காதல் - 4
அடுத்த நாள் காலையில் எழுந்ததிலிருந்தே தலை பயங்கரமாய் வலிக்க, கண்களைத் திறக்க நினைத்தாலும் கண்களில் ஏறிய பாரம் அவளின் தலை வலியை இன்னும் கூட்டியது..என்ன முயன்றும் நேற்று எப்படி வீட்டுக்கும் வந்தோம்? என்பது அவளது நினைவிடுக்கில் இல்லை..
மாலை தனது தோழி லீனாவுடன் தங்களது மேலதிகாரியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு போனவளை அவளது நண்பர் படை சூழ்ந்து கொண்டது. அனைவரிடமும் அரட்டைப் பாட்டு டான்ஸ் என அந்த நேரம் இனிமையாய் கழிய அடுத்த கட்டமாக அனைவருக்கும் ஹாட் ட்ரிங்க்ஸ் மற்றும் வைன் அடங்கிய கோப்பைகள் கொடுக்கப்பட்டது..
அவள் வளர்ந்த கலாச்சாரத்தில் அது ஒரு விசயமே இல்லை என்றாலும், இந்தப் பழக்கத்தை மதி எப்போதையும் விரும்பாதவள்..நண்பர்களுக்காக ஆபிஸ் பார்ட்டிகளுக்காக மது கோப்பையை கைகளில் எடுத்தாலும் இரண்டு சிப் அதற்கு மேல் குடிக்காமல் கைகளில் வைத்து சிறிது நேரம் உலாவிய படி வீடு வந்து சேர்ந்து விடுவாள்..
நேற்றும் அதைப் போலவே மது கின்னங்களை வாங்கி கொண்ட நண்பர் பட்டாளம் ஒன்று கூடி அரட்டையைத் தொடங்க, முதலில் இரண்டு சிப் என்று ஆரம்பித்தவள் தோழ வட்டத்தில் நடந்த அரட்டைக் கச்சேரியில் கவனமில்லாமல் அடுத்தடுத்து எனக் கொடுக்கப்பட்ட இரண்டு ரவுண்டையும் முழுங்க, அதன் பின் தான் அவளது தள்ளாட்டம் அதிகமானது..
அங்கே இருந்து புலம்பி ஆடிப் பாடியவளை லீனா தான் வீட்டிற்கு இழுத்து வந்து விட்டுச் சென்றாள்..பொழுது போய் வீடு வந்தவளைத் திட்டுவதற்கு குழலி வாயைத் திறக்கும் முன் கண்ணசைவில் தடுத்த நெடுஞ்செழியன்..
மகள் தனது அறைக்குள் சென்று தாழிட்டதும், மனைவியிடம் திரும்பி, “எதுவாகயிருந்தாலும் காலையில பேசிக்கலாம்..இப்போ போய் தூங்கு..” என்றார் நிதானமாக..
“இப்படியே அவளுக்குச் செல்லம் கொடுத்து தான் இப்படி ஆக்கிட்டிங்க..என்னமோ பண்ணுங்க..” கோபமாய் தலையில் அடித்து அறைக்குள் நுழையும் தனது மனைவியைப் பார்த்து சிறிது நேரம் நின்றவர், சில யோசனைகளுக்குப் பின் நிலையான முடிவை எடுத்தது மட்டுமல்லாமல் காலதாமதமின்றி அதைச் செயல் படுத்தினார்.
தனது அலுவலகத்தில் இரண்டு மாத விடுப்புக் கோரி, கையோடு அடுத்த வாரம் இந்தியா செல்ல இரண்டு பயண சீட்டை பதிந்து பல யோசனைகளின் நடுவிலே கண்ணயர்ந்தார்.
இரவு நடந்த இத்தனையும் மதிக்கு நினைவில் இல்லை, அவளது கருத்தில் நிற்பதெல்லாம் நண்பர்களுடன் அடித்த அரட்டையும், கைகளில் ஏந்திய மது கின்னமும் தான்..தலையை இரு கைகளாலும் தாங்கி அமர்ந்தவளைச் செல் போன் செல்லமாய் சிணுங்கி தனது இருப்பையும் அவளது அடுத்த கட்ட அலுவல் வேலைகளையும் எடுத்துரைக்க, யோசிக்க நேரமின்றி தனது உடல் அசதியைப் புறம் தள்ளியவள் விரைவாய் குளிக்கச் சென்றாள்..
காலையில் எழுந்ததில் இருந்தே குழலிக்கு இருப்புக் கொள்ளவில்லை..நேற்று தாமதமாய் வந்தது மட்டுமில்லாமல் பத்து மணி வரையில் எழாமல் இருக்கும் மகளையும், அதற்குத் துணை போன கணவனையும் முறைத்து வாய்க்குள் முனங்கியே சபித்தவர் காலை உணவிற்குக் கோதுமை ரவை உப்புமாவை சமைத்து தனது கோபத்தை கொஞ்சம் தீர்த்து கொண்டார்..
மனைவியின் முகத்தில் தோன்றிய கலவையான கோபம் இறுதியாய் டிபனை ஹாட் பேக்கில் எடுத்து வைக்கும் போது அவர் திருப்தியாய் சிரித்தது எல்லாவற்றையும் வைத்து இன்றைய உணவை அறிந்து கொண்டவருக்கு மதியின் மேல் கொண்ட கோபம் மேலும் கூடியது..
இருவரின் பிபிஐ எகிற வைத்து கதவைத் திறந்தவளின் காதுகளில் ப்ளூ டூத் இணைத்திருக்கத் தெளிவான ஆங்கிலத்தில் சரளமாய் பேசியபடி சாப்பிட அமர்ந்தவளுக்கு பெற்றோரைக் கண்டு கொள்ள நேரம் இருப்பதாய் நமக்குத் தெரியவில்லை..பேசிக் கொண்டே தட்டை எடுத்து வைத்தவளுக்கு குழலி உப்புமாவை வைத்து சர்க்கரையை தூவ..
அலுவல் விசயமாய் பேசிக் கொண்டிருந்தவளுக்கு, ஸ்பூனால் அள்ளி வாயில் திணிப்பது உப்புமா என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை...இரண்டாவது முறையாக குழலி வைத்ததையும் ஏதும் சொல்லாமல் உண்ண ஆரம்பித்தவள், அழைப்பைத் துண்டித்ததிற்கு அடையாளமாய் ஹெட் செட்டை காதில் இருந்து அகற்றி மேஜையில் வைத்தவளிட்ட கூச்சலில் தூரத்தில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியன் பதறி ஓடி வந்தார் என்றால், அருகில் நின்ற குழலியோ ஸ்தம்பித்து நின்றுவிட்டார்..
*****
ராஜின் துளைத்தெடுக்கும் பார்வையை எதிர் கொள்ளும் முன்பே ஆதிக்கை அழைத்தவாறு அறையினுள் பிரவேசித்தாள் வதனரேகா..
“ஆதிக் அண்ணா..” என்ற ஆர்ப்பாட்டத்துடன் நுழைந்தவளைக் கண்டு ராஜின் முகம் கடுகடுக்க, இதற்கு நேரெதிராய் ஆதிக்கின் முகம் மலர்ந்திருந்தது. ராஜின் முகம் போன போக்கை கண்டு ரேகா மனதிற்குள் சிரித்து கொண்டாள்..அவளின் சீண்டலை அறியாத ராஜோ அவளை ஏகபோகத்திற்கு முறைக்க, ஆதிக் இவர்களின் விளையாட்டைக் கண்டும் காணாதது போல் அமர்ந்து கொண்டான்.
“ஆதிக் அண்ணா..நான் கூப்பிடுறது கேட்கலையா..?” என்றவளின் சத்தம் இவனுக்கானதாக இருந்தாலும், பார்வை என்னவோ ராஜிடம் தான் இருந்தது..இவளது ‘அண்ணன்’ என்ற அழைப்பில் முறைக்க ஆரம்பித்த ராஜ், ஆதிக்கிடம் கூட சொல்லாமல் பட்டென்று கதவைத் திறந்து வெளி சென்றுவிட, இரு கைகளையும் தலையின் பின்னால் கோர்த்தவன் இருக்கையில் சாய்ந்தவாறே..
“ஹே வாலு.. பாவம் அவன்..” என்றான் ஆதிக்
அவனின் அழைப்பில் சிரித்தவள், அவன் பாவம் என்றதும் கேலியாய் பார்த்து,
“ஆதி அத்தான்..” என்றாள் வாய் நிறைய பல்லாய்..
“ரேக்ஸ்..ஒன்னு அண்ணா சொல்லு இல்லையா அத்தான் சொல்லு..எதுக்கு இப்படி நீயும் கன்பியூஸ் ஆகி என்னையும் கொழப்புற..”
“ஆதி அத்தான்...இப்போ இந்த அழைப்பு ரொம்ப முக்கியமா..!” காட்டமாய் அவள் வினவியதும் சத்தமாய் சிரித்தவன்
“அப்போ எது முக்கியம்னு சொல்லுற..” என்றான் கோப்புகளின் மீது பார்வையை பதித்து..தனது முகம் பார்த்து பேசாததில் கடுப்பானவள், அவனின் கைகளில் இருந்தை பிடுங்கி மூடி வைக்க, இப்போது அவளை நிமிர்ந்து பார்த்தவன்..
“என்ன டா இப்போ வேணும்..?” என்றான் பரிதாபமாய்..
“உங்க தம்பியை கரெக்ட் பண்ண ஏதாச்சும் ஒரு ஐடியா கொடுங்கலேன்..ப்ளீஸ்..” உதடு குவித்து கெஞ்சுபவளிடம்..
“நீ உங்க அண்ணன் விகாஷ் கிட்ட கேட்க வேண்டியத என்கிட்ட கேட்குற பார்த்தியா..? நான் ஏதோ பத்து ஃபிகர கரெக்ட் பண்ணி, இப்போ அடுத்த ஃபிகர கரெக்ட் பண்ண ரெடி ஆகிட்ட மாதிரியே கேட்குறியே உன்னையெல்லாம் என்ன பண்ண..?” என்று ஆதிக் குறைபட்டுக் கொள்ள..
‘ஆமா! ஆதி சொல்வதும் சரி தானே..’ எனச் சிந்தித்து நின்ற வதன ரேகா வேறு யாரும் அல்ல, ஆதிக்கின் நண்பனும் , முதலாளியுமான விகாஷின் வளர்ப்பு தங்கை மற்றும் விகாஷின் மனைவிக்குச் சொந்த அத்தை மகள்..
தாய் தந்தையில்லாமல் இருந்தவளுக்குக் கடந்த ஐந்து வருடமாக அனைத்துமாய் நிற்பது விகாஷ் தான்..இயல்பிலேயேஅனைவரிடமும் சீக்கிரம் ஒன்றிவிடும் வதனாவிற்கு விகாஷ் குடும்பத்திடமும் ஆதிக்கிடமும் பழகுவது பெரியதாக தோன்றவில்லை..ஆனால் ராஜ்..?
விகாஷின் குடும்பத்தின் பாதுகாப்பில் வந்த ஒரு மாதத்திலிருந்து ராஜை பார்க்கிறாள்..கண்டதும் காதல் என்றெல்லாம் இல்லை..அவனது இயல்பு மற்றும் குணத்தைத் தெரிந்த பின் வந்த ஆழமான காதல் தான் ஆனால் ஒரு தலைக் காதல்..!
சிறிது நேர யோசனைக்குப் பின் ஆதிக்கை திரும்பிப் பார்க்க, அவனோ கைகளால் நாடியைத் தாங்கி அவள் வாங்கி வைத்த ஃபைலை பிரட்டிக் கொண்டிருந்தான்..மறுபடியும் அவன் ஃபைலை வாங்க கை நீட்டியவளிடம். இப்போது என்னவென்பது போல் பார்க்க,
“ஆதி அத்தான்..நம்ம மாஸ்டர் பீஸ் எப்போ வரும்..?”
“தெரியல ரேக்ஸ்..இன்னும் பத்து நாளுல வருவாம்னு நாம எதிர்பார்க்கலாம்..” முதலாளி எப்போது வருவான் என்று கேட்டால், வானிலை அறிக்கை போல் தகவல் சொல்லியவனை முறைத்தவள்,
“என்ன ப்ரோ...கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பேசுற..முதலாளி எப்போ வருவார்னு கூட தெரிஞ்சு வச்சீக்காம என்ன தான் வேலை பார்க்குறீங்களோ..?” விடாமல் கேள்வித் தொடுப்பவளை முறைத்தவன்..
“இப்போ தான் தெரியுது என் தம்பி ராஜ் எதுக்கு காலையில பொண்ணு பார்க்க சொன்னாம்னு..”
“என்ன அத்தான் சொல்ற..உங்க தம்பி பொண்ணு பார்க்க சொன்னானா..?”
“ஆமா..நீ வேணும்னா அவனையே போய் கேட்டு பாரேன்..” காதில் புகை வராத குறையாய் வேக மூச்சுகளை எடுத்து விட்டவள்,
“இந்தாங்க அண்ணா..ச்சீ.. அத்தான்..இந்த ஃபைலை பார்த்துட்டே இருங்க நான் போய் அவன இன்னைக்கு ஒரு கைப் பார்த்துட்டு வரேன்..” ஆத்திரமாய் வெளியேறியவளைத் திருப்தியாய் பார்த்தவன், அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிக்க, அவனது அறையைக் கோபமாய் திறந்தவள் அங்கே ராஜ் நின்றிருந்த கோலம் கண்டு வழியும் கண்ணீரையும் துடைக்க வழு இல்லாமல் கீழே விழுந்தாள் வதன ரேகா..