காதல் கடன்
(16)
மகன் மனம் கலங்கி அறையை விட்டு வெளியேறுவதை பர்வதம் கண்கலங்கிப் போய் பார்த்துக்கொண்டிருந்தார் என்றால், “குழந்தையா?” என்று கதிகலங்கி பரத் செல்வதையே வெறித்த கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதிகா...(16)
அதிர்ச்சி மேலிட ராதிகா மரகதத்தைப் பார்க்க, அவரோ நடந்த சம்பாஷணையைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல், சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பானுவைப் பார்த்தால், அவளும் சாதரணமாகவே பரிமாறிக்கொண்டிருந்தாள்.
குழந்தையைப் பற்றிய விஷயத்தைக் கேட்டு யாரும் பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை, “அப்படின்னா, இவாளுக்கெல்லாம், தெரியுமா, என்கிட்டக்க யாருமே எதுவுமே சொல்லலையே?” என்ற கேள்வி எழ, செய்வதறியாமல் மாமியாரைத் திரும்பிப் பார்க்க, அவரோ, கண்களில் தளும்பிய கண்ணீருடன் அப்படியே நின்றிருந்தார்.
மெதுவாக அவரிடம் சென்று நின்றுகொண்டு ராதிகா, அவருடைய கையைப் பிடித்துக்கொண்டாள். ராதிகாவின் தொடுகையில் தன்னிலை பெற்ற பர்வதம் மாமி, தயக்கமாகத் திரும்பி ராதிகாவின் கண்களைச் சந்தித்தார்.
அந்தத் தாயின் தவிப்பு ராதிகாவின் இதயம் தொட்டதோ என்னவோ, தன்னுடைய குழப்பங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, “கண்ணைத் துடைச்சுக்கொங்கோம்மா, எல்லாரும் பாக்கறா” என்றாள் மெல்லிய குரலில்.
ராதிகா கூறியதற்கு தலையை ஆட்டிய பர்வதம் மாமி, புடவை முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டபடி, “சுமங்கலிகள் எல்லாரும் சாப்பிட்டு முடிக்கப் போறா, நமஸ்காரம் பண்ணனும், துளசியைப் போயி பரத்தை அழைச்சுண்டு வரச்சொல்லு,” என்று கூறினார்.
“துளசி வேலையா இருக்காம்மா, நான் போய் அழைச்சுண்டு வரேன்,” என்று ராதிகா செல்ல முனைய, “வேண்டாம் ராதும்மா, அவன் சட்டுன்னு ஏதாவது சொல்லிட்டா, மனசுக்கு கஷ்டமா போயிடும் உனக்கு, நீ துளசியையே அனுப்பு,” என்று கூற, “என்னை ஏதாவது சொல்றா மாதிரிதானே துளசியையும் சொல்லுவார், அதுக்கு நானே போறேன்,” என்றபடி, அவருக்கு மேலும் பேச இடமளிக்காமல், பரத்தைத் தேடிக்கொண்டு கூடத்தை விட்டு வெளியேறினாள் ராதிகா.
வீடு முழுவதும் பரத்தை தேடியவள் கடைசியில் அவர்களுடைய அறையில், இரு கைகளாலும் தலையைத் தாங்கிய நிலையில் உட்கார்ந்திருந்தவனைக் கண்டாள். முகம் தெரியாவிட்டாலும் அவனுடைய தொய்ந்த தோள்களே பரத்தின் மனநிலையை உணர்த்த, அறை வாசலில் நின்றபடியே, “பேசறவா பேச்சுக்கெல்லாம் இப்பிடி தலைல கைய வெச்சுண்டு ஒக்காந்தா அப்பறம் உருப்படறது எப்படி?” என்று கேட்டவளின் குரல் கேட்டு முகத்தை இரண்டு கைகளாலும் அழுந்தத் துடைத்துக்கொண்டு தலை நிமிர்ந்து பார்த்தான் பரத்.
வாசலில் சாய்ந்தபடி நின்றுகொண்டு பரத்தையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதிகா. தன்னை சிறிது சுதாரித்துக்கொண்டு அவளுடைய கண்களைச் சந்தித்தவன், ராதிகா அறை வாசலிலேயே நின்றிருந்ததைக் கண்டு, “ஏன் அங்கேயே நிக்கற, உள்ள வா” என்றான் பரத்.
எப்பொழுதும் அவனுடைய பார்வையைச் சந்திக்க முடியாமல் தலையைக் குனிந்துகொள்பவள் இப்போது வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். “ம்ஹ்ம், கார்பெட் விழுப்பு, அம்மா உள்ள வரக்கூடாதுன்னு சொல்லிருக்கா”, என்று தலையை இடமும் வலமும் ஆட்டியபடி ஒற்றை விரலால் தரையைக் காட்டி ராதிகா கூற, ஏனோ இறுக்கம் தளர்ந்து லேசான சிரிப்பு வந்தது பரத்துக்கு.
“சரி, வரவேண்டாம், என்ன வேணும் சொல்லு?” என்று புன்னகையுடன் கேட்க, “வேறென்ன வேணும், நீங்கதான் வேணும்,” என்று சிறிதும் தயங்காமல், பார்வையையும் அவனிடமிருந்து அகற்றாமல் பதிலளித்த ராதிகாவின் பதிலில் திடுக்கிட்டவன்,
“வாட்?” என்று சற்று காட்டமாகவே கேட்க,
சற்றும் தயக்கமே இன்றி, “சுமங்கலிகள் சாப்பிட்டு முடிக்கப்போறா, அவாளுக்கு நமஸ்காரம் பண்ணி தாம்பூலம் குடுக்கணும், அம்மா உங்களை அழைச்சுண்டு வரச் சொன்னா,” என்று ராதிகா பதிலளித்தாள்.
ராதிகாவின் ‘நீங்கதான் வேணும்’ என்பதன் அர்த்தம் தான் நினைத்து போல் இல்லை என்று தெரிந்து லேசாக நிம்மதிப் பெருமூச்சு விட்ட பரத், “சரி நீ போ, நான் வரேன்,” என்று கூற,
இப்போதும் பரத்தின் கண்களை ஊடுருவிய தனது பார்வையை விலக்கவில்லை ராதிகா, வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்தபடி, மாட்டேன் என்பதுபோல் தலையசைக்க, அவளுடைய பார்வையின் ஆழத்தை சந்திக்கமுடியாமல் கண்களை விலக்கிக்கொள்ளும் முறை இப்போது பரத்துடையதாயிற்று.
ராதிகாவிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டவன், எழுந்து அவளுடன் செல்ல எத்தனிக்க, “முகமெல்லாம் களைச்சாப்ல தெரியறது பாருங்கோ, முகத்தை அலம்பிண்டு, நெத்திக்கி இட்டுண்டு வாங்கோ,” என்று பரத்தின் முகம் பார்த்து கவலையாகக் கூற, கண்ணாடியில் தன் முகம் பார்த்த பரத்திற்கும் ராதிகா கூறுவது சரியென்று படவே, முகத்தை அலம்பிக்கொண்டு, வேறு டிஷர்ட் மாற்றிக்கொண்டு வெளியில் வந்தான்.
வந்தவனின் தோற்றம் முன்பைவிட சிறிது பரவாயில்லாமல் இருப்பதுபோல் தோன்ற, பரத்தின் முகத்தைப் பார்த்தவள், தனக்குத் தானே தலையை ஆட்டிக்கொண்டு, “வாங்கோ, போகலாம்” என்றபடி படியிறங்கத் தொடங்கினாள்.
தனக்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டு தலையை ஆட்டியபடியே படியிறங்கிய ராதிகாவை விசித்திரமாகப் பார்த்தபடி அவனையும் அறியாமல் ராதிகா தலையாட்டியதைப் போலவே தலையை ஆட்டிக்கொண்டு புன்னகைத்தபடி பரத் மேலேயே நிற்க, சில படிகள் கீழே இறங்கி திரும்பிப் பார்த்த ராதிகா, “என்ன தனியா சிரிச்சுண்டு, தலையை ஆட்டிண்டே நின்னுண்டு இருக்கேள், யாராவது பார்த்தா தப்பா நெனைச்சுக்க போறா? சீக்கிரம் இறங்குங்கோ...” என்று கொஞ்சம் அதிகாரமாகவே கூற, “அதானே, தனியா சிரிச்சா லூசுன்னுன்னா சொல்லுவா, நீ பாட்டுக்க நின்னு தனியா சிரிச்சுண்டு இருக்கே, வேகமா வா, எல்லாரும் காத்துண்டு இருக்கா...” என்று சிரிப்புடன் கூறிக்கொண்டே மடமடவென்று படிகளில் இறங்கியபடி அவளை முந்திக்கொண்டு சென்றுவிட்டான் பரத்.
சில நிமிடங்களுக்கு முன்னால் மனமுடைந்து கண்கள் கலங்கி உட்கார்ந்திருந்தவனா இவன், கணப்பொழுதில் ஒருவரால் உணர்வுகளை இப்படி மாற்றிக்கொள்ள முடியுமா? என்ற வியப்பில் அப்படியே நின்றுவிட்டாள் ராதிகா.
“என்ன வரலையா?”என்று அவளைத் திரும்பிப் பார்க்காமலேயே பரத் குரல் கொடுத்தபடி கூடத்தை நோக்கி நடந்துகொண்டிருக்க, தலையை சிலுப்பி தன்னை சுதாரித்துக்கொண்டவள் ஓட்டமும் நடையுமாக பரத்தைப் பின்தொடர்ந்தாள்.
Last edited: