Annapurani Dhandapani
மண்டலாதிபதி
இது இருளல்ல! - எபிலாக்
"பத்மினீ! தர்ஷிணீ! ரெண்டு பேரும் என்ன அட்டகாசம் பண்றீங்க?!" என்று தாங்களும் தூங்காமல் மற்றவர்களையும் தூங்க விடாமல் விளையாடிக் கொண்டிருக்கும் தான் பெற்ற மகள்களை செல்லமாகக் கோபித்தாள் யாமினி!
இவள் பேசியதைக் கேட்டதும் தங்கள் பொக்கை வாயைக் காட்டி கன்னம் குழியச் சிரித்து எல்லாரையும் மயக்கிக் கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் தன் அன்னையிடம் தாவ முயன்றன!
வாசு - யாமினி திருமணமாகிய மறுவருடம் யாமினி கருவுற்றாள்! குடும்பமே ஆனந்தக் கூத்தாடியது!
பவதாரிணியும் ருக்மணியும் போட்டி போட்டுக் கொண்டு அவளுக்கு பிடித்ததை சமைத்துப் போட்டனர்! ஐஷுவும் சௌமியும் தன் அண்ணியை சுற்றிச் சுற்றி வந்து அவளுக்குப் பணிவிடை செய்தனர்!
கிருஷ்ணா ஒரு பக்கம் அவளுக்காக கோயம்பேடுக்கே சென்று காய்கறி பழங்கள் வாங்கி வந்தார் என்றால், பாஸ்கர் மாமா குன்னூரிலிருந்து எல்லாவற்றையும் தருவித்தார்! முக்கியமாக குங்குமப்பூ! குங்குமப்பூவை வாங்கி வந்து சூடான பாலில் கலந்து தினமும் அதைக் குடிக்கச் சொல்லி அவளை பாடாய் படுத்தினார்!
வாசுவைப் பற்றி சொல்லவே தேவையில்லை! யாமினியை அவன் தன் கண்ணுக்குள் வைத்து தாங்கினான்!
யாமினிக்கு மனம் நிறைந்து இருந்தது! பிறந்தது முதல் தனக்கு என்று யாரும் இருந்ததில்லை! எவரும் தனக்காக எதையும் செய்ததில்லை! இப்போது எல்லாரும் இவ்வளவு தாங்குகிறார்களே என்று மகிழ்ச்சியாய் இருந்தது!
அதற்கு மேலே பயமாகவும் இருந்தது!
"ரொம்ப பயமா இருக்கு வாசு!"
"எதுக்கு யாமினி பயம்?"
"நீங்கல்லாம் இவ்ளோ தாங்கறீங்களே! திடீர்ன்னு எதுவும் இல்லன்னு...."
அவள் மேற்கொண்டு எதுவும் பேசும் முன் அவளுடைய வாயைப் பொத்தினான்! அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கூறினான்!
"இத்தன தாள் நாம கஷ்டப்பட்டுட்டோம்! இனிமே எல்லாம் நல்லதே நடக்கும்! நீதானே சொல்லுவ! நாம நல்லது நெனச்சா நல்லதுதான் நடக்கும்னு! நல்லதே நெனப்போம்!"
"ம்!"
"பயப்படாத யாமினி! அம்மா சொல்லியிருக்காங்களே! அவங்கதான் நமக்கு குழந்தையா பிறக்கப் போறாங்க! அவங்கள நாமதானே நல்லா வளக்கணும்! அதனால நீ தைரியமா இருக்கணும் சரியா?"
"ம்!"
தான் கூறிய வார்த்தையினால் அமைதியடைந்து தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளுக்கு அவளுடைய கர்ப்ப காலம் முழுதும் உடலளவிலும் மனதளவிலும் தைரியமூட்டிக் கொண்டிருந்தான் வாசு!
யாமினிக்கு பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன!
தன் அன்னை பத்மினி தனக்கே மகளாகப் பிறந்து விட்டாள் என்ற ஆனந்தத்தில் கண்கள் கசிய முதல் குழந்தையைத் தன் கையில் வாங்கிக் கொண்ட வாசுவுக்கு, இன்ப அதிர்ச்சியாக அடுத்த குழந்தையும் பெண்ணாகவே இருக்கக்கண்டு, அதையும் செவிலி கொண்டு வந்து கொடுக்க, மனம் நிறைந்த பூரிப்புடன் அதையும் வாங்கிக் கொண்டான்!
யாமினி மயக்கம் தெளிந்தவுடன், பிறந்த குழந்தைகளை பவதாரிணியிடமும் ருக்மணி மாமியிடமும் தந்துவிட்டு மனைவியைப் பார்க்க ஓடினான்!
இரண்டு குழந்தைகளை பிரசவித்த அயற்சியில் துவண்ட துணியாய் கிடந்தவளின் அருகே அமர்ந்து கொண்டு வியர்த்திருந்த அவளுடைய முகத்தைத் தன் கைக்குட்டையால் துடைத்துவிட்டான்!
"தேங்க்ஸ்! தேங்க்ஸ் யாமினி!" என்று கூறி அவளுடைய கன்னத்தில் மென்மையாய் முத்தம் பதித்தான்!
தனக்கு, பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன என அறிந்த யாமினி வாசுவிடம்,
"என்ன வாசு! நமக்கு ரெண்டு பொண்ணு பிறந்திருக்கு? ஸ்கேன் பாத்து ரெட்டைக் குழந்தைன்னு டாக்டர் சொல்றச்சே, ஒண்ணு பையனாயிருக்கும்னு நெனச்சேன்!" என்று அவள் கூற,
"ம்! அத்த உன் கிட்ட என்ன சொல்லி சத்தியம் வாங்கியிருக்காங்களோ...." என்று கேட்டு வாசு அவளைப் பார்த்து புன்னகைக்க,
"யாரு... அத்த...." என்று குழம்பினாள் யாமினி!
"ம்... எங்கம்மா உனக்கு அத்தன்னா, உங்கம்மா எனக்கு அத்ததானே? அதான்! நா பிறந்தப்ப எங்கம்மா என் கிட்ட சத்தியம் வாங்கின மாதிரி, நீ பிறந்தப்ப உங்கம்மா உன் கிட்ட ஏதோ சத்தியம் வாங்கியிருக்காங்க போல! அதான் எங்கம்மாவும் உங்கம்மாவும் இப்ப ஒண்ணா சேந்து நமக்கு இரட்டைக் குழந்தைங்களா வந்து பிறந்திருக்காங்க!" என்றான்!
யாமினி நெஞ்சம் நெகிழ, தன் கணவனின் கையில் முகம் புதைத்து விசும்பினாள்!
"ஹே..... அழாதடா.... நீ எப்பவும் சொல்ற மாதிரி நாம ரொம்ப குடுத்து வெச்சிருக்கோம்! நமக்கு எல்லா சொந்தங்களும் இருக்கு! இப்ப நம்ம அம்மாக்களும் நமக்கு கெடைச்சுட்டாங்கடா....." என்று கூறி அவளை ஆறுதல் செய்தான்!
அவனுடைய அபரிமிதமான அன்பினால் ஆறுதலடைந்த யாமினி, கொஞ்சம் கொஞ்சமாக உடல் தேறினாள்!
குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கு எல்லாரும் ஒவ்வொரு பெயரை ஆலோசனையாகக் கூற,
"இது அவன் குழந்தைங்க! அவனும் யாமினியும் முடிவு செய்வாங்க!" என்று பாஸ்கர் மாமா கூறியதைக் கேட்ட மற்ற எல்லாரும் மாமாவின் மனமாற்றத்தை அதிசயமாகப் பார்த்தார்கள்!
பின்னே! எப்போதும் எல்லாவற்றிலும் தன் அதிகாரத்தைச் செலுத்த நினைக்கும் மாமா இப்போது வாசுவுக்காக ஒன்றை விட்டுக் கொடுக்கிறார் என்றால் அது அதிசயம்தானே?!
எங்கள் பெற்றவர்களின் பெயரைதான் குழந்தைகளுக்கு வைக்கப் போகிறோம் என்று வாசு தெளிவாகக் கூறினான்!
யாமினி வாசுவிடம் கேட்டாள்!
"முதல் குழந்தைக்கு பத்மினி அத்த பேரை வெச்சிடலாம் வாசு! ஆனா எங்கம்மா பேர் என்னன்னு எனக்குத் தெரியாதே! அவங்கள நா கண்ணால கூட பாத்ததில்ல வாசு!" என்று வருந்தியவளை,
"நீ உங்கம்மாவ பாத்ததில்லதான்! ஆனா உங்கம்மா இவ்ளோ நாளா உன்ன பாத்துகிட்டேதான் இருந்திருக்காங்க.... இப்ப உன் வயித்திலயே வந்து குழந்தையா பிறந்து அவங்க நமக்கு தரிசனம் குடுத்திருக்காங்கல்ல... அதனால நம்ம ரெண்டாவது குழந்தைக்கு தர்ஷிணின்னு பேர் வெக்கலாம்! சரியா? பத்மினிங்கற பேருக்கும் ரைமிங்கா இருக்கும்! என்ன சொல்ற?"
"ம்!" என்று அழகாய் புன்னகைத்து அவன் சொன்னதை ஆமோதித்தாள் யாமினி!
மற்றவர்களும் வாசு சொன்னதை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார்கள்!
குழந்தைக்களுக்கு ஆறு மாதமாகிறது! நாளைதான் முதன் முதலாக குழந்தைகளை கோவிலுக்கு எடுத்துச் செல்லப் போகிறார்கள்! நாளை காலை மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் பாஸ்கர் மாமா! கூடவே அன்னதானத்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்!
அதுதான் காலை சீக்கிரம் கிளம்ப வேண்டுமே என்று இப்போது குழந்தைகளைத் தூங்க வைக்க முயன்றால், இரண்டு குழந்தைகளும் வீட்டில் உள்ளவர்களுடன் மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!
மறுநாள் எல்லாேரும் தயாராகி கோவிலுக்குச் சென்றனர்! கபாலீஸ்வரருக்கும் கற்பகாம்பாளுக்கும் நடந்த அபிஷேக ஆராதனைகளை கண்குளிரக் கண்டு களித்தனர்!
பிரார்த்தனைகள் முடிந்து பிராகாரத்தை வலம் வந்த பின், குழந்தைகளுடன் யாமினியை அமர்த்திவிட்டு அவளுக்குத் துணையாக பவதாரிணியும் ருக்மணியையும் அமர வைத்தார்கள்! ஐஷுவும் சௌமியும் கூட அவர்களுடனேயே அமர்ந்துவிட்டனர்!
பாஸ்கர் மாமா அன்னதானத்துக்காக தயார் செய்திருந்த உணவுப் பொட்டலங்களை கோவிலைச் சுற்றியுள்ள ஏழை எளிய மக்களுக்கு வழங்க, அவருக்கு கிருஷ்ணாவும் வாசுவும் உதவினர்!
"என் மானத்த வாங்கிட்டியேடீ.... நீல்லாம் நல்லாருப்பியா.... உன்ன எவ்ளோ நம்புனேன்.... என் தலயில மண்ணள்ளிப் போட்டியேடீ....." என்று கத்திக் கொண்டே ஒரு பதின் பருவத்துச் சிறுமியை தன் கையிலிருந்த குச்சியால் விளாசிக் கொண்டிருந்தான் ஒருவன்! அந்தச் சிறுமி பாவம், வலி தாங்க முடியாமல் அழுதாள்.... கூடவே,
"இல்ல நைனா... நா ஒன்யும் செய்ல நைனா... என்னிய நம்பு நைனா...." என்று கதறினாள்!
சத்தம் வந்த திசை நோக்கி ஓடினார் பாஸ்கர் மாமா! அங்கு நடந்து கொண்டிருந்ததைப் பற்றி அருகிலிருந்தவர்களிடம் விசாரிக்க,
"அது ஒன்யும் இல்ல சார்! அந்த பொண்ணு எவங் கூடயோ ஓடிப் போச்சி.... அவன் செரீல்ல போல.... அதான் இன்னிக்கு திரும்பி வந்திச்சி.... ஓடிப் போன பொண்ண எந்த அப்பன் ஏத்துப்பான்... அதான் போட்டு சாத்தறான்...." என்றான் பக்கத்து கடைக்காரன்!
பாஸ்கர் மாமா ஓடிப்போய் அடித்துக் கொண்டிருந்தவனைத் தடுத்தார்!
"ஐரே... நீ போ ஐரே.... இது என் வீட்டு விசயம்.... நீ போ..."
"இங்க பாருப்பா... நீ மொதல்ல அந்தப் பொண்ண அடிக்கறத நிறுத்து... பாவம்... சின்ன பொண்ணு.... எங்கியாவது கண்ல பட்டுடப் போறது...."
"போவட்டும்.... கண்ணுல பட்டு குருடா போவட்டும்... இல்ல படாத எடத்தில பட்டு சாவட்டும்.... சனியன்..."
"அவ செத்துட்டா... நீ நிம்மதியா இருந்துடுவியா.... என்ன பேசறப்பா நீ...."
"யோவ்... ஐரே.... உனுக்கு இன்னாய்யா தெரியும்... இத்த நா எப்டி வளத்தேன்.... நா கஸ்டபட்டேங்காட்டியும்..... இத்த ராணி மாரி வளத்தேன்யா... ஆனா இந்த.... சிறுக்கி மு...... எவங்கூடயோ ஓடிப் போய்ட்டு.... இப்ப அவன் நல்லவன்லன்னு திரும்பி வந்திருக்கா....." என்று இன்னும் காதில் கேட்கக் கூடாத வார்த்தைகள் சொல்லி திட்டினான்!
"இல்ல.... இல்ல நைனா... நா ஓடிப் போவல.... என்னிய நம்பு.... அவந்தா.... உனுக்கு ஆஸ்டென் (accident) ஆயிருச்சின்னு சொல்லி இட்னு போனான்... அவங்கிட்டேந்து தப்ச்சினு வரேன் நைனா...." என்று சொல்லி அழுதாள் சிறுமி!
"ஏய்... ஆராண்ட பொய் சொல்ற...." என்று அவன் திரும்பவும் ஆரம்பிக்க,
அவனுடைய மனைவி ஓடி வந்து தன் மகளை இப்போது அடிக்கத் தொடங்கினாள்! பக்கத்தில் வேடிக்கை பார்த்திருந்தவர்கள் சிலர் வந்து தடுத்துப் பார்த்தனர்! சிலர் நமக்கேன் வம்பு என்று சும்மா இருந்தனர்! சிலருக்கு இது சுவாரசியமான பொழுது போக்காக மாறி விட்டிருந்தது!
"ஆர்னா அப்டி சொல்லி கூப்ட்டா நீ பாட்டுக்கு பூடுவியா....." என்று கூறி அடிக்க, அந்தச் சிறுமி நைந்த துணி போல கீழே விழுந்தாள்!
"டேய்! கொஞ்சம் நிறுத்தறியா! என்னம்மா... நா பாட்டுக்கு சொல்லிண்டே இருக்கேன்.... நீ பாட்டுக்கு அந்தப் பொண்ணப் போட்டு இப்டி மாட்ட அடிக்கற மாதிரி அடிக்கறயே..." என்று ஓங்கிக் குரல் கொடுத்தார் பாஸ்கர் மாமா!
இப்போது அவர்கள் அடிப்பதை நிறுத்தினர்!
பாஸ்கர் மாமா அந்தச் சிறுமியை தூக்கி எழுப்பினார்! அழுது கொண்டிருந்தவளின் கண்களைத் துடைத்தார்!
"என்னம்மா ஆச்சு! அழாம சொல்லு!" என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்க,
"நா எந்த தப்பும் பண்ல சார்! எப்பயும் எங்க நைனா அந்த ஓட்டல் கடையாண்ட குடிச்சிட்டு உயிந்து கடப்பாரு.... அவன்... அதான் அந்த நாலாம் நம்பர் கடை டய்லரு.... அவந்தான் டெய்லியும் என்னாண்ட வந்து.... உங்கப்பாரு... கடையாண்ட உய்ந்து கடக்காருன்னு சொல்லும்... நா போய் அப்பார தூக்கி வூட்டுக்கு இட்டாருவேன்.... அன்னிக்கும் அப்டிதா.... உங்கப்பாருக்கு ஆஸ்டென் ஆச்சி.... நா ஆசுபத்ரி இட்னு போறன்னு சொல்லி அவன் என்ன இட்டுனு போய்... ஒரு கார்ல ஏத்தி உட்டான்... உட்டுட்டு அவன் போய்ட்டான்.... கார்ல யாரோ ரெண்டு பேர்.... என் வாயப் பொத்தி.... எனுக்கு மயக்கமா வந்துச்சி..... ரெண்டு நாளா மயக்கத்தில கடந்தேன்... மயக்கம் தெளிஞ்சதும் அங்கேந்து எப்டியோ தப்ச்சி வந்தா... இவரு என்னிய போட்டு அடிக்கறார் சார்...." என்று அழுது கொண்டே கூறினாள் சிறுமி!
Last edited: