வீட்டிருப்புச் சுவாரஸ்யங்கள்
“டேய் சந்தோஷ், எந்திரிடா. எட்டு மணிக்கு நிகழ்நிலைப் (online) பள்ளி ஆரம்பிச்சாலும், நீ மட்டும் ஏன்டா பத்து வரை படுத்துத் தூங்கி என்னைப் படுத்துற? மேலையும் கீழேயும் ஏறி இறங்கி நடக்க முடியலைடா. சான்வியப் பாரு ஒழுங்கா எட்டு மணிக்கு எழுந்து படிக்கிறா. அவ இவ்வளவுக்கும் மூணாவது தான் படிக்கிறா. நீ எட்டாவது படிக்கிற மாதிரியா நடந்துக்கிற? எழுந்து வாடா நல்லவனே. எழுந்து அப்படியே வந்து உட்காராத. எழுந்து போய் மூஞ்சி கழுவி, பல்லு விளக்கிட்டு வந்து உட்காருடா. பாலைக் குடிச்சுட்டுப் படிக்க உட்காரு. ராத்திரி தனியாக் கண்ணு முழிச்சுப் படிக்காத. நீ என்ன பண்ணுறனு எனக்கு ஒண்ணும் புரியலை. டேய்.. இப்ப எந்திரிக்கலை நான் வந்தேன்… உன் மூஞ்சியில் தண்ணி ஊத்திடுவேன். கீழிருந்து பத்மா உட்சபட்சக் கடுப்பில் கத்திவிட்டு அவள் அலுவலக வேலையைக் கவனிக்கச் சென்றாள்.
“பத்மா, கொஞ்சம் கத்தாமப் பேசு. இல்லனா மேல வந்து எழுப்பு. ஆபீஸ் கால் பேசுறேன்ல. உன் சத்தம் ஊருக்கே கேட்குது.” மேலிருந்து பரணி அவள் சத்ததிற்கு மேல் கத்தினான். “அம்மா, அப்பா, நான் இப்பத் தான் என் பள்ளிக்காகக் காணொளி பதிவு பண்ணிட்டு இருந்தேன். ம்ச்ச். இப்பத் திரும்ப மொத இருந்து பண்ணனும். போங்க. உங்க ரெண்டு பேரு கூடவும் டூ.” என்றாள் சான்வி.
இவ்வளவு களேபரத்திற்கு நடுவிலும், சந்தோஷ், தன் பேருக்கு ஏற்றாற்போல் சந்தோசமாகப் படுக்கையிலிருந்து எழுந்து சாவகாசமாய் நெட்டி முறித்தான்.
தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு மலருக்காக, இதுவரை தான் எழுதிய கதையைப் பூரணி வாசித்துச் சரி பார்த்தாள். இது தினமும், இப்படி வீட்டில் இருந்தாலும் வெளியில் சென்றாலும் ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது தானே? இதில் என்ன புதுசா இருக்கு? இதையா எழுதுவதுனு முடிவு பண்ணிப் புதிதாய் “கொரானா காலத்தில் வீட்டிலிருந்து கற்றதும் பெற்றதும்” என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்தாள்.
“80/90/2000 ங்களில் நாம் அனுபவித்த நிதானமான விடியல், சாவகாசக் குளியல், சில குளிக்க மறந்த சோம்பேறி நாட்கள், அம்மாவும் அப்பாவும் எவ்வளவு நேரம் ஒரு நாள் வேலை பார்க்கிறாங்க என்கிற புரிதல், சந்தோசமாக இருக்கக் குடும்பம் மட்டுமே போதும் என்கிற பெரிய உண்மையையும், வாழ்க்கை நிலையில்லாதது, அதைப் பயமாய் வாழாமல் பயன்படுத்தி வாழ வேண்டும் என்கிற பேருண்மையையும் தெரிந்து கொண்டார்கள். நிற்காமல் ஓடும் கணவனும் மனைவியும் ஒருவர் முகத்தை ஒருவர் ஆர அமரப் பார்க்கும் வரம் பெற்றார்கள். பிள்ளைகளுடன் சரிக்குச் சரியாய்ச் சண்டையிட்டுச் சமாதானம் ஆகக் கற்றார்கள். பிள்ளைகளின் பள்ளிச் சுமையை, தாம் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது இன்னும் தெளிவாய்ப் புரிந்து தெளிந்தார்கள். எது வந்தாலும் என்ன நடந்தாலும் குடும்பம்தான் எல்லாவற்றிகும் ஆணி வேர் என்று மூளை ஆணி அடித்துச் சொன்னது.”
மேலே எழுத முடியாதபடி கட்டி உருண்டு நவீனும் நரேனும் சண்டையிடும் சத்தம். இப்பப் போகலை… வீடு, மண்டை இரண்டும் பிளந்துவிடும். இப்படியே கண்டுக்காம விட்டா இவனுங்க நம்மளை அவசரச் சிகிச்சையைப் பார்க்க வச்சுடுவானுங்க போலனு புலம்பிக் கொண்டே எழுதியதைப் பாதியில் விட்டுவிட்டு எழுந்தாள் பூரணி.
“டேய், ஏன்டா, இப்படிப் பண்ணுறீங்க? ஒரு அரை மணி நேரம் உங்களைப் பார்க்கலைனா, இப்படியாடா உருளுவீங்க. உங்க அப்பா பார்த்தா என்னைத் தான்டா திட்டுவாரு. புரிஞ்சுக்குங்க டா… அவரு கூட நான் சேர்ந்து வாழனும்டா, உங்க சண்டை எங்க வாழ்க்கையைக் கும்மி அடிச்சிடும்டா… இன்னைக்கி உங்களைப் பார்த்துக்கிறது அம்மா பொறுப்பு. நாளைக்குத்தான் அப்பா உங்களைப் பார்த்துக்கிற நாள்டா… அப்ப உங்க எல்லாச் சண்டையையும் போட்டுக்கலாம்டா செல்லங்களா. அம்மாவுக்கும் அப்பாவத் திட்டக் காரணம் கிடைச்ச மாதிரியும் இருக்கும். நீங்க பட்டுக்குட்டிகள் தானே? அப்பா வரதுக்குள் நீங்க சமாதானம் ஆகிடுங்க. அம்மா உங்களுக்குப் பீட்சா செஞ்சு தரேன்டா…”
பூரணி பீட்சானு சொல்லி முடிக்கல… பசங்க சண்டையை டக்குனு நிப்பாட்டி விட்டு அமைதியாகிட்டாங்க. என்ன மாயம்? என்ன மந்திரம்? பூரணி பண்ணுற பீட்சா அவ்வளவு நல்லாவா இருக்கும்?
“அய்யோ… அம்மா நாங்க சண்டையே இனிப் போட மாட்டோம். சரிதானேடா நவீன்?”
“ஆமாம் டா நரேன். நாங்க இனிச் சண்டை போடலை. அம்மா, இனி நீங்க சும்மாக் கூடப் பீட்சா பண்ணுறேன், தீபாவளிப் பலகாரம் பண்ணுறேனு கிளம்பிடாதீங்க. உங்க தொங்கின பீட்சாவையும் வதங்கின முறுக்கையும் கூடச் சாப்பிட்டுடலாம். ஆனால் அதை எங்களை வச்சுக் காணொளி எடுக்கச் சொல்லி, அப்பாவப் படுத்தித் தொகுக்கச் சொல்லி, நீங்க அதை வலையொளி (YouTube) / முகநூல் / டிவிட்டர் / இன்ஸ்டா ல போட்டு, அதுக்குச் சந்தாதாரர் ஆகி, விரும்பி கருத்துச் சொல்லக் கேட்பீங்க பாருங்க. அந்தக் கொடுமையைத்தான் எங்களால தாங்க முடியலை. இதுக்கு ஒரு முடிவே இல்லையா? குமாரு, நீ நினைச்சா மட்டும் தான் இது எல்லாத்தையும் நிறுத்த முடியும்!?! வந்து இந்த அநியாயத்தைத் தட்டிக் கேளு குமாரு, தட்டிக் கேளு.”
“சரியாச் சொன்னடா நவீன்”. நவீனும், நரேனும் கைதட்டி சிரித்துக் கொண்டார்கள்.
“அப்பாவப் பேரச் சொல்லியாடா கூப்பிடுற. அது கூடப் பரவாயில்லை. அதைக் கூட நான் மன்னிச்சுடுவேன். ஆனால் என் சமையலையும், வலையொளியையுமாடா குறை சொல்லுறீங்க? கையில கிடைச்சீங்க, இன்னைக்கி ரெண்டு பேரும் சட்னி தான். இருங்கடா வாரேன். உங்களை…”
பூரணி துரத்த, நவீனும் நரேனும் பூரணி கையில் சிக்காமல் இருக்க வீட்டுகுள்ளே ஓட ஆரம்பித்தனர். இவர்களின் சிரிப்புச் சத்தம் கேட்டு வெளியே வந்த குமார், சிரித்துக் கொண்டே அவர்களைக் காணொளியாக்கக் கைப்பேசியில் பதிய ஆரம்பித்தான். – சுபம்.