Chitrasaraswathi
முதலமைச்சர்
ஒருவேளை வாசு உத்தமி அம்மாவின் முன் பவியிடம் மன்னிப்பு கேட்பானோ
பவித்ரா அவள் அறையில் யோசனையாக ஜன்னல் வழியாகத் தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"பவி..." என்று வாசுதேவன் அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைய, "நீங்க வேலையைக் கவனிக்கப் போகலையா?" என்று பவித்ரா வாசுதேவனை பார்த்தபடி கேட்டாள்.
மறுப்பாகத் தலை அசைத்தான் வாசுதேவன். "மனசுக்கு ஏதோ சரி இல்லை பவி... உன் முகம் ரொம்ப வாடி இருக்குட்டி.." என்று அவள் அருகே நின்று கொண்டு கூறினான் வாசுதேவன்.
"அது ரொம்ப நாளா அப்படி தான் இருக்கு..." என்று சலிப்பாகக் கூறினாள் பவித்ரா.
"எட்டி... உனக்கு எதுக்கு இந்த சலிப்பு? இந்த நேரத்தில் சந்தோஷமா இருக்கனும்..." என்று வாசுதேவன் அவள் தோள் மீது கை போட்டு கூறினான் வாசுதேவன்.
"அதுக்கு நீங்க என்னை சந்தோஷமா வச்சிக்கணும்..." என்று வாசுதேவனைக் குற்றம் சாட்டினாள் பவித்ரா.
"எம் பொஞ்சாதியை சந்தோஷமா வச்சுக்கிட்டா போச்சு... என்ன செய்யணுமுன்னு சொல்லு... செய்றேன்... அதுக்கு தானே நான் இருக்கேன்...." என்று வாசுதேவன் சிரித்தமுகமாக கூறினான்.
பல நாட்களாக பல விதமாக பவித்ராவிடம் பதிலைத் தேடிக் கொண்டிருந்தான் அவள் கணவன்.
"நீங்க உங்க வேலையைப் பார்க்க கிளம்புங்க... எனக்கு இன்னும் ஏழு நாள் இருக்கு... ஏதாவதுன்னா நான் உங்களை கூப்பிடறேன்..." என்று பவித்ரா கூற, வாசுதேவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி, "நான் கிளம்பட்டுமா... உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லிலை?" என்று கேட்டு உறுதி செய்து கொண்டே அங்கிருந்து கிளம்பினான் வாசுதேவன்.
வாசுதேவன் சென்று ஒரு மணி நேரத்தில், பவித்ராவுக்கு வலி விண்விண்ணென்று எடுத்தது.
"அம்மா... அத்தானை வர சொல்லுங்க..." என்று பவித்ரா முனங்கினாள்.
செல்வி வாசுதேவனுக்கு அழைக்க, அவன் மொபைல் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை.
செல்வி நந்தினியை அழைக்க, நந்தினி விரைந்து வந்தாள்.
"ஏன் இன்னும் ஹாஸ்பிடல் கிளம்பளை?" என்று நந்தினி பதட்டத்தோடு கேட்க, "அத்தான் வரணும்..." என்று பிடிவாதமாகக் கூறினாள் பவித்ரா.
"லூசாடி நீ... அத்தான் வந்து என்ன ஆக போகுது?" என்று நந்தினி சண்டையிட ஆரம்பிக்க, ராம் பிரசாத் சந்துருவுக்கு அழைத்து வாசுதேவனை அழைத்து வர சொன்னான்.
சந்துரு, வாசுதேவனை அழைத்துக் கொண்டு வர, பவித்ரா வலியோடு வாசுதேவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
அனைவரும் பவித்ராவை திட்டிக் கொண்டிருக்க, "அத்தானுக்கு என்னைக் கூப்பிட்டுட்டு போறதை விட என்ன முக்கிய வேலை..." என்று வலியோடு முனங்கி கொண்டிருந்தாள் பவித்ரா.
"பவி..." என்று அழைத்துக் கொண்டு வாசுதேவன் அவள் அருகே நெருங்கினான்.
வாசுதேவன் பவித்ராவிடம் அவள் பிடிவாதத்திற்குச் சிறிதும் கோபித்துக் கொள்ளாமல், "எனக்குத் தெரியும்ட்டி... நீ நான் வராமல் கிளம்ப மாட்டேன்னு..." என்று கூறி அவளை அழைத்துக் கொண்டு அனைவரும் மருத்துவமனைக்குச் சென்றனர்.
ராம் பிரசாத் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
பவித்ரா வலியால் துடிக்க, வாசுதேவனின் உடல் நடுங்கியது. பவித்ரா வாசுதேவனின் பயத்தை உணர்ந்தாள்... "பயப்படாதீங்க... எனக்கு ஒண்ணுமில்லை... நானும் குழந்தையும் நல்ல படியா வருவோம்..." சோர்வாக ஒலித்தது பவித்ராவின் குரல்.
வாசுதேவன் கண்கலங்க.... அதைத் தாங்காதவளாய்... "அத்தான்..." என்று பல நாட்களுக்குப் பின் வலி தாங்காதவளாக வாசுதேவனின் காதில் கிசுகிசுப்பாய் அழைத்தாள் பவித்ரா.
"எட்டி... நீ அப்படி என்னைக் கூப்பிடாத... வலியோடு அப்படி கூப்பிடாதட்டி... என்னால் தாங்க முடியலை..." என்று வாசுதேவனின் குரல் பதட்டத்தோடு பயத்தோடு கரைந்து மெலிந்து ஒலித்தது.
மருத்துவமனைக்குச் செல்ல.. அனைவரும் வெளியே காத்திருக்க, சில மணி நேர போராட்டத்திற்குப் பின் பவித்ரா ஓர் அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.
உத்தமி அங்கு நின்று கொண்டிருந்தார். "என் பேத்தி..." என்று பெருமையாகக் கூறியபடி, குழந்தையைக் கையில் பெற்றுக் கொண்டார்.
மாப்பிள்ளை வீட்டுத் தோரணையில், தன் உரிமையை அங்கு நிலை நாட்டிக் கொண்டிருந்தார். செல்வி, ஆவுடையப்பன் இருவரின் பார்வையிலும் அவர் வந்ததே மகிழ்ச்சியாக இருந்தது. "பெண்ணை பெற்றவர்கள் பல இடங்களில் வேலை செய்வதற்கு மட்டும் தான் போலும்." என்று ராம் ப்ரசாத்திடம் நந்தினி தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.
"நமக்குக் குழந்தை பிறக்கும் பொழுது அதை மாத்திருவோம்..." என்று நந்தினியின் ஆதங்கத்திற்குத் தீர்வு சொன்னான் ராம் பிரசாத்.
நந்தினி வெட்க புன்னகையோடு குழந்தையைக் காண ஆர்வமாகச் சென்றாள்.
வாசுதேவன், பவித்ராவை காண அறைக்குள் சென்றான்.
பவித்ரா சோர்வாகப் படுத்திருந்தாள்.
பவித்ராவின் தலை கோதி, அவளை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் வாசுதேவன்.
உள்ளே நுழைந்த உத்தமி, "சீக்கிரம் உடம்பை தேத்திட்டு... நம்ம வீட்டுக்கு வர வழிய பாரு... நீ வீட்டை விட்டு போனதிலிருந்து வாசு வீட்டில் சாப்பிடறதில்லை... வந்து அவனைக் கவனி..." என்று கம்பீரமாக கூறினார்.
"சீக்கிரம் வந்திருவா..." என்று செல்வி கூற, அங்கு அமைதி நிலவியது.
பவித்ரா பதில் எதுவும் பேசாமல், தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள். பவித்ராவின் மௌனம் மற்றவர்களுக்குச் சோர்வாகத் தெரிந்தாலும்... வாசுதேவனுக்கு விடையில்லா கேள்வியாகத்தான் இருந்தது.
மாதங்கள் உருண்டோடின... பவித்ராவின் பிடிவாதம் தளர்ந்தபாடில்லை... செல்வி செய்வதறியாமல் தவிக்க… வாசுதேவன் மெலிந்து சோர்வாக காணப்பட்டான்.
"இருந்தாலும்... ஒரு பொம்பளைக்கு இவ்வுளவு பிடிவாதம் ஆகாது..." என்று அவர்கள் வீட்டில் உரக்கக் கத்திக் கொண்டிருந்தார் உத்தமி.
வாசுதேவன் எதுவும் பேசாமல் நாற்காலியில் அமர்ந்திருந்தான். "இவன் ஒருத்தன் பேசவும் மாட்டான்... வீட்டில் சாப்பிடவும் மாட்டான்... இவன் பொஞ்சாதி வரதுக்கு முன்னாடி என் கிட்டத் தானே பேசினான்... நான் தானே சாப்பாடு போட்டேன்." என்று உத்தமி கழுத்தை நொடித்தார்.
"உத்தமி.. நாம இன்னைக்கி பவித்ரா வீட்டுக்கு போறோம்... பவித்ராவை வீட்டுக்கு கூப்பிடறோம்..." என்று மஹாதேவன் உறுதியாகக் கூறினார்.
மறுப்பு தெரிவிக்க வாய் திறக்க எண்ணிய உத்தமி வாசுதேவனைப் பார்த்தார்.
மெலிந்து, சோர்ந்து உயிரில்லா ஜீவனாய் காட்சி அளித்த வாசுதேவன் உத்தமியின் எண்ணப் போக்கை மாற்றினான்.
'அப்படி என்ன தான் இருக்கோ அவ கிட்ட...' என்று எண்ணியபடி, "பவித்ராவுக்கு உன் மேல் அக்கறை இல்லாமல் இருக்கலாம்... ஆனால்... நாங்க அப்படி இல்லை... எங்களுக்கு உன் மேல் அக்கறை இருக்கு... அவளை அப்படியே விட முடியாது... பேசுற விதமா பேசி கூட்டிட்டு வருவோம்..." என்று பெருந்தன்மையாகப் பேசுவது போல் பேசினார் உத்தமி.
அன்று மாலை, பவித்ராவை காண, உத்தமி, மஹாதேவன், வாசுதேவன் மூவரும் சென்றனர்.
'பிரச்சனை இல்லாமல் பவித்ரா அவர்களோடு கிளம்பிச் செல்ல வேண்டும்... இவங்க என்ன பேசுவாங்களோ?' என்ற எண்ணத்தோடு செல்வி ஆவுடையப்பன் இருவரும் உத்தமியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இரண்டல்ல ஒன்று இணையாகப் பயணிக்கும்…