~9~
கோபமாய் வெளியேறும் மகன் சென்ற திசையைப் பார்த்து செழியனும் வேணியும் அசந்து போயினர். விகாஷைத் தொடர்புக் கொண்ட ராஜ், அங்கே நடந்தவற்றை சுருக்கமாகச் சொல்ல, “நான் பார்த்துக்கிறேன் ராஜ்” என்ற உறுதிமொழியுடன் ஆதிக்கை காண விரைந்தான் விகாஷ் ரகுவரன்.
போனை அணைத்து பையில் போட்டவன், “ஊப்ஸ்” என்று பெருமூச்சு விட்டபடியே செழியனையும் வேணியையும் பார்க்க, அவர்களும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வேகமாய் வாசல் பக்கம் வந்தவன், வெளியே நோட்டம் விட்டு பால்கனியின் ஜன்னிலில் இருந்து பார்க்க ஆதிக் கோபமாய் கார் எடுத்துக் கொண்டு வெளியேறுவது தெரிந்தது.
ஆதிக் இங்கு இல்லை என்பதை உறுதிப் படுத்திய பின், வேணியின் பக்கம் திரும்பி, ‘ஈ….’ என பல்லைக் காட்ட, அவனது கண்ணசைவிற்காகவே காத்திருந்தவரைப் போல மாஸ்க்கை எடுத்துத் தூர வைத்துவிட்டு,
“என்ன டா அவன் அப்படி கோபமா போறான்..?” என்றார் கவலைப் படிந்த குரலில்..
அவரின் கேள்வியைப் புறம் தள்ளியவன் அருகே இருந்த ஆப்பிளை எடுத்து சுவைக்கத் துவங்க,
‘தான் எவ்வளவு பதட்டமாக பேசுகிறோம் இவன் என்னடான்னா ஆப்பிள் திங்குறான்..’ மனதில் ராஜை திட்டியவர்
“டேய் எருமை உன்னைத் தான கேட்குறேன்..” என்றார் சத்தமாய்
“அம்மா..இப்படி சத்தமா பேசாதீங்க அப்புறம் உண்மையாவே நெஞ்சுவலி வந்திட போகுது” ராஜின் பதிலில் செழியன் வாயை மூடிச் சிரித்தார்..
செழியனை திரும்பி பார்த்து முறைத்த வேணி, “டேய் ராஜ்…” கோபத்தில் பல்லைக் கடித்து அழைக்க
“சொல்லுங்க மம்மி..” என்றான் ஹாயாக
“உன்கிட்ட தான கேட்குறேன்..”
“அதுக்கு தான விகாஷ் சார அனுப்பியிருக்கு..ஒண்ணும் ஆகாது..ஆமா, சரவண பவன்ல இருந்து காபி வாங்கிட்டு வரச் சொன்னிங்களே வந்துட்டா..?” ஆப்பிள் முடிந்து காபி கேட்கும் ராஜை முறைத்தாலும், அவருக்கும் காபியின் நினைவு வந்துவிட
“என்னங்க காபி வாங்கிட்டு வரச் சொன்னீங்களா இல்லையா..?” என்றார் அதட்டலாக
“ம்..சொல்லிருக்கேன் சொல்லிருக்கேன்..” பொறுப்பில்லாமல் செழியன் பதிலளிக்க
“என்ன முணைப்பு..?” என்றார் வேணி
“வேணி, ஆதி நேத்து ஒழுங்காவே சாப்பிடல..எதுக்கு இப்படி ரெண்டு பேரும் சேர்ந்துட்டு அவனைக் கஷ்டப்படுத்தனும்..அவன் அழுது தான் இதெல்லாம் நடக்கனுமா..?” தவமிருந்து பெற்ற மகனின் கண்ணீரைக் கண்டதும் செழியனின் மனம் சுனங்கி வார்த்தைகள் சூடாக வந்தது.
“குழந்தை அழும்னு மருந்து கொடுக்காமலோ ஊசி போடாமலோ இருக்கவா போறோம் அதே மாதிரி தான் அவனுக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்க எனக்கு ஆசையிருக்க கூடாதா..ஏன்? அந்த ஆசை உங்களுக்கும் இருக்கு தான..அவனா சரியாகிடுவாம்னு இத்தனை வருஷம் விட்டு வைச்சா நிலைமை நம்ம கைமீறி போயிட்டு..? உங்களால அவன்கிட்ட பேசி சம்மதம் வாங்க முடியுதா..? ஒரு நாள் அழுது சாப்பிடாம இருந்தா உங்க பையன் ஒண்ணும் கரைஞ்சிட மாட்டான்..” உண்மை தானே ஆதிக்கின் வழியில் சென்று அவனுக்கு ஒரு நல்லது செய்யலாமென்று நினைத்தால் அதைச் செய்யவும் அவர்களால் முடியவில்லை..ஒற்றைப் பார்வையில் அன்னியப்படுத்திவிட்டோ, பேசியே சமாளித்தோ விடுகிறான்..
வேணியின் பதிலிருக்கும் உண்மை புரிந்து செழியன் அமைதியாய் சேரில் அமர, “மம்மி இதுக்கு தான் அப்பாவுக்கு நெஞ்சு வலி வர வச்சிடலாம்னு சொன்னேன் கேட்டிங்களா..?”செழியனை நக்கலாய் பார்த்து கொண்டே ராஜ் சொல்ல,
“ஆமா டா நானும் அத தான் நினைச்சேன்..ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு..சரி நாமலே மெயின் ஆக்ட்டிங் போடுவோம் இவர சைடு ஆக்டரா வச்சுக்கலாம்னு நினைச்சா..அதைக் கூட ஒழுங்கா பண்ண மாட்டிக்காரு டா..” மூக்கை உறிஞ்சி ராஜின் தோளில் சாய்ந்தார் வேணி.
“ஆமா மம்மி..பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு கண்ணீர் சிந்தி அழாம அமைதியா உட்கார்ந்து வேடிக்கை பார்க்குறாரு..” செழியனைப் பற்றி குற்றப்பத்திரிக்கை வாசித்தவன் அடுத்ததாக ஆரஞ்சு பழத்தை உரிக்க
“டேய் நீ அடங்கு டா...நானாவது அமைதியா இருந்தேன்..இவன் அழுதே ஓவர் ஆக்டிங் பண்ணி நம்மல காட்டிக் கொடுத்திருப்பான் ரஸ்கல்..” தன்னைப் பற்றி குறை சொன்னதில் செழியன் ராஜைப் பற்றிப் புகார் வாசிக்க
“மம்மி அதெல்லாம் வுடுங்க...பொண்டாட்டிக்கு சீரியஸ் கண்டிஷன்னு டாக்டர் சொல்லிட்டு போனதும் ஒரு நல்ல புருஷன் என்ன மம்மி பண்ணனும்..?” ராஜின் கேள்வியிக்கு செழியன் முறைக்க..
“இவர் என்ன டா பண்ணுனாரு..?” என்ற வேணியின் கேள்வியில் கருனையின் அளவு குறைந்திருந்தது.
“ராஜ்..உன்கிட்ட இப்போ யாராவது கேட்டாங்களா..?” சொல்லாதே என்ற கண்ணசைவுடன் செழியன் பார்க்க
அதைக் கண்டு கொள்ளாதவன் புகார் வாசிக்கத் துவங்கும் முன், “வேணி மா நானாச்சும் பசிக்குது சாப்பிட போகலாமான்னு தான் கேட்டேன் ஆனா இவன் இருக்கானே அங்க போய் சிக்கன் ஆர்டர் பண்ணட்டுமான்னு கேட்டான்..” என்றார் செழியன்.
இருவரையும் முறைத்த வேணி, “அடப்பாவிகளா..நான் இங்க உடம்பு சரியில்லாம படுத்திருக்கேன்…” பாதியிலே தனது பேச்சை நிறுத்தியவர்..
“ஒருவேளை ஆதி நம்மல கண்டுபிடிச்சிருப்பானோ..?” என்றார் பயக் குரலில்
“ச்ச...அதுக்குலாம் சான்ஸே இல்லை அய்யாவோட பெர்ஃபாமென்ஸ் அப்படி..” சட்டைக் காலரை தூக்கிவிட்டு ராஜ் பெருமை பீற்றிக் கொள்ளவும்
“எப்படி டா இன்னைக்கு என் தோளுல படுத்து தூங்குனியே அப்படியா..?” சிரிக்காமல் சந்தேகம் கேட்டும் தாயை ராஜ் முறைக்க
அவனது பாவனையில் செழியனும் வேணியும் அடக்கமாட்டாமல் சிரித்தனர்.
‘கல்யாணமாம் கல்யாணம்..யார்கிட்ட கேட்டாங்க கல்யாணத்தைப் பத்தி..’ மனத்தில் கனன்று கொண்டிருக்கும் கோபத்தோடு பெசென்ட் பீச்சில் நடந்து கொண்டிருந்தான் ஆதிக். (அது என்னப்பா எல்லோரும் கோபம் வந்தா பீச்சுக்கு இல்லனா பாருக்கே போறீங்க?!)
தூரத்திலே ஆதிக்கை கண்டு கொண்ட விகாஷ், “ஆதி” என்று உரக்க அழைக்க, விகாஷின் குரல் வந்த திசையைப் பார்த்தவன்.
“வா..” என்றான் சுரத்தில்லாமல்.
“என்ன டா அலுத்துக்கிற..?”
“நான் செம கோபத்துல இருக்கேன்..போயிடு..” ஆதிக் விகாஷை நோக்கி ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்க
“உண்மையாவே கோபத்துல தான் இருக்க போல மச்சி..சரி அத வுடு..அம்மாவுக்கு என்ன ஆச்சு..” என்றான் காரின் முன் பகுதியில் ஏறி அமர்ந்து கொண்டு.
அம்மாவைப் பற்றிக் கேட்டதும் நேற்றிலிருந்து நடந்தவற்றை ஆதிக் சொல்லி முடிக்க, “சரி..அதுக்கு நீ என்ன சொன்ன..?” என்றான் ஆர்வமானக் குரலில்
“டேய் கல்யாணமா நான் எப்படி டா..?” என்றவனை முறைத்த விகாஷ்
“என்ன நீ எப்படி டா..? என்னவோ காதலிச்சு ஏமாந்தவன் மாதிரியே பேசுற..?ஆமா, எதுக்கு டா உனக்கு பொண்ணுங்கனாலே பிடிக்கல..?” விகாஷ் பேச ஆரம்பித்ததில் இருந்து முறைத்தவன், இப்போது
“பொண்ணுங்கள பிடிக்கும் பிடிக்காது இல்ல..எனக்கு கல்யாணம் பிடிக்காது அவ்வளவு தான்..”
“இது என்னடா பதில்..?”
“என்னது என்னடா பதிலு..?” கேள்வி கேட்டவனையேத் திருப்பி கேள்வி கேட்கும் ஆதிக்கை முறைத்தவன்,
“பொண்ணுங்களத் தான் உனக்குப் பிடிக்குமே அப்புறம் என்னடா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே..?”
“பொண்ணுங்கள பிடிக்கும்னு நான் எப்போ டா சொன்னேன்..?”
“அடப்பாவி..! இப்போ தானடா சொன்ன..”
“எனக்குத் தான் கல்யாணம் பிடிக்காதே..” என்றவனை தினுசாய் பார்த்த விகாஷ்,
“ஆதி, லிவ்விங் டூகெதர்ல எதுவும்..?” தாடையை தடவி விகாஷ் கேட்கவும்
“என்ன எதுவும்..” வந்ததில் இருந்து ஒட்டாமல் பதிலளிக்கும் ஆதிக்கை முறைத்த விகாஷ்
“சரி உனக்கு உன் விருப்பம் தான முக்கியம்..வேணியம்மா இருந்தா உனக்கென்ன செத்தா உனக்கென்ன..?” அசால்ட்டாய் உரைத்து, “சரி வாடா அதி சாப்பிட போகலாம் பசிக்குது..” என்றான் அவனது தோளைத் தட்டி..
அவனது வார்த்தைகளில் தலையைப்பிடித்தவன், “அய்யோ கடவுளே இப்போ என்னை என்ன தான் பண்ண சொல்லுற..?”
“எனக்கு அது தெரியாது எல்லாம் உன் இஷ்டம்..” ஆதிக்கிடம் பட்டும்படாமல் சொல்லிவிட்டு, தனது டிரைவரிடம் திரும்பி,
“காரை வீட்டுக்கு எடுத்திட்டு போங்க..” என்றவன் ஆதிக்கின் காரைத் திறந்து அதில் அமர்ந்து கொண்டான்..
விகாஷையும் கடலையும் மாறி மாறிப் பார்த்தவன் தலையில் அடித்துக் கொண்டு, “கல்யாணம் பண்ணித் தொலையுறேன்..” என்றான் வேண்டா வெறுப்பாக..
****