- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
52. சந்திரன் ஒரு திருடன்
விலைராணி ஓடி மறைந்துவிட்ட செடிகளின் கூட்டத்தருகே சென்று ஒரு செடியின் கிளையை விலக்கி உள்ளே நோக்கிய வீரகுப்தன் பார்வையில் எழுந்த எழில் மோகினியின் இணையிலா உருவம் எப்பேர்ப்பட்ட கவியின் வர்ணனைக்கும் அப்பாற்பட்டதாயிருந்ததால், இருந்த இடத்திலிருந்தே விகார முக வாலிபன் பெருமூச்செறிந்தான்.
ஒரே வினாடி பிற்பகுதி முழுவதும் தெரிந்த அவள் மோகன உருவத்தின் வளைவுகள் அவள் தலை துவட்டி குழலைச் சுற்றிப் பிழிந்து உதறி விட்டதும், நீளமான அவள் குழல் அவன் கண்களுக்கு திரையிட்டுவிட்டதால், திடீரெனத் தோன்றி மறைந்துவிட்ட மின்னலைக் கண்டவன் நிலையிலிருந்தான் வீரகுப்தன். கண்ணை மூடிச் சிறிது திறந்தான். அதற்குள் அவள் தலைக்குழலை எடுத்து முன்னுக்கு விட்டதால் மீண்டும் புலனான முதுகுப்புறத்தை அவள் வளைந்து துவட்டலானாள். அவன் எண்ணங்களும் வளைந்து வளைந்து அவள் பின்புற எழிலைப் பருகலாயின.
பழுத்த யானைத் தந்தத்தின் வெண்மையையும் மஞ்சள் நிறத்தையும் கலந்து பெற்றிருந்த அவள் லாவண்ய உடல்மீது ஆகாயத்திலிருந்த திருட்டுச் சந்திரன் செடிகளின் கிளைகளின் இடுக்குகளின் வழியாகத் தனது கிரணங்களை வீசி, அவள் உடல்மீது வட்ட வட்டமாக வெள்ளி நாணயங்களை இழைத்திருந்ததால், உலோகச் சிற்பமாக விளங்கினாள் விலைராணி.
அந்த நிலையில் அவள் உடலை வளைத்து வளைத்து துவட்டியதால், அந்த நாணயங்கள் மறைந்தும் இடம் மாறியும் காணப்பட்டதன் விளைவாக, வெள்ளிப் பணங்களை வாரியிறைக்கும் தனலக்ஷ்மிபோல் அவள் விளங்கினாள் சில விநாடிகள். நேரான முதுகுப்புறம் சாட்டை போல் இறங்கி இடையருகே அதிகமாகச் சிறுத்துவிட்டதாலும், அந்தச் சிற்றிடையில் வெள்ளி நாணயங்கள் மிகக் குறைவாயிருந்ததாலும், இடைக்குக் கீழே அளவோடு எழுந்த பருவத்திட்டுகளில் அவற்றின் பரிமாணத்தால் நாணயங்கள் அதிகமாகயிருந்ததாலும் மேலும் கீழுமுள்ள பணக்காரர்களுக்கு இடையே அகப்பட்டுக்கொண்ட ஏழைபோல் அவள் சிற்றிடை காட்சியளித்தது.
இத்தனைக்கும் அந்த இடையின் துவளலிலும் அசைவிலுமே மேலும் கீழுமுள்ள பெரிய பரிமாணங்கள் அசைந்ததால், ஏழையின் உழைப்பின்றி இயங்க முடியாத தனிகர்களை இடையின் நிலை நினைவூட்டியது.
இப்படி வட்ட வட்டமாக விழுந்த நிலவு நாணயச் சிறப்பால், அவள் உடல் காட்டிய விந்தையால், நிலைகுலைந்து நின்ற வீரகுப்தன் அவள் சரேலென்று திரும்பி உடலின் முற்பகுதியைத் துடைக்க முயன்றதும் மூச்சை இழுத்துப் பிடித்தக்கொண்டான். ஆனால் விலைராணி உதறிக் கையில் பிடித்திருந்த துண்டத்தால் உடலைப் போர்த்திவிட்டதாலும், போர்த்தியபடியே பூவுடலைத் துவட்ட முற்பட்டதாலும் ஏமாற்றமடைந்த அந்தக் காமுகன், தான் இருப்பதை ராணி எப்படியோ உணர்ந்திருக்கிறாளென்பதைப் புரிந்து கொண்டான்.
ஆனால் அவள் எச்சரிக்கையும், ஏமாற்று வித்தையும் அதிகப் பலனைத் தரவில்லையென்பதையும் உணர்ந்து கொண்டான். சுந்தர முகம் துடைத்து அங்கிருந்தே அவள் தொங்கவிட்ட ஆடைத்திரை அவள் தொடையுடன் நின்று விட்டதாலும், மேலே நின்ற இடங்களில் துவட்டு சீலை மார்பின் இரட்டை அழகின் மேடுகளில் தவழ்ந்து வந்ததாலும், அவள் உடலழகின் பகுதிகள் தெரிந்தும் தெரியாமலுமிருந்த காரணத்தினாலேயே அவனை உன்மத்தம் கொள்ளச் செய்தன.
புலனான அவள் அழகிடங்கள் அவன் புலன்களை ஈர்த்தன. புலனாகாத இடங்கள் ஊகத்துக்கு இடங்கொடுத்தன. இந்த மாதிரி நிலைகளில் மனிதன் அறிவு மிக வேகமாக இயங்குவதால் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவனுக்கு இன்ப இம்சையை அதிகமாகக் கொடுக்கின்றன.
ராணியை அந்த சமயத்தில் செடிகளின் கூட்டத்துக்கு அப்புறம் நின்று பார்த்த வீரகுப்தன் நிலையே அப்படியென்றால், விண்ணிலிருந்து பார்க்க முயன்ற வெண்மதியின் நிலை எப்படி இருக்க வேண்டும். குரு பத்தினியான தாரையையே நிர்வாணமாகப் பார்த்த காரணத்தினாலோ என்னவோ அவனுக்கு நிர்வாண அசை அதிகமானதால், அவன் தனது கிரணங்களினால் அவள் மோகன உருவத்தை ஊடுருவச் செய்ததன் விளைவாக, உடலுக்கு ராணி இட்டிருந்த திரை சற்று அதிகமாகப் பளபளத்தது.
எடுத்து முடிந்த தலைமயிரை இன்னொரு முறை நன்றாக உதறி விட்டுக்கொண்டாள் அந்த மோகினி. கழுத்தில் அவள் துவட்டு சீலையை இழுத்து முகவாய்க் கட்டையில் அழுத்தி முகத்தை மேற்புறம் நோக்கியபோது அவள் முகத்தின்மீது இலைகளைப் பிளந்துகொண்டு நேராக இறங்கிய இரு கூர் கிரணங்கள் அவள் நெற்றியையும், புஷ்டியான கன்னங்களையும் தழுவியதால் அவள் மஞ்சள் நிறம் சுத்த வெண்மைக்கு இடங்கொடுக்கவே, அந்த மோகினியை சந்திரன் முத்தமிடுவதாக வீரகுப்தன் எண்ணினான். அவள் தலை மயிரை சீராக முடியிட்டிருந்துங்கூட அவற்றில் சில பிரிந்து பட்டையாக அவள் உருண்ட தோள்களில் பதிந்ததால் அந்த இடங்களை சிற்பி சரியாகச் செதுக்காததுபோல் தெரிந்தாலும், செதுக்காததும் ஒரு அழகாகவே இருந்தது அவள் உடலின் தோரணைக்கு.
பிறகு அவள் முகவாய்க்கட்டைக்கும் மார்பின் உச்சிக்கும் இடையே கவ்வியிருந்த சேலையைக் கொண்டு திரையிட்ட நிலையிலேயே உடலைத் துடைத்தாள். அடுத்து மார்பைத் துடைத்து இடையில் சேலையைச் சுற்றிக் கொண்டதால் திடீரெனப் புறப்பட்ட இரு மார்பகங்கள் மீதும் இரு கிரணங்கள் விழுந்தாலும் அவற்றின் அழகை வெண்மதி உயர்த்த முடியாததால் இமயமலைச் சிகரங்களிரண்டின் மீது தவழ்ந்து அவற்றை மறைக்க முயலும் பனித்திரை போல் விளங்கினான்.
ஆனால் தனக்கும் அந்த அழகு மேடுகளுக்கு அழகு செய்ய முடியும் என்று காட்ட முற்பட்டு, துவட்டப்பட்ட பின்பும் தங்கிவிட்ட சில நீர்த்திவலைகளை முத்துக்களாக்கினான். அப்படிப் பளிச்சிட்ட அந்த முத்துக்களும் விம்மி நின்ற மார்பும் வீரகுப்தன் மனத்தை உலுக்கியிருக்க வேண்டுமென்றாலும், அவற்றை அவன் கண்கள் கவனிக்கவில்லை. அகப்படாத புதையலைத் தேடும் கருவியைப் போல சீலை மறைத்த இடையின் கீழ்ப் பகுதியிலும் அழகுத் தொடைகளின் மேல் பகுதியிலுமே அவை நிலைத்தன.
இடைக்குக் கீழே இறங்கிய வயிற்றில் பதிந்து திண்மையான தொடைகளையும் துவட்டு சீலை வளைத்தாலும், இடையே உட்புறம் சென்றுவிட்ட காரணத்தால், அந்த சேலை மறைக்க முயன்ற லாவண்யத்தைப் பற்றிய ஊகத்தால் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பால் சிறிது உடல் நடுங்கினான் வீரகுப்தன்.
அண்களின் திருட்டுத்தனத்தை எந்தப் பெண்ணும் உணரவும் ஊகிக்கவும் முடியுமாதலால், வீரகுப்தன் கண்டிப்பாய் எங்கோ மறைந்து தன்னை, தன் நிலையைப் பார்க்கிறானென்பதைப் புரிந்தகொண்டதால் லேசாகப் புன்முறுவல் செய்தாள் விலைராணி. அவன் கழுகுக் கண்கள் தனது பருவ உடலை அலசியிருக்குமென்பதில் அவளுக்குச் சந்தேகமில்லையென்றாலும், முதலில் முதுகுக்குக் குழல் திரையிட்டும், பிறகு முன்னழகுகளுக்கு துவட்டுச் சீலையால் திரையிட்டும், தான் அவனை ஏமாற்றிவிட்டதை நினைத்ததால் அவள் புன்சிரிப்பில் சிறிது கள்ளத்தனமும் கலந்து அவள் முகத்தை மனோகரமாக அடித்தது.
அவள் புருவங்கள் ஏதோ கேள்வி கேட்பனபோல் ஒரு முறை வளைந்து நிமிர்ந்ததாலும் கண்களும் கொடிக் கூட்டத்தின் வெளிப்புறத்தை நோக்கியதாலும் பறந்த காமன் கணைகள் வெளியே கொடியை அடியோடு விலக்கிக்கொண்டு அவள் தனிமையை உடைத்துவிட அவன் எண்ணிய தருணத்தில் நிகழ்ந்த இன்னொரு விந்தை அவனைப் பழைய இடத்திலேயே நிற்கவைத்து விட்டது.
இடையில் கட்டிய சீலையைத் திடீரென அவள் நீக்கினாள். சட்டென்று மீண்டும் ஒரு முழம் விட்டுக் கட்டினாள். சரேலென்று தோன்றிக் கருமையான மேகத்திடையே பாய்ந்து மறைந்துவிட்ட மின்னலைப் போல் அவள் பூவுடல் போர்த்திவிடப்பட்டதால் அவள் பழைய விலைராணியானாள். இத்தனைக்கும் துவட்டுச் சீலை போதாததால் ஆங்காங்கு சிறிதளவே உடலை மறைத்தாலும், மறைய வேண்டிய இடங்கள் மறைந்துவிட்டதால் வீரகுப்தன் மெள்ளத் திரும்பினான் அவள் கண்களில் படாதிருக்க. அந்தச் சமயத்தில் அவள் குரல் ஒலித்தது, “வரலாம்.” என்று.
திரும்பியவன் திடீரென நின்றான்.
“எங்கிருக்கிறாய் ராணி?” என்று ஏதுமறியாதது போல் வினவினான்.
அந்தத் திருட்டுத்தனத்தில் அவள் ஏமாறவில்லை.
“நீங்கள் பார்த்த இடத்தில்தான்.” என்று குரல் கொடுத்தாள் ராணி.
ஏற்கனவே விகாரமாயிருந்த வீரகுப்தன் முகம் வெட்கத்தால் அதிக விகாரமாயிற்று. அந்த விகாரத்துடன் உள்ளே நுழைந்த வீரகுப்தன் விலைராணியின் கண்களுக்கு விகாரமாயில்லை. அவன் உள்ளே வந்ததும் லேசாக அவள் நகைத்தாள். அவன் நுழைந்த சமயத்தில் அவன் பக்கத்துச் கொடியிலிருந்த ஒரு மலர்க்கொத்தைக் கொய்ய முயன்றாள். வீரகுப்தன் அதைக் கொய்தான். அவள் அழகிய தோளைப் பிடித்துத் திருப்பி அவள் குழலில் மலர்க்கொத்தைச் சொருகினான். அவள் பின்னால் அவன்மீது சாய்ந்தாள். அந்தச் சமயத்தில் அடித்த சிறு காற்று மேலிருந்த கிளைகளை விலக்கியதால் சந்திரன் தெரிந்தான். வீரகுப்தனும் விண்ணை நோக்கினான்.
“சந்திரன் ஒரு திருடன்.” என்று சொன்னான், விலைராணிமீது தனது கைகளைத் தவழவிட்ட வண்ணம்.
“உங்களைப் போல.” என்ற ராணி மதுரமாக நகைத்தாள்.
வீரகுப்தன் பேசவில்லை, இதழ்கள் எங்கோ புதைந்தது கிடந்த காரணத்தால்.