"வாசு அண்ணா.... மதினி என் கிட்ட பேச மாட்டாங்க போல..." என்று தன் கண்களைக் கசக்கிய படி கூறினாள் சுபா.
"சுபா... பவித்ரா மயங்கி விழுந்தப்ப... அம்மா என்னவோ சொன்னாங்க... அப்பா கோபப்பட்டாங்களே... அம்மா என்ன சொன்னாங்க? எனக்கு அப்ப பவித்ராவை தவிர, வேற எதுவும் தோணலை... அந்த பதட்டத்தில் எதுவும் கேட்கலை..." என்று தன் கண்களை சுருக்கி, யோசனையாகக் கேட்டான் வாசுதேவன்.
'இருக்கிற பிரச்சனையில்... அம்மா நடிப்புன்னு சொன்னதை சொன்னா அவ்வுளவு தான்...' என்று யோசித்தபடி, "எனக்கும் தெரியலை அண்ணா... நானும் பதட்டத்தில் கவனிக்கலை..." என்று கூறி தப்பித்துக் கொண்டாள் சுபா.
ராம் பிரசாத் எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருக்க, நந்தினி வாசு தேவன் அருகே வந்தாள்.
ராம் பிரசாத்தின் முகத்தில் பதட்டம் சூழ்ந்தது. சுபாவிற்கு, பயம் தொற்றிக் கொண்டது. 'அக்காவுக்கு இந்த நிலைமை வந்ததுக்கே இப்படி... இதில் இவளுக்காகத் தான் சண்டை ஆரம்பித்ததுன்னு தெரிஞ்சா...' என்ற எண்ணம் மேலோங்கச் சுபா அங்கிருந்து நகன்று, ராம் பிரசாத் அருகே சென்று அமர்ந்துக் கொண்டாள்.
வாசுதேவன் மௌனமாக நந்தினியைப் பார்க்க, "அத்தான்..." என்று நந்தினி அழைக்க, "உங்க அக்கா நல்லாருக்காளா?" என்று புருவம் உயர்த்தி கேட்டான் வாசுதேவன்.
"அத்தான்..." என்று செல்லமாகச் சிணுங்கினாள் நந்தினி.
"உங்க அக்கா எப்படி இருக்கான்னு கேட்டேன்?" என்று மெல்லிய புன்னகையோடு கேட்டான் வாசுதேவன்.
"என் அக்கா உங்களுக்கு யாரு?" என்று கோபமாகக் கேட்டாள் நந்தினி.
"ஏன் அது என் சட்டையைப் பிடிக்கும் போது தெரியலையா?" என்று சிரித்த முகமாகக் கேட்டான் வாசுதேவன்.
"அது... என் அக்காவுக்கு ஒன்னுனா எனக்கு எதுவும் தெரியாது...அது எங்க அம்மா, அப்பாவா இருந்தாலும் சரி... நீங்களா இருந்தாலும் சரி..." என்று உறுதியாகக் கூறினாள் நந்தினி.
வாசுதேவனின் முகத்தில் ஓர் அழகான புன்னகை பூத்தது.
'இவர்களுக்குள் இருக்கும் பாசப்பிணைப்பு தெரியாமல்... இடையில் அம்மா புகுந்தது தேவை இல்லாத வேலை...' என்ற எண்ணம் தோன்றியது ராம் பிரசாத்துக்கு.
"அப்ப... நான் இல்லைனாலும் உன் அக்காவை நீ பத்திரமா பார்த்துப்ப?" என்று கண்கலங்கக் கேட்டான் வாசுதேவன்.
"அத்தான்..." என்ற நந்தினியின் அழைப்பில் கோபம் இருந்தது.
"உங்க அக்கா அப்படி தான் நினைக்குறா..." என்று உடைந்த குரலில் கூறினான் வாசுதேவன்.
'என்ன நடந்தது?' என்று கேட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும், அது அநாகரிகம் என்று கருதி மௌனம் காத்தாள் நந்தினி.
வாசுதேவன் சற்று தன்னை நிதானப் படுத்திக் கொண்டு, "சொல்லு... என்ன கேட்க வந்த?" என்று பொறுமையாக நந்தினியிடம் கேட்டான் வாசுதேவன்.
"அக்காவை கொஞ்ச நாளைக்கி அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா?" என்று தயக்கமாகக் கேட்டாள் நந்தினி.
வாசுதேவன் பதில் கூறாமல் அவளை பார்க்க, "நீங்களே அம்மா, அப்பா கிட்ட சொல்லுங்களேன்... நான் சொல்றதை விட, நீங்க சொன்னா..." என்று தன் வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தினாள் நந்தினி.
"ஆக... உங்க அக்கா என்னை விட்டுட்டு போகணுமுன்னு முடிவு எடுத்துட்டா?" என்று வாசுதேவன் கூர்மையாக கேட்க, நந்தினி மௌனம் காத்தாள்.
"அதுக்கு நீயும் உடந்தை..." என்று நந்தினியைக் குற்றம் சாட்டும் தொனியில் கேட்டான் வாசுதேவன்.
நந்தினி பதட்டமாக மறுப்பாகத் தலை அசைத்து, "ஐயோ... இல்லை அத்தான்... பிங்கி ப்ரோமிஸ்... அக்கா கொஞ்ச நாள் அம்மா வீட்டில் ரெஸ்ட் எடுக்கட்டுமேன்னு..." என்று வார்த்தைகளை முழுங்கினாள் நந்தினி.
பவித்ராவை இப்பொழுது, அவர்கள் வீட்டுக்கு அனுப்புவதில் நந்தினிக்கு விருப்பம் இல்லை என்பதே நிஜம். 'இதை பக்குவமாக பேசி, சரி செய்ய வேண்டும்...' என்ற எண்ணத்தோடு பொறுமையாகப் பேசிக் கொண்டிருந்தாள் நந்தினி.
நந்தினியின் எண்ண போக்கை அவள் பார்வையிலிருந்தே கண்டு கொண்டான் வாசுதேவன்.
மருத்துவமனையிலிருந்து பவித்ராவை அழைத்து செல்லலாம் என்று மருத்துவர்கள் கூறி விட, "பவி... கிளம்பு..." என்று அதிகாரமாகக் கூறினான் வாசுதேவன்.
பவித்ரா பதிலேதும் கூறாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள்.
"பவி... என் பொறுமையைச் சோதிக்காத... வா நம்ம வீட்டுக்கு... வீட்டில் போய் எல்லாம் பேசிக்களாம்..." என்று குரலை உயர்த்தினான் வாசுதேவன்.
பவித்ராவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. வாசுதேவன் கோபம் வடிந்து, அவள் அருகே சென்று தலை கோதி, "எட்டி... நீ இல்லாமல் நான் இருக்க முடியாதுன்னு நான் சொல்லலை... போதுமா? சொன்னாலும் நீ நம்பமாட்டா... நான் இல்லாமல் உன்னால் இருக்க முடியாது... என்னை அத்தான்னு கூப்பிடாம உன்னால் இருக்க முடியாது... உனக்காகவாது என் கூட வீட்டுக்கு வா பவி..." என்று வாசுதேவன் பவித்ராவுக்கு புரிய வைக்கும் நோக்கோடு கெஞ்சினான்.
'என்னால் அத்தான் இல்லாமல் இருக்க முடியுமா? அவங்க கிட்ட பேசாமல் இருக்க முடியுமா?' கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் பவித்ராவின் நெஞ்சம் ஊமையாய் அழுதது.
ஆனால், 'என் அவமானத்திற்குப் பதில் தெரியாமல்... என் சுயமரியாதையை விலை பேசி வாங்கிய ஒருவரோடு... அதை மீட்டெடுக்காமல் என்னால் அந்த வீட்டுக்கு ஒருநாளும் செல்ல முடியாது...' என்ற எண்ணம் தலை ஓங்க பவித்ரா எதுவும் பேசாமல் வாசுதேவனைப் பார்த்து மறுப்பாகத் தலை அசைத்தாள்.
இரண்டல்ல ஒன்று இணையாகப் பயணிக்கும்…