- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
62. ராட்சஸன் நீதி
இரவின் முதிர்ச்சி காரணமாகவும், வீரகுப்தன் நித்திரைகெடக்கூடாது என்றதன் காரணமாகவும், அறைமூலையில் நின்றிருந்த குத்துவிளக்கின் திரி நன்றாக இழுத்து விடப்பட்டிருந்துங்கூட தனது மஞ்சத்தை நாடி வந்தது மகதத்தின் மகா மந்திரி ராட்சஸன் என்பதை அரைக் கண்ணாலேயே பார்த்துவிட்ட வீரகுப்தன் ஒருமுறை மஞ்சத்தில் புரண்டு படுத்தான், நன்றாக நித்திரை செய்பவனைப்போல. அவன் செய்த பாசாங்கை உணர்ந்து கொண்டதால் புன்முறுவல் கொண்ட
ராட்சஸன், “வீரகுப்தா! பாசாங்குக்கு அவசியமில்லை, நான் கதவைத் திறந்ததுமே நீ விழித்துக்கொண்டு விட்டாய் என்பதை அறிந்து கொண்டேன். உன் கை தலையணைக்குக் கீழே போனதையும் கவனித்தேன். என் முகத்தைக் கண்டதும் அதை மீண்டும் எடுத்துக் கொண்டதையும் கவனித்தேன். ஆகவே நீ புரண்டு படுக்க வேண்டியதில்லை. எழுந்திருக்கலாம்.” என்று கூறினான்.
அதைக் கேட்டும் வீரகுப்தன் புரண்டு குப்புறப்படுத்த நிலையிலிருந்து எழுந்திருக்காமாலேயே பேசினான், “மகதத்தின் மகாமந்திரி ராஜ்யத்தைவிட்டு எதிரி எல்லைக்குள் இத்தனை தூரம் வருவதற்கு அதிக துணிவு வேண்டும்.” என்று பாராட்டினான் வீரகுப்தன்.
“துணிவில் எனக்குக் குறைந்தவனல்ல நீ. ஆனால் ஒரு வித்தியாசம் இருக்கிறது. நீ வேஷம் போடுவாய், நான் போடுவதில்லை.” என்று சொன்ன ராட்சஸன், “எனது முத்திரை மோதிரம் எங்கே?” என்று கையை நீட்டினான்.
அந்தக் கேள்வி காதில் விழுந்ததும் திரும்ப மல்லாந்து படுத்து ராட்சஸனை நோக்கிய வீரகுப்தன், “முத்திரை மோதிரமா?” என்று ஏதுமறியாதது போல் வியப்புடன் வினவினான்.
“ஆம் என் குழந்தையிடமிருந்து நீ பறித்தது.” என்றான் ராட்சஸன். இம்முறை அவனுடைய சொற்களில் உஷ்ணம் தெரிந்தது.
வீரகுப்தன் முகத்திலும் உஷ்ணம் பரவியது.
“என்னைத் திருடனென்று சொல்வி இதுவரை யாரும் பிழைத்தது கிடையாது.” என்றான் உஷ்ணம் குரலிலும் பரவ.
உஷ்ணத்தாலும் உள்ளக் கொதிப்பாலும் வீரகுப்தன் முகம் பரம விகாரபட்டு விட்டதை ராட்சஸன் கண்டான். ஆயினும் சிறிதும் உஎலனப்படாத குரலில் சொன்னான், “வீரகுப்தா! நீ பிச்சைக்காரன் வேஷம் போட்டு பாடலிபுத்ரத்தில் வந்ததை நான் கவனிக்கவில்லை என்று நினைக்காதே.
ஒற்றர்களையும், திருடர்களையும் கொல்வது ராஜநீதியென்றாலும் மாவீரனான உன்னை எதுவும் செய்ய நான் விரும்பவில்லை. நீண்ட நாளாக உன்னைப் போர்க்களத்தில் சந்திக்கும் ஆசைதான் எனக்கு. ஆனால் ஒன்று, முத்திரை மோதிரத்தை எப்படிக் கைப்பற்றினாய் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.” என்று.
வீரகுப்தனின் சலிக்காத முகமும் சிறிது சலித்தது.
“குழந்தையிடமிருந்து நான் திருடவில்லை உங்கள் மோதிரத்தை. குழந்தை பல பொருள்களுடன் முத்திரை மோதிரத்தையும் தெருவில் எறிந்தது. அதைக் காலால் மிதித்து யாரும் பார்க்காதபோது கையில் எடுத்துக் கொண்டேன்.” என்று அதுவரை மரியாதையாகப் பேசிக் கொண்டுபோன வீரகுப்தன்,
“ராட்சஸா! உன் குழந்தை சொர்ண விக்கிரகம். அதை அடைந்த நீ பாக்கியசாலி. ஆனால் மிகவும் அதிகமாக செல்லம் கொடுத்திருக்கிறாய். மிக ஜாக்கிரதையாகப் பாதுகாக்கப்பட வேண்டிய உன் முத்திரை மோதிரத்தை நீ குழந்தை எடுக்கும் நிலையில் வைத்தது மிகத் தவறு.” என்று மரியாதையைக் கைவிட்டு ராட்சஸனைப் போலவே சகஜ பாஷையில் பேசினான்.
குழந்தையை வீரகுப்தன் பாராட்டியதால் ராட்சஸன் முகம் மலர்ந்தது.
“நீ சொல்வது உண்மை வீரகுப்தா. ஒரே குழந்தை எனக்கு. ஆகையால் செல்லம் கொடுத்துவிட்டேன். ஆனால் முத்திரை மோதிரத்தை நான் கொடுக்கவில்லை. அது எடுக்கும் இடத்திலும் இல்லை. அவன் தாயார் எடுத்துக் கொடுத்துவிட்டாள்.” என்று விளக்கினான் ராட்சஸன். அவன் குரலில் மகிழ்ச்சி நிரம்பி நின்றது. முகத்தில் அதன் சாயை பெரிதும் விரிந்தது.
அந்த சமயத்தில் படுத்த நிலையிலிருந்து எழுந்திருக்க முயன்ற வீரகுப்தனை, “அப்படியே படுத்திரு. எழுந்திருக்க வேண்டாம்.” என்று கூறி, கையால் சைகையும் காட்டினான் ராட்சஸன்.
வீரகுப்தன் கை மெள்ள தலையணையின் அடியை நாட, முயன்றது.
“அதுவும் பயனளிக்காது. அதை வீசுமுன்பு உன் மீது நாலைந்து குறுவாட்கள் விழுந்துவிடும். உன் கை, அசையும்போது நானும் அசைவேனாகையால் கத்தி குறிக்கும் வராது.” என்ற ராட்சஸன், “வீரகுப்தா! நீ என்னிடம் சிறைப்பட்டிருக்கிறாய். வேண்டுமானால் உனக்கு இடதுகைப் பக்கமிருக்கும் சாளரத்தைப் பார்.” என்றான்.
மல்லாந்து படுத்தபடி கண்களை மட்டும் திருப்பி சாளரத்தைக் கவனித்த வீரகுப்தன் அங்கு சமரகுப்தனும் இன்னொரு வீரனும் குறுவாட்களை ஏந்தி நிற்பதைப் பார்த்தான்.
அதே சமயத்தில் கதவுப்புறம் கண்களைத் திருப்பியதும் அங்கு ராட்சஸனுக்குப் பின்னால் இரு வீரர்கள் வந்து நிற்பதைக் கண்டு தான் நன்றாக சூழப்பட்டுவிட்டதைப் புரிந்துகொண்ட வீரகுப்தன், “எப்படியும் இந்தச் சத்திரக்காரன் குருநாதருக்கு வேண்டியவனென்று தெரிகிறது. அவன் கூக்குரல் கிளப்பினால் ராட்சஸன் எப்படி என்னை அழைத்துச் செல்ல முடியும்?” என்று உள்ளூர கேட்டுக் கொண்டான்.
அவன் மனத்திலோடிய எண்ணங்களை ராட்சஸனும் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவன் இதழ்களில் இளநகை அரும்பியது.
“வீரகுப்தா! உன்னை வரவேற்ற சத்திரக்காரனும் மற்ற இருவரும் கைகால்கள் கட்டப்பட்டு ஒரு அறையில் உருட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வாய்களிலும் துணி அடைக்கப்பட்டிருக்கிறது.” என்று நிலைமையைத் தெளிவாக்கிய ராட்சஸன், “எழுந்திரு வீரகுப்தா! மூன்றாம் ஜாமத்துக்கு முன்பாகவே இந்த ஊர் எல்லையை நாம் தாண்டிவிட வேண்டும்.” என்றான்.
தப்பும் முயற்சி பயனளிக்காது என்பதைப் புரிந்து கொண்ட வீரகுப்தன் மெள்ள எழுந்து கட்டிலில் உட்கார்ந்தான். பிறகு அறைச் சாளரத்தை நோக்கி, “சமரகுப்தா! குப்தர்கள் இப்படி குடும்ப துரோகம் செய்தது கிடையாது. நீ விதிவிலக்கு போலிருக்கிறது?” என்றான்.
சமரகுப்தன் ஏதோ சொல்ல முயன்றான். அவனைத் தனது ஒரு கையின் சைகையால் அடக்கிய ராட்சஸன், “வீரகுப்தா! உடன்பிறந்தே கொல்லும் வியாதி என்று பழமொழியிருக்கிறது. நீ எச்சரிக்கையாயிருக்க வேண்டும்...” என்று கூறியதுடன், “பாடலிபுத்ரம் சென்றதும் சமரகுப்தன் செய்த இந்தச் சேவைக்குப் பரிசு காத்திருக்கிறது.” என்றும் சொன்னான்.
“இவன் செய்வது சேவையா?” மிகுந்த இகழ்ச்சியுடன் வினவினான் வீரகுப்தன்.
“ஒருவருக்கு சேவை செய்யும்போது இன்னொருவருக்கு துரோகம் செய்வது அவசியமாகிறது.” என்ற ராட்சஸன், “சரி புறப்படு! நாம் சீக்கிரம் சந்திரகுப்தன் எல்லையைத் தாண்டிவிட வேண்டும் விடிவதற்குள்.” என்றான்.
அடுத்த விநாடி சாளரத்தின் மூலம் சமரகுப்தனும் இன்னொரு வீரனும் ஏறிக் குதித்தார்கள் அறைக்குள். ராட்சஸன் சிறிது விலகவே அவனுக்குப் பின்னால் நின்ற இரு வீரர்களும் வீரகுப்தனை அணுகினார்கள். அப்படி நால்வரால் சூழப்பட்டிருந்தாலும் அலட்சியமாக அவர்களைப் பார்த்த வீரகுப்தன் தலையணையின் அடியிலிருந்த மெல்லிய குறுவாளை எடுத்துத் தனது கச்சையில் சொருகிக்கொண்டான்.
அதை ராட்சஸன் ஆட்சேபிக்கவில்லை. அந்தக் கத்தியைப் பிடுங்க யத்தனித்த சமரகுப்தனையும் தடுத்து, “அவரைத் தொடாதே. அந்தக் கத்தி அவரிடம் இருக்கட்டும். அவர் வாளையும் அணிந்துகொள்ளட்டும்.” என்று கூறிய ராட்சஸன், “வீரகுப்தா! என் தலைநகர் வரும் வரை தப்ப முயலுவதில்லை என்று நீ வாக்குக் கொடுத்தால் எந்தவிதத் தொந்தரவுமில்லாமல் வீரனாகப் பயணம் செய்யலாம்...” என்றான்.
அதை ஒப்புக்கொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் வீரகுப்தன். அதற்குமேல் அரைவிநாடியும் தாமதிக்காத ராட்சஸன் அறையை விட்டு வெளியே கிளம்பினான். வீரகுப்தனும் மற்ற வீரர்களும் அவனைத் தொடர்ந்தனர். வாயிலில் வீரகுப்தன் புரவியும் ராட்சஸன் புரவியும் அக்கம் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கவே இருவரும் அதில் ஏறி மற்ற வீரர் தொடரப் பயணத்தைத் துவங்கினர்.
ராட்சஸன் பயணத்தில் எந்தவிதத் துரிதத்தையும் காட்டவில்லை. மேற்கும் கிழக்கும் பிரியும் கூட்டுப் பாதை வந்ததும் கிழக்கில் திரும்பினான் ராட்சஸன். அங்கிருந்து நேராக பாடலிபுத்ரம் செல்லும் மார்க்கத்தில் விடாது பயணம் செய்த ராட்சஸன் அடுத்த நான்கு நாட்களில் மகதத்தின் எல்லையில் புகுந்தான்.
அது கங்கை சமவெளியென்பதை செழித்த பயிர்களும் உயர்ந்து அழகாகக் காணப்பட்ட மரங்களும் உணர்த்தின. மகத எல்லையிலேயே துவங்கிவிட்ட பாதுகாப்புப் படை வீரா் நடமாட்டம் போகப் போக வலுப்பட்டதை வீரகுப்தன் கண்டான். ராட்சஸன் போர் நிலையில் மகதத்தை வலுப்படுத்திவிட்டதைக் கண்ட வீரகுப்தன் இப்பேர்ப்பட்ட அழகிய ராஜ்யம் போரால் நாசமாகப் போகிறதே என்ற நினைப்பால் துக்கப் பெருமூச்சு விட்டான்.
அதைக் கவனித்த ராட்சஸன் சொன்னான், “போர் துவங்கப் போகிறது. ஆகையால் முன்னெச்சரிக்கையாயிருக்கிறேன்...” என்று.
“போர் துவங்கப் போகிறது என்று யார் சொன்னது?” என்று. வினவினான் வீரகுப்தன்.
“துவங்கிவிட்டது என்று நான் சொல்லியிருக்க வேண்டும்.” ராட்சஸன் குரலில் விசனம் இருந்தது.
“துவங்கிவிட்டதா! எப்பொழுது?” வீரகுப்தன் கேள்வியில் வியப்பு இருந்தது.
“சந்திரகுப்தன் படைகள் தக்ஷசீலத்திலிருந்து புறப்பட்டு விட்டதாகக் கேள்வி. அதற்குச் சரியான படைத்தலைவன் கூடாது என்றுதான் உன்னைச் சிறை செய்தேன்.” என்ற ராட்சஸன் விளக்கினான்.
“நான் என்ன அத்தனை முக்கியம்?” வீரகுப்தன் கேட்டான்.
“சந்திரகுப்தன் படையைப் போர் முறையை ஒழுங்காக நடத்தக்கூடியவன் நீ ஒருவன்தான்...”
“மகாராஜா?”
“சந்திரகுப்தன் பெரிய வாள்வீரன். ஆனால் போர் அனுபவம் போதாது. உன்னைப்போல் வியூகங்களை வகுக்கத் தெரியாதவன்...”
“குருநாதர் சொல்லிக் கொடுக்கமாட்டாரா?”
“சொல்லிக் கொடுப்பார். ஆனால் கற்றுக்கொண்டு போர் நடத்த அவகாசமில்லை.” இதை மிகத் திட்டமாகச் சொன்னான் ராட்சஸன்.
இப்படி விவாதித்துக்கொண்டே அடுத்த ஆறு நாட்களில் மகதத்தின் தலைநகரை எட்டிவிட்ட ராட்சஸனை பிரமை தட்டும் கண்களுடன் பார்த்தான் வீரகுப்தன்.
பாடலிபுத்ரம் முழுப் போர்க்கோலம் போட்டு நின்றது. அதன் பெரும் கதவுகளும் பல வாயில்களும் பயங்கரமான பாதுகாப்பில் இருந்தன. ராட்சஸன் தலைநகரத்தின் மேற்கு வாயிலை அடைந்து கையை அசைத்ததும் பெரும் கதவுகள் பெரிய சத்தத்துடன் திறந்தன. அவற்றுக்குள் சென்ற ராட்சஸன் தனது மாளிகையை நோக்கிப் புரவியை நடக்கவிட்டான்.
நகருக்குள் நுழைந்ததிலிருந்து ராட்சஸன் பெரும் உற்சாகக் கூச்சலுடனும் மகிழ்ச்சிக் கோஷங்களுடனும் வரவேற்கப்பட்டான். பல மாளிகையின் உப்பறிகையிலிருந்து மங்கையர் அவன்மீது பூமாரி பொழிந்தனர். அவன் வந்துவிட்டதை அறிவிக்க அரண்மனை தாரைகள் முழங்கின.
இப்படி அரசனைப்போல் வீதிகளில் பவனி வந்த ராட்சஸன் தனது புரவியிலிருந்து குதித்து வீரகுப்தன் புரவியை நோக்கி வந்து கையை நீட்டினான். அதன் காரணத்தை உணர்ந்த வீரகுப்தன் தனது வாளைக் கச்சையிலிருந்து அவிழ்த்து எடுத்து ராட்சஸனிடம் அளித்தான்.
“வீரகுப்தா! உன்னைச் சிறை செய்வதைத்தவிர வேறு வழியில்லை எனக்கு.” என்று மரியாதையுடன் கூறிவிட்டு அவனைப் புரவியிலிருந்து இறங்கச் சொல்லி, “சந்திரகுப்தன் தமையனை நமது கங்கைச் சிறையில் அடைத்து வையுங்கள். இந்தச் சமரகுப்தனை நமது பாதாளச் சிறையில் தள்ளுங்கள்.” என்று உத்தரவிட, வீரர்கள் பலர் இருவரையும் சூழந்துகொண்டதும் கூறினான் சமரகுப்தன், “மகாமந்திரி, என் சேவைக்கு பரிசு கொடுப்பதாக வாக்களித்தீர்களே.” என்று.
“வீரகுப்தனுக்கு நீ செய்த துரோகத்துக்கு இதுதான் பரிசு.” என்று கூறிய ராட்சஸன் தனது மாளிகைக்குள் நுழைந்து சென்றுவிட்டான்.
வீரர் இருவர் வீரகுப்தனை அணுகி, “வீரரே! எங்களைத் தொடர்ந்து வாருங்கள்.” என்று மரியாதையாக அழைத்தனர்.
சமரகுப்தனுக்கு அழைப்பு எதுவுமில்லை. அவன் வாளும் அவனது வீரர்களின் வாட்களும் மகத வீரர்களால் பலவந்துமாக அகற்றப்பட்டன. சமரகுப்தனை மட்டு மரியாதை சிறிதுமின்றி இழுத்துச் சென்றனர்.
“இது அநியாயம்.” என்று பெரிதாகக் கூவினான் சமரகுப்தன்.
“ராட்சஸன் நீதி.” என்று ஒரு வீரன் அவனைத் திருத்தினான். கையை ஒரு மடக்கு மடக்கித் திருப்பவும் செய்தான். பெரிதாக அலறினான் சமரகுப்தன்.