Annapurani Dhandapani
மண்டலாதிபதி
இது இருளல்ல!
16.
மருத்துவமனையில் பவதாரிணி கண் விழித்து எல்லாருடைய மனங்களையும் குளிரச் செய்துவிட, அனைவரும் கொஞ்சம் நிம்மதியாய் உணர்ந்தனர் என்றே சொல்லலாம்.
ஆகாஷிடமும் கிருஷ்ணாவிடமும் கூறிவிட்டு யாமினியை அழைத்துக் கொண்டு வாசு காவல் நிலையம் சென்று முடிக்க வேண்டிய பணிகளை கவனிக்கச் சென்றான்.
அங்கே ஏதேதோ காகிதங்களில் யாமினியிடமும் வாசுவிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்! யாமினியை ஏதேதோ கேள்விகள் கேட்டார்கள்! இப்படியே ஒரு மணி நேரம் கழிய, எல்லாம் முடிந்தது என்று யாமினியை வெளியே தன்னுடைய பைக் அருகே காத்திருக்கச் சொல்லிவிட்டு திரும்பவும் வாசு காவல் நிலையத்தினுள் சென்றான்!
யாமினி அமைதியாக அவன் சொன்னது போல் அவனுடைய பைக்கின் அருகே நின்றாள்.
அவள் இரு விஷயங்களைப் பற்றி மிகவும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்!
ஒன்று! என்னைக் கெடுத்தவனை கண்டுபிடித்தாயிற்று! இனி மேல் அநாவசியமாக வாசுவின் வீட்டில் இருக்கக் கூடாது! எப்படியாவது இங்கிருந்து சென்றுவிட வேண்டும்! நான் இங்கிருந்து செல்வது வாசுவின் அப்பாவைத் தவிர வேறு யாருக்கும் பெரிதாக பாதிப்பிருக்காது! அவர்தான் பாவம், வாய்க்கு வாய், மருமகளே! மருமகளே! என்று அழைத்தபடி இருக்கிறார்! அவருடைய தங்ககளும் அண்ணி! மன்னி! என்று அழைக்கிறார்கள்தான்! அவர்களும் என் மேல் பாசம் வைத்திருக்கிறார்கள்! பவதாரிணி அம்மா கூட என்னை மிகவும் அன்பாகத்தான் நடத்துகிறார்கள்! ஆனால் என்னால் இதற்கு ஒன்றும் செய்ய முடியாது! ஆனால் ஒன்று! இப்போது கிளம்பினால் அவ்வளவு நன்றாக இருக்காது! மூழ்குகிற கப்பலிலிருந்து தப்பிக்கும் எலியைப் போல ஆகிவிடும்! பவதாரிணி அம்மா வீட்டுக்கு வந்து அவருடைய உடல்நிலை தேறி சீராகிய பின்னர் இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்!
இரண்டாவது! இனி அடுத்து என்ன? தங்குவதற்கு இடம் பார்க்க வேண்டும்! பிழைப்பதற்கு ஒரு வேலை வேண்டும்! இப்போதைக்கு வாசு வாங்கிக் கொடுத்த தையல் இயந்திரம் உள்ளது! அதை வைத்து சம்பாதிக்கத் தொடங்கலாம்! ஆனால் நிரந்தர வருமானம் வரும்படியாக ஒரு வேலை தேட வேண்டும்!
இப்படி அவள் சிந்தனை செய்து கொண்டிருக்கும் போது அவளுடைய சிந்தனையைக் கலைப்பது போல அருகிலிருந்த மரத்தின் பின்னால் அந்தக் கயவனின் பெற்றோர் இருவரும் பேசிக் கொண்டிருந்தர்கள்.
"எதுக்குடீ இவனுக்கு இந்த வேண்டாத வேல.... யார் எப்டி போனா இவனுக்கென்ன.... இப்ப பார்.... இவந்தான் போலீஸ்ல மாட்டி அவஸ்த்தப் படறான்!"
"நீங்க கொஞ்சம் சும்மா இருங்க! இவன வெளிய கொண்டு வர வேலைய மட்டும் பாருங்க... புரியுதா?"
"ஏய்... ஏய்.... இவ்ளோ பட்டும் உனக்கு புத்தி வரலியா?"
"என் புத்திக்கு என்ன வந்திச்சு? உங்களுக்குதான் புத்தி கெட்டு போச்சு! புள்ளைய காப்பாத்தற வழிய பாக்காம இப்டி கேண மாதிரி புலம்பிகிட்டு கெடக்கீங்க!?" என்று கோபமாகக் கத்தினாள் அவனுடைய அம்மா!
"நீ புரிஞ்சிதான் பேசறியா? உம்புள்ளய எப்டி காப்பாத்த முடியும்? அவனே தன் வாயால குற்றத்த ஒத்துகிட்டான்! இதுக்கு மேல என்ன பண்ண முடியும்!?"
"உங்கள.... மொதல்ல ஒரு நல்ல லாயரா பாருங்க! மத்தத நா பாத்துக்கறேன்!"
"ஒன்னால இல்ல.... ஒங்கப்பனாலயும் ஒண்ணும் கிழிக்க முடியாது! புரிஞ்சுக்கோ! இப்பல்லாம் இந்த மாதிரி கேஸ்ல சட்டம் ரொம்ப ஸ்ட்ராங்கா ஆயிடுச்சு! நீ என்ன பண்ணாலும் உம்புள்ள சாகற வரைக்கும் உள்ள தான் கெடக்கணும்! ஞாபகம் வெச்சுக்கோ!"
இதற்கு அந்த அம்மாவால் எதுவும் பேச முடியவில்லை போலும்! அதனால் யாமினியை வசை பாடத் தொடங்கினாள்.
"பாவீ... சண்டாளி..... எம்புள்ள வாழ்க்கைய கெடுக்கறதுக்குன்னே பொறந்தா போலிருக்கு...."
"ஹூம்.... யாரு வாழ்க்கைய யாரு கெடுத்தா.... உம்புள்ளதான் அந்தப் பொண்ணு வாழ்க்கைல மண்ணள்ளிப் போட்டிருக்கான்....."
"நீங்க வாய மூடுங்க..... அந்த நாசமாப் போறவ.... அவ வாய மூடிட்டு இருந்திருந்தா.... இந்நேரம் எம்புள்ளைக்கு நிச்சய தார்த்தம் முடிஞ்சிருக்கும்....."
"உம்புள்ள தன் வேலைய மட்டும் பார்த்துண்டு இருந்திருந்தான்னா நீ நெனக்கறது நடந்திருக்கும்...."
"உங்கள நா வாய மூடச் சொன்னேன்.... என் கோவத்த கௌறாதீங்க...."
"காேவமா..... அதெல்லாம் இனிமே ஒனக்கு வரவே கூடாது...."
"வேணாங்க..... பேசாம இருங்க...."
"ஹூம்..... நா எவ்ளோ வாட்டி சொல்லியிருப்பேன்..... அவனுக்கு கைல தாராளமா காசக் குடுத்து கெடுக்காதன்னு..... அந்தப் பையன் வாசுவப் பத்தி அவன்கிட்ட தரக்குறைவா பேசாதன்னு.... நீயும் சரி! உன்னப் பெத்தவங்களும் சரி! உன் சொந்தக்காரங்களும் சரி! யாராச்சும் எப்பவாச்சும் என் பேச்சக் கேட்டீங்களா..... அந்தப் பையன தரந் தாழ்த்திப் பேசிப் பேசி... நம்ம பெத்த புள்ள மனசில வெஷத்த வெதச்சீங்க..... இன்னிக்கு.... அது விஷ மரமா வளந்து அடுத்தவன அழிக்கறேன்னு கௌம்பி தன்னையே அழிச்சிண்டிருக்கான்.... ஆனா அந்தப் பையன் வாசு.... நீங்க நெனச்ச மாதிரி தரம் தாழ்ந்து போகல..... தன்னோட பெத்தவா இவா இல்லன்னு தெரிஞ்சப்றமும் அவா பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கறான்! தான் தப்பே பண்ணலன்னாலும் அவா சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு அந்தப் பொண்ணுக்கு தாலி கட்டியிருக்கான்! அவன் மனுஷன்!"
அந்த மனிதர் சொன்னதில் இருந்த உண்மை சுட்டதோ என்னவோ, அந்தப் பெண்மணி ஓவென்று அழத் தொடங்கினாள்.
"இப்ப அழுது என்ன ஆகப் போறது.... ஆன்னா ஊன்னா..... இப்டி ஒப்பாரி வெக்கதான் தெரியும் உனக்கு!"
"இப்ப என்ன பண்ணப் போறோம் நம்ம..." என்று கேட்டு மூக்கை சிந்தினாள் அவள்.
"ம்...... பண்ணின பாவத்துக்கு பிராயசித்தம் செய்வோம் வா..." என்று எழுந்தார்.
"என்ன சொல்றீங்கன்னு கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க...." என்று அவள் கோபப்பட்டாள்.
"ம்க்கும்..... ஒன்னல்லாம்.... வா.... வந்துத் தொல.... லாயரப் பாக்க போலாம்..... இவனப் பெத்ததுக்கு என்னால வேற என்ன செய்ய முடியும்.... ஈஸ்வரா..... இன்னும் நா என்ன கர்மத்தெல்லாம் பாக்கணும்னு எழுதியிருக்கோ...." என்று தன் தலையைத் தூக்கி வானத்தைப் பார்த்து புலம்பியபடியே அவர் முன்னால் நடக்க, அந்தப் பெண் கோபமாகவும் அழுதபடியும் முணுமுணுத்துக் கொண்டே அவர் பின்னால் நடந்தாள்.
இதையெல்லாம் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்த யாமினிக்கு குழப்பமாக இருந்தது!
வாசுவுக்கு என்ன பிரச்சனை? அன்று அவனை வளர்த்த பவதாரிணி அம்மாவும் இது போல கூறினார்கள்! அன்று ஆகாஷ் வீட்டுப் பெரியவர்களும் இதே போலதான் அவரைப்பற்றி ஏதோ கூறினார்கள்! இன்று நிச்சயதார்த்த விழாவிலும் என்னைக் கெடுத்த பாவி இதைப் போலதான் கூறினான்! இதோ, இப்போது அவனுடைய அம்மாவும் அவரை வசைபாடுகிறாள்! என்னதான் பிரச்சனை அவருக்கு?
அவர் மேல் நல்ல அபிப்ராயம் கொண்டவர்கள், அவரை தெய்வம் போல நினைக்கிறார்கள்; அவர் எது செய்தாலும் நல்லதுக்குதான் என்று நம்புகிறார்கள்! அவரைப் பிடிக்காதவர்கள் அவரை அவமானப்படுத்தத் துடிக்கிறார்கள்! ஏன்?
வாசுவுக்கு என்ன பிரச்சனை? வாசுவைப் பழிவாங்க அவன் என்னை பகடைக்காயாக ஆக்கிக் கொண்டான்! இதன் மூலம் அவனுக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்தான்!
இப்படி அவளுடைய சிந்தனை தன்னைப் பற்றியும் வாசுவைப் பற்றியும் ஓடிக் கொண்டிருக்க, வாசுவும் ஸ்டீவனும் வெளியே வந்தனர்! ஸ்டீவன் தன்னுடைய அலுவலகம் செல்ல, வாசு அவளை அழைத்துக் கொண்டு ஸ்டீவனை பின் தொடர்ந்து அவனுடைய அலுவலகத்துக்கு சென்றான்!