் பரவியது. மூன்று மாத இடைவேளை மிகக் குறுகிய காலம் தான். அதிலும் இரண்டு மாதங்கள் விடுமுறையில் கழிந்து விட்டன. ஆனாலும் அதுவே அவளுக்கு மூன்று யுகங்களாகத் தோன்றி, மீண்டும் கல்லூரியைக் காண்போமா என்ற ஏக்கமே பிறந்துவிட்டது. இதற்கு முன் அவள் கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் தங்கிய நாளே கிடையாது. கல்லூரிக்குப் போய் ஒரு முறை அதைக் கண்ணால் பார்த்துவிட்டு வர வேண்டும் என்னும் பேராவல் அவள் உள்ளத்தை உந்தியது.

”மணி என்ன இருக்கும்? என்று அவள் யோசித்த போதே, கீழே முன் வாசல் ஹாலில் மாட்டப்பட்டிருந்த பிரெஞ்சு நாட்டுக் கெடியாரம் மணி பத்தரை என்பதைக் குளுமையாக ஒலித்து அறிவித்தது.

அப்போதே ராஜா ஸ்கூட்டரில் வரும் ஒலியும் கேட்டது. அவன் வந்ததும் வராததும் வேகமாக மாடிக்கு ஏறி வந்து, ''அத்தை எடம்பு எப்படி இருக்கிறது?” என்று பரிவோடு விசாரித்தான்.

''நான் அதிக நாள் பிழைத்திருப்பேன் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது ராஜா!'' என்று பார்வதி கூறியதும் ராஜா துக்கம் தொண்டையை அடைக்க அப்படியெல்லாம் சொல்லாதீங்க அத்தை! நீங்கள் செளக்கியமாகப் பிழைத்து எழுந்து பழையபடி 'ஜம்' மென்று காலேஜுக்குப் போகப் போறீங்க. நான் உங்களைக் காரில் கொண்டுவிடப் போறேன், இது நிச்சயம்'' என்றான்.

''ம்... என்னவோ பார்க்கலாம்'' எனக் கூறிய பார்வதி சற்று நேரம் மெளனமாக இருந்துவிட்டு 'ராஜா' என்று அழைத்தாள்.

"என்ன அத்தை !”

"எனக்குக் கல்லூரியைப் பார்க்க வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது. தயவுசெய்து என்னைக் காரில் அழைத் துக்கொண் போகிறாயா?''

''என்ன அத்தை இது! மணி பதினொன்று அடிக்கப் போகிறது. இராத்திரி வேளை. உங்க உடம்பு இருக்கிற நிலையிலே வெளியிலே போவதா?''

”தடங்கல் சொல்லாதே ராஜா! நான் இப்போதே போய்ப் பார்க்க வேண்டும் நீதான் உதவி செய்யவேண்டும். உன் தோளைப் பற்றிக்கொண்டு நான் மெதுவாகக் கீழே இறங்கி வந்து விடுகிறேன்...''

''அத்தை எனக்குப் பயமாயிருக்கிறது. சேதுபதிக்குத் தெரிந்தால் என்னைக் கோபித்துக் கொள்ளுவார். நான் வர மாட்டேன்...”

"நீ வரமாட்டாயா ராஜா? கண்டிப்பாய்க் கேட்கிறேன். ஒரே வார்த்தைதான்; சொல்லி விடு. முடியாதா?''

ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. தயங்கினான், கடைசியில் அத்தையின் பேச்சைத் தட்ட முடியாமல் "சரி அத்தை புறப்படுங்க...'' என்றான்.

அடுத்த கணமே பார்வதி கட்டிலை விட்டு மெதுவாக எழுந்தாள். ஞானத்தைத் தவிர, வீட்டில் எல்லோருமே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

பார்வதி ஞானத்தை அழைத்து, ''கல்லூரிக்குப் போய் விட்டு அரை மணியில் திரும்பி வந்து விடுகிறேன். வீட்டைப் பார்த்துக்கொள்'' என்று புறப்பட்டாள்.

ஞானம் தடுக்கவில்லை. வெளியில் புறப்படும்போது தடையாக எதுவும் சொல்ல விரும்பாததால் மெளனமாகத் தலை யசைப்பதைத் தவிர, அவளால் வேறு ஒன்றும் செய்ய முடிய வில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
குருத்து இருபத்தி நான்கு



ராஜா அத்தையைத் தாங்கி அணைத்துக் கீழே கொண்டு போய் விட்டான். பார்வதிக்கு மூச்சுத் திணறியது. எப்படியோ காரில் ஏறிப் பின் சீட்டில் சாய்ந்துகொண்டாள்.

வாசல் கேட்டைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக் கிடப்பது கார் வெளிச்சத்தில் பளிச்செனத் தெரிந்தது.

”'அத்தை! இவனுக்கு உன்னைப் பார்க்க வேண்டுமாம். மாடிக்கு ஏறி வர முடியவில்லையாம். அம்மாவுக்கு உடம்பு ஏப்படி இருக்கிறது?' என்று என்னைத் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறான்...''

"நீ என்ன சொன்னாய்?''

”இப்போது பரவாயில்லை' என்று அவனிடம் சொல்லி விட்டேன். இல்லையென்றால் அவன் இருக்கிற நிலையில் மாடிப் படியேறி வந்து எங்காவது விழுந்து வைப்பானே!'' என்றான் ராஜா.

”பாவம், நன்றியின் சின்னம் இவன்!'' என்று இரக்கப் பட்டாள் பார்வதி.

கார், கல்லூரிக் காம்பவுண்ட் கேட்டை நெருங்கிய போது பார்வதி சுற்றுமுற்றும் பார்த்தாள். மிஸஸ் அகாதா ஒற்றைக் காலை விந்தி விந்தி நடந்து வருவது போலவும் பார்வதியைக் கண்டதும் வலது கையை உயர்த்தி, ஹல்லோ குட்மார்னிங் என்று கூறுவது போலவும் ஒரு பிரமை தோன்றியது அவளுக்கு. மிஸஸ் அகாதா -- பாவம் மிக நல்லவள்; கடமை தவறாதவள்'' என்று எண்ணிக் கொண்டாள்.

அடுத்த நிமிஷம் கார் பார்வதியின் ஆபீஸ் அறைக்கு முன்னால் போய் நின்றது. ஓடி வந்து கதவைத் திறப்பதற்கு அங்கே அட்டெண்டர் ரங்கசாமி இல்லை. ஆனாலும் அந்தக் காட்சியைத் தன் கற்பனையால் கண்டு மகிழ்ந்து கொண்டாள் பார்வதி.

'ராஜா! என்னைக் கொண்டு போய் என் அறையில் விடு!”

ராஜா அவளைத் தூக்கிக்கொண்டு போய் மெதுவாக நாற்காலியில் உட்கார வைத்துவிட்டான்.

இழந்ததெல்லாம் திரும்பி வந்துவிட்டது போன்ற ஒரு பெருமிதம் ஏற்பட்டது அவளுக்கு. ஆசையோடு டெலிபோனைத் தொட்டுப் பார்த்தாள். அதைத் தன் கையால் எடுத்துப் பேசி எத்தனை நாளாயிற்று! அதன்மீது புழுதி படிந்து கிடப்பதைக் கண்டு தானே அதைத் துடைக்கப் போனாள். இதற்குள் ராஜா டஸ்ட்டரை எடுத்து வந்து அதைத் துடைத்துவிட்டான்.

பார்வதி மேஜை மீதிருந்த காலிங் பெல்லைத் தட்டி விட்டு அதன் ஒலியைக் கேட்டுச் சிறு குழந்தை போல் சிரித்துக் கொண்டாள். பின்னர், அறை முழுவதையும் ஒருமுறை கண்ணோட்டமிட்டு அனுபவித்துவிட்டு, ”ராஜா! புதிய ஹாஸ்டல் மண்டபத்துக்குப் போகலாம் வா” என்று கூறியவள் அவன் தோளைப் பற்றிக்கொண்டாள்.

ராஜா அத்தையை ஹாலுக்குத் தூக்கிச் சென்றான்.

பொன் விழாவன்று அந்த ஹாலில் சேதுபதி பேசிய பேச்சு, தன்னுடைய சொற்பொழிவு, அவருக்குப் பக்கத்து வீட்டில் தான் அமர்ந்திருந்தது, மூக்குக் கண்ணாடியை அவர் மறந்து சென்றது, அதை விமான கூடத்தில் கொண்டு போய்க் கொடுத்தது எல்லாம் கண்முன் ஒவ்வொன்றாகத் தெரிந்தன. அவள் கண்களை நீர் மறைத்தது. கடைசியாக அந்த இடத்தைவிட்டு எழுந்து கல்லூரியின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று அங்குள்ள ஜடப் பொருள்கள் ஒவ்வொன் றுடனும் மானசீகமாக உரையாடிவிட்டு மனத்திருப்தியோடு மகிழ்ச்சியோடு காரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

வாசலில் இருந்த வேப்பங்கன்று அவள் பார்வையில் விழுந்தது. ''ராஜா! காரைக் கொஞ்சம் நிறுத்து" என்று கூறி அந்தச் செடியைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந் தாள்.

”நான் வைத்த கன்று. இப்போது எவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டது! இதற்கு யாராவது தண்ணீர் ஊற்றுகிறார்களோ இல்லையோ?'' என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டவள், "ம்... புறப்படு போகலாம்'' என்றாள்.

கார் வீட்டை அடைந்தது. ராஜாவுக்கு ஒரே திகில் அத்தையை நல்லபடி கொண்டு சேர்த்துவிட்டான். மேலே கொண்டுபோய்க் கட்டிலிலும் படுக்க வைத்தாகி விட்டது.
அப்புறம் தான் அவனுக்கு மூச்சு வந்தது.

ஞானத்தை ஹார்லிக்ஸ் கொண்டுவரச் சொல்லி அத்தையின் களைப்புத் தீரக் குடிக்கச் சொன்னான். அவளால் ஒரு வாய்க்கு மேல் அருந்த முடியவில்லை. அன்றிரவெல்லாம் அவள் வேப்பங்கன்று... அகாதா!...'' என்று ஏதோதோ வாய் பிதற்றிக்கொண்டிருந்தாள்.

காலையில் பொழுது விடிந்தபோது அவள் பேசக்கூடச் சக்தியற்றவளாய்ப் படுத்துக் கிடந்தாள்.

நல்ல வேளையாக அன்று அகாதாவே அவளைப் பார்க்க வந்துவிட்டாள். விடுமுறையைக் கழிக்க பங்களூருக்குப் போயிருந்தவளுக்குப் பிரின்ஸிபாலைப் பார்க்கவேண்டும் போல் தோன்றவே, ஒரு வாரம் முன்னதாகவே திரும்பி
வந்துவிட்டாள்.

”அத்தை! அகாதா வந்திருக்கிறார்'' என்று ராஜா கூறுயதும், பார்வதி கண் விழித்துப் பார்த்தாள். அகாதாவைக் கை ஜாடை காட்டி அருகில் அழைத்து அமரச் சொன்னாள். அகாதாவுக்கு உணர்ச்சி பொங்கித் துக்கம் நெஞ்சை அடைத்தது.

''அகாதா! நேற்றெல்லாம் உன் ஞாபகமாகவே இருந்தேன், நீயே வந்துவிட்டாய்! கல்லூரியை நீ தான் கவனித் துக் கொள்ள வேண்டும்.'' பார்வதியால் அவ்வளவுதான் பேசமுடிந்தது. மூச்சு முட்டித் திணறவே கண்களை மூடிக் கொண்டாள்.

”ரெஸ்ட் எடுத்துக் கொள்ளட்டும்; அவரை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம்'' என்று கூறிவிட்டு, அகாதா விடை பெற்றுக்கொண்டாள்.

அன்று மாலை சேதுபதி வந்தபோது மணி மூன்று இருக்கும்.

கீழே அவர் ராஜாவுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு பார்வதி எழுந்து உட்கார்ந்து கொண்டாள், அவளுக்கு அவரைக் காணவேண்டும் போலிருந்தது. மெதுவாகக் கட்டிலை விட்டு இறங்கி அறைக்கு வெளியே வந்து நின்றாள்.

''அத்தை.. அத்தை ! எதுக்காக எழுந்து வந்தீங்க?'' என்று கூவியபடியே ராஜா அவளைத் தாங்கிக்கொள்ள ஓடி வந்தான்.

''ராஜா! என்னைக் கீழே படுக்க வை. எனக்கு ஏதோ மாதிரி இருக்கிறது. நெஞ்சை வலிக்கிறது. அவர் வந்திருக்கிறாரா? இவ்வளவுதான் அவளால் பேச முடிந்தது. சேதுபதி அவள் எதிரில் வந்து நின்றபோது பார்வதி அவருடன் ஏதோ பேச முயன்றாள். ஆனால் முடியவில்லை, அவள் கண்கள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன. ”எனக்கு ஒரு குறையுமில்லை. தங்களுடன் பூரணமாக வாழ்ந்துவிட்ட நம்மதியுடன் நான் போகிறேன்'' அந்தப் பார்வையின் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

அவ்வளவுதான், அடுத்த சில மணி நேரத்துக்குள், பார்வதியின் கதை முடிந்து விட்டது.

”அத்தை!” வீரிட்டு அலறிவிட்டான் ராஜா. ஊரே பார்வதியின் இல்லத்தில் கூடித் தலை குனிந்து நின்றது.

'பார்வதியின் உயிர் விலை மதிப்பற்றது. அதற்காக நான் எதையும் இழக்கத் தயார்' என்று கூறிய சேதுபதி பச்சைக் குழந்தை போல் ஒரு மூலையில் விசும்பிக் கொண்டிருந்தார்.

கண்ணுக்கு லட்சணமாகக் காட்சி அளிப்பதைத் தவிர, விசிறி வாழையினால் யாருக்கும் எவ்விதப் பயனும் கிடையாது. பார்வதியின் வாழ்வும் அத்தகையதுதான். அவள் கடைசிவரை கன்னியாகவே, கண்ணுக்கு லட்சணமான காட்சிப் பொருளாகவே வாழ்ந்துவிட்டுப் போய் விட்டாள். அவளுடைய சொந்த வாழ்க்கை விசிறி வாழையைப்போல், காட்டில் காய்ந்த நிலவைப்போல், பயனற்ற ஒரு வாழ்க்கை யாக முடிந்துவிட்டது.

சாரதாமணிக் கல்லூரி, விடுமுறை முடிந்து திறக்கப் பட்டதும், மாணவிகளும் ஆசிரியைகளும் பிரார்த்தனை மண்டபத்தில் கூடி நின்றார்கள். பார்வதியின் ஆத்மா சாந்திக் காக அவர்கள் இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்திவிட்டுக் கலைந்தனர். சில தினங்களுக்கெல்லாம் கஸ்தூரி பிரார்த்தனை மண்டபத்துக் கெதிரில் பார்வதி துளசிச் செடியாக வந்து வளர்ந்து கொண்டிருந்தாள்.

சேதுபதியின் இல்லத்தில் முன் வாசல் கூடத்தில் பார்வதியின் படம் மாட்டப் பட்டிருந்தது. அதன் முன்னால் கைகட்டி நின்று கொண்டிருந்தார் அவர். அந்த இடத்தில் தான் பார்வதி டியூஷன் சொல்லிக் கொடுப்பது வழக்கம்.

ஆம்; அவர் கரத்தால் தீண்டிய சரஸ்வதியின் படம் சேதுபதியின் ஆபீஸ் அறையை அலங்கரித்தது. கருத்தால் தீண்டிய பார்வதியின் படம் முன் வாசல் மாலை அலங்கரித்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முடிவுரை



''ஒரு கதை சொல்கிறேன், கேட்கிறீர்களா? உற்சாகமாகப் பேச்சைத் தொடங்கினார் நண்பர்.

"சொல்லுங்கள் ” என்று நானும் ஆர்வத்துடன் கதை கேட்கத் தயாரானேன்.

''நான் கூறப்போவது ஒரு புதுமையான காதல் நவீனம். மற்றக் காதல் கதைகளோடு இதை ஒப்பிட முடியாது. இது ஒரு தனித்தன்மை வாய்ந்த கதை. இதில் வரும் கதாநாயகிக்குக் கிட்டத்தட்ட நாற்பத்தெட்டு வயதாகிறது. கதாநாயகருக்கு அவளைக் காட்டிலும் ஏழெட்டு வயது கூட இருக்கும். ஒருவரை ஒருவர் அந்தரங்கமாக நேசிக்கிறார்கள். அதன் விளைவாக மனப் போராட்டங்களுக்கும் கொந்தளிப்புகளுக்கும் ஆளாகிறார்கள். இறுதியில் கதாநாயகி இறந்து விடுகிறாள். அவர்களிடையே தோன்றும் உணர்வு, அதைக் காதல் என்றே கூறலாம் - அமரத்துவம் பெற்று விடுகிறது. இதுதான் கதை. எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

மிகச் சிறந்த கதை என்று பதில் கூறிவிட்டுக் கதையைப்பற்றிய சிந்தனையில் மூழ்கி விட்டேன் நான்.

கதை சொன்னது யார் தெரியுமா ?

கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளைக் கதாபாத் திரங்களாகக் கொண்டு தொடர்கதைகள் எழுதுவதில் வல்லமையும் புகழும் பெற்றுள்ள ’சேவற்கொடியோன்' தான், காதலுக்குரிய வயதைக் கடந்துவிட்ட கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இவர் கதை எழுத முற்படுவானேன்? சந்தேகம் ஏற்பட்டது. ஆயினும் அதை உடனேயே சொல்லவிட விருப்பமின்றி, மிக உயர்ந்த கதை எழுதுவதற்கு மிகுந்த ஆற்றலும் அனுபவமும் வேண்டும்'' என்றேன்.

இந்தக் கதையை நான் எழுதுவதாக உத்தேசமில்லை. அதற்கு வேண்டிய அனுபவமோ ஆற்றலோ என்னிடம் இருப்பதாகவும் நான் எண்ணவில்லை. இக் கதையைத் தாங்களோ அல்லது ஜெயகாந்தனோதான் எழுத வேண்டும், என்று மிகவும் தன்னடக்கத்தோடு கூறினார் அவர்.

கதையும், அதன் புதுமையும் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தன. அந்தக் கவர்ச்சி காரணமாக நானே கதையை எழுதுவதாகக் கூறினேன்.

ஆயினும் ”இதை வெற்றிகரமாக எழுதி முடிக்கும் ஆற்றல் எனக்கு உண்டா? என் திறமையில் சேவற்கொடியோன் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற முடியுமா?” என்ற பயம் இருக்கத்தான் செய்தது.

கதையைக் குட்டிச்சுவராக்கி என் பெயரைக் கெடுத்துக் கொள்வதுடன் அவர் பெயரையும் கெடுத்து விடுவோமோ என்ற அச்சமும் இருந்தது.

மீண்டும் மீண்டும் அந்தக் கதையை அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு முறையும் புதுப்புதுக் கருத்துகளும் கற்பனைகளும் வந்துகொண்டே இருந்தன. முழு உருவம் பெறாமலிருந்த கதை,சொல்லச் சொல்ல, முழுமை பெற்றது. எழுதிவிடலாம் என்ற துணிவும் நம்பிக்கையும் ஏற்பட்ட போதிலும் கூடவே இன்னொரு,சந்தேகமும் தோன்றியது. அப்போதுதான் வாஷிங்டனில் திருமணம் என்னும் நகைச்சுவைத் தொடரை எழுதி முடித்திருந்தேன். ஆதலால் இந்தக் கதையும் அம்மாதிரி நகைச் சுவை பொருந்தியதா இருக்கும் என்று வாசகர்கள் எதிர் பார்க்கக் கூடுமல்லவா? எனவேதான் முன்னெச்சரிக்கை யோடு முன்னுரையில் இது ஒரு புதுமையான காதல் நவீனம். இந்தக் கதையைப் படிக்கும் வாசகர்களில் யாராவது ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவார்களானால், அதையே இந்தக் கதையின் வெற்றியாகக் கொள்வேன் ? என்று குறிப்பிட்டிருந்தேன். அத்துடன் முடிவுரையில் நேயர்களுக்காக ஒரு முக்கிய விஷயம் காத்திருப்பதாகவும் சொல்லியிருந்தேன்.

இப்போது, இந்த இதழுடன், கதை முற்றுப் பெறுகிறது. இருபத்து மூன்று இதழ்களாக இதைத் தொடர்ந்து படித்து வந்த வாசகர்கள் அனைவருக்கும் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல வாசகர்கள் கதையைப் பாராட்டிக் கடிதங்கள் எழுதியிருப்பதுடன் பல இடங்களில் உணர்ச்சி வசமாகிக் கண்ணீர் பெருக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். கதையின் வெற்றிக்கு யாராவது ஒரு வாசகர் ஒரு சொட்டுக் கண்ணீர் பெருக்கினாலே போதும் என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு இப்போது ஒரு குடம் கண்ணீர் கிடைத்துவிட்டது. அது போதும்!

இந்த அருமையான கதையையும் இதில் அடங்கியுள்ள பல உயர்ந்த கருத்துகளையும் எனக்குத் தந்து உதவிய திரு சேவற்கொடியோன் அவர்களுக்கு நன்றி செலுத்துவதுடன், இந்தக் கதையின் மூலமாக எனக்குக் கிடைத்துள்ள புகழையெல்லாம் அவரிடமே சேர்த்து விடுகிறேன். கடைசியாக ஒரு வார்த்தை. இந்தக் கதை எந்தத் தனிப் பட்டவர்களின் வாழ்க்கையையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதல்ல.

வணக்கம்.
- சாவி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top