• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 24: Parakkirama Pandiyan kaalam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
பராக்கிரம பாண்டியன் காலம்

அத்தியாயம் 24:

செண்பகப் பொழில் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வந்தது. மன்னன் பராக்கிரம பாண்டியன் ஆட்சியில் பல நல்ல வளர்ச்சிகள் ஏற்பட்டன. அக்கம் பக்கத்தில் இருந்த காடுகளைக் கூட அழித்து அவற்றை விளை நிலங்களாகச் செய்தான். அப்படிச் செய்ததன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் விவசாயிகளுக்கு நிலமும் கிடைத்தது. வரிகள் கூட அளவுக்கு அதிமாக சுமத்தப்படாமல் நியாயமாக விதிக்கப்பட்டதால் குடி மக்கள் முறையாகச் செலுத்தினார்கள். மொத்தத்தில் எங்கும் பசுமையும் வளமையும் நிறைந்திருந்தது. ஆனால் பராக்கிரமனின் தந்தையார் சடையவர்மர் நினைத்ததைப் போல அத்தனை எளிதில் காசிக்குக் கிளம்ப இயலவில்லை. காரணம் பராக்கிரமன் பட்டத்துக்கு வந்ததுமே சேர அரசன் ஒருவன் படையெடுத்து வந்தான். கொல்லத்தில் நடைபெற்ற போரில் அவனை வென்று பராக்கிரம பாண்டியன் கொல்லம் கொண்டான் என்னும் பட்டத்தைப் பெற்றான். பல காலங்களுக்குப் பிறகு நடைபெற்ற போர் அது. படை வீரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தது என்றால் மிகையாகாது.

போர் தொடங்கி பராக்கிரமன் கொல்லம் செல்ல வேண்டியது வந்ததால் அவனது தகப்பனான சடையவர்மனுக்குப் பொறுப்புகள் அதிகரித்தன. அவரால் அரசை விட்டு விட்டுச் செல்ல முடியவில்லை. அதன் பிறகு வெற்றிக்கொண்டாட்டங்கள் என நாட்கள் நீண்டு விட்டன. பராக்கிரமன் பட்டம் சூட்டிக்கொண்டு ஒரு ஆண்டாகி விட்ட நிலையில் இதோ அவர்கள் கிளம்பி விட்டார்கள். காசி யாத்திரைக்குச் செல்பவர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என்பது நிச்சயமில்லை என்பதால் கண்ணீருடன் விடை கொடுத்தனர் மக்களும் மன்னனும். அவர்களுக்கு உதவியாக இளம் தம்பதிகளை இருவரை அனுப்பி வைத்தான் பராக்கிரமன்.

சடையவர்மரும் அரசியாரும் சென்று ஒரு மாதம் முடிந்து விட்டது. அவர்கள் விந்திய மலையைத் தாண்டிக் கொண்டிருப்பதாகச் செய்தி வந்தது புறாவின் மூலம். பெற்றோர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து உற்சாகமானான் மன்னன் பராக்கிரமன். அப்போது தான் குருநாதர் அவனிடம் கேட்ட உதவி அவனுக்கு நினைவுக்கு வந்தது. அன்று இது குறித்து வீர பத்திரனிடம் பேசியதோடு சரி. ஆனால் இன்னமும் எதுவும் செய்யவில்லையே என கவலைப்பட்டான். மறு நாள் காலையில் நேரே குருவிடம் போய் நின்றான். அவரும் ஆசி கூறி வரவேற்றார்.

"குருவே! என்னை மன்னிக்க வேண்டும்! நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பணியை நான் இன்னமும் தொடங்கவில்லை! தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும்! இன்றே அதனைத் தொடங்கலாம் என்றிருக்கிறேன். அது குறித்துப் பேசத்தான் அதிகாலையில் உங்களைத் தேடி வந்தேன்" என்றான் பணிவாக.

விந்தையன் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.

"தாமத்தினால் தவறில்லை பராக்கிரமா! உனக்கு நாட்டின் நலம் தான் இப்போது முக்கியம்!"

"நான் என்ன செய்ய வேண்டும் குருவே?"

"எனக்குத் துணையாக ஒரு இளைஞன் தேவை. அவன் மிகவும் நம்பத்தகுந்தவனாகவும் அதே நேரம் வீரம் நெஞ்சுரம் மிக்கவனாகவும் இருக்க வேண்டும். அவனுடன் நான் புறப்படும் போது கொஞ்சம் பொன்னும் தேவைப்படலாம்" என்றார் குருவான விந்தையன்.

"ஐயனே! எனது தோழன் வீர பத்திரனிடம் இந்த விஷயத்தை நான் சொன்ன போது உங்களுடன் வர மிகவும் ஆவலாக இருந்தான். அவனை அழைத்துச் செல்ல நீங்கள் சித்தமானால் இன்றே அவன் பயணத்துக்குச் சித்தமாகி விடுவான்" என்றார்.

எத்ரிபாராத விதமாக கோபம் வந்தது விந்தையனுக்கு.

"இதனை யாரிடமும் சொல்லாதே என்று சொல்லியிருந்தேனே பாராக்கிரமா! பின் எதற்காக நீ இதனை வீரபத்திரனிடம் கூறினாய்? என் கட்டளையை மீறி ஏன் நடந்தாய்?" என்றார் சினத்துடன்.

அவரது சினத்துக்கான காரணம் புரியாமல் விழித்தான் பராக்கிரம பாண்டியன்.

"என்னை மன்னிக்க வேண்டும் குருவே! தங்கள் கட்டளையை மீறும் எண்ணம் எனக்குக் கொஞ்சம் கூட இல்லை! நான் வேற்று மனிதர்களிடம் சொல்லவில்லையே? சிறு வயது முதல் என் தோழன் அதோடு அவனும் நம் குருகுலத்தில் தானே கல்வி கற்றான்? அந்த எண்ணத்தில் தான் சொல்லி விட்டேன். தவறானால் மன்னிக்க வேண்டுகிறேன்" என்றான் மீண்டும்.

"நமது குருகுலத்தில் பயின்றான் என்ற ஒரு தகுதி போதும் என்றால் நான் ஏன் அதனை உன்னிடம் சொன்னேன் பராக்கிரமா? ஏனைய மாணவர்களிடம் ஏன் இதைப் பற்றிச் சொல்லவில்லை என்பதை நீ சிந்திக்கவே இல்லையா?" என்றார் சினம் சற்றும் குறையாமல்.

அப்போது தான் செய்த தவறு அவனுக்குப் புரிந்தது. குரு மிகவும் ரகசியமாக இதனைச் செய்ய நினைக்கிறார். என்ன காரணத்தாலோ வீர பத்திரனை அவர் விரும்பவில்லை. ஆகையால் தான் இப்படிப் பேசுகிறார் என்று எண்ணியபடி மௌனமாகத் தலை குனிந்து நின்றான்.

"பராக்கிரமா! நீ இன்னமும் குருகுலத்தில் மாணவன் அல்ல! ஒரு நாட்டின் மன்னன். யாரையும் எளிதில் நம்பி எந்த ரகசியத்தையும் சொல்லி விடாதே! இந்தப் பாடத்தை நீ எப்போதும் நினைவில் கொள்! முடிந்து விட்ட செயலுக்காக வருந்துவதால் பயனில்லை. இனி என்ன செய்வது என்பதைப் பற்றி ஆலோசிப்போம்" என்றார்.

அவரை ஏறிட்டு நோக்கினான் மன்னன்.

"வீர பத்திரன் என்னுடன் வருவதை நான் விரும்பவில்லை. ஏதோ ஒரு வீரனைத் தேர்வு செய்து வைத்திருப்பதாகக் கூறினாயே அவனை இங்கே அனுப்ப முடியுமா? அவனிடம் நான் சில கேள்விகள் கேட்க வேண்டும். அவன் நம்பத்தகுந்தவன் தானா என்பதையும் நான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

அவ்வாறே செய்வதாகச் சொல்லி விட்டு நேரே படைத்தளபதியான வீரசேனனிடம் சென்றான். அரசனைக் கண்டதும் முதுகு வளைத்து வணங்கினார் அந்தத் தளபதி.

"மன்னர் அதிகாலையில் என்னைக் காண வந்ததன் நோக்கம்? இனியும் ஏதேனும் படையெடுப்புக் குறித்த ஆலோசனையா?" என்றார் ஆவலாக.

சிரித்தான் பராக்கிரமன்.

"இல்லை தளபதி! இப்போதைக்கு எங்கேயும் போர் தொடுக்கும் எண்ணம் எனக்கில்லை. ஆனால் உங்களது இளைய மகனை எனது குருநாதர் சேவையில் சில காலம அனுப்பலாம் எனத் தீர்மானித்திருக்கிறேன்" என்றான்.

"என் மூத்த மகன் வீரபாகு என்ன குற்றாம் செய்தான் அரசே?"

"அவன் ஒரு குற்றமும் செய்யவில்லை தளபதி! அவன் துணைத் தளபதியாக என் அருகில் எப்போதும் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் உங்களது இளைய மகனைத் தேர்ந்தெடுத்தேன். "

"தங்களது குருநதர் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறார் அரசே? அதனை நான் அறியலாமா?"

"எனக்கும் விவரங்கள் எதுவும் முழுமையாகத் தெரியாது தளபதி! ஆகையால் எதுவும் சொல்ல இயலாத நிலையில் இருக்கிறேன். ஏதோ சில அரிய பொருட்களைத் தேடிச் செல்கிறார் என நினைக்கிறேன்"

"ஓ! சில அரிய வகை மூலிகைகளைத் தேடுகிறாரா? இதற்கு என் இளைய மகன் ஏற்றவன் தான் அரசே! காரணம் அவனும் மூலிகை கஷாயம் என்று எதையோ செய்து கொண்டிருப்பான்."

"அதனால் தான் அவனைக் கேட்டேன். முதலில் காளையன் என்ற படை வீரனைத்தான் தேர்ந்தெடுத்திருந்தேன். ஆனால் மிகவும் முக்கியமான விஷயம் என குரு நாதர் கருதுவதால் உங்கள் இளைய மகன் தான் அதற்கு ஏற்றவன் எனத் தீர்மானித்தேன். இன்றே அவனைச் சென்று குருநாதரை சந்திக்கச் சொல்லுங்கள்!" என்று சொன்னான். அதன் பிறகு இருவரும் போர்த் தந்திரங்களைப் பற்றி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். வீர பத்திரன் தொலைவில் வருவதைப் பார்த்து விட்டு தளபதியிடம் அவசரமாக குருநாதரது தேடலைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என எச்சரித்தான். அதனைப் புரிந்து கொண்ட அவரும் எதுவும் பேசவே இல்லை. ஆனால் வீர பத்திரன் சும்மாயில்லை. அவனது கூர்ந்த பார்வை இருவரும் ஏதோ ரகசியம் பேசுவதைக் கவனித்து விட்டது. இருந்தாலும் தெரியாதது போலக் காட்டிக்கொண் டான். தளபதி வணங்கி விடை பெற்றார்.

"பராக்கிரமா ஏதேனும் நாட்டோடு போர் தொடுக்க உத்தேசமா?"

"இல்லை வீரா! அதிகாலை சற்றே நடந்து வருவோமே என்று வந்தேன்" என்றான் அரசன். அதற்கு மேல் எதுவும் கேட்காமல் வீர பத்திரன் சென்று விட்டான். ஆனால் அவனது கூர்ந்த மதி வாளாயில்லை.

"பராக்கிரமன் ஏதேனும் தளபதியோடு விவாதிக்க விரும்பினால் அதனை அரசவையிலேயே செய்யலாமே? அதை விடுத்து இந்த அதிகாலையில் எதற்காக இவனே அவரை காண வர வேண்டும்? குருநாதர் ஓலையைத் தேடும் விஷயமாக ஏதேனும் சொல்லியிருப்பாரோ? அப்படித்தான் இருக்கும் அவர் என்னை வர வேண்டாம் என்று சொல்லியிருப்பார். அதனால் தான் பராக்கிரமன் என்னிடம் எதையும் சொல்லாமல் மறைக்கிறான். இருக்கட்டும். தளபதியைத் தேடி வருவதானால் அவரது இரு மகன்களில் ஒருவனை தனக்குத் துணையாக இருக்குமாறு அழைத்திருப்பார் விந்தையன். அதைத் தெரிவிக்கத்தான் இப்போது வந்தான் போலும். யாரை அனுப்புவான் பராக்கிரமன்? எதற்கு இத்தனை குழப்பம்? மூத்தவன் வீர பாகுவையும் இளையவன் மணி சேகரனையும் கண்காணித்தால் தெரிந்து போகிறது" என்று எண்ணிக்கொண்டான். அவனது எண்ணம் தறி கெட்டு அலைந்தது. விந்தையன் தேடுவது இரும்பைத் தங்கமாக்கும் ரகசியத்தைத்தான் என்று அவன் உறுதியாக எண்ணினான். அப்படியே ரசவாதமாக இல்லாவிட்டாலும் ஏதேனும் அரிய ஓலையாகத்தான் இருக்கும். அதனை அடைய மன்னர்கள் போட்டி போடுவார்கள். நிறையப் பொன் கொடுத்து அதனைக் கொள்ளப் பார்ப்பார்கள். அப்போது நான் அதனை நூறாயிரம் பொன்னுக்கு விற்று விட்டு மிகப்பெரும் செல்வந்தனாக மற்றவர்களை அதிகாரம் செய்து கொண்டு வாழ்வேன் என்று கனவு கண்டான்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
"வீர பத்திரன் என்னுடன் வருவதை நான் விரும்பவில்லை. ஏதோ ஒரு வீரனைத் தேர்வு செய்து வைத்திருப்பதாகக் கூறினாயே அவனை இங்கே அனுப்ப முடியுமா? அவனிடம் நான் சில கேள்விகள் கேட்க வேண்டும். அவன் நம்பத்தகுந்தவன் தானா என்பதையும் நான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
விந்தையன் வீரபத்திரன் மனவோட்டத்தை நன்கு அரிது இருக்கிறார் அதனால் தன அவனை வேண்டாம் என்கிறாரா....:unsure::unsure::unsure:. அருமையான pathivu(y)(y)(y)(y)
 




ragsri1994

புதிய முகம்
Joined
Jan 17, 2018
Messages
9
Reaction score
5
ஹாய் ஸ்ரீஜா மாம் ,

அத்தியாயம் 21-ன் பிறகு 24 வருகிறது. இது சரிதானா ?
 




Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
மன்னிக்கவும் தோழி! எண்ணைத் தவறாகப் போட்டு விட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள்! அப்படியே இருக்கட்டுமா? இல்லை திருத்தவா?
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Veerabathranai patri vinthaiyanukku therinthu irukkirathu.. Athe pol vinthaiyanin mana nilai patriyum avar thannai thavirthu veru yarayavathu than udan azhaithu selvar enbathum therinthu vaithirukkiran..
 




ragsri1994

புதிய முகம்
Joined
Jan 17, 2018
Messages
9
Reaction score
5
ஹாய் ஸ்ரீஜா மாம்,

திருத்தம் வேண்டாம் மாம்.

உறுதி படுத்திக் கொண்டேன்.

அவ்வளவே. நன்றிகள்
 




ராஜகுரு

Guest
விந்தையன் சித்தரா அல்லது ஆசிரியரா
 




Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
விந்தையன் சித்தரா அல்லது ஆசிரியரா
அவர் ஒரு நல்ல ஆசிரியர் அதோடு சித்தரும் கூட. பரக்கிரம பாண்டியனின் ராஜகுருவும் தான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top