சென்ற எபிசோடுக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றி. உங்களுக்காக காதல் கடன் - 22 இதோ...
காதல் கடன்
காதல் கடன்
(22)
பச்சை மாமலைபோல் மேனி* பவளவாய் கமலச் செங்கண்*
அச்சுதா! அமரர் ஏறே!* ஆயர் தம் கொழுந்தே! என்னும்,*
இச்சுவை தவிர யான்போய்* இந்திர லோகம் ஆளும்,*
அச்சுவை பெறினும் வேண்டேன்* அரங்கமா நகர் உளானே!
வேத நூல் பிராயம் நூறு* மனிசர் தாம் புகுவ ரேலும்,*
பாதியும் உறங்கிப் போகும்* நின்றதில் பதினையாண்டு,*
பேதை பாலகனதாகும்* பிணி பசி மூப்புத் துன்பம், *
ஆதலால் பிறவி வேண்டேன் * அரங்கமா நகர் உளானே.*
காவலில் புலனை வைத்துக்* கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து,*
நாவலிட்டு உழி தருகின்றோம்* நமன் தமர் தலைகள் மீதே,*
மூவுலகு உண்டு உமிழ்ந்த* முதல்வ நின் நாமம் கற்ற,*
ஆவலிப் புடைமை கண்டாய்* அரங்கமா நகர் உளானே.
ஊரிலேன் காணி யில்லை * உறவுமற் றொருவ ரில்லை,*
பாரில்நின் பாத மூலம்* பற்றிலேன் பரம மூர்த்தி,*
காரொளி வண்ண னே!(என்)* கண்ணனே! கதறு கின்றேன்,*
ஆருளர்க் களைக ணம்மா!* அரங்கமா நகரு ளானே!
பேரழகி ஆண்டாள்...பெருமானை, அரங்கனை மணாளனாக அடைவதற்கே பிறவி எடுத்தவள். அவளுடைய தீராக் காதலை தடுத்தாட்கொண்டு தன் மனையாளாக்கிக் கொண்டார் அரங்கன். அதனால்தானோ என்னவோ, அரங்கனின் துயில் களைவதே ஆண்டாளின் முக தரிசனத்தோடுதான்.
அன்னநடை பயின்று, அரங்கனின் திருமஞ்சனத்திற்காக வெள்ளிக்குடத்தில் தீர்த்தம் தாங்கி, ஒய்யாரமாக நடந்துவரும் ஆண்டாளின் அழகைக் காணக் கண்கோடி வேண்டும். நெற்றியில் தீர்க்கமாய் ஒரு பெரிய நாமத்துடன், நெற்றிச்சுட்டி அணிந்து, கிணிகிணியென மங்கல மணியிசைக்க ஆண்டாள் மெல்ல மெல்ல ஆடியசைந்து நடந்துவரும் இந்தக் காட்சி பூலோக வைகுண்டமாகிய திருவரங்கத்தில் தினசரி அதிகாலையில் நிகழும் தெய்வீகக் காட்சி.
பட்டர் வெண்சாமரம் வீச, மத்தளம் முழங்க, நாதஸ்வரம் இசைக்க, பக்தர்கள் ஊர்வலாமாகப் பின்தொடர, மாடவீதிகளின் வழியாக கொள்ளிடத்தில் இருந்து வெள்ளிக்குடத்தில் அபிஷேகத்திற்காக தீர்த்தம் கொண்டுவருவாள் திருவரங்கனின் ஆஸ்தான யானை ஆண்டாள்.
அரங்கனைக் காண உலகாளும் அரசனே வந்தாலும், நம்பெருமாளின் விழிக்கமலம் மலர்வதோ பேரழகி ஆண்டாளையும், கோமாதா மஹாலக்ஷ்மியையும், பரியழகன் ஆடல்மாவளவனையும் காண்பதற்கே. காதுகளுக்கு இனிமையாய் வீணை இசை ஒலிக்க கனவு போல் நிகழும் அரங்கனின் திருப்பள்ளியெழுச்சி, வாழ்நாள் முழுவதற்கும் மனதில் செதுக்கி வைத்த சிற்பம்போல் நீங்காமல் நிறைந்துவிடுவது திண்ணமே.
இப்படியானதொரு திவ்யமான ஒரு காட்சியை தனது மனத்திலும், ஆன்மாவிலும் நிரப்பிக்கொண்டு மெய் மறந்து நின்றிருந்தான் பரத். அவனருகில் நின்றிருந்த ராதிகா தனது தெள்ளமுதத் தேன் குரலில் பாசுரம் பாடிக்கொண்டிருக்க, புதுத்திரி போட்டு, ஜகஜ்ஜோதியாய் வெளிச்சம் பரப்பிய விளக்குகளின் மத்தியில், விஸ்ராந்தியாய் பள்ளி கொண்டிருந்த பெருமாள், தன் முன் குழுமியிருந்த பக்தர்களுக்கு கடாக்ஷம் செய்தருளினார்.
அதன் பின் தொடர்ந்த நம்பெருமாளின் திருமஞ்சனமும், உதயகால தீபாராதனையும் அதைத் தொடர்ந்த பஞ்சாங்கப் படனமும், காணக்கிடைக்காத வைபோஹமாக நெஞ்சம் நிறைத்தது.
நம்பெருமாளின் அலங்காரத்திற்காகவும், நித்யப்படி கைங்கர்யங்களுக்காகவும் திரை போடப்பட, ரங்க நாச்சியாரை தரிசனம் செய்துவிட்டு வரலாமென்று புறப்பட்டனர் ராதிகாவும் பரத்தும். அரங்கனின் மனையாட்டி அவனுக்கு முன்பே தயாராகி வீற்றிருந்தாள். காதுகள் இரண்டிலும் ஏழுகல்பதித்த வைரத்தோடு, அதைத் தூக்கிப்பிடிக்கும் இரட்டை வட வைர மாட்டல்கள், மூக்கின் இருமருங்கிலும் மிளிர்ந்த வைரமூக்குத்திகள், அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாகத் தொங்கிய புல்லாக்கின் பிராகசத்தில், பச்சைப்பட்டுடுத்தி, வைரமணிக் கிரீடம் அணிந்து, திருமாங்கல்யம், பதக்கம், சங்கிலி, முத்துமாலை, பவளமாலை, நவரத்ன ஹாரம் தரித்து, அபயஹஸ்தம் அருளி, கருணையே உருவாக வீற்றிருந்தாள் ரங்கவல்லி நாச்சியார்.
பலமுறை திருவரங்கம் வந்து தரிசனம் செய்திருந்தாலும், இந்த அதிகாலை விஸ்வரூப தரிசனம் பரத்திற்கு ஒரு புதிய அனுபவமே. உச்சரிக்கும் ஒரு சிறிய வார்த்தையும் கூட அந்த தெய்வீகமான உணர்வைக் கலைத்துவிடும் என்று உணர்ந்ததாலோ என்னவோ, இருவரும் மௌனமாகவே பிரகாரத்தைச் சுற்றி வந்தனர். ராதிகாவிடம் முன்பெப்பொழுதும் கண்டிராத ஒரு அமைதி தென்பட்டது. ஏதோ ஒரு திருப்தியான அனுபவத்தைக் கண்டதுபோன்ற நிறைவான புன்னகை. அருகில் பரத் நடந்து வருவதையும் உணராமல் வேறேதோ ஒரு உலகில் சஞ்சரிப்பது போன்ற ஒரு சாயல் அவள் முகத்தில்.
அவளுடைய அந்த அமைதியைக் குலைக்க விரும்பாமல் பரத்தும் அவளுடன் அமைதியாகவே நடந்துவந்தான். விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில், அரங்கபுரியின் அந்த விஸ்தாரமான பிரகாரத்தில், மெல்லிய தென்றல் தழுவிச்செல்ல, இருவருக்கும் இடையிலிருந்த வார்த்தைகளற்ற மௌனம் கூட சுகமாகவே இருந்தது.
அவர்கள் அரங்கனின் சந்நிதியை வந்தடைந்தபொழுது திரை விலக்கப்பட்டு அரங்கன் சர்வாலங்கார பூஷிதனாக பக்தர்களுக்கு அனுக்ரஹம் புரியத் தொடங்கியிருந்தார். ஆதிசேஷனை மெத்தையாக்கிக் கொண்டு, இடது கையை நன்கு இடுப்புக்குக் கீழே நீட்டியபடியும், வலது கையை தலைக்கு அணைவாக தலையணையாகவும் தாங்கி, சிவப்புக் கரையிட்ட வெண்பட்டு உடுத்தி, மார்பில் பொன்கவசம் தரித்து, சேஷ சயனப் பெருமானாகக் காட்சியளித்தார் ரங்கநாதசுவாமி. பரத்தையும் ராதிகாவையும் சன்னிதானத்தின் அருகில் நிற்கவைத்து, ரங்கநாதருக்கு சாத்தியிருந்த மாலையை அணியச்செய்து, சடாரி வைத்து ஆசீர்வாதம் செய்யப்பட்டது.
கோவிலை விட்டு வெளியில் வந்தவர்கள் பத்மா காபியில் சூடாய் ஸ்ட்ராங்காய் ஒரு காபியைக் குடித்துவிட்டு வீடு திரும்பினர். மரகதம் மாமி காலை உணவுடன் தயாராகக் காத்திருந்தார். காலை உணவை முடித்துக்கொண்டு அனைவரும் திருச்சிக்கு அருகிலுள்ள சுற்றுலாத்தலங்களுக்கு ஒரு குட்டி பிக்னிக் சென்றுவர முடிவு செய்து கிளம்பினார்கள். நாளும் உல்லாசமாகவே கழிந்தது.
இன்முகமாகப் பழகிய மாப்பிள்ளையாக, பரத், மரகதம் மற்றும் ஆடியபாதத்தின் மனத்தைக் கவர்ந்துவிட்டிருந்தான். பானுவும் சீனுவும் அத்திம்பேருக்கு ஒரு ஃபேன் க்ளப் திறக்கவே ஆயத்தமாகிவிட்டார்கள். இரவு வீடு திரும்பிய அனைவரையும் ஒரு மகிழ்ச்சியான சோர்வு ஆட்கொண்டிருந்தது.
அனைவரும் உறங்குவதற்கான ஆயத்தத்தை மேற்கொள்ளத் தொடங்க, “நாங்க நாளைக்கு ஊருக்குக் கிளம்பறோம், மாமா” என்றான் பரத். “என்ன மாப்பிள்ளை, நேத்திக்கு தானே வந்தேள், இன்னும் ரெண்டுநாள் எங்களோட இருந்துட்டு போலாமே?” என்றார் மரகதம். “இல்லை மாமி, கல்யாண கலாட்டால, நான் ஆபீசுக்கு போயி பதினைஞ்சு நாளுக்கு மேல ஆயிடுத்து, நாளைக்கி கிளம்பி போனாதான், திங்கக்கிழமைல இருந்து நான் ஆபீசுக்குப் போக சரியா இருக்கும், அப்பறம் தோதுப்படரச்சே இன்னொரு தரம் நாங்க வரோம்,” என்று பரத் கூற, “நீயாவது சொல்லேன் ராதும்மா” என்று ராதிகாவை ஏக்கத்துடன் பார்த்தார் மரகதம். “இல்லைம்மா, அவர் சொல்றது சரிதான். ஏகப்பட்ட வேலை அவருக்கு, நாங்க இன்னொரு வாட்டி இன்னும் கொஞ்சநாள் அதிகமாவே இருக்கறா மாதிரி வரோம்,” என்றாள் ராதிகா பரத்தை வழிமொழிந்து.
“சரி ஆகட்டும் மரகதம், மாப்பிள்ளை அவரோட வேலைகளுக்கு மத்தியில நம்மளோட வந்து ரெண்டுநாள் இருந்ததே ரொம்ப சந்தோஷமான விஷயம்தான். நீ மேல மேல அவரை சங்கடப் படுத்தாதே,” என்று மனைவியை சமாதானம் செய்தவர், “நாளைக்கு மத்தியானம் சாப்பிட்டுட்டு கிளம்பலாமே மாப்பிள்ளை, உங்களோட இன்னும் கொஞ்ச நாழி அதிகமா செலவு பண்ணின திருப்தி எங்களுக்கும் இருக்குமே?” என்றார் ஆடியபாதம்.
“உங்களுக்கு எதுக்கு மாமா, வீண் சிரமம்...”என்று ஏதோ சொல்லத் தொடங்கியவன் ராதிகாவின் முகத்தைப் பார்க்க, அவள் முகத்தில் தோன்றிய ஏதோ ஒன்று அவனை, “சரி மாமா, உங்களோட திருப்திக்காக நாங்க நாளைக்கு மதியானம் சாப்பிட்டுட்டே கிளம்பறோம்,” என்று முடித்துக்கொண்டான்.
மீண்டும் மாடியறை, மீண்டும் அவளுடனான தனிமை. இந்தத் தனிமையை நான் விரும்புகிறேனா, தன்னிடம் தானே கேள்வி எழுப்பிக்கொண்டான் பரத். கேள்விக்கான பதில் தனக்குப் பிடித்தமானதாக இருக்காது என்பதாலோ அல்லது அதை எதிர்கொள்ளும் துணிவு இல்லாததாலோ, அதற்கு பதிலளிக்க முயலவில்லை அவன். அவள் அருகில் இருப்பதாலோ என்னவோ, சூழல் ரம்யமாக இருப்பதாகத் தோன்றியது அவனுக்கு. லேப்டாப்பில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தவன், அப்படியே சுவற்றில் தலை சாய்த்து கண் மூடி அமர்ந்துகொண்டான். தனக்குத்தானே ஏதோ பாடலை முணுமுணுத்தபடி மதில் சுவற்றின் மீது சாய்ந்தபடி ராஜகோபுரத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் ராதிகா.
“நான் நாளைக்கு கார்த்தலாயும் அப்பாவோட கோவிலுக்குப் போயிட்டு வரட்டுமா?” கோபுரத்தை வேடிக்கை பார்ப்பதை விடுத்து அவனுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் இப்போது.
“இதுல கேக்கறதுக்கு என்ன இருக்கு, தாராளமா போயிட்டு வா...” என்றவனிடம், “நீங்களும் வரேளா?” என்றாள். “இல்லை பரவால்ல, நீ போயிட்டு வா,” என்றவன், “எல்லாத்துக்கும் என்கிட்டக்க பர்மிஷன் கேட்டுண்டு இருக்க வேண்டாம், இன்பர்மேஷன் குடுத்தா போறும், நீ என்ன அடிமை சாசனமா எழுதிக் குடுத்துருக்க,கல்யாணம் தானே பண்ணிண்டு இருக்க...” என்றான்.
அவனையே ஆச்சரியமாக விழிவிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதிகா. “என்ன அப்படி பார்க்கறே?”
“இல்லை, நீங்க இப்பிடி சொல்றது ஆச்சரியமா இருக்கு, எங்க அம்மால்லாம் அப்பாகிட்ட கேட்காம எங்கேயுமே போனதே கிடையாது, தெரியுமா? அப்பாக்கிட்ட கேட்டு அப்பா சரின்னு சொன்னாதான் அம்மா எங்கயுமே போவா” என்றாள் ராதிகா.
“நீ சரியா கவனிச்சிருக்க மாட்டே, அம்மா கேக்கறாளா சொல்றாளான்னு, எனிவேஸ், நீ…சொல்லிண்டு போனா போறும், கேட்டுண்டு போகவேண்டிய அவசியமில்லை,” என்று கூறிவிட்டு மீண்டும் வேலையில் ஆழ்ந்தான்.
ராதிகாவும் மறுபடியும் கோபுரத்தைப் பார்த்தபடி, காலால் தாளம் தட்டிக்கொண்டு ஏதோவொரு பாடலை முணுமுணுக்கத் தொடங்கினாள். பரத் தனது வேலையை முடிக்கும்வரை அவனுக்குத் துணையாக ராதிகாவும் அவனுடன் இருந்தாள். வார்த்தைகள் தேவையில்லாத இயல்பான மௌனம், உறுத்தலாகத் தோன்றாத அருகாமை. இரவு இனிமையாகத்தான் இருந்தது இருவருக்கும்.
Last edited: