காதல் கடன்
(2)
இரவு மணி பத்து. ராதிகாவால் இன்னுமே நம்ப முடியவில்லை, உண்மையாகவே அவளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, தை மாதம் முதல் முகூர்த்தத்தில் திருமணம் என்றும் முடிவாகிவிட்டது. மாப்பிள்ளைக்கு ஒரு பிரேஸ்லெட்டும் மோதிரமும், பட்டு வேஷ்டி சட்டையும் வாங்கியிருந்தார் ஆடியபாதம். மாப்பிள்ளை வீட்டாருக்கு மிக்க மகிழ்ச்சி. ராதிகாவிற்கு செண்டிமெண்டாக, பச்சையில் அரக்கு பார்டர் போட்ட பட்டுப்புடவையும் அதற்கு மேட்சாக, பச்சைக்கல் பதித்த நெக்லஸ், வளையல், தோடு, மோதிரம் கொண்ட செட்டும் வாங்கி வந்திருந்தனர் மாப்பிள்ளை வீட்டார். அவளுடைய அம்மா அப்பாவிற்கும் தரையில் கால் பாவவில்லை. இத்தனை நாள் காத்திருப்பின் பலனாக மகள் ஒரு நல்ல குடும்பத்தில் வசதியான வாழ்க்கை வாழப்போகிறாள் என்று அகமகிழ்ந்து போயினர்.
பர்வதம் மாமி பெண் கேட்டு வந்த நாளிலிருந்து வீட்டில் இருந்துவந்த குழப்பநிலை நீங்கி ஒரு நிம்மதி உண்டாகியிருந்தது.
பத்து நாட்களுக்கு முன் காதிலும் மூக்கிலும் வைரங்கள் மின்ன, மடிசார் கட்டிய ஒரு மாமி வாசற்கதவைத் தட்டியது முதல் இன்றுவரை நடப்பவை எதையுமே யாராலுமே நம்ப முடியவில்லை.
“நமஸ்காரம், நான் பர்வத வர்த்தினி, என் பிள்ளைக்கு வரன் பார்த்துண்டிருக்கோம், உங்க பொண் ராதிகாவை கோவில்ல பார்த்தேன், விஜாரிச்சபோ, அவளுக்கும் கல்யாணத்துக்கு பார்த்துண்டு இருக்கறதா கேள்விப்பட்டேன், அதுதான் நேர்லயே பேசிடலாம்னு வந்தேன்.”
ஏற்றிவைத்த விளக்குபோன்ற பிரகாசமான முகமும், உடை நேர்த்தியுமாக, நளினமே வடிவாக நின்றிருந்த பார்வதா மாமியை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த மரகதம், அவர் கூறியதைக் கேட்டு அகமும் முகமும் மகிழ, “உள்ள வாங்கோ,” என்று வரவேற்று ஹாலில் இருந்த சோபாவில் உட்காரவைத்தார், “ஒரு நிமிஷம், அவரைக் கூப்பிடறேன்,” என்று உள்ளே சென்று கணவரை அவர்களைச் சந்திக்க அனுப்பிவிட்டு, வந்தவருக்கு குடிக்க தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார்.
அவசர அவசரமாக சட்டையை மாட்டிக்கொண்டு வந்த ஆடியபாதமும், “நான் ஆடியபாதம், ஸ்ரீமத் ஆண்டவர் சான்ஸ்கிரிட் காலேஜ்ல சம்ஸ்க்ருத ப்ரோபசரா இருக்கேன், இவ என்னோட பார்யாள், மரகதம், நீங்க வந்த விஷயம் பத்தி சொன்னா, எங்களைபத்தி எப்படி தெரிஞ்சுது,” என்றார்.
“நீங்க பேசிண்டு இருங்கோ, இதோ அரை நொடியில காஃபி கொண்டு வரேன்,” என்று செல்ல முற்பட்ட மரகதத்தை, பர்வதம் மாமி தடுத்து, “மொதல்ல நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன், நீங்களும் உக்காருங்கோ, காஃபியெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்,” என்றார்.
“என் பேரு பர்வதவர்த்தினி, இங்கே கும்பகோணம் அன்னபூரணி கேட்டரிங் கேள்விப்பட்டிருக்கேளா? எங்காத்து மாமாதான் அதை நடத்திண்டு வர்றார்.” என்றார். “எங்க பூர்வீகம் கும்பகோணம்தான், ஆனா இப்போ இருக்கறது சென்னையில. இன்னிக்கி காலம்பர ஸ்வாமி தரிசனம் பண்ண வந்தப்போ, உங்க மகளைப் பாத்தேன், குருக்களண்ட கேட்டப்போ விவரம் சொன்னார், அதுதான் நேர்லய பேசலாம்னு உங்களைப் பாக்க வந்தேன்,” என்றார்.
“எங்களுக்கு ரெண்டு பொண்ணு ரெண்டு பிள்ளைகள், பெரிய பையனுக்கும் பொண்ணுக்கும் கல்யாணம் ஆயிடுத்து, இப்போ இன்னொரு பிள்ளைக்குதான் உங்க பொண்ணை பார்க்கலாம்னு...”
“ரொம்ப சந்தோஷம், மாமி, பையன் என்ன பண்றார்?” என்று ஆடியபாதம் கேட்க, தான் கைப்பையைத் திறந்து அதிலிருந்து தன் மகனின் புகைப்படத்தை எடுத்து கொடுத்தார். அவர் போட்டோவை வாங்கி ஒரு முறை பார்த்துவிட்டு, மனைவியிடம் தர, அம்மையார் முகத்தில் ஆயிரம் வாட்ச் வெளிச்சம், தனக்குத் தானே மெலிதாய் தலையாட்டிக்கொண்டார்.
“இவன்தான் என்னோட ரெண்டாவது பையன், பேரு பரத்வாஜ், முப்பத்திரெண்டு வயசாறது, எம்பிஏ ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மெண்ட் படிச்சிருக்கான், வெறும் கேட்டரிங் பிஸினஸ் மட்டும் பண்ணிண்டு இருந்த அப்பாவை சம்மதிக்க வெச்சு, என் பெரிய பொண்ணு நந்தினியோட ஆத்துக்காரரோட சேர்ந்து ஒரு ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரண்ட் செயின் ஒண்ணு ஆரம்பிச்சிருக்கான், அன்னம் பிரம்மான்னு கேள்விப்பட்டிருப்பேளே, அதுதான், போன அஞ்சு வருஷத்துல இந்தியால எட்டு பிரான்ச், பாரீன்ல நாலு பிராஞ்ச்னு நல்லபடியா நடந்துண்டு இருக்கு, இப்போ ரெண்டு வருஷமா ஈவண்ட் மேனேஜ்மெண்டுன்னு ஏதோ பிஸினஸ் ஆரம்பிச்சு பண்ணிண்டு இருக்கான்.” மகிழ்ச்சியாக மகனின் பெருமைகளை சொல்லிக்கொண்டிருந்த மாமி திடீரென சோகமாகி விட்டார்.
“ஆனா அவன் துரதிர்ஷ்டம் பாருங்கோ, அவனுடைய முதல் மனைவி கல்யாணமாகி மூணு வருஷத்திலேயே தவறி போயிட்டா, இது அவனுக்கு ரெண்டாவது கல்யாணம்.” என்று அவர் கூறிய மாத்திரத்தில் போட்டோவைப் பார்த்து மகிழ்ந்து போயிருந்த மரகதத்தின் முகம் சிறுத்துப் போனது, சட்டென்று எழுந்துவிட்டார்,
“இதோ பாருங்கோ மாமி, என் பொண்ணுக்கு இருபத்தியாறு வயசு ஆகியிருக்கலாம், ஒரு சில வரன் தட்டிப் போயிருக்கலாம், ஆனா ரெண்டாம் தாராமா கல்யாணம் பண்ணி குடுக்கற அளவுக்கு ஒண்ணும் கொறைஞ்சு போயிடல, தோஷமில்லாத சுத்த ஜாதகம் அவளோடது, நாங்களும் ஒண்ணும் பஞ்சப்பட்டவா கிடையாது, எங்க கொழந்தைக்கு சீறும் சிறப்புமா கல்யாணம் செஞ்சுவைக்க எல்லா வசதியும் இருக்கறவாதான், எம்ஃபில் படிச்சிருக்கா, காலேஜ்ல இங்கிலீஷ் ப்ரோபசர், கை நெறைய சம்பாதிக்கரா, உங்க பிள்ளையாண்டானுக்கு ரெண்டாம் தாராமா குடுப்போம்னு நீங்க எப்படி நெனைச்சு வந்தேள்,” கொதித்துவிட்டாள் மரகதம்.
“மரகதம், நீ பேசாம ஓக்காரு,” என்று மனைவியை கையமர்த்திவிட்டு, “நீங்க சொல்றதப் பாத்தா, பெரிய இடமாட்டம் தெரியறேள், உங்க அந்தஸ்துக்கு பெரிய இடத்து பொண்களையே பாக்கலாம், ஆனா எங்களைப் போல மிடில் கிளாச தேடி வந்திருக்கேள்னா, உங்க பையனுக்கு ரெண்டாவது கல்யாணம்ங்கறதனாலயா?” என்று கேட்டார், ஆடியபாதம்.
“உங்க ஆத்து மாமியோட கோபம் ரொம்ப நியாயமானது மாமா, ஆனா, இந்த பெரிய இடம், பணம் அந்தஸ்து எல்லாமே எங்களுக்கு இப்போ கொஞ்ச நாள்ல வந்ததுதான், அதுக்கு முன்னால நாங்களும் மிடில் கிளாஸ்தான், பகவான தரிசனம் பண்ண வந்த இடத்துல யதேச்சையா உங்க பொண்ணைப் பாத்தேன், என்னவோ மனசுக்கு ரொம்ப பிடிச்சு போயிடுத்து, நான் நீங்க சொல்றா மாதிரி எந்தவொரு உள்நோக்கமும் இல்லாமல்தான் இங்க வந்தேன், இன்னும் சொல்லப்போனா, ஸ்ரீரங்கம் வர்றச்ச என் பையனுக்கு வரன் பாக்கற எண்ணமே எனக்கு இல்லை, அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு ரங்கமன்னார்கிட்டக்க வேண்டிக்கத்தான் வந்தேன், வேண்டிண்டு திரும்பினா, தட்டு நெறைய பூவோட உங்க பொண்ணு எதிர்ல நிக்கறா, மனசு அப்படியே பூரிச்சு போயிடுத்து, மத்தபடி ரெண்டாங்கல்யாணம் அப்படிங்கறதால மிடில் கிளாஸ் பொண்ணு வேணுங்கற மாதிரியான எந்த எண்ணமும் நேக்கு இல்லை, இன்னும் சொல்லப்போனா நான் இன்னிக்கி இங்க வந்திருக்கறதகூட நான் யார்கிட்டயும் சொல்லலை, கோவில்ல இருந்து நேரா இங்கதான் வரேன், உங்களோட பதிலைக் கேட்டுட்டுதான் எங்காத்துலயும் நான் பேசணும்” என்றார் பர்வதம் மாமி தன்மையாக.
“ஆகட்டும் மாமி, இது ஒரு பெரிய முடிவு, அதுவும் இத நான் மட்டும் முடிவு பண்ண முடியாது, எங்க ஆத்துல எல்லார்கிட்டயும், குறிப்பா ராதிகா கிட்டயும் இதக் கலந்து பேசித்தான் உங்களுக்கு என்னால பதில் சொல்ல முடியும், எனக்கு சித்த டைம் குடுங்கோ,” என்றார்.
“வாஸ்தவம்தான், மாமா, நீங்க நன்னா யோசிச்சே பதில் சொல்லுங்கோ. இதுதான் என்னோட மொபைல் நம்பர்.” என்று தனது மொபைல் எண்ணைக் கொடுத்துவிட்டு பர்வதம் மாமி கிளம்பிவிட்டார்.