கண் மூடி நின்ற வெண்ணிலாவின் அருகில் வந்த அபிநயா அவள் தோள் தொட தன் கண்களை திறந்து கொண்ட வெண்ணிலா அவளைக் கேள்வியாக நோக்கினாள்.
"இவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை நீயே வருத்திக்கிறியே நிலா.....இப்போ கூட டைம் இருக்கு....நீ ப்ரஸ் முன்னாடி போய் சொல்லப் போற இந்த நியூஸைத் தான் எல்லோரும் நம்புவாங்க....இப்போவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல....அந்த டிவோர்ஸ் நியூஸ் பொய்னு சொல்லிடுடா நிலா...." என்று அபிநயா கூறவும்
அவளை பார்த்து விரக்தியாக சிரித்த வெண்ணிலா
"இரண்டு மனமும் ஒத்துப் போய் வாழுறது தான் வாழ்க்கை.....இங்க மனசுக்கே இடம் இல்லாதப்போ ஒத்துப் போறதும் சாத்தியம் இல்லை....வாழ்க்கைக்கும் இடம் இல்லை....எல்லாம் முடிஞ்சுடுச்சு அண்ணி நான் வரேன்...." என்று விட்டு செல்ல
"என்ன சொல்லி இவளை மாற்றுவது???" எனப் புரியாமல் தவிப்போடு நின்று கொண்டிருந்தாள் அபிநயா.
"அம்மா....ஆண்டாள் அம்மா....டெய்லி உன் ரச சாதத்தை சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு....ரச சாதம்னு வெறும் தண்ணீரை அள்ளி போடுற....
இன்னைக்காவது சிக்கன், மட்டனு நாக்குக்கு ருசியா சமைச்சுப் போடப்பாருமா...." என்று வெண்ணிலா கூறவும்
"அடி கழுதை....உனக்கு வாய் ரொம்ப நீண்டிடுச்சு....மத்தியானம் வருவேலே...அப்போ உனக்கு இருக்கு...." என்று ஆண்டாள் கூறவும் சிரித்துக் கொண்டே வெளியேறி சென்றாள் வெண்ணிலா.
வெண்ணிலா ஆண்டாள்- அழகரின் மகள்.
அழகர் அசிஸ்டன்ட் கமிஷனர், ஊரே அவரை பார்த்து நடுங்கும்.
ஆனால் வீட்டில் முற்றிலும் நேர்மாறாக இவர் அனைவருக்கும் பயந்து நடுங்குவார்.
முக்கியமாக வெண்ணிலாவிடம்.
ஆண்டாள் பொறுப்பான குடும்பத்தலைவி.
ஆண்டாள் மற்றும் அழகரின் மூத்த புதல்வன் வெற்றிமாறன்.
பிரபலமான வழக்கறிஞர்.
அவனது மனைவி அபிநயா சிறந்த குடும்பத் தலைவி, அவர்களுக்கு ஒரே செல்ல மகன் வைபவ்.
ஐந்து வயது நிரம்பிய வைபவ் தான்அந்த வீட்டுக்கே செல்லப்பிள்ளை.
அடுத்ததாக வெண்ணிலா, பெயருக்கு ஏற்றாற்போல் நிலவைப் போன்று சாந்தமானவள் அல்ல.
அமைதிக்கும் அவளுக்கும் வெகு தூரம்.
பி.காம் படித்து கொண்டு இருக்கும் போதே சிறு சிறு பாடல் போட்டிகளில் தன் பாடல் திறமையை வெளிக் காட்டி கொண்டிருந்த வேளை அவள் குரல் வளத்தை கேட்டு எதிர்பாராமல் அவளுக்கு கிடைத்த வாய்ப்பே இந்த பாடகி எனும் வாய்ப்பு.
இது நாள் வரை எவ்வாறு தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று வெண்ணிலாவுக்கு தெரியாது.
படிப்பிலும் தன் பாடல் திறமையிலும் சரி சமமாக தன் கவனத்தை செலுத்தினாள் வெண்ணிலா.
ஆனால் அதன் பின் நடந்தவை எல்லாமே ஒரு கனவு போன்றது.
தொடர்ந்து வாய்ப்புகள் அவளை தேடி வந்து கொண்டே இருக்க மூன்று வருடங்களுக்குள் அவள் முண்ணனி பாடகிகளில் ஒருவளாகி விட்டாள்.
மூன்று வருடங்களில் எத்தனை மாற்றங்கள் என நினைத்து கொண்ட வெண்ணிலாவிற்கு மனதின் ஓரம் சிறு வலி.
கடைசி ஒரு வருட நினைவுகளை தன் வாழ்வில் இருந்து நீக்கி விட்டால் இந்த உலகத்தில் தன்னை போன்ற அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை என்று எண்ணி கொண்ட வெண்ணிலா கேட்டின் அருகில் தயங்கி நின்றாள்.
"இனிமேல் தான் நீ தைரியமாக இருக்க வேண்டும் வெண்ணிலா..." என்று தனக்குத்தானே தைரியம் கூறி கொண்டவள் காவலாளியைப் பார்க்க அவன் ஓடி வந்து கேட்டை திறந்து விட்டான்.
மீடியாக்களும், ப்ரஸ் நிருபர்களும் அவளை சூழ்ந்து கொள்ள காவலாளிகள் இரண்டு, மூன்று பேர் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்தனர்.
"வெயிட் வெயிட்.....இப்படி நீங்க வந்து நின்னா என்னால சரியாக பேச முடியாது...ஷோ ப்ளீஸ் கொஞ்சம் கன்ட்ரோல்டா நில்லுங்க....அப்போதானே சீக்கிரமாக நீங்களும் உங்க வேலைக்கு போக முடியும்...." என்று வெண்ணிலா கூறவும் சிறிது சிறிதாக கூட்டத்தில் சலசலப்பு அடங்கியது.
"சரி இப்போ நான் பர்ஸ்ட் சொல்ல வந்ததை சொல்லி முடிச்சுடுறேன்...அப்புறம் உங்க கேள்விகளைக் கேளுங்க ஓகே...." என்று கேட்ட வெண்ணிலா தன் கைகளை இறுக மூடிக் கொண்டு பேசத் தொடங்கினாள்.
"எல்லோரும் நியூஸ் கேள்வி பட்டிருப்பீங்க.....நான் என்னோட ஹஸ்பன்ட் சூர்யா....ஸாரி சூர்யதேவன் கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்க போறது உண்மை தான்....எங்க இரண்டு பேருக்கும் மனசு ஒத்துப் போகல ஷோ நாங்க பிரியப் போறோம்....அன்ட் எனக்காக இந்த கேஸ்ல வாதாடப் போறது என்னோட அண்ணன் வெற்றி...." என்று கூற
"வாட்?????" என்று ஒட்டுமொத்த கூட்டமுமே அதிர்ச்சியில் உறைந்து நிற்க
வெண்ணிலா சிரித்துக் கொண்டே
"எனி குவெசன்ஸ்???" என்று கேட்கவும்
அனைவரும் மறுப்பாக தலை அசைக்க வெண்ணிலா தன் காரில் ஏறி புறப்பட்டு சென்றாள்.
வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியோடு தங்கள் வாகனத்தில் ஏறி புறப்பட்டு சென்று விட ஐந்து நிமிடங்களில் அந்த தெருவே வெறிச்சோடிப் போனது.
டிவியில் இந்த செய்தியை பார்த்து கொண்டிருந்த வெற்றி ஷாக் அடித்தாற் போல எழுந்து நிற்க அவன் தோளை ஆதரவாக தொட்டது வேறு ஒரு கரம்.
அதிர்ச்சியாக வெற்றி திரும்பி பார்க்க அவன் பின்னால் நின்று கொண்டிருந்தான் சூர்யதேவன்.
காற்றில் அலை பாயும் கேசம், கூர்மையாக எதிரில் உள்ளவரை அளவிடும் கண்கள், அழுத்தமான உதடுகள், அதில் உறைந்து இருந்த புன்னகை என ஆண் மகனுக்குரிய சர்வ லட்சணங்களோடு இருந்தான் சூர்யதேவன்.
"சூர்யா....இது எனக்கு தெரியாது....நிலா வேணும்னே இப்படி பண்ணுறா!!!!" என்று வேதனையாக வெற்றி கூறவும்
அவனை பார்த்து புன்னகத்த சூர்யா
"நிலாவை பற்றி உனக்கு சரியா தெரியல வெற்றி.....நிலா வேணும்னு இப்படி பண்ணல...நான் வேண்டாம்னு இப்படி பண்ணுறா....." என்று உள் வாங்கிய குரலில் கூற தவிப்போடு அவனைப் பார்த்தான் வெற்றி.
"விடு வெற்றி....அவளுக்கு அது தான் சந்தோஷம்னா எனக்கு இது தான் சந்தோஷம்....நீ புறப்படு வெற்றி...நீ இங்க இன்னைக்கு வந்தது உன் அருமை தங்கச்சி கிட்ட சொல்லிடாதே....அப்புறம் தையா தக்கானு குதிப்பா....." என்று சூர்யா கூறவும்
அவனை முறைத்து பார்த்த வெற்றி
"ஹலோ மிஸ்டர். சூர்யா....அவ பிறக்குறதுக்கு முன்னாடி இருந்தே நாம பிரண்ட்ஸ்...அதை மறந்துடாதே....அவளை எனக்கு இருபத்தைந்து வருஷமாக தெரியும்னா உன்னை எனக்கு முப்பது வருஷமாக தெரியும்....பை த வே நான் உன்னோட மாமா அதையும் ஞாபகம் வைச்சுக்கோ....உங்க பிரச்சினைக்காக என் பிரண்ட்ஸிப்பை நான் விடணுமா என்ன???" கேட்கவும்
ஒரு புன்சிரிப்பை பதிலாக கொடுத்தான் சூர்யா.
"சரி சூர்யா அப்புறம் மீட் பண்ணலாம்...." என்று விட்டு வெற்றி சென்று விட முகத்தில் இருந்த புன்னகை மறைய டிவியில் தெரிந்த வெண்ணிலாவின் முகத்தை வெறித்துப் பார்த்தான் சூர்யா.
" வாழ்க்கையில் தோல்வியே சந்திக்காதவன்....முதன் முறையாக தோற்று போய் நிற்குறேன்....நிலா இதற்கெல்லாம் நீ கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகணும்....." என்று சூர்யா வெண்ணிலாவின் நிழலுருவத்தைப் பார்த்து கூறிக் கொண்டு இருக்க
வெண்ணிலா தன் காரின் உள்ளே பாடல் ஒன்றை கேட்டு ரசித்தவளாக புன்னகையோடு காரை ஓட்டி கொண்டிருந்தாள்.....