”மீனூ... சின்னூ... எழுந்திருங்க எழுந்திருங்க... ஸ்கூலுக்கு நேரமாச்சு...”
லோகா போகிற போக்கில் தனது செல்ல மகள்களின் காலைப் பிடித்து உலுக்கினாள்.
இருவரும் தூங்குவதைப் போல நடித்து சுருண்டு படுத்துக்கொண்டனர்.
லோகா அவர்களின் பள்ளிச் சீருடைகளை எடுத்து வைத்துவிட்டு மீண்டும் வந்தாள்.
“ஹே... என்ன இப்படி அடம் பண்றீங்க இன்னிக்கு? ம்ம்? எழுந்திருங்க... அப்பாவக் கூப்பிடவா?”
லோகா மிரட்டலாகச் சொன்னாள். ஆனால் குழந்தைகள் அசரவில்லை. அப்பா கண்டிப்புதான் ஆனாலும் செல்லம் அதிகம். குட்டி இளவரசிகள் விஷ்வாவிற்கு அஞ்சமாட்டார்கள் என்று லோகாவிற்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அவ்வப்போது விஷ்வாவின் பேரைச் சொல்லித்தான் இவர்களை வழிக்குக் கொண்டு வர வேண்டியிருக்கிறது!
அப்பா என்றதும் இரண்டும் வேண்டா வெறுப்பாக எழுந்து அமர்ந்தன.
“ம்மா....” மீனாட்சி இழுத்தாள்.
“என்னடி?”
“பாலை இங்கயே கொண்டு வந்து கொடேன், குடிச்சிட்டுப் போய் பல் தேய்க்கிறேன்!”
கெஞ்சல் + கொஞ்சலாகச் சொன்னாள்.
“ஆமாம்மா... பெட் மில்க்!”
லோகாம்பாளும் அக்காவுடன் சேர்ந்துகொண்டு கெஞ்சிக் கொஞ்சினாள் (விஷ்வா இவளைச் ‘சின்ன லோகி’ என்று அழைப்பான், அதுவே சுருங்கிச் ‘சின்னூ’ ஆகியிருந்தது!)
“உதை விழும் ரெண்டு பேருக்கும், என்ன கொழுப்பா? எழுந்து போய் பல் தேய்ங்க... எனக்கு ஆயிரம் வேலை இருக்கு!”
லோகா இருவரையும் கட்டிலிலிருந்து இறக்கிக் குளியலறைகளுக்குள் துரத்திவிட்டுக் கீழே சமையலறைக்கு விரைந்தாள்.
“லோகீ...”
மாடியிலிருந்து விஷ்வாவின் குரல்.
”உங்க ஷேவிங் ரேசர் அந்த நீலக்கலர் டப்பால இருக்கு பாருங்க... சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க, டிபன் ரெடி!”
அவன் கேட்கும் முன்பே லோகா ச.அறையிலிருந்து எட்டிப் பார்த்துப் பதில் சொல்லிவிட்டு மீண்டும் புகுந்துகொண்டாள்!
வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு உதவியாள் இருந்தாலும் சமையலை மட்டும் லோகாவேதான் செய்வாள். அப்பாவையும் இரண்டு மகள்களையும் கிளப்பி அனுப்புவதற்குள் பெரும்பாடாகிவிடும் ஒவ்வொரு நாளும்!
ஆனால் லோகாவிற்கு அதுதான் நாளின் மிகப் பிடித்த செயல். மூவரும் கிளம்பிச் சென்ற பின் வீடு வெறிச்சோடிக் கிடக்கும். தையல், ஓவியம் என்று பலவற்றில் தன்னை அவள் ஈடுபடுத்திக் கொண்டாலும் ஒரு வெறுமையை உணர்வதைத் தவிர்க்க இயலாது!
லோகா பார்த்துப் பார்த்துச் சமையல் செய்துகொண்டிருந்தாள்.
“அம்ம்ம்மா... மீனூ என்னோட பென்சிலை எடுத்துக்கிட்டா...”
சின்ன லோகி கத்தியபடியே சமையலறைக்குள் ஓடி வந்தாள்.
“இல்லம்ம்மா... அது என்னோட பென்சில்தான்... இவதான் நேத்து என்கிட்டேர்ந்து எடுத்து வெச்சுக்கிட்டா!”
பின்னாலேயே மீனாட்சியும் வந்தாள்.
“ஐய்ய்ய்... குலாப் ஜாமூன்....”
சமையலறையில் நுழைந்தவுடன் இருவரின் கண்ணிலும் லோகா சுடச்சுடச் செய்து கொண்டிருந்த குலாப் ஜாமூன் கண்ணில் பட பென்சில் சண்டையை மறந்தனர் இருவரும்.
“போய் சண்டை போடாம ஒழுங்கா கிளம்பி வாங்க, அப்பத்தான் குலாப் ஜாமூன் தருவேன்...”
லோகா இதுதான் சாக்கு என்று இருவரையும் ஆட்டிவைத்தாள்.
குலாப் ஜாமூனின் மகிமையால் உலகில் இவர்களைவிட அன்பான இரட்டைச் சகோதரிகள் இல்லவே இல்லை என்னுமளவிற்கு இருவரும் ஒற்றுமையாகச் சென்று சத்தமின்றிக் கிளம்பி வந்தனர்.
குழந்தைகள் இருவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து குலாப் ஜாமூன் எப்போது வரும் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க லோகாவும் உதவிப் பெண்மணியும் மேசைமேல் உணவை எடுத்து வந்து வைத்துக்கொண்டிருந்தனர்.
லோகா மகள்களின் தட்டில் இட்டலியை வைத்துவிட்டு அவர்களுக்கு ஏற்றபடி சட்டினியும் சாம்பாரும் வைத்தாள். மீனாட்சிக்குச் சாம்பார்தான் தேவை, சின்ன லோகிக்குச் சட்னி! மாற்றி வைத்துவிட்டால் களேபரம் ஆகிவிடும்!
“குலாப் ஜாமூன்?”
சின்னூ ஆவலுடன் கேட்டாள்.
“முதல்ல இட்லிய ஒழுங்காச் சாப்பிடுங்க, அப்பதான் குலாப் ஜாமூன்!”
லோகா கண்டிப்புடன் சொன்னாள். கு.ஜா.-தான் இந்த வாண்டுகளை அடக்கும் மந்திரக்கோல் என்பதை லோகா நன்றாக அறிவாள்!
“இன்னிக்கு எதுக்கும்மா குலாப் ஜாமூன் செஞ்சிருக்க? யார்க்காது ஹாப்பி பர்த் டே வா?”
மீனாட்சி இட்டலியை விண்டு வாயில் போட்டபடியே விவரமாகக் கேட்டாள்.
“ஹை... ஹாப்பி பர்த் டே வா... யாருக்கு மா?”
சின்னூ உற்சாகமானாள்.
”அதெல்லாம் சாயங்காலம் சொல்றேன்... முதல்ல ஸ்கூல் போய்ட்டு வாங்க... சீக்கிரம் சாப்பிடுங்க, வேன் வந்துடும்!”
லோகா அவர்களைத் துரிதப்படுத்தினாள்.
”நான் அப்பா கூட கார்ல போகவா?”
சின்னூ குலாப் ஜாமூனைப் பார்த்துக்கொண்டே இட்டலியை வேண்டா வெறுப்பாக விழுங்கினாள்.
“அதெல்லாம் வேணாம், வேன்லயே போங்க... அப்பாக்கு நிறைய வேலை இருக்கும்!”
லோகா சொல்லிக்கொண்டிருக்கும் போதே விஷ்வா வந்தான்.
பள்ளிக்குச் செல்லத் தயாராய்க் கிளம்பிச் சீருடையில் அழகாய் அமர்ந்திருக்கும் தன் செல்ல மகள்களை வாஞ்சையுடன் இரசித்தப்படி அவர்களுக்குக் காலை வணக்கம் சொல்லியபடியே வந்து அமர்ந்தான்.
அப்பாவைக் கண்டதும் இரண்டின் ஆர்ப்பாட்டமும் சற்று அதிகரித்தன.
“அப்பா... நாங்க உன் கூட கார்ல வரோம்பா... எங்கள ஸ்கூல்ல விட்டுட்டு நீ ஆபீஸ் போறியா?”
சின்ன லோகி அப்பாவை மயக்கும் தனது செல்லக் குரலில் கேட்டாள்.
“ஆமாம்பா...”
மீனாட்சியும் அவளோடு சேர்ந்துகொண்டாள். இது போன்ற விஷயங்களில் அக்கா-தங்கைக்கிடையில் உள்ள ஒற்றுமையை யாராலும் அசைக்க முடியாது!
“இல்லடா செல்லங்களா... அப்பாக்கு இன்னிக்குக் கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு... நான் சீக்கிரம் போனும்... நாளைக்கு ரெண்டு பேரையும் என்னோட கார்ல கூட்டிட்டுப் போய் ஸ்கூல்ல விடுறேன், சரியா?”
விஷ்வா தன் தட்டில் இருந்த இட்டலிகளை அவசர அவசரமாக விழுங்கியபடியே பதில் சொன்னான்.
“மெதுவா சாப்பிடுங்க... ஹே அப்பாவத் தொந்திரவு பண்ணாதீங்க!”
லோகா விஷ்வாவிற்குப் பரிமாறியபடியே மகள்களைக் கடிந்தாள்.
“சாயங்காலம் சீக்கிரம் வந்துடுங்க மாமா, வெளில போகலாம்...”
லோகா குலாப் ஜாமூனை வைத்தபடியே விஷ்வாவிடம் சொன்னாள்.
“பார்க்கலாம் லோகி... இன்னிக்கு ஜப்பான்லேர்ந்து சில டெலிகேட்ஸ் வராங்க... கொஞ்சம் பிஸி!”
விஷ்வா என்ன இருக்கிறது என்றே பார்க்காமல் தட்டைக் காலி செய்தான். லோகா சிறப்பாகச் செய்திருந்த குலாப் ஜாமூனை அவன் கவனிக்கவில்லை. எதற்கு என்றும் கேட்கவில்லை!
“சாயங்காலம் பார்க்கலாம்... சமர்த்தா ஸ்கூல் போய்ட்டு வாங்க, என்ன? டாட்டா!”
விஷ்வா அவசர அவசரமாய் எழுந்து தன் செல்ல மகள்களுக்கும் மனைவிக்கும் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு விறுவிறுவெனச் சென்றான்.
விஷ்வா லோகாவிற்கு முத்தமிடும்போது இரண்டு குட்டிகளும் நமுட்டுச் சிரிப்பு சிரித்தன.
“என்னங்கடி சிரிப்பு? சீக்கிரம் சாப்ட்டுக் கிளம்புங்க... ம்ம்...”
லோகா அவர்களை விரட்டினாள்.
“குலாப் ஜாமூன்?”
சின்னூ காரியமே கண்ணாக இருந்தாள்!!
ஒருவழியாய் இருவரையும் கிளப்பி பள்ளி வேனில் ஏற்றி அனுப்பிவிட்டு லோகா ஆசுவாசமாக வந்து தன்னறையில் அமர்ந்தாள்.
குலாப் ஜாமூன் எதற்காக என்று கூட கேட்காமல் விஷ்வா கிளம்பிச் சென்றது அவள் மனத்தை உறுத்திக்கொண்டிருந்தது.
திருமணமாகி அவள் இந்த வீட்டிற்கு வந்தபோது அவளது வீட்டில் அவள் அறையில் செய்ததைப் போலவே அரண்மனை அலங்காரத்தை இந்த அறையிலும் செய்திருந்தான் விஷ்வா.
இந்தப் பத்தாண்டுகளில் அந்த அலங்காரம் சற்று வெளிறிப் போயிருந்தது. அழகான அந்த அரண்மனை மாடமும், குளமும், நந்தவனமும் சரிந்துவிட்ட சாம்ராஜ்யத்தின் எச்சங்களைப் போலத் தோற்றமளித்தன!
லோகா இன்றுதான் அதைக் கவனித்தாள். அவள் மனத்தில் ஏதோவொன்று அழுத்தியது.
விஷ்வாவுடன் பேசியே ஆக வேண்டும் என்று மனம் ஏங்கியது.
சற்று நேர யோசனைக்குப் பிறகுத் தன் கைப்பேசியை உசுப்பி விஷ்வாவிற்கு அழைத்தாள்.
விஷ்வா அழைப்பை எடுக்கவில்லை. இன்னொரு எண்ணில் பேசிக்கொண்டிருக்கிறான் போல!
லோகா மனத்தைத் திசை திருப்ப எண்ணினாள். எழுந்து சென்று தான் பாதியில் நிறுத்தியிருந்த ஒரு ஓவியத்தைத் தொடர்ந்து வரைய எண்ணினாள்.
கீழே தனது வேலை அறைக்கு வந்தவள் தேவையான வண்ணங்களையும் தூரிகைகளையும் தயார் செய்தாள்.
கவனத்தை வேலையில் குவிப்பது சிரமமாக இருந்தது. இருந்தாலும் தன்னைக் கட்டாயப்படுத்திக்கொண்டு வண்ணங்களைக் குழைத்தாள்.
எல்லாம் தயார் என்றதும் பாதி வரையப்பட்டு மெல்லிய வெள்ளைத் துணியால் மூடி வைத்திருந்த அந்த ஓவியத்தை வெளியில் எடுத்தாள்.
அது ஒரு தேவலோக இளைஞனின் ஓவியம்!
ஓவியத்தில் அவன் முகம் தெரியவில்லை, முதுகைக் காட்டியபடி நின்றான். ஆஜானுபாகுவாய், கட்டுமஸ்தான தேகத்துடன் இருந்த அந்த தேவலோக இளைஞன் ஒரு இரம்மியமான குளக்கரையில் ஒரு அழகான பெண்ணின் சிலையைச் செதுக்குவதைப் போன்ற ஓவியம் அது.
லோகா முழுக் காட்சியையும் கோட்டோவியமாக வரைந்து முடித்திருந்தாள். பாதிதான் வண்ணம் தீட்டியிருந்தாள்.
முழுதாக வரைந்து முடித்தபின் அதை விஷ்வாவிற்குப் பரிசாகத் தர எண்ணியிருந்தாள். அதற்காகவே பார்த்துப் பார்த்து வரைந்தாள்!
விஷ்வாவிற்காகத் தான் வரையும் இந்த ஓவியம் தனது ‘மேக்னம் ஓபஸ்’ஆக இருக்க வேண்டும் என்று எண்ணினாள்!
ஓவியத்தைத் திறந்தவள் தூரிகையில் எடுத்த வண்ணத்தை ஓவியத்தில் தீட்டாமல் அந்த ஓவியத்தையே உற்றுப் பார்த்தபடி நின்றாள்.
’ஏன் இந்தக் காட்சியைத் தேர்ந்தெடுத்தோம் வரைய? யார் இந்த தேவன்? இந்தப் பெண் யார்? இது நான் வரைந்ததுதானா?’
லோகாவின் மனத்தில் அடுக்கடுக்காய்க் கேள்விகள் எழுந்தன. ஏதேதோ தோன்றியது, ஆனால் ஒன்றும் புரிபடாமல் குழப்பமாக இருந்தது!
சட்டெனத் தலை பாரமாக வலித்தது லோகாவிற்கு.
ஓவியத்தை மீண்டும் மூடிவிட்டுத் தூரிகையை வைத்துவிட்டு அறையிலிருந்து வெளியில் வந்தாள்.
கூடத்தில் வந்து அமர்ந்தவள் மீண்டும் விஷ்வாவிற்கு அழைத்தாள். மனம் ஏதோ கவலையில் ஆழ்ந்து கனத்தது. என்னவென்று அவளால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.
”ஹலோ... சொல்லு லோகி, என்ன விஷயம்? அவசரமா?”
கிட்டத்தட்ட அழைப்பு முடியும் நிலையில் விஷ்வா அழைப்பை ஏற்றான்.
”மாமா... எங்க இருக்கீங்க...?”
லோகா மெள்ளக் கேட்டாள்.
“இதென்னடி கேள்வி? ஆபிஸ்லதான்... மேனேஜர்ஸோட மீட்டிங் இருக்கு, சீக்கிரம் என்ன விஷயம்னு சொல்லு!”
அவன் ஆர்வமின்றி அவசரமாய்க் கேட்டான்.
“சும்மாதான் கூப்டேன்... உன் கூட பேசனும் போல இருந்துச்சு...”
லோகா சோர்வாய்ச் சொன்னாள்.
“என்ன லோகி இது... குட்டிங்க மாதிரி நீயும் விளையாடுறியா? எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு... போனை வை!”
”சாயங்காலம் சீக்கிரம் வந்துடு விஸ்-”
இவள் சொல்வதற்குள் அவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
லோகாவிற்கு மனம் இன்னும் கனமானது. தலைவலியும் அதிகரித்தது.
வீட்டு உதவிப் பெண்ணை அழைத்துத் தன்னைத் தொந்திரவு செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டுத் தன் அறைக்குச் சென்று கட்டிலில் படுத்தாள். சிறிது நேரத்திலேயே உறங்கிவிட்டாள்.
அந்தக் காடு மிக இரம்மியமாக இருந்தது.
மிதமாக வீசிய குளிர்ந்த தென்றலும், சுற்றிலும் இருந்த மரஞ்செடிகளின் வண்ண வண்ண பூக்களும், அவற்றின் பல்வேறு வாசனைகளும், அங்குமிங்கும் இருந்த பறவைகளின் கீதங்களும் லோகாவைக் கிறங்கடித்தன.
இவளுக்காகவே ஒரு பாதை அமைத்ததைப் போல அவள் முன் தென்றல் காற்றினால் சேர்க்கப்பட்ட பூக்கள் திரண்டிருந்தன.
லோகா அந்தப் பூப்பாட்டையில் மெள்ள நடந்தாள்.
அந்தப் பாதை அவளை எங்கோ அழைத்துச் செல்கிறது என்று தோன்றியது.
அது எங்குச் செல்கிறது என்று தனக்கு முன்பே தெரியும் என்பதைப் போல உணர்ந்தாள் லோகா. ஆனால் தெரியவில்லை!
தயக்கம் ஒருபுறமும் ஆர்வம் ஒருபுறமுமாய் லோகா அந்தப் பூப்பாட்டையில் நடந்தாள்.
சற்றுத் தொலைவில் ஒரு குளம் தெரிந்தது. அதன் கரையில் அவன் நின்றிருந்தான்.
முதுகைக் காட்டியபடி நின்றாலும் அந்த தேவனை லோகா அடையாளம் கண்டுகொண்டாள். அவனது வாசம் அவள் நாசியில் மெல்ல படர்ந்தது!
‘அதீ...’
அவள் உதடுகள் அனிச்சையாய் உதிர்த்தன.
இவள் வந்ததை உணர்ந்தவன் போல அவன் மெதுவாய்த் திரும்பினான்.
லோகா அவனது உதட்டின் புன்னகையை மட்டும்தான் பார்த்தாள்.
சட்டென அவள் தலை வெடிப்பதைப் போல வலித்தது.
‘ஆஆஆஆ...’
லோகா அலறியபடி எழுந்து அமர்ந்தாள். தனது வீட்டில் தன் கட்டிலில்தான் இருக்கிறோம் என்று உணர அவளுக்கு சில நொடிகள் ஆனது.
(தொடரும்...)