தாங்கள் வசிப்பது சகல வசதிகளைக் கொண்டிருக்கும் செழிப்பான செல்வந்தர்கள் பகுதி தான். ஆனால், அந்த மாதிரியான பகுதிகளை விட்டு வெளியே வரவரவே தெருவோரம், வீதியோரம், சாலையோரத்தில் அலட்சியப்படுத்தப்பட்ட வகையில் குப்பைப் தொட்டிகளும், குப்பைக் கூழங்களும் மனதை வருத்துகின்றன. கடலும் கடற்கரையும் கூட இதற்கு விதி விலக்கல்ல.
சில பகுதிகளை டிரினிட்டி பொதுச் சேவையின் கீழ் பராமரிக்கிறார்கள். தங்களால் இயன்றச் சமூகப் பணிகளில் ஒன்றாக.
ஏற்கெனவே விழிப்புணர்விற்காகத் தங்கள் டிரினிட்டி நாளிதழ், வார இதழ் இரண்டிலும் எழுதியாச்சு. ம்கூம்! முன்னேற்றமே இல்லை. தீவிரமாக ஏதாவது செய்ய வேண்டும் எனும் எண்ணம் அவனிடம் மேலோங்குகிறது.
மும்பையிலேயே பிறந்து வளர்ந்தவன் ஆருஷ். இருப்பத்து எட்டு வருடங்கள் கொடுத்திருக்கும் சொந்தம். விபரம் தெரிந்த நாளில் இருந்தே மும்பையின் வளர்ச்சி அவனுள் பிரமிப்பைத் தந்திருக்கிறது.
உலகின் முன்னணி நகரங்களில் ஒன்று. நம் மக்களால் நியூயார்க் நகரத்திற்கு ஈடாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் நகரம். ஆனால், நியூயார்க் அளவு பராமரிக்கப் படுகிறதா? இல்லை அதில் பாதியாவது? நோ!
சுத்தமும் சுகாதாரமும் ஆடம்பரமில்லையே? அடிப்படை உள் கட்டமைப்பின் அவசியத் தேவையல்லவா? அரசாங்கமும் அதிகாரிகளும் அலட்சியப்படுத்தும் விசயங்களில் இதுவும் ஒன்றாகி விட்டதே.
மால், விண்டோ ஷாப்பிங், பப், ஃபாஸ்ட் ஃபுட், லிவ்விங் டுகெதர் என இன்னப் பிற கலாச்சாரங்களை உள் வாங்கிக்கொண்டு தங்கள் வேரின் சுயத்தைத் தொலைத்து வரும் மக்களும் உணர வேண்டும். அப்படியே பிற நாட்டினரின் நற்பண்புகளையும் கூட எடுத்துக் கொள்ளலாமே? ஏன் செய்வதில்லை?
மும்பையில் மட்டுமல்ல, மொத்த இந்தியாவிலும் மக்கள் மனது வைத்தால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். நாட்டைச் சிறப்பாக வைக்கத் தாங்களும் இணைந்து செயல்பட்டு உதவலாம். மக்கள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக இருக்க வேண்டும் என்கிற கோபம் அவனுள் எழுந்தது.
குப்பையை உரிய இடத்தில் மட்டுமே போட வேண்டும். நகராட்சிப் பணியாளர்கள் நித்தமும் குறிப்பிட்ட நேரங்களில் அப்புறப்படுத்தவில்லையெனில், நடவடிக்கையில் இறங்கணும். அதற்கான நேரம் யாருக்கு இருக்கிறது?
‘அரே, டைம் நஹீங் ஹை யார்!’
நேரமில்லை. நேரமில்லை எதற்கும் வரும் பதில் இதுவே! ஏன்? எதை நோக்கி இத்தகைய ஓட்டம்? புரியவேல்லை. கசந்த முறுவல் ஒன்று வந்தமர்ந்து கொண்டது ஆருஷிடம்!
யோசனையூடே அன்றைய ஓட்டம் போய்க் கொண்டிருந்தது.
காலத்தின் சுழற்சியில் நம் வாழ்க்கைப் பயணம். இன்றைய உலகத்தில் பெரும்பாலானோரிடம் காண்பது பரபரப்பு. அவசரம், வேகம், ஓட்டம். இப்படித் தான் ஒவ்வொரு நாளும் போகுது. ஏன்? ஏனென்றால், நமது வேணும்கள் (wants) அதிகரித்து விட்டன.
அதனால், நேரமில்லை எனச் சொல்லிக்கொண்டு, அவசியமானவைகளைத் துறந்து, மறந்து ஓடுகிறோம். அனுபவிக்க வேண்டிய சிலவற்றைத் தொலைத்து, தேவையற்ற நோவை வாங்கிக் கொள்கிறோம்.
வேணும் என்பது வேறு. தேவை என்பது வேறு. எத்தனை பேர் இதனைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்? உனது தேவைக்காக நீ வாழ்க்கையின் தேடல்களை வைத்துக் கொள்ள வேண்டும். தேவையைத் தாண்டி உனது வேணும் என்கிற ஆசைக்காக நீ ஓடினால், ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டும். இத்தகையதொரு தேடலில் உனது நேரம் மட்டுமல்ல நீயும் தொலைந்து போகிறாய்!
மனதிற்குள் ஓடியச் சிந்தனையால், தலையை உலுக்கிக் கொண்டான் ஆருஷ்.
Differentiate between your needs and wants. Needs are necessities. Wants are luxuries.
உனது தேடல் முதலில் உனது தேவையைப் பூர்த்திச் செய்வதாக இருக்க வேண்டும். தேவைக்குப் பிறகு வேணும்களைப் பார்க்கலாம். வரமுறையோடு. நிதானமாக. நிர்ணயித்துக் கொள்ளும் எல்லைக்குள்.
நுகர்ந்தவர்களுக்குத் தேடல் மாபெரும் சுகம்! தேடலுக்கு எல்லையும் இல்லை!
ஆனால், மனிதருக்கு இளைப்பாறுதல் மிக அவசியம். குடும்பம், நட்பு, தேசம். அன்பு, நேசம், காதல், சேவை, பற்று, ஓய்வு. இவற்றிற்குக் கண்டிப்பாக நேரத்தை ஒதுக்க வேண்டும். உடல்நிலையில் அக்கறை கொண்டு பேணுதல் மிக மிக அவசியம்!
இழந்து விட்டால், சிலவற்றைத் திரும்பப் பெற மிகவும் கடினமாகப் போராட வேண்டும். அப்படிப் போராடிய பிறகும் கிடைக்க வாய்ப்பில்லாமலும் போகலாம். இழந்தவை, இழந்தவையே!
சுற்றுச்சூழலில் பதிந்திருந்த கவனம், குப்பைகள், அசுத்தம், சுகாதாரம் என்று எண்ணங்களைச் சுழற்சி, சில நிமிடங்களில் எங்கெங்கோ பயணித்து விட்ட வேகத்தை உணர்ந்த ஆருஷிடம் ஒரு விரிந்தப் புன்னகை வந்திருந்தது. தொடர்ந்து தன்னைப் போல் வந்து சேர்ந்து கொண்டது மலர்ச்சியும் புத்துணர்வும்.
வரும் வாரத்தின் வெள்ளி வார இதழுக்கான கட்டுரையாக, வேணும் (want), தேவை (need) எனும் தலைப்பையே நிர்ணயித்துக் கொண்டான். மூச்சு வாங்க நின்றவன், சில நொடிகளில் சமன் பட்டுக் கடற்கரையோரம் சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்தான். தனது எண்ணங்களைப் பேசியில் பதிந்தும் கொண்டான்.
தன் ஹிப் பௌச்சில் இருந்து தண்ணீர் பாட்டிலை உருவி, மடமடவென வாய்க்குள் ஊற்றினான். தண்ணீரைப் பருகியதும், கடற்கரையைச் சுற்றி விழிகளால் அலசினான்.
அவனின் இளம் பச்சை நிற விழி மணிகளில் அத்தனை கூர்மை! எதுவும் அவன் விழிகளுக்குத் தப்புவதில்லை. லேசர் பார்வை போல் அத்தனையும் நொடியில் ஸ்கேன் செய்து உள் வாங்கிக் கொள்ளும் திறன் வாய்ந்தவை.
ஓரிடத்தில் கண்ட விசயத்தால் ஆருஷ் முகம் சுளித்தான். தனது பேசியில் அவசரமாகச் சில படங்களை க்ளிக்கினான். பிறகு வீடியோ பொத்தானைச் சொடுக்கி, படம் பிடிக்க ஆரம்பித்தான்.
இப்போது முகச் சுளிப்பு அகன்று, அவசரமாக ஆராய்ச்சிப் பார்வை வந்திருந்தது.
இன்னும் அருகில் போனால் துல்லியமாகக் காட்சியாக்கலாம். ஐபோன் X கேமரா அருமை தான். ஆனால், இந்தளவு தூரத்தில் இருந்து ஜூம் செய்து வீடியோ? இவன் சற்று முன்னேறிப் போய்ப் படம் பிடித்தால், அந்த ஆட்களின் கண்களில் படுவது உறுதி. விழுவது விழட்டும் என்று கூர்மையுடன் அங்கிருந்தே எடுத்தான்.
காணும் காட்சிகள் உவப்பானவையாக இருக்கவில்லை. மழையின் பொருட்டு ஜனங்களின் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. இந்த நேரத்தை உபயோகப்படுத்தி, அங்கு நடத்திக் கொண்டிருக்கும் செயல்களில் உள்ளம் கொதித்துக் கொண்டிருக்க, இறுகிய முகத்துடன் அத்தனையையும் படமாக்கினான். அந்த வண்டிகளின் நம்பர் பிளேட் உள்பட.
மனதிற்குள் அடுத்து அழைக்க வேண்டிய நபர்களை வரிசைப்படுத்தினான். இன்று மாலைச் செய்தியில் இதனை ஹாட்டா போட்டுடலாமா? யோசனையின் ஊடே, அங்கு இத்தனை நேரம் அலங்கோலத்திற்குக் காரணமாக நின்றிருந்த அந்த மூன்று மினி லாரிகளும், அவற்றில் வந்த நபர்களும் கிளம்புவதைக் கண்டான்.
அதில் ஒருவன் சற்றுத் தேங்கிச் சுற்றுப்புறத்தைக் கவனிக்க, ஆருஷ் அவசரமாகத் தான் இத்தனை நேரம் நின்றிருந்த இடத்தின் மிக அருகே வீற்றிருக்கும் படகின் பக்கவாட்டில் சத்தமில்லாமல் அமர்ந்து கொண்டான். அந்த ஆளின் செயலால், இவையெல்லாம் ஏதோ பெரிய விசயமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் வந்து சேர்ந்து கொண்டது.
சில நெடிய நிமிடங்களை நெட்டித் தள்ளி, அவர்கள் அனைவரும் போனதை உறுதிப்படுத்தி விட்டு, நீரஜ், ஷாகில் இருவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பினான். கடலை நோக்கி நடந்தவன், மினி லாரிகள் நின்று இருந்த பகுதியை மிக விரைவாக எட்டி விட்டான்.
அங்கு அவன் பார்த்தது... பச்சை விழிகளில் நொடியில் சீற்றம்!
Something fishy! கவனமாகக் கையாள வேண்டும்! காதும் காதும் வச்ச மாதிரி. நீரஜ் மற்றும் ஷாகில் இருவரும் உடனே பதில் அளிக்கவில்லை. நீரஜ் வேறொரு முக்கியமான அசைன்மெண்ட் கையில் வைத்து இருப்பது ஞாபகம் வந்தது.
ஷாகில் மனைவியின் வீட்டிற்குப் போயிருக்கிறானே? அவன் வந்து இணைவது கடினம். ஷாகிலுக்குக் காத்திராமல் ஆருஷே அந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.
“ஹாய் சாதிக்! வி நீட்...”
மிகத் தீவிரமாகி இருந்தது ஆருஷின் முகம். அவனின் அழுத்தமான குரலில் ஒலித்துக் கொண்டிருக்கும் விசயத்தை உள்வாங்கிய சாதிக்கிற்கு ஆருஷின் கோபத்தின் அளவைப் புரிந்து கொள்ள முடிந்தது.
“வில் டேக் சார்ஜ் பாஸ்!”
ஆருஷுக்குப் பணிவுடன் பதிலளித்து உடனே அந்த ஸ்பாட்டிற்கு விரைந்தான் சாதிக்.
அதற்குள் மும்பையின் போலீஸ் கமிஷனரைத் தொடர்பு கொண்டிருந்தான். அவரிடம் ஒரு கோரிக்கையையும் வைத்தான் ஆருஷ்.