இனிமையாக முடிந்த இரவின் விடியலும் இனிமையாகவே இருந்தது. வழக்கம்போல நான்கரை மணிக்கே ராதிகாவிற்கு விழிப்பு தட்டிவிட எழுந்தவள், பல்துலக்கி முகம் கழுவிக்கொண்டு சமையலறைக்கு வந்தாள். பர்வதம் மாமியும் கீதாவும் காபி குடித்துக்கொண்டிருந்தனர்.
“வா, வா ராதும்மா, நீயும் எழுந்துட்டியா, இரு மொதல்ல காபி குடி,” என்று அவளுக்கும் பர்வதம் காபியைக் கலந்து கொடுக்க, “குட் மார்னிங்மா, குட் மார்னிங் கீதாக்கா,” என்று கூறியவள், “விழுப்பு காரியம் ஏதாவது இருக்கான்னு பாத்துண்டு குளிக்கப் போகலாம்னு வந்தேன்மா,” என்று அவள் இன்னும் குளிக்காததற்கு விளக்கம் கூறியபடி காபியைக் குடிக்கத் தொடங்கினாள்.
“இப்போதைக்கு விழுப்பு காரியம் எதுவும் இல்லை, சுமங்கலிகளுக்கு இலை போடற இடத்தை பெருக்கி துடைச்சு கோலம் போடணும், அதை துளசி பாத்துப்பா, நீங்க ரெண்டுபேரும் எண்ணை தேச்சு குளிக்கணும், அந்த மனையில ஒக்காருங்கோ, நான் எண்ணை வெச்சு விடறேன், நீங்க ரெண்டுபேரும் குளிச்சுட்டு வந்துடுங்கோ, நாம ஒண்ணொண்ணா சமைக்க ஆரம்பிச்சா சரியா இருக்கும், காய் நறுக்கற வேலைய பரத்தும் ராகவனும் பாத்துக்கறேன்னு சொல்லிட்டா, அதனால அவாளையும் எழுப்பிவிட்டுடுங்கோ, எல்லாருக்கும் கொல்லையில மடி ஒணத்திருக்கேன், இங்கேயே குளிச்சுட்டு ரெடி ஆகுங்கோ,” என்று இரு மருமகள்களையும் அங்கே கோலமிட்டு போடப்பட்டிருந்த மனையில் அமரவைத்து மங்களஸ்நானத்திற்காக நெற்றியில் குங்குமமிட்டு உச்சியில், கன்னத்தில் கைகளில் மற்றும் கால்களில் எண்ணையும் மஞ்சளும் தடவி, ஆரத்தி எடுத்து, பின்னர் சீயக்காயும் வாசனைப் பொடியும் கொடுத்து ஸ்நானம் செய்ய அனுப்பிவிட்டு, சமையலுக்கான ஆயத்தத்தில் இறங்கினார் பர்வதம் மாமி.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே பரத் குளித்துவிட்டு வந்துவிட, “நல்ல வேளை இவரை எப்படி எழுப்பரதுன்னு நெனைச்சுண்டு இருந்தேன், இவரே எழுந்து வந்துட்டார், நல்லதா போச்சு” என்று அவள் விட்ட நிம்மதிப் பெருமூச்சையும், எண்ணையும் மஞ்சளுமாக அவள் நின்றிருந்த கோலத்தையும் கண்டு நமட்டு சிரிப்பு சிரித்தபடியே சமையலறைக்குள் நுழைந்தவன், “அம்மா ஸ்ட்ராங்கா ஒரு காபி குடு,” என்றபடி, காய்கறிகளை எல்லாம் எடுத்துவைக்கத் தொடங்கினான்.
நார்மடி வேஷ்டியும், ஒரு டி ஷர்டும் போட்டுக்கொண்டு நெற்றியில் பட்டை வீபூதியுடன் வேலை செய்துகொண்டிருந்தவனை வியப்புடன் பார்த்தபடி நின்றிருந்தாள் ராதிகா, “நேத்திக்கி கோட்டும் சூட்டும் போட்டுண்டு மிடுக்கா பிசினஸ்மேனா இவர் நின்ன அவதாரமென்ன, இன்னிக்கி சமையலரையில வேஷ்டிய மடிச்சு கட்டிண்டு கறிகாய் நறுக்கற அவதாரமென்ன? இன்னும் என்னென்ன அவதாரம் எடுக்கப் போறாரோ?” என்று எண்ணியபடி நின்றிருந்தவளின் அருகில் வந்து, “எத்தனைதான் கோட்டும் சூட்டும் போட்டுன்டாலும், பேசிக்கலி நான் ஒரு சமையல்காரன்தான், அதுதான் நிரந்தர அவதாரம்,என்ன புரியறதா?” என்று அவளைப் பார்த்து புருவத்தைக் கேள்வியாக உயர்த்தியபடி பரத் கிசுகிசுக்க, நேற்றும் இதேபோல தான் மனதில் நினைத்தவற்றிற்கு பரத் பதிலளித்தது நினைவுக்கு வந்து, அனைவர் முன்னாலும் என்ன பேசுவது என்று தெரியாமல் ராதிகா வெடவெடத்துப் போய் முகம் சிவக்க நின்றிருக்க, அவளிடமிருந்து ஒரு அடி பின்னால் விலகிய பரத் அவளுடைய சிவந்த முகத்தையே பார்த்தபடி, “ஏம்மா, நம்பாத்து மயலை மகாலட்சுமி எல்லாம் குளிக்கப் போகக்கூட ஏதாவது முஹூர்த்தம் பாத்திருக்கியா என்ன , எல்லாரும் அப்படி அப்படியே மசமசன்னு நின்னுண்டு வேடிக்கை பாத்துண்டு இருக்கா?” என்று நக்கலடிக்க, “ஏண்டா அவளை காலங்கார்த்தால வம்புக்கு இழுக்கற” என்று பர்வதம் மாமி பரத்தைச் சாடியதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் குளியல் அறையை நோக்கி ஓட்டமெடுத்தாள் ராதிகா.
“என்னை இப்பிடி ஓட ஓட விரட்டறதே இவருக்கு வேலையா போச்சு,” என்று பரத்தை நொந்தபடியே வேகவேகமாகக் குளித்து முடித்து உலர்த்தியிருந்த மடிப்புடைவையை மடிசாராகக் கட்டிக்கொண்டு ஈரத்தலையை உதறி நுனி முடிந்துகொண்டு வந்தாள் ராதிகா.
அதற்குள் கீதாஞ்சலியும் குளித்துவிட்டு வந்து பர்வதத்துடன் இணைந்து வேலையைத் தொடங்கியிருந்தாள். ராகவன் தேங்காய் உடைத்துக்கொண்டிருக்க, டேபிள்டாப் கிரைண்டரில் தேங்காய் துருவும் ப்ளேடை இணைத்து தேங்காய்த் துருவிக்கொண்டிருந்தாள். “அம்மா, நான் என்ன பண்ணட்டும்?” என்று ராதிகா பர்வதத்திடம் கேட்க, “பரத் கறிகாய் நறுக்கிண்டு இருக்கான் பரு, இதும்மா, நீயும் போய் அவனுக்கு ஹெல்ப் பண்ணு,” என்று பரத்திடம் அனுப்பிவிட, அவனோ அவள் முன்னாள் வந்து நின்றதைக் கண்டுகொள்ளாமல் மும்முரமாய் காய் நறுக்கிக் கொண்டிருந்தான். ராதிகா அவனுடைய கவனத்தைக் கலைக்கும் வண்ணமாக வலது காலை லேசாகத் தட்டி கொலுசை ஒலிக்கச் செய்தாள். கொலுசொலி பரத்தின் கவனத்தைக் கலைத்தாலும் நிமிர்த்து பார்க்காமல் வேலையைச் செய்துகொண்டிருந்தவனைப் பார்க்கப் பார்க்கப் பற்றிக்கொண்டு வந்தது ராதிகாவிற்கு.
வேறு வழியில்லாமல், “அம்மா உங்களுக்கு ஹெல்ப் பண்ணச் சொன்னா,” என்று மென்று விழுங்கிக்கொண்டு கூறியவளை நிமிர்ந்து பார்த்து, தன்னை நோக்கி விரல் காட்டி, “என்னண்ட பேசிண்டு இருக்கியா?” என்று கேட்டான் பரத்.
ராதிகா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஆமாம் என்பதுபோல் தலையசைக்க, “என்ன வேணும் சொல்லு?’ என்று கேட்டான் பரத்.
“அம்மா காய் நறுக்கச் சொன்னா,” என்று பதிலளித்தவளைப் பார்த்து. “மொதல்ல உனக்கு காய் நறுக்கத் தெரியுமா?” என்று நக்கலாகக் கேட்க, அவனை நன்றாக முறைத்துவைத்தாள் ராதிகா. அதற்கும் அவன் சளைக்காமல் “’முறைக்கத் தெரியுமான்னு கேக்கலை, காய் நறுக்கத் தெரியுமான்னு கேட்டேன்?” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்க,
“காய் நறுக்கவும் தெரியும், கழுத்தை நறுக்கவும் தெரியும், வேணும்னா சொல்லுங்கோ நறுக்கிக் காட்டறேன்” என்று பல்லைக் கடித்துக்கொண்டு அவனுக்கு மட்டுமே கேட்கும்படியாக ராதிகா சிடுசிடுக்க, நமுட்டாகச் சிரித்துக்கொண்டிருந்தவன் இப்பொழுது சத்தமாகவே சிரித்துவிட்டான். அதைக் கேட்டு அனைவரின் கவனமும் அவர்களின் பக்கம் திரும்ப, ராதிகாவிற்கு சங்கடமாகிப் போனது.
“பரத், விளையாட்டை நிறுத்திட்டு வேலையைப் பாரு, நாழியாறது,” என்று பர்வதம் அதட்ட, “சரி சரி ஒக்காரு,” என்று ராதிகாவிற்கு தன் முன்னால் இருந்த இடத்தைச் சுட்டிக்காட்ட, ராதிகாவும் உட்கார்ந்துகொண்டாள். அவள் உட்கார்ந்த மறுநொடி, இஞ்சி நிறைந்திருந்த ஒரு கூடையைக் கொடுத்து, “இதைப் போய் நன்னா அலம்பிட்டு, வேற ஒரு கிண்ணத்துல ஜலத்துல போட்டு எடுத்துண்டு வா’” என்று அவளிடம் கொடுக்க, “இதை நின்னுண்டு இருக்கறச்சேயே குடுக்கறதுக்கென்ன?” என்று மீண்டும் முறைத்தாள் ராதிகா.
அதற்கும் அவளைப் பார்த்து புன்னகைத்தவன், “அம்மா, இந்த அசிஸ்டன்ட் சரியில்ல, சொல்ற வேலைய செய்ய மாட்டேங்கறா, நீ ஆளை மாத்து,” என்றான் அவளிடமிருந்து பார்வையை விலக்காமலேயே. அவன் அவ்வாறு கூறிய மாத்திரத்திலேயே அவன் கையிலிருந்த கூடையை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டவள், கோபமாகவே எழுந்து இஞ்சியை அலம்ப சிங்கிற்குப் போனாள் ராதிகா.
பரத்தின் மேலிருந்த கோபத்தையெல்லாம் காட்டி இஞ்சியைத் தேய்த்து தேய்த்து அலம்பியவள், அதை ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொண்டு அவன் முன் வந்து நின்றவள், “இன்னும் வேறென்ன பண்ணனும்,” என்று நின்றபடியே கேட்க, அவள் முன்னாள் ஒரு பெரிய கட்டு கறிவேப்பிலையைப் போட்டு, “உக்கார்ந்து இதை ஆஞ்சு குடு,” என்று கூற, “கறிவேப்பிலை ஆயரதுக்குதான இவ்ளோ பீடிகை?” என்று முணுமுணுத்தபடி கறிவேப்பிலையை உறுவத் தொடங்க, “பின்ன கழுத்தை நறுக்கறேன்னு சொல்றவா கிட்ட கத்தியை குடுத்துட்டு வேடிக்கை பார்க்க நான் என்ன முட்டாளா?” என்று அவளை நோக்கி புருவத்தை உயர்த்த, அவனுக்கு பதில் கூற முடியாமல் வாய்க்குள் முணுமுணுத்தபடியே, கோபமாகவே கறிவேப்பிலையை ஆயயத் தொடங்கினாள் ராதிகா.
கோபத்தில் சிவந்த மனைவியின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே பீன்சை நறுக்கிக் கொண்டிருந்த பரத்தின் இதழ்கள் தன்னிச்சையாக “பஞ்சுமிட்டாய்” என்று முணுமுணுத்தன...[/QUu