வக்கீலிடம் சென்று டிவோர்ஸ் பேப்பரை கொடுத்த வெண்ணிலாவை வக்கீல் ராஜமூர்த்தி ஆச்சரியமாப் பார்த்தார்.
“என்னம்மா இது ஒரே நாள்ள பேப்பரைக் கொண்டு வந்துட்ட???” என்று ராஜமூர்த்தி கேட்கவும்
“இரண்டு பக்கமும் டிவோர்ஸ்க்கு சம்மதிச்சதுக்கு அப்புறம் எதுக்கு லேட் பண்ணணும்னு இன்னைக்கே கொண்டு வந்துட்டேன்…எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக டிவோர்ஸை எடுத்து தந்துடுங்க ஸார்….” என்று கூறினாள் நிலா.
“எதுக்கும் இன்னொரு வாட்டி நல்லா யோசிச்சுக்கோமா….” என்று ராஜமூர்த்தி கூறவும்
“அதெல்லாம் நல்லா யோசிச்சாச்சு நீங்க மத்த எல்லா பார்மாலிட்டிசையும் பாருங்க….நான் வரேன்…” என்று விட்டு வெளியேறி சென்றாள் நிலா.
ஆபிஸில் இருந்த சூர்யாவிற்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.
வேலையை செய்யலாம் என்று லேப்டாப்பை ஆன் செய்தவன் ஸ்கிரினில் இருந்த வெண்ணிலாவின் புகைப்படத்தைப் பார்த்து இமைக்கவும் மறந்து போனான்.
சிவப்பு நிற சேலையில் தலை முடியை முன் புறமாக எடுத்து விட்டு நடந்து வந்து கொண்டிருக்கையில் எடுக்கப்பட்டிருந்தது அந்த புகைப்படம்.
“ஐசும்மா…..” என்று அந்த புகைப்படத்தை ஆசையாக வருடிக் கொடுத்தவன் கண் மூடி சாய்ந்து பழைய நினைவுகளில் மூழ்கிப் போனான்.
இன்றிலிருந்து சரியாக முப்பது வருடங்களுக்கு முன்னர்……
பெருமாள் மற்றும் அழகர் இருவரது வீடும் அடுத்தடுத்து உள்ள இரு அயல் வீடுகள்.
மகாலட்சுமிக்கு ஒரே பிரசவத்தில் இரு குழந்தைகள் கிடைக்க ஆண்டாளிற்கு ஒரு ஆண் குழந்தை கிடைத்தது.
அவர்கள் தான் சூர்யா, அபிநயா மற்றும் வெற்றி.
பிறந்தது முதலே மூவரும் ஒன்றாகவே வளர்ந்து வந்தனர்.
மூவருக்கும் நான்கு வயதாகும் வரை ஒரே பகுதியிலேயே இருந்து வந்த பெருமாள் மற்றும் மகாலட்சுமி அந்த பகுதியில் இருந்து இரண்டு, மூன்று தெரு தள்ளி இருந்த ஒரு பகுதியில் புதிதாக வீடு வாங்கி மாற்றலாகி சென்று விட அபி,சூர்யா மற்றும் வெற்றி அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியாமல் போனது.
ஆனால் சூர்யா எப்படியாவது தன் சிறு சைக்கிளை எடுத்துக் கொண்டு வெற்றியைக் காண ஓடி வந்து விடுவான்.
இவர்களது நட்பை பார்த்து பெரியோர்கள் அடிக்கடி பெருமைப் பட்டுக் கொள்வர்.
எல்.கே.ஜி க்கு சேர்ப்பதற்கான நேரம் வருகையில் அவர்கள் மூவரும் சேர்ந்து அவர்களது வீட்டை ஒரு வழி செய்தே விட்டனர்.
அட்மிசன் எடுப்பதற்காக வெற்றியை அழைத்து வருவதற்கு அழகர் சிறு தாமதமாக வந்ததனால் அட்மிசன் காலியாகி விட வெற்றியை அங்கே சேர்க்க முடியாமல் போகவே சூர்யா அழுது புரண்டு ஆர்ப்பாட்டமே செய்து விட்டான்.
அதன் பிறகு கரஸ்பான்டன்ட் மற்றும் பிரின்சிபலிடம் பேசி வெகு சிரமப்பட்டு வெற்றியை அதே ஸ்கூலில் சேர்த்த பின்னரே சூர்யாவின் முகத்தில் துளியளவு புன்னகை வந்தது.
இப்படியே இவர்களது நட்பு வளர்ந்து கொண்டே சென்றது.
எப்போதும் போல அன்று ஸ்கூலிற்கு வந்த அபி மற்றும் சூர்யா வெற்றிக்காக காத்துக் கொண்டு நின்றனர்.
ஆனால் வெற்றி வரத் தாமதமாகவே சூர்யா வெற்றியின் வீட்டிற்குச் செல்ல தயாராகவே அபி யாரும் பார்த்து விடுவார்களோ என்று பயத்தில் அவனிடம்
“டேய் சூர்யா!!!! நீ போகும் போது யாரும் பார்த்தா அப்புறம் மிஸ் கிட்ட சொல்லிக் கொடுத்துடுவாங்கடா….அப்புறம் மிஸ் நம்மள அடி பிச்சிடுவாங்க….வேண்டாம்டா சூர்யா போகாதே…” என்று கெஞ்சிக் கொண்டு நின்றாள்.
ஆனால் அவனோ வெற்றியைப் பார்த்தே தீருவேன் என்று பிடிவாதமாக நின்று கொண்டிருக்கையில் வெற்றி அவனது தந்தையோடு வந்து இறங்கினான்.
“வெற்றி…..” என்று ஆனந்தமாக கூச்சலிட்டவாறு ஓடி வந்த சூர்யா
“ஏன்டா இவ்வளவு லேட்டா வர்ற???” என்று கேட்கவும்
“எங்க வீட்டுக்கு குட்டி பாப்பா வரப் போகுது உனக்குத் தெரியுமா???” என்று முகம் நிறைந்த புன்னகையோடு கூற
“நிஜமாவாடா???” என்று விழி விரித்துக் கேட்டாள் அபிநயா.
“ஆமா…நான் இப்போ தான் ஹாஸ்பிடல் போய் பார்த்துட்டு வந்தேன்…அழகான குண்டுப் பாப்பா….பிங்கி பேபி…” என்று வெற்றி கூற
“அப்படியா??? டேய் எங்களையும் கூட்டிட்டு போய் காமிடா ப்ளீஸ்….” என்று தன் கண்களை சுருக்கி அபிநயா கேட்கவும் வெற்றி திரும்பி தன் தந்தையைப் பார்த்தான்.
அபி மற்றும் சூர்யாவின் அருகில் வந்த அழகர் “பாப்பா வீட்டுக்கு நாளைக்கு வந்துடுவா…நான் நாளைக்கு வந்து உங்க இரண்டு பேரையும் கூட்டிட்டு போறேன் சரியா???” என்று கேட்கவும் குழந்தைகள் இருவரும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர்.
அடுத்த நாள் வெற்றியை அழைத்துச் செல்ல வந்த அழகர் சூர்யா மற்றும் அபியை அழைத்துச் செல்ல வந்த அவர்களது டிரைவரிடம் சொல்லி விட்டு குழந்தைகள் மூவரையும் அழைத்துக் கொண்டு பறப்பட்டார்.
போகும் வழி முழுவதும் வெற்றி குழந்தையைப் பற்றி பேசிக் கொண்டே வர சூர்யாவின் மனதில் அப்போதே ஒரு இனம் புரியாத ஆனந்தம் வந்து ஒட்டிக் கொண்டது.
வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் மூவரும் ஆண்டாள் இருந்த அறையை நோக்கிச் சென்றனர்.
அங்கு பிங்க் நிற டவலினால் சுற்றப்பட்டு ரோஜாக் குவியல் போல இருந்த குழந்தையை சூர்யாவம், அபியும் வியப்பாக பார்த்த வண்ணம் நின்றனர்.
“ஆன்டி பாப்பா ரொம்ப அழகாக இருக்காளே….” என்று சூர்யா கூறவும்
“அது என் தங்கச்சி பாப்பாலே என்னை மாதிரி தான் இருப்பா…” என்று பெரிய மனுஷனாக வெற்றி கூற
“அய்யே!!! போடா பொய் சொல்லாம….” என்று அவன் தலையில் தட்டிச் சிரித்தாள் அபிநயா.
“ஆன்டி பாப்பாவோட நேம் என்ன???” என்று சூர்யா கேட்கவும்
“ஹ்ம்ம்ம்ம்….” என்று யோசிப்பது போல பாவனை செய்த ஆண்டாள்
“நீ பெரிய பாய் தானே…நீயே ஒரு நேம் சொல்லு…” என்று கூற தன் தலையில் தட்டியவாறே சிறிது நேரம் யோசித்தான் சூர்யா.
பின்பு ஏதோ நினைவு வந்தவனாக “ஹய்யா….நான் யோசிச்சுட்டேன்….நிலா….” என்று கூறவும்
“நல்லாவே இல்ல….” என்று வெற்றி கூற
“ஆமா…ஆமா…ரொம்ப பழைய நேம்…..” என்று அவனுக்கு ஒத்து ஊதினாள் அபிநயா.
“இன்னைக்கு நம்ம மிஸ் சொன்னாங்க தானே….ஸ்கைல இருக்குற நிலா ரொம்ப அழகாக கியூட்டாக இருக்கும்னு....அது மாதிரி பாப்பாவும் கியூட்டா இருக்குலே…” என்று கூறவும்
“என் சமத்து….” என்று அவனை செல்லம் கொஞ்சினார் ஆண்டாள்.
இவர்களது சம்பாஷைணையைக் கேட்டு சிரித்துக் கொண்ட பெரியவர்கள் அவர்களது குழந்தைத் தனமான பேச்சை நேரம் போவதே தெரியாமல் ரசித்த வண்ணம் இருந்தனர்.
குழந்தைக்கு பெயர் சூட்டும் நாளும் வந்தது.
சூர்யா, அபி மற்றும் வெற்றி குழந்தை இருந்த தொட்டிலின் அருகில் நின்று கொண்டிருக்க குழந்தையை கையில் ஏந்திய அழகர்
ஆண்டாளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே குழந்தையின் காதில் “வெண்ணிலா….வெண்ணிலா…வெண்ணிலா…” என்று கூறவும்
“ஹய்யா…..நான் சொன்ன நேம்…” என்று துள்ளிக் குதித்தான் சூர்யா.
இப்படியே தங்கள் குழந்தைகள் எப்போதும் ஒற்றுமையாக, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மனதினுள் பிரார்த்திக் கொண்டிருக்க விதியோ வேறு ஒரு திட்டத்தை தீட்டிக் கொண்டிருந்தது.
சூர்யா ஐந்தாம் வகுப்பு செல்லும் வரை எல்லாம் சுமூகமாகவே சென்று கொண்டிருந்தது.
அன்று வழக்கம் போல வெண்ணிலாவைப் பார்க்கவென அவளது வீட்டிற்கு வந்த சூர்யா “நிலா…நிலா…” என்று அழைத்தவாறு அவளைத் தேடிச் சென்றான்.
அப்போது அங்கே மகாலட்சுமியும், ஆண்டாளும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவன் அவர்கள் அருகில் சென்று
“நிலா எங்கேம்மா???” என்று கேட்கவும்
“உள்ளே தான் விளையாடிட்டு இருந்தா கண்ணா….” என்று ஆண்டாள் கூற
“காணோமே….” என்றவாறு மறுபடியும் வீட்டிற்குள் ஓடிச் சென்றான் சூர்யா.
அப்போது திடீரென்று சூர்யாவின் முன்னால் பாய்ந்து வந்து நின்ற வெண்ணிலா
“பே….” என்று சத்தமிடவும்
“லூசு…..இப்படியா வந்து குதிப்ப???” என்று சூர்யா அவள் தலையில் தட்ட
அவனை முறைத்துப் பார்த்த வெண்ணிலா “எதுக்கு இப்போ என் தலையில் தட்டுன???இரு எங்க அம்மாகிட்ட சொல்லிக் கொடுக்குறேன்..” என்று கூற வாயை மூடிக் கொண்டு சிரித்த சூர்யா
“உங்க அம்மா எனக்குத் தான் சப்போர்ட் பண்ணுவாங்க….” என்று கெத்தாக தன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டு கூறினான்.
ஆண்டாள் எப்போதும் சூர்யாவிற்கு ஆதரவாகப் பேசுவதால் சில நேரங்களில் வெற்றி கூட ஆண்டாளிடம்
“ம்மா பேசாம நீங்க சூர்யாவை இங்க வைச்சுக்கங்க….நான் அபி கிட்ட போய் இருந்துக்குறேன்…..எப்போவுமே அவனத் தான் குட் பாய்னு சொல்றீங்க….நீங்க ரொம்ப பேட்….” என்று அடிக்கடி சண்டை போடுவதும் உண்டு.
வெண்ணிலா கூட சில நேரங்களில் ஆண்டாளிடம் “நீ எனக்கு மம்மியா இல்ல சூர்யாவுக்கா???” என்று கேட்பாள்.
இன்றும் அந்த தைரியத்தில் சூர்யா இன்று வெண்ணிலாவிடம் சவால் விடவும் இந்த ஒரு விடயத்தில் சூர்யாவின் மேல் கோபம் கொண்டிருந்த வெண்ணிலா என்ன செய்வது யோசித்து விட்டு திடீரென்று கீழே விஐந்து உருண்டு புரண்டு அழத் தொடங்கினாள்.
“ஹேய்….என்ன ஆச்சு???” என்று சூர்யா பயத்தோடு வெண்ணிலாவைப் பார்த்துக் கேட்க அவளோ வாயிலைப் பார்ப்பதும் மீண்டும் சத்தமிட்டு அழுவதுமாக இருந்தாள்.
வெண்ணிலா அழும் சத்தம் கேட்டு பதறியடித்துக் கொண்டு ஆண்டாளும், மகாலட்சுமியும் ஓடி வந்தனர்.
“என்ன பண்ண சூர்யா???” என்று மகாலட்சுமி சூர்யாவைப் பார்த்து அதட்டலாக கேட்கவும்
பயந்து போன சூர்யா
“நான் எதுவும் பண்ணலமா….அவதான் சும்மா கீழே விழுந்துட்டு அழுவுறா….” என்று கூற
அவசரமாக எழுந்து நின்ற வெண்ணிலா
“இல்ல ஆன்டி…சூர்யா தான் என்னைக் கீழே தள்ளி விட்டுட்டான்….இங்க பாருங்க என் கையில காயத்தை…” என்று ஒரு காயத்தைக் காட்டவும்
கோபமாக அவனை முறைத்துப் பார்த்தார் மகாலட்சுமி.