ஆர்த்தி ரவியின் ‘பாசுந்திப் பார்வை’
அத்தியாயம் 02
ஒருவனுக்கு ஒருத்தி மேல் காதல்…
அந்த ஒருத்தி வேறொருவனில் தொலைந்திருக்கிறாள்!
அறியவில்லை அவன்...
அவளொருத்தியின் இருப்பைக் கூட!
ஆழ்ந்திருக்கிறான் சமூகத்தில்…
அச்சமின்றிப் பாய்கிறான்,
அவசியம் மாற்றம் வேண்டும்
எனும் போர் தொடுத்து!
ராணாதேவின் கண்கள் மிகவும் கூர்மையாக யாஷ்வியின் மேல் படிந்துத் தேக்கம் கொண்டன.
யாஷ்வியின் சுருங்கிய புருவங்களின் கீழ் கண்களில் பலத்த யோசனை. இவன் அறைக்குள் நுழைந்ததைக் கூட உணராமல் சிந்தனை வசப்பட்டிருந்தாள்.
‘என் யாஷ்வியா இவள்? அப்படி என்ன சிந்தனை இவளிடம்? இப்படி இருக்க மாட்டாளே. ரொம்ப அலர்ட் ஆச்சுதே. அதுவும் இங்கே ஆஃபீஸில் எப்பொழுதும் தற்காப்பு உணர்வு அதிகம் கொண்டு தானிருப்பாள்.
நான் வந்து ரெண்டு நிமிடங்கள் ஆகியும் என்னை உணரவில்லை. அப்படி என்ன பலமான சிந்தனையோ? ஹ்ம், இவளைக் கொஞ்சம் கவனிக்கணும்.’
அடுத்து வெளி வரப் போகும் படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பற்றிப் பேச வந்தவனின் மனநிலை சட்டென மாறி விட்டது. அதுவும் அவளின் உதடுகளில் சுழிப்பைக் கண்டு தன்னுள் எழுந்த உணர்வில் தடுமாறி, பின் அவசரமாக வெளியேறினான்.
அவன் வெளியேறும் போது கேட்ட அவனின் டக் டக் டக் காலணிச் சத்தம் தான் யாஷ்வியைக் கலைத்தது.
“மாமகாரு…”
யாஷ்வி ராணாவை அழைத்தாள். சற்றே பெரிய குரலில் தான்.
அதற்குள் அவன் போயே விட்டிருந்தான். புயல் வேகம் ராணாவினது.
இப்போதெல்லாம் யாஷ்வி தன் இயல்பான மனநிலையில் இருப்பதில்லை. அவள் அலுவல்களைத் தடை இல்லாமல் நடத்திக் கொண்டிருக்கிறாள் தான்.
ஆனால் மனதில் ஓர் அலைப்புறுதல். எண்ணங்களில் அடிக்கடி தெரியும் ஆருஷின் ஆளுமை. அதுவே அவளின் அலுவல்களில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. புதுமையாய்… வெகு இனிமையாய்!
அவள் இளமைக்குச் சவாலாக ஆருஷ் யாஷ்வியை ஆக்கிரமிப்புச் செய்து கொண்டிருக்கிறான்.
பூவர் பெல்லோ! இவளை அறியாமலேயே தன்னில், தன் தீர்க்கமான சிந்தனைகளில், தன் இலட்சியத்தில் ஆழ்ந்துப் போய் இருக்கின்றான். டிரினிட்டி மட்டுமே இவனின் உலகமாகத் திகழ்கிறது. மக்களின் எழுச்சியே இவனின் ஓட்டம்.
சினிமா சம்மந்தப்பட்ட தொழிலில் இருப்பதால் எந்த நேரமும் ஆட்களுடன் கலந்துரையாடுதல், தன் கீழ் வரும் பணிகளின் மேற்பார்வை, படம் தயாரிப்பு நிறுவனத்தின் நுண்ணிய வேலைகள், முக்கியமாகப் பெரிய தொகையைக் கையாளுதல்…
இப்படி ஏகப்பட்டப் பொறுப்புகளைச் சுமந்து வலம் வரும் யாஷ்விக்கு ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரம் பற்றாக்குறையாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
இத்தனை அலுவல்களுக்கு மத்தியிலும் ஆருஷ் வந்து வந்து இவளின் இதயத்தைத் தட்டித் தட்டி ஹலோ சொல்லிக் கண் சிமிட்டிப் போகிறான். என்ன விதமான உணர்விது? அறிமுகமில்லா ஒருவனிடம்?
இப்போதெல்லாம் இந்தச் சுய அலசல் மிக அதிகமாய் இவளுக்கு!
புறம் இருந்து பார்ப்பவர்களுக்கு எல்லாம் யாஷ்வியின் சுறுசுறுப்பு, மிடுக்கு, வேலை வாங்கும் பாங்கு மட்டும் தான் தெரிகிறது.
ஆனால் ராணா கவனிக்க ஆரம்பித்து இருந்தான். அவளைத் தன் விழிகளில் சிறையெடுத்து, மூளையில் ஆராய்ந்து, கண் கொத்திப் பாம்பாகப் பாதுகாப்பவனின் பார்வையிலிருந்து அவளின் மாற்றங்கள் தப்பவில்லை.
இலண்டன் சென்று படிப்பை முடித்து வந்தவளைத் தன்னுடன் தொழிலில் இணைத்துக் கொண்டது ராணா. அவனின் எண்ணம், கருத்து, மனது எல்லாமும் யாஷ்வி, யாஷ்வி, யாஷ்வி!
புரிந்தது தான், தற்பொழுது தனது நேசம் அவளிடம் எதிரொளிக்கவில்லை என்பது. அவகாசம் தர எண்ணியே இந்த ஏற்பாடு. தன்னுடன் இருக்கும் நேரத்தை ஏற்படுத்தி, மாற்றம் நிகழ்த்த வேண்டி இப்படி ஒரு காத்திருப்பு.
அப்பா நரசிம்ம தேவ், அக்கா ருதுளா தேவி இருவரும் அவனுக்கும் யாஷ்விக்கும் திருமணம் முடித்துவிடலாம் என்று தான் சொன்னார்கள்.
“இப்போது வேண்டாம் நாணா. யாஷூ சின்னப் பெண்ணாக இருக்கிறாள். என்னுடன் வந்து பிஸினஸ் பொறுப்பு எடுத்துக்கட்டும். நம்ம தொழில்களில் அவளுக்கும் பங்கிருக்கிறது. படிப்பு முடிந்த கையோடு இப்போவே பொறுப்பெடுத்தால் தான் நல்லது. ஆர்வமாகப் பழகுவாள்.
அவள் கொஞ்சம் காலூன்றிக் கொள்ளட்டும் நாணா. அப்புறம் நான் சொல்லும் போது வெடிங் டேட் ஃபிக்ஸ் பண்ணுங்க. அக்கா, நான் சொல்றது சரி தானே? உன் அபிப்பிராயத்தையும் சொல்லு. அப்புறம் இறுதி முடிவை எடுக்கலாம்.”
“ராணா, நீ சொல்றது சரி தானென்றாலும் கல்யாணம் போன்ற விசயங்கள் அந்தந்த நேரத்துல நடந்தா நல்லது. வரும் சந்தர்ப்பங்களை நழுவ விடக் கூடாது என்பது என் கருத்து.
ஆனால், என் தம்பி ஒன்றைச் சொன்னால், அதன் பின்னணியை ஆராய வேண்டிய அவசியமும் இல்லை. இனி என்ன நடக்கும் என்ற யோசனையும் தேவையில்லை. நீ சொல்வதைப் போலவே செய்.”
கணவரை இளம் வயதில் ஒரு தொழிற்சாலைத் தீ விபத்துக்குப் பறி கொடுத்தவர் ருதுளா தேவி. பணம், சொத்து, தொழில் என்ன நடக்கிறது என்று புரியாது திண்டாட்டத்திற்கு ஆளானவர். கணவரை இழந்த துக்கம், கணவரின் உறவுகள் ஏற்படுத்திய தொல்லை. அப்பாவும் தம்பியும் அரணாக நிற்க, அனைத்தையும் கடந்து வந்தவர்.
அன்றிலிருந்து இன்று வரை தம்பி ராணா எது சொன்னாலும் தங்கள் நலனை முன்னிட்டு தான் இருக்கும் என்பது ருதுளாவின் நம்பிக்கை. அது தான் இப்போது வரை உண்மையும் கூட.
நரசிம்ம தேவும் மாற்று கருத்து தெரிவிக்கவில்லை. மகனிடம் எல்லாம் ஒப்படைத்து விட்டு, என்று சினிமா உலகை விட்டு பார்வையாளராகத் தள்ளி நின்றாரோ அப்போதிலிருந்து ராணாவிற்கு அவர் எந்தக் கருத்தையும் கூறுவதில்லை.
தொழில் நுட்ப வளர்ச்சி, சினிமா உலகின் புது டிரெண்ட் எல்லாம் இந்த மனிதரை விலகி நின்று பார்க்கச் சொன்னது.
தங்கள் நிறுவனப் படங்களில் பணத்துக்காக எதை வேண்டும் என்றாலும் செய்ய இவர் அனுமதித்தது இல்லை. எப்போதும் சில நற்பண்புகளைக் கெட்டியாகப் பிடித்து அதன்படி நடப்பவர் நரசிம்ம தேவ். தொழிலில் எப்போதும் விதிகளை மீறி இவர் செயல்ப்பட்டதில்லை.
இவரது மகனும் இவர் வழியில் பயணிக்கத் தொடங்கினான் தான். ஆனால் சினிமாத்துறையின் மாற்றங்கள் இவனைச் சவாலுக்கு அழைத்தன.
அங்கு நிலவும் கடும் போட்டிகள்; மக்கள் விரும்பும் டிரெண்ட்; ஏனைய கலாச்சாரத் தாக்கம் எனக் காலத்திற்கேற்ப மாறினான் ராணாதேவ்.
பொருளாதார வகையில் விவேகமாகவும் செயல்படும் ராணாவிற்குப் போன பட ரிலீஸ் தோல்வி நிலையைத் தழுவியது.
இந்தப் புதுப்படம் எப்படியோ? இரண்டுமே பெரிய பட்ஜெட் படங்கள். இதற்கு முந்தைய படம் வசூலை அள்ளிக் குவித்து இருக்கும்.
ஒருவனின் குறுக்கீட்டால் தான் பெரும் நஷ்டம்.
‘படி போயிந்தி! லேகப்போத்த ஃபிலிம் அன்த்த அந்தம்!’
அருமையான படம் விழுந்து போச்சு. காரணம் அவன். அவனா? யார்? ஆருஷ் தான்.
யாஷ்வி தனது அசராத தன்மை, அயராத உழைப்பு, கட்டுப்பாடான குணநலன்கள், கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டு பயணித்ததால் நான்கு வருடங்களில் சாதனைப் படைத்து விட்டாள்.
எட்ட நின்றாலும் அனைத்தையும் கவனித்து வரும் நரசிம்ம தேவ்விற்குப் பேத்தியை எண்ணி ஏகப்பட்ட பெருமிதம். சமீபத்தில் தங்கள் பேனரில் வெளி வரும் படங்களில் சிலவற்றை வலியுறுத்தி வருகிறாள் என்பதைத் தெரிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ந்தார்.
மகனிடம் தொலைந்து போயிருக்கும் சில மரபுகளைப் பேத்தி திருப்பிக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெரிய மனிதரின் மனதில் சுக உணர்வு படர்ந்து கொண்டிருக்கிறது.
ராணாவிற்கு யாஷ்வி மேல் மெச்சுதல் இருக்கிறது. ஆனால் இப்போது அவளின் சில செயல்கள் இவனுக்குத் தலைவலியாக இருக்கின்றன. இவனின் தொழில் நோக்கிற்கு முரணாக நிற்கிறாள். அத்தனை பிடிவாதமாக இவனின் கருத்துகளை மறுக்கிறாள்.
‘என்னை எப்படிப் படுத்துகிறாள் என் நெஞ்சழகி!’
வயதில் சின்னவள் தான். இருந்தும் போடி என்று இவனால் எளிதாக யாஷூவை உதாசீனப்படுத்த இயலவில்லை. இவனின் நேசம் வேறு அவளிடம் கடுமையைத் தளர்த்தச் சொல்லிக் கெஞ்சிற்று.
அதனால் சில நேரங்களில் வெறும் பார்வையாளனாகினான் தி கிரேட் ஸ்டபர்ன் ராணாதேவ்.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று பட உலகில் முத்திரை பதித்து, தெனாவெட்டான தோற்ற மிடுக்கில் இருப்பவனுக்கு வந்திருக்கும் வாலிபச் சோதனை யாஷ்வி!
என்ன செய்ய? காதல் இதுவரை இவனுக்கு எதையும் செய்யவில்லை தான். ஒரு தலைக்காதலாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது.
இத்தனை வருடக் காத்திருப்பிற்கு ஒரு சின்ன எதிரொளியைக் கண்டானில்லை. இருந்தும் எதிர்பார்ப்பற்ற வகையில் நேசிப்பது தானே சிறந்த காதல்? மணம் புரிந்த பின்னர் மனம் கூடிக் கொள்ளட்டும். இந்த நோக்கில் இருக்கின்றான்.
சினிமாத்துறை என்றால் லேசுபாசு அல்ல. நிறைய நிறைய விசயங்கள், பிரச்சனைகள், சமாளிப்புகள். பணம்! பணம்! பணம்!
பற்றாக்குறையாகப் போச்சுதா? நீ அவுட்! ஒரு தடுமாற்றம், ஓர் இடறல், ஒரு சருகல்… பேரிழப்பைத் தந்துவிடுகிறது. சிலர் மீண்டு விடுகின்றனர். பெருவாரியானோரின் பாடு திண்டாட்டமாகி விடுகிறது.
போன படம் ப்ளாப் ஆனதால் ஏற்பட்டிருந்த முதல் இழப்பை ஈடுகட்டி ஆயிற்று. ராணா இன்னும் தாங்கலாம் தான். அவ்வளவு பணம் கொட்டிக் கிடக்கிறது.
ஆனால் பெயர், கௌரவம்? பதித்து விட்ட தனக்கான அடையாளம் என்னாவது?
ஒரு வகையில் ராணாதேவ்வும், யாஷ்வியும் தங்கள் கௌரவத்திற்காகவும் தேவ் பிலிம்ஸ் எனும் பேனருக்காகவும் தான் தீவிரமாகச் செயல்படுகின்றனர்.
ஆனால், இருவரின் அணுகுமுறை வித்தியாசமாகப் போய்விட்டது. எல்லாம் ரெட் நாட் ஆருஷ் ஏற்படுத்திய சலசலப்பு. இங்கு அதுவே முக்கியக் காரணம்.
ஆருஷ் என்ற பெயரைக் கேட்டாலே கடுப்பாகிறான் ராணாதேவ். அவனால் ஏகப்பட்ட பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறானே.
“ஆருஷ்!”
இறுகிய முகத்துடன் முழு உயரத்துக்கு நிமிர்ந்து நின்ற ராணாதேவ் பற்களை நறநறவெனக் கடித்தான்.
அவ்வேளையில் யாஷ்வியின் மனநிலையில் இனியதொரு சாரல் மழை. விழியோரம் மின்மினிக் கனவுகளின் சுழற்சி!
இதுவரை ராணா யாஷ்வியின் மாற்றத்தை கவனித்திருந்தாலும், அவளின் இத்தகைய பட்டாம்பூச்சிப் படபடப்பை அறியவில்லை. ஆருஷ் தன் நேசத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது இவனுக்குத் தெரியாது. தெரிய வரும் போது என்ன செய்யப் போகிறான்?