- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
வேத வித்து - 11.
கௌரி அத்தையும் கனபாடிகளும் காலை பஸ்ஸுக்கே சிதம்பரம் புறப்பட்டுப் போய்விட்டார்கள்,
“அத்தை ஒரே ஒருநாள்தான் தங்கி இருந்தா. எவ்வளவு கலகலப்பா இருந்தா. அவள் போனதும் வீடே வெறிச்சோடிப் போச்சு!" என்றாள் கமலா.
அத்தைக்குத்தான் எத்தனை ஆசை!
தலை பின்னி, பொட்டிட்டு, பூவைத்து காசுமாலை போட்டு அகமகிழ்ந்த அத்தை ‘எத்தனை அழகுடி நீ ! மகாலட்சுமியாட்டம் இருக்கே !’ என்று பிரியமாகச் சொன்ன வார்த்தைகள், உள்ளத்தில் உறைந்துவிட்ட வார்த்தைகள்,--பாகீரதியின் கண்களில் கண்ணீராய் வெளிப்பட்டன.
வாசலில் கிலுகிலுப்பைக்காரன் ரோதனையாக ஒலி எழுப்பி, கூச்சலிட்டுக் கொண்டிருந்தான். அந்த ஓசையைக் கேட்ட அம்புலு தெருப்பக்கம் கையைக் காட்டிக் காட்டி அம்மாவைப் பார்த்து அடம்பிடித்து அழுதது.
"இந்த கிலுகிலுப்பைக்காரனுக்கு இந்த வீட்ல குழந்தை இருக்குன்னு எப்படித்தான் தெரிஞ்சுதோ? முக்கிலே வேர்க்கும் போலிருக்கு !" என்று முணுமுணுத்துக் கொண்டே பாத்திரத்தில் கொஞ்சம் அரிசி அள்ளிப் போட்டுக்கொண்டு பண்டமாற்று முறையில் கிலுகிலுப்பை வாங்கப் போனாள்.
கிட்டா வழக்கமில்லாத வழக்கமாய் காலையிலிருந்தே ரொம்ப உற்சாகமாய்க் காணப்பட்டான். கனபாடிகளிடம் பழகியிருந்த பர்த்ருஹரி சுலோகங்களை தன்யாசி ராகத்தில் சேதப்படுத்திக் கொண்டிருந்தான்!
பாகீரதி சமையல் வேலையை மறந்து, உக்கிராண அறையில்போய் உட்கார்ந்து, மூர்த்தியின் தகரப் பெட்டியைத் திறந்து வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
பழைய பட்டு வேட்டி, திருக்குறள் புத்தகம், பகவத்பாதாள் சரிதம், காசி மடம் விபூதிப்பை, தக்ளி, முள் ஒடிந்த பேனா, செல்லாத அரையணாக் காசு-இவ்வளவும் அதில் கிடந்தன. திருக்குறள் புத்தகத்தின் முதல் பக்கத்தில் ‘அப்பா வாங்கிக் கொடுத்த தமிழ் வேதம்’ என்று எழுதி அதன் கீழ் மூர்த்தி என்று கையெழுத்திடப்பட்டிருந்தது.
பட்டு வேட்டியையும், திருக்குறளையும் மட்டும் எடுத்து வைத்துக் கொண்ட பாகீரதி பெட்டியைப் பழையபடி மூடி அது இருந்த இடத்திலேயே கொண்டு வைத்துவிட்டாள்.
அந்தப் பட்டு வேட்டியில் அவளுக்கு மூர்த்தி வாசனை தெரிந்தது.
திருக்குறள் புத்தகத்தில் ‘எழுமை யெழுபிறப்பு’ என்று தொடங்கும் வரிகளைக் கோடிட்டு வைத்திருந்தான். மூர்த்தியைப் பாடசாலையில் சேர்க்க வந்தபோது அவன் அப்பா "நீ வேதம் ஒதப் போகிறாய். சம்ஸ்கிருதம் படிக்கப் போகிறாய். ஆனாலும் தமிழை மறந்து விடாதே. தமிழ் மறந்து போகாமலிருக்க தினமும் ஒரு குறளாவது படித்துக் கொண்டிரு. இந்தா, இது தமிழ் வேதம்” என்று சொல்லிக் கொடுத்துவிட்டுப்போன புத்தகம் அது.
பாகீரதி பழுப்புத்தாள் ஒன்று எடுத்து வந்து அதற்கு அட்டை போட்டு, உள் பக்கமாக மூலை மடித்து ஒட்டி முடித்தாள்.
கிட்டா இன்னமும் குஷியாகப் பாடிக்கொண்டிருந்தான்.
"என்னடா, என்றைக்குமில்லாத குஷி !" என்று கேட்டாள் பாகீரதி.
"இன்னைக்கு தஞ்சாவூர் போறேன். அங்கே ஒரு கலியாணம். நாலு நாளாகும் திரும்பி வர. மெதுவ்வா கனபாடிகளிடம் லீவு வாங்கிட்டேன். முதல்ல கொஞ்சம் தயங்கினார். அப்புறம் ‘சரி, பரவாயில்லை, போயிட்டுவா’ன்னுட்டார்."
"யாருக்குடா கலியாணம்?"
"எங்க மாமா பிள்ளைக்கு."
"அப்படின்னா நானும் கமலாவும் தனியாத்தான் இருக்கணுமா? யாரும் ஆம்பிள்ளைத் துணை கிடையாதா?"
“பாடசாலைப் பிள்ளைகளெல்லாம் ஆண் பிள்ளைகளாத் தோணல்லியோ உனக்கு?" என்றான் கிட்டா.
”எல்லாம் ஜாண்ஜாண் உண்டு…." என்றாள் பாகீரதி.
"ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளைதானே?" என்றான் கிட்டா.
"கொஞ்சம் இப்படி கொட்டில் பக்கம் வறயா?" என்றாள் பாகீரதி.
”என்ன சமாசாரம்?...”
"கனபாடிகள் உன்னைக் கட்டவிழ்த்து விட்டுட்டார். தும்பிலே கட்டிப் போட்டிருக்கும் சேங்கன்னை மட்டும் கட்டிப் போடலாமா, அதையும் அவிழ்த்துவிட்டுரு. பாவம் காலாறச் சுத்திட்டு வரட்டும்" என்றாள்.
கிட்டா அதைத் தறியிலிருந்து அவிழ்த்து விட்டதும் அது நாலுகால் பாய்ச்சலில் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டது
"கிட்டா, எனக்கு ஒரு ஒத்தாசை பண்ணுவியா?" என்று பூர்வ பீடிகையோடு ஆரம்பித்தாள் பாகீரதி.
"என்ன சொல்லு!"
"தஞ்சாவூர் போனா அங்க மூர்த்தியைப் பார்ப்பியோல்லியோ? "
”தெரியலையே. அவன் எங்க இருக்கானோ, என்னவோ, யார் கண்டா?"
"நன்னாத் தேடிப் பாருடா. நிச்சயம் தஞ்சாவூர்லதான் இருப்பான்."
”கிடைச்சா என்ன சொல்லணும்?"
அவனை எப்படியாவது கையோடு அழைச்சுண்டு வந்துடு இங்கே."
"அவன் வரவே மாட்டான். ஏதோ ஒரு வைராக்கியமா இருக்கான். என்னன்னும் சொல்லமாட்டேங்கறான்?"
"சாப்பாட்டுக்கு என்ன செய்றானோ, என்ன கஷ்டப் படறானோ? கையில இருந்த காசெல்லாம்கூடத் தீர்ந்து போயிருக்குமே, பாவம் !" என்றாள்.
"கூப்பிட்டுப் பாக்கறேன். வந்தா அழைச்சுண்டு வரேன். உனக்கென்ன அத்தனை அக்கறை அவங்கிட்ட? சொல்லிக்காமப் போனவனை வெத்திலை பாக்கு வெச்சு கூப்பிடணமாக்கும்! கனபாடிகள் மனசைக் கஷ்டப்படுத்திட்டுப் போனவனாச்சே அவன்?"
"அவன் கிட்ட எத்தனை பாசம் வெச்சிருக்கார் அவர் ! எப்படிப் புலம்பினார்? ‘மூர்த்தி! நீ எங்கடா போயிட்டே?’ன்னு ஒருநா ராத்திரி, நான் கால் மிதிச்சிண்டிருக்கப்போ, வாய் விட்டுக் கதறினாரே, அது எனக்கில்லையா தெரியும்?"
"மூர்த்தி இல்லாம இந்தப் பாடசாலையே அழுது வடியறது கிட்டா! களையாவே இல்லை. நீ தேடிப்பாரு ; எப்படியும் கிடைச்சுடுவான். அவனைப் பார்த்து இந்தத் திருக்குறள் புத்தகத்தையும் பட்டு வேட்டியையும் கொடுத்துடு” என்றாள்.
"இந்த ரெண்டும் ஏது?”
"அவன் பெட்டியில இருந்தது."
"எனக்குக்கூட திருக்குறள் படிக்கனும்போல ஆசையாயிருக்கு" என்றான் கிட்டா.
"இந்தப் புஸ்தகத்தை நீ எடுத்துண்டுராதே. இது அவன் புஸ்தகம். ஜாக்கிரதையாக் கொண்டு போய்ச் சேர்த்துடு, யாருக்கும் தெரிய வேணாம்…"
"திருக்குறள் எல்லாருக்கும் பொதுதானே! அதை ஏன் யாருக்கும் தெரிய வேணாங்கதே? என்றான் கிட்டா.
பாகீரதி ‘ஐயோ’ என்று தலையில் அடித்துக்கொண்டாள்.
இதற்குள் அந்தப் பக்கம் வந்த கமலா, மறைவில் சுவர் ஒரமாகச் சாய்ந்து என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை ஒட்டுக் கேட்டாள். பிறகு அவர்கள் எதிரில் போய் நின்று என்ன, எனக்குத் தெரியாம இங்க என்ன பேச்சு?" என்றாள்.
"ஒண்ணும் பேசலையே ! கிட்டா தஞ்சாவூர் போறானாம். அப்பா உத்தரவு கொடுத்துட்டாராம். குதிக்கிறான் !"
"அதுக்கு நீ என்ன சொன்னே?"
"திரும்பி வறப்போ குடமிளகாயும் வறுத்த முந்திரியும் வாங்கிண்டுவான்னேன்…"
"பொய் ! வேற ஏதோ சொல்லிண்டிருந்தயே!"
”வேற ஒண்ணும் சொல்லலையே!"
”மூர்த்தி பேர் அடிபட்டுதே! எப்படியும் தேடிக் கண்டு பிடின்னு சொல்லிண்டிருந்தது காதில் விழுந்ததே!"
"இந்தப் புதுக் கன்னுக்குட்டி மூர்த்தி எங்கேயோ ஒடிட்டுது, அதைத்தான் தேடிக் கண்டு பிடிடான்னு சொல்லிண்டிருந்தேன்!" என்று சமாளித்தாள் பாகீரதி.
“கையில என்னடா அது?" என்று கிட்டாவைப் பார்த்துக் கேட்டாள் கமலா.
"பட்டு வேட்டி. திருக்குறள் புத்தகம்."
"ஏது?"
“மூர்த்தி வெச்சுட்டுப் போயிட்டான். தஞ்சாவூர்ல மூர்த்தியைப் பார்த்தா அவன் கிட்ட கொடுத்தடுன்னு பாகீரதி தான் எடுத்துக் கொடுத்தாள்" என்றான் கிட்டா.
ஒரு அர்த்த புஷ்டியோடு "அப்படியா!" எனும் பாவனையில் தலையை மேலும் கீழும் அசைத்தாள் கமலா.