Muthupandi
அமைச்சர்
Nice
Vasu ah avanga amma easy ah manipulate paniranga....இந்த பவித்ராவின் பரிமாணம் புதிது. பவித்ராவின் பேச்சு வாசுதேவனை நிலைகுலைய செய்தது. வாசுதேவனின் கோபம் கட்டுக்கடங்காமல் ஏற, அவன் கைகள் பவித்ராவின் கன்னத்தை பதம் பார்த்தது.
வாசுதேவன் கோபப்படுவான்... பவித்ரா நிலை தடுமாறுவாள்... ஆனால், அடிப்பது...
வழக்கமாக வாசுதேவனின் தொடுகையில் குழையும் பவித்ரா, இன்று அவன் தொடுகையில் பெண்ணுக்கே உண்டான அழுத்தத்தில் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
தன் தலை முடியை கொண்டையிட்டு... அவன் முன் கண் கலங்க நின்றாள்.
"ஆக... இது தான் நீங்க... உங்க அம்மா சொல்றதை கேட்கலைன்னா அடிப்பீங்க?" என்று பவித்ராவின் கண்களில் நீர் வழிந்தாலும், வார்த்தைகள் சாட்டையாக வெளி வந்தது.
"ஏய் அறிவில்லை...நம்ம சண்டையில் ஏன் தேவை இல்லாமல் அவகளை இழுக்கற? என்ன கேள்வி கேட்கற? " என்று வாசுதேவன் வெறுப்பாக கேட்க, "ஆமா… இழுப்பேன்... இப்ப என்கிட்டே பேசிட்டு இருக்கிறது என் வாசு அத்தான் இல்லியே... அவங்க பையன் வாசுதேவன்... அப்படி தான் கேட்பேன்..." என்று பவித்ரா வாசுதேவனை கோபமாக பார்த்து கண்ணீர் மல்க கூறினாள்.
பவித்ரா சொன்ன வார்த்தை வாசுதேவனை ரணமாய் அறுத்தது. "நான் அவள் வாசு அத்தான் இல்லையா? நான் யார் சொல்லி கூறினால் என்ன? நான் அவளுக்காகத் தானே கூறுகிறேன்..." என்று வாசுதேவனின் மனம் ஊமையாய் அழுதது.
பவித்ராவிடம் பேச மனம் இல்லாமல், இருக் கைகளால் தலையை கட்டிக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டு அமைதியாகப் படுத்து விட்டான் வாசுதேவன்.
வாசுதேவன் அடித்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல், பவித்ராவின் கோபம் கனலாய் எரிந்தது.
"எங்கயோ இருக்கிற அம்மா அப்பாவுக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு நான் அமைதியா இருக்கேன். என் கஷ்டத்தையும், நீங்க அடிச்சா கூட சொல்லி அழ கூட யாரும் இல்லாமல் நான் இந்த ஊரில் தனியா வாழற வாழ்க்கைக்கு விடிவு காலம்... என் தங்கை இங்க வந்தவுடன் வரும். அவ என்னைப் பார்க்க அடிக்கடி வருவா... யாரும் எனக்காக இங்க அடிக்கடி வறதில்லைன்னு தானே எல்லாரும் இந்த ஆட்டம் ஆடுறீங்க?" என்று கண்ணீரோடு புலம்பினாள் பவித்ரா.
பவித்ராவின் பேச்சில் வாசுதேவனின் கண்கள் கலங்கியது. 'நான் அவள் அருகே இருக்கும் பொழுது, இவள் தனியாக வாழ்கிறாளா?' என்று மனவருத்தத்தோடு தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் வாசுதேவன்.
"என் தங்கச்சி வாழ்க்கைன்னு வந்திருச்சனா... எனக்கு யாரும் முக்கியம் இல்லை... நான் யார் சொல்வதையும் கேட்கப் போவதில்லை..." என்று இறுகிய முகத்தோடு படுத்திருந்த வாசுதேவனைப் பார்த்து கோபமாகக் கூறினாள் பவித்ரா.
'ஐயோ... இதுக்கே இவ்வளவு பிரச்சனை... அம்மா சொன்ன மாப்பிள்ளை வீட்டை மட்டும் சொல்லிருந்த நீ காலி டா...' என்று வாசுதேவன் தன் புத்திசாலித்தனத்தை அந்த நேரத்திலும் மெச்சிக் கொண்டான்.
படம் வரையவும் மனமில்லாமல், ,'சண்டையிடும் ஒவ்வொரு முறையும் நான் ஏன் கீழே படுக்க வேண்டும்?' என்ற வீம்பு மனதில் எழ, மெத்தையில் இருந்த இடத்தில் வாசுதேவன் அருகே வேறுபக்கம் திரும்பி படுத்துக் கொண்டாள் பவித்ரா.
பவித்ரா உறங்கிவிட, அவள் விசும்பல் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.
பவித்ராவின் விசும்பல், வாசுதேவனை ஈட்டியால் குத்துவது போல் வலிக்க, தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். அவளைச் சமாதானம் செய்ய, வாசுதேவனின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
இருவரும் அருகருகே இருந்தாலும் அவர்களுக்கு இடையில் பலர் இருப்பது போன்ற பிரமை இருவருக்கும் தோன்றியது.
அதிகாலையிலும் பவித்ராவின் விசும்பல் கேட்டுக் கொண்டு தான் இருந்தது. பவித்ரா எழுவதற்கு முன் , வாசுதேவன் தோட்டத்திற்கு சென்றுவிட்டான். தோட்டத்தில் இருள் சூழ்ந்திருந்தது. அங்கு வேலை மேற்கொள்ள, அரிவாளை எடுக்க வாசுதேவன் எத்தனிக்க, அவன் எண்ணம் பவித்ராவை சுற்றி வந்தது. கவனமில்லால் அரிவாளைத் தலை கீழாகப் பிடித்தான் வாசுதேவன்.
மற்ற பேச்சுக்கள் மறந்து, 'நான் ஏன் பவித்ராவை அடித்தேன்?' இந்தக் கேள்வி வாசுதேவனின் மனதில் விஸ்வரூபம் எடுக்க, அவன் கைகள் இறுகியது. அரிவாள் அவன் கைகளை அழுத்த, வாசுதேவனின் கைகளில் இருந்து, இரத்தம் வடிந்தது. ஆனால் வாசுதேவனுக்கு வலிக்க வில்லை. அவனை முழுதாக வாட்டியது அவன் மனதின் வலி.
'ஏன் என் பவித்ரா என்னைப் புரிந்து கொள்ளவில்லை? நான் அவளுக்காகத் தானே சொல்கிறேன்... நான் இருந்தும் அவள் இங்குத் தனியாக இருக்கிறாளா?' போன்ற கேள்விகளால் அவன் நெஞ்சிலும் உதிரம் கொட்டியது.
பவித்ராவின் விசும்பல் சத்தத்தோடும்... வாசுதேவனின் உதிரம் வடியும் கைகளோடும் நெஞ்சோடும் …
இரண்டல்ல ஒன்று இணையாக பயணிக்கும்…