innaiki ud rombawe emotional a irukkum friends.. heroinoda lifela nadandhadhu reveal aaga pogudhu.. so idha personal a eduthuka wenam.. எல்லாமே கற்பனை தான்..
-----------------------------------------------------------
(1)
தன் முழங்கால்களை கட்டிக் கொண்டு அதில் முகம் புதைத்து மொட்டை மாடியில் ஒரு மூலையில் அமர்ந்து விம்மி விம்மி அழுதுக் கொண்டிருந்தாள் ஆருத்ரா. எப்போதும் தன் உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாதவள் அவளின் தியாவின் நினைவு அதிகம் வரும்போதே இவ்வாறு உடைப்பெடுத்து அழுவாள்.
தன்னவளை இவ்வாறான நிலையில் கண்டவனுக்கு தானாகவே கண்கள் கலங்க வேக எட்டுக்களை வைத்து அவளை நோக்கி விரைந்தான் ஆர்யன். அவளருகில் அமர்ந்தவன் அவளை இழுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொண்டு இறுக்கியணைத்து,
"ஆரு என்னாச்சு டா.. ஏன் இப்பிடி அழுகுற.. ப்ளீஸ் அழாத டா.. " என தழுதழுத்த குரலில் சொல்ல,
அவளோ தன்னவனுடன் இன்னும் ஒன்றி அவன் நெஞ்சில் முகத்தை புதைத்து விடாது அழ ஆர்யனும் அவளை அணைத்தவாறு அவள் அழுது முடிக்கும் வரை அமைதியாகவே இருந்தான். சிறிது நேரத்தில் அவள் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட அவளது முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்தியவன்,
"ஆரு நா எப்பவும் உன் வாழ்க்கைல நடந்தத நீயா சொல்ற வரைக்கும் தெரிஞ்சிக்க ஆசைப்படல உனக்கு எப்போ தோணுதோ அப்போ சொல்லட்டும்னு விட்டுட்டேன்... ஆனா, நீ இப்பிடி இருக்குறத என்னால பார்க்க முடியல ஆருமா.. உன் மனசுல இருக்கிறத ப்ளீஸ் சொல்லிறு டா.." என அவளிடம் கண்கள் கலங்க கெஞ்ச,
அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள்,
"நா.. நா தான் தியாவ கொன்னுட்டேன்.. என்னால தான் அவ மும்பைக்கு வந்தா.. என்னால தான் அவ என்னை விட்டு போயிட்டா.. எல்லாத்துக்கும் நா தான் காரணம்.." என அவள் பாட்டிற்கு பிதற்ற,
ஆர்யன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டு,
"அப்பிடி எல்லாம் இருக்காது ஆரு.. நீ தப்பு பன்றவ இல்லை டா.. இப்போவாச்சும் என்னாச்சுன்னு சொல்லு டா.." என கேட்க, அந்த சம்பவத்தை நினைத்தவளது உள்ளம் சற்று நடுங்கினாலும் அவனது தோளில் சாய்ந்தவாறே கண்களில் கண்ணீர் வழிந்தோட கூறத் தொடங்கினாள்..
மூன்று வருடங்களுக்கு முன்,
சென்னை,
விமானநிலையத்தில்,
"ஹே எங்க டி இருக்கீங்க.. எவ்வளவு நேரம் வெயிட் பன்றது.." என ஆருத்ரா தொலைபேசியில் கத்திக் கொண்டிருக்க கயலோ அவள் அருகில் போவோர் வருவோர் வேடிக்கை பார்க்க கொண்டு வந்திருந்த பெரிய சூட்கேஸில் சொகுசாக அமர்ந்துக் கொண்டிருந்தாள்.
அன்று தான் ஆருத்ராவும் கயலும் அமெரிக்காவில் தமது இரண்டு வருட படிப்பை முடித்து விட்டு சென்னைக்கு வந்திருந்தனர். வந்தவர்களை நேரத்திற்கு வரவேற்காது அவர்களின் தோழிகள் அவர்களை காக்க வைக்க உச்ச கட்ட கடுப்பில் கத்திக் கொண்டிருந்தாள் நம் நாயகி.
"ருத்ரா பேபி.. கயலு..." என்ற குரல் கேட்க சட்டென திரும்பியவர்கள் "தியா.." என்று கத்தியவாறு தமது பொருட்களை அங்கேயே போட்டு விட்டு விமான நிலையத்தில் இருப்பவர்கள் இவர்களின் கத்தலில் பதறியதையும் கண்டுக்காது ஓடிச் சென்று தியா, துர்கா, ரியா, ஆதிராவை கட்டியணைத்து அழுது கொஞ்சி ஒருவழிப்படுத்தி விட்டனர். பின்பு எப்படியோ தமது கொஞ்சல் விசாரிப்புக்களை முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தனர் ஆறு பேரும்.
தியா ஆசிரமத்திலிருந்து வெளியானதும் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருக்க மற்ற ஐவரும் அவளுடனே அங்கு தங்கியிருந்தனர். வீட்டுக்கு வந்த ஆருத்ரா ஃப்ரிட்ஜை திறந்து ஒரு ஆப்பிளை எடுத்து சாப்பிட போக அவள் கைகளில் தட்டிய தியா,
"ருத்ரா பேபி.. என்ன பழக்கம் இது.. இதான் உனக்கு நா கத்து தந்ததா.." என கேட்டு முறைக்க,
"அச்சோ பேபி.. எனக்கு ரொம்ப பசிக்கிது.. ஃப்ளைட்லயும் எதுவும் சாப்பிடல.. ப்ளீஸ் இந்த ஒரு தடவை.." என ஆரு கெஞ்ச,
"நோ.. நோ.. முதல்ல ஃப்ரெஷ் ஆகிட்டு வா.. கயல் நீயும் தான்.." என இருவரையும் பிடித்து அறையில் தள்ள, ஆருவின் கெஞ்சலை நினைத்து சிரித்து கொண்டிருந்தனர் ரியா, ஆதிரா, துர்கா..
ஆருத்ரா மற்றவர்களிடத்தில் கெஞ்சுவதை எல்லாம் பார்க்கவே முடியாது. அவளுடைய கெஞ்சல்கள் கூட தியாவிடம் மட்டுமே..
வந்த அன்று களைப்பிலும் தூக்கத்திலுமே ஆருத்ராவிற்கும் கயலுக்கும் நாள் கழிய,
அடுத்த நாள்,
"ருத்ரா பேபி ஓடாத நில்லு.."என்று அவளை பிடிக்க தியா முயல,
"நோ ருத்ரா அவ கைல கொடுத்துறாத.." என மற்றவர்கள் கத்த,
"வாவ் பேபி.. இவ்வளவு ஹேன்ட்சமா இருக்காரு.. இதான் உன் ஆளா... ப்ளீஸ் பேபி இவரையே ஓகே பன்னிரு.. " என தியாவுடைய ஃபோனை பார்த்தவாறே ஆரு ஓட,
"கிறுக்கி அவன் ஒன்னும் என் ஆளு இல்லை.. அவன் என்னோட டீம் ஹெட் அவ்ளோ தான்.. ஃபோன கொடு டி.." என தியா அவளை துரத்தி செல்ல, இவ்வாறு இவர்கள் ஓடி பிடித்து விளையாடி அந்த வீடே அல்லோலப்பட்டது. பின் களைத்து போய் தரையிலேயே தொப்பென்று அமர்ந்தார்கள் ஆறு பேரும்.
"ஹே காய்ஸ்.. நாம எங்கயாச்சும் ஒன்னா போலாமா.. டூர் மாதிரி.." என துர்கா கேட்க,
"வாவ் சூப்பர் ஐடியா டி.. ரொம்ப நாள் ஆச்சு ஒன்னா வெளில போய்.." என ரியா ஆதிரா குதூகலிக்க,
"நோ நோ.. எனக்கும் கயல்க்கும் வேலை இருக்கு.. அங்க நாங்க வேலை பார்த்த கம்பனியோட மும்பை ப்ரான்ச்சுக்கு(Branch) முக்கியமான வேலை விஷயமா போக வேண்டியிருக்கு.. சோ, இன்னொரு நாள் பார்க்கலாம்.." என ஆரு சொல்ல,
"ப்ளீஸ் டி.. எல்லாரும் ஒன்னா வெளில போய் எவ்வளவு நாள் ஆச்சு.. ஓஃபீஸ்க்கு லீவ் போடுறோம் த்ரீ டேய்ஸ் தான்.. ஒன்னா போயிட்டு வந்துரலாம்.." என ரியா கெஞ்ச,
"அது வந்து.." என பேச வந்த கயலை குறுக்கிட்ட தியா,
"சரி அப்போ மும்பைக்கே போகலாம்.. நீங்களும் வேலைய முடிச்சாப்ல இருக்கும் நாங்களும் டூர் வந்த மாதிரி இருக்கும்.." என தியா சொல்ல,
சற்று யோசித்த ஆருவும் கயலும்
"அப்போ ஓகே.. மும்பைக்கே போகலாம்.. போறோம்.. சரக்கு அடிக்கிறோம்.. என்ஜோய் பன்றோம்.." என குதூகலமாக கோரஸாக சொல்ல,
'அமெரிக்கா போய் ரொம்ப கெட்டு போயிட்டீங்க.. உங்கள.." என தியா அவர்களை அடி வெளுத்து வாங்கி விட்டாள்.
இவர்கள் இவ்வாறு அரட்டை அடித்துக் கொண்டிருக்க,
"நா உள்ள வரலாமா.."என்ற குரலில் சந்தோஷமாக திரும்பிய ஆறு பேரும் "அம்மா.." என்று ஓடிச்சென்று வாசலில் நின்றிருந்தவரை கட்டியணைத்துக் கொண்டனர். அவர் தான் நிவேதா அம்மா இவர்கள் வளர்ந்த ஆசிரமத்தின் நிர்வாக பொறுப்பாளர்.
"என்னமா அம்மாவ மறந்துடிங்க போல.." என அவர் நக்கலாக கேட்க,
"என்ன மா நீங்க.. இரண்டு நாளைக்கு முன்னாடி கூட இரண்டு மணி நேரமா உங்க கூட தான் பேசினோம்.. அப்றமும் இப்பிடி சொன்னா என்ன மா.." என சிணுங்கினாள் கயல்.
"இனி தியா பாடு திண்டாட்டம் தான் போல.. இதுங்ககிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க போறா.." என அவரும் அவர்கள் வயதுக்கு ஏற்றாற் போல் விளையாட கன்னிகளும் அவர் கூற்றில் சிணுங்கிக் கொண்டனர்.
"இந்தாங்க மா.."என அவர் கையில் பணத்தை கொடுத்தாள் தியா.
"நா எத்தனை தடவ மா சொல்றது.. பொண்ணுங்க தனியா கஷ்டப்பட்டு உழைக்கிறீங்க.. ஆரம்பத்திலிருந்து ஆசிரமத்திற்காக கஷ்டப்பட்டதெல்லாம் போதும் உங்களுக்காக நல்ல வாழ்க்கையை அமைச்சிக்கோங்க..." என நிவேதா அம்மா மறுக்க,
"என்ன மா நீங்க.. எங்ளுக்கு வாழ்க்கை கொடுத்ததே எங்க வீடு தான்..எங்களுக்கு அப்பிடி என்ன மா செலவு.. ப்ளீஸ் மா வாங்கிக்கோங்க.." என ஒவ்வொரு மாதமும் வழக்கம் போல் கெஞ்சி கூத்தாடி மற்றவர்களும் "ப்ளீஸ் மா.." என கெஞ்ச பின் புன்னகையுடன் பணத்தை வாங்கிக் கொண்டார் நிவேதா அம்மா.
"எப்பவுமே இப்பிடி சந்தோஷமா ஒத்துமையா நீங்க இருந்தாலே எனக்கு போதும்.. வாழ்க்கைல என்ன நடந்தாலும் ஒருத்தரஒருத்தர் எப்பவுமே விட்டுக் கொடுக்காதீங்க.. கடவுள் எப்பவும் உங்க கூட இருப்பார்.. எதாவது பிரச்சினைன்னா அம்மாவ கூப்பிட மறக்க கூடாது புரியுதா.." என சில அறிவுரைகளை வழங்கியவர்,
"சரி மா நா கிளம்புறேன்.. நீங்க பத்திரமா இருந்துக்கோங்க.. ருத்ரா சேட்டை பன்ன கூடாது.." என அவளிடம் ஒற்றை விரல் நீட்டி போலி மிரட்டல் விட்டவர் அவர்கள் சாப்பிட்டு போக சொல்லியும் மறுத்து அவசரமாக கிளம்பி விட்டார்.
இப்பிடியே நாட்கள் நகர இவர்கள் திட்டமிட்டது போல் மும்பை செல்வதற்கான நாளும் வந்தது. ஆனால், தமது மொத்த சந்தோஷமும் மும்பையில் சிதைந்து புதையப்போவதை அப்போது அவர்கள் அறியவில்லை.
முதல் இரண்டு நாட்களும் மும்பை பூராக சுற்றி பார்த்து விட்டு மூன்றாவது நாள் ஆருத்ராவின் வேலையை முடித்து விட்டு மீண்டும் சென்னை வருவதாக திட்டம் தீட்டியவர்கள் வாடகை கார் ஒன்றில் மும்பை நோக்கி புறப்பட்டனர்.
போகும் வழியெல்லாம் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடியவர்கள் முதல் இரண்டு நாட்களும் மும்பையில் பிரபலம் பெற்ற ஜூஹூ பீச், கேட் வேய் ஒஃப் இந்தியா(Gate way of india) , எலிஃபென்ட் கேவ்ஸ்(Elephant caves) என சுற்றி திரிந்து மெரினா ட்ரைவ்(Marina drive) இலிருந்து அழகாக தெரியும் சன் செட்டை (Sun set) பார்த்தே வீடு திரும்பியவர்கள் இரண்டு நாட்கள் தூங்காது சுற்றித் திரிந்த களைப்பிலேயே உறங்கிப் போனார்கள்.
அடுத்த நாள் அதாவது அவர்களின் வாழ்க்கையையே புரட்டி போட்ட நாளும் வேதனையை சுமந்து கொண்டே விடிந்தது.
கட்டிலில் படுத்திருந்த தியா விழிப்பு தட்ட எழும்பி அமர்ந்தவள் அவள் மடியில் எப்போதும் போல் உறங்கிக் கொண்டிருக்கும் ஆருவின் முகத்தை பார்த்து புன்னகையை சிந்தி,
"எவ்வளவு பெரியவ ஆனாலும் இன்னும் என் மடியில படுத்து தூங்குற அதே அஞ்சு வயசு குட்டி ருத்ரா பேபி தான்.." என அவள் கன்னம் கிள்ளியவள்,
"ருத்ரா.. ருத்ரா எழுந்துரு.." என அவளை தட்ட
கண்களை கசக்கிக் கொண்டு கண்களை திறந்தவள் தியா வயிற்றை மீண்டும் கட்டிக் கொண்டு,
"தியா பேபி ப்ளீஸ்.. இன்னும் கொஞ்ச நேரம்.." என கெஞ்ச உண்மையில் தியா கண்களுக்கு அவள் குழந்தையாகவே தெரிந்தாள்.
"நோ ருத்ரா இன்னைக்கு நீ ஓஃபீஸ் போகனும்.. உன் வேலைய முடிச்சா தான் நாளைக்கு காலைல நாம கிளம்ப முடியும்.." என அவளுக்கு தியா நினைவு காட்ட,
அடித்து பிடித்து கட்டிலிலிருந்து தாவி குதித்தவள்,
"ஹோ ஷீட்.. மறந்தே போயிட்டேன்.. தேங்க்ஸ் பேபி.." என தியாவின் கன்னம் கிள்ளி கொஞ்சி கயலை தேடி சென்று அடுத்த அறையில் ஆதிராவின் மேல் மல்லாக்காக படுத்துக் கொண்டிருந்தவளை கஷ்டப்பட்டு எழுப்பி குளியலறையில் தள்ளி தானும் குளித்து விட்டு ரெடி ஆகி வந்தாள் ஆருத்ரா.
கருப்பு பேன்ட், வெள்ளை ஷார்ட் அதன் மேல் கருப்பு ப்ளேசர் அணிந்து முடியை கொண்டையிட்டு கைகளில் சில ஃபைல்கள் பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்த தியா அவள் அருகில் வந்து அவளுக்கு நெட்டி முறிக்க ஆருத்ராவோ 'க்ளுக்' என சிரித்து விட்டாள்.
"ருத்ரா பேபி நீ பார்க்க எப்பிடி இருக்க தெரியுமா.. சூப்பரா இருக்க.. இன்னும் கொஞ்ச நாள்ல இந்த ஐடி ஃபீல்ட்ல பெரிய ஆளா வருவ பாரு ஆனா, ஒன்னே ஒன்னு தான் நினைக்கும் போது ரொம்ப கவலையா இருக்கு.." என தியா முகத்தை சோகமாக
வைக்க,
"என்ன கவலை மேடம்க்கு.." என புருவத்தை உயர்த்தி ஆருத்ரா நக்கலாக கேட்க,
"உன்ன எந்த மகராசன் தூக்கிட்டு போக போறானோ.. என் அண்ணனுக்கு
அது குடுத்து வைக்கல.." என பெருமூச்சு விட்டவாறு தியா சொல்ல,
"இன்னும் அந்த நெட்டப்பையன பத்தி பேசுறத நீ விடலையா.. உன்ன.." என்று அவளை அடித்த ஆருத்ரா பின் கயல் வர எல்லோரிடமும் பல முறை கவனமாக இருக்குமாறு கூறிவிட்டு வெளியேற எத்தனித்தவள் திரும்பி தியாவை பார்க்க ஏதோ மனசுக்கு நெருடலாகவே இருந்தது அவளுக்கு.
ஓடி வந்து தியாவை அணைத்து கன்னத்தில் முத்தம் வைத்து கயலுடன் சிரிப்புடன் சென்றவளுக்கு தெரியவில்லை. அதுவே அவள் கடைசியாக தியாவுடன் இருந்த சந்தோஷமான தருணம் என்று..
அன்று இரவு பத்து மணிக்கு,
ஆருத்ராவுக்கும் கயலுக்கும் வேலை இருந்ததால் இன்னும் சற்று நேரத்தில் வருவதாக கூறியிருக்க தியாவுக்கோ மும்பையின் இரவு நேர அழகை தன் கேமராவில் படம்பிடித்து கொள்ள ஆசையாக இருந்தது.
ரியா அறையில் படுத்திருக்க தன் கேமராவை எடுத்தவள் சோஃபாவில் உட்கார்ந்து லேப்டாப்பில் எதோ வேலை செய்துக் கொண்டிருந்த ஆதிரா துர்காவிடம்,
"என் கூட யாராச்சும் வர்ரீங்களா.. வெளில போயிட்டு வரலாம்.." என கேட்க,
"தியா ருத்ரா சொன்னா தானே நைட் வெளில போக கூடாதுன்னு.. வீட்டுலயே இருப்போம்.." என துர்கா சொல்ல,
"அவக்கிட்ட நா சமாளிச்சிக்கிறேன்.. எப்பிடியும் அவ வர நேரமாகும் அதுக்குள்ள நா வந்துருவேன்.. இங்க பக்கத்துல இருக்குற ப்ரிட்ஜ்க்கு தான் போறேன்.. சோ, நீங்க சேஃபா இருந்துக்கோங்க.." என கூறியவள் வெளியே செல்ல எத்தனிக்க,
"தியா சொன்னா கேளு.. ரொம்ப லேட் ஆகிருச்சி இந்த டைம் தனியா வெளில போறது சேஃப் இல்லை.. எங்களுக்கும் முக்கியமான வேலை இருக்கு எங்களாலும் வர முடியாது சோ, நீயும் போவாத.." என ஆதிரா அவளை போக விடாது மறுக்க,
"நீங்க வேலைய பாருங்க.. பக்கத்துல தான்.. சீக்கிரம் வந்துருவேன் செல்லம்ஸ்.." என கூறிக் கொண்டே அவர்களின் பேச்சை கேட்காமல் அவள் வெளியேற அது அவளுக்கே வினையாக அமைந்தது.
அடுத்த அரை மணி நேரத்தில் ஆருவும் கயலும் வீட்டை அடைந்தார்கள். தியாவை தேடிய ஆரு துர்காவிடம்,
"ஹே தியா எங்க.." என கேட்க,
"இங்க பக்கத்துல இருக்குற ப்ரிட்ஜ்க்கு சுத்தி பாத்துட்டு வரேன்னு போனா.." என ஆதிரா சொல்ல,
"என்ன வெளில போனாளா.. எப்போ
போனா.." கயல் பதட்டமாக கேட்க,
"ஹாஃப் அன் அவர் (Half an hour) முன்னாடி தான்.." என சொன்ன துர்கா அடுத்த நொடி கன்னத்தில் கை வைத்துக் கொண்டு நின்றாள். ஆம் ஆருத்ரா தான் அறைந்திருந்தாள்.
முகம் கோவத்தில் சிவந்திருக்க "யாரக் கேட்டு அவளை வெளில அனுப்பினீங்க.. அதுவும் தனியா அவளை அனுப்பி விட்டுட்டு நீங்க என்ன பன்னிக்கிட்டு இருக்கீங்க.. " என ஆவேசமாக கத்தியவள் அடுத்த நொடி அந்த இடத்தை நோக்கி ஓட அந்த இடத்தை சுற்றி யாருமே கண்ணுக்கு புலப்படவில்லை.
பின் வந்த தோழிகளும் "தியா.. தியா.." என அங்கும் இங்கும் கத்திக் கொண்டே தேட கடைசியாக அவளுடைய கேமரா மட்டுமே அந்த ப்ரிட்ஜ்ஜின் ஓரத்தில் கிடந்தது.
என்ன செய்ய ஏது செய்ய என ஆருத்ராவிற்கு ஒன்றுமே புலப்படாமல் தலையே சுற்ற அந்த இடத்திலே முட்டி போட்டு அமர்ந்தவள் கதறி அழ அவளை அணைத்துக் கொண்ட ஆதிராவும் ரியாவும் கண்ணீரை விட்டுக் கொண்டே அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்துக் கொண்டிருந்தனர்
கயலுக்கு அவர்கள் ஆசிரம பொறுப்பாளர் நிவேதா அம்மா நியாபகத்துக்கு வர அவருடைய துணையும் இக் கன்னிகளுக்கு இப்போது தேவையாக இருக்க உடனே தொலைபேசியில் அழைத்தவள்,
"அம்மா.. அம்மா தியாவ காணோம் மா.. என்ன பன்றதுன்னே தெரியல பயமா இருக்கு மா.." என கதறி அழுதாள்.
அவருக்கோ தூக்கி வாரிப்போட்டது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கேட்டவர் இரவோடு இரவாக கிளம்பி வர சரியாக அவர் காலையில் வந்து சேர்வதற்கும் இரவே பொலிஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து தாங்களும் அங்கும் இங்குமாக தேடி சோர்ந்து போய் அழுது வீங்கிய முகங்களுடன் வீட்டுக்கு வந்து தோழிகள் சேர்வதற்கும் சரியாக இருந்தது.
அவரை கண்ட பெண்கள் ஐவரும் ஓடிச்சென்று அவரை கட்டியணைத்து அழ அவருக்குமே அவர்களின் கதறலில் கண்கள் கலங்கி விட்டது. அந்த நேரம் ஆருத்ராவிற்கு தொலைப்பேசி அழைப்பு வர, அதை எடுத்த நிவேதாவிடம் காவல் அதிகாரி ஒருவர்,
"ஹெலோ மேடம்.. இங்க ஒரு இடத்துல ஒரு பொண்ணோட சடலம் கிடைச்சிருக்கு.. அது நீங்க தந்த ஃபோட்டோல இருந்த பொண்ணு மாதிரி தான் தெரியுது.. நீங்க வந்து உறுதி பன்னிங்கன்னா அடுத்த ஆக வேண்டியத பன்னலாம்.." என சொல்ல,
அதை கேட்ட நிவேதாவிற்கோ ஒரு நொடி உடல் நடுங்கி விட்டது. இடத்தை அறிந்து அழைப்பை துண்டித்தவர் பெண்களிடம் ஏதேதோ காரணம் சொல்லி அழைத்து சென்றார்.
அந்த குப்பைகள் போடும் இடத்தில் மக்கள் கூட்டம் நிரம்பியிருக்க சில காவல் அதிகாரிகளும் சூழ்ந்திருக்க இதைப்பார்த்த பெண்களுக்கோ உடல் நடுக்கமே ஏற்பட்டு விட்டது. அது வெளிப்படையாகவே தெரிய மனதில்,
'அது தியாவா இருக்கக் கூடாது கடவுளே...' என வேண்டிக் கொண்டவர்களின் வேண்டுதல் அந்த கடவுளுக்கு கேட்கவில்லையோ என்னவோ..
அவர்களை சடலத்துக்கு அருகில் அழைத்து சென்ற அதிகாரி முகத்தை மூடியிருந்த வெள்ளை துண்டை எடுத்து அமைதியாக நிற்க, உதடு கிழிந்து இரத்தம் உறைந்து போய் முகத்தில் அங்கும் இங்கும் பற்தடங்கள் கீறல்கள் என மிருகம் வேட்டை ஆடியது போல் சிதைந்திருந்த தியாவை பார்த்தவர்களுக்கோ அவள் உடல் இருக்கும் நிலை நன்றாகவே புரிந்தது.
தியாவை அக் கோலத்தில் பார்த்த ஆரு அடுத்த நொடி மயங்கி விழ அவளை தாங்க கூட தெம்பில்லாமல் மற்ற நால்வரும் அதே இடத்தில் "தியா.." என்ற அலறலுடன் கதறி அழ ஆரம்பித்தனர். நிவேதா அம்மாவோ தான் பார்த்து வளர்த்த பிள்ளையை இப்பிடி ஒரு நிலையில் கண்டதில் துடித்தவர் தன் உணர்ச்சிகளை அடக்கி அடுத்து ஆக வேண்டிய அனைத்து காரியங்களையும் செய்தார்.
தியாவின் உடலை சென்னைக்கு கொண்டு வந்தவர்கள் அங்கேயே அதற்கான காரியங்களை செய்தனர். ஆரு கடைசியாக தியாவை அந்த இடத்தில் பார்த்தது மயக்கம் விழுந்தது தான் மயக்கம் தெளிந்த பிறகும் கூட கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் விடாது சுவற்றையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளால் தியா இனி இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள கூட முடியவில்லை. இவர்கள் தனியாக இருப்பது இப்போதைக்கு நல்லதுக்கு இல்லை என ஆசிரமத்திலேயே அவர்களை தங்க வைத்திருக்க ஆதிரா,கயல், ரியா, துர்கா ஒரு மூலையில் அழுது கரைந்தார்கள் என்றால் ஆருவோ தன் உணர்ச்சிகளை கூட வெளிப்படுத்தாது இருந்தாள்.