வணக்கம் மக்களே,
எபி 12 படிச்சு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.. இந்த கதை முடியும் தருவாயில் இருக்கு. ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!!??
12
அற்புதாவுக்கு அன்று ஸ்கானிங் இருந்தது.அதற்காக கணவனுடன் வந்திருந்தாள்.அது முடிந்து அவள் காத்திருக்க ,கண்ணன் மருந்தகம் போயிருந்தான்.
“உங்க பிரண்ட் வரலையா மேடம்” என்றாள் ஒரு நர்ஸ்.
“இல்லை,ஏன்?”
“அவங்களுக்கும் உங்களைப் போல் இன்னிக்கி செக்கப் இருந்திருக்குமே அதான் கேட்டேன்”
‘என்ன சொல்கிறாள்!’
“நீங்க என்ன கேட்குறீங்க, எனக்கு புரியலையே”
“உங்க கூட வந்திருந்தாங்களே அவங்களுக்கும் கர்ப்பம் உறுதி ஆகிடிச்சு, உங்களுக்கு தெரியாதா,அவங்க சொல்லலை?”
அற்புதாவிடம் பதிலில்லை.அவள் அமைதியாகிவிட்டதைக் கண்டு அந்த நர்சும் அவ்விடமிருந்து விலகிக் கொண்டாள்.
போனில் அற்புதா தான் அழைக்கிறாள் என்று பார்த்தும் அதனை எடுக்காமல் தன் தூக்கத்தை தொடர்ந்தாள் தாரிணி. எவரிடமும் பேசும் எண்ணமில்லை இப்போது. சரண் அன்று மித்துவை அழைத்துக் கொண்டு வீடு திரும்பியதிலிருந்து முகத்தை இறுக்கமாய் வைத்திருந்தான். மித்துவுக்கு பழரசம் தந்தவன் அவளுக்கும் தந்தான் அதுவும் மித்துவின் மூலமாய்.
இரவு மகன் தூங்கிய பின் இவளிடம் வந்தவன்,
“என்னை எவனோ ஒருத்தன்னு நினைக்குறியா தாரிணி?குழந்தை என்னோடதும் தானே?அதன் வரவு பத்தி எனக்கும் தெரிய வேண்டாமா?”
அதிர்ச்சியாய் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘அற்புதாவின் வேலை தான்’
சோபாவில் இருந்தவளின் பக்கம் முட்டி போட்டிருந்தான்.
“உனக்கு இந்த குழந்தை வேண்டாமா தாரிணி?”
பதிலில்லை!அவளுக்கும் அதில் இன்னமும் தெளிவில்லை!
“உனக்கு மனசிருந்தா பெத்துக்கோ இல்லைன்ன...வே...வேண்டாம் தாரிணி”
அவன் சொன்னதில் குழப்பமாகியிருந்தாள்.அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
அடுத்த நாள் காலை அவள் விழித்தது அவன் முகத்தில் தான். இரவில் அவள் படுக்கையில் அவளுக்கு எதிர்புறத்தில் வந்து தூங்கியிருந்தான் சரண்.இவள் எழுந்து அடுக்களைக்குள் போனது தான் தாமதம்,பின்னோடு வந்தவன்,
“நீ இன்னிக்கு எதுவும் செய்ய வேண்டாம்.சமையலுக்கு புதுசா ஒருத்தங்க வருவாங்க!”
அவள் அவனை பார்த்துக் கொண்டிருக்க காபி தயாரித்தான். அவள் கையில் ஒரு குவளையை தந்துவிட்டு மித்துவை எழுப்ப சென்றுவிட்டான்.
ஏனோ தாரிணிக்கு அந்த பானம் குடித்த வேகத்தில் வெளியில் வந்தது.சத்தம் கேட்டு அவளை சூழ்ந்துக் கொண்டனர் அப்பாவும் பிள்ளையும்!
சரண் அவள் முதுகை தடவி விட, மித்துவோ,
“ மா ஆர் யூ ஓகே” என்றான்.
ஏனோ அந்த பிள்ளையின் முகம் பார்க்க இவன் ஒருவன் போதும் என்ற எண்ணம் ஆணித்திரமாய் அவள் மனதில் பதிந்தது.
ஹாஸ்பிட்டலில் காத்திருந்தாள் தாரிணி,இன்று கருக்கலைப்பு செய்துவிடும் எண்ணத்தில் வந்திருந்தாள்.அற்புதாவின் போன் அழைப்புக்களை உதாசினப்படுத்தியிருந்தாள்.இந்த விஷயத்தை வைத்து எல்லாரும் அவளை வஞ்சிப்பார்கள் என்றே அவளுக்கு தோன்றியது!
டாக்டர் அழைக்க இவள் உள்ளே சென்றாள். ஸ்கானில் குழந்தையை பார்க்க ஆரம்பிக்க அங்கு வந்தான் சரண். தெரிந்தவன் போல் பரிட்சயமாய் புன்னகைத்தார் மருத்துவரும். குழந்தையின் இதய துடிப்பு தெரிய ஆரம்பித்திருந்தது. தாரிணி அதையெல்லாம் பார்த்தாலும் அவள் கண்களில் ஜீவனில்லை.தவறிழைக்க போகிறோம் என்ற உள்ளுணர்வு ஏனோ அவளை பாடாய் படுத்தியது.
ஸ்கிரீனில் தெரிந்த அந்த சின்ன உருவத்தை சரண் ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஏன் அபார்ட் செய்ய நினைக்கிறீங்க தாரிணி?”மருத்துவரின் கேள்விக்கு சரணின் கண்களை சந்தித்தவள், கொஞ்சம் தாமதித்து,
“என்னால தனியா இரண்டு பிள்ளைகளை வளர்க்க முடியாது டாக்டர்”என்றாள்.
சரண் அவளை முறைத்துக் கொண்டு நிற்க, மருத்துவரும் இங்கிதம் கருதி அவளை அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.
“பெர்சனலா என்னை கேட்டா இப்படி செய்யாதீங்கன்னு தான் சொல்வேன்.எனிவே இன்னும் ஒரு மாசத்துக்குள் செய்யணும்ன செஞ்சிடலாம். யோசிச்சு முடிவெடுங்க”
“இன்னிக்கே செய்திடலாம் டாக்டர்”
“தாரிணி” அலறியிருந்தான்.
“டாக்டர் எனக்கு இந்த அபார்ஷன் செய்றதில் விருப்பமில்லை. ஹஸ்பெண்ட் கன்செண்ட் இல்லாம நீங்க இதை செய்ய மாட்டீங்கன்னு நம்புறேன்”மருத்துவரிடம் அவன் நேரிடையாக சொல்ல,
“சரண் என்னோட முடிவுன்னு தானே சொன்னீங்க. இப்ப என்ன?”தாரிணியின் கேள்விக்கு அவள் முகம் பாராமல்,
“வீட்டில போய் பேசிக்கலாம்” வெளியேறிவிட்டான்.
தன் குடும்பத்துடன் நெருங்கும் முயற்சியில் பாதி கிணறு தாண்டியாயிற்று என்று அவன் எண்ணியிருந்த நேரத்தில் ‘தொபுக்கடீர்’ என்று அந்த கிணற்றுக்குள்ளேயே விழுந்துவிட்டது போலிருந்தது சரணுக்கு.இனியும் அவர்கள் இருவரும் ஒன்று சேர முடியும் என்ற அவனின் எண்ணம் நிறைவேறாது போல!
அவன் சென்றதும் மருத்துவர் இவளை ஒரு குற்றவாளியை பார்ப்பதை போல் ஒரு பார்வை பார்த்து,
“நீங்க நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க. அவர் சொன்னது போல் ஹஸ்பண்ட் கன்சண்ட் எங்களுக்கு முக்கியம்.அதையும் கவனத்தில் வச்சிக்கோங்க”
இதற்கு மேல் உன்னிடம் பேச எதுவுமில்லை என்பதாக மருத்துவர் தலை குனிந்துக் கொள்ள தாரிணியும் கிளம்பிவிட்டாள்.
இன்னமும் கிளம்பாமல் இவள் காரில் சாய்ந்தபடி நின்றிருந்தான். இவள் வரவும்,
“நீ உட்கார் நான் வண்டி எடுக்கிறேன்”
சாவியை பெற்றுக் கொண்டு வண்டியை செலுத்தியது மகனின் பள்ளியை நோக்கி.
அங்கே வந்தே பல மாதமிருக்கும் தாரிணிக்கு!எந்த சந்திப்பு நிகழ்ச்சிகளிலும் தந்தை மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பது சின்னவனின் உத்தரவு.இவள் காரில் அமர்ந்திருக்க சரண் கையில் தொங்கியபடி வந்தான் மித்து.
இவள் எதிர்பாராத நேரத்தில் அம்மா என்று இவள் மேல் குதித்த பிள்ளையை,ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.சரணுக்கு தான் முகம் மாறிவிட்டது.
“மித்து அப்படி செய்ய கூடாது. அம்மாவுக்கு வலிக்கும் தானே”
“நான் அடிக்கடி ஜம்பிங் கேம் விளையாடுவேனே அம்மா டம்மில! இப்படி...”
அமர்திருந்தவளின் வயிற்றின் மேல் அவன் குதிக்க போக,
“மித்து ஸ்டாப். இப்ப இப்படி செய்ய கூடாது”
தந்தையின் புது கோபத்தால் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான் பிள்ளை.
“நீ பின்னாடி போ,அம்மா கிட்ட இருந்து கீழே இறங்கு!”
தந்தையின் அடுத்த ஆர்டரை அவன் மதிப்பதாய் இல்லை.நீண்ட நேரமாய் அவன் செய்வதற்காக காத்திருந்து, கடைசிக்கு தாரிணி தான் போனாள் பின்பக்கம்.
‘அப்படியே அம்மா மாதிரி அடம்’ சரணின் முணுமுணுப்பு அவளுக்கும் கேட்டது!
வீடு திரும்பும் வழியில்,
“பா ஏன் கோவப்படுறீங்க? ஜம்ப் பண்ணா என்ன”
அவன் பிள்ளைக்கு விளக்குவதற்காக வாயை திறக்க,பின் சீட்டிலிருந்து மகனறியாமல் அவன் தோளில் தட்டினாள்.
இவன் வாகனத்தை செலுத்தியபடி கண்ணாடியில் பின்பக்கம் இருந்தவளின் முகம் பார்க்க,
‘குழந்தை விஷயத்தை மித்துவிடம் சொல்லிடாதே’ வயிற்றைச் தொட்டு காட்டி சைகையால் சொன்னாள்.
அவள் செய்கையை பார்த்து புன்னகைத்தவனுக்கு, பிறக்காத தன் குழந்தையை காப்பாற்றும் வழி தெரிந்துவிட்டது.
———-
“நான் எப்படி இருக்கேனோ அதை அப்படியே ஏத்துக்குற ஆளா தானே இருந்தீங்க சரண்? நீங்க இப்படி மாறிப் போனது தான் நமக்கு பிரச்சனையே”
தாரிணி ஆரம்பிக்க,
“எல்லாரும் மாற தான் செய்வாங்க.
காதலிக்கும் போது இருந்த மாதிரியேவா கல்யாணத்துக்கு பிறகும் இருப்பாங்க? பிரையாரிட்டி மாறும்.நீயும் தான் மாறியிருக்க. உன் மனசு முழுசுக்கும் மித்து மட்டும் தான் இருக்கான். அதை நீயும் உணரனும் தாரிணி!”
அவனும் விடுவதாக இல்லை!
“எல்லா அம்மாவுக்கும் அப்படிதான்.பாவம் உங்களுக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை!”
அவன் மனதை வலிக்க செய்ய வேண்டும் என்பதே அவள் ஒரே குறியாக இருந்தது! காரணம் கோபம்!
காதலுக்கு கண்ணில்லை என்பது போல் கோபத்துக்கு மூளையே இல்லை!
“ஆமா என்னை மாதிரி ஒரு அனாதைக்கு எப்படி தெரியும்? ஆனா நான் பார்த்த என் சித்தி,அத்தை யாரும் உன்னை போல் பிள்ளை பைத்தியம் இல்லை. அவங்கவுங்க புருஷனும் அவங்களுக்கு முக்கியம் தான்.”
“நான் உங்களை விரும்பினேன் சரண், இன்னமும் விரும்புறேன். அதை அடிக்கடி மறக்குறீங்க. நமக்குள்ள இருக்கிற இந்த சண்டை எனக்கு பிடிக்கலை. அதை அவாய்ட் செய்ய தான் நான் போகணும்னு சொல்றேன்.”
அன்று ஆரம்பித்த சண்டையே அவள் ஊருக்கு போக வேண்டும் என்று சொன்னதற்காக தான்.
வேக நடையால் அந்த அறையை அளந்தான். ஒரு கையால் தன் தலைமுடியை கோதிக் கொண்டிருந்தான்.
‘இவளை…’
“போயிட்டு எப்போ வருவே”
“எனக்கு தோணும் போது…”
“உனக்கு என்ன பைத்தியமா?சண்டை எல்லார் வீட்டிலையும் தான் இருக்கு .அதுக்கு விட்டிட்டு போனா சரியா போச்சா?”
“எனக்கு இந்த பிரிவு அவசியம்னு படுது சரண். என்னை கொஞ்ச நாள் விடுங்க”
“அப்ப நம்ம குழந்தை? அவனால் இதை புரிஞ்சிக்க முடியுமா? இல்லை ஊர் தான் கேணத்தனமான உன் யோசனையை ஒத்துக்குமா?”
“யார் ஒத்துக்குறாங்களோ இல்லையோ, நான் கொஞ்ச நாள் தனியா இருக்க தான் போறேன்!”
“எனக்கு அதில் இஷ்டமில்லை தாரிணி. என் வார்த்தையை மீறி போகாதே, வருத்தப்படுவே”
“யார் வருத்தப்படுறான்னு பார்ப்போம்! நீங்க நிம்மதியா உங்க கம்பெனியை கட்டிகிட்டு அழுங்க”
அவனுக்கும் கோபத்தின் அளவுகோல் ஏறிக் கொண்டே போனது. முதலிலேயே இவளை தட்டி வைத்திருக்க வேண்டுமோ என்ற பிற்போக்கு எண்ணம் கூட வந்து போனது.
“நான் உன் காலில் விழுந்து ‘போகாதேன்னு’கெஞ்சணும்னு எதிர்பார்க்குறியா?முடியாது. கிளம்பி போடி. நானா வந்து உன்னை என்னைக்கும் கூப்பிட போறதில்லை!”
பேசி தீர்க்க வேண்டியதை பேசியே பெரிதாக்கிய தாரிணியும் சரணும் இப்படியாக பிரிந்து , அவள் தன் சொந்த ஊருக்கு வந்துவிட, இவன் தன் பணியை அதே அமெரிக்காவில் தொடர்ந்தான்.
“அப்பா என்னால இனிமேலும் அங்க வாழ முடியாது பா, என்னை விட்டிருங்க”
மகளின் கன்னத்தில் அறைந்திருந்தார் இரத்தினவேல். அவர் அடித்தது இது முதல் முறை இல்லை என்றாலும் திருமணத்துக்கு
பின்னான முதல் அறை!
“தேடி பிடிச்சாலும் இப்படி ஒரு மாப்பிள்ளை உனக்கு கிடைப்பானா?”
அம்மா அவர்கள் இருந்த திசையின் பக்கம் கூட இல்லை!
“கல்யாணம் ஆன புதுசா உனக்கு? ஒரு மகன் இருக்கான் இப்போ போய் இப்படி பேசிட்டு திறியுறே!”
அவள் பேச முயல்கையில்,
“ எங்களால் இன்னொரு கஷ்டத்தை எல்லாம் தாங்க முடியாது.பெத்தவங்க மனசையும் கொஞ்சம் புரிஞ்சிக்கோ தாரிணி”
“ அண்ணனை நினைச்சி தான் இத்தனை நாளும் என் விஷயத்தை சொல்லாம தள்ளி போட்டேன்! நீங்க என்ன சொன்னாலும் என்னால இனிமேல் முடியாது பா!”
மறுபடியும் நெருங்கியவரை ,
“ அப்பா கை நீட்டுற வேலையெல்லாம் வச்சிக்காதீங்க! தப்பு செய்தது சரண்,நான் இல்லை. உங்களால் என்னை கூட வச்சு பார்த்துக்க முடியலைன்ன பரவாயில்லை. நான் தனியா இருந்துப்பேன்!”
“தாரிணி இந்த அகம்பாவம், திமிர் எல்லாம் பொம்பள பிள்ளைக்கு நல்லது இல்லை! பின்னாடி நீ வருத்தப்பட்டாலும் சரி செய்ய முடியாது!”
“வருத்தபடப்போறது கண்டிப்பா நான் இல்ல பா! நான் கிளம்புறேன்!”
அவள் நலன் விரும்பிய எல்லாருடைய மனதையும் உடைக்க ஆரம்பித்திருந்தாள் தாரிணி.