- Joined
- Nov 1, 2021
- Messages
- 38
- Reaction score
- 48
அத்தியாயம் 1
வெய்யாய், தணியாய்,
இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய்
அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற
மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன்
இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை
அகல்விக்கும் நல் அறிவே
என்ற திருவாசகப் பாடலில் என்ன இருக்கிறதோ தெரியாது... ஆனால் அந்த பாடல் தான் அவனுக்கு எப்போதும் வேண்டும். அதுவும் அவனின் தாத்தாவின் குரலில் கேட்கும் அந்த திருவாசகத்துக்கு இணையாக அவன் எதையுமே குறிப்பிட மாட்டான். சிறு வயதில் இருந்து அவனுக்காகவே இருந்த ஒரு உயிர் அவனின் தாத்தா விநாயக மூர்த்தி தான். அவர் இப்போது இல்லை என்று யாராவது சொன்னாலும் அவன் நம்பவே மாட்டான். ஏனென்றால் அவன் தாத்தா அவனுடன் அருவமாய் இருப்பதாய் அவன் சத்தியமாக நம்பிக் கொண்டிருக்கின்றான்.
காதுக்குள் கேட்ட அந்த பாடலில் தன்னை மறந்து தனது தாத்தாவின் நினைவோடு கலந்த அமித் விக்ரமாதித்தன் பின்னர் அந்த நினைவை ஆக்ரமிப்பு செய்ய விடாது பட்டென்று எழுந்தான். அவரின் நினைவாய் இருந்த அந்த வீட்டையும் அவன் இன்றுவரை மாற்றவே இல்லை. அதிலே தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். எப்போவாவது அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் வீட்டிற்குச் சென்று விட்டு வருவான். ஆனால் அங்கேயே நிரந்தரமாக அவன் இருக்கப் பிரியப்பட்டதில்லை.
வெளியே வந்தவன் அங்கிருந்த பால் பாக்கெட்டை எடுத்து வந்து வைத்துவிட்டு வீட்டின் முன் இருந்த பெரிய பார்க்கில் ஓடத் தொடங்கியிருந்தான். அவனோடு இன்னும் பலரும் இணைந்து ஓடிக் கொண்டிருக்க அந்த காலை நேரம் அத்தனை பரபரப்பாக இருந்தது. வியர்வை வழிந்து அவன் தேகமெங்கும் ஓட... போதும் என்று நினைத்தவன் அங்கிருந்த சிறிய இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
அவன் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி நகர அதில் அவன் தேகம் இன்னமும் இறுகத் தொடங்கியது. உடனே அங்கிருந்து வந்தவன் வீட்டினை அடைந்தான். விக்ரம் கண்ணா என்ற குரல் அவன் செவியை அடைய தாத்தா என்று அவன் இதழ்கள் மெதுவாகவே முணங்கிக் கொண்டது.
இதற்கு மேல் தாமதித்தால் வேலைக்கு தாமதம் ஆகிவிடும் என்று புரிய அவன் வேகமாக குளிக்கத் தொடங்கினான். கிளம்பி வந்தவன் கம்பீரம் கண்டு புகைப்படத்தில் இருந்த மூர்த்தியின் கண்கள் பெருமையை சிந்தியது.
தாத்தாவின் அருகே நின்று அமைதியாக கண்ணை மூடிக் கொண்டான். சில நிமிடத்தில் கண்ணைத் திறக்க அவரது முகமோ அவனிடம் எதையோ சொல்ல வருவது போன்ற தோற்றத்தைக் காட்ட அவனோ தலையை ஆட்டிவிட்டு "வர்றேன் தாத்தா இன்னைக்கு நிறைய வொர்க் இருக்கு...."என்று சொல்லிட்டு வேகமாக வெளியேறி தனது வண்டியை எடுத்துக் கொண்டு அவன் விரைந்து சென்றான். எதிர்ப்பட்ட ஹோட்டலில் காலை உணவை முடித்துக் கொண்டு தான் பணி செய்யும் அந்த இடத்தினை அடைந்தான்.
செல்லும் வழியெங்கும் பனி தான். அந்த இடத்தின் அழகினை எல்லாம் அவனுக்கு ரசிக்கும் மனநிலை என்றுமே இருந்ததில்லை. அப்படியான சூழ்நிலையில் அவன் வளரவும் இல்லை. அவன் சந்தித்தது எல்லாமே கருமை நிறத்தினாலான பக்கங்கள் தான். சில வண்ணப் பக்கங்களும் அவன் வாழ்வில் வந்து போனது. ஆனால் அதுவும் கடைசி நேரத்தில் கருமையாய் மாற அவன் இன்னமும் அவனுக்குள்ளயே இறுகிப் போனான்.
மலைப்பகுதியான அந்த இடம் பசுமையான தோற்றத்தில் குளுமையாக இருந்தது. ஆனால் அவன் மனம் மட்டும் அந்த குளுமையை உணரவே இல்லை.
அந்த பயணம் முடிவுக்கு வர அவன் சென்று நின்ற இடம் தென்பழனி செக்போஸ்ட்...
அவனைக் கண்டதும் "சார்
குட்மார்னிங்" என்று அங்கே இருந்த இரண்டு காவலர்கள் அவனுக்கு வணக்கம் சொல்ல அவனும் பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான். எதிர்ப்பட்ட சின்ன கண்ணாடியில் அவன் முகம் தெரிய அப்படியே நின்று ஒருநிமிடம் அதையே உற்றுப் பார்த்தான்.
பெரும் கோபக்காரனான அவன் முகம் இப்போது கொஞ்ச நாட்களாய் அமைதியினை அணிந்து கொண்டிருக்கிறது. அதை அவன் வலுக்கட்டாயமாகத் தான் அணிந்திருந்தான்... அதன் காரணம் அவனுக்கு மட்டுமே தெரியும்.
பார்த்துக் கொண்டிருந்த அந்த கணநேரத்தில் சட்டென்று அந்த கண்ணாடியில் அவன் முகத்திற்கு பதிலாக வேறு முகம் தோன்றி மறைய கையால் ஓங்கி அதில் ஒரு குத்துவிட்டான் அமித். சுக்குநூறாக சிதறிய அந்த கண்ணாடியைக் கண்டு திருப்தியுற்றவன் வழிந்து ஓடும் இரத்தத்தைக் கண்டு கொள்ளமால் நடக்க சத்தம் கேட்டு ஓடி வந்தனர் அந்த இரு காவலரும்.
சார் சார் இரத்தம் சார் என்று இருவரும் பதற அவன் திரும்பி ஒரு பார்வை பார்க்க அதில் ஒருவன் அப்படியே பின்னால் நகர்ந்துவிட்டான். ஆனால் மணிகண்டன் என்பவன் மட்டும் வேகமாக வந்து அவன் கையைத் தாங்கினான்.
"சார் ஏன் சார் இப்படி... இரத்தம் இப்படிப் போகுதே. வாங்க சார்" என்று அவன் பேச "நான் உன்னைக் கூப்பிட்டேனா" என்று அமித் அவனிடம் கர்ஜித்தான்.
"அது சார் ரொம்ப இரத்தம் போகுது.. வலிக்குமே சார்" என்க "கையை விட்டுட்டு உன் வேலையைப் பாரு" என்றான் அவன் அழுத்தமாக.
அதற்கு மேல் நின்றால் அந்த இரத்தம் வழியும் கையினாலே அடிவாங்குவோம் என்று தெரிந்ததால் அவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
கையில் கைக்குட்டையை மட்டும் சுற்றிக் கொண்டவன் அந்த செக் போஸ்ட்டுக்கு எதிரே இருந்த முருகன் கோவில் படிக்கட்டில் சென்று அமர்ந்தான். காலை நேர வெயிலும் பனியும் இதமாக இருக்க அந்த மாதிரியான ஒரு மந்தமான காலநிலையில் தான் அவன் அவளை.... அவ்வளவுதான் தன் நினைவு செல்லும் பாதையினை தடை செய்தவன் தலையினை உதறிவிட்டு கிளம்பினான்.
மெல்லியதாய் இருள் பரவிக் கொண்டிருந்த நேரமது. சற்று ஒதுக்குப் புறமாய் இருந்த அந்த சிறிய ஹோட்டல் பார்ப்பதற்கு அழகாய் இருக்க அதனுள் சென்று கொண்டிருந்த அந்த இரண்டு பேரையே உறுத்துப் பார்த்தபடி அவனும் அதனுள் நுழைந்தான்.
மெல்லியதாய் கசிந்து வந்து கொண்டிருந்த இசையினை கேட்கவும் முடியாமல் அங்கிருந்த அழகினை ரசிக்கவும் முடியாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் மதிவதனா. அவள் அருகே அமர்ந்திருந்தவனின் அண்மையில் அவளுக்கு ஒவ்வாமை தான் வந்ததே தவிர வேறு எந்தவிதமான உணர்வும் வரவில்லை.
"மதி என்னைப் பார்த்துப் பேசு ஏன் கீழேயே பாத்துட்டு இருக்க" என்றவனின் குரலில் நிமிர்ந்து பார்த்தவள் "என்னால முடியலை பரணி. நான் வீட்டுக்குக் கிளம்புறேன்" என்று எழ அவள் கைப்பிடித்து இழுத்து அமர வைத்தவன் "இங்க பாரு மதி பழசை எல்லாம் மறந்துரு. நாம நம்மளோட லைப்பை புதுசா ஆரம்பிக்கலாம். வந்த இடத்துல என்கூட நாலு வார்த்தை பேசி பழகினாத்தான் உன்னோட மனசு மாறும் மதி. நம்ம கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு.. அதுக்குள்ள நீயும் உன்னோட மனசை மாத்திக்க முயற்சி பண்ணு மதி" என்று சொல்ல அவள் அப்போதும் அமைதியாகத்தான் இருந்தாள்.
அவளுக்கு இப்போது யாரோ உறுத்துப் பார்ப்பது போன்ற பிரம்மை. இதை ஏற்கனவே அனுபவித்திருக்கின்றோம் என்ற நினைப்பில் அவள் பார்வையை இருமருங்கிலும் சுழலவிட்டாள். ஆனால் அவள் எதிர்பார்த்த அந்த உருவம் எங்கேயும் இல்லை. இதற்கு மேல் அங்கே இருப்பது ஆபத்து என்பதை அவள் அறிந்ததால் "பரணி.. வெரி சாரி.. நான் கிளம்புறேன்.. இதுக்கு மேல இங்க என்னால இருக்க முடியாது" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து சென்றுவிட்டாள்.
"மதி மதி ஸ்டாப்" என்றவாறு பரணி அவள் பின்னாலே செல்ல அதற்குள் அங்கிருந்த ஆட்டோவில் ஏறி அவள் சென்றிருந்தாள். இவளுக்கு என்ன ஆச்சு என்பதுபோல் அவன் பார்த்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான்.
இதையெல்லாம் அங்கிருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகள் குரூரமான புன்னகையை சிந்தியது. பரவாயில்லை நம்ம பார்வையை இன்னமும் மறக்காம வச்சுருக்காங்க போலயே... நல்லது தான். அப்போ நம்மளோட வேலை ரொம்ப எளிதாக முடிஞ்சுடும் என்று எண்ணிக் கொண்டவனுக்கு சற்று முன்னர் அவள் கையை பரணி பிடித்த போதே அவனோடு சேர்த்து அவளையும் கொன்று புதைக்கும் வெறி இருந்தது என்னவோ உண்மைதான். ஆனாலும் அடக்கிக் கொண்டு அவன் அமைதியாகத்தான் இருந்தான். அவனது கோபத்தைக் கூட தாங்கிக் கொள்ளலாம். ஆனால் அவனின் இத்தகைய அமைதி வெகு ஆபத்தானது. அதைப் பற்றி சிலருக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அது தெரியாது இந்த பரணி இப்போது வந்து சிக்கிக் கொண்டான்.
வீட்டுக்கு வந்தபின்னும் கூட மதி அந்த பார்வையின் தாக்கத்தால் நடுங்கிக் கொண்டிருந்தாள். அப்படின்னா என்னைப் பாலோ பண்ணுறானா என்று அவள் இதயம் ஏகத்துக்கும் துடித்தது.
அந்த பரபரப்பில் அவளுக்கு உறக்கம் கூட கிட்டே வரவில்லை... எப்படியோ வெகு பிரயத்தனப்பட்டு அவள் உறங்க கதவைத் தட்டும் சத்தத்தில் அவள் எழுந்தாள். அம்மாவும் அப்பாவும் ஊருக்குப் போயிருந்த நிலையில் யாரது இந்த நடு ராத்திரியில் கதவைத் தட்டுறது என்று நினைத்தபடி அந்த துளை வழியே பார்க்க பார்த்தவளின் விழிகள் அரண்டு போனது...
பயத்துடன் கதவைத் திறந்ததும் அவளைத் தள்ளிக் கொண்டு அவன் உள்ளே நுழைந்து விட்டான்.
"நீ...யா நீ...யா" என்று திக்கித் திணறியவளின் முகத்தில் இருந்த திகிலை திருப்தியுடன் பார்த்தவனின் விழிகள் மேற்கொண்டு இடுங்கியது... நடுவீட்டில் தெனாவெட்டாய் நின்றிருந்தவனின் தோற்றம் அவளை மிகவும் அச்சுறுத்த அதில் அவள் பயந்து நடுங்கினாள்.
"வந்தவங்களை வாங்கன்னு சொல்லுற பழக்கம் எல்லாம் உங்க வீட்டுல சொல்லி வளர்க்கலை. ஆனா வேற நல்ல பழக்கம் எல்லாம் நல்லாவே சொல்லி வளர்த்துருக்காங்க அப்படித்தான" என்று கூர் பார்வை பார்த்தபடி கேட்டவனைக் கண்டு அவளுக்கு மேலும் தொண்டை வறண்டது.
"உன்னை யாரு இங்க வரச் சொன்னது. அதுவும் இந்த நேரத்துல" என்று அவள் படபடப்பாய் கேட்க "யாரும் வரச் சொல்லித்தான் வரணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. யூ காட் ட்...."என்றான் அவன். இதைச் சொன்னவனது விழிகளோ எந்த வித உணர்வும் இல்லாது துடைத்திருந்தது.
"ப்ளீஸ் இங்கிருந்து போங்க" என்று அவள் சற்று மரியாதையாகவே கெஞ்ச அவனோ இரக்கமே இல்லாது நான் போக மாட்டேன் என்பது போல் அசையாது நின்றான்.
கூடவே "மரியாதை எல்லாம் இப்போ வருதே... பாரேன்... இதே மாதிரி நீயும் வந்துட்டா எந்த ப்ராப்ளமும் இல்லை" என்றான் அவன்.
"எல்லாரும் இப்போ வந்துடுவாங்க நீங்க போங்க" என்று அவள் சொல்ல இது ஒன்னும் எனக்குப் புதுசு இல்லை என்பது போல் அவன் அப்படியே நின்றிருந்தான். அவன் முகத்தில் அந்த வெய்யோனின் வெம்மை அப்படியே இருந்தது.
"நீ என் கூட வா. நான் போயிடுறேன்" என்று அவன் சொல்ல "இல்லை மாட்டேன்" என்றாள் அவள்.
"உனக்கு மறுக்குறதுக்கான வாய்ப்பு இருக்கும்னு நீ இன்னமுமா நினைக்குற. சோ சேட்..." என்று அவன் இரக்கத்துடன் அவளின் முகத்தின் முன் சொடக்கிட்டபடி பேச "ப்ளீஸ் நான் சொல்லுறதை கேளுங்க.." கேக்க மாட்டான் என்று தெரிந்தும் அவனிடம் பேசினாள் அவள்.
அழுத்தமாக அவன் நின்றிருந்த தோரணையில் அவள் மனதுக்குள் மறுபடியும் குளிர் பரவியது. ஆனாலும் அவன் சொன்னது போல் அவளால் சட்டென்று அங்கிருந்து கிளம்பி அவனுடன் செல்ல முடியாது. அதனாலயே "என்னோட சூழ்நிலையை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க" என்று தயக்கமாய் உரைத்தாள் அவள்.
"யாருமே என்னைப் பற்றி புரிஞ்சுக்காத போது நானும் அப்படியே இருக்குறதுதான எனக்கு நல்லது"
"அன்னைக்கு அப்படி நடந்ததுன்னா அதுக்கான...." என்று அவள் பேச அவள் பேச்சை கைநீட்டி தடுத்து நிறுத்தியவன் "லிசன் எனக்கு பொறுமை ரொம்ப கம்மி அது உனக்கே நல்லாத் தெரியும். அதனால கசகசன்னு பேசாம சீக்கிரம் கிளம்பு" என்றான் அவன் தீவிரமாய்.
"இல்லை மாட்டேன்" என்று சொன்ன மாத்திரத்தில் அவளது கரத்தை இறுகப் பிடித்தவன் அவளை அங்கிருந்து இழுத்துச் சென்றான்...
"அமித் ப்ளீஸ் விடு" என்று அவள் சொல்ல "வாயை உடைச்சுடுவேன் என் பேரைச் சொல்லிக் கூப்பிட்டா. அதுதான் வேணும்னா நீ வாயைத் தொற" என்றவனின் குரலில் தென்பட்ட எச்சரிக்கையில் வாயை இறுக மூடிக் கொண்டாள்.
"அப்பா அம்மா வந்துடுவாங்க... அய்யோ அவங்களுக்கு இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா... கையை விடு டா" என்று சொன்னவளின் குரலில் இப்போது சூடு ஏறியிருந்தது.
"அசிங்கப் படணும்னு தான் இன்னைக்கு இப்போ வந்துருக்கேன். நீ கத்து இன்னமும் கத்து.... கத்துடி" என்றவனின் குரல் இப்போது ஏகத்துக்கும் ஏறியிருந்தது.
"நீ செய்யுறது தப்பு டா" என்று அவள் கையை உருவ "அதைச் சொல்ல உனக்கு வெட்கமா இல்லையா டி.. ச்சே" என்று அவன் பட்டென்று கேட்க "அமித்" என்று கத்திக் கொண்டு படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் அவள். அவளின் ஒட்டுமொத்த தேகமும் பதறி நடுங்கி வியர்வையை அளவுக்கு அதிகமாக வெளியேற்றியிருந்தது.
கொளுத்தும் வெயில் குளிர் தருமா...