- Joined
- Nov 8, 2019
- Messages
- 228
- Reaction score
- 23
ஷேர் மார்க்கெட் சூதாட்டமா?
தினசரி வாழ்வில் நான் கடந்து வரும் ஆட்களிடம் பங்குச் சந்தை
தொடர்பான இரண்டு கேள்விகளை எதிர் கொள்கிறேன்.
- ஸார்.. ஷேர் மார்க்கெட்னா சூதாட்டம்னு சொல்றாங்களே. நீங்க ஏன் ஸார் எப்ப பாத்தாலும் அதைப் பத்தியே பேசறீங்க?
- இப்ப என்ன ஷேர் வாங்குனா நல்லா போகும்? சும்மா சொல்லுங்க ஸார்.. நாங்களும் நாலு காசு பாக்கறோமே!!
இந்த இரண்டு கேள்வியும் வேவ்வேறானவையாக உங்களுக்குத் தோன்றலாம். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் இரண்டும் ஒன்றுதான் என்பது புலப்படும். என்னடா பங்குச்சந்தை என்றாலே சூதாட்டம் என்று தெறித்து ஓடுகிற ஆளின் கேள்வியும், பங்குச்சந்தையைப் பற்றி தெரிந்து கொண்டு என்ன வேர் வாங்கலாம் என வினவும் ஒருவரின் கேள்வியும் எப்படி ஒன்றாகும் என நினைக்கிறீர்களா?
இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடை தேடும் முயற்சியில் இறங்கும் பட்சத்தில் நமக்குக் கிடைக்கும் பதிலின் ஆழத்தில் அடங்கியிருக்கிறது வாழ்க்கை எனும் விடுவிக்க முடியாத விடுகதையின் விடைகள்.
வரலாறு நெடுகிலும் நாம் கண்டிருக்கிறோம். ஒற்றைக் கேள்வி சில சாமானியர்களை ஞானிகளாக மாற்றியிருக்கிறது. சிலரது தன்மானத்தை உசுப்பி விட்டு கற்பனைக்கும் எட்டாத விஷயத்தை சாதிக்கத் தூண்டியிருக்கிறது. சில சாம்ராஜ்ஜியங்கள் சிதறுண்டு போகக் காரணமாக இருந்திருக்கிறது. சிலரது அறிவுத் தேடலைத் முடுக்கி விட்டு மாபெரும் உயரங்களுக்குச் செல்ல உதவியிருக்கிறது.
கேள்விகளை ஏவுவது பதிலைக் கோருவதற்காக மட்டுமல்ல. செயலைக் கோருவதற்கும் தான். சிந்தனையைத் தூண்டுவதற்கும் தான். பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே! எம்.ஜி.ஆர். பாடல் கூட உள்ளதே.
தமிழக கல்வித் துறை செயலாளராக இருந்த உதயசந்திரனை நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் பெற்ற ரேங்க் அறிவிப்பதில்லை என்ற முடிவு உட்பட பள்ளிக் கல்வித் துறையில் பல மாற்றங்களை புகுத்துவதில் அவரது பங்கு முக்கியமானது. ஆனால் அவர் IAS ஆனதற்கு முக்கியமான காரணம் அவர் பள்ளியில் படித்த போது ஆசிரியர் கேட்ட கேள்வி.
அந்த ஆசிரியர் வகுப்பு ஆரம்பிக்கும் முன்னர் பாடம் சம்பந்தமான கேள்விகளை கேட்காமல், “பஞ்சாப் முதலமைச்சர் யார்?” என்ற ரீதியில் கேட்பாராம். அது பொது அறிவின் மீதான காதலை உதயசந்திரனுக்கு ஊட்டியிருக்கிறது. அப்படியொரு கேள்வி கேட்பதால் தன் மாணவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாவார் என்றெல்லாம் அந்த ஆசிரியர் நினைத்திருக்க மாட்டார். எனினும் அவர் கேட்ட கேள்விக்கான பதிலைத் தேடும் பயணம் ஒரு மாணவனை எத்தனை தூரம் கொண்டு செல்லும் என்பது உதயசந்திரன் வடிவில் நம் முன்னால் சான்றாக வந்து நிற்கிறது.
அப்படியொரு கேள்வியாகத்தான் ஷேர் மார்க்கெட்னா சூதாட்டம்னு பேசிக்கறாங்களே?” என 19 வயது இளைஞர் ஒருவர் கேட்டார்.
வாரன் பஃப்ட்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்து விட்டு அவரைப் போலவே பணக்காரன் ஆகும் கனவு வந்திருக்கிறது அந்த இளைஞருக்கு. 19 வயது வாழ்க்கையை ஆரம்பிக்கும் வயது. ஏதேனும் ஒரு துறையில் நுழைந்து அதில் நிபுணத்துவம் எய்தி அந்தத் துறையின் உச்சத்துக்கு செல்லலாம். ஆனால் அவருக்கு பொறுமையில்லை.
இணைய தளத்தில் இயற்கை உணவு பற்றி நிறைய கருத்துச் சொல்கிற ஒரு பிரபலம் சொன்னாராம். ஷேர் மார்க்கெட் மாபெரும் சூதாட்டக்களம். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஷேர்களை ஏற்ற முடியுமாம். இறக்க முடியுமாம். அவர் அது போல எத்தனை முறை ஏற்றி இறக்கியிருக்கிறார் என்று கேட்டேன். பதிலில்லை. இப்படித்தான் நமக்கு தப்புத் தப்பான கற்பிதங்களை சொல்லி வைத்திருக்கிறார்கள். குறிப்பாக நாம் பேசுவதை நாலு பேர் கேட்கிறார்கள் என்ற நினைப்பு வந்தவுடன் ஒட்டிக்கொள்ளும் மேதாவித்தனம் இருக்கிறதே.... அப்பப்பா!“ஷேர் மார்க்கெட் பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டு அதுல கூட நீங்க ஈடுபடலாம்” என்றேன்.
“அது வேண்டாம் ஸார். சூதாட்டம்”
“யாரு சொன்னாங்க?”
ஷேர் மார்க்கெட் சூதாட்டம் என்றால் நீங்கள் மாநகர வீதியில் இரு சக்கர வாகனம் ஓட்டுவதும் சூதாட்டம். திருமணம் செய்து கொள்வதும் சூதாட்டம். அவ்வளவு ஏன்... நமது நாட்டின் முதுகெலும்பாக நினைக்கும் விவசாயம் கூட சூதாட்டம்தான். இன்னும் சொல்லப் போனால் ஷேர் மார்க்கெட்டை விடப் பெரிய சூதாட்டம் விவசாயம்.
மழை, வெயில், புயல், பூச்சிகள், நோய் தாக்குதல் என பல்வேறு சக்திகளோடு பகடையாடி வெள்ளாமையை விளைவித்தாலும் அது என்ன 'விலை விக்கும்” என்று தெரியாது. குடியானவன் போட்ட மூலதனம், அவனது உழைப்பிற்கான கூலி என்றெல்லாம் கணக்குப் போட்டு பார்த்தால் சில நேரங்களில் நட்டமே மிஞ்சும்.
ஆனால் விவசாயிக்கு தெரியும். எந்தப் பருவத்தில் பயிரிட வேண்டும். எப்போது மழைக் காலம், எப்போது கோடை காலம், எப்போது காற்றுக் காலம், எந்தக் காலத்தில் என்ன விதைக்கலாம், எந்தப் பருவத்தில் எது வளரும், எது அழுகும், எது கருகும், எது விற்கும் என இயற்கையோடு பழகி ஓரளவிற்கு புரிதலை உருவாக்கி வைத்திருக்கிறார் அவர்.
பாட்டனார் விவசாயம் செய்ததை பார்த்து வளர்ந்திருக்கிறார். தகப்பனார் விவசாயம் செய்ததை உடனிருந்து கற்றிருக்கிறார். அதனால் அந்த உழவுத் தொழிலின் நெளிவு சுழிவு தெரியும். அதையும் தாண்டி சில சமயங்களில் இயற்கையோ, சந்தையோ அல்லது இரண்டுமோ வஞ்சித்து விடுவதுண்டு. இம்மாதிரியான ரிஸ்க் எல்லாத் தொழிலும் இருக்கும். அதை அறிந்துதான் குடியாவன் விதைக்கிறான்.
ஆனால் விவசாயம் பற்றி எதுவுமே தெரியாத சாஃப்ட்வேர் ஆசாமி, “நான் ஒரு பத்து ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்யலாம்னு இருக்கேன். இந்த விவசாயிங்க எல்லாம் என்னமா சம்பாதிக்கிறாங்க தெரியுமா ப்ரோ.. இத்தனைக்கும் அவங்க வருமானத்துக்கு நோ இன்கம்டேக்ஸ்” என்று சொன்னால் எப்படியிருக்கும்!
ஒரு தொழிலைப் பற்றி எதுவுமே தெரியாமல் அது இலாபகரமான தொழில் என்ற நினைப்பில் பணத்தையெல்லாம் கொட்டி பத்து ஏக்கர் நிலம் வாங்குவது தான் சூதாட்டம். அதே போலத்தான் ஷேர் மார்க்கெட் சூதாட்டம் என்ற தப்பான நினைப்பில் அந்தப் பக்கமே போகாமல் இருப்பதும்.
என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது சூதாட்டம் அல்ல. அதைப் பற்றி ஒன்றுமே புரிந்து கொள்ள முயற்சிக்காமல் ஒதுங்கிப் போவதுதான் சூதாட்டம். குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி உடும்புப் பிடியாக ஒரு எண்ணத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு இருப்பதால் தொடர்ச்சியாக புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும் முட்டுக்கட்டை போட்டு, மூளை துருப்பிடித்துப் போக அனுமதிக்கிறோமே அதுதான் சூதாட்டம்.
பங்குச் சந்தையை கவனிக்கத் தொடங்குகிற ஒருவனின் அறிவு கவட்டி கவட்டியாக விரியும். அவ்வாறு அறிவு அகலமாகாமல் தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் ஆப்புக்கு பெயர்தான் ஷேர் மார்க்கெட் சூதாட்டம்' எனும் மனத்தடை.
ஷேர் மார்க்கெட்டில் நுழைவது எப்படி, நுழைந்து என்ன செய்வது, எப்படி/எதைச் செய்வது என்ற வழிமுறைகளுக்கெல்லாம் முக்கியம்தான்.
அதற்கு முன் ‘இது சூதாட்டம் கிடையாது’ என்ற மனநிலை முக்கியம்.
முதல் கேள்வியின் பதிலாகக் கிடைத்த மனநிலையில் இருந்து, “இப்ப என்ன ஷேர் வாங்குனா நல்லா இருக்கும்?” என்ற இரண்டாவது கேள்வியின் பதிலாக வழிமுறை பிறக்கும்.
லைக் பண்ணாட்டியும் பரவாயில்லை... ஷேர் பண்ணுங்க...