- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
கவிதை – 21
“தம்பி...” என்ற குரலைக் கேட்டு, திரும்பிய அனைவரும், வீட்டு வாயிலில் நின்றுக் கொண்டிருந்த வயதில் மூத்தவரை புரியாமல் பார்க்க,
“வாங்க ராமண்ணா... என்னோட திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்தாச்சா? நேத்து வந்ததை நியாபகம் வச்சிக்கிட்டு நேரா இங்கயே வந்துட்டீங்களா?” கேட்டுக்கொண்டே அவரை உள்ளே அழைத்துக் கொண்டு வந்தான்.
“இல்ல தம்பி... நான் இங்கேயே இருக்கேன்... ஜோசப்பும் வந்திருக்கான்...” ராமண்ணா தயக்கத்துடன் சொல்லவும், ஒரு சில வினாடிகள் அவரை குழப்பமாக பார்த்த ப்ரித்வி, வெளியில் சென்று பார்க்க, ஒரு காரில் ஜோசப்புடன் சில ஆட்கள் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து, சிரித்துக் கொண்டே ராமண்ணாவைப் பார்த்தான்.
“என்ன ராமண்ணா... என் மேல நம்பிக்கை இல்லையா? ஜோசப்பை கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று கேட்டபடியே, ஜோசப்பை பார்த்து கையசைக்க, ஜோசப் ப்ரித்வியின் அருகே ஓடி வந்தான்.
“வணக்கம் தம்பி...” அவன் கும்பிடவும், அவனது கையை எடுத்து விட்டவன், கஜாவை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, சிறிது நேரம் அவனுடன் பேசிக் கொண்டு நிற்க, கஜா தயக்கத்துடன் மெல்ல அவன் அருகில் வந்தாள்.
“வாங்க லக்ஷ்மிம்மா... நல்லா இருக்கீங்களா?” ராமண்ணா கேட்கவும்,
“நல்லா இருக்கேன் ராமண்ணா...” அவளது பதிலில்,
“நீங்க இந்த ஊர்க்காரவுங்களே இல்லைன்னு இங்க எல்லாரும் சாதிக்கவும், தம்பி ரொம்ப பயந்து போயிட்டார்... தூங்கவே இல்ல... உங்களை பார்த்த அப்பறம் தான் அவருக்கு நிம்மதியா இருந்திருக்கும்... உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்களா?” ராமண்ணா படபடவென்று கேட்கவும்,
“என்ன ராமண்ணா... புதுசா வாங்க போங்கன்னு பேசிட்டு இருக்கீங்க... எப்பவும் போல லக்ஷ்மின்னு கூப்பிடுங்க... இன்னும் உங்க தம்பி எதையும் வாய் விட்டு சொல்லவே இல்ல.. அதுக்குள்ள நீங்களா எப்படி என்னை உங்க முதலாளியம்மான்னு முடிவு செய்துக்கறீங்க? என்னவோ போங்க ராமண்ணா” கண்கள் அவனிடம் கதை பேசினாலும், அவளது குரலில் இருந்த ஏக்கம் ப்ரித்விக்கு புரிய,
“எல்லாம் எதையெதை எப்போ சொல்லணுமோ அப்போ சொல்லுவோம்... ரொம்ப சலிச்சுக்காத... வாய் விட்டு சொன்னா தான் புரியுமோ? அப்போ உன்னைத் தேடி வந்தது எல்லாம் எதுக்காம்...” என்றவன்,
“சரி நீ உள்ள போ... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...” ராமண்ணாவைப் பார்த்துக் கொண்டே அவன் சொல்லவும்,
“பேசிட்டு வாங்க ராமண்ணா... காபி எடுத்துட்டு வரேன்...” என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே திரும்ப,
“ஆமா ராமண்ணா... இங்க யாரோ, நாம முன்ன காபி கேட்டதுக்கு, சுடு தண்ணி தான் கிடைக்கும்ன்னு சொன்னாங்க...” ப்ரித்வி அவள் முகம் சுருங்கி உள்ளே செல்லத் திரும்பவும், வம்புக்கு இழுக்க,
“யாரோ... அது யாரோ?” கஜா அவனது வம்பு புரிந்து பாடவும்,
“அது என்னோட முறைப்பொண்ணு தான்... இன்னிக்கு முறைச்சுக்கிட்டே, சில்லுன்னு தண்ணி தான் கொடுத்தா... மாமா வந்திருக்கானே... விருந்து சமைப்போம்னு தோணுதா பாரு... ஒண்ணுமே இல்ல... தத்தி மாதிரி லுக்கு தான் விடறா...” கள்ளப் புன்னகையுடன் சொன்ன ப்ரித்வியை ஜோசப் ஆச்சரியமாகப் பார்க்க, ‘நான் சொன்னேன் இல்ல’ என்பது போல ராமண்ணா, ஜோசப்பைப் பார்த்தார்.
அவர்களது பார்வை பரிமாற்றத்தைப் பார்த்தவன், “ஹஹாஹா... அதுக்குள்ள ராமண்ணா எல்லாத்தையும் சொல்லியாச்சா?” என்று கேட்ட ப்ரித்வி,
“நீ போய் காபிக்கு ரெடி பண்ணு லக்ஷ்மி...” என்றபடி, ஜோசப்பின் தோள் மீது கைகளை போட்டு அழைத்துக் கொண்டு, பேசிக் கொண்டே வெளியில் சென்றான்.
அந்த நேரம், வேக நடையுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த செல்வராசுவும், அவரைத் தொடர்ந்து ஓடி வந்துக் கொண்டிருந்த தனபாக்கியத்தையும், அவர்கள் இருவரின் பின்னால் கெஞ்சிக் கொண்டே வந்துக் கொண்டிருந்த பழனியையும் பார்த்த ப்ரித்வி, என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்து, அவர்களை வேடிக்கைப் பார்க்க,
“இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்ச... உன் காலை வெட்டிருவேன்... ச்சே... ஒரு பொறுக்கிய நம்பி... நான் என் பொண்ணை கொடுக்க இருந்தேனே...” செல்வராசு உறுமவும்,
“புதுசா, படிச்ச பணக்கார மருமவன் வந்துட்டான்னு தானே இந்த ஆட்டம் ஆடற... அநாதைப் பையன்... கேட்க ஆளே இல்ல... இம்புட்டு பணம் வச்சிருக்கற அவன் மட்டும் என்ன உத்தமனாவா இருந்திருப்பான்... அவனைப்பத்தி, அவன் ஊருல கேட்டுப் பாருங்க... தெருவுக்கு ஒரு பெண்டாட்டி வச்சிருப்பான்...” ப்ரித்வி அங்கு நிற்கவும், அதைப் பார்த்து மேலும் கோபம் கொண்ட பழனி, அவனையும் அசிங்கப்படுத்திவிடும் நோக்கத்தில் வார்த்தையை விட,
“டேய்... யாரைப் பார்த்து என்ன பேசற? பெங்களூர்ல வந்து கேட்டுப் பாருடா... அவரைப் பத்தி... ஒரு பொண்ணை திரும்பி பார்த்து இருப்பாரான்னு...” ஜோசப் கோபமாக உறுமவும்,
“டிக்கெட் எடுத்துக் கொடு வந்து விசாரிக்கறேன்...” பழனி நக்கலடிக்க,
அவனது நக்கலில் கொதித்த ஜோசப்... “யாரைப் பார்த்து பேசற நீ? ஓவரா பேசின... பல்லு அதனையும் தட்டி எண்ணி கையில கொடுத்திருவேன்” என்று ஜோசப் உறும, யாரது புதிதாக வந்திருப்பது என்று பார்த்த செல்வராசு... அது முக்கியமில்லை என்று உணர்ந்து, பேசுவதற்கு முன்,
“டேய்... சத்தியமா அவர் உன்னைப் போல பொய் சொல்லி இருக்க மாட்டார்டா... ‘ஏன் பழனி... நீ அந்த பொண்ணு வீட்டுக்கு அடிக்கடி போயிட்டு வரதா முத்து சொல்றானே... என்னன்னு கேட்டேன் தானே... நீ என்ன சொன்ன?
‘அவ என் தங்கை மாதிரி... அவளுக்கு உதவ யாரும் இல்ல... அவளை எல்லாரும் தப்பான பார்வையால தொல்லை செய்யறாங்க... அதுக்கு நான் காவலா இருக்கேன்...’ அப்படின்னு எல்லாம் கற்பூரம் அடிச்சு சத்தியம் செய்யாத குறையா ஆத்தா கோவில் முன்னால நின்னு நீலிக் கண்ணீர் வடிச்சியேடா... சாமி முன்னால பொய் சத்தியம் செய்ய, உனக்கு கொஞ்சம் கூடவா மனசு அறுக்கல...
வேலிக்கு ஓணான் காவல்ங்கற கதைய சொல்லிட்டு... ஏண்டா... நானும் தெரியாம தான் கேட்கறேன்... ஒரு தங்கச்சி வீட்ல, அண்டர்வேரோட உனக்கு என்னடா வேலை... அதுவும் அவ பாவாடையை போத்திக்கிட்டு... கலைஞ்ச தலையோட... கதவைப் பூட்டிகிட்டு... என்ன, வீடு துடைச்சு கொடுத்துட்டு இருந்தியா?” தனபாக்கியம் கேட்கவும்,
“ஆமா அக்கா...” அவன் உளற,
“அடி செருப்பால... இன்னமும் பொய்யா சொல்லிக்கிட்டு திரியற... பஞ்சாயத்து முடிஞ்ச பின்னால... கஜா உடம்பு முடியாம வாந்தி எடுத்தாளே... அது என்னாச்சுன்னு பார்க்க வந்தியாடா... அதெல்லாம் விட்டுட்டான்... அந்த இவளுக்கு வீடு துடைக்க போனானாம்...
சரி பொண்ணுங்கள பார்த்தா கொஞ்சம் இளிக்கிற தான்... அதெல்லாம் கல்யாணம் ஆனா சரியா போயிரும்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்... சீ.. தூ.... உன்னை நம்பி என் பொண்ணை கொடுக்க இருந்தேனேடா... நீ எல்லாம் மனுஷனா... நம்மளை இந்தளவுக்கு நம்பறாங்களே... அதைப் பொய்யாக்குற மாதிரி நாம தப்பு செய்யறோமேன்னு உடம்பு கூசல... போடா இங்க இருந்து...” நம்பி ஏமாந்த கோபத்தில் தனபாக்கியம் அவனை பிடித்துத் தள்ளிவிட்டு திட்ட,
“அக்கா... நான் சொல்றதை நம்புக்கா... சத்தியமா... இது யாரோ செய்த சதி...” பழனி கெஞ்சவும்,
“வாய திறந்த, வாய கிழிச்சு பொலி போட்ருவேன்...” என்று தனபாக்கியம், வாயைக் கிழிப்பது போல அவன் அருகே செல்லவும், குடி போதையின் தள்ளாட்டத்தில் அவன் மீண்டும் கீழே விழுந்தான்.
விடாமல் தள்ளாடிய படி எழுந்து நின்ற பழனி, “உன் மவளுக்கு எப்படி கல்யாணம் ஆகுதுன்னு நானும் பார்க்கறேன்... புதுசா மாப்பிள்ளை வந்த உடனே என்னிய வெளிய துரத்தற இல்ல... அவளை என்ன செய்யறேன் பாரு...” என்று தனபாக்கியத்தை நோக்கி பழனி கத்த, வீட்டின் உள்ளே சென்றுக் கொண்டிருந்தவர், திரும்பிக் கூடப் பார்க்காமல், எந்த பதிலும் பேசாமல், அவனது கத்தலுக்கு பதிலாக அவரது கால் செருப்பே அவனுக்கு நேராக வந்து விழுந்தது.
அதைப் பார்த்தவன், மேலும் வெகுண்டெழுந்து, “எல்லாம் உன்னால வந்துச்சுடா... ஊருக்கே தெரியாம, ரெண்டு வருஷமா பொத்தி காப்பாத்திட்டு வந்தேன்... இப்படி என்னை டவுசரோட கெஞ்ச விட்ட இல்ல... அவளை என்ன செய்யறேன் பாரு... அதுக்கப்பறம் நீ அவளை கட்டறியான்னு நானும் பார்க்கறேன்...” என்று தொடையில் தட்டி ப்ரித்வியை நோக்கி சபதம் செய்தவன், ஒரு கல்லை எடுத்து ப்ரித்வியின் மேல் வீசிவிட்டு செல்ல, அதில் இருந்து அவன் விலகினாலும், லேசாக உரசிவிட்டே அது விலகி சென்றது.
ப்ரித்வி அடி பட்டதை பார்த்ததும் ஜோசப் பாய்ந்து பழனியை தாக்க முயல... அவனை ப்ரித்வி தடுத்து நிறுத்தினான்... “தம்பி... அவனை என்ன செய்யறேன்னு பாருங்க...” ஜோசப் உறும, அவனைத் தடுத்து, அர்த்தம் நிறைந்த பார்வை பார்த்துவிட்டு, உள்ளே செல்ல,
“இருங்க தம்பி...” என்று தனது கைக்குட்டையை எடுத்து ராமண்ணா, அந்த இடத்தில் வைத்து, ரத்தத்தை ஒற்றி எடுக்க,
“நான் உள்ள போய் மருந்து போட்டுக்கறேன் ராமண்ணா...” என்றவன்,
“ஜோசப்...” என்று கூர் பார்வை ஒன்றைப் பார்த்துவிட்டு, சிறு தலையசைப்புடன் உள்ளே செல்ல, ஜோசப்பும் பதிலுக்கு தலையசைத்து, அமைதியாக நின்றான்.
“என்னங்க என்னாச்சு...” அவன் நெற்றியில் கசிந்த ரத்தத்தைப் பார்த்து கஜா பதற,
“ஒண்ணும் இல்ல... உங்க பழனி மாமா கொடுத்த பரிசு...” உதட்டில் சிரிப்பை அடக்கிக் கொண்டே அவன் சொல்லவும்,
“இன்னும் பெரிய கல்லா... இந்த வாய் மேல போட்டு இருந்தா நல்லா இருந்திருக்கும்... அப்போ தான் இப்படி நக்கலடிக்க மாட்டீங்க... ஒண்ணா, உர் உர்ன்னு உறுமிக்கிட்டே இருக்க வேண்டியது... இல்ல... இப்படி கிண்டல் செய்ய வேண்டியது...” என்று போலியாக சலித்துக் கொண்டவளைப் பார்த்தவன், உதட்டை குவித்துச் சிரிக்கவும், அதில் இருந்த கள்ளம் புரிய, டக்கென்று அவனது முகத்தில் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டவள்,
“ராமண்ணா... எல்லாருக்கும் விருந்து சமைக்க சொல்றேன்... ஆனா... நீங்க எப்போ சாப்பிட்டீங்களோ... மொதல்ல இந்த காபியும் பலகாரமும் சாப்பிடுங்க... வாங்க... சீக்கிரம் சமையல் முடிக்க சொல்றேன்” கஜா சொல்லவும்,
“இவ சுடு தண்ணி கொடுக்காம விட மாட்டா போல ராமண்ணா... என்னோட சேர்ந்து உங்களுக்கும் தண்டனை... வாங்க போகலாம்...” என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, கஜா அவனை முறைத்தபடி, அனைவருக்கும் காபி கொடுத்துக் கொண்டே வந்தவள், ப்ரித்விக்கு கொடுக்காமல், உள்ளே திரும்பிச் செல்ல,
“லக்ஷ்மி எனக்கு?” ப்ரித்வி கேட்கவும்,
“அவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு ஒண்ணும் நீங்க இந்த சுடுதண்ணியை குடிக்க வேணாம்... கொஞ்ச நேரத்துல சமையல் செய்துட சொல்றேன்... உங்களுக்கு மட்டும் என் கையால தான் சமையல்... அதுல வைக்கிறேன் உங்களுக்கு கச்சேரிய...” ஒருமாதிரி எச்சரித்துவிட்டு உள்ளே செல்ல,
“வேண்டாம் லக்ஷ்மி... நான் பாவமில்ல... உனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ஊருக்குள்ள வந்தேன்... அதெல்லாம் நினைச்சு பார்த்து நல்ல சாப்பாடா போடக்கூடாதா? உன் மாமா இல்ல... உன் ப்ரித்வி இல்ல...” கெஞ்சிக் கொண்டே ப்ரித்வி, அவள் பின்னால் செல்லவும், மன நிறைவுடன் ராமண்ணா அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, அவனது புதிய தோற்றத்தை பார்த்த ஜோசப், ஆச்சரியமாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னடி மருமகளே... என் புள்ளைக்கு ஒழுங்கா சோறு போட மாட்ட போல... இதெல்லாம் சரிப்படாது போல... ராஜா.. நீ வா.. நான் உனக்கு வேற நல்ல பொண்ணைப் பார்த்து கட்டி வைக்கிறேன்...” ப்ரித்வி கெஞ்சுவதை பொருட்படுத்தாமல் செல்லும் கஜாவைப் பார்த்த பார்வதி இடையில் பேசவும்,
“ஆமாம்மா... பாருங்க... எனக்கு ஒரு காபி கூட கொடுக்காம போறா... எனக்கு வேற ஒரு நல்ல அழகான பொண்ணா பாருங்க.. அதுவும் நல்லா சமைக்கணும்...” ப்ரித்வி சொல்லி முடிப்பதற்குள்,
“என்னது... வேற பொண்ணா? பார்த்திருவீங்களா நீங்க? கண்ண நோண்டி எடுத்து காக்காய்க்கு போட்டுடுவேன்..” சேலைத் தலைப்பை இழுத்து சொருகிக் கொண்டு சண்டைக்கு வந்தவளைப் பார்த்த அனைவருக்கும் புன்னகை விரிய,
“உன்னை விட்டா அவன் வேற யாரடி கட்டிக்க போறான்... கொத்திக்கிட்டு போகத் தானே வந்திருக்கான்...” என்ற பார்வதி,
“சீக்கிரம் போய் சமையலை கவனி... நான் அண்ணன் கிட்ட பேச வேண்டியதைப் பேசி முடிச்சிடறேன்...” பார்வதி சொல்லவும், ‘நீ உள்ளே போ.. உனக்கு இங்கு இனி வேலை இல்லை’ என்ற செய்தி அதில் ஒளிந்திருக்கவும், ப்ரித்வியைப் பார்த்த கஜா, உள்ளே சென்று மறைந்தாள்.
“சொல்லுண்ணே... நான் என் மருமகளை உறுதி பண்ண வந்திருக்கேன்... நீயானா என்னனென்னவோ பேசிட்டு நேரத்தை கடத்திட்டு இருக்க... இப்போவே மணியாகப் போகுது... நீ என்ன செய்யப் போறே? உறுதியா சொன்னா... நான் என் முடிவை சொல்ல வசதியா இருக்கும்...” முடிவாக பார்வதி கேட்கவும்,
“என் மவளும், உன் மகனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க... அதுவும், நான் என் முடிவை சொல்றதுக்கு முன்னாடியேதான் என் பொண்ணு விருந்து சமைக்க போயிட்டாளே... அவளை என் மருமகன் கூட சேர்த்து வைக்கிறது தான் முறை...” செல்வராசு முறையைப் பற்றி பேசவும்,
“அவங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பறதைப் பத்தி நல்லா தான் பேசற... ஆனா... இந்த எண்ணம் நேத்து இல்லையே... இவனை பொய் சொல்லி வெளிய அனுப்பிட்டு... கஜாவை அந்த கேடு கெட்டவனுக்கு தான் கல்யாணம் செய்து கொடுப்பேன்னு தானே ஒத்தைக் காலுல நின்னீங்க நீயும் உன்ற பொஞ்சாதியும்...
முத்து அந்த பழனியைப் பத்தி எவ்வளவு தடவ சொல்லி இருக்கான்... அதுல உண்மை இருக்கும்ன்னு ஒரு தரவ கூட யோசிக்கத் தோணல... அப்படி அறிவு மழுங்கிக் கிடக்கு.. அண்ணி பேச்சை கேட்க வேண்டியது தான்... ஆனா ஊர் பெரியவனான நீ நாலையும் யோசிச்சு தான் முடிவெடுக்கணும்...
இந்த ஊருல உன்னை ஆலோசனைக் கேட்டுத் தான் எல்லாமே செய்யறாங்க... அப்படி இருக்க... நீ இந்த ஊருக்கு முன் உதாரணமா இருக்கணுமே தவிர, ஜாதியோட பேரைச் சொல்லிட்டு உன் பொண்ணு வாழ்க்கையை பாழடிக்கக் கூடாது... எதுனாலும் யோசிச்சு முடிவெடு.. இனியாவது....” பார்வதி அழுத்தமாகச் சொல்லவும், வேறு சமயமாக இருந்தால், ஏட்டிக்கு போட்டி பேசும் தனபாக்கியம், அமைதியாக தலைகுனிய,
“இன்னைக்கு என் புள்ளையால தெரிஞ்ச விஷயம்... அவனோட கல்யாணம் முடிஞ்ச பின்னால தெரிஞ்சிருந்திச்சுன்னா... உன் சாதியும், உன் ஊரும் வந்து காப்பாத்துமா என்ன? ‘அய்யோ பாவம்ன்னு’ ரெண்டு நாள் மூக்கை சிந்திட்டு போயிருவாங்க... கடைசியில படப் போறது யாரு?” கண்டிக்கும் குரலில் கூறியவர்,
“சீக்கிரம் உன் முடிவைச் சொல்லு... இந்த தட்டு பூ... கூறைப் புடவை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு நாளைக்கு காலையில இருக்கற முஹுர்த்தத்துல அவங்களுக்கு கல்யாணத்தை முடிச்சு வைக்கறீங்களா? இல்ல நானே எல்லாத்தையும் பார்த்துக்கவா?” உறுதியான குரலில் பார்வதி கேட்கவும், அவரது உறுதி தெரிந்த செல்வராசு, தனபாக்கியத்தைப் பார்க்க,
“இருங்க நான் தட்டெடுத்துட்டு வரேன்...” என்று உள்ளே திரும்பிச் சென்றார்.
“பட்டு வேஷ்டி... சட்டை... பூ பழம்...” என்று வரிசைத் தட்டுக்களை விரைவிலேயே அடுக்கிக்கொண்டு வந்தவர், செல்வராசுவிடம் கொடுக்க,
“கஜாவை கூட்டிட்டு வாங்க அண்ணி...” என்று கூறிய பார்வதி, கஜாவுக்கென்று முத்துவை விட்டு வாங்கிக்கொண்டு வந்த பட்டுப்புடவையையும், பூவையும் எடுத்து வைத்தார்.
“அம்மா... ஒரு நிமிஷம்...” என்ற ப்ரித்வி...
“ராமண்ணா... நாம நேத்து போய் வாங்கிட்டு வந்ததை எடுத்துத் தாங்க...” என்று கேட்கவும், செல்வராசு அவரை யார் என்பது போல பார்க்க,
“ஹையோ... சொல்ல மறந்துட்டேன் பாருங்க... இவர் தான் என் கூட எப்பவுமே இருக்கறவர்... எனக்கு எல்லாமே....” என்று ராமண்ணாவை அறிமுகப்படுத்தியவன்,
“என்னோட அம்மா ராமண்ணா...” என்று ராமண்ணாவிற்கு பார்வதியை அறிமுகப்படுத்தி வைக்கவும்,
அவர் கைக் கூப்பி, “உங்களைப் பத்தி என் மகன் நிறைய சொல்லி இருக்கான்...” என்று சொல்ல, ராமண்ணா அவரைப் பார்த்து புன்னகைத்து,
“இவர் சும்மா சொல்லி இருப்பாருங்க... எங்களுக்கு இவர் தான் எல்லாம்...” என்று ராமண்ணா தொடங்கவும்,
“ஆஹா... இவர் தொடங்கினா இன்னைக்கு முடிக்க மாட்டார்... அதை அப்பறம் பேசிக்கலாம்...” என்றவன், ராமண்ணா கொடுத்த கவரை வாங்கி, பார்வதியிடம் கொடுக்க, பார்வதி அவனை ஏற இறங்கப் பார்த்தார்.
“இல்லம்மா... நேத்து ரிப்போர்ட்டர் வேஷம் போட ஜிப்பா வாங்க போகும் போது, லக்ஷ்மியை இங்க இருந்து எப்படியாவது வெளிய கொண்டு போயிருவேங்கற நம்பிக்கை இருந்தது. அப்படி கூட்டிட்டு வந்தா, இங்க கோவில்லையே கல்யாணம் செய்துக்க வசதியா இருக்கும்ன்னு பட்டுப்புடவையும், அதுக்கு பக்கத்துக்குல இருந்த கடையில கொஞ்சம் நகையும் வாங்கினேன்... அது தான் இது... வேற ஒண்ணும் இல்ல...” என்று அவரிடம் கவரை நீட்டவும், அதைப் பார்த்த பார்வதி, சந்தோஷத்தில்,
“ரொம்ப அருமையா இருக்குடா ராஜா.... இந்த பச்சை புடவைக்கு தகுந்த மாதிரி இந்த முத்து நெக்லசும்... இந்த வளையலும், ரொம்ப அழகா இருக்கு... அவளுக்கு பொருத்தமா பார்த்து பார்த்து வாங்கி இருக்க...” என்றபடி, அதை செல்வராசுவிடம் காட்ட, அவர் தனபாக்கியத்தை ஏளனமாகப் பார்க்க,
“நான் என்னங்க செய்யட்டும்... எனக்கு புத்தி மழுங்கிப் போயிருச்சு... பரிசம் போடக் கூட, நான் தான் என் பொண்ணுக்கு புடவை வாங்கினேன்... பொய், பகட்டு.. தேவை இல்லாத வீம்பு... இப்போ அதெல்லாம் தப்புன்னு உணர்ந்துட்டேன்” வருந்தியக் குரலில் அவர் சொல்லவும்,
“விடுங்க அண்ணி... போய் என் மருமகளை கூட்டிட்டு வாங்க...” பார்வதி சொல்லி முடிப்பதற்குள், கஜா அங்கு வந்து நின்றாள்.
“என் மருமவளுக்கு இருக்கற அவசரத்தைப் பாரேன்...” என்ற பார்வதி கஜாவிற்கு திருஷ்டி கழித்து,
“இந்தா ராஜா... அவ கையில இந்தப் புடவையைக் கொடுத்து... அவ தலையில இந்த பூவை வச்சு விடு...” பார்வதி சொல்லவும், ப்ரித்வியும் அவ்வாறே செய்ய அவளை நெருங்கினான்.
தனியாக அவனுடன் காரில் பயணம் செய்து வந்த போது இல்லாத ஒரு உணர்வை, புது தயக்கத்தை, புது வெட்கத்தை, உரிமையுள்ளவனாக அவனது நெருக்கம் தர, எச்சிலைக் கூட்டி விழுங்கியவள், ஆசையும், நாணமும் கலந்த பார்வையை அவன் மீது செலுத்தினாள்.
அவளின் விழிகள் கவிதை மொழிப் பேச, அதனை ரசித்துக் கொண்டே பூச்சூடியவன், அவளிடம் புடவையைக் கொடுக்க, அவனது காலில் பணிந்து வணங்கியவள், மனம் நிறைந்த பூரிப்புடன் அதனை பெற்றுக் கொண்டாள்.
“ஹே... என்ன இதெல்லாம்...” ப்ரித்வி பதற,
“அதெல்லாம் அப்படி தான் ராஜா... அது தான் முறை...” என்று செல்வராசு சொல்லவும்,
“சரிண்ணே... அப்பறம்... நாளைக்கு காலையில.... முன்ன வச்சிருந்த அதே ஆறு மணி முஹுர்த்தத்துல நாம இவங்க கல்யாணத்தை வச்சிக்கலாம்... நாங்க இப்போ வீட்டுக்கு கிளம்பறோம்...” பார்வதி சொல்ல,
“அம்மா... லக்ஷ்மி விருந்து சமைச்சிருக்காளே...” அவரது காதில் ப்ரித்வி முணுமுணுக்க, முத்து அவனது தோளைத் தட்டினான்.
“இப்போ தானே ராஜா கொஞ்ச நேரத்துக்கு முன்ன, பறக்கறது ஓடறதுன்னு ஒண்ணையும் விடாம, அத்தை செய்ததை எல்லாம் மொக்கிட்டு வந்த... அதுக்குள்ள லக்ஷ்மி சமையலை சாப்பிடறேன்னு சொல்ற? இது உனக்கே நியாயமா இருக்கா? நீ வாயைத் திறந்தா காக்கா கொத்திட்டு போற அளவுக்கு முழுங்கிட்டு... இந்த அநியாயம் செய்யறியே...” முத்து ப்ரித்வியின் காலை வாரவும்,
“அதெல்லாம் சீரணம் ஆகிப் போச்சு... ஒரு வளர்ற பையனைப் பார்த்து கண்ணு போடறான் பாருங்கம்மா...” பார்வதியிடம் சிறுபிள்ளைப் போல அவன் கோள் மூட்ட,
“முத்து... அவனைப் பார்த்து கண்ணு போடாதே... சும்மா இரு...” பார்வதி மிரட்டவும்,
“ராஜா... இது உனக்கே நியாயமா இருக்கா? உன்னோட வேலையை மட்டும் பார்த்துக்கறியே... இன்னும் எங்க முஹுர்த்தத்தை இவங்க முடிவு செய்யல ராஜா... அதையும் கொஞ்சம் கவனி” முத்து சத்தமாகவே சொல்லவும், முல்லைக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொள்ள, அவளது விழிகள் பிதுங்கி வெளியில் வந்துவிடும் போல் காட்சியளிக்க,
“லக்ஷ்மி... முல்லையை பிடி... இல்ல மயங்கி விழுந்திறப் போறா...” ப்ரித்வி கத்தவும், அனைவருமே முல்லையைப் பார்த்து சிரிக்க, முல்லை வெட்கத்துடன் முத்துவிடம் ஓடிச் சென்றாள்.
“பார்த்தியா, உன் மயக்கம் ஊரறிஞ்ச ஒரு விஷயமா இருக்கு..” முத்து சொல்லவும், அவன் முதுகில் ஒட்டிக்கொண்டவள், “போங்க மாமா...” என்று சிணுங்க, மீண்டும் ஒரு சிரிப்பலை அங்கே எழும்பியது.
“சரி பார்வதி... அப்போ கஜா ஏற்பாடு செய்யற விருந்தை, நாம மாப்பிள்ளை அழைப்புக்கே வச்சிடலாம்... என்ன மாப்பிள்ளை உங்களுக்கும் சம்மதம் தானே...” அவர் கேட்கவும்,
“சரிங்க மாமா...” நல்ல பிள்ளையாக ப்ரித்வி சொல்லவும், கஜா அவனுக்கு பழிப்புக் காட்ட,
“உங்க வீட்ல இருந்து மாப்பிள்ளைக்கு நலங்கு வச்சு... மாப்பிள்ளை அழைப்பை வச்சு கூட்டிக்கிட்டு வந்துடலாம்... நான் எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்யறேன்.... என்ன சொல்ற?” அவர் கேட்கவும், பார்வதிக்கும் அது சரியாகப் பட,
“சரி அப்போ நாங்க இங்க வந்து பொண்ணுக்கு நலங்கு வைக்கறோம்...” என்று அவரும் சொல்லவும், முத்து ப்ரித்வியைப் பார்த்து முறைக்க,
“மாமா... எங்க கல்யாணத்தோட, முத்துவுக்கும் முல்லைக்கும் கல்யாணம் வச்சிடலாம் மாமா... பாவம்... அப்பறம் முத்து ஏக்க மூச்சு விட்டே இருக்கற வெயில் சூட்டை அதிகப்படுத்திடுவான்...” ப்ரித்வி கேலி செய்யவும்,
“ஆமா... இந்த கூத்துல அதை விட்டுட்டேன் பாரு... ராசய்யா அண்ணா.... இங்க வாங்க...” என்று அழைத்தவர்,
“நம்ம முன்னையே பேசி இருந்தது போல, முத்துவுக்கும் முல்லைக்கும் அதே முஹூர்த்தத்துல கல்யாணத்தை வச்சுடலாம்... இங்கயே ஒரே மேடையா போட்டுடலாம்... நீங்க என்ன சொல்றீங்க?” கேட்க,
“நீ சொன்னா சரியா தான் இருக்கும் செல்வராஜு...” முத்துவின் அப்பா பதில் சொல்லவும், முத்து - முல்லையின் திருமணமும், மறுநாளே நடக்க உறுதியாகியது.
பேசிக்கொண்டபடி, மாப்பிள்ளை அழைப்புக்கு தயாராவதற்கு பார்வதி ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தார். தனது வீட்டில் வேலை செய்யும் ஆட்களை அனுப்பி, தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வர பட்டியலிட, ப்ரித்வி அவரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
வீடே சில மணி நேரத்தில், கல்யாணக்களை கட்ட, பார்வதியின் கணவன் வழி சொந்தங்கள், வேலை செய்ய ஆட்கள் என்று அந்த வீடே நிரம்பி வழிந்தது. இத்தனை பேருக்கும் இந்த குறைந்த நேரத்தில் எப்படி தகவல் சென்றது என்று வியந்தபடி ப்ரித்வி அமர்ந்திருக்க,
“என்ன ராஜா... அப்படியே என்னை வேடிக்கைப் பார்த்துட்டு உட்கார்ந்திருக்க... சீக்கிரம் போய் குளிச்சிட்டு... இந்த துணிமணியை போட்டுக்கிட்டு ரெடியா கிளம்பி இரு...” என்று ஒரு பேன்ட் சட்டையை அவர் கொடுக்கவும்,
“இது எப்போ வாங்கினதும்மா...” நெகிழ்ச்சியான குரலில் அவன் கேட்க,
“முத்துக்கிட்ட அப்போவே உனக்கு நல்ல உடையா வாங்கிட்டு வரச் சொன்னேனேய்யா... அவன் அப்போவே, உனக்கு கல்யாணத்துக்கு தகுந்த மாதிரி வாங்கிட்டான்...” என்றவர்,
“என்ன ராமண்ணா... பார்த்துக்கிட்டே இருக்கீங்க... சீக்கிரம் அவனை தயார் பண்ணுங்க...” என்று விரட்ட, சிரித்துக் கொண்டே, ராமண்ணா ப்ரித்வி தயாராக உதவ, விரைவிலேயே மாப்பிள்ளை கோலத்தில் நின்றான்.
“என் கண்ணே பட்டுடும் போலிருக்கு ராஜா... அப்படியே ராஜா கணக்கா இருக்க...” என்று கண்கலங்க நெட்டி முறித்தவர்,
“அஞ்சு வயசுல காணாம போன நீ... இந்த ஊருக்கு மாப்பிள்ளயா தான் வரணும்னு விதி இருக்கு போல... உங்க அப்பா உன்னை இந்தக் கோலத்துல பார்த்தா... அப்படியே உருகி போயிருப்பார்...” நெகிழ்ந்த குரலில் கண்ணீருடன் அவர் சொல்லவும்,
“அம்மா... ஏம்மா வருந்தறீங்க...” என்றவன், சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்...” ப்ரித்வி ஆரம்பிப்பதற்கு முன், பேன்ட் வாத்தியங்களும், வாண வேடிக்கையின் சத்தமும், அந்த ஊரே அதிரும்படி ஒலிக்கத் தொடங்கின.
“மாப்பிள்ளை அழைப்புக்கு பொண்ணு வீட்டுல இருந்து வந்துட்டாங்க... வளவளன்னு பேசாம, தயாரா இரு... ராமண்ணா... கொஞ்சம் பார்த்துக்கோங்க” என்றுவிட்டு, பார்வதி வெளியில் சென்று, பெண் வீட்டாரை உபசரிக்கத் தொடங்கினார்.
நிமிடங்கள் கடந்த பின், “ராஜா... நலங்கு வைக்க கூப்பிடறாங்க... வா ராஜா...” என்றபடி பார்வதி வர, ஒரு பெருமூச்சுடன் ப்ரித்வியும் அந்த சடங்குகளில் கலந்துக் கொண்டான். சடங்குகள் முடிந்து, அலங்கரித்த குதிரை வண்டியில், ப்ரித்வியை ஊர்வலமாக அழைத்துச் சென்றார் செல்வராசு...
அது போலவே கஜாவிற்கும் நலங்கு வைத்து முடிய, முத்துவிற்கும் முல்லைக்கும் சேர்த்து, செல்வராசு தனது வீட்டிலேயே விருந்திற்கும், மணப்பந்தலுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
வீட்டில் உள்ள அனைவரும் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டும், பூக்களை தொடுத்துக் கொண்டும், மறுநாள் விருந்திற்கு காய்களை வெட்டிக்கொண்டும் இருக்க, கஜாவின் அறையில் முல்லை அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“என்ன முல்ல... இவ்வளவு அமைதியா உட்கார்ந்து இருக்க? இப்போவே கனவா?” கஜா கிண்டலடிக்கவும்,
“இல்ல கஜா... நாளைக்கு விடிஞ்சா கல்யாணம்... நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு...” முல்லை பயத்துடன் சொல்லவும்,
“என்ன முல்லை... முத்து அண்ணா உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பாரு... உனக்கு எதுக்கு இப்போ பயம் வருது?” கஜா கேட்கவும்,
“கல்யாணம் குடும்பம் இதெல்லாம் நினைச்சா உனக்கு பயமாவே இல்லையா? எனக்கு வயித்தை கலக்குது” சிறு பிள்ளை போல வந்த முல்லையின் பதிலில், அவள் அருகே வந்து அமர்ந்தவள், அவளது கைகளை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.
“இல்ல முல்லை... எனக்கு பயமா இல்ல... நான் எதுக்கு பயப்படணும்... இத்தனை கஷ்டத்துக்கு பிறகு, நான் என்னோட ப்ரித்வியைக் கைப் பிடிக்க போறேன்... அவரோட சேர்ந்து என் சுக துக்கங்களை பகிர்ந்துக்கிட்டு, எங்க ரெண்டு பேரோட உணர்வு, உயிர் எல்லாம் ஒண்ணுதான்னு சொல்ற அளவுக்கு என் வாழ்க்கை இருக்கணும்... இருக்கும்... அவரும் அப்படித் தான் நினைப்பார் முல்ல... நம்ம காதலை, கானல் நீரா ஆகவிடாம, அழகான பூஞ்சோலையா மாத்தறது நம்ம கையில தானே இருக்கு...
முத்து அண்ணனும் ரொம்ப நல்லவங்க... அவங்க சொல்றதை கேட்டு, அனாவசியமான உன் பயத்தை விட்டுட்டு தைரியமா வாழ்க்கைய ஏத்துக்க பழகு... எல்லாம் சரியா போயிரும்... நாளைக்கு, ப்ரித்வி என் கழுத்துல தாலி கட்டற அந்த தருணத்தை நானும், நீ, அண்ணனுக்கு சொந்தமாகற அந்த தருணத்தையும் மனசுல எதிர்ப்பார்த்து ரசிக்க ஆரம்பி... பயம் போயிரும்...” கண்களை மூடிக் கொண்டு, ரசித்து சொல்லிக் கொண்டே வந்தவளை, முல்லையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க,
“ஆமா ... இப்போ ரெண்டு நாளுக்கு முன்ன... யாரோ... எனக்கும் எங்க மாமாவுக்கும் கல்யாணம் நடக்கணும்ன்னு ஜபம் பண்ணிட்டு இருந்தாங்க... அது யாரு...” கஜா முல்லையை கேலி செய்யவும்,
“சீ போடி...” முல்லை சிணுங்க,
“கஜா... முல்லை... அங்க என்ன சும்மா பேசிக்கிட்டே இருக்கீங்க... பேசாம படுத்து தூங்குங்க... நாளைக்கு காலையில சீக்கிரம் எழணும்...” என்று தனபாக்கியம் குரல் கொடுக்க,
“சரிடி முல்ல... நீ படு... நான் பின்பக்கம் போயிட்டு வரேன்...” என்று கஜா வெளியில் செல்ல, முல்லை உறக்கம் வராமல் அவளுக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.
சில நிமிடங்கள் பல நிமிடங்களாகக் கரைய, “எங்க இவ... போய் ரொம்ப நேரமாச்சு?” முல்லை... ‘கஜா’ என்று அழைத்துக் கொண்டே வர,
“என்ன முல்ல... எதுக்கு அவளை கூப்பிட்டுக்கிட்டு இருக்க? அவ தான் அப்போவே அறைக்கு வந்துட்டாளே...” குரலில் சிறிது பதட்டம் தொற்றிக்கொள்ள தனபாக்கியம் கேட்கவும்,
“இல்லையே அத்தை... அவ வெளிய போனவ தான்... உள்ள வரவே இல்லையே.. நான் இவ்வளவு நேரம் அவளுக்காக காத்திருந்துட்டு, இப்போ தேடிட்டு வரேன்...” பதட்டத்துடன் முல்லை சொல்லவும், அங்கிருந்த அனைவருமே பதட்டத்துடன் கஜாவை ஆளுக்கொரு பக்கமாக தேடத் தொடங்கினர்.
“ஐயோ... அந்த பழனி சொன்னது போல ஏதாவது செய்துடுவானோ? என் பொண்ணு எங்க தேடியும் கிடைக்கலையே...” தனபாக்கியம் அழத் தொடங்கவும், செல்வராசு, பார்வதி, முத்து, முல்லை அனைவரும் என்ன செய்வது என்று புரியாமல் திகைக்க, ராமண்ணா, ஜோசப்பிற்கு அழைக்கச் சென்றார்.
கவிதைகள் தொடரும்....