seethavelu
இணை அமைச்சர்
nice
Indha Uthami character ena semma ya irritate panudhu Sissy......பவித்ராவுக்கு பயத்தால் சற்று உதறல் எடுத்தாலும், 'இல்லை நான் தான் பேச வேண்டும்...' என்று தனக்கு தானே கூறிக் கொண்டு, "அவசியப்பட்டால் பேசுவேன் அத்தை..." என்று பவித்ரா ஆணித்தரமாகக் கூறினாள்.
"பவி..." என்று கர்ஜனையாக ஒலித்தது வாசுதேவனின் குரல்.
வாசுதேவன் தனக்குச் சாதகமாகப் பேசாமல்… தன்னை அடக்க முயன்றதில், பவித்ராவுக்கு கண்கள் கலங்கியது. 'இவுங்க... நான் சாகும் வரைக்கும் எனக்குச் சாதகமாகப் பேச மாட்டங்க...' என்று தனக்கு தானே கூறிக் கொண்டு வாசுதேவனைக் கண்கலங்கப் பார்த்தாள்.
"என்ன டி... கண்கலங்கி அப்படி என் மகனைத் திசை திருப்ப பாக்குற?" என்று உத்தமி பவித்ராவை பார்த்துச் சீண்டும் விதமாக கூற, "அம்மா..." என்று தன்மையாக அழைத்தான் வாசுதேவன்.
"என்னடா என்னை சொல்ற வாசு?" என்று தன் மகனிடம் சீறினார் உத்தமி.
வாசுதேவன் முகம் சுழிக்க, "அம்மா... அமைதியா இரேன்..." என்று சுபா முணுமுணுத்தாள்.
"அவ அமைதியா இருந்துட்டா தான் குடும்பத்தில் பிரச்சனையே இருக்காதே..." என்று மஹாதேவன் கூற, "நான் ஏன் அமைதியா இருக்கனும்? ஏன் அமைதியா இருக்குமுன்னு கேட்கறேன்?" என்று உத்தமி சுபா, மஹாதேவன் இருவரைப் பார்த்தும் கேட்டார்.
"கல்யாணமாகி வந்தாளா... புள்ளய பெத்து போட்டாளான்னு இல்லாம உன் தங்கச்சிக்கு என்ன ஆராய்ச்சி வேண்டி கிடக்கு? நம்ம குடும்பத்து மானத்தையும் சேர்த்து வாங்கிட்டு..." என்று உத்தமி பவித்ராவை பார்த்து வினவ, "அத்தை, அதை நீங்க சொல்லக் கூடாது... அவுக வீட்டில் தான் சொல்லணும்..." என்று பவித்ரா மிடுக்காகக் கூறினாள்.
"நானும் பார்த்துகிட்டு தான் இருக்கேன்... உன் தங்கை கல்யாணாம் ஆகி இங்க வந்ததிலிருந்து உன் வாய் ரொம்ப தான் நீளுது... வாசு நீயும் எதுவும் கேட்கறதில்லை..." என்று பவித்ராவிடம் ஆரம்பித்து, வாசுதேவனிடம் முடித்தார் உத்தமி.
அனைவரும் மௌனம் காக்க, "உன் தங்கை, எந்த ஆராய்ச்சியும் பண்ணத் தேவை இல்லை.. நான் சொன்னேன்னு உன் தங்கை கிட்ட சொல்லு... இல்லனா நடக்கிறதே வேற..." என்று உத்தமி பவித்ராவை மிரட்டினார்.
"என் தங்கையை சொல்றதுக்கு நீங்க யாரு அத்தை... நான் என் படிப்பை வீணாக்கிட்டு இந்த வீட்டில் உக்காந்து வருத்தப்பட்டுட்டு இருக்கிற மாதிரி, என் தங்கை இருக்க மாட்டா... இருக்க நானும் விட மாட்டேன்..." என்று பவித்ரா கோபமாக வார்த்தையை வீச, உத்தமி மார்பிலும், தலையிலும் அடித்துக் கொண்டு அழுதார்.
"இத்தனை வருஷமும்.... இத்தனை வருஷம்... என் மகன் தங்கமா தாங்கினானே... என் மகன் தங்கமா தாங்கினானே... இவ இப்படி வருத்தப்பட்டு வாழறன்னு சொல்லிட்டாளே.... சொல்லிட்டாளே.... நானும் தானே மக மாதிரி பார்த்தேன்... என்னை யாருன்னு கேட்டுட்டாளே... என்னைப் பார்த்து யாருனு கேட்டுட்டாளே..." என்று திக்கித் திணறிக் கூறி மயக்கம் வருவது போல் பாசாங்கு செய்தார் உத்தமி.
'தான் கூறிய சொல்லுக்கு, இப்படி எல்லாம் அர்த்தம் உண்டா?' என்ற சிந்தனையோடு அங்கு அரங்கேறிக் கொண்டிருக்கும் நாடகத்தைப் பார்த்தாள் பவித்ரா.
"பேசின பேச்சுக்கு ஒரு மன்னிப்பு கேக்குறாளா பாருடா வாசு... ஐயோ.. எனக்குப் படபடப்பா வருதே...கண்ணைக் கட்டுதே..." என்று மூச்சு திணறுவது போல் உத்தமி நாற்காலியில் சாய, "அம்மா... என்ன ஆச்சு?" என்று பதறியபடி வாசுதேவன் தன் தாய் அருகே சென்றான்.
‘எல்லாம் நடிப்பு..’ என்று எண்ணியபடி, "ஒன்னும் ஆகலை... தண்ணியை கொடுங்க..." என்று பவித்ரா முணுமுணுத்தாள்.
இன்று உத்தமி பேசிய விதத்திலும், வாசுதேவன் மௌனமாக அமர்ந்ததிலும்... என்றும் இல்லாத தைரியம் இன்று பவித்ராவின் மனதில் அமர்ந்து கொண்டது. 'நானே எனக்காகப் பேச வேண்டும்... இவர்கள் யார் என் தங்கையை அதிகாரம் செய்வதற்கு?' என்று பவித்ரா தனக்கு தானே கேட்டுக் கொண்டாள்.
"ஒரு மன்னிப்பு கூட கேட்க மாட்டேங்கிறாளே..." என்று கூறியபடியே உத்தமியின் கண்கள் மேலே சொருவ ஆரம்பிக்க, "மதினி... அம்மா வயசானவங்க... நீங்களாவது பொறுமையா இருந்திருக்கலாமே?" என்று குற்றம் சாட்டும் விதமாகச் சுபா கூறினாள்.
சுபாவின் பேச்சில் பவித்ரா அவளை அதிர்ச்சியாகப் பார்க்க, "பவி... அம்மா கிட்ட மன்னிப்பு கேள்..." என்று கம்பீரமாக ஒலித்தது வாசுதேவனின் குரல்.
மஹாதேவன் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல், பவித்ராவை பார்க்க... மொத்த குடும்பம் அவளுக்கு எதிராகத் திரும்பிய அவல நிலை பவித்ராவை நடுங்கச் செய்தது.
யாருமற்ற அனாதை போல் அந்த நொடி, பவித்ராவுக்கு எந்த ஆயுதமும் இன்றி போர்க்களத்தில் நிற்பது போன்ற உணர்வைத் தர, அவள் கண்கள் கண்ணீரை வடிக்க ஆரம்பித்து.
ஆனால் பவித்ராவின் கோபம் கண்ணீரை முந்திக் கொண்டு வார்த்தையாக வெளியே வந்தது. "முடியாது அத்தான்... நான் தப்பு பண்ணலை... நான் தப்பா பேசலை... என்னால் யார் கிட்டயும் மன்னிப்பு கேட்க முடியாது." என்று பிடிவாதமாகக் கூறினாள் பவித்ரா.
"எட்டி பவி... நான் சொல்றேன் மன்னிப்பு கேளு மா... நாம் அப்புறம் பேசிக்கலாம்..." தாயின் உடல் நிலை கருதிக் கெஞ்சினான் வாசுதேவன்.
"இல்லை அத்தான்... அப்புறம் பேச ஒன்னும் இல்லை... என்னை பத்தி ஆயிரம் பேசுங்க... நான் கேட்டுகிட்டு அமைதியா தானே இருந்தேன்... என் தங்கையைப் பத்தி பேசியிருக்க கூடாது... நான் யாரையும் தப்பா பேசலை... மன்னிப்பு கேட்க மாட்டேன்..." என்று பவித்ரா வாசுதேவனிடம் மறுப்பு தெரிவித்தாள்.
"என்னடா கெஞ்சுற... இப்படி தான் நீ இடம் கொடுத்து இவ உன் பேச்சைக் கேட்க மாட்டேங்கிறா..." என்று உத்தமி நெஞ்சைப் பிடித்துக் கொண்டே கூற, வாசுதேவன் பவித்ரா தன் சொல்லைக் கேட்காத கோபத்தில் அவளை முறைத்துப் பார்த்தான்.
பவித்ரா மேடிட்ட வயிற்றோடு பிடிவாதமாக நின்று கொண்டிருந்தாள்.
"பவி... நீ மன்னிப்பு கேட்கலைன்னா உனக்கும் எனக்கும் இனி ஒன்னும் இல்லை...." என்று பவித்ராவின் முகம் பார்க்காமல் ஒரு முடிவோடு எங்கோ பார்த்தபடி கூறினான்.
"அத்தான்...." என்று பவித்ரா அதிர்ச்சியாக அழைக்க, "மன்னிப்பு கேட்டுட்டு என்னை அப்படிக் கூப்பிடு பவி..." என்று கண் கலங்கக் கூறினான் வாசுதேவன்.
"அத்தான்...." என்று பவித்ரா ஆழமான குரலில் அழைக்க, "பவி... நீ மன்னிப்பு கேட்கலைன்னா உனக்கும் எனக்கும் இனி ஒன்னும் இல்லை...." என்று பவித்ராவை மன்னிப்பு கேட்க வைக்கும் நோக்கோடு கட்டளையிட்டான் வாசுதேவன்.
வாசுதேவனின் கட்டளையில், "ம்..." என்ற சத்தத்தோடு மெல்லிய விரக்தி புன்னகை பவித்ராவின் முகத்தில் தோன்ற, உத்தமியின் முகத்தில் வெற்றி புன்னகை தோன்றியது.
தனக்கென்று பேச யாருமில்லாமல், மேலும் பேசும் வகை தெரியாமல் பவித்ராவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
பவித்ராவின் தலை சுற்றுவது போல் பாரமாகி விண்வினென்று வலித்தது. "என்னை எல்லாரும் மன்னிச்சிருங்க..." என்று கை எடுத்துக் கும்பிட்டாள் பவித்ரா.
அந்த காட்சியைக் காண சகியாமல் தன் தாயையும் விட முடியாமல், தலையில் கை வைத்தபடி வேறு பக்கம் திரும்பிக் கொண்டான் வாசுதேவன்.
மன்னிப்பு கேட்ட அடுத்த நொடி, ' எனக்கும் உனக்கும் ஒன்னும் இல்லைன்னு அத்தான் சொல்லியுமா... என் உடல் உயிரைத் தாங்கிக் கொண்டு நிற்கிறது?' என்ற எண்ணத்தோடு மேடிட்ட வயிற்றை கைகளால் பிடித்த படி தரையில் சரிந்து விழுந்தாள் பவித்ரா.
இரண்டல்ல ஒன்று இணையாகப் பயணிக்கும்…