தன் அறையினுள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் மித்ரன்.
பலத்த யோசனையில் அவன் இருப்பதை அவன் முகம் காட்டிக் கொடுத்தது.
அவ்வப்போது மூடியிருந்த அறைக் கதவை ஏக்கத்துடன் பார்த்தான். சற்று நேரத்தில் அவனின் ஏக்கத்தைப் போக்கும் பாவை வந்தாள்.
லேசாகக் கதவு திறக்க , திரும்பிப் பார்த்த மித்ரன் கண்களில் ஒளிர்ந்த காதல் சற்றே மட்டுப்பட்டது.
' இவ மனசுல என்ன தான் இருக்கு ? '
மெதுவாக அவனருகே வந்தாள் தாமரை . வந்தவள் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டிருக்க , பொறுமை இழந்த மித்ரன் ,
" என்ன தாமரை , உங்க அண்ணனோடவே போயிருக்கலாம்னு ரொம்ப தோணுது போல ?"
அவனின் இந்த பேச்சில் பட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டவள் ,
" நான் அப்படி நினைக்கிறேன்னு உங்களுக்குத் தோணுதா ? "
அவளின் குரலில் தெரிந்த மாறுபாடு மித்ரனை ஏதோ செய்தது. அவனின் குழப்பத்தை எல்லாம் அவளின் கேள்வி கழித்து விட்டது.
மெதுவாக அவளின் முகத்தைத் திருப்பி , அவளின் கண்களில் ஊடுருவினான்.
தாமரை இலையில் நீர் ஒட்டாது என்பது போல நம் தாமரையின் கண்களிலும் நீர் தங்காது மெல்ல வடிந்தது.
பதறிப் போன மித்ரன் , அவளின் கண்ணீரைத் துடைத்து விட்டு மெல்ல அணைத்துக் கொண்டான்.
" வருத்தப்படாத தாமரை . சீக்கிரமே கதிர் இதெல்லாம் புரிஞ்சுப்பான் . கொஞ்ச நாளைக்கு தான் அவனோட இந்த வீராப்பெல்லாம் இருக்கும் சரியா !!"
ஒரு குழந்தையை சமாதானம் செய்வது போல் அவன் தாமரையிடம் சொல்ல ,
அதற்கேற்ப வேகமாகத் தலையாட்டினாள் அவள்.
அன்று காலையில் அவர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் ஃபாக்டரி வந்திருந்தான் கதிர். ஆனால் , வந்தோமா வேலையைப் பார்த்தோமா என்றிருந்தவன் முகம் கொடுத்து மித்ரனிடமும் பேசவில்லை , அவன் மனையாளிடமும் பேசவில்லை.
அவ்வளவு இணக்கத்தை உடனே கதிரிடம் எதிர்பார்க்க முடியாது என்று மித்ரன் நன்கு உணர்ந்திருந்தான் தான்.
ஆனால் , தாமரை ?? அன்று காலையில் இருந்தே அண்ணனைக் காண அவ்வளவு ஆவலுடன் கிளம்பியவள் , அவன் தன்னிடம் பேசவில்லை என்றதும் முகம் வாடிப் போனாள்.
வீட்டிற்கு வரும்போது மித்ரனிடம் எதுவும் பேசாமல் காரிலே கண்மூடி தலைசாய்த்து வந்தவள் , அதன்பின்னரும் அவன் கண்களிலே படாமல் காலத்தைக் கடத்த , மித்ரனுக்கு பொறுமையே போயிற்று.
ஒரு வேளை நம்மிடம் இருப்பதை விட கதிரிடம் இருப்பதைத் தான் விரும்புகிறாளோ என்று அவன் மனம் ஏதேதோ கற்பனைகளைக் கட்டியது .
ஆனால் , அதெல்லாம் இப்பொழுது காணாமல் போயிருந்தது மித்ரனுக்கு. சிறு வயதில் இருந்தே தன்னை வளர்த்தவன் திடீரென ஒதுக்கியதை ஏற்க முடியாமல் அவள் வேதனையுறுவதை மித்ரனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
மென்மையாக அவளின் முதுகைத் தடவிக் கொடுத்து , அவளை அமைதிப்படுத்துவது போல் தன்னையும் சமன் படுத்திக் கொண்டான் .
ஆனால் , அவளின் அருகாமை அவனை மாய உலகிற்கு இட்டு சென்றது.
அவளின் கூந்தலில் முகம் புதைத்தவன் , ஆழ்ந்து அந்த கணத்தை அனுபவித்தான். அவளும் அவன் மார்பில் இன்னும் ஒண்டிக்கொள்ள , மித்ரனுக்கு தன்னைக் கட்டுப்படுத்த இயவில்லை.
"லோட்டஸ் , மயக்கறடி என்னை"
என்று அவன் கூற ,
அவனின் விளிப்பில் நிமிர்ந்து நோக்கியவள் , அவன் கண்களில் தெரிந்த காதலில் திக்குமுக்காடினாள் .
"அத்தான் " என்று சிணுங்கியவள் இந்த மித்ரனுக்குப் புதியவள் .
ஆச்சரியமாக அவளைக் கண்டவன் அவளின் முகத்தைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு ,
" இந்த அத்தான் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு தான ?"
என்று கேட்க ,
" என்னைக் கூட இவ்ளோ நம்ப மாட்டேன் . அவ்ளோ நம்பிக்கை இருக்கு "
என்று கண்களை உருட்டி , கைகளை விரித்துக் கூறினாள்.
அவளின் பாவனைகளில் மித்ரன் மொத்தமாகத் தொலைந்து போனான்.
" இப்ப நீங்க கேட்ட கேள்விக்கு உங்களை மொத்திருக்கணும் . போனா போகுதுன்னு விடறேன்"
என்று தாமரை மிடுக்காகக் கூற , வாய் விட்டு சிரித்த மித்ரன் ,
" பொண்டாட்டி கிட்ட அடி வாங்குனா தான் பிறவிப் பயன் கிடைக்குமாம் . எங்க தாத்தா சொல்லுவார் . அடியேன் அடி வாங்க ஆவலாக உள்ளேன் "
என்று நாடக பாணியில் குனிந்தான் .
" ஆஹா , சும்மாவே ஒரு கூட்டம் உங்களுக்கு தான் வரிஞ்சு கட்டிட்டு வருது. நான் மொத்துனா என் கதி என்ன "
என்ற தாமரையும் சிரித்தாள்.
" என் லோட்டஸ் மேல கை வெச்சா என்ன ஆகும்னு எல்லாருக்கும் தெரியும் . நீ மித்ரனோட பொண்டாட்டி . உன்னை யாரும் எதுவும் சொன்னா , அவங்க இந்த மித்ரனோட சத்ரு "
தீவிரமாகக் கூறியவனைக் கண்ட தாமரை , மெதுவாக சென்று அவனின் தோளில் சாய்ந்து , அவனின் கையோடு கை கோர்த்தாள் .
" நான் ரொம்ப குடுத்து வெச்சவ அத்தான் . எங்க தேடியிருந்தாலும் உங்களை மாதிரி புருஷன் கிடைக்குமா !! எனக்கு ஒரே ஒரு கோரிக்கை தான். இனிமேலும் இந்த அதிரடியா எல்லாம் இல்லாம அமைதியா வாழலாமே "
அர்த்தத்துடன் அவளைக் கண்ட மித்ரன் ,
" இதை தான் நானும் நினைச்சேன் தாமரை . ஆனா , நமக்கு வாரிசு வேணும் தான . அதுவரைக்கும் கொஞ்சம் அதிரடியா இருக்கவா "
என்று கேட்க , அவனின் கேள்வியில் தொக்கி நின்ற பொருளை உணர்ந்து அழகாய் முகம் சிவந்தாள் தாமரை .
(தாமரையின் நிறத்திற்கு முகம் சிவந்தால் , எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கவும் ..!!)
அதற்கு மேலும் பொறுக்க இயலாமல் , மயக்கும் காதல் முத்திரையை அவளின் முன்னுச்சியில் மென்மையாகப் பதித்தான் மித்ரன்.
அதிலே மயங்கிய பெண்ணவள் , நிறைவான காதலை உணர்ந்தாள்.
மித்ரனின் அன்பில் காலம் முழுதும் களித்து , அவனுடன் பரிபூரணமான வாழ்வை வாழ அவள் மனம் இறைவனை வேண்டியது.
இவர்களைக் கண்டு வானிலே உலா வந்து கொண்டிருந்த நிலவும் மேகத்தினிடையில் தன்னை மறைத்துக் கொண்டது. ஏனெனில் , அங்கே ஓர் அழகிய காதல் மலர்ந்து
கொண்டிருந்தது....