காதல் கடன்
(5)
அங்கே...ஒரு 75 இன்ச் டிவி சைசில் ஒரு பெண்ணின் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. மடிசார் உடுத்தியிருந்த அந்தப் பெண் தன் வலதுகை ஆள்காட்டி விரலை வாயில் வைத்து வெட்கப்படும் பாவனையோடு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தாள். கண்களில் குறும்பும் விளையாட்டும் நிரம்பியிருந்த அந்தப் பெண்ணின் புகைப்படத்தைக் காட்டி, துளசி, “இவாதான் லக்ஷ்மி மன்னி, பரத் அண்ணாவோட வைஃப்” என்றாள் பரிதாபமாக.
அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்பொழுது, அது இறந்தவர்களின் நினைவாக, நினைவுச்சின்னமாக வைக்கப்பட்ட புகைப்படம் போலத் தெரியவில்லை, அதற்கு பொட்டு வைத்து மாலையும் அணிவிக்கப்பட்டிருக்கவில்லை, மனதில் இருக்கும் பிம்பத்தை நினைத்தபோதெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில், ஆசையாய் ஆவலாய் நிர்மாணிக்கப்பட்ட காதல் சின்னமாய் காட்சியளித்தது அது. புகைப்படத்தை எடுத்தவரின் ரசனையான பார்வை அதில் நிதர்சனமாகத் தெரிந்தது. மிகவும் காதலோடும் அன்போடும் எடுக்கப்பட்ட புகைப்படம் அது என்று ஒரே பார்வையிலேயே பட்டவர்த்தனமாய்த் தெரிந்தது. போஸ் கொடுத்திருந்த லக்ஷ்மியும் கேமராவைப் பார்த்து வெட்கப்பட்டார் போல் தெரியவில்லை, புகைப்படம் எடுத்தவரைப் பார்த்து பார்வையால் காதல் கணை தொடுப்பது போல் மிகவும் ரசனையுடன் எடுக்கப்பட்டிருந்தது.
“அவள் மனைவி என்றால், அப்போ நான் யாரு?” என்று நா நுனி வரை வந்த கேள்வியைக் கேட்காமல் ராதிகா தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொண்டாள். இந்தக் கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய ஆள் துளசி அல்ல என்பதால். ஆனால் மனதில் தோன்றிய சந்தோசம் முழுவதும் ஒரு நொடியில் காற்றில் கலைந்த பனிபோல சட்டென்று விலகி விட்டது. உரிமையாக நின்றுகொடிருந்த அறையில் இப்போது ஒரு பார்வையாளராக நிற்பதைப் போன்ற உணர்வு தோன்றியது. தன்னுடையது என்று நினைத்த இடத்தில், இப்போது வேறு ஒருவரின் மிக அந்தரங்கமான நொடிக்குள் அனுமதி இன்றி நுழைந்தது போல சங்கடமாக இருந்தது ராதிகாவிற்கு. திடீரென்று மூச்சு முட்டுவதைப் போல் இருக்க, “கீழே போலாமா, துளசி, நம்மளை தேடப்போறா,” என்று கூறிவிட்டு அவள் வருவதற்குக் கூட காத்திருக்காமல், வேகமாக அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.
அறைக்கு வெளியே வந்து சுவரில் சாய்ந்து நின்று பிடித்திருந்த மூச்சை மெதுவாக வெளியே விட்டாள், “ஒருவேளை, அம்மா சொன்ன நிழல் இதுதானோ? ஆனா இது பார்த்தா நிழலாட்டமா தெரியலியே, நிஜம் போலன்னா இருக்கு, என்ன உயிரோட்டமா இருக்கு அந்த போட்டோ,” என்ற மனதின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மாடியிலிருந்து இறங்கினாள் ராதிகா.
சம்பந்தியுடன் பேசியதில் சிறிது மனம் நிம்மதி அடைந்திருந்த மரகதம் சோர்வு மேலிட,சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று அமர்ந்து கொண்டு, தன் மகளுக்கு ஒரு அருமையான வாழ்க்கை அமைந்திருக்கிறது என்று நினைத்து தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டிருந்தார். அவரின் புன்னகையைப் பார்த்தபடியே உள்ளே வந்த சுந்தரி, “என்ன மரகதம், ஒரே பூரிப்புல இருக்கறியா, எப்படியோ ராதிகாவை கரையேத்தியாச்சு, இப்போ உன்னோட கவலை எல்லாம் கொறைஞ்சுடுத்து இல்லையா?” என்று கேட்டபடியே எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
“நீங்க சொல்றது வாஸ்தவம்தான் மன்னி, இந்த நாலு வருஷத்துல, ஒவ்வொரு தடவையும் ராதுவை அலங்காரம் பண்ணி ஒவ்வொரு பையன் வீட்டுக்காரா முன்னாடியும் கொண்டு நிறுத்தறச்சே, எனக்கு எவ்வளவு வேதனையா இருக்கும் தெரியுமா, பகவானே, என் பொண்ணு என்ன பாவம் பண்ணினா, இப்படி பொம்மையாட்டம் ஒவ்வொருத்தரோட அபிப்ராயத்துக்காகவும், அவளை இப்படி காட்சிப் பொருளாக்கறியே, ஒவ்வொரு தடவையும் அவளோட எதிர்பார்ப்பை எல்லாம் சுக்கு நூறா ஒடைச்சு, என் பொண்ணை இப்படி புண்படுத்தறியேன்னு, நான் அந்த பெருமாளோட நான் சண்டை போடாத நாளில்லை, ஆனா மன்னி, நாளாக ஆக அவ முகத்துலையும் ஒரு வெறுமை வந்துடுத்து, கடனேன்னுதான் வந்து நிப்பா. இவனும் வேண்டாம்னு சொல்லிடுவான் அப்படிங்கற முடிவோடவே அவ இருக்கறாப்ல இருக்கும். ஆத்துல பாக்கறச்சே பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போவா, ஆனா அதுக்கப்பறம், கிணத்துல போட்ட கல்லாட்டம் எந்த பதிலுமே வராது, நாமளே போன் பண்ணி விசாரிச்சா, ஏதாவது நொண்டி சாக்கு சொல்லி தட்டிக் கழிச்சுடுவா.” என்று கூறக் கூற அவர் கண்களில் இருந்து கண்ணீர் கட்டுப்பாடின்றி பெருகியபடி இருந்தது.
அந்தக் கண்ணீரை வேகமாகக் துடைத்துக் கொண்டவர், “இப்படி ஒரு நல்ல வாழ்க்கை ராதுக்கு அமையணும்னுதான், பகவான் அவளை அவ்வளவு சோதிச்சாரோன்னு, நேக்கு இப்போ தோணறது மன்னி, அவ பட்ட மனக் கஷ்டத்துக்குதான், அவளுக்கு மணியாட்டம் ஒரு புக்காம் அமைஞ்சிருக்கு, என் குழந்தை அவளோட நல்ல குணத்துக்கும், பண்புக்கும் இந்த ஆத்துல சுகமா இருப்பான்னு தோணறது” என்று மகிழ்ச்சியாகக் கூறினார்.
“ஆமாம்டியம்மா, அவ எந்த ஜன்மத்து புண்ணியமோ, நல்லபடியா வாழ்க்கை அமைஞ்சுடுத்து, உனக்கும் ஒரு கவலை விட்டுது போ,” என்றார் சுந்தரி அத்தை.
“நிஜம்தான் மன்னி, ஒரு சில சமயத்துல, இந்த பொண்ணு இப்படியே கல்யாணமே ஆகாம தனக்கே பாரமா நின்னு போயிடுவாளோன்னு கூட தோணிடுத்து, அப்போல்லாம் எனக்கு நிம்மதியா தூக்கம் கூட வராது. அந்தந்த வயசுல நடக்கவேண்டியது நடந்தாத்தானே அவளுக்கும் நிம்மதி, நமக்கும் நிம்மதி, இவளுக்கப்பறம் இன்னும் ரெண்டுபேர் இருக்காளே, அவாளையும் நான் கடைத்தேத்த வேண்டாமா? ஆனா எல்லாம் நல்லபடியா நடந்து, இவளுக்கும் ஒரு வாழ்க்கை அமைஞ்சுடுத்து, எப்படியோ அவ நிம்மதியா இருந்தா சரி...” என்று கூறிக்கொண்டிருக்கையில்...
பரத்தின் அறையை விட்டு வெளியேறிய ராதிகாவுக்கு ஏனோ உடனே அம்மாவைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது, அம்மா மடியில் சிறிது நேரம் தலை வைத்துப் படுத்துக்கொண்டால் ஆறுதலாக இருக்கும் என்று எண்ணி மரகதம் இருந்த அறையின் கதவருகில் வந்தவள், அத்தையும் அம்மாவும் பேசியவற்றை அரைகுறையாகக் கேட்க நேரிட்டது. ஏற்கனவே பரத்தின் அறையில் அவனுடைய முதல் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்து குழம்பியிருந்த அவள் மனதிற்கு, அவளை பாரம் என்று கூறிய அம்மாவின் பேச்சும் வெந்த புண்ணில் வேலாய்ப் பாய, செய்வதறியாது திகைத்து நின்றாள். ஒரே கணத்தில் தவிப்பும் தனிமையும் அவளைச் சூழ்ந்து கொண்டன. அம்மாவின் அறைக்குள் செல்லாமல், திரும்பி ஹாலுக்குச் சென்று முற்றத்துப் படிகளில் அமர்ந்துகொண்டாள்.