~8~
பெற்றொர் கிளம்பி முழுதாய் பத்து மணி நேரம் முடியும் முன்னே, மதிக்கு ஏதோ இழந்து விட்டதைப் போல இருந்தது. வேலைக்கு கூடச் செல்லவில்லை..நாமும் சென்றிருக்கலாமோ? என்ற எண்ணத்தோடு,
“ச்ச...நாம போயிருந்தா இந்த அப்பா அம்மாக்கு எல்லாம் ரொம்ப இளக்காரமா போயிருக்கும்” பாசத்தைவிடத் தனது ஈகோ பெரிசாகத் தெரிய அவ்வப்போது செல்லும் தாய் தந்தையரின் அறைக்குச் சென்றவள் அங்கேயே அமர்ந்து அவர்களைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள்.
தாய் தந்தையரின் புகைப்படத்தைப் பாவமாய் பார்த்தவளுக்கு அவர்களைப் பார்க்கும் ஆர்வம் மிகுதியாகத் தான் இருந்தது..வேண்டா வெறுப்பாக, ஒரு வாரம் கழித்து தந்தை வரச்சொல்லியதற்காக வந்தது போல சீன் போடலாம் தான் ஆனால் அதற்கு கூட ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமே என யோசிக்கத் தொடங்கியவளின் மனதின் ஓரத்தில் பல்ப் எரியவும் தெரிந்த டிராவல் ஏஜென்ஸிக்கு தனது அழைப்பை விடுத்தாள் மதி.
நாளை மாலை இந்தியா செல்வதற்கான ஏற்பாட்டில் இறங்கியவளுக்கு டிக்கெட் தான் சாமானியமாய் கிடைக்கவில்லை. இரண்டு மடங்கு விலை கொடுத்து நாளை மறுநாள் அதிகாலையில் கிளம்பும் இந்திய விமானத்தில் பயணச்சீட்டு கிடைத்தது.
தாய் தந்தைக்கு அழைத்துச் சொல்லலாம் என்று எடுத்த முடிவை நொடியில் மாற்றியவள், “வேண்டாம் என்னைப் பற்றிய கவலையில்லாமல் போனவங்களுக்கு நாம எதுக்கு சொல்லனும்..” மனம் முரண்டியது.
மனதில் தாய் தந்தையை முடிந்த மட்டிலும் அர்ச்சித்தவளுக்குக் கல்யாணத்திற்கு மாப்பிள்ளைப் பார்க்க வேண்டும் என அவர்கள் சொன்னது தேவையில்லாமல் அவளது நினைவில் வர, அடுத்ததாக அவளது இலக்கு கல்யாண மாப்பிள்ளையை நோக்கித் திரும்பியது.
ஆங்கிலத்தில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளாலும் தனக்கு வரப் போகிறவனை நினைத்துக் கொஞ்சியவளுக்கு வேறு மொழிகளில் வார்த்தை கிடைக்குமா என யோசிக்கத் துவங்கினாள்..
வெகு நேர சிந்தனைக்குப் பின் தாய் மொழி தமிழ் அவளின் நினைவுக்கு வர, அதில் தனக்கு நன்றாகத் தெரிந்து மூன்று கெட்ட வார்த்தைகளான ‘பன்னி, நாய், எருமை’ என்பதைக் கொண்டு ஆயிரம் தடவை புகழ்ந்து முடிக்க, இப்போது தான் அவளுக்கு அவனைத் திட்டியதன் முழுப் பயனும் கிடைத்தது போல இருந்தது. (ஆமா இருக்காதா பின்னே மூச்சு விடாம மூணு மணி நேரம்ல திட்டிருக்கா..)
தனக்கு வேண்டிய உடைகள் அனைத்தையும் பேக் செய்தவள், கொஞ்சம் டாலர்களை இந்திய ரூபாய்களாய் மாற்ற மணி எக்ஸ்சேஞ்ர்களை அணுகி அதையும் கையோடு முடித்து வைத்தாள். தனது மேலதிகாரிக்குப் போனில் அழைத்து ஒரு மாதக் கால விடுப்பு எடுப்பதாய் தகவல் தெரிவித்து இந்தியா கிளம்புவதற்காக தயாராகி விட்டாள்.
இவளது அனைத்து ஏற்பாடுகளையும் வீட்டில் வேலைச் செய்யும் பெண்மணி மூலம் அறிந்த செழியனுக்கு, மகளை நினைத்துச் சிரிப்பு தான் வந்தது. ‘சரி மகளுக்கு அழைத்துப் பார்ப்போம்’ என நினைத்து மதிக்குத் தனது அழைப்பை விடுக்க, கடைசி ரிங்கில் அட்டெண்ட் செய்தவள்,
“யா டேட்..ஹவ் ஆர் யூ..?” என்றாள் உற்சாகமாய்.
“ம்.. நல்லா இருக்கேன் டா..சாப்பிட்டியா..?”
“சாப்பிட்டேன்..நீங்க..?” என்றவளும் தான் இந்தியா வரப் போவதை சொல்லவில்லை, அவரும் அதைத் தெரிந்த மாதிரி கேட்கவில்லை.
“ம்..எஸ்..” தந்தையிடம் தான் வருவதைச் சொல்லலாமா? என யோசித்தவள், பின்னர் ஊருக்குப் போகும் முன் தந்தை கொடுத்த முகவரியை வைத்து நாமே வீட்டைக் கண்டுபிடித்து விடலாமென்ற நம்பிக்கையில்..
“ஒகே டேட்..எனக்குத் தூக்கம் வருது பை..” என்று தொடர்பை துண்டித்தவள் தூங்கச்சென்றாள்.
மறுநாள் அலுவலகத்தில் மிச்சம் இருந்த வேலையை முடித்து, அன்றிரவே தனது இந்திய பயணத்தை ஏர்போட்டில் இருந்து துவங்கினாள் மதியழகி..
மதி போனை வைத்ததும் அவரது உதவியாளருக்கு அழைத்து நாளை மதி வரும் ப்ளைட் பற்றிய விவரங்களை வாங்கியவர், ‘மகள் ஊரை விற்று பையில் போடும் அளவிற்குச் சாமர்த்திய சாலி’ என்பதை உணர்ந்து அவளுக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையைப் பற்றி விசாரிக்கத் துவங்கினார்.
அதிகாலையில் சென்னை வந்து இறங்கியவளுக்குப் புதிதாக ஒரு இடத்துக்கு வந்திருக்கும் பயம் சிறிதும் இல்லை, அசால்டாக வெளியே வந்தவள் வாடகை கார் ஒன்றைப் பிடித்து பெற்றொர் தங்கியிருக்கும் வீட்டின் முகவரியை டிரைவரிடம் சொன்னாள் அந்த கேப்’ல் இருந்த wifi மூலம் மேப்பில் வீட்டிற்கு செல்லும் வழியைப் பார்த்தவள், தனது பாதுகாப்பைக் குறித்து கொள்ளவும் தவறவில்லை.
தன்னைப் போன்றே பரபரப்பாக இருக்கும் சென்னையை அவளுக்கு மிகவும் பிடித்துவிட, traffic’ல் வண்டி நிற்கும் நேரமும் சுற்றத்தை வேடிக்கை பார்த்ததில் பொறுமை கூட அவளோடு பொருந்தி இருந்தது.
தனது தந்தை தங்கியிருக்கும் அவரது சித்தப்பா வீட்டை ஒருவழியாக கண்டுபிடித்து வந்து சேர்ந்துவிட்டவளுக்கு ‘அக்கடா’ என்று இருந்தது.
டிரைவரிற்கு பணத்தை கொடுத்து வீட்டின் மீது பார்வையை ஓட்ட, வெளியே இருந்து பார்க்கவே சின்ன பங்களாவைப் போல அழகாய் இருந்தது. கொஞ்சம் அருகே சென்று பார்க்கும் போது கேட்டிற்கு வீட்டிற்கும் கண்டிப்பாக அரை கிலோ மீட்டர் ஆவது தூரம் இருக்கும் என்பது புரிய, அதன் இடைவெளியில் இருக்கும் தோட்டத்தை தாண்டி வெள்ளை நிற பங்களா லேசாகத் தெரிந்தது.
வீட்டின் காவலாளி அப்போது தான் காலை உணவு சாப்பிட சென்றிருக்க, எப்போதும் கேட்டைப் பூட்டிச் செல்பவன் இன்று மறந்துப் போனது மதியின் விதியா? இல்லை அவனது விதியா? என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.
மதி கைவைத்து கொஞ்சம் தள்ளியதும் பெரிய கதவை ஒட்டியே இருந்த சின்ன கதவு திறந்து அவள் செல்வதற்கு வழி விட்டது.
அங்கிருந்த மினி பூங்காவை ஆவென வாய்பிளந்து இரசித்தவள், கொஞ்சமாய் கால்களை எடுத்து வைத்து முன்னேறி பாதி தூரம் வந்திருந்தாள்.
அடுத்த அடி எடுத்து வைக்க துணியும் முன், தன் முன்னே எதுவோ மூச்சிறைத்து நிற்பது போல் சத்தம் கேட்க, ‘யார்’ என்பதைப் போல் நிமிர்ந்து பார்த்தவளுக்கு எங்கே ஓட என்பது தான் தெரியவில்லை.
அரை அடி இடைவெளியில் தன்னில் முக்கால் அளவு வளர்ந்து நிற்கும் இராஜபாளையத்து நாய், நாக்கை வெளியே தொங்க விட்டி, பற்களைக் கோரமாய் வைத்து இவளைப் பார்த்து சிரித்தது.
அதன் கருமை நிறமும் அது நின்ற தோரணமும் மதியையே பயம் கொள்ளச் செய்ய, பயத்தில் மூச்சும் விடவில்லை.. ஒருவாறாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கொஞ்சமாய் காலைத் தூக்கி வைக்க, நாயும் இவளைப் போலவே கொஞ்சமாய் முன்னேறியது.
நாய் முன்னேறியதும் வேகமாய் ஒரு அடி பின்னேறியவளுக்கு, இப்போது தெளிவாய் புரிந்தது, நாம் ஓடினால் நாய் துரத்தும் என்பது..சுற்றிலும் கண்களை ஒருமுறை ஓட்டியவளுக்கு அங்கே யாரும் இருப்பது போல் தெரியவில்லை. கடித்துவிடுமோ..? என்ற யோசனையுடன் அதைப் பார்க்க அதுவோ இவளை மட்டுமே பார்த்தது.
தனது ட்ராவல் பேக்கை எடுத்து நாய்க்கும் தனது நடுவே வைத்தவள், “டாக் சார்..” என்றாள் தணிந்தக் குரலில்.
இவளது அழைப்பிற்குப் பதிலளிப்பது போல அது உறுமி காமிக்க, இவளது அனுமதியில்லாமலே கால் மட்டும் ஆடத் துவங்கியது, “டாக் சார்..எங்க மம்மி டாடி வீட்டுக்குள்ள இருக்காங்க..கொஞ்சம் வர சொல்லுங்க..” பழக்கமே இல்லாத மரியாதையுடன் சமரசம் பேசியவள் நாயைக் கூட விட்டு வைக்காமல் வேலை ஏவ
அதற்கும் நாய் உறுமியே காண்பிக்க, “ப்ளீஸ் சார்..” என்றாள் கெஞ்சும் பாவனையில், அப்போதும் அது நகராமல் இருக்க, என்ன செய்யலாம் என அவள் யோசித்து கையில் இருக்கும் பேப்பரை சிந்தனையின் ஊடே கசிக்கி எறிய, அதை எடுக்க நாய் ஓடியது.
அதனின் ஓட்டத்தில் கண்கள் பளிச்சிட, பையில் வேறு பேப்பர் இருக்கிறதா எனத் தேடியவளுக்கு விடை என்னவோ பூஜ்ஜியம் தான்.
பையில் ரூபாயைத் தவிர வேறெதுவும் இல்லாமல் போக, ‘உயிர் பெரியதா? பணம் பெரியதா?’ என்ற கேள்விக்கு, இப்போதைக்கு உயிர் தான் முக்கியம் என்கிற முடிவுடன், இரண்டாம் ரூபாய் நோட்டைக் கசக்கி நாய்க்கும் காண்பித்து விட்டு தூரமாய் தூக்கி எறிந்தாள்..
அவள் எறிந்த வேகத்தில் நாய் நாலு கால் பாய்ச்சலில் அதை எடுக்க ஓடியது என்றால், மதி இரண்டு கால் பாய்ச்சலில் பேக்கை கூட எடுக்காமல் தலை தெறிக்க வீட்டை நோக்கி ஓடினாள்.
இவள் ஓடும் சத்தத்தில் நாயின் கவனம் பேப்பரில் இருந்து மதியை நோக்கித் திரும்ப, அவளை துரத்தி நெருங்கியது.
இன்னும் ஒரே தாவில் அவளைக் கவ்வி விடும் என்றதும் எதிரே வந்தவனின் தோள் மேல் ஒற்றை ஜம்பில் ஏறியவள், அவனது நெஞ்சிலே முகத்தையும் புதைத்துக் கொண்டு, அவனது இடுப்பில் ஜம்மென்று அமர்ந்து கொண்டவளின் கண்கள் நாயைத் தான் பயத்துடன் பார்த்தது.
“டாக் சார்..என்னை விட்டிருங்க..ப்ளீஸ்..” தனது முதுகை இறுக்கமாய் பற்றிக் கொண்டு சத்தமிட்டவளையும் நாயையும் மாறி மாறி பார்த்தான் அவன்
****