• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வேத வித்து

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
வேத வித்து - 11.


கௌரி அத்தையும் கனபாடிகளும் காலை பஸ்ஸுக்கே சிதம்பரம் புறப்பட்டுப் போய்விட்டார்கள்,
“அத்தை ஒரே ஒருநாள்தான் தங்கி இருந்தா. எவ்வளவு கலகலப்பா இருந்தா. அவள் போனதும் வீடே வெறிச்சோடிப் போச்சு!" என்றாள் கமலா.
அத்தைக்குத்தான் எத்தனை ஆசை!
தலை பின்னி, பொட்டிட்டு, பூவைத்து காசுமாலை போட்டு அகமகிழ்ந்த அத்தை ‘எத்தனை அழகுடி நீ ! மகாலட்சுமியாட்டம் இருக்கே !’ என்று பிரியமாகச் சொன்ன வார்த்தைகள், உள்ளத்தில் உறைந்துவிட்ட வார்த்தைகள்,--பாகீரதியின் கண்களில் கண்ணீராய் வெளிப்பட்டன.
வாசலில் கிலுகிலுப்பைக்காரன் ரோதனையாக ஒலி எழுப்பி, கூச்சலிட்டுக் கொண்டிருந்தான். அந்த ஓசையைக் கேட்ட அம்புலு தெருப்பக்கம் கையைக் காட்டிக் காட்டி அம்மாவைப் பார்த்து அடம்பிடித்து அழுதது.
"இந்த கிலுகிலுப்பைக்காரனுக்கு இந்த வீட்ல குழந்தை இருக்குன்னு எப்படித்தான் தெரிஞ்சுதோ? முக்கிலே வேர்க்கும் போலிருக்கு !" என்று முணுமுணுத்துக் கொண்டே பாத்திரத்தில் கொஞ்சம் அரிசி அள்ளிப் போட்டுக்கொண்டு பண்டமாற்று முறையில் கிலுகிலுப்பை வாங்கப் போனாள்.
கிட்டா வழக்கமில்லாத வழக்கமாய் காலையிலிருந்தே ரொம்ப உற்சாகமாய்க் காணப்பட்டான். கனபாடிகளிடம் பழகியிருந்த பர்த்ருஹரி சுலோகங்களை தன்யாசி ராகத்தில் சேதப்படுத்திக் கொண்டிருந்தான்!
பாகீரதி சமையல் வேலையை மறந்து, உக்கிராண அறையில்போய் உட்கார்ந்து, மூர்த்தியின் தகரப் பெட்டியைத் திறந்து வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
பழைய பட்டு வேட்டி, திருக்குறள் புத்தகம், பகவத்பாதாள் சரிதம், காசி மடம் விபூதிப்பை, தக்ளி, முள் ஒடிந்த பேனா, செல்லாத அரையணாக் காசு-இவ்வளவும் அதில் கிடந்தன. திருக்குறள் புத்தகத்தின் முதல் பக்கத்தில் ‘அப்பா வாங்கிக் கொடுத்த தமிழ் வேதம்’ என்று எழுதி அதன் கீழ் மூர்த்தி என்று கையெழுத்திடப்பட்டிருந்தது.
பட்டு வேட்டியையும், திருக்குறளையும் மட்டும் எடுத்து வைத்துக் கொண்ட பாகீரதி பெட்டியைப் பழையபடி மூடி அது இருந்த இடத்திலேயே கொண்டு வைத்துவிட்டாள்.
அந்தப் பட்டு வேட்டியில் அவளுக்கு மூர்த்தி வாசனை தெரிந்தது.
திருக்குறள் புத்தகத்தில் ‘எழுமை யெழுபிறப்பு’ என்று தொடங்கும் வரிகளைக் கோடிட்டு வைத்திருந்தான். மூர்த்தியைப் பாடசாலையில் சேர்க்க வந்தபோது அவன் அப்பா "நீ வேதம் ஒதப் போகிறாய். சம்ஸ்கிருதம் படிக்கப் போகிறாய். ஆனாலும் தமிழை மறந்து விடாதே. தமிழ் மறந்து போகாமலிருக்க தினமும் ஒரு குறளாவது படித்துக் கொண்டிரு. இந்தா, இது தமிழ் வேதம்” என்று சொல்லிக் கொடுத்துவிட்டுப்போன புத்தகம் அது.
பாகீரதி பழுப்புத்தாள் ஒன்று எடுத்து வந்து அதற்கு அட்டை போட்டு, உள் பக்கமாக மூலை மடித்து ஒட்டி முடித்தாள்.
கிட்டா இன்னமும் குஷியாகப் பாடிக்கொண்டிருந்தான்.
"என்னடா, என்றைக்குமில்லாத குஷி !" என்று கேட்டாள் பாகீரதி.
"இன்னைக்கு தஞ்சாவூர் போறேன். அங்கே ஒரு கலியாணம். நாலு நாளாகும் திரும்பி வர. மெதுவ்வா கனபாடிகளிடம் லீவு வாங்கிட்டேன். முதல்ல கொஞ்சம் தயங்கினார். அப்புறம் ‘சரி, பரவாயில்லை, போயிட்டுவா’ன்னுட்டார்."
"யாருக்குடா கலியாணம்?"
"எங்க மாமா பிள்ளைக்கு."
"அப்படின்னா நானும் கமலாவும் தனியாத்தான் இருக்கணுமா? யாரும் ஆம்பிள்ளைத் துணை கிடையாதா?"
“பாடசாலைப் பிள்ளைகளெல்லாம் ஆண் பிள்ளைகளாத் தோணல்லியோ உனக்கு?" என்றான் கிட்டா.
”எல்லாம் ஜாண்ஜாண் உண்டு…." என்றாள் பாகீரதி.
"ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளைதானே?" என்றான் கிட்டா.
"கொஞ்சம் இப்படி கொட்டில் பக்கம் வறயா?" என்றாள் பாகீரதி.
”என்ன சமாசாரம்?...”
"கனபாடிகள் உன்னைக் கட்டவிழ்த்து விட்டுட்டார். தும்பிலே கட்டிப் போட்டிருக்கும் சேங்கன்னை மட்டும் கட்டிப் போடலாமா, அதையும் அவிழ்த்துவிட்டுரு. பாவம் காலாறச் சுத்திட்டு வரட்டும்" என்றாள்.
கிட்டா அதைத் தறியிலிருந்து அவிழ்த்து விட்டதும் அது நாலுகால் பாய்ச்சலில் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டது
"கிட்டா, எனக்கு ஒரு ஒத்தாசை பண்ணுவியா?" என்று பூர்வ பீடிகையோடு ஆரம்பித்தாள் பாகீரதி.
"என்ன சொல்லு!"
"தஞ்சாவூர் போனா அங்க மூர்த்தியைப் பார்ப்பியோல்லியோ? "
”தெரியலையே. அவன் எங்க இருக்கானோ, என்னவோ, யார் கண்டா?"
"நன்னாத் தேடிப் பாருடா. நிச்சயம் தஞ்சாவூர்லதான் இருப்பான்."
”கிடைச்சா என்ன சொல்லணும்?"
அவனை எப்படியாவது கையோடு அழைச்சுண்டு வந்துடு இங்கே."
"அவன் வரவே மாட்டான். ஏதோ ஒரு வைராக்கியமா இருக்கான். என்னன்னும் சொல்லமாட்டேங்கறான்?"
"சாப்பாட்டுக்கு என்ன செய்றானோ, என்ன கஷ்டப் படறானோ? கையில இருந்த காசெல்லாம்கூடத் தீர்ந்து போயிருக்குமே, பாவம் !" என்றாள்.
"கூப்பிட்டுப் பாக்கறேன். வந்தா அழைச்சுண்டு வரேன். உனக்கென்ன அத்தனை அக்கறை அவங்கிட்ட? சொல்லிக்காமப் போனவனை வெத்திலை பாக்கு வெச்சு கூப்பிடணமாக்கும்! கனபாடிகள் மனசைக் கஷ்டப்படுத்திட்டுப் போனவனாச்சே அவன்?"
"அவன் கிட்ட எத்தனை பாசம் வெச்சிருக்கார் அவர் ! எப்படிப் புலம்பினார்? ‘மூர்த்தி! நீ எங்கடா போயிட்டே?’ன்னு ஒருநா ராத்திரி, நான் கால் மிதிச்சிண்டிருக்கப்போ, வாய் விட்டுக் கதறினாரே, அது எனக்கில்லையா தெரியும்?"
"மூர்த்தி இல்லாம இந்தப் பாடசாலையே அழுது வடியறது கிட்டா! களையாவே இல்லை. நீ தேடிப்பாரு ; எப்படியும் கிடைச்சுடுவான். அவனைப் பார்த்து இந்தத் திருக்குறள் புத்தகத்தையும் பட்டு வேட்டியையும் கொடுத்துடு” என்றாள்.
"இந்த ரெண்டும் ஏது?”
"அவன் பெட்டியில இருந்தது."
"எனக்குக்கூட திருக்குறள் படிக்கனும்போல ஆசையாயிருக்கு" என்றான் கிட்டா.
"இந்தப் புஸ்தகத்தை நீ எடுத்துண்டுராதே. இது அவன் புஸ்தகம். ஜாக்கிரதையாக் கொண்டு போய்ச் சேர்த்துடு, யாருக்கும் தெரிய வேணாம்…"
"திருக்குறள் எல்லாருக்கும் பொதுதானே! அதை ஏன் யாருக்கும் தெரிய வேணாங்கதே? என்றான் கிட்டா.
பாகீரதி ‘ஐயோ’ என்று தலையில் அடித்துக்கொண்டாள்.
இதற்குள் அந்தப் பக்கம் வந்த கமலா, மறைவில் சுவர் ஒரமாகச் சாய்ந்து என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை ஒட்டுக் கேட்டாள். பிறகு அவர்கள் எதிரில் போய் நின்று என்ன, எனக்குத் தெரியாம இங்க என்ன பேச்சு?" என்றாள்.
"ஒண்ணும் பேசலையே ! கிட்டா தஞ்சாவூர் போறானாம். அப்பா உத்தரவு கொடுத்துட்டாராம். குதிக்கிறான் !"
"அதுக்கு நீ என்ன சொன்னே?"
"திரும்பி வறப்போ குடமிளகாயும் வறுத்த முந்திரியும் வாங்கிண்டுவான்னேன்…"
"பொய் ! வேற ஏதோ சொல்லிண்டிருந்தயே!"
”வேற ஒண்ணும் சொல்லலையே!"
”மூர்த்தி பேர் அடிபட்டுதே! எப்படியும் தேடிக் கண்டு பிடின்னு சொல்லிண்டிருந்தது காதில் விழுந்ததே!"
"இந்தப் புதுக் கன்னுக்குட்டி மூர்த்தி எங்கேயோ ஒடிட்டுது, அதைத்தான் தேடிக் கண்டு பிடிடான்னு சொல்லிண்டிருந்தேன்!" என்று சமாளித்தாள் பாகீரதி.
“கையில என்னடா அது?" என்று கிட்டாவைப் பார்த்துக் கேட்டாள் கமலா.
"பட்டு வேட்டி. திருக்குறள் புத்தகம்."
"ஏது?"
“மூர்த்தி வெச்சுட்டுப் போயிட்டான். தஞ்சாவூர்ல மூர்த்தியைப் பார்த்தா அவன் கிட்ட கொடுத்தடுன்னு பாகீரதி தான் எடுத்துக் கொடுத்தாள்" என்றான் கிட்டா.
ஒரு அர்த்த புஷ்டியோடு "அப்படியா!" எனும் பாவனையில் தலையை மேலும் கீழும் அசைத்தாள் கமலா.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352

வேத வித்து - 12.


பாடசாலையை மறந்து, வேதத்தைத் துறந்து, தஞ்சைக்குப் புறப்பட்டு வந்த மூர்த்தி இங்கே வந்தபின் எந்த முடிவுக்கும் வர முடியாமல் சஞ்சலப்பட்டான்.
மஞ்சு அழகாக இருந்தாள். இவனிடம் அளவு கடந்த பற்றும் பாசமும் காட்டினாள். ஆயினும் மூர்த்தி மட்டும் அவளிடம் ஒட்டுறவு ஏதுமின்றி, தாமரை இலைத் தண்ணீர் போல் பழகிக் கொண்டிருந்தான்.
"மஞ்சு, நீ என்னை வெள்ளத்திலேருக்து மீட்கலேன்னா நான் அன்னைக்கே செத்துப் போயிருப்பேன். அதுக்காக உனக்கு நன்றி சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். நீ என்மீது வெச்சிருக்கும் உண்மையான அன்பைப் பார்த்தப்புறம் உன்னோடயே தங்கிடலாம்னு தோணித்து. தங்கிட்டேன். ஆனாலும் என்னோட ஆசாரம், அனுஷ்டானம், வேதம் இவ்ளவும் உனக்கும் எனக்கும் நடுவே குறுக்குச் சுவர் போட்டிருக்கு. உன்னைத் தொடவோ, நீ சமைத்துப் போடுவதைச் சாப்பிடவோ, மனசு ஒப்பலை. நீயோ என்னைப் பெரிசா நம்பிண்டிருக்கே. நான்தான் ஒண்ணும் புரியாம குழம்பிண்டிருக்கேன்" என்றான் மூர்த்தி.
"உன்னை நம்பிப் பெரிய மனக்கோட்டையெல்லாம் கட்டிட்டேன். நீ குடுமியை எடுக்காம நாளைக்கடத்தறதிலிருந்தே சந்தேகப் பட்டேன்.“
வேதத்தைப் பாதில விட்டுட்டு வந்த மாதிரி என்னையும் விட்டுட்டுப் போயிடுவியான்னு?" நான் அன்னைக்கே கேட்டேன். நான் சந்தேகப்பட்ட மாதிரிதான் நடக்குது."
"சரி, இப்ப எனக்கு ரொம்பப் பசியாயிருக்கு, முதல்ல ஆனந்தா லாட்ஜ் வரைக்கும் போயிட்டு வந்துடறேன். அப்புறம் விவரமாப் பேசிக்கலாம்" என்றான் மூர்த்தி.
"நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வெளியே கிளம்பிடுவேன். அப்பாவை அழைச்சுட்டு வித்தை செய்யப் போறேன்."
”எங்க?"
"சிவகங்கா கார்டன் பக்கத்துல இன்னைக்குப் புது மாதிரி வித்தை செய்யப் போறேன். இதுவரைக்கும் நீ பார்க்காத ஐட்டம்!"
"நான் அங்கயே வந்து பார்த்துடறேன்!" என்று சொல்லிப் புறப்பட்டான் மூர்த்தி.
“காசு வெச்சிருக்கயா?"
"என் அப்பா கொடுத்துட்டுப்போன காசெல்லாம் தீர்ந்து போச்சு. ஒரே ஒரு அரையணாத்தான் மிச்சம்!"
“அஞ்சு ரூபா தறேன், எடுத்துட்டுப்போ..!"
"வேணாம்; உனக்கு ஏற்கனவே நிறையக் கடன்பட்டிருக்கேன். நன்றிக்கடன் ! எப்படித்தான் தீர்க்கப் போறனோ?"
"அரையணால வயிறு ரொம்பிடுமா? ரெண்டே ரெண்டு இட்லிதானே கிடைக்கும். அது எப்படிப் பத்தும்? இந்தா காசு!"
“வேணாம். கழுத்திலே எங்கம்மாவின் சங்கிலி இருக்கு. அதை வித்துடப் போறேன்…"
"அந்தப் பணமும் தீர்த்து போச்சுன்னா அப்புறம் என்ன செய்வே?"
“அது ஆண்டவன் கவலை!"

மூர்த்தி கழுத்துச் சங்கிலியைத் தொட்டுப் பார்த்தான். அம்மாவின் நினைவு தோன்ற, கண் கலங்கியபடி ஐயன்கடைத் தெரு நோக்கிப் புறப்பட்டான். மெயின் ரோடைப் பிடிக்க குறுக்குச் சந்தில் புகுந்து நடந்தபோது எதிரில் காசி யாத்திரை போகும் கலியாணக் கும்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. மாப்பிள்ளையைச் சூழ்ந்து ஒரு பெரிய கூட்டம். நாதசுரக்காரர் வாத்தியத்தை தாராளமாய் வீசி வாசிக்க முடியாத அளவுக்குக் குறுகலான சந்து.
பரதேசிக்கோல மாப்பிள்ளைக்கு குடை பிடித்துக் கொண்டு நின்ற கிட்டா மீது மூர்த்தியின் பார்வை விழுந்தது.
"அடl இவன் எப்படி வந்தான் இங்கே?" என்ற ஆச்சரியத்துடன் அவனை அணுகி "கிட்டா !" என்று கூப்பிட்டான் மூர்த்தி.
மூர்த்தியைக் கண்டதும் கிட்டாவுக்குச் சந்தோஷம் தாங்க வில்லை. ‘அடடே’ என்று ஓடி வந்து மூர்த்தியைக் கட்டிக் கொண்டான்!
"மூர்த்தி! நீ இன்னும் இந்த ஊர்லதான் இருக்கயா? மத்தியானத்துக்கு மேல உன்னைத் தேடிப் பார்க்கணும்னு நினைச்சுண்டிருந்தேன். தெய்வமாப் பார்த்து உன்னை இங்கே கொண்டு வந்து விட்டிருக்கு!" என்றான் கிட்டா.
"மாப்பிள்ளை யாருடா? உனக்கு என்ன உறவு?"
"எனக்கு மாமா பிள்ளை. டாக்டருக்குப் படிக்கிறான். அதோ உயரமா வராறே, அவர்தான் எங்க மாமா. வெள்ளிக் கடை கிட்டப்பான்னா தஞ்சாவூர்ல தெரியாதவா இருக்கமாட்டா. ரொம்பத் தமாஷாப் பேசுவார். வேதம் படிக்கிறவாளைக் கண்டா ரொம்பப் பிடிக்கும். மத்தியானமா உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். நீ இப்ப என் கூட வா. கலியாண வீட்லயே சாப்பிடலாம். மற்றதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்" என்றான் கிட்டா.
"உனக்குத்தான் மாமா உறவு. எனக்கும் இந்தக் கலியாணத்துக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு சங்கோஜமா இருக்குடா. நான் வரலே, என்னை விட்டுரு" என்றான் மூர்த்தி.
"அசடாட்டம் பேசாதே, உன்னை நான் விடப் போறதில்லே. நாலு நாளைக்கும் நீ என்னோடதான் இருக்கப்போறே, ஆமாம்.“
"கனபாடிகள் செளக்கியமாயிருக்காரா? என் பேர்ல கோபமா இருக்காரா?”
"தினமும் உன்னை நினைச்சு நினைச்சு புலம்பிண்டிருக்கார். சதா உன் ஞாபகம்தான். காவேரிப்பாக்கம் பசு கன்னு போட்டிருக்கு தெரியுமோ? சேங்கன்னு! அதுக்கு உன் பேரைத்தான் வெச்சிருக்கோம்."
"என் பேரா? எதுக்கு என் பேரை வெச்சீங்க?"
"பாகீரதிதான் உன் பேரைவைக்கணும்னு ஆசைப்பட்டா. உன் பெட்டியைக் குடைஞ்சு திருக்குறள் புஸ்தகமும் பட்டு வேட்டியும் கொடுத்தனுப்பியிருக்கா. அத்தோட உனக்கு ஒரு தபால் கொண்டு வந்திருக்கேன். கவர்!"
“கவரா? யார் எழுதியிருக்கா?"
"தெரியலே. ரிஷிகேசத்துலேந்து வந்திருக்கு உங்கப்பாவா இருக்குமோ?"

அவசரம் அவசரமாய் இருவரும் கலியாண வீட்டுக்குப் போனார்கள். போனதும் கிட்டா எடுத்துக் கொடுத்த கடிதத்தை வாங்கிப் பிரித்தான் மூர்த்தி. அப்பாதான் எழுதியிருந்தார்:

சிரஞ்சீவி மூர்த்திக்கு ஆசீர்வாதம்.
க்ஷேமம்.க்ஷேமத்துக்கு எழுதவும். கனபாடிகளை நான் விசாரிச்சதாச் சொல்லவும். கனபாடிகள் எனக்கு ஆப்த நண்பர். உன் எதிர்காலத்தை அவரிடம் ஒப்படைத்துவிட்டு வந்திருக்கேன். அவரே உனக்கு ஏற்ற பெண்ணாகத் தேர்ந்தெடுத்துக் கலியாணம் செய்து வைப்பார். அவர் சொல்படி நடந்துகொள்.
அம்மா சங்கிலியை ஒருபோதும் கழுத்தைவிட்டு எடுக்காதே. அந்தச் சங்கிலி ரூபமாய் உன் தாயார் உன்னை ஆசீர்வதிச்சிண்டிருப்பாள்,
பிராம்மணனாகப் பிறந்தவன் வேதாத்தியயனம் செய்வது முக்கியம், வேதம் தெய்வத்தின் சுவாசம். அதை ஒரு நாளும் மறக்காதே! நேற்று இங்கே ஆசிரமத்தில் வேதத்தின் பெருமைகள் பற்றி சுவாமிஜி ஒருவர் ரொம்ப அழகாகப் பேசினார்.
‘வேதம் ஒதுகிறவன் தினமும் அதை அப்யாசிக்க வேண்டும். எப்படி ஒரு மருந்தை உபயோகிக்காமல் கொஞ்ச நாள் வைத்திருந்தாலும் அதன் வீரிய சக்தி குறைந்து விடுகிறதோ, அப்படியே வேதத்தை அப்யாசம் பண்ணாமலிருந்தாலும் அந்த மந்திரங்களின் சக்தி குறைந்துவிடும்’ என்று சொன்னார்.

இப்படிக்கு,
பரசுதீட்சிதர்.

கண்களில் கண்ணீர் தளும்ப கடிதத்தை மடித்துப் பைக்குள் வைத்துக்கொண்டான். அடுத்தபடியாக திருக்குறள் புத்தகத்தை எடுத்துப் புரட்டினான்.
பாகீரதி அதற்கு அழகாக அட்டை போட்டு வைத்திருந்ததைப் பார்த்தபோது ‘எதுக்கு இந்த அட்டை? அவசிய மில்லையே!’
ஒட்டப்பட்டிருந்த அட்டையை மெதுவாகப் பிரித்தான் அதிலிருந்து பத்து ரூபாய் நோட்டுகள் மூன்று கீழே உதிர்ந்தன. நல்லவேளை கிட்டா பார்க்கவில்லை.
"மூர்த்தி கொஞ்சம் இங்கயே இருக்கயா? இதோ உள்ளே போய் கொஞ்சம் சர்பத் கொண்டு வந்துடறேன்" என்று சொல்லிவிட்டுப் போனவன் இன்னும் வரவில்லை.
அட்டையை முழுதாகப் பிரித்தபோது உள் பக்கத்தில் வாடிப்போன மல்லிகைப் பூ ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தது.
“மூர்த்தி உனக்காக நான் இந்தப் பூவைப்போல் வாடிக் கொண்டிருக்கிறேன்.” என்று எழுதி கையெழுத்திட்டிருந்தாள் பாகீரதி.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
வேத வித்து - 13.


உள்ளே போன கிட்டா சர்பத் கொண்டு வந்தான்.
"இந்தா, ஐஸ் போட்டிருக்கேன், குடி! இந்த வெய்யிலுக்கு ‘ஜில்’லுனு இருக்கும்" என்றான்.
பரதேசிக்கோலம் நெருங்கி வந்து கொண்டிருப்பதை நாயன ஓசை அறிவித்தது.
"காசி யாத்திரை கிட்டத்துல வந்துடுத்து. மாப்பிள்ளை வாசலுக்கு வரப் போறார். ஆர்த்தி, ஆர்த்தி !" என்று உரத்த குரலில் அவசரப்பட்டார் சாஸ்திரிகள்.
"மூர்த்தி ! ஆபீஸ் போறவாளுக்காக இப்பவே ஒரு பந்தி போடப்போறா. நாம அந்தப் பந்திலேயே உட்கார்ந்துடுவோம்," என்றான் கிட்டா.
"முகூர்த்தம் முடிஞ்சப்புறம் சாப்பிடலாமே!" என்றான் மூர்த்தி.
"மணி பதினொண்ணாயிடும். அது வரைக்கும் பசி தாங்காது. அத்தோட முதல் பந்தி சாப்பாடுதான் ஜோரா யிருக்கும். எப்பவும் பந்திக்கு முந்திக்கணும்; தெரிஞ்சுக்கோ" என்றான் கிட்டா.
இருவரும் பந்தியில் போய் ஒரு மூலையாக உட்கார்ந்து கொண்டார்கள்.
"உங்க மாமாவிடம் என்னை அறிமுகம் பண்ணி வைக்கிறதாச் சொன்னயே!" என்றான் மூர்த்தி.
"ஆகட்டும், முகூர்த்தம் முடிஞ்சதும் கொஞ்சம் ஓய்வா இருப்பார். சமயம் பார்த்துப் பண்ணி வைக்கறேன்" என்று பச்சடியை விரலால் ருசி பார்த்தான் கிட்டா.
"பரிசேஷணம் பண்ணாம சாப்டறது தப்பு இல்லையா?”
"இது ஆபீஸ்கரராள் பந்தி ! இங்க வைதிகம் பார்க்க வேணாம்" என்றான் கிட்டா,
"எனக்கு மறுபடியும் வேத அத்தியயனம் பண்ணணும்னு கொள்ளை ஆசையா இருக்கு !"
"நீதான் வரமாட்டங்கறயே ! என்னைத் தேட வேணாம்னு கனபாடிகளுக்குக் கடுதாசி வேற எழுதிப் போட்டுட்டே ! உன் லெட்டரைப் படிச்சுட்டு அவர் எப்படி தேம்பித் தேம்பி அழுதார் தெரியுமா?"
"வேற எங்கயாவது பாடசாலை இருந்தா சேர்ந்து படிக்கலாம்."
"இந்த ஊர்லயே ஒரு பாடசாலை இருக்கு ! எங்க மாமாதான் அதுக்கு போஷகர். என்கிட்ட ரொம்ப அபிமானம் அவருக்கு. கவலைப்படாதே! நான் சொன்னா நாளைக்கே சேர்த்துடுவார். நீ தான் ஒரு தீர்மானத்துக்கும் வரமாட்டேங்கறயே ! சஞ்சலப்படறயே ! க்ஷண சித்தம் க்ஷணபித்தமா இருக்கயே! இன்னைக்கு வேதங்கறேஒ நாளைக்கு வேணாங்கறே ! முதல்ல மணசை திடப்படுத்திக்கோ…. இன்னொரு ஜாங்கிரி சாப்பிடறயா? எப்படி இருக்கு பார் ரோஜாப்பூ மாதிரி"
"எங்கப்பா கடுதாசி எழுதியிருக்கார்…"
"என்ன எழுதியிருக்கார்?"
" ‘அம்மா சங்கிலியைக் கழுத்தைவிட்டு எடுக்காதே. வேதத்தைப் பாதில நிறுத்தாதே ! கனபாடிகள் பேச்சைத் தட்டாதே’ன்னு முக்கியமா மூணு விஷயம் எழுதியிருக்கார்."
"வேதத்தை விட்டுட்டே! கனபாடிகள் பேச்சைத் தட்டிட்டே! ரெண்டு விஷயம் போச்சு. இன்னும் ஒண்ணுதான் பாக்கி. கழுத்துச் சங்கிலியை விட்டு வெச்சிருக்கே!"
"இப்ப அதையும் வித்துடலாம்னுதான் கடைத் தெருவுக்குப் போயிண்டிருந்தேன். நடு வழியில உன்னைப் பார்த்தேன்…"
"சந்தியாவந்தனம் ஒழுங்காப் பண்றயா? தினம் ஒரு ஆவ்ருத்தியாவது வேதம் சொல்றயா?"
"சத்திரத்துக்குப் பக்கத்துலயே புது ஆறு ஒடறது ! காவேரித் தண்ணிதான். ஸ்நானத்துக்கு அங்க போயிடுவேன். ஜபதபம் எல்லாம் ஆனந்தா லாட்ஜ்ல. வைதிகாளுக்கு ஏத்த மாதிரி வசதியான இடம். மனஸ்லதான் நிம்மதி இல்லே."
"எங்க தங்கியிருக்கே?"
"சத்திரத்துல. என்னை வெள்ளத்துலேந்து காப்பாத்தினாளே, அந்தப் பெண்ணோட!"
"அந்தக் கழைக்கூத்தாடிப் பெண்ணோடயா?" பாயசத்திலிருந்த முந்திரியை விரலால் நெருடினான் கிட்டா.
“ஆமாம்; அவளைப் பார்த்து நன்றி சொல்லிட்டுப் பேசலாம்னுதான் இங்க வந்தேன். குறள் படிச்சுட்டா மட்டும் போதுமா? நன்றி உணர்வை மனஸ்லயே வச்சிண்டிருக்கக் கூடாது. வெளிப்படையா வாய்விட்டுச் சொல்லனும், சமயம் வரப்போ காரியத்துலயும் காட்டணும். இங்க வந்தப்புறம், அவளோட பழகினப்புறம் அவளை ரொம்பப் பிடிச்சுப் போச்சு, அவளும் ரொம்பப் பிரியமா இருக்கா !"

"ம்… ஆசாரம் கெடாம இருந்தா சரி, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப்போற?"
"அதான் தெரியலே. ஒரே குழப்பமா இருக்கு, குடுமியை எடுத்துடச் சொல்றா. எனக்குதான் இஷ்டமில்லே. தட்டிக் கழிச்சுண்டே இருக்கேன். வேதத்தைப் பாதியில விட்டுடவும் மனசு வரலே. அதைத் தொடர்ந்து படிக்கணும்னு ஒரு வேகமே வந்திருக்கு. இன்னைக்கு அப்பா கடுதாசியைப் படிச்சப்புறம் அந்த வேகம் ஒரு வெறியாவே மாறியிருக்கு."
"அவ பேர் என்ன சொன்னே?"
"மஞ்சு… ரொம்ப நல்ல பெண். என்மீது உசிரையே வச்சிருக்கா. எனக்குத்தான் இந்தக் கூத்தாடி வாழ்க்கை பிடிக்கலே. எந்த நேரமும் மனசு ‘வேதம் வேதம்’னு அடிச்சுக்கிறது. தாயைப் பிரிஞ்ச கன்னுக்குட்டி மாதிரி தவிச்சுண்டிருக்கேன். தினமும் ராத்திரி வேளைல சுவாமி வீதிவலம் போறப்போ பிராமணாள் கூட்டமா கணீர்ணு வேதம் சொல்லிண்டு போறதைப் பாக்கறப்போ மனசு கிடந்து அடிச்சுக்கிறது. ஐயோ! இந்த உத்தமமான வேதத்தை விட்டுட்டு அர்த்தமில்லாத அசட்டு வாழ்க்கை நடத்தறமேன்னு எனக்கு நானே ஏங்கிப் போறேன். ‘சீக்கிரமே உன்னைப் பிரிஞ்சு வேதம் படிக்கப் போறேன்’னு ஒருநாள் மஞ்சுவிடமே சொன்னேன். பாவம், அவ அழுதுட்டா. அன்னிலேந்து உலகமே அஸ்தமிச்ச மாதிரி, பிரமை பிடிச்ச மாதிரி மனசு ஒடிஞ்சு போயிருக்கா! அவளைப் பார்த்தா ரொம்பப் பரிதாபமா இருக்கு. கிட்டா ! அவளுக்கு எப்படி சமாதானம் சொல்றதுன்னே தெரியலே."

கையலம்பிக் கொண்டு இருவரும் வாசல் பந்தலுக்கு வந்தார்கள். சூரிய ஒளி பந்தல் துவாரங்களில் புகுந்து தரையில் வட்டம் வட்டமாய் டாலர்கள் வீசியிருந்தன ! பெஞ்சுமீது வெள்ளித் தட்டு நிறைய வெற்றிலையும் அசோகா பாக்கும், சந்தனமும் வைத்திருந்தார்கள்.
தற்செயலாய் மாமா அங்கே வந்தார்.
"யாருடா கிட்டா இந்தப் பையன்? விபூதியும் குடுமியுமா தேஜஸாயிருக்கானே!" என்று கேட்டார்.
"என்னோட வேதம் படிச்சிண்டிருந்தான் மாமா! மூர்த்தின்னு பேரு… இவனைப் பத்தி அப்புறம் விவரமாப் பேசணும். உங்களால ஒரு காரியம் ஆகணும்" என்றான்.

"அப்டியா? சாப்டாச்சா ! ரெண்டு பேரும் வெத்தலை போட்டுக்குங்க, கும்போணம் கொடிக்கா வெத்தலை!" என்றார் மாமா.
"பிரம்மசாரிகள் வெத்தலை போடலாமா, மாமா?"
"பிரம்மசாரிகள் கல்யாணமே பண்ணிக்கிறா ! ‘வெத்தலை’ போடறது தப்பா?" என்று ஒரு ஜோக் அடித்தார் மாமா!
"நான் சொல்லலே, மாமா ரொம்பத் தமாஷாப் பேசுவார்னு!" என்றான் கிட்டா.
தவில் ஓசை காதைப் பிளந்ததால் அவர்கள் சம்பாஷணை தடைப்பட்டது.
முர்த்தி வெளியே புறப்பட ஆயத்தமானான்.
"எங்க அதுக்குள்ள கிளம்பிட்டே?"
"சிவகங்கா கார்டன் பக்கத்துல வித்தை நடக்கறது. இன்னைக்கு மஞ்சு புது ‘ஐட்டம்’ பண்ணப்போறா; நான் போய்ப் பார்த்துட்டு வந்துடறேன்" என்றான் மூர்த்தி.
"நாலு மணிக்குள்ள வந்துடு, டிபன் காசி அல்வா, மெதுபக்கடா!..." என்றான் கிட்டா.
"ஞாபகம் வெச்சுக்கோ. மாமாவிடம் என்னைப்பத்தி சொல்றதுக்கு மறந்துடப் போறே" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் மூர்த்தி.
வெய்யில் கொளுத்தி எடுத்தது. தெருப் புழுதியில் கால் பொரிந்தது, மூர்த்தி தெரு ஓரமாக தாண்டிதாண்டி நிழலுக்குத் தாவினான்.
"நாலு நாளைக்குச் சாப்பாட்டுக்குக் கவலையில்லை அம்மா சங்கிலி தப்பியது" என்று மனதுக்குள் மகிழ்ந்து கொண்டான்.
கண் முன் பாகீரதியின் நிலவு முகம் தெரிந்தது. அந்த மூன்று நோட்டுகளும் சட்டைப்பையில் இருக்கின்றனவா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டான். பாகீரதியின் முன் யோசனையையும் சாமர்த்தியத்தையும் வியந்தான்.
அந்தப் பூவுக்குக் கீழ் அவள் எழுதியிருந்த வாசகம் அவன் காதுகளில் ஏதேதோ ரகசியங்கள் பேசியது. "இவளுக்கு என் மீது எத்தனை அக்கறை? பாவம் ! தான் கெட்டதோடு என் பிரம்மசரியத்தையும் கெடுத்து விட்டாளே, அசட்டுப்பெண் !" என்று பச்சாத்தாபப்பட்டான். அந்தக்கசப்பும் இனிப்பும் கலந்த உணர்வில் முகம் சுளித்தான்.

சிவகங்கா தோட்டம் முச்சக்தியை அடைக்தபோது அங்கு யாரையுமே காணவில்லை. ஒரு நாய் மட்டும் நாக்கை நீட்டியபடி படுத்திருந்தது. போலீஸ்காரர் ஒருவர் நடைபாதைக் கடையில் இளநீர் குடித்துக் கொண்டிருக்தார். மூர்த்தி அவரை நெருங்கி, "இங்கே கழைக்கூத்தாடிங்க யாராவது வந்தாங்களா?" என்று கேட்டான் .
"வந்தாங்களே! வித்தை கூட பண்ணாங்க. பாதில அந்தப் பொண்ணு வயித்துல கத்தி பாஞ்சுட்டுது. ரத்தமாவது ரத்தம், வெள்ளமாக் கொட்டிடுச்சு! பாவம், மயக்கமாயிட்டா. இப்பத்தான் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போறாங்க."
"ஐயோ, மஞ்சு" என்று அலறிவிட்டான் மூர்த்தி.
"அத பாருங்க ரத்தம் புழுதில உறைஞ்சு கிடக்கு!"
”எந்த ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனாங்க, தெரியுமா?"
"பெரிய ஆஸ்பத்திரி"
அடுத்த கணம் மூர்த்தி பெரிய ஆஸ்பத்திரியை நோக்கி ஓடினான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
வேத வித்து - 14.



வெயிலின் உக்கிரம் உடம்பெல்லாம் வியர்க்க, தெருப் புழுதி கால்களை நெருப்பாய்ச் சுட ‘மஞ்சுவுக்கு என்ன ஆயிற்றோ?’ என்ற கவலையில் ஒரு ஆவேசத்தோடு ஓடினான் மூர்த்தி. கால்கள் கொப்பளித்து நடக்க முடியாமல் தத்தளித்த போது வைதிக சாஸ்திரி ஒருவர் சைக்கிளில் வந்து நின்றார். சாதுவாய்,ஒல்லியாய், ருத்திராட்சமாலை அணிந்திருந்தார்.
"தம்பி! எங்க போயிண்டிருக்கே, இந்த கொளுத்தற வெய்யில்ல? கல்யாண வீட்ல பார்த்தனே உன்னை !" என்றார்.
"பெரிய ஆஸ்பத்திரிக்குப் போறேன். அங்க ஒருத்தரைப் பார்க்கணும்" என்றான் மூர்த்தி.
“ஏறிக்கோ பின்னால. நான் கொண்டு விட்டுடறேன்" என்றார்.
மூர்த்தி தயங்கியபடி "வேணாம், பெரியவாளுக்கு சிரமம் !" என்றான்.
"பரவாயில்ல, ஏறிக்கோ."
ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டார்.
"உங்க உதவியை மறக்க மாட்டேன்" என்று கூறி நன்றியோடு நமஸ்கரித்தான்.
ஆஸ்பத்திரி வராந்தா பெஞ்ச்சில் மஞ்சுவின் தகப்பன் கவலையே உருவாக உட்கார்ந்திருந்தான். மூர்த்தியைக் கண்டதும் துக்கம் பீறிட அழ ஆரம்பித்து விட்டான்.
"அழாதீங்க. மஞ்சு எப்படி இருக்கா?"
"என்னை இங்கயே உட்காரச் சொல்லிட்டு உள்ளே தூக்கிட்டு போனாங்க. ரொம்ப நேரமாச்சு. ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறாங்க."
"இங்கயே இருங்க. நான் போய்ப் பார்த்துட்டு வரேன்" என்று ஓடினான்.
எமர்ஜன்ஸி வார்டுக்குப் போய் கட்டில் கட்டிலாக மஞ்சுவைத் தேடினான்.
குறுக்கே வந்த நர்ஸ் ஒருத்தி "யாரைத் தேடுது தம்பி? “ என்று கேட்டாள்.
"வயத்துலே கத்தி பாஞ்சுட்டுதே…"
“ஓ, அந்தக் கேஸா? ஆபரேஷன் தியேட்டர்ல இருக்குது. தையல் போட்டுக்-கிட்டிருக்காங்க, கத்தி ஆழமாப் பாஞ்சிருக்கு. கொஞ்ச நேரத்துல ஸ்ட்ரெச்சர்ல கொண்டு வருவாங்க… வெய்ட் பண்ணு."
"உயிருக்கு ஆபத்து இல்லையே? பிழைச்சுடுவளா?"
"பெரிய டாக்டர் வருவார். கேளு….
காத்திருந்த சில நிமிடங்கள் சில யுகங்களாய் நீண்டன.
கடைசியில், மஞ்சுவை ஸ்ட்ரெச்சரில் தூக்கி வந்து ஏழாம் நம்பர் கட்டிலில் கிடத்தினார்கள்.
அவள் கண்களை மூடி மயக்க நிலையில் இருந்தாள்.
டாக்டர்கள் மூன்று பேர் பின் தொடர்ந்து வந்தார்கள்.
"பயமில்லையே டாக்டர் !" என்று பெரிய டாக்டரை அணுகிக் கேட்டான் மூர்த்தி.
"நிறைய ரத்தம் சேதாரமாயிருக்கு. ஸீரியஸ் கேஸ்தான். நீ யார்?" என்று கேட்டுவிட்டு, ‘உனக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்?’ என்பது போல் பார்த்தார்.
"அவளுக்குத் தெரிஞ்சவன், நான் ரத்தம் தரலாமா?!" என்று கேட்டான்.
மூர்த்தியின் ரத்தத்தைப் பரிசோதித்தார்கள். பொருந்துகிறது என்று தெரிந்ததும் ஏராளமான ரத்தத்தை அவனிடம் உறிஞ்சிக்கொண்டார்கள்.
ஆறுமணி வரை காத்திருந்து மஞ்சு கண் விழித்துப் பார்த்த பிறகே மூர்த்தி கலியாண வீட்டுக்குத் திரும்பினான்,
இருட்டாகிவிடவே கலியாண வீட்டுப் பந்தலில் காஸ்லைட் எரிந்து கொண்டிருந்தது. உடலும் உள்ளமும் சோர்ந்து, கண்கள் சிவந்து வாடிய முகத்துடன் காணப்பட்டான்.
அவனைப் பார்த்ததும் --
"ஏதோ நடந்திருக்கிறது" என்பதை ஊகித்துக்கொண்ட கிட்டா, "என்ன ஆச்சு மூர்த்தி ! ஏன் இவ்ளோ லேட்? மூணு மணிக்கே வந்துடுவேன்னு பார்த்தேன். உன் விஷயமா மாமாட்ட கூடப் பேசி வெச்சிருக்கேன். அவரும் "சரி வரட்டும், முகூர்த்த நாளாயிருக்கு. இன்னைக்கே சேர்த்துடலாம்னு சொல்லி பாடசாலை கனபாடிகளைக் கூட இங்க வரச் சொல்லியிருந்தார். கனபாடிகள் இத்தனை நேரம் உனக்காகக் காத்துண்டிருந்தார்" என்றான் கிட்டா.
"மாமா எங்க போயிருக்கார்?"
"மாடில சீட்டாடிண்டிருக்கார்."
"மஞ்சுக்கு வயத்துல கத்தி பாஞ்சு ஆஸ்பத்திரில படுத்திண்டிருக்கா. இத்தனை நேரமும் அங்கதான் இருந்துட்டு வரேன். ‘ரத்தம் கொடுத்தா மஞ்சுவைப் பிழைக்க வெக்கலாம்’னு பெரிய டாக்டர் சொன்னார். என் ரத்தம் பொருத்தமாயிருந்தது. கொடுத்துட்டு ஆறு மணி வரைக்கும் அங்கயே உட்கார்ந்திருந்தேன். அப்புறம்தான் கண் முழிச்சுப் பார்த்தா, என்னைக் கண்டதும் விக்கி விக்கி அழ ஆரம்பிச்சுட்டா. ‘கவலைப்படாதே, நான் கவனிச்சுக்கறேன்’னு ஆறுதல் சொல்லிட்டு அவ அப்பாவையும் அங்கயே இருக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன். பாவம், ரொம்பப் பரிதாபமாயிருக்குடா அவ நிலமை. நினைச்சுப் பார்க்கவே கஷ்டமாயிருக்கு!"
"உயிருக்கு ஒண்ணும் பயமில்லையே? பிழைச்சுடுவாளோன்னோ!"
"பயமில்லேன்னுதான் டாக்டர் சொல்றார். இன்னும் நிறைய ரத்தம் செலுத்தணுமாம். நாலு நாளைக்கு ஆஸ்பத்திரிலயே தான் இருக்கணுமாம்."
"நீ என்ன பண்ணப் போறே?"
"அப்பப்ப போய்ப் பார்க்கணும். என் உயிரைக் காப்பாத்தினவளாச்சே! நன்றிக்கடன் பட்டிருக்கனே! அந்தக் கடனைத் தீக்கறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுது. என் ரத்தத்தைக் கொடுத்து அவளைப் பிழைக்க வெச்சுட்டேன். அந்த வகையில ரொம்ப சந்தோஷமா திருப்தியாயிருக்கு…"
"ஏன் ஒரு மாதிரி விந்தி நடக்கறே?"
"மத்தியானம் கொதிக்கிற வெயில்லே நடந்தப்போ கால் கொப்புளிச்சுப் போச்சு…"
"மாமா ஏதாவது ‘ஆயிண்ட்மெண்ட்‘ வெச்சிருப்பார், வா, கேட்டுப் பார்க்கலாம்."
மாமாவிடம் போனார்கள். அவர் சீட்டாட்டத்தில் மும்மரமாக இருந்தார்.
மரியாதையாக மூர்த்தி கொஞ்சம் தள்ளியே நின்றான்.
"மூர்த்தி வந்துட்டான். வெயில்ல செருப்பில்லாம நடந்திருக்கான், கால் கொப்புளிச்சட்டுதாம்" என்றான் கிட்டா.
“செருப்பு போட்டுண்டு நடக்கறதுக்கு என்ன?" என்று மூர்த்தியைப் பார்த்தார் மாமா.
"வசதி இல்லையே !" என்றான் கிட்டா.
"அதுக்கென்னடா வசதி ! கலியாணத்துக்கு வந்தவா கழட்டிப் போட்ட செருப்பிலே எதையாவது மாட்டிண்டு போக வேண்டியதுதானே!" என்றார்.
"ரொம்ப எரிச்சலாயிருக்காம். ஏதாவது ஆயிண்ட் மெண்ட் இருக்கா, மாமா?"
"அதெல்லாம் ஒண்ணும் வேணாண்டா, துரங்கப் போறதுக்கு முன்னால தேங்கா எண்ணெயைத் தடவிண்டு தூங்கச் சொல்லு, கார்த்தால சரியாப்போயிடும். இத்தனை நேரமா எங்க போயிருந்தான்?"
"ஆஸ்பத்திரியில யாரோ தெரிஞ்சவாளைப் பாக்கப் போயிருக்கான். போன இடத்துல லேட்டாயிடுத்தாம்!"
"யார் அது? சரி, அப்புறம் பேசிக்குவோம். முதல்ல அவனை கீழே அழைச்சுண்டுபோ, ஏதாவது சாப்பிடச் சொல்லு, களைச்சாப்ல தெரியறான், பாவம்"
"என்ன சாப்பிட்றே மூர்த்தி?" என்று கேட்டான் கிட்டா.
"ஸ்நானம் பண்ணி சந்தியா வந்தனத்தை முடிக்காம பச்சைத் தண்ணிகூடக் குடிக்கமாட்டேன். இதோ வந்துடறேன் என்று ஆற்றங்கரைக்குப் புறப்பட்டான். அங்கே போய், படிக்கட்டில் உட்கார்ந்து தண்ணீரில் கால்களை நீட்டித் துழாவினான். எரிச்சலுக்கு இதமாக இருந்தது. மீன்கள் குத்தவே கால்களை எடுத்துக் கொண்டான்.
பிறகு, ஸ்நானம் செய்து, ஜபம் முடித்து மஞ்சுவுக்காக மனமுருகிப் பிரார்த்தனை செய்தபின் கலியாண வீட்டுக்குத் திரும்பினான்.

இரண்டு நாளைக்கெல்லாம் மஞ்சுவும் ஆஸ்பத்திரியிலிருந்து வந்து விட்டாள். ’ஒரு மாத காலம் படுக்கையிலேயே இருக்க வேண்டும்’ என்று ஆஸ்பத்திரியில் நிபந்தனை போட்டிருந்தார்கள்.
மூர்த்திதான் குதிரை வண்டி ஏற்பாடு செய்து, புல் மெத்தைபோட்டு, மஞ்சுவைப் பழையபடி சத்திரத்தில் கொண்டு சேர்த்தான்.
"தினம் என்னை வந்து பார்ப்பியா? மறந்துடமாட்டயே?" என்று துக்கம் பொங்கக் கேட்டாள் மஞ்சு.
"எனக்கு உயிர் தந்தவளாச்சே நீ! உன்னை மறப்பனா?" என்றான் மூர்த்தி.

மாமா சிபாரிசின் பேரில் மூர்த்தியைத் ‘தஞ்சாவூர் ஸப்தரிஷி வேத பாடசாலை’யில் சேர்த்துவிட்டு கலியாணம் முடிந்த மறுநாளே கிட்டா ஊருக்குப் புறப்பட்டு விட்டான்.
"மாமா, முர்த்தியை கவனிச்சுக்குங்க. ரொம்ப நல்லவன்" என்றான் கிட்டா.
"அவனைப் பத்தி எனக்கு நிறையவே தெரியும்டா. நீ கவலைப்படாம போயிட்டு வா" என்றார் மாமா.
கிட்டாவுக்கு ஆச்சரியமாயிருந்தது. ‘மாமாவுக்கு நிறையவே தெரியுமாமே! எப்படி?’ என்று யோசித்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
வேத வித்து - 15.


மூர்த்தியைப் பிரிந்த சோகத்தில் சங்கர கனபாடிகள் அமைதி இழந்து தூக்கமிழந்து அடிக்கடி படுக்கையில் உட்கார்ந்து ‘மூர்த்தி, மூர்த்தி’ என்று துயரம் தோய்ந்த குரலில் முனகிக் கொண்டிருந்தார்.
துயரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த தவிப்பில், தள்ளாமை மேலிட்டு, தளர்ந்து, உலர்ந்த திராட்சை போன்ற சுருக்கங்களுடன் இளைத்துப் போனார்.
அன்று அவர் ராமாயண பாராயணம் செய்து கொண்டிருந்தபோது, ராமனின் பிரிவாற்றாமையால் வாடிக்கொண்டிருந்த தசரதனின் புத்திர சோகத்தை வால்மீகி வர்ணித்திருந்த வார்த்தைகள் கண்ணீர் உகுக்கச் செய்தன, மேலும் படிக்க முடியாமல் கண்ணீர் திரையிட்டபோது விம்மி வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டார்.
இச்சமயம் "அதோ, கிட்டா வந்துட்டானே!" என்ற கமலாவின் உற்சாகக் குரல் கேட்டதும், கனபாடிகள் கிட்டா வரும் திசையை நோக்கி "வா கிட்டா, எல்லாரும் க்ஷேமம்தானே? மூர்த்தியைப் பார்த்தயா?" என்று ஆவல் பொங்கக் கேட்டார்.
"போன முதல் நாளே பார்த்துட்டேன். மாப்பிள்ளை காசி யாத்திரை போறப்ப அவனே குறுக்கே வந்து சேர்ந்தான் ! அப்புறம் நாலு நாளும் என்னோடதான் இருந்தான்.
‘வேதத்தைப் பாதில விட்டுட்டு நடுத்தெருவில நிக்கறேண்டா, கிட்டு ! திடீர்னு விளக்கணைஞ்சு இருட்டில தவிக்கற மாதிரி இருக்கு. நீதான் உதவி பண்ணணும்’னு கேட்டான். எங்க மாமா கிட்டப்பாவிடம் அழைச்சுண்டு போய் அவனைப்பத்தி சொன்னப்போ ‘அதுக்கென்னடா! நம்ம பாட சாலைலயே சேர்த்துட்டாப் போச்சு. அச்சுத கனபாடிகள் கவனிச்சுக்குவார். கவலைப்படாதே’ன்னு ரொம்ப சுலபமா பிரச்னையைத் தீர்த்துட்டார். மூர்த்தியைப் பத்தி நிறையவே தெரியும்னு வேற சொன்னார்.”
"அப்படியா ! அச்சுத கனபாடிகள் பாடசாலைல சேர்ந்திருக்கானா? ரொம்ப சந்தோஷம் அவர் சாஸ்திர சிரோமணி. பிரகஸ்பதின்னு சொல்லுவா."
மகிழ்ச்சியில் திளைத்த கனபாடிகள் கமலாவை அழைத்து "கேட்டயா கமலா ! மூர்த்தி தஞ்சாவூர் வேத பாடசாலைல சேர்ந்திருக்கானாம். என் வயிற்றில் பால் வார்த்த மாதிரி இருக்கு ! பாகீரதிக்குத் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவா ! அவளைக் கூப்பிடு! இங்கே இன்னைக்கு ஸ்வாமி நைவேத்தியத்துக்கு பால் பாயசம் பண்ணச் சொல்லணும் ! “ என்று மகிழ்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காடினார்.
"மூர்த்தியானா உங்ககிட்ட சொல்லிக்காமப் போயிட்டான் ! நீங்களோ அவன் மேல உயிரையே வெச்சிருக்கேள்!" என்றான் கிட்டா
” ’இவனுக்கு நீங்கதான் மாதா பிதா குரு தெய்வம் எல்லாம்’ என்று சொல்லி மூர்த்தியை அவன் தகப்பனார் என்னிடம் ஒப்படைச்சுட்டுப் போனார். மூர்த்தி காணாமப் போனதும் அவருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம தவிச்சுப் போனேன். தினம் தினம் பகவானைப் பிரார்த்தனை பண்ணிண்டிருக்தேன். என் பிரார்த்தனை வீண்போகலே, ஸ்வாமி செவி சாய்ச்சுட்டார்!"
பாகீரதி, முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இன்றி சாதுவாக வந்து நின்றாள்.
"ஏண்டா, மூர்த்தியை இங்க அழைச்சுண்டு வரதுதானே? இங்க எல்லாரும் அவனைப் பாக்கறதுக்கு ஏங்கிப் போயிருக்கான்னு சொல்றதுதானே!" என்று பாகீரதியை ஒரக் கண்ணால் பார்த்துக்கொண்டே கிட்டாவைக் கேட்டாள் கமலா.
"சொல்லாம இருப்பனா ! புதுக் கன்னுக்குட்டிக்கு உன் பேரைத்தாண்டா வெச்சிருக்கோம். பாகீரதிதான் வைக்கச் சொன்னான்னுகூடச் சொல்லிப் பார்த்தேன். ஆனா அவன் எதுவுமே பேசலே, இடிச்ச புளியாட்டம் இருந்துட்டான்" என்றான் கிட்டா.
"அவன் எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் க்ஷேமமா இருந்தா சரி. நம்மையெல்லாம் மறந்தாலும் வேதத்தை மறக்காம இருக்கானே, அது போதும் எனக்கு !" என்று பரம திருப்தியோடு பேசினார் கனபாடிகள்.
"சும்மா சொல்லக் கூடாது. வேதத்துல அசைக்க முடியாத நம்பிக்கை வெச்சிருக்கான். பக்தின்னா கொஞ்ச நஞ்சமில்லே. உலகத்துலயே வேதம்தான் பெரிசுங்கற அளவுக்குப் பெரிய ஞானி மாதிரி பேசறான்" என்றான் கிட்டா.
"எனக்குத் தெரியும். மகா உத்தமமான பையன்டா அவன் ! ம்… ! ஏதோ ஒரு கெட்ட வேளை அவனை ஆட்டிப் படைக்கிறது. கிட்டா, நீ போய் சீக்கிரம் ஸ்நானத்தை முடிச்சுண்டு வா. நேரமாறது" என்று சொல்லி அனுப்பினார்.
தோட்டப்பக்கம் போன கிட்டாவை பாகீரதி வழியில் மடக்கி "மூர்த்தி என்னைப் பத்தி ஏதாவது சொன்னானா?" என்று குரலைத் தாழ்த்திக் கேட்டாள்.
"ஒண்ணும் சொல்லலை. பட்டுவேட்டியையும் புஸ்தகத்தையும் கொடுத்தேன். வாங்கிண்டான். அவ்வளவுதான்"
"யார் கொடுத்தான்னுகூடக் கேட்கலையா?"
” நானே சொல்லிட்டேன்"
"அதுக்கு என்ன சொன்னான்?"
"அதுக்கும் ஒண்ணும் சொல்லலை. முகத்தில ஒரு திருப்தி மட்டும் தெரிஞ்சுது!"
"என்னைப் பத்தி ஒரு வார்த்தைகூடப் பேசலையா!"
"பேசலையே!"
"அப்புறம்?."
"உள்ளே போயிட்டு கொஞ்ச நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்து பாக்கறேன். அந்த புஸ்தகத்துக்கு நீ போட்டிருந்த அட்டையைக் கிழிச்சுப் போட்டிருந்தான். ஏண்டா அட்டை போட்டா உனக்குப் பிடிக்காதோன்னு கேட்டேன். பதில் மழுப்பலா ஒரு சிரிப்பு அதோடு சரி!"
பாகீரதி முகம் பிரகாசமாயிற்று. "அம்மாடி அட்டையைப் பிரிச்சுப் பார்த்திருக்கான்" என்பதில் ஏற்பட்ட மகிழ்ச்சி அது.
"அவனுக்கு அட்டை போடறதும் பிடிக்காது; சட்டை போடறதும் பிடிக்காது" என்று கேலியாகச் சொல்லிச் சிரித்துக் கொண்டே போய் விட்டாள்.

மேல வீதி பங்காரு காமாட்சி அம்மன் கோயிலுக்குப் போய் கோபுரம் தரிசித்து பிரதட்சிணமாக நடந்து போனபோது ஆலயமணியின் ரீங்காரம் மூர்த்தியை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.
வெள்ளிக்கிழமை சந்தியாகால பூஜை நேரம். தேங்காய், புஷ்பம், கற்பூரத் தட்டுடன் சந்நிதியில் போய் நின்றான்.
"அர்ச்சனையா, தீபாராதனையா?" அர்ச்சகர் கேட்டார்.
"அர்ச்சனை!"
"பேர், நட்சத்திரம், கோத்ரம்?"
"அம்மன் பேருக்கே பண்ணிடுங்க."
அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை முடித்து கற்பூர ஹாரத்தி காட்டி தட்டுடன் மூர்த்தியிடம் வந்து நின்றார் குருக்கள்.
மஞ்சுவின் உடல்நிலை தேறி பழையபடி கழைக்கூத்து செய்யத் தொடங்கினால் சுவாமிக்கு அர்ச்சனை செய்வதாக மூர்த்தியின் பிரார்த்தனை,
கோயிலிலிருந்து சத்திரத்துக்குப் போகும் வழியில் ஒரு முழம் தஞ்சாவூர்க் கதம்பம் வாங்கிக் கொண்டான். ‘கதம்பம் என்றால் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்று அவனுக்குத் தெரியும்.
சத்திரத்து வாசலில் குதிரை வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. வண்டிக்குள் பாண்டு வாத்தியக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
வண்டி மீது ஒட்டப்பட்டிருந்த போஸ்ட்டர் ‘தஞ்சைக்கு கேரள சர்க்கஸ் விஜயம்’ என்று சொல்லிற்று,
சத்திரத்துக்குள் போனபோது அங்கே மஞ்சு யாரோ ஒரு கேரளாக்காரனுடன் பேசிக் கொண்டிருந்தாள். பார்வைக்கு சர்க்கஸ்காரன் போலிருந்தான்.
அழகாக, அரும்பு மீசையுடன் ஒரு நிர்வாகிக்குரிய மிடுக்குடன் காணப்பட்டான்.
மஞ்சுவின் திறமை பற்றி கேள்விப்பட்டு அவளைத் தன்னுடைய கம்பெனியில் சேர்த்துக் கொள்வதென்ற நோக்கத்தோடு வந்திருந்தான். தன் கம்பெனியிலுள்ள வசதிகள் பற்றியும் கட்டுப்பாடுகள் பற்றியும் மஞ்சு மயங்கிப் போகும் அளவுக்குப் பேசிக்கொண்டிருந்தான்.
"வெய்யில் மழையில் தெருத் தெருவாக மூட்டையைத் தூக்கிக்கொண்டு அலையறது ஒரு பொழைப்பா! சர்க்கஸ்ல சேர்ந்தா கெளரவமா வாழலாம். உங்கப்பாவுக்கு வயசாச்சு. உனக்கு ஒரு பாதுகாப்பான இடம் வேணாமா? உன்னாட்டம் நிறையப் பெண்கள் என் கம்பெனில வேலை செய்றாங்க. உனக்கு அங்க நல்ல எதிர்காலம் இருக்கு. யோசிச்சு முடிவு சொல்லு" என்று அவன் கூறிக் கொண்டிருந்தபோதுதான் மூர்த்தி கோயில் பிரசாதத்துடன் அங்கு போய்ச் சேர்ந்தான்.
"வா, மூர்த்தி நல்ல நேரத்துக்கு வந்தே ! தட்ல என்ன?" என்று கேட்டாள் மஞ்சு.
"காமாட்சியம்மன் கோயிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணி பிரசாதம் கொண்டு வந்திருக்கேன்."
பிரசாதத்தை அவளிடம் கொடுத்தான்.
"நல்ல சகுனம் ! சாமிப் பிரசாதம்கூட வந்திருக்கு !" என்றான் சர்க்கஸ்காரன்.
"இவர் சர்க்கஸ் கம்பெனிலிருந்து வந்திருக்கார். என்னை சர்க்கஸ்ல சேரச் சொல்றார்!" என்று மூர்த்தியின் முகத்தைப் பார்த்தாள் மஞ்சு,
“நீ என்ன சொன்னே?"
"நா ஒண்ணும் சொல்லலே. உன் அபிப்ராயத்தைச் சொல்" என்றாள்.
"உங்க அப்பாவும் நீயும் முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது, இதல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?"
மஞ்சு இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. மூர்த்தி அக்கறை காட்டாமல் பேசியது அவளுக்கு வருத்தமாயிருந்தது.
"எதுக்கும் நீங்க நாளைக்கு வாங்கய்யா, பேசிக்குவம்" என்று சர்க்கஸ் ஆசாமியிடம் சொல்லி அனுப்பிவிட்டாள்.
மூர்த்திக்கு அவனை அறியாமல் அந்த சர்க்கஸ்காரன்மீது ஒரு வெறுப்பு தோன்றியது. பொறாமையாகவும் இருந்தது.
"நேரமாச்சு, மஞ்சு ! போயிட்டு நாளைக்கு வந்து பாக்கறேன். பாடசாலைல காத்திண்டிருப்பா" என்று சொல்லிப் புறப்பட்டான் மூர்த்தி.
மஞ்சுவிடம் தனக்குள்ள உரிமை என்ன, உறவு என்ன என்பதை மூர்த்தியால் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள முடிய வில்லை. ஆயினும் மஞ்சு தன்னை விட்டு விலகிச் செல்வதுபோல் உணர்ந்தான்.
"மூர்த்தி ! நீதானே வேதம், வேதம்னு சொல்லிண்டு அவளை விட்டு விலகிப் போயிருக்கே? நன்னா யோசிச்சுப் பார்! அவளாகவா விலகிச் செல்கிறாள்! அவள் இதுவரை உன்னைத்தானே நம்பிக் கொண்டிருந்தாள். நீ வேத பாடசாலையில சேர்ந்தப்புறம் தானே அவள் நம்பிக்கை குறைய ஆரம்பிச்சிருக்கு? சர்க்கஸ்காரன் அவளுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகச் சொல்கிறான். பாதுகாப்பு இருக்கிறது என்று அழைக்கிறான். நீதான் அவள் கேள்விக்குச் சரியான பதில் சொல்லாமல் அந்த சர்க்கஸ்காரனைக் கண்டு பொறாமைப்படுகிறாய்? இப்ப சொல். விலகிப் போறது நீயா, அவளா?" என்று மூர்த்தியின் உள் மனம் கேட்டது.
‘உண்மைதான்; மஞ்சுவிடமிருந்து நான்தான் விலகி வந்திருக்கேன், வேதத்தின் மீதுள்ள பற்றுதல் காரணமா அவள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாம வந்திருக்கேன். இப்போது அவள் சர்க்கஸ் கம்பெனியில சேருவதற்கு சரியாக பதில் சொல்லாமல் அலட்சியமா வந்தது என் தப்புதான்’ என்றது இன்னொரு மனம்,
இந்த எண்ணங்கள் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்த, ஒரு முடிவுக்கும் வர முடியாமல் மேலும் சிந்தித்தவாறு சப்தரிஷி பாடசாலையை அடைந்தான்.
மூர்த்திக்காகக் காத்திருந்த அச்சுத கனபாடிகள் இவனைக் கண்டதும் "மூர்த்தி சாயந்தரம் வெள்ளிக்கடை கிட்டப்பா உன்னைத் தேடிண்டு வந்திருந்தார். நீ கோயிலுக்குப் போயிருப்பதாச் சொன்னேன். அவசரமா உன்னைப் பார்க்கணுமாம் !" என்றார்.

“அப்படி என்ன அவசரமாம்? யாராவது என்னைத் தேடிண்டு வந்திருப்பளோ? யார் வந்திருப்பா?" என்று யோசித்தான் மூர்த்தி.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
வேத வித்து - 16.


அப்பா, கமலா காஞ்சீபுரம் போறாளாம்!" என்று சொல்லிக் கொண்டே வந்தாள் பாகீரதி.
"ஏன்? என்ன அவசரமாம் அவளுக்கு?" என்று கேட்டார் கனபாடிகள்.
"வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆறதே! இத்தனை நாள் தங்கியிருந்ததே அதிசயம்!"
"வாஸ்தவம்தான் அவள் எங்க இப்போ?"
"அம்புலுவைக் குளிப்பாட்டப் போயிருக்கா. மத்தியானம் பஸ்ஸுக்கே போகப் போறாளாம்."
"கிட்டாவையும் காணலையே?"
"தோட்டத்துலேந்து கொஞ்சம் கத்தரிக்கா பறிச்சிண்டு வரச் சொன்னேன். கமலா போறப்போ கொடுத்தனுப்பலாம்னு. மழை இல்லாம தோட்டமே வறண்டு கிடக்கு."
“அத பார், அக்கூ பட்சி கத்தறது. அது கத்தினா மழை வரும்னு சொல்லுவா."
"அது தினம்தான் கத்தறது. ஆனா அந்த மழைக்குத்தான் காது கேட்கலை! இப்படியே காஞ்சுதானா பயிர் பச்சையெல்லாம் வாடவேண்டியதுதான். தாது வருஷத்துப் பஞ்சம்னு சொல்வாளே, அந்த மாதிரி ஆயிடுமோ, என்னவோ?" என்றாள் பாகீரதி.
"உலகத்துல அக்கிரமம் அதிகமாயிடுத்து. அதான்" என்றார் கனபாடிகள்,
கமலா வந்தாள்,
"காஞ்சீபுரம் போறயாமே? போயிட்டு வா. ஒன்பது பத்தரை ராகுகாலம், அதுக்கப்புறமா புறப்படு. துணைக்கு யாரு?" என்று கேட்டார் கனபாடிகள்.
"நொண்டி கிட்டா தான்…" என்றாள் கமலா.
“அங்கஹீனமானவாளை நொண்டி, கூனன், குருடன்னு சொல்லக் கூடாது. அவா மனசு கஷ்டப்படும். அது பாவமில்லையா? கிட்டாவுக்குச் சின்ன வயசுல இளம்பிள்ளை வாதம் வந்து கால் ஊனமாயிடுத்து, ஆனாலும், அவன் மாதிரி யாரால வேகமா நடக்க முடியும்?"
மூட்டை முடிச்சுகளைக் கொண்டு போய்த் திண்ணையில் வைத்துவிட்டு, சவாரி வண்டி அழைத்து வரப்போனான். கிட்டா.
பாகீரதி உள்ளே போயிருந்த சமயம் பார்த்து கமலா அப்பாவின் காதில் கிசுகிசுத்தாள்:
"அப்பா, நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். ஏதோ நடந்திருக்கு, ஆனா எதையும் தீர்மானிக்க முடியலை. அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதீங்க!"
பாகீரதி கொண்டு வந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்ட கமலா, "வரேன் பாகீரதி ! ஒரு மாசமா சேர்ந்து இருந்துட்டு இப்ப பிரியறதுக்கு கஷ்டமாயிருக்கு" என்று சொல்லும்போதே கமலாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
"பஸ்ஸுக்கு நேரமாச்சு, புறப்படு" என்று துரிதப்படுத்திய கிட்டா மூட்டைகளை வண்டியில் ஏற்றினான். பாடசாலைப் பிள்ளைகள் கும்பலாக வாசலுக்கு வந்து வழி அனுப்பி வைத்தார்கள். எல்லாருக்கும் கமலா காசு கொடுத்தாள்.
அவள் புறப்பட்டுப் போனதும் பாடசாலையே வெறிச்சோடி விட்டது.

கனபாடிகள் ஒரு சூன்யமான நிலையில் உள்ளே போகப் பிடிக்காமல் திண்ணையிலேயே சாய்ந்துகொண்டார்,
புழுக்கம் அதிகமாகியிருந்தது. எழுந்துபோய் ஆகாசத்தைப் பார்த்தார். வடமேற்கில் இருண்டிருந்த ‘கருமேகம்’ இப்போது முழுமையாய்க் கரைந்து போயிருந்தது, மரங்களில் சருகுகள் இங்கொன்று அங்கொன்றாய் உதிர்ந்து கொண்டிருந்தன. அக்கூ பட்சி மட்டும் பிடிவாதமாக இன்னமும் கத்திக் கொண்டிருந்தது.

இச்சமயம் ஏழெட்டு பிராம்மணர்கள் கூட்டமாக வந்து கனபாடிகளைப் பார்த்து கைகூப்பி வணங்கினார்கள்.
"இந்த பதைபதைக்கிற வெயில்ல எல்லாருமா எங்க இவ்வளவு தூரம் ?" என்று இழுத்தாற்போல் கேட்டார் கனபாடிகள்.
மழையே இல்லாம ஏரி குளமெல்லாம் வறண்டு போச்சு, பயிர் பச்சையெல்லாம் பாழாப் போயிடும் போல இருக்கு, ஆடு மாடெல்லாம் ஒவ்வொண்ணா செத்துண்டிருக்கு. நீங்கதான் காப்பாத்தணும்" என்றார்கள்.
”நான் என்ன பண்ண முடியும்?" என்று கேட்டார் கனபாடிகள்.
"உங்க வாயால விராடபர்வம் வாசிச்சா போதும் ! மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிடுமே!" என்றார்கள்.
"விராட பர்வம் யார் வாசிச்சாலும் மழை வரும் ! அந்தக் கதையின் மகிமை அப்படி" என்றார் கனபாடிகள்.
"இருக்கலாம். ஆனா உங்க மாதிரி யாகம் பண்ணவா, சாஸ்திரம் படிச்சவா, வேதம் ஒதினவா வாயால சொன்னா அதனுடைய மகிமையே தனி" என்றார்கள்,
"நீங்கள்ளாம் கொஞ்ச நாளைக்கு முன்னால எங்கிட்ட சாஸ்திர விளக்கம் கேட்க வந்தப்போ நான் சொன்ன தீர்ப்பு உங்களுக்குப் பிடிக்கல. அதுக்காக என் மேல கோபப்பட்டு என்னையே பாய்காட் பண்ணப் போறதாப் பேசிண்டேளாம். நான் சாஸ்திரம் படிச்சவன் வேதம் ஒதினவன் என்பதெல்லாம் உங்களுக்கு அப்பத் தெரியாமப் போச்சு. இப்ப மழை வேணுங்கறப்ப மட்டும் தெரியறது இல்லையா? தயவுபண்ணி என்னை மன்னிச்சடுங்க. என்னை பாய்காட் பண்றேன்னு சொன்ன உங்களை இப்ப நான் பாய்காட் பண்றேன். விராட பர்வம் வாசிக்கறதுக்கு வேற ஆளைப்பாருங்க. என்னால முடியாது" என்று கோபமாகச் சொல்லிவிட்டு எழுந்தார்.
"அப்படியா சொல்றேள்? முடிவான வார்த்தைதானா?" என்று கொஞ்சம் கோபமாகவே குரல் கொடுத்தார் ஒருவர்.
"அதான் சொல்லிட்டனே! நான் வாசிக்கப் போறதில்லை, முடிவாத்தான் சொல்றேன்."
"சரி, வாங்கய்யா போகலாம். அவர்தான் சொல்லிட்டாரே! அப்புறம் என்ன? அடுத்தாப்பல நாம செய்ய வேண்டியதைச் செஞ்சுக்குவம்" என்றார் இன்னொருவர்.
"வெய்யில் வேளையில வந்திருக்கீங்க. தாகத்துக்கு ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போங்க" என்றார் கனபாடிகள்.
"உங்க வீட்ல இனி பச்சைத் தண்ணிகூடக் குடிக்க மாட்டோம்; ஆமாம், நாங்க வரோம்" என்று அத்தனை பேரும் விறைப்பாகப் புறப்பட்டார்கள்.
"விராட பர்வம் வாசிக்கறதுக்கு மட்டும் நான் வேணுமோ? ஊரார்னா இந்த பிராம்மணாள் மட்டும்தான் ஊராரா? குடியானவாளெல்லாம் வரலையே ! அவாதானே பயிர் பண்றவா? அவாளும் சேர்ந்து வந்து கேட்டிருந்தா, நான் ஒத்துண்டிருப்பேன். எதுக்காக இந்த பிராம்மணாள் மட்டும் தனியா ஒதுங்கி வந்து கேட்கணும். இதல ஏதோ உள்நோக்கம் இருக்கு !" என்று சந்தேகப்பட்டார் கனபாடிகள்

அன்புள்ள அத்தைக்கு….
பின்கட்டுத் தாழ்வாரத்தில் அமர்ந்து பேனாவை உதறி கௌரி அத்தைக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள் பாகீரதி.
திடீரென்று பாடசாலைப் பிள்ளைகள் "அதோ மூர்த்தி வந்துட்டான்" என்று உற்சாகம் பொங்கக் கூவினார்கள்
"யாருடா? நம்ப மூர்த்தியா" என்று ஆவலோடு கேட்டுக் கொண்டே வாசல் பக்கம் பார்த்தார் கனபாடிகள்.
மூர்த்தியும், அவனோடு கூனல் விழுந்த ஆசாமி ஒருவரும் உள்ளே வராமல் வாசலிலேயே தயங்கித் தயங்கி நின்றனர்.
"உள்ளே வாடா! வழி தெரிஞ்சுதா உனக்கு ! தஞ்சாவூர்லேந்தா வறே? இவர் யாரு?" என்று எதிர்பாராத மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார் கனபாடிகள்.
வெட்கமும், அச்சமும், குற்ற உணர்வும் மூர்த்தியைத் தலைகுணிய வைத்தன.
சாஷ்டாங்கமாய் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து, "என்னை மன்னிச்சுடுங்கோ! உங்ககிட்ட சொல்லிக்காமப் போனது மகர பெரிய தப்பு. உங்க வாயாலே மன்னிச்சேன்னு சொன்னாத்தான் என் மனசு ஆறும்" என்றான் மூர்த்தி.
"எனக்குத் தெரியும், நீ எந்தத் தப்பும் பண்ண மாட்டேன்னு. ஏன் சொல்லிக்காமப் போனே? எதுக்கு இங்க மறுபடியும் வரமாட்டேங்கறே? “ என்றெல்லாம் உன்னை நான் கேட்கப் போறதில்லே. உன் பேரில் எனக்கு வருத்தமோ கோபமோ கிடையாது. உன் இஷ்டப்படியே நீ தஞ்சாவூர்லயே படி, எங்க இருந்தாலும் வேதத்தை மறக்காதே. அவ்வளவுதான் நான் வேண்டுவது" என்றார்.
“வெள்ளிக்கடை கிட்டப்பா இந்த லெட்டரை உங்கட்ட கொடுக்கச் சொன்னார்" என்று கவர் ஒன்றைக் கொடுத்தான்.
"இவர் யார்னு சொல்லலையே!"
"சப்தரிஷி பாடசாலைல சமையல் வேலை செஞ்சிண்டிருந்தார். இங்க சமையலுக்கு ஆள் வேணும்னு நீங்க கேட்டிருக்தேளாம். கிட்டப்பாதான் இவரை என்னோடு கூட்டி அனுப்பிச்சார். இவரைக் கொண்டுவிட்டுட்டு கனபாடிகளிடம் பேசிட்டுவான்னு சொல்லி அனுப்பிச்சார், ஆனந்த ராவ்னு பேர்."
"ராவ்ஜியா! என்ன வயசு?"என்று கேட்டார் கனபாடிகள்
"அறுபது வயசு முடியப் போறது" என்றார் ராவ்ஜி
”நன்னா சமைப்பேளா?"
"கிட்டப்பாவையே கேட்டுப் பாருங்க; நான் ரசம் பண்ணா டம்ளர்ல வாங்கிக் குடிச்சுட்டு உம்ம பேர் ஆனந்த ராவ் இல்லே, பிரம்மானந்த ராவ்னு சொல்லுவார்!" என்றார் ராவ்ஜி.
"கிட்டப்பா, எப்பவுமே தமாஷாத்தான் பேசுவார். மூர்த்தி! இவரை உள்ளே அழைச்சிண்டு போ, பாகீரதியைப் போய்ப் பார் முதல்ல" என்றார். அவர்களிருவரும் உள்ளே போனதும் கவரைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார்.
கனபாடிகள் ”பாகீரதியைப் போய்ப் பார்" என்று சொன்னதும் மூர்த்தி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டான். ‘அவள் முகத்தில் எப்படி விழிப்பது? என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது?’ என்று யோசித்தபடியே பின் பக்கம் போனபோது, அங்கே சொர்ண விக்கிரகம் போல் நின்று கொண்டிருந்த பாகீரதி மூர்த்தியைக் கண்டதும் மகிழ்ச்சிக் குரலில் "வா, மூர்த்தி !செளக்கியமா? கிட்டா உன்னைப் பத்தி எல்லாம் சொன்னான்" என்றாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
வேத வித்து - 17.



மூர்த்தியைக் கண்டதும் பாகீரதிக்கு ஏதேதோ பேச வேண்டும்போலிருந்தது. பழைய நினைவுகளில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் மேலிட்டுப் பேச முடியாமல் தடுமாறினாள்.
"இவர் தஞ்சாவூர் வேதபாடசாலைல சமைச்சிண்டிருந்தார். ஆனந்தராவ்னு பேர். ராவ்ஜினு கூப்பிடுவா. ராயர்னும் கூப்பிடுவா. சமையலுக்கு ஆள் வேணும்னு அப்பா எப்பவோ கேட்டிருந்தாராம். கிட்டப்பா இவருக்குத் துணையாக என்னை அனுப்பி லெட்டரும் எழுதிக் கொடுத்திருக்கார்."
"ஓகோ, அப்படிச் சொல்லு, அதனாலதான் வந்திருக்கேன்னு சொல்லு !" என்று கேலியாகச் சிரித்துக்கொண்டே சொன்னாள் பாகீரதி.
"அப்படித்தான் இருக்கட்டுமே!" என்றான் மூர்த்தி.
“சரி, இப்பவே இவரை சமைக்கச் சொல்லட்டுமா? உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு. அதையே சமைக்கச் சொல்றேன்" என்றாள்.
மூர்த்தி இங்கே இரவு தங்கப் போகிறானா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளவே பாகீரதி தந்திரமாக இப்படி ஒரு கேள்வியைப் போட்டாள்.
"கனபாடிகளைப் பார்த்துப் பேசினப்புறம்தான் தெரியும்" என்றான் மூர்த்தி.
"புதுக் கன்னுக்குட்டியைப் பார்க்கலையே நீ? வா, பார்க்கலாம்" என்று அவனைத் தொழுவத்துக்கு அழைத்துச் சென்றாள்.
கன்றுக்குட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ”எப்படி இருக்கு?" என்று கேட்டாள்.
"ரொம்ப அழகா இருக்கு" என்றான்.
“உன்னாட்டம்" என்றாள்.
"கிட்டா இல்லையா? எங்கே போனான்?"
"காஞ்சீபுரம் போயிருக்கான். ரெண்டு நாளாகும் வர. பங்குனி உத்திரம் பார்த்துட்டு வந்துருவான். நீ இன்னைக்கே போகணுமா?"
"தெரியலை, கனபாடிகளைத்தான் கேட்கணும்" என்று பிடிகொடுக்காமல் பேசினான்.
திருக்குறள் புஸ்தகத்துக்கு அட்டை போட்டு அனுப்பி யிருந்தனே, பார்த்தயா?"
"பார்த்தேன். உன் உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன். அந்தக் கடனை எப்ப எப்படி திருப்பித் தரப் போறேனோ, தெரியலை."
"அதுக்கென்ன? சந்தர்ப்பம் வராமலா போயிடும்? அப்ப வட்டியும் முதலுமாச் சேர்த்துக் கொடுத்துடு. அது சரி; அட்டைக்குள்ளே வேற ஒண்ணும் பார்க்கலையா?"
"பார்த்தனே!..."
"அதைப் பத்தி ஒண்ணுமே பேசமாட்டேங்கறயே!"
"எனக்கு பயம்மா இருக்கு…" என்றான்.
"என்ன பயம்? ஏன் பயப்படறே? எதுக்கு பயம்?"
"உன்னை நினைச்சுத்தான்…"
"என்னைப் பிடிக்கலையா உனக்கு?"
"பிடிக்கிறது…"
"அப்புறம் என்ன?"
"உன் அளவு தைரியம் எனக்கில்லே. உன்னாலதான் என் பிரம்மசரியமே போச்சு. நீ கெட்டதுமில்லாம என்னையும் கெடுத்துட்டயே!"
"நான் கெடுத்தனா! நீயும் சம்மதப்பட்டுதானே கெட்டுப் போனே?"
"அந்த மாதிரி ஒரு நிலைல, உன் நிர்ப்பந்தத்துல நான் புத்தி மயங்கிப் போயிட்டேன்."
"இது ரெண்டு பேருமே சேர்ந்த செய்த குற்றம்தான். இதுக்கு நான் மட்டும்தான் காரணம்னு சொல்லாதே! நீயும்தான்! இதை நீ அப்பவே யோசிச்சிருக்கணும்!"
”எப்ப?”
"உன் எச்சிலை நாள் விழுங்கறப்பவும், என் எச்சிலை நீ விழுங்கறப்பவும்…"
”சே!”
உதடுகளை உள்ளங்கையால் துடைத்துக் கொண்டான்.
இச்சமயம் கனபாடிகள் முன்கட்டிலிருந்து "மூர்த்தி !" என்று குரல் கொடுக்கவே "இதோ வந்துட்டேன் !" என்று சொல்லிக் கொண்டே ஓடினான்.
"மூர்த்தி ! உன்கிட்ட நிறையப் பேசணும். முக்கியமான விஷயம். ராத்திரி நீ இங்கயே என் கூடவே படுத்துக்க" என்றார் கனபாடிகள்.
"அம்மாடி, பாகீரதியிடமிருந்து தப்பினேன்" என்று எண்ணிக் கொண்டான்.

அணில் குட்டி ஒன்று கனபாடிகளைச் சற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருக்தது.
"ராமா, இங்க வாடா!" என்று அதைச் செல்லமாக அழைத்தார். அது ஓடி வந்து உரிமையோடு அவர் தோள் மீது ஏறி விளையாடியது.
"நீ போனப்புறம் இதுதான் எனக்கு செல்லப்பிள்ளை, இதை ஆசையோட வளர்க்கிறேன். பால் கொடுக்கிறேன். "ராமா, ராமா"ன்னு தினம் நூறு தடவை கூப்பிட்றேன். அதனால அந்த ராமன் பேரைச் சொல்ற புண்ணியம் கிடைக்கிறதே, அந்த ஒரு பலன்தான்! ஆனா இந்த அணிப் பிள்ளை கொள்ளி போடறதுக்கு உதவுமா? எனக்குச் சொந்தமா ஒரு பிள்ளை வேணாமா?" என்று வருத்தத்துடன் பெருமூச்செறிந்தார்.
கனபாடிகளின் பேச்சு மூர்த்தியைக் கண்கலங்கச் செய்தது.
"எனக்கு வயசாயிட்டுது, மூர்த்தி ! நான் இன்னும் ரொம்ப நாளைக்கு உயிரோட இருப்பேன்னு தோணலை. மனசுல எத்தனையோ விசாரங்கள். வெளியில சொல்லிக்க முடியாத துக்கங்கள். இன்னைக்குக் காலைலகூட அக்கிரகாரத்து பிராம்மணாளெல்லாம் கும்பலா வந்து ‘மழை இல்லாம ஊரே கஷ்டப்படறது. நீங்க வந்து விராடபர்வம் வாசிக்கணும்னு கேட்டுண்டா. நான் முடியாதுன்னுட்டேன். அவா என்னை பாய்காட் பண்ணப்போறதா பேசிண்ட சமாசாரமெல்லாம் உனக்குத் தெரிஞ்சிருக்கும். கிட்டா சொல்லியிருப்பானே! அவா வந்து போனதுலேந்து மனசே சரியாயில்லே. லேசா ஜூரம் வேற வீசறது. ராத்திரி எனக்கு எதுவுமே வேணாம். ரவாக் கஞ்சி மட்டும் பண்ணாப் போதும்னு சொல்லிடு. போ, பாகீரதியிடம் சொல்லிட்டு வந்துடு!" என்றார்.

மூர்த்தி சமையல் அறைக்குப் போய் "கனபாடிகளுக்கு உடம்பு சரியில்லை. "ராத்திரி ஆகாரம் எதுவும் வேண்டாம். ரவாக் கஞ்சி மட்டும் போதும்"னு சொல்லிட்டு வரச் சொன்னார்" என்றான்.
" நல்லவேளை ரவையும் சர்க்கரையும் தனித்தனியா டப்பாவில வச்சிருந்தேன். பூனை உருட்டி, அத்தனையும் கீழே கொட்டி, ரெண்டும் ஒண்ணாக் கலந்து போச்சு. அதைப் பிரிச்செடுக்க முடியாதே. அத்தனையும் வீணாப் போயிடுமே, என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிண்டிருந்தேன். வழி கண்டு பிடிச்சாச்சு ரவாக் கஞ்சியாப் பண்ணிடலாமே! ஆக, இந்த உலகத்துல எது கெட்டுப் போனாலும் அதையே நல்லதா மாத்திடறதுக்கும் ஒரு வழி இல்லாமப் போகலேன்னு தெரியறது" என்றாள்.
பாகீரதி என்ன சொல்கிறாள், எதைக் குறிப்பிட்டுச் சொல்கிறாள் என்று மூர்த்திக்கு விளங்கி விட்டது!
"சரி, அப்பாவுக்கு ரவாக் கஞ்சி. உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு, ராவ்ஜியை பண்ணச் சொல்றேன்" என்றாள் பாகீரதி.
"எனக்குத் தனியா ஒண்ணும் வேணாம். பாடசாலைப் பசங்களோடு சேர்ந்து சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு, அவா என்ன சாப்பிட்றாளோ அதுவே போதும் " என்றான்.
"கிட்டப்பா லெட்டர் கொடுத்தனுப்பியிருக்கார்னு சொன்னயே? என்ன எழுதியிருக்கார் தெரியுமா?"
"எனக்கெப்படி தெரியும்?"
மூர்த்தி எதற்குமே பிடிகொடுக்காமல் பேசியது பாகீரதிக்குச் சற்று எரிச்சலாயிருந்தது.
"நீ ரொம்ப மாறிட்டே மூர்த்தி !நான் உன்னையே நினைச்சு நினைச்சு உருகிண்டிருக்கேன். நீயானால் என்கிட்ட அக்கறை இல்லாம அலட்சியமாப் பேசிண்டிருக்கே, என் மனசை நீ புரிஞ்சுக்கலை. உன் மாதிரி என்னால உறவை வெட்டிக்க முடியலை. உனக்கு யாரோ சொக்குப் பொடி போட்டு நன்னா மயக்கி வெச்சிருக்கா. அந்தக் கழைக்கூத்தாடிப் பெண்தானே?" என்று அழ ஆரம்பித்து விட்டாள் பாகீரதி.
”கனபாடிகள் எனக்காகக் காத்துண்டிருப்பார். நான் போறேன்" என்று சொல்லிவிட்டு நழுவினான் மூர்த்தி.

அன்றிரவு அழுக்கு கடிகாரத்தில் மணி பதினொன்று அடிக்கும் வரை கனபாடிகள் பேசிக்கொண்டேயிருந்தார்.
"மூர்த்தி! நீ என்னை மறந்தாலும், யாரை மறந்தாலும் வேதத்தை மறக்காம இருக்கயே, அதை நினைச்சு ரொம்ப பெருமைப்படறேன். வேதம்தான் நமக்கெல்லாம் வழிகாட்டி. அந்த ஒளி விளக்கை நாம அணையவிடக் கூடாது. ரிஷிகள் தங்கள் தபோ பலத்தின் சக்தியால் வான வெளியில் சப்தரூபமாக உலவும் வேத மந்திரங்களை கிரகித்து இந்த பிரபஞ்சத்துக்கு வழங்கியிருக்கா. ஆனா இந்த மந்திரங்களை உண்டாக்கியவா ரிஷிகள் அல்ல. அவர்கள் கிரகித்துத் தந்தவர்கள்தான். வேதம் அனாதியானது, அதற்கு மூல புருஷன் யாரும் கிடையாது. ‘அபெளருஷேய’ என்றுதான் சொல்வார்கள்”.
காலம் காலமாக ஒலி வடிவமாகவே காப்பாற்றப்பட்டு வரும் வேதத்தைப் போற்றி வளர்ப்பவர்களைத்தான் ‘வேதவித்து’ என்கிறார்கள். வித்துக்கள் இல்லையென்றால் பயிர்கள் இல்லை. பயிர்கள் தழைக்க வித்துக்கள் அவசியம். அதைப்போல வேத வித்துக்கள் நசித்துப் போனால் வேதமே தழைக்காமல் போய் விடும். நீ இந்தப் புனிதமான பணியைப் பாதில விட்டுவிடாதே" என்றார்.
மூர்த்தி உணர்ச்சி வசப்பட்டான்.
“மனதிலே பூட்டி வைத்துள்ள ரகசியங்களையெல்லாம் அக்கணமே அவர் எதிரில் கொட்டிவிடலாமா?" என்று யோசித்தான். ஆனாலும் சொல்லாமல் கட்டுப்படுத்திக் கொண்டான்.
"மூர்த்தி, என் அந்திம காலத்துக்கு உதவியாக உன்னை என் புத்திரனாக ஸ்வீகாரம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்தேன். உன் அப்பா உன்னை என்னிடம் அழைத்து வந்து ஒப்படைத்தபோதே இதற்கு அவருடைய சம்மதத்தையும் பெற்றிருந்தேன். ‘இனி அவனுக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம் நீங்கதான்’ என்று சொல்லிட்டுப் போனார். இதை உன்னிடம் சமயம் வாய்க்கும்போது சொல்லி உன்னை என் புத்திரனாக்கிக்கொள்ளும் காலத்தை எதிர்நோக்கியிருந்தேன். ஆனா இப்ப கிட்டப்பா எழுதியுள்ள கடிதத்தைப் படிச்சப்புறம் அந்த எண்ணத்தை அடியோட மாத்திக்கொண்டு விட்டேன்" என்று கூறியவர் "இந்தா, கிட்டப்பா என்ன எழுதியிருக்கார்னு நீயே படிச்சுப்பார்" என்று அந்தக் கடிதத்தை மூர்த்தியிடம் தந்தார் கனபாடிகள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352

வேத வித்து - 18.


கனபாடிகள் தந்த கடிதத்தை மூர்த்தி மெளனமாகவே படிக்கவும், "உரக்கவே வாசிக்கலாம், பரவாயில்லை" என்றார்.
“உரக்கவா? எதுக்கு?" என்று யோசித்துவிட்டு உரக்க வாசிக்கத் தொடங்கினான்.
சங்கர கனபாடிகளுக்கு கிட்டப்பா சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி எழுதிக்கொண்டது –
கலியாணத்துக்குத் தாங்கள் வருவீர்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்தேன். ஏதோ இக்கட்டான நிலை காரணமாகத் தங்களால் வர முடியவில்லை என்று கிட்டா மூலம் அறிந்து கொண்டேன்.
மூர்த்தி இங்கேயே சப்தரிஷி பாடசாலையில் சேர்ந்து விட்டான். அவனைப் பற்றிய கவலை வேண்டாம். மிக உத்தமமான பையன். சமையல் வேலைக்கு ஆள் தேவை என்று கடிதம் எழுதியிருந்தீர்கள்.
ஆனந்தராவ் என்பவரை அனுப்பியிருக்கிறேன். ரொம்ப சாதுவான மனிதர். நளபாகமாய்ச் சமைப்பார். அவருக்குத் துணையாக மூர்த்தி வருகிறான்.
நிற்க, சிதம்பரத்திலுள்ள தங்கள் சகோதரி கெளரி அம்மாளும் அவள் புருஷனும் இங்கே வந்திருந்தார்கள். ஒரு நல்ல பிள்ளையாகப் பார்த்து சுவீகாரம் எடுத்துக்கொள்ளப் போகிறார்களாம். "உங்க சப்தரிஷி வேதபாடசாலையில் யாராவது பொருத்தமான பையன் இருக்கானா?" என்று கேட்டார்கள்.
"வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்? நம்ப மூர்த்தி இருக்கானே, அவனையே தத்து எடுத்துகொள்ளலாமே!" என்று யோசனை சொன்னேன். அவர்களுக்குப் பரம சந்தோஷம். ஒருவேளை நீங்களே இப்படி ஒரு எண்ணம் வைத்திருக்கலாம், மூர்த்தியை சுவீகார புத்திரனாக்கிக் கொள்ளும் அபிப்ராயம் உங்களுக்கே இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். எதற்கும் உங்களை ஒரு வார்த்தை கேட்டு விட்டுப் பிறகுதான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். இதுபற்றி அவர்களிருவரும் தங்களிடம் பேசுவதற்கு அச்சப்படுவதால் அவர்கள் சார்பில் நானே இக்கடிதம் எழுதுகிறேன். உங்கள் அபிப்ராயம் தெரிந்த பிறகு தான் மேற்கொண்டு ஆக வேண்டியதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
அடியேன் ஏதேனும் அதிகப் பிரசங்கித்தனமாக எழுதி யிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,
கிட்டப்பா.

கனபாடிகள் சற்றுநேரம் கண்களை முடி யோசித்தபின் ஒரு முடிவுக்கு வந்தவராய் ‘ம். அப்புறம்?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு ஈரத் துணியால் உடம்பைத் துடைத்துக் கொண்டார். "ஒரே புழுக்கமாயிருக்குடா ! விசிறி எடுத்துண்டு வந்து கொஞ்சம் வீசறயா?" என்று கேட்டார். மூர்த்தி ஓடிப்போய் விசிறி எடுத்து வந்து வீசத் தொடங்கினான்.
"நீ என்ன நினைக்கிறே மூர்த்தி?" என்று அவனை சம அந்தஸ்தில் உயர்த்தி வைத்துக் கேட்டார் கனபாடிகள்.
"இதல நான் நினைக்கறதுக்கு ஒண்ணுமில்லை. நீங்க எது சொன்னாலும் அதுவே எனக்கு வேத வாக்கு. உங்க இஷ்டப்படி நடந்துக்குவேன்" என்றான்.
"சரி, கெளரி ஆசைப்படறாளாம். அவளுக்கும் புத்திர பாக்கியம் இல்லே. உனக்கு சம்மதம்னா கிட்டப்பாவுக்கு லெட்டர் எழுதித் தரேன். நீ நாளைக்கே புறப்பட்டுப் போகலாம்"
கனபாடிகளுக்குத் தூக்கம் வரும்வரை வீசிக்கொண்டிருந்துவிட்டு அப்புறம்தான் படுத்தான்.

பொழுது விடிந்ததும் ஆற்றங்கரைப் பிள்ளையார் கோவில் ஞாபகம் வந்துவிட்டது அவனுக்கு. ஆற்றையும் கோவிலையும் ஒரு முறை பார்த்துவிட்டு வரவேண்டும் போல் ஆசையாக இருந்தது.
"ஆற்றுக்குப் போய் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே பூஜைக்கு ஜலம் கொண்டு வரட்டுமா? கிட்டாகூட ஊரில் இல்லையே!"என்று பாகீரதியிடம் கேட்டான்.
அவள் குடத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு "அப்படியே தஞ்சாவூர் போயிடயாட்டயே!" என்று கேலியாகக் கேட்டுச் சிரித்தாள்.
அவன் ஆற்றங்கரை படித்துறையில் போய் நின்று பார்த்த போது அந்த இடம் பாலைவனமாய்க் காட்சி அளித்தது. பசுமையெல்லாம் போய் காய்ந்து கிடந்த கரையோரப் புதர்களை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
ஆற்றுக்கு நடுவே பெரிதாகப் பள்ளம் வெட்டி ஊற்றெடுத் திருக்தார்கள். அந்தத் தேக்கத்திலிருந்து ஓடிய வாய்க்கால் ஒரு பட்டத்தின் வால்போல் தெரிந்தது.
இதே படித்துறையில் அன்று வெள்ளத்தில் சிக்கித் திணறியபோது தன்னைக் காப்பாற்றிய மஞ்சவின் நினைவு தோன்ற ‘பாவம் மஞ்சுவிடம் சரியாகக்கூடப் பேசாமல் வந்து விட்டேன்’. ‘சர்க்கஸ் கம்பெனியில் சேரலாமா?’ என்று அவள் கேட்டபோது அலட்சியமாக ‘அது உன் இஷ்டம்’ என்று பதில் சொல்லிவிட்டு வந்து விட்டேன். ரத்தம் கொடுத்துவிட்டதால் நன்றிக்கடன் தீர்ந்து விட்டதாக நான் நினைத்தது எத்தனை அகம்பாவம். கழைக்கூத்தாடிப் பெண் தான் என்றாலும் அவளுக்குள்ள பண்பும் பெருந்தன்மையும் எனக்கு இல்லையே! என்று எண்ணித் தன்னைத்தானே நொந்து கொண்டான்.
சாவகாசமாகத் தண்ணீரில் உட்கார்ந்துகொண்டு கைகளால் அளையத் தொடங்கினான். பிறகு மல்லாந்து படுத்து அந்த வெதவெதப்பான குளுமையில் நீண்ட நேரம் அமிழ்ந்திருந்த பின் எழுந்தான். அப்புறம் துணிகளை உலர்த்தி, திருநீறு அணிந்து, குடத்தில் நீர் நிரப்பிக் கொண்டதும் கரையேறி கோயிலுக்குப் போனான். பிள்ளையாரை வணங்கிவிட்டு நந்தவனம் சுற்றி பூக்களைத் தேடினான். ஒரே ஒரு நந்தியாவட்டைப்பூ அபூர்வமாய்ப் பூத்திருந்தது ! அதைப் பறித்துக் குடத்து நீரில் போட்டுக் கொண்டு பாடசாலை நோக்கி நடந்தான்.
"கனபாடிகள் என்னை எதுவுமே கேட்காமல் சகஜமாய்ப் பேசுகிறாரே ! கோபமோ வருத்தமோ எதுவுமே முகத்தில் காட்டிக் கொள்ளவில்லையே ! ஒருவேளை எல்லா சமாசாரங்களையும் தெரிஞ்சிண்டுதான் இப்படித் தெரியாததுபோல் இருக்காரோ?" என்று வியந்தான்.
கடிதத்தை அவர் உரக்கப் படிக்கச் சொன்னதற்குக்கூட ஏதாவது உள் அர்த்தம் இருக்க வேண்டும். அவர் மன ஆழத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணிக் கொண்டான்.
பூஜை முடிந்து, சாப்பிட்டானதும் கனபாடிகளை நமஸ்கரித்து "ஊருக்கு போயிட்டு வரேன்" என்று சொன்ன போது அவர் உள்ளே போய்ப் பெட்டியைத் திறந்து புத்தம் புது பட்டு வேட்டி ஒன்றை எடுத்து வந்தார்.
இந்தா, பிரம்மசாரிக்கு நாலு முழம் வேட்டி போதும். என்னிடம் இந்த எட்டு முழம் வேட்டிதான் இருக்கிறது. இப்போதைக்கு இதை இரண்டாக மடித்துக் கட்டிக்கொள். என் ஆசீர்வாதம் !" என்றார்.
"இப்போதைக்கு என்றால் அதற்கு என்ன அர்த்தம்?" என்று யோசித்தபடியே பின்கட்டுக்குப் போனான். அங்கே பாகீரதி கொடியில் துணி உலர்த்திக் கொண்டிருந்தாள்.
"போயிட்டு வரேன் பாகீரதி" என்று அவளிடம் சொல்லிக் கொண்டபோது அவள் கண்கள் பனித்திருப்பதைக் கண்டு "வருத்தமா?" என்று கேட்டான்.
"எனக்கு நீ அத்தை பிள்ளை ஆகப்போறயே, அந்த சந்தோஷம் !" என்றாள் பாகீரதி!
"உனக்கெப்படி தெரியும்?"
"ராத்திரி லெட்டரை உரக்கப் படிக்கச் சொன்னாரே, அப்பா! எல்லாத்தையும் கேட்டுண்டுதான் இருந்தேன்" என்றாள்.
"ஒகோ! நீ கேட்கணுங்கறதுக்குத்தான் உரக்கப் படிக்கச் சொன்னார் போலிருக்கு. இப்பத்தான் புரியறது!" என்றான்.
"வந்ததும் வராததுமாக் கிளம்பிட்டயே ! அப்படி என்ன அவசரம்? அந்தக் கூத்தாடிப் பெண் முகம் மறந்து போச்சோ?" என்று குத்தலாய்க் கேட்டாள் பாகீரதி.
"அவள் ரொம்ப நல்ல பெண். நீ நினைக்கிற மாதிரி யெல்லாம் இல்லே" என்று சொல்லிவிட்டு அவசரமாய்க் கிளம்பிவிட்டான்.
தஞ்சாவூர் போய்ச் சேர்ந்ததுமே கனபாடிகள் எழுதித் தந்த கடிதத்தைக் கிட்டப்பாவிடம் கொடுத்தான்.
அதை அவர் பிரித்துப் படித்தார்.
"கிட்டப்பாவுக்கு ஆசீர்வாதம். உன் கடிதம் படித்தேன். எனக்குப் பூரண சம்மதமே. கெளரி விருப்பப்படியே நடக்கட்டும். ததாஸ்து" என்று சுருக்கமாக எழுதியிருந்தார்.
"மூர்த்தி உனக்கு சமாசாரமெல்லாம் தெரியுமோ? கனபாடிகள் சொன்னாரா?" என்று கிட்டப்பா கேட்டார்.
"தெரியும்; உங்க லெட்டரை என்னிடமே கொடுத்துப் படிக்கச் சொன்னார்."
”படிச்சயா?"
"படிச்சேன்."
"கெளரிக்குப் பிள்ளையாகப் போறதுல உனக்குச் சம்மதம் தானே? கனபாடிகளுக்கு என்ன பதில் சொன்னே?"
"கிணத்துல விழச் சொன்னாலும் விழத்தயார்னு சொன்னேன்!"
"எல்லாக் கிணத்துலயும் இப்ப தண்ணியே இல்லாம வறண்டு கிடக்கே, அந்த தைரியமா!" என்று கேட்டுச் சிரித்தார் கிட்டப்பா.
அவனும் சிரித்தான்.
"சரி; கெளரி அத்தைக்கு இன்னைக்கே எழுதிப் போட்டுடறேன். சுபஸ்ய சீக்கிரம் !" என்றார் கிட்டப்பா,
"நான் பாடசாலைக்குப் போகட்டுமா?" என்று கேட்டான் மூர்த்தி.
"கொஞ்சம் இரு. முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டனே ! நேத்து அந்தக் கழைக்கூத்தாடிப் பெண் உன்னைப் பார்க்க வந்திருந்தாள். "என்ன சமாசாரம்?"ணு கேட்டேன். யாரோ சர்க்கஸ்காரனாமே, அவன் அடிக்கடி வந்து அவளை சர்க்கஸ்ல சேரச் சொல்லி தொந்தரவு பண்றானாம். ‘மூர்த்தி சம்மதிச்சாத்தான் சேருவேன்’னு பதில் சொல்லிட்டானாம்.
"அப்படி என்ன உறவு உனக்கும் அந்தக் குடுமிக்காரப் பையனுக்கும்?"னு கேட்டுச் சண்டை போட்றானாம் அவன். அடிக்கடி வந்து ‘அந்தக் குடுமிக்காரப் பையனை ஒழிச்சுக் கட்டிடறேன் பார்’னு கலாட்டா பண்றானாம். குடிகாரனாயிருப்பான் போலிருக்கு மூர்த்தி வந்தால் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்க, அவருக்கு ஏதாச்சும் ஆயிட்டுதுன்னா அதை என்னால தாங்கிக்க முடியாதுன்னு என்கிட்டே வந்து அழுதாள். யாருப்பா அந்த சர்க்கஸ்காரன்?" என்று கேட்டார் கிட்டப்பா.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352

வேத வித்து - 19.



ஊர் ஓரத்து தென்னக் தோப்பில் மஞ்சு ‘கவாத்து’ பழகிக்கொண்டிருந்தபோது மூர்த்தி அங்கே போய் நின்றான்.
"உனக்கெப்படி தெரிந்த து இந்த இடம். யார் சொன்னாங்க?" என்று கேட்டாள் மஞ்சு.
"உங்க அப்பாதான் சொன்னார்?" என்றான் மூர்த்தி.
"அந்த சர்க்கஸ் ஆள் உன்னை ‘குத்தப் போறேன், வெட்டப் போறேன்’னு சொல்லிட்டிருக்கானே!"
"யார் அந்த கேரளாக்காரனா? அவனுக்கு என் மேல என்ன கோபம்?"
"பொறாமைதான்; நீ என்னோட அன்பாப் பேசறது, பழகறது, என் குடும்பத்துல ஒருத்தன் மாதிரி நடந்துக்கறதெல்லாம் அவனுக்குப் பிடிக்கலே!"
”ஏன்?”
"என்னைக் கட்டிக்கற உரிமை அவனுக்குத்தான் இருக்காம். அவனும் எங்களைப் போல குஜராத்லேந்து வந்தவனாம்!"
"அட நீ குஜராத்திப் பெண்ணா! சொல்லவே இல்லையே!"
"நாங்க மொத்தம் அஞ்சு குடும்பம், ரெண்டு தலைமுறைக்கு முன்னால தஞ்சாவூர்லதான் குடியேறினோம். கழைக்கூத்துதான் எங்க தொழில், உறவுவிட்டுப் போகாம எங்களுக்குள்ளயே கல்யாணம் செஞ்சுக்குவம்.“
"அந்தக் குடுமிக்காரப் பையனோட உனக்கென்ன சிநேகம்? உனக்கும் அவனுக்கும் என்ன உறவு?"ன்னு சண்டை போடறான். என்னை சர்க்கஸ்ல சேரச் சொல்லி ஒத்தக் கால்ல நிக்கறான் !"
”சரி; நீ என்ன செய்யப் போறே?"
"எனக்கு அவனைப் பிடிக்கலே."
"அழகாத்தானே இருக்கான்?"
"அழகு இருந்துட்டாப் போதுமா? மனசுல அழுக்கா இருக்கானே!"
"அவனை நீ கல்யாணம் செஞ்சிண்டா அப்புறம் நல்லவனாயிடுவான் !"
மூர்த்தியிடமிருந்து இம்மாதிரி ஒரு பதிலை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க, "இதுக்குத்தான் இத்தனை நாளும் உள்னோட அன்பாப் பழகினேனா? உன் மேல நான் உயிரையே வெச்சிருந்ததுக்கு இதுதான் முடிவா?" என்று கேட்டாள்.
"நம்ம நட்புக்கு முடிவு கல்யாணமாத்தான் இருக்கணும்னு நான் நினைக்கலே , நீ குஜராத்திப் பெண். நான் பிராம்மணன். எனக்கு வேதம்தான் முக்கியம். ஏதோ வெளியே சொல்லிக்க முடியாத நிர்ப்பந்தத்துல நான் இருந்த ஊரைவிட்டு வரவேண்டியதாப் போச்சு. வந்த இடத்துல எதேச்சையா சந்திச்சோம். அன்பாப் பழகினோம். இப்ப என் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்கு, கிட்டப்பா புண்ணியத்தாலே மறுபடியும் எனக்கு வேதம் ஓதற வாய்ப்பு கிடைச்சிருக்கு."
"நீ வேதத்தை தொடர்ந்து ஓதணுங்கறதுதான் என்னுடைய ஆசையும். அதுக்கு நான் இடைஞ்சலாயிருக்க விரும்பலே, எங்க அப்பவுக்கப்புறம் எனக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லயே; உன்னைக் கலியாணம் செஞ்சுட்டா என் வாழ்க்கை நிம்மதியாயிடும்னு நினைச்சேன், பரவாயில்லை; என் சுய கலத்துக்காக உன் எதிர்காலத்தைப் பாழடிக்கறது நியாயமாப் படலே. நீ வேதம் படிச்சுப் பெரியவனா ஆகணுங்கறதுதான் என் ஆசையும்."
"நீ அப்படியும் பேசற; இப்படியும் பேசறே! ஏன், எதனாலன்னு புரியலை. ஆச்சரியமாயிருக்கு."
"இப்ப என் உடம்பிலே உன் ரத்தமும் சேர்ந்து ஒடுதே! ஒரு வேளை அதனால இருக்குமோ, என்னவோ?"
"அப்படின்னா நீ?..."
"எனக்கு ஒண்ணும் புரியலே. என்ன செய்யறதுன்னும் தெரியலே."
"பயப்படாதே அந்த சர்க்கஸ்காரனை நல்லவனா மாத்திடலாம். நீயும் சர்க்கஸ்ல சேர்ந்துடு, இது வரைக்கும் அவனுக்கு லைஸன்ஸே கொடுக்கலையாம். கிட்டப்பாதான் லைஸன்ஸ் கொடுக்கணுமாம். அவரே சொன்னார். அவர்தான் இந்த ஊர் முனிசபல் சேர்மனாம். மழை இல்லாம பயிர் பச்சை யெல்லாம் வாடி ஜனங்க ரொம்ப கஷ்டப்படறாங்களே, இந்த சமயத்துல சர்க்கஸுக்கு அனுமதி கொடுத்தா ஜனங்ககிட்ட இருக்கிற கொஞ்சநஞ்சம் காசும் போயிடுமேன்னு யோசிக்கிறாராம்”
"அப்படியா? லைஸன்ஸ் கொடுக்கலேன்னா அந்த ஆள் தாக்குப்பிடிக்க முடியாம ஊரைவிட்டே ஓடிடுவான் !"
"சே, பாவம் ! சர்க்கஸ் மிருகங்களெல்லாம் பட்டினி கிடந்து செத்துப் போயிடுமே! அத்தனைக்கும் தீனி போட பணத்துக்கு எங்க போவான்?" என்று பரிதாபப்பட்டான் மூர்த்தி.
"உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியலே, மூர்த்தி! அந்த ஆள் உனக்குக் கெடுதல் நினைக்கிறான். நீயானா அவனுக்கு நல்லது நினைக்கிறே!"
"நமக்கு இன்னொருத்தர் தீங்கு நினைச்சாலும் நாம அவங்களுக்கு நல்லதுதான் செய்யணும். அப்படி செய்யலேன்னா குறள் படிச்சு என்ன பிரயோஜனம்? சேர்மனிடம் பேசி எப்படியும் லைஸன்ஸ் வாங்கிக் கொடுக்கப் போறேன். அந்த சர்க்கஸ் ஆளை கிட்டப்பா வீட்டுக்கு இப்பவே வரச் சொல்லு. நான் அங்கயே அவனுக்காக காத்துண்டிருப்பேன்" என்றான்.
இந்தச் சமயம் அருகிலிருந்த வைக்கோல் போரிலிருந்து வந்த பாம்பைக் கண்டு பதறிப் போன மஞ்சு "ஐயோ" என்று அலறினாள். பெரிய கல் ஒன்றை எடுத்து அதன் மீது எறியப் போனாள்.
“வேணாம். பாம்பை அடிக்காதே, அது பாவம்" என்று தடுத்தான் மூர்த்தி.
"சும்மாவிட்டா, அப்புறம் அது நம்மையே கடிக்கும்."
"கடிச்சா நான் மந்திரம் போட்டு விஷத்தை இறக்கிடறேன். கனபாடிகள் எனக்கு கத்துக் கொடுத்திருக்கார்."
"இந்த முர்த்தி ஏன் இவ்வளவு நல்லவனாயிருக்கார்! கடிக்க வர பாம்பை அடிக்கக் கூடாது என்கிறார். கொல்ல வர ஆளுக்கு நல்லது செய்யப் போறேங்கறார். என்னால இவரைப் புரிஞ்சுக்கவே முடியலே !" என்று மனதுக்குள் வியந்தாள். மஞ்சுவின் உள்ளத்தில் மூர்த்தி விசுவரூபமாய் உயர்ந்து நின்றான்.

மூர்த்தி எதிரில் வந்து நின்றதைக்கூட கவனிக்காமல் கிட்டப்பா சுதேசமித்திரனில் மூழ்கியிருந்தார். ஒருமுறை கனைத்து, தான் வந்திருப்பதை சூசகமாகக் காட்டிக்கொண்டான் மூர்த்தி.
"அட, நீயா! வா" என்றவர் "பேப்பர்ல பாத்தயா? பஞ்சம் வந்தாலும் வரும்னு போட்டிருக்கான். இப்படி மழையே இல்லாமப்போனா அப்புறம் ஜனங்க ரொம்பக் கஷ்டப்படுவா. கனபாடிகளை அழைச்சுண்டு வந்து விராடபர்வம் வாசிக்கச் சொல்லலாமான்னு யோசிக்கிறேன்" என்றார் கிட்டப்பா.
"அவருக்கு உடம்பே சரியில்லையே. உள்ளூர்லயே விராட பர்வம் வாசிக்கணும்னு ஊரார் வந்து கேட்டுண்டாளாம்; முடியாதுன்னு சொல்லிட்டாராம். பாகீரதி சொன்னாள்" என்றான் மூர்த்தி.
"பாவம், இந்த வயசான காலத்துல பாகீரதி விசாரமே பாதி அவருக்கு" என்றார் கிட்டப்பா.
"உங்க கிட்ட, ஒரு சின்ன உதவி…"
"முதல் முதல் உதவி கேக்கறே, பெரிய உதவியாத்தான் கேளேன்!" என்றார் கிட்டப்பா.
"இதுவே பெரிய உதவிதான். சர்க்கஸுக்கு லைஸன்ஸ் இல்லேன்னு சொல்லிட்டேளாம். பாவம், யானை சிங்கமெல்லாம் பட்டினியாக் கிடக்கறதாம். தீனி வாங்கிப் போட பணமில்லாம திண்டாடறானாம் அந்த சர்க்கஸ் ஆள். நீங்கதான் காப்பாத்தணும் அவனை" என்றான் மூர்த்தி.
"என்ன சொல்ற நீ1 அந்த துஷ்டனுக்கா உதவி பண்ணச் சொல்றே?"
"இப்ப நீங்க உதவி பண்ணலேன்னா அத்தனை பேரும் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான். சர்க்கஸ் கூடாரமே காத்துல பறந்திண்டிருக்கு" என்றான்.
அதோ, அவனே வரான் போலிருக்கே!"என்றார் கிட்டப்பா.
வந்தவன், "ஐயா என்னைக் காப்பாத்துங்க" என்று உணர்ச்சிவசமாகச் சொல்லிவிட்டு கிட்டப்பாவின் காலில் விழுந்தான்.
"முதல்ல இவர் காலில் விழு. அப்புறம்தான் மற்றதெல்லாம்…" என்றார் கிட்டப்பா.
"தவறா நினைச்சு கோவத்துல ஏதேதோ பேசிட்டேன். எவ்வளவு நல்லவர்னு இப்பத்தான் தெரியுது. என்னை மன்னிச்சுடுங்க மூர்த்தி!" என்று மூர்த்தியின் காலில் விழப் போனான்.
"வேணாம். வேணாம், பெரியவருக்குப் பண்ணாப் போதும்" என்று ஒதுங்கி நின்றான் மூர்த்தி.
"உன் பேர் என்னப்பா சொன்னே?" என்று கேட்டார் கிட்டப்பா.
"துக்காராம்…" என்றான்.
"அவர் ரொம்ப சாதுவாச்சே! அவர் பேரை வெச்சுண்டு நீ நேர்மாறா நடந்துக்கறயே" என்றார் கிட்டப்பா,
அவன் தலைகுனிந்து வெட்கப்பட்டான்.
"இனிமே குடிக்கமாட்டயே?"
"சத்தியமா குடிக்கமாட்டேங்க" என்றான்.
"சத்தியத்தை மீறிக் குடிச்சயானா தொலைச்சுப்புடுவேன், ஜாக்கிரதை ஒரு நல்ல நாளாப் பார்த்து சர்க்கஸை ஆரம்பிச்சடு. டிக்கட் ரேட்டைக் குறைச்சு வை, லைஸன்ஸ் தரச் சொல்றேன்" என்று சொல்லி அனுப்பினார் கிட்டா.
அந்த மகிழ்ச்சியில் அவன் எதுவும் பேசத் தோன்றாமல் வாயடைத்து நின்றான்.
”இன்னும் ஏன் நிக்கறே? புறப்படு" என்றார் கிட்டப்பா.
"உங்க உதவிக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே. என் நன்றிக்கு அடையாளமா ஏதாவது…"
"என்ன செய்யப்போறே?"
"ஒரு யானையே வேணுமானாலும் கொடுத்துடறேங்க."
"ஏன்? அதைக் கட்டித் தினிபோட முடியலையோ? என் தலைல கட்டிடலாம்னு பாக்கறயா! வேணாம்; நன்றி மனசுல இருந்தாப் போதும். முக்கியமா மூர்த்திக்குத்தான் நீ நன்றி செலுத்தணும். மூர்த்திகிட்ட மரியாதைய நடந்துக்க. அது போதும்" என்றார்.
"அடுத்த ஞாயிற்றுக்கிழமையே ஆரம்பிச்சடறேன். நீங்க ரெண்டு பேரும்தான் வந்து தொடங்கி வைக்கணும்!" குரலில் மகிழ்ச்சி பொங்கக் கூறிக்கொண்டே கையெடுத்துக் கும்பிட்டான் துக்காராம்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
வேத வித்து - 20.


காலையிலிருந்து பாகீரதிக்கு அத்தையின் ஞாபகமாகவே இருந்தது.
"அத்தைக்குத்தான் என் பேர்ல எத்தனை அன்பு! ஊருலேந்து அக்கறையா தாழம்பூ கொண்டு வந்து தலைபின்னி அழகு பார்த்தாளே! அந்தத் துணிச்சலும், அப்பாவை எதிர்த்துப் பேசிச் சமாளிக்கிற தைரியமும் வேறு யாருக்கு வரும்?
"அத்தை இன்னொரு முறை அந்த மாதிரி எனக்குத் தலைபின்னி விட மாட்டாளா? மூர்த்தி எதேச்சையா வந்து என் அலங்காரத்தைப் பார்த்து ரசிக்கமாட்டானா?" என்று உள்ளுக்குள் கொழுந்துவிட்டிருந்த ஆசைக்குக் கற்பனை வடிவம் கொடுத்துப் பார்த்தாள்.
சமையல் கட்டிலிருந்து, நெய் வாசனையும் தாளிப்பு நெடியும் வீடு முழுதும் கமகமத்தது. ராவ்ஜி சமையல்!

கனபாடிகள் "ராமா!" என்று அணில் பிள்ளையைப் பால் குடிக்க அழைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த கிட்டா "காஞ்சீபுரம் சம்பந்தியாத்துக்காரா உங்களுக்கு அரும்பாக்கம் லேகியம் கொடுத்தனுப்பிருக்கா. தலை சுத்தல், தள்ளாமை எல்லாம் போயிடுமாம்!" என்றான்.
"அரும்பாக்கம் வைத்தியருக்கே இப்ப என் வயசு ஆயிருக்குமே!" என்று சொல்லிக் கொண்டே டப்பாவைத் திறந்து கொஞ்சம் லேகியம் உருட்டிச் சாப்பிட்டார்.
"நான் இல்லாதப்ப மூர்த்தி வந்திருந்தானாமே?" கிட்டா கேட்டான்.
"ஆமாம்; சமையல் ராவ்ஜியை அழைச்சுண்டு வந்தான். உங்க மாமா, கிட்டப்பா லெட்டர் கொடுத்தனுப்பிருந்தார். கெளரி மூர்த்தியை தத்தெடுத்துக்க ஆசைப்படறளாம். என் அபிப்ராயம் என்னன்னு கேட்டிருந்தார், எனக்குப் பூர்ண சம்மதம்னு பதில் எழுதி மூர்த்தியிடமே கொடுத்தனுப்பிட்டேன்."
"மூர்த்தி தஞ்சாவூர்லயேதான் வேதம் படிக்கப் போறானா? இங்கே வரமாட்டானா?" என்று கேட்டான் கிட்டா,
"என்ன சொன்னே? வேதம் படிக்க…" என்று இழுத்தார் கனபாடிகள்.
"படிக்கப் போறானான்னு கேட்டேன்."
"வேதம் படிக்கிறதுன்னு சொல்லக் கூடாது. ஓதறதுன்னு சொல்லணும்; எழுதப்பட்டதைத்தான் படிக்கலாம். ஒலியை ஓதணும். மிருதங்கம் அடிக்கிறான்னு சொல்லக் கூடாது. வாசிக்கிறான்னு சொல்லணும்,"

வாசலில் வந்து நின்ற ஜட்காவிலிருந்து அத்தையும் அவள் கணவர் அருணாசலமும் இறங்கி வந்தார்கள்.
பட்டுப் புடவையும் காசு மாலையும் பளபளக்க முக மலர்ச்சியோடு வந்து நின்ற பணக்கார அத்தையை பாகீரதி அப்படியே தழுவிக்கொண்டு "வாங்க அத்தை ! கார்த்தால் லேந்து உங்க நினைவுதான். உங்களுக்கு ஆயுசு நூறு !" குதூகலம் பொங்க வரவேற்றாள் பாகீரதி.
"கையில என்ன அது செம்பு!" என்று கேட்டான் கிட்டா.
"கங்கைச் செம்பு, தெரிஞ்சவா காசியாத்திரை போயிருந்தா, அவா கொண்டு வந்து கொடுத்தா. புண்ணிய தீர்த்தம். அண்ணாவுக்குக் கொடுக்கலாம்னு கொண்டு வந்தேன்" என்றாள் கெளரி அத்தை.
"இதுக்குப் பதிலா ஒரு குடம் தண்ணி கொண்டு வந்திருந்தா ரொம்ப உபயோகமாயிருக்கும்" என்றான் கிட்டா.
"தண்ணிக்கு அவ்வளவு பஞ்சம் வந்துட்டுதா, இங்கே? சிதம்பரத்துல பரவாயில்லே" என்றாள் கெளரி.
"பஸ் லேட்டோ?" என்று கேட்டார் கனபாடிகள்.
"ஆமாம்; நடு வழில பஞ்ச்சர்" என்றார் கெளரியின் கணவர்.
கல்கண்டு, திராட்சை, மாம்பழம், மாதுளம்பழம், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு எல்லாவற்றையும் ஒரு மூங்கில் தட்டில் வைத்து கனபாடிகள் காலில் விழுந்து "நமஸ்காரம் செய்து "ஆசீர்வாதம் பண்ணுங்க!" என்றனர் கெளரி தம்பதியர்.
"முகூர்த்தம் எப்ப வெச்சுக்கப் போறேள்?" என்று கேட்டு, அந்த ஒரு கேள்வியிலேயே சுவீகார சமாசாரம் பூராவும் மறுபடி ஒருமுறை பேச வேண்டிய அவசியமில்லாமல் செய்து விட்டார் கனபாடிகள்.
"உங்களுக்கு எப்ப வர செளகரியப்படுமோ, அப்ப வெச்சுக்கலாம்" என்றார் கெளரியின் கணவர்,
"சீக்கிரமே ஒரு நல்ல நாள் பார்த்து நடத்திடவேண்டியதுதான்!" என்றார் கனபாடிகள்.
"நீங்க வரணும்; அதுதான் முக்கியம்."
"என்னால முடியும்னு நினைக்கிறயா, கெளரி ! வரவர உடம்பு ரொம்ப பலகீனம் ஆயிண்டிருக்கே?"
"முகூர்த்தம் நடக்கறப்போ நீங்க இருக்கணும். காலைல வந்து மூர்த்தியை ஆசிர்வாதம் பண்ணிட்டு சாயந்திரமே திரும்பிடலாம். நாங்க ஒரு "ப்ளெஷர்" ஏற்பாடு பண்ணி அனுப்பறோம்" என்றார் கெளரியின் கணவர்.
"கிட்டா, அந்த பஞ்சாங்கத்தை எடு" என்றார் கனபாடிகள்.
கிட்டா பஞ்சாங்கம் கொண்டு வந்தான்.

அதைப் புரட்டி, "அசுவனி, பரணி என்று நட்சத்திரங்களை விரல் விட்டு எண்ணி, "மூர்த்திக்கு மூல நட்சத்திரம். ஆண் மூலம் அரசாளும்னு சொல்லுவா. அரசாளப் போறானோ இல்லையோ, அரசமரத்தை ஆண்டுண்டிருக்கான்" என்று சொல்லிச் சிரித்தார். அவர் இந்த மாதிரி சிரித்து ரொம்ப நாளாயிற்று.
"மூர்த்தியின் முழுப்பெயர் என்னன்னு தெரியலே." என்று இழுத்தார் கெளரியின் கணவர்.
"சாம்பமூர்த்தி. மூல நட்சத்திரத்துக்கு இந்த மாசம் பதிமூணாம் தேதி பொருத்தமாயிருக்கு" என்றார் கனபாடிகள்.
"பதிமூணுன்னா இன்னும் ஆறே நாள் தானே? அதுக்குள்ளே எல்லா ஏற்பாடும் பண்ணிட முடியுமா அண்ணா!" என்று கவலைப்பட்டாள் கெளரி.
"நீ என்ன கலியாணமா பண்ணப்போறே? சுவீகாரம் தானே? ரெண்டு மணி நேரத்துல முடிச்சுடலாம். ஏழெட்டு வைதிகாளைக் கூப்பிட்டா போதும். நான் வறேன். வெள்ளிக் கடை கிட்டப்பா வருவான். ஜாம்ஜாம்னு நடத்திடலாம். கார்த்தால ஒன்பது பத்தரை மிதுன லக்னம் முகூர்த்த நேரம்" என்றார் கனபாடிகள்.
"முகூர்த்தப் பத்திரிகையை உங்க கையாலயே எழுதி மஞ்சள் தடவி ஆசீர்வாதம் பண்ணிக் கொடுத்துட்டா, நாங்க சாயந்திரமே புறப்பட்டுடலாம்" என்றாள் கெளரி.
"நாலு மணிக்கு மேல புறப்படுங்க. ராகுகாலம், வெயில் ரெண்டுமே போயிடும்!"
"பாகீரதியை என்கூடவே அழைச்சுண்டு போறேன் அண்ணா! இடையிலே இன்னும் அஞ்சே நாள்தானே இருக்கு" என்றாள் கெளரி.
"அப்படிச் சொல்லு. அதுக்குத்தான் வந்தேன்னு சொல்லு ! செல்ல மருமாளாச்சே!" என்று மறுபடியும் சிரித்தார் கனபாடிகள்.
"அவளும் இந்த வீட்டில எத்தனை நாளைக்கு கூண்டுக் கிளி மாதிரி அடைஞ்சு கிடப்பா? இப்பத்தானே சந்தர்ப்பம். சமையல்காரரும் வந்தாச்சு, துணைக்கு கிட்டா வேற இருக்கான்."
"எல்லாத்தையும் யோசனை பண்ணின்டு ஒரு பிளானோடு தான் வந்திருக்கே!" என்றார் கனபாடிகள்.
"அண்ணா, உன்னோட ரொம்ப நாளாப் பேசனும்னு இருந்தேன். இப்பத்தான் அதுக்கு சந்தர்ப்பம் வாய்ச்சிருக்கு. பாகீரதி விஷயமாத்தான், உனக்கப்புறம் அவ கதி என்னன்னு யோசிச்சுப் பார்த்தயா? உன் காலத்துலயே, அந்தச் சின்னக் குழந்தைக்கு ஏதாவது ஒரு வழி செஞ்சுட வேணாமா?"
"அவள் தலையெழுத்து இப்படி ஆயிடுத்தே? அதை நம்மால மாத்தி எழுத முடியாதே"
"ஏன் முடியாது? மனசுவச்சா எழுதலாம்" என்றாள் கௌரி.
"நீ என்ன சொல்றே, கெளரி!"
"உனக்கப்புறம் அவளை யார் காப்பாத்தப் போறா? அதுக்கு யார் உத்தரவாதம்?
அதைப்பத்தி யோசிச்சயா? சின்ன வயசிலே கனபாடிகள் பொண்ணு நடுத்தெருவில நிக்கறாங்கற அபவாதத்துக்கு ஆளாகப் போறயா?"
“நீதான் இருக்கயேம்மா, அப்படி அனாதையாவா விட்டுடுவே?"
"நான் இருந்தாப் போதுமா? எனக்கும் வயசாறதே! நான் கவலைப்படறது எதைப் பத்தின்னு என்னால உடைச்சுப் பேச முடியலே, நான் சொல்றது உனக்குப் புரியும்னு நினைக்கறேன்."
"புரியறது. அவளுக்கு மறுபடியும் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கணுங்கறே, அதானே? அது என்னால முடியாது. சாஸ்திரத்துக்கு விரோதமா நான் எதுவும் செய்யமாட்டேன்."
"செஞ்சா என்ன ஆயிடும்?"
"கெளரி உனக்கு இவ்வளவு தைரியம் எப்படி வந்தது? என்னிட்டயா இப்படிப் பேசறே? ஊர் உலகம் ஒப்புக்குமா! ‘சாஸ்திரம் படிச்சவராம் ! யாகம் பண்ணவராம்! எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி. தான் போய் கழுநீர்ப் பானையில் விழுமாம்கற கதையா கனபாடிகள் பண்ணிட்டார்’னு என்னை ஊர் ஏசாதா? காறித் துப்பாதா?"
"சரி; உனக்கப்புறம் அவாள்ளாம் வந்து உன் பொண்ணைக் காப்பாத்துவாளாமா? அதைக் கேளு; என்ன பதில் சொல்றா பாப்போம்."
"நீ அன்னைக்கு அவளுக்கு தாழம்பூ வெச்சு தலைபின்னி அழகு பார்த்தப்பவே நினைச்சேன். உன் மனசில ரொம்ப நாளா இப்படி ஒரு விபரீத ஆசை இருக்குன்னு எனக்கு அன்னைக்கே தெரிஞ்சு போச்சு!" என்றார்.
"இப்ப நான் சொல்றது உனக்கு அக்ரமமாத்தான் தோணும். நீயே நிதானமா யோசிச்சுப் பார்த்தா நியாயம் புலப்படும்!"
"இப்படி ஒரு அதர்மத்துக்கு நான் சம்மதிச்சா தெய்வம் என்னை சும்மா விடாது."
"என்ன பண்ணும்?"
"நரகத்துக்கு அனுப்பும்!"
"அனுப்பட்டுமே தெய்வம் கொடுக்கிற தண்டனை அதுதான்னா, பாகீரதியோட எதிர்கால வாழ்க்கைக்காக நீ அதை தாராளமா ஏத்துக்கலாம், பரவால்லே" என்றாள் கெளரி.
"நீ இந்த அளவுக்குப் பேசுவேன்னு நான் நினைக்கலே,”
கெளரிக்கும் அப்பாவுக்கும் நடந்த வாக்குவாதத்தை தூண் மறைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்த பாகீரதி "இந்த அத்தை ஒரு அதிசயப் பிறவிதான்! அப்பாவிடம் எத்தனை சாமர்த்தியமா வாதாடறாள். ஆனாலும் இந்த அத்தைக்கு ரொம்ப தைரியம் ஜாஸ்தி!" என்று மனசுக்குள் வியந்து கொண்டாள்.
அடுத்தகணம் "பாகீரதி நீ இன்னைக்கு சிதம்பரம் போகப் போறே ! நாளைக்கே அங்கு மூர்த்தி வருவான் ! அத்தை உனக்குத் தாழம்பூ வெச்சுத் தலைபின்னி விடுவா! காசு மாலையைக் கழற்றி உன் கழுத்துல் போடுவா! அந்த அலங்காரத்தை மூர்த்தி பார்ப்பான்" என்று அவள் உள் மனம் உற்சாகத்தில் விசிலடித்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top