அன்றே நல்ல நாள் என்பதால், மாலை ஆறு மணிக்கு முன் ஈஸ்வரி புகுந்த வீட்டினுள் தன் மணாளனுடன் அடி எடுத்து வைத்தாள். ரேகாவும், ஈஸ்வரனின் அன்னையும் ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே வரவேற்று, பூஜை அறைக்குள் அழைத்து சென்றனர்.
அங்கே விளக்கு ஏற்றி, மணமக்கள் மனதார தங்கள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன், பூஜை அறையில் இருந்து வெளியே வந்தனர்.
“ரேகா, பிள்ளைங்களை அழைச்சிகிட்டு கிட்சென் வா மா” என்றார் ஈஸ்வரனின் அன்னை.
“ஈஸ்வரி, மூணு தடவை உப்பு, வத்தல், புளி, அரிசி, மஞ்சள் எல்லாம் தொட்டு தொட்டு எடுத்து வைக்கணும் மா” என்று அவர்களின் சம்ப்ரதாயத்தை எடுத்து கூறினார்.
இதை எல்லாம் அவளும் பார்த்து இருக்கிறாளே, ஆகையால் அவர் சொன்னதை எல்லாம் செய்துவிட்டு எல்லோரும் ஹாலிற்கு வந்தனர்.
அப்பொழுது தான் வேலை முடிந்து உள்ளே வந்த ஈஸ்வரனின் தந்தை, இவர்களை பார்த்து வரவேற்றார்.
“வாங்க! வாங்க! இன்னைக்கு வர போவதா சொன்னாங்க, ஆனா கொஞ்சம் வேலை ஆதிகமாகிட்டு அதான் வர முடியல சீக்கிரம்” என்று ரேகாவின் கணவரிடம் மன்னிப்பு கேட்பவரை பார்த்து, புருவம் சுருக்கினார் ஈஸ்வரனின் அன்னை சாரதா.
“இவர் என்ன இப்படி நல்லவர் மாதிரியே பேசுறாரே, ஏதாவது உள்குத்து இருக்குமோ?” என்று எண்ணினார்.
“சாரதா! வந்தவங்களுக்கு ஒரு வாய் காபி கூட குடுக்காம என்ன மா செய்ற?” என்று கேட்டவரை பார்த்து இப்பொழுது, உருத்து விழித்தார்.
அவரின் பார்வையை அப்பொழுது தான் சரியாக கவனித்தார், ஈஸ்வரனின் தந்தை ருத்ரன். அவரின் பார்வை புரிந்து, அவரிடம் வந்தவர் அவருக்கு மட்டும் கேக்கும் குரலில் ஏதோ கூறினார்.
அதை கேட்ட பின்பு, சாரதா முகம் சற்று தெளிந்தாலும், ஒரு சந்தேகத்தனத்துடன் தான் அவரை பார்த்து வைத்தார். மகன், மருமகள் முன்பு வீணாக தங்கள் சண்டையை காட்சி பொருளாக்க விரும்பாதவர், ஈஸ்வரியையும், ரேகாவையும் அழைத்துக் கொண்டு கிட்சென் சென்றார்.
போகும் முன் மகனிடம், தந்தையை கவனித்து கொள்ளும்படி ஒரு பார்வையும் பார்த்து வைத்து சென்றார். அன்னையின் பார்வையை புரிந்தவன், தந்தையை நோட்டம் விட தொடங்கினான்.
அவரோ, மகனின் பார்வையை எதிர்கொண்டு அவனையே சற்று நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார். தந்தை மகனின் பார்வையை பார்த்த ரேகாவின் கணவன், எங்கே சண்டை வந்துவிடுமோ என்று அஞ்சி ஈஸ்வரை அழைத்து கொண்டு, வீட்டின் பின் பக்கம் இருக்கும் சிறிய தோட்டத்திற்கு வந்துவிட்டான்
“தம்பி! இது என்னடா இந்தியா பாகிஸ்தான் சண்டையை விட, நீங்க இப்படி கண்ணாலே சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க? உங்களுக்கு நடுல எங்க சித்தி தான் மாட்டிக்கிட்டு முளிக்குறாங்க டா, பாவம் அவங்க” என்றவனை பார்த்து வருத்தம் தோய்ந்த புன்னகையை சிந்தினான்.
“நீங்க சொன்னது சரி தான் அண்ணா, அம்மா தான் எங்களுக்கு நடுல மாட்டிக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறாங்க. விபரம் தெரிஞ்ச நாளில் இருந்தே, அவர் அவருக்கு இஷ்டப்படி தான் இருக்கனும்ன்னு சொல்லுவார்”.
“இதுல தான் ஆரம்பிச்சது எங்க சண்டை, இப்போ அது எங்க அம்மாவோட வலியை எனக்கு தெரிய வச்சதுல வந்து நிக்குது. நான் முன்னாடியே கொஞ்சம், வீட்டுல எங்க அம்மாவை கவனிச்சு இருக்கணுமோ அப்படின்னு தோணுது இப்போ” என்று வருத்தப்பட்டவனை அணைத்து ஆறுதல் அளித்தான் ரேகாவின் கணவன்.
“சரி, அதை விடு நான் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். ஈஸ்வரி பத்தி நீ என்ன கணிச்சு வச்சு இருக்க அப்படின்னு எனக்கு தெரியாது, ஆனா அவளை நான் பார்த்தவரை ஷி இஸ் சோ கிளெவர் அண்ட் குட்”.
“அன்பு கொடுக்க என்னைக்கும் தயங்க மாட்டா, ஆனா அதே இது தப்பு செஞ்சது தெரிஞ்சா அப்புறம் நல்லா வச்சு செஞ்சுட்டு தான் அடுத்த வேலையே பார்ப்பா. இப்போ அவ உன்னோட மனைவி, எந்த ஒளிவு மறைவும், உங்க ரெண்டு பேர் கிட்டயும் இருக்க கூடாது”.
“அவளை நீ போக போக புரிஞ்சிப்ப, இன்னும் உங்களுக்கான லைப் நிறைய காத்துகிட்டு இருக்கு. பட் அந்த லைப் ல கொஞ்சம் சண்டை நிறைய காதல், விட்டுகொடுத்தல் இருக்கிற மாதிரி பார்த்துகோங்க” என்றவனை பார்த்து சரி என்று புன்னகைத்தான் ஈஸ்வர்.
“அப்புறம் இன்னைக்கு உங்களுக்கு இங்க முதல் ராத்திரி நடக்க, எல்லா ஏற்பாடும் நடக்குது” என்று கூறிக் கொண்டு இருந்தவனை பார்த்து, இப்பொழுது அதிர்ந்தான் ஈஸ்வர்.
“அண்ணா! அவளுக்கு பைனல் எக்ஸாம்ஸ் இருக்கு, இந்நேரம் இது தேவையா இப்போ?” என்றவனை பார்த்து சிரித்தான்.
“நான் தான் சொன்னேனே பா, உங்களுக்கான லைப் நீண்டு இருக்கு, இது பெரியவங்க ஏற்பாடு, அதை ஒன்னும் சொல்லாம அமைதியா இருன்னு தான் சொல்ல வரேன்” என்று அவன் கூறிய பின்பு தான் அவனுக்கு சற்று ஆசுவாசம் வந்தது.
ஒரு பக்கம் அங்கே இரவு உணவை ஈஸ்வரனின் அன்னை சாரதா, அங்கே வேலைக்கு இருக்கும் வள்ளியுடன் சேர்ந்து தயாரிக்க, மறுமக்கம் ரேகா ஒரு அறையில் ஈஸ்வரியை தயார் செய்து கொண்டு இருந்தாள்.
“ம்கும். இது இப்போ ரொம்ப முக்கியம், அங்க உள்ள போன உடனே, படிச்சிட்டியா, ஒழுங்கா பாஸ் ஆகிடுவியா அப்படின்னு கேட்க போறான். இதுக்கு இம்புட்டு பில்ட் அப் கொடுத்துட்டு நான் இந்த புடவையை, வேற உடுத்திட்டு போகணுமாக்கும்”.
“என்ன கொடுமை முருகா இது? உன் பக்தைக்கு வந்த சோதனையை பாரு, இந்த புடவை இடுப்பிலே நிக்க மாட்டேங்குது. கீழே விழுந்திடுமோ அப்படின்னு பயத்திலே இருக்க வேண்டி இருக்கும் போல, என்னை படிக்க கூட விடல இப்போ”.
“அதனால, என்ன என்ன கேள்வி எல்லாம் பரீட்சைக்கு வரும்னு நீ தான் பா சொல்லணும், அப்போ தான் அதை மட்டுமே படிச்சிட்டு போய் எழுதி பாஸ் பண்ண முடியும், படிக்க தான் விடுவாங்களா என்னனே தெரியல எனக்கு, இவங்க பண்ணுற அலப்பறை அப்படி இருக்கு” என்று மனதிற்குள் நொந்து கொண்டே ஈஸ்வரி ரேகா சொல்லியதை எல்லாம் செய்து கொண்டு இருந்தாள்.
இரவு உணவு முடிந்த பின், நல்ல நேரம் பார்த்து இருவரையும் மாடியில் இருக்கும் ஈஸ்வரனின் அறைக்குள் அனுப்பி வைத்தனர்.
“எவ்வளவு படிச்சு இருக்க, நோட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா” என்றவனை பார்த்து முறைத்தாள்.
இதுக்கு இந்த புடவை அவசியமா? என்ன சோதனை இது? என்று நொந்தே விட்டாள். படிக்க இப்படி புடவை கட்டிக் கொண்டு வர வேண்டுமா? இதுக்கு ஓவர் அலப்பறை?
அவனோ, பதில் சொல்லாமல் இருக்கும் அவளின் அமைதியில் அப்பொழுது தான் அவளை கவனித்தான். தன்னை எதற்காக இப்படி முறைக்கிறாள், என்று அவளை அளந்தான் அப்பொழுது.
அந்த பேபி பிங்க் புடவையில் தேவதையென ஜொலித்த தன்னவளை, விழி விரித்து பார்த்தான். அவனின் பார்வை மாற்றத்தை கவனித்தவள் நெஞ்சம், படபடத்து போனது.
“படிக்க இன்னும் கொஞ்சம் இருக்கு, ஆனா என் புக்ஸ் எல்லாம் கீழே இருக்கு. ரேகா அக்கா இன்னைக்கு எடுத்துட்டு போகாத சொல்லிடாங்க, எனக்கு வாங்கி தரீங்களா?” என்று கேட்டவளை பார்த்து இப்பொழுது முறைப்பது இவன் முறையானது.
“நாளைக்கு படிச்சிக்கலாம், இப்போ நான் உனக்கு நிறைய விஷயம் சொல்லணும். இங்க நம்ம குடும்பம் பத்தி, நான் என்னோட வேலையை பத்தி சொல்லணும்” என்றவனை இடைமறித்தாள்.
“எனக்கு தூக்கம் வருது அத்தான், கண்டிப்பா நாம இதை பத்தி பேசலாம் நிறைய, நமக்கு டைம் இருக்கு. நான் இப்போ ரெஸ்ட் எடுத்தா தான், நாளைக்கு எழுந்து சீக்கிரம் அத்தைக்கு ஹெல்ப் பண்ணிட்டு, படிக்க போக முடியும்” என்று கூறிவிட்டு போர்வையை நன்றாக இழுத்து மூடிக் கொண்டு படுத்து விட்டாள்.
இவனுக்கோ, அவள் இழுத்து போர்த்திக் கொண்டதில் செம கடுப்பு. தன்னவள் என்ற உரிமை உணர்வில், அவளை இன்று அருகில் வைத்து பார்த்தவனுக்கு அவளை இழுத்து தன்னருகில் வைத்துக் கொள்ள பரபரத்துக் கொண்டு இருந்தது.
ஆகையால் தான், அவளின் இந்த செயலில் அவனுக்கு சற்று கடுப்பாக இருந்தது. தன்னையே நொந்து கொண்டு, அவனும் கட்டிலில் படுத்துக் கொண்டான்.
மறுநாள், ஈஸ்வரி அங்கே ஆட போகும் ஆட்டத்திற்கு அவன் அவளை ஆதரிப்பானா? அல்லது அவளை அடக்க நினைப்பானா?
தொடரும்