- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 6
அன்றைய இரவில், ராசுவுக்கு உறக்கம் வரவில்லை, அவனின் எண்ணங்கள் முழுவதும் அவனின் கண்ணழகியே நிறைந்து இருந்தாள்.
“என்னை இவ எதுக்கு கல்யாணம் பண்ணிகிட்டா? எங்க அப்பா கிட்ட கேள்வி கேட்கவா? அதை அவ எங்க அப்பா கிட்ட அப்போவே கேட்டு இருக்கலாமே, என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிடனும்?”.
“ஒரு வேலை அவளும் என்னை மாதிரி சைட் அடிச்சு இருப்பாளா, சின்ன வயசுல இருந்து?”
“ம்ச்.. சான்ஸ் இல்லை, எப்போ பார்த்தாலும், அந்த பஞ்சு முட்டாய் சாப்பிடவும், ராட்டனத்துல ஏறவும் தான் கண்ணு அலையும். இதுல அவ எப்படி என்னை பார்த்து இருப்பா?”
“இவ இன்னும் ஏதாவது பிளான் வச்சு இருக்காளா? நாம ஏதும் அப்போ தப்பு செய்தோமா? ஹையோ மண்டையை பிச்சிக்கலாம் போல இருக்கே! அவ கிட்ட நேரடியா கேட்கிறது தான் சரி, இப்போவே கேட்டுடலாம்” என்று நினைத்துக் கொண்டு, அவன் மேலே சென்று அவளின் அறை கதவை தட்டினான்.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, தூங்காமல் யோசனையில் இருந்த சம்யுக்தா எழுந்து வந்து கதவை திறந்தாள். அங்கே அவளின் ராசுகுட்டி நின்று கொண்டு இருப்பதை பார்த்து, என்னவென்று கேட்டாள் அவனிடம்.
“கொஞ்சம் பேசணும்! வெளியே வா!” என்று கூறிவிட்டு, அவன் முன்னே சென்று விட, இவள் கதவை சிறிது சாற்றிவிட்டு அவன் பின்னே சென்றாள்.
மாடியில், மெல்லிய காற்று வீச அதை அனுபவித்தபடி அவன் என்ன கேட்க போகிறான் என்று காத்துக் கொண்டு இருந்தாள்.
“சத்தியமா! நீ எங்க அப்பா கிட்ட அத்தை சார்பா கேள்வி கேட்க தான் கல்யாணம் பண்ணிகிட்டியா? இல்லை வேற காரணம் ஏதாவது இருக்கா?” என்று கேட்டான்.
அவளோ கையை குறுக்காக கட்டிக் கொண்டு, அவனை உருத்து விழித்தாள். அதில் அவன் சிறிது அரண்டு போனான், தான் ஏதும் தவறாக கேட்டுவிட்டோமா என்று.
"உங்க அப்பா பத்தி, உங்களுக்கு நல்லா தெரிஞ்சு இருக்கும் நினைச்சேன், தெரியல நினைக்கிறேன். உங்களை கல்யாணம் பண்ணாம, நேரா உங்க வீட்டுக்கு வந்து, உங்க அப்பா கிட்ட என்னால இப்படி பேசி இருக்க முடியுமா? இல்லை அவர் தான் உள்ள விட்டு இருப்பாரா?”.
“அவ்வளவு ஏன், எங்க அம்மாவும், அத்தையும் பேசிகிட்டு இருக்கிறது, உங்க அப்பாவுக்கு தெரியாம இருக்கும் நினைக்குறீங்களா? தெரிஞ்சு இருந்தும், எங்க அம்மா பத்தி விசாரிச்சாங்களா?”
“இப்போ கூட, எங்க அம்மாவை பார்த்து ஒரு வார்த்தை எப்படி இருக்க? அப்படின்னு கேட்டாங்களா? இப்போ தெரியுதா, எதுக்கு கல்யாணம் பண்ணிகிட்டேன்னு, நான் தூங்க போறேன், நீங்களும் போய் தூங்குங்க” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று அவள் அறைக்கு சென்று, கதவை சாற்றிவிட்டு படுத்துக் கொண்டாள்.
முதலில், அவள் எதுக்காக தந்தையிடம் இப்படி கோபப்படுகிறாள் என்று நினைத்து அவள் மேல் கோபம் கொண்டான். ஆனால் இப்பொழுது அவள் கூறிய ஒவ்வொன்றையும் நினைத்து பார்த்தவன், அவளின் கோபம் நியாயமானது என்பதை புரிந்து கொண்டான்.
“ஹம்ம்.. இன்னும் தீயா வேலை செய்யணும் போல டா, ப்ரித்வி நீ” என்று தனக்குள் கூறி பெருமூச்சு விட்டான்.
மறுநாள் விடியலின் பொழுது, சம்யுக்தா வேலைக்கு செல்ல கிளம்பிக் கொண்டு இருந்தாள். எதுவும் நடவாதது போல், அவள் நடந்து கொண்டது ராசுவின் அன்னைக்கு அவள் மேல் இன்னும் வியப்பு ஏற்பட்டது.
எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு, அவள் காக்கி உடையில் கம்பீரமாக பணியிடத்திற்கு சென்றாள்.
இதில் வியக்க என்ன இருக்கிறது, என்பது போல் அவளின் பெற்றவர்கள் கேட்ட பொழுது அவரின் புருவம் கேள்வியால் உயர்ந்தது.
“விசா! நீ என்ன சொல்லுறன்னு புரியல. இவ்வளவு பெரிய விஷயம் நேத்து நடந்ததுக்கு, வேற பொண்ணா இருந்தா எப்படியும் கொஞ்சம் வருத்தம் அவ முகத்துல காட்டி இருப்பா. ஆனா சம்யு அப்படி இல்லாம, அவ பாட்டுக்கு ரொம்ப இயல்பா இருக்கிறது நல்ல விஷயம் தான், ஆனா...”
“ஆனா, நீ சொல்லுறதை பார்த்தா அவ எப்போவும் இப்படித்தான் அப்படின்ற மாதிரி ல இருக்கு” எனவும் அவர் ஆம் என்றார்.
இதைக் கேட்டவர், சிறிது யோசனைக்கு சென்றார். அதற்குள் அங்கே ராசு வந்தவன், தாயிடம் சில விஷயங்களை கூறிவிட்டு சென்றான். அவன் கூறிவிட்டு சென்ற விஷயங்களை கேட்டவர், சம்யுவின் அன்னையோடு சிலவற்றை கலந்து ஆலோசித்து ஒரு முடிவிற்கு வந்தார்.
ஸ்டேஷன் உள்ளே வந்த சம்யுக்தா, அந்த இடமே க்ரைம் சீன் போல் காட்சி அளித்ததை நினைத்து மிகவும் வருந்தினாள். அது மட்டுமில்லாமல், இப்பொழுது இந்த கேஸ் கிரைம் பிரான்ச் வசம் சென்றுவிட்டது.
அது அவளுக்கு வருத்தம் தான் என்றாலும், அந்த மூன்று பசங்க சாவுக்கு காரணமாக இருந்தவர்களுக்கு தண்டனை கிடைத்தால் சரி என்ற மனநிலைக்கு வந்தாள். இப்பொழுது அவளுக்கு வீட்டில் இருப்பது அதை விட மூச்சு முட்டியது, காரணம் இன்னும் கேட்க வேண்டிய கேள்வி பாக்கி இருக்கிறதே மாமனிடம்.
தன் தாய் கஷ்டப்பட்டது கொஞ்ச நஞ்சமா என்ன? அவரின் தவறு தான் என்ன? காதல் செய்ததா? இல்லை மாமன் பார்த்த பையனை திருமணம் செய்ய மறுத்ததா?
அன்று அவர் வீட்டை விட்டு மட்டுமா துரத்தி அடித்தார்? அதன் பின் அவர் செய்த வேலையை சொன்னால், யாரும் நம்புவார்களா என்ன?
அவரே அவர் வாயால் சொன்னால் மட்டுமே, அந்த உண்மையும் வெளியே வரும். இதைக் கேட்டதற்கே, தன் அண்ணன் தானா இது என்று அதிர்ச்சியில் இருக்கிறார் அன்னை.
இன்னும் அதை வேறு சொன்னால், விளைவுகள் எப்படி இருக்கும் இனி குடும்பத்தில் என்று அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. இதை யோசித்து, யோசித்து தான் அவளால் நிம்மதியாக உறங்க முடியவில்லை நேற்று.
இன்னும் கணவருக்கு கூட உண்மை காரணம் கூறவில்லை, அதை கூறினால் அதன் பிறகு அவன் அதை எவ்வாறு எடுத்துக் கொள்ளுவான் என்றும் தெரியவில்லை.
ஓரமாக அவளுக்கு போட்டு இருந்த இருக்கையில், கண் மூடி இதை எல்லாம் நினைத்து பார்த்தவள், அருகில் அரவம் உணர்ந்து கண் திறந்தாள்.
“மேடம்! உங்களை பார்க்க ஒரு லேடி வந்து இருக்காங்க, இப்போ அவங்களை இங்க வர சொல்லட்டுமா?” என்று கான்ஸ்டபில் ஒருவர் அவளிடம் கேட்டுக் கொண்டு இருந்தார்.
வர சொல்லி அனுப்பிவிட்டு, மனதை வேலையில் முழுதாக செலுத்த தன்னை தயார் படுத்தினாள். கான்ஸ்டபில் அழைத்து வந்தவரை பார்த்து, அதிர்ந்து சீட்டில் இருந்து எழுந்து விட்டாள்.
“வேதா மிஸ்! நீங்களா? நீங்க எப்படி இங்க? உட்காருங்க! சொல்லுங்க மிஸ் எப்படி இருக்கீங்க? உங்களுக்கு என்னை நியாபகம் இருக்கா?” என்று அவரை பார்த்த இன்ப அதிர்ச்சியில் கேள்விகளை அடுக்கி விட்டாள்.
“நீ சம்யுக்தா தான! நீ என்னோட பெஸ்ட் ஸ்டுடென்ட், உன்னை மாதிரி எல்லோரும் இருக்கன்னும்ன்னு இப்போவும் நினைப்பேன். நான் நல்லா இருக்கேன், உன்னை இங்க சந்திப்பேன்னு நானும் நினைக்கல”.
“எனக்கு இப்போ இங்க தான், போஸ்டிங் போட்டு இருக்காங்க. ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கணும், ஸ்கூல்க்கு வெளியே கொஞ்சம் தப்பு நடக்கிற மாதிரி இருக்கு”.
“என்னனு தெரியல, சின்ன பிள்ளைங்களை டார்கெட் பண்ணுற மாதிரி அவங்களுக்கே தெரியாம ஏதோ ஊசி மாதிரி போடுறாங்க. சிலர் தட்டி கேட்டா, சும்மா குத்தி பார்த்தேன்னு சொல்லி சிரிச்சிட்டு போயிடுறாங்க”.
“ஆட்களை பார்த்தா டிசன்ட்டா இருக்காங்க, ஆனா அவங்க ஆக்ட்டிவிட்டிஸ் கொஞ்சமும் சரியில்லை டா. கொஞ்சம் அதை என்னனு விசாரிக்கணும், ஏற்கனவே இப்போ கேட்குற நியூஸ் எல்லாம் ரொம்ப பயமா இருக்கு, அதான் கம்ப்ளைன் பண்ணிட்டு போகலாம் வந்தேன்” என்று அவர் கூறவும், அவள் உடனே விசாரிப்பதாக கூறினாள்.
அவர் கூறிவிட்டு சென்ற செய்தியில், அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்பொழுது தான் அந்த மூன்று பசங்களும், போதை மருந்துக்கு அடிமையாகி, இறந்த சம்பவத்தை பார்த்து அதிர்ந்து அதை கையில் எடுத்தாள்.
அதில் பெரிய தலைகள் சிக்கி இருப்பதால், அதை உடனே மூடி வைக்குமாறு பல பிரஷர் அவளுக்கு அப்பொழுது வந்தது. அதை எல்லாம் மீறி எடுத்து, ஒவ்வொன்றாக விசாரித்து, ஒருவனை என்கௌண்டர் செய்து வரும் பொழுது, ஸ்டேஷன் உள்ளே கொலை நடந்து, இப்பொழுது அது கிரைம் பிரான்ச் வசம் சென்று விட்டது.
அதை ஜீரணித்து கொண்டு அடுத்த வேலை பார்க்கலாம் என்றால், இப்படி ஒரு சம்பவம். அதுவும் சிறு பிள்ளைகளை குறி வைத்து செய்வது, எந்த விதத்தில் சரியாகும்.