• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💕நெஞ்சம் மறப்பதில்லை.💕20.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,256
Reaction score
6,278
Location
India
IMG-20211115-WA0003.jpg
Hi friends ❣
நெஞ்சம் மறப்பதில்லை கதையின் அடுத்த பதிவோடு தங்களின் அன்பான ஆதரவை எதிர்பார்த்து என்றென்றும் அன்புடன் 🙏🏻🙏🏻🙏🏻
S.M.ஈஸ்வரி.🥰🥰🥰🥰

நெஞ்சம் மறப்பதில்லை.20.

அறுவைசிகிச்சை முடிந்திருந்தது.
அவசரசிகிச்சை பிரிவில் வெளியே அனைவரும் காத்திருந்தனர்.

அனைவரிடமும் பதற்றத்துடன் கூடிய அமைதியே நிலை கொண்டிருந்தது.

சண்முகமும், லஷ்மியும் இருபுறமும் அமர்ந்திருக்க, ஆதியா அவளவன் கண்விழிக்கும் நேரத்திற்காகக் காத்திருந்தாள்.

மங்கையர்க்கரசியும் ஆதியாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். மகனின் அதிரடி முடிவு அவருக்குமே ஆச்சர்யம்தான். நேற்றுவரை மகனுக்கு உதவிய பெண்ணாக நினைத்துக் கொண்டிருந்தவள், இன்று அவனின் மனைவியாக, தனக்கு மருமகளாக மாறியிருந்தாள். அவள்மீது மகன் கொண்ட காதலின் தீவிரம் அப்பட்டமாகப் புரிந்தது.

எதிர்பாராததை எதிர்பாருங்க அம்மணி என்று முன்தினம் இரவில் ஆதியாவிடம் கூறியவன், அடுத்து எடுத்த முடிவுகளெல்லாம் அதிரடிதான்.

விடிந்தவுடன் அவரவர் வேலையை முடித்துக் கொண்டு, பிள்ளைகளும் கிளம்பிவிட,
ஆதியாவை கைபிடித்து இழுத்து கொண்டு சண்முகம் மற்றும் லஷ்மியின் முன் வந்தவன்,
"ம்மா… நான் ஆதியாவை விரும்புறே… அவளும் தான்." என்றான் தடாலடியாக.

இருவரும் அதிர்ச்சியுடன் ஆதியாவைப் பார்க்க, "அவளை ஏன் பாக்குறீங்க? நேத்துல இருந்து அம்மணி குழப்பத்துல இருக்காங்க!"

"எதுக்கு?" என்று ஏற்கனவே கண்ணன் கொடுத்த அதிர்ச்சியில் இருந்தவர், விவரம் புரியாமல் கேட்க,

"புதுசா மேடம் தகுதி அதுஇதுன்னு பேசுறாங்க!" என்றான்.

அவன் கூறிய விதமே, ஆதியா மேல் அவன் கொண்ட விருப்பமும் ஆதியாவின் பயமும் இருவருக்கும் புரிந்தது.

"நியாயம் தானேப்பா! எங்களுக்கே இது அதிர்ச்சியா இருக்கு. இருந்தாலும், தன்னோட வாழ்க்கையை முடிவு பண்ற உரிமை அந்த பிள்ளைக்குதான் இருக்கு. கேசவன் இருந்தாலும் தன்மகளோட விருப்பத்தை தான் பாத்திருப்பார். ஆனா ஆதியாவோட வாழ்க்கையில எங்களுக்கும் அக்கறை இருக்கு!" என்று தன் பொறுப்பை சண்முகம் அவனுக்கு உணர்த்தினார்.

"அப்ப நான் ஆதியாவுக்கு பொருத்தம் இல்லைனு சொல்றீங்களா?"

"மனசு ஒத்துப்போனப் பின்னாடி பொருத்தம் என்னப்பா வேண்டி இருக்கு? பொருளாதாரம் தான் கொஞ்சம் இடிக்குது." என்றார் சண்முகம்.

"பொருளாதாரம் பாத்து தான் என்னை கூட்டிட்டு வந்தீங்களா?" என்றான் சற்றே குரல் உயர்த்தி.

"உதவி வேற. வாழ்க்கை வேற கண்ணா!" என்று லஷ்மி கூற,

"நீங்களும் இப்படி பேசுவீங்கேனு நான் எதிர்பாக்கலம்மா!" என்றான் சற்று உள்வாங்கிய குரலில்.

"அதிக நாள் உன்னோட பழகலை கண்ணா! ஆனா ஆதியாவுக்கு உன்னை விடப் பொருத்தமானவனை நாங்க பாக்கமுடியாது. இருந்தாலும் எதார்த்தம் பாத்தவங்க நாங்க. நாலையும் யோசிக்க வேண்டியிருக்குப்பா." என்று சண்முகம் கூறினார்.

இவ்வளவும் கேட்டுக் கொண்டு ஆதியா அமைதியாக நின்றிருந்தாள்.

"இவ என்னைத்தவிர இன்னொருத்தனை மனசாலும் நினைக்க மாட்டா! நானும் அப்படித்தான்!" என்றான் உறுதியான குரலில்.

"கண்ணனா உன்னோட முடிவு சரிதான். ஆனா சூர்யபிரகாஷ் என்ன சொல்லுவாரோ தெரியலியே?" என்றார் லஷ்மி.

"என்ன இவளும் அதைத்தான் சொல்றா. நீங்களும் அதையே சொல்றீங்க. கண்ணனோ, சூர்யாவோ ஆதியா தான் என் மனைவி. இதுதான் என்முடிவு. புருஷன் முடிவுதான் பொண்டாட்டி முடிவாகவும் இருக்கணும்! எந்த மாற்றமுமில்லை." என உறுதி கலந்த தொனியில் கூறிக்கொண்டிருக்க,

"சூர்யப்பிரகாஷ் மெல்ல வெளி வர்ற மாதிரியிருக்கே." என்றவாறே விஷ்வா உள்ளே வந்தான்.

"அங்கிள், அவன் முடிவு பண்ணிட்டான்னா யாராலும் அதை மாத்த முடியாது. உங்களுக்கு எந்த குழப்பமோ பயமோ வேண்டாம்." என்றவன்,

"சிஸ்டர்! நீங்க என்ன சொல்றீங்க?" என்று விஷ்வா, ஆதியாவைப் பார்த்து கேட்க,

"அதுதான் அவங்களே சொல்லிட்டாங்களே! புருஷன் முடிவுதான் பொண்டாட்டி முடிவுனு! எனக்கும் எந்த மாற்றமும் இல்லை!" என்றாள் அவனை கீழ்பார்வை பார்த்துக்கொண்டே.

"அப்படிப் போடு! இதுக்கு மேல நாம பேசுறதுக்கு ஒன்னுமில்ல!" என விஷ்வா கூறினான்.

"கடவுள் சித்தம் அதுதான்னா நாங்க என்ன சொல்ல முடியும்? நடப்பது நடக்கட்டும். ஆதியாவைப் பாக்கும் போதெல்லாம் நமக்கு ஒரு பையன் இல்லையேனு நினைச்சிருக்கேன். கண்ணன் அந்த குறைய தீக்க வந்த மாதிரி இருக்கு எங்களுக்கு." என்று லஷ்மி கூறினார்.

"சூர்யா! கிளம்பலாமா? அம்மா நேரா ஹாஸ்பிடல் வந்துர்றதா சொல்லிட்டாங்க." என்ற விஷ்வாவிடம்,

"தாத்தா எப்படியிருக்கார்?" என்றான்.

"வயசாயிருச்சுல்ல. உனக்கு ஆக்சிடன்ட்னு கேள்விப்பட்டதும் தாங்கமுடியாம நெஞ்சுவலி வந்துருச்சு. சின்னதா ஒரு ஹார்ட் ஆப்ரேஷன் பண்ணியிருக்கு. நேத்தே கண்ணு முழிச்சுட்டாரு. நீ இருக்கிற இடம் தெரிஞ்சுருச்சு, சீக்கிரம் வந்துருவான்னு சொல்லியிருக்கோம். வேற எதுவும் சொல்லல."- விஷ்வா.

"விஷ்வா ஒரு சின்ன வேலையிருக்கு." என்றவன்,

லஷ்மியிடம், "ம்மா... ஹாஸ்பிடல் போகுறதுக்கு முன்னாடி நான் ஆதியாவை கோயிலுக்கு கூட்டிட்டுப் போகலாம்னு இருக்கேன்.'' என்றான்.

அவர் சண்முகத்தைப் பார்க்க, அவரின் பார்வை ஒப்புதலில் அவரும் சம்மதித்தார்.

"ம்ம்… என்னமா பார்வையாலேயே பேசிக்கிறாங்க? நமக்கு வாச்சதும் தான் இருக்கே. மனுஷ மனசு படுறபாடு தெரியாம வாட்டியெடுத்துகிட்டு." என்று அலுத்துக் கொள்ள,

"உன்னை விட்டுக் கொடுக்க முடியாம அவ படுறபாடு தெரியலியா கண்ணா?" என்று லஷ்மி கேட்டார்.

"அதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் ம்மா!" என்றான்.

கோவிலில் கண்மூடி தன்னவனுக்காக அம்மனிடம் மனம் உருக வேண்டிக் கொண்டிருந்தாள். அவளவனோ அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான். கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றதினால் புடவையில் கிளம்பி வந்திருந்தாள். இளம்பச்சை கலரில் புடவையும், இளஞ்சிவப்பு பார்டரும், தலைப்பும் கொண்ட புடவை அவளை கொஞ்சும் கிளியாகவே மாற்றியிருந்தது. முதன்முதலாக தன்னவனொடு வெளியே செல்கின்ற மலர்ச்சி முகத்தில்.

புடவை கட்டிக்கொண்டு அறையை விட்டு வெளிவந்தவளைப் பார்த்தவன், சுற்றம் மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் மேய்ச்சல் பார்வையில் சங்கோஜப்பட்டவள், தலைகுனிந்து கொள்ள,

"டேய் சூர்யா! வாட்டர்ஃபால நிப்பாட்டுடா! நீ பாக்கறதைப் பாத்தா எனக்கே ஒருமாதிரியா இருக்குடா. சிஸ்டர் பாவம்டா." என்று காதருகினில் கிசுகிசுக்க,

"அதை அங்க சொல்லுங்க விஷ்வா! நான்தான் பாவம். அடுத்து எதை நினச்சு‌ குழம்புவான்னு தெரியாம தவிச்சுகிட்டிருக்கேன்."

"சரி நான் போய் கார ரிவர்ஸ் எடுக்கறேன். ரெண்டு பேரும் வாங்க." என்று கூறிவிட்டு சென்றான்.

"ஆதிம்மா! பூவை வச்சுக்க!" என்று
நெருக்க கட்டிய முல்லைச்சரத்தை அவள் கைகளில் தந்துவிட்டு லஷ்மி சென்றுவிட்டார்.

ஹேர்பின் எடுக்க அவள் அறைக்குள் செல்ல, பின்னால் சென்றவன், அவளை இடையோடு சேர்த்து அணைத்திருந்தான். கஸ்தூரி மஞ்சளும் பூலாங்கிழங்கு மற்றும் பன்னீர் ரோஜாவும் கலந்த குளியல்பொடி யின் வாசனை பின்கழுத்தில் முகம் புதைத்தவனை பித்தம் கொள்ளச் செய்ய,

"ஐயோ! கண்ணா என்னயிது? யாராவது வரப்போறாங்க!"என்றாள் பதற்றத்துடன்.

"ஏய் தியா! இப்படி கிளாமரா ட்ரெஸ் பண்ணிட்டு என் முன்னாடி வராதே! யார்‌ இருக்காங்க இல்லைனெல்லாம் பாக்க மாட்டேனாக்கும்." காதோடு இழைந்தது அவன் குரல்.

"கண்ணா ப்ளீஸ்! புடவை உங்களுக்கு கிளாமர்‌ ட்ரெஸ்ஸா. விடுங்க சேலை கசங்க போகுது."

"அப்ப சேலை கசங்கறதுதான் உனக்கு பிரச்சினையா? அதுக்கு‌ ஒரு தீர்வு இருக்கு... சொல்லட்டுமா? என்று காதருகினில் அடிக்குரலில் கிறக்கமாக குழைய,

"கண்ணா ப்ளீஸ்…" என்று அவளும் அடிக்குரலில் கெஞ்ச,

"நீ ப்ளீஸ்னு சொல்றது தான் என்னைய என்னமோ பண்ணுது. ஏதேதோ பண்ணச்சொல்லுது." என்று குழைந்தவனின் கைகளை வலுக்கட்டாயமாகத் பிரித்தவள்,

"சொல்லும்...சொல்லும். முதல்ல வெளியே போங்க! யாராவது வந்துட்டா சங்கட்டமா போயிரும் கண்ணன்." என்றவளின் நிலைமையை‌ உணர்ந்தவன், அவசரமாக கன்னத்து முத்தமொன்று கள்வனாய் பதித்து விட்டுத்தான் வெளியேறினான்.

கன்னத்து நாணச்சிவப்பு இன்னும் மிச்சமிருக்க, கண்மூடி நின்றிருந்தவள், "தியா…" என்ற தன்னவனின் அழைப்பில் கண்திறந்தாள்.
கண் திறந்தவளின் கண் கலந்தவன், தன் கையிலிருந்த தாலிக்கயிற்றை அவள் கழுத்தில் கட்டினான்.

"டேய் சூர்யா!" என்று அருகில் நின்றிருந்த விஷ்வா அதிர்ச்சியாக,

"விஷ்வா எதுவும் சொல்லிறாதீங்க! உனக்கும் தான் தியா!" என்றவன்‌ மூன்று முடிச்சிட்டு, தோளோடு அணைத்துக் கொண்டான். அதிர்ச்சி மாறாமல் அவனது முகம் நோக்கி அவள் அண்ணாந்து பார்க்க,

"விஷ்வா இப்படியே ஒரு ஃபோட்டோ எடுங்க!" என்று கூற, அந்த அழகிய காட்சியை அவனும் தன் கைபேசியில் படம் பிடித்தான்.

"நான் கண்ணனா, சூர்யாவா? உனக்கு தகுதியிருக்கா, இல்லையா? இப்படி என்ன வேணா நினைச்சுக்கோ. உன்னைய இப்படியே விட்டா ஏதாவது ஒன்னு நினச்சு குழப்பிகிட்டு தான் இருப்பே! எந்த சூழ்நிலையிலும் உன்னை இழக்க முடியாது தியா!" என்றான்.

அதிர்ச்சியடைவதா? இல்லை இவன் தனக்கு உரிமையாகிவிட்டதை நினைத்து ஆனந்தப்படுவதா என்ற நிலையில், தன் கழுத்திலிருந்த தாலிக்கயிற்றை எடுத்துப் பார்த்தாள்.
அதில் மாங்கல்யத்திற்குப் பதிலாக, அவன் விரலிலிருந்த மோதிரம் கோர்க்கப்பட்டிருந்தது.

"இதுவும் தாலித் தங்கம்தான். அன்னைக்கி அம்மா சொன்னது கேட்டேயில்ல. அவங்க தாலியில செஞ்ச மோதிரம்னு சொன்னாங்கள்ல. அதனாலதான் அதையே கோர்த்தேன்."

"டேய்! இதை எல்லார்கிட்டயும் ஒருவார்த்தை சொல்லி இருக்கலாம்ல. யாரும் மறுத்து பேசியிருக்க மாட்டாங்கடா. ஆதியாவுக்கு கூடத்தெரியாம எதுக்குடா இப்படி?"

"நான் அவளுக்காக தான் இந்த முடிவு எடுத்ததே விஷ்வா. அவளுக்கு நான் உரிமையாகணும். மத்த எதைப்பத்தியும் சிந்திக்கல. எனக்கு அவளோட நிம்மதி தான் முக்கியம்."

அவள் மனமும்‌ இப்பொழுது அப்படித்தான் இருந்தது. 'நீ யாராவேணா இருந்துட்டுபோ. இப்பயிருந்து நீ என் கணவன். அதுபோதும்.' என்று மனம் அமைதியடைந்த மாதிரி இருந்தது.

"என்ன கண்ணா இது? எதுக்கு இந்த திடீர்‌ முடிவு? யாரும் எதிர்ப்பு சொல்லலியே. ஏன் அவசரப்பட்டே?" என்று வீடு திரும்பியவர்களிடம், அதிர்ச்சியில் சண்முகம் மேன்மேலும் கேள்விகளை சற்று கோபமாகவே தொடுக்க,

"ஆதியாவோட பயத்தைப் பார்த்து நேத்து நைட்டே நான் எடுத்த முடிவு மாமா! அன்னைக்கே ஆதியாவோட சொந்தக்காரங்க சொன்னாங்கள்ல. துக்கம் நடந்த வீட்ல ஒரு நல்லது நடக்கணும்னு. அதான் இது!"

"என்னது மாமாவா?" என்று சண்முகம் வியப்படைய,

"ஆமா… இதுவரைக்கும் உங்களை முறைவச்சு கூப்பிடல. ஏன்னு நானும் யோசிக்கலை. நேத்து அம்மா உங்களை அண்ணன்னு கூப்பிட்ட பின்னாடிதான் எனக்கும் மாமானு தோணிச்சு. ஆதியாவுக்கு அப்பா ஸ்தானமும்கூட." என்றான்.

"அப்ப என்கிட்ட கேக்காம எப்படி கல்யாணம் பண்ணினே?" தந்தையின் உரிமையைக் சண்முகம் காட்ட,

"நான் காலையிலயே புருஷன் பொண்டாட்டினு தான் சொன்னேன். அது வார்த்தைக்காக சொன்னதில்லை. இந்த தாலி அதற்கான அடையாளம். அவ்வளவு தான். இது கூட மத்தவங்களுக்காகவும் ஆதியாவுக்காகவும் தான். நான் இங்கிருந்து போகும்போது ஆதியாவும் என் மனைவியா என்கூட உரிமையா வரணும்." என்றான்.

அதன்படியே அழைத்தும் சென்றான்.
முதலில் மங்கையர்க்கரசி அதிர்ந்தாலும், மகனது விருப்பமே முக்கியமென்று சமாதானம் ஆகிவிட்டார். அவரைப் பொறுத்தவரை மகன் கிடைத்ததே போதும் என்றிருந்த நிலையில் அவனது ஆசையும், செயலும் பெரிதாகத் தெரியவில்லை. மறுநாள் அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடாக அனைத்து டெஸ்ட்டுகளும் எடுக்கப்பட்டு, அதிகாலை அறுவை சிகிச்சையென முடிவும் செய்யப்பட்டது.

அது விஐபி அறை என்பதால் அனைவருமே அங்கிருந்தனர். சற்று நேரத்தில், பிள்ளைகள் தனியாக இருப்பார்கள் என சண்முகமும், லஷ்மியும், காலை வருவதாகக் கூறிவிட்டு கிளம்பினர்.

"சூர்யா… நானும் ஆன்ட்டியும் போய் சாப்பிட்டு வர்றோம். வரும்போது சிஸ்டர்க்கு வாங்கிட்டு வந்துர்றோம்." என்று கூற,
மங்கையர்க்கரசியும் விஷ்வாவுடன் கிளம்பி விட்டார். சூர்யாவுக்கு எளிமையான மருத்துவமனை உணவு வழங்கப்பட்டது.

அவன் பெட்டில் அமர்ந்திருக்க, ஆதியா அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சேலையை மாற்றிவிட்டு சுடிதாரில் வந்திருந்தாள்.

"தியா…"

"ம்ம்ம்…"

"இப்பவும் எதுவுமே பேசாம என்னை சோதிக்கிறே! என் முடிவு பிடிக்கலியா?" என்றவனிடம்,

"புருஷன் முடிவு தான் பொண்டாட்டி முடிவுனு சொல்லியாச்சே! அதான் கல்யாணமே முடிச்சு மறுவீடு வந்திருக்கோமே. அப்புறம் என்ன?" என்றாள்.

"ஆஹாங்! உனக்கிது மறுவீடா? அப்படினா... அடுத்தது எப்ப தியா?" பெட்டில் அமர்ந்தவாறு அவன் புன்னகையுடன் கேட்க,

"இதுக்கு தான் உங்ககிட்ட தனியா சிக்கக்கூடாது. ஏதேதோ பேசுறீங்க?" என்று சிணுங்கினாள்.

"ஹேய்! நான்‌ அடுத்ததுன்னு சொன்னது மாமியார் வீட்டு விருந்து. நீ எதை நெனச்ச?" என்று கேட்டு கண் சிமிட்டியவனை, அவளால் கோபமாக முறைக்கு மட்டுமே முடிந்தது.

"ஓகே... ஓகே... கொஞ்சம் மூடியா இருந்த. அதனாலதான் கொஞ்சம் ஜில் பண்ணலாம்னு பாத்தேன்…"‌ என்று இழுக்க,

"நீங்க பாத்தவரைக்கும் போதும்!" என்றாள் உதடு சுழித்து.

"ஏய்... நான் எதுவுமே பாக்கல!"

"கண்ணா! வேண்டாம்…"

"தியா… நமக்கு இப்ப என்ன நேரம் தெரியுமா? பேச்சுக்குக்கூட தடை போட்டா எப்படி? நான்‌ பாவமில்லயா?" அப்பாவி போல் அவன் கேட்க,

"யாரு... நீங்க பாவமா? கண்ணை மூடி நின்னவளுக்கு தாலி கட்டிட்டு, அடுத்து மாமியார் வீட்டு விருந்தும் கேக்குறீங்களே. நீங்களா பாவம்?"‌ எனக் கேட்டாள்.

"எங்கே? இதுல உனக்கு சந்தோஷம் இல்லைனு சொல்லு பாக்கலாம்."

"உண்மைய சொல்லணும்னா நான் இப்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கேன் கண்ணா!" என்றவளை நோக்கி தனது வலது கையை நீட்ட, கரம் பிடித்தவள் எழுந்து வந்து அவனருகில் பெட்டில் அமர்ந்தாள்.

"எனக்கும் தெரியும். பெத்தவங்களும் இல்லாம, நானும் உனக்கு கிடைப்பேனாங்கற குழப்பத்துல இன்செக்யூரா ஃபீல் பண்ணின. உன்னை எப்படி தெளியவைக்கிறதுன்னு தெரியல? அதனாலதான் இந்த அதிர்ச்சி வைத்தியம்."

"வைத்தியம் பண்றதுல நீங்க கை தேர்ந்தவங்க தான்."

"எது... அந்த பவளமல்லிசெடித் திட்டு வைத்தியத்த சொல்றியா?" என்று குறும்புடன் கேட்டவனை, பார்க்க முடியாமல் முந்தைய நாள் நினைவில் கன்னம் சிவக்க, தலை குனிந்தாள்.

விரல்கொண்டு தாடை தொட்டு அவள் முகம் நிமிர்த்தியவன், தன்னவளின் கண்களில் தெரிந்த நாணத்தில் கட்டுண்டவனாக, "தியா… இப்ப உன்னைப் பாக்க எப்படியிருக்கு தெரியுமா? ஆப்ரேஷனும் வேணாம், ஒன்னும் வேண்டான்னு உன்னைய அப்படியே தூக்கிட்டு யாரிமில்லாத இடத்துக்கு ஓடணும்போல இருக்கு!"

அவளவன் முகத்தில் தெரிந்த வேட்கையில், பயம் கொண்டவள் மிரட்சியுடன் வாய்திறக்கும் முன், "கண்ணா ப்ளீஸ்…" அதுதானே என்றான் ஆர்ப்பரித்த சிரிப்போடு.

"தியா… நான் தாலி கட்டியது உனக்காக மட்டுமில்லை. பழைய ஞாபகம் வந்தாலும் சரி. இல்ல நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்னு ஆனாலும் சரி. என்னொட தியாவை இழந்திற கூடாதுங்கறதுக்காக சுயநலத்துல கட்டியது. கண்ணனோ, சூர்யாவோ! நீ எனக்கு மட்டும் தான். எப்பவும் உனக்கு நான் கண்ணன் தான். நான் எப்பவும் காதல் சுயநலவாதியாகவே இருக்க விரும்பறேன்." என்று கூறியவன் இருகைகளை விரித்துக் காட்ட தாய்மடி சேறும் பறவைகுஞ்சாய் அவன்நெஞ்சத்தில் மஞ்சம் கொண்டவளை, இருகை கொண்டு ஆதுரமாய் தழுவிக் கொண்டான்.

மோகமற்ற மோனநிலையில் சிறிது நேரம் கழிய, ஆதியாவின் கைபேசி அழைத்தது. அழைப்பை ஏற்க, "சிஸ்டர் சாப்பாடு வாங்கிட்டு நானும், ஆன்ட்டியும் வந்துகிட்டிருக்கோம்." என்றான்.

"வாங்க விஷ்வா." என்றவள் அழைப்பை துண்டிக்க,

"விஷ்வா சூப்பர்ல." என்றான்.

"ஆமாமா! உங்களுக்கேத்த ஆளுதான். ஏன்? இங்கேயே சாப்பாடு வரவைக்க முடியாதாக்கும்." என்றாள் கண்ணனின் ஆதியா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top