காதல் கடன்
(8)
(8)
அத்திம்பேரிடம் பேசி லேசாகத் தெளிந்திருந்த மனம் ராதிகாவின் நடவடிக்கையால் மறுபடியும் குழம்பிப் போனது. “சரிதானே, அம்மாவும், நந்துக்காவுமே நான் சொல்லறதை காது குடுத்துக் கேக்க தயாரா இல்லை, இன்னிக்கி வந்த பொண்ணு கேக்கணும்னு நான் எதிர்பார்த்தது என்னோட தப்புதான்...ஆனாலும் இத நான் எதிர்பார்க்கவே இல்லையே...ஒண்ணு என்னோட சட்டையப் பிடிச்சு ஏன்டா என்னோட வாழ்க்கைய கெடுத்தேன்னு கேட்டிருக்கணும், இல்லைன்னா மனசு வருத்தப்பட்டு அழவாவது அழுதிருக்கணும், ரெண்டும் இல்லாம, யாரோ சொந்தக்காரா ஆத்துக்கு கெஸ்டா போனாமாதிரி எங்க தூங்கறதுன்னு கேட்டு படுத்துண்டு தூங்கியே போயிட்டாளே...பொறத்தியார் ஆத்துல, முன்ன பின்ன தெரியாத ஆம்பளையோட ஒரே ரூம்ல இருக்கோமேங்கற பயம் கூட இல்லையா இவளுக்கு?” என்று ஏகத்துக்கும் குழம்பிக்கொண்டிருந்தான் பரத்.
“இந்த சீரியல்ல, சினிமால எல்லாம் காட்டறா மாதிரி, ஆத்துக்காரன் சேர்ந்து வாழமாட்டேன்னு சொல்லிட்டா தரையில போர்வைய விரிச்சுண்டு படுத்துண்டு தூங்குவாளே, இந்த ஹீரோயின் எல்லாம், அது மாதிரி எல்லாம் பண்ணாம, என்னோட ரூம்ல இருந்து என்னையே வெளியே தொரத்திட்டு, என்னோட பெட்ல நிம்மதியா தூங்கறா...இப்போ நான் என்ன பண்ண?” என்று யோசித்தவனுக்கு, தன்னுடைய அறையாகவே இருந்தாலும், உள்ளே செல்லத் தயக்கமாக இருந்தது. செய்வதறியாது, அத்திம்பேருக்கு போன் போட்டான்.
இரண்டு நாட்களாய் திருமண வேலைகளைப் பார்த்த அசதியிலும், பரத் செய்த டென்ஷன் காரணமாகவும் தூங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த நந்தினியை மார்பில் சாய்த்து தூங்கச் செய்துகொண்டிருந்தார் ஸ்ரீராம்.
பரத்திடமிருந்து போன் வருவதைப் பார்த்து, “நந்தும்மா, போன் வர்றதுடா,” என்று கூறி அவளை தலையணையில் படுக்க வைத்துவிட்டு, நகர்ந்து வந்து போனை எடுத்தவர், “என்னடா பரத், அடி பலமா? டாக்டருக்கு ஏதாவது போன் பண்ணனுமா?” என்று நக்கலடித்தார்.
“கிண்டல் பண்ணாதீங்கோ அத்திம்பேர், நான் ரொம்ப டென்ஷனா இருக்கேன், “ என்று மறுமுனையில் பரத் பல்லைக் கடிக்க, “பின்ன என்னடா, பர்ஸ்ட் நைட் ரூமுக்குப் போயிட்டு, அத்திம்பேருக்கு போன் பண்ற முதல் ஆளு நீயாதான் இருக்கணும்...என்ன? ஏதாவது டவுட்டா? தயங்காம கேளு, எனக்கு தெரிஞ்சத சொல்லித்தரேன்...”என்றார் கேலியாக.
“ஒண்ணும் தேவையில்லை, நான் போனை வைக்கிறேன், உங்களுக்குப் போயி போன் பண்ணினேன் பாருங்கோ என்னைச் சொல்லணும்,” என்று போன் வைக்கப் போனவனை, “டேய், கண்ணா, வெச்சுடாதடா, சாரி, சாரி கிண்டல் பண்ணலை, என்ன விஷயம் சொல்லு, எதுக்கு போன் பண்ணினே?” என்று சீரியசாகக் கேட்டார்.
நடந்ததையெல்லாம் ஒன்று விடாமல் விவரித்த பரத், “இப்போ நான் என்ன பண்ணட்டும், அத்திம்பேர் நீங்களே சொல்லுங்கோ?” என்றான்.
“அவ்வளவுதானே, நீயும் போயி படுத்துண்டு தூங்கு, இதுல என்ன சந்தேகம் உனக்கு?” என்று சர்வ சாதாரணமாகக் கேட்டார் ஸ்ரீராம். “ஐயோ, அந்தப் பொண்ணு தூங்கிண்டு இருக்கா அத்திம்பேர் என்னோட பெட்ல, நானும் போயி எப்படி அங்கேயே தூங்கறது?” என்றான் அறைக்குள்ளே எட்டிப் பார்த்தபடி.
“ஏண்டா, அவளால உன்னோட கற்புக்கு ஏதாவது ஆபத்து வந்துடும்னு பயமா இருக்கா? பரவாயில்லடா, எப்படி இருந்தாலும், ஆத்துக்காரிதானே, அப்படியே ஆபத்து வந்தாலும் யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டா, நீ போயி தைரியமா தாச்சுக்கோ போ,” என்றார்.
ஸ்ரீராமின் கிண்டல் தாங்காது தலையில் அடித்துக்கொண்டவன், “உங்களுக்கு என்ன ஆச்சு அத்திம்பேர், ஏன் இப்படியெல்லாம் பேசறேள், நான் சொல்ல வர்றது புரியலையா இல்ல புரிஞ்சுண்டும் உங்க டைம்பாசுக்காக என்னை கிண்டல் பண்ணிண்டு இருக்கேளா?” என்றான் சிறிது கடுமையாக.
அவன் மனம் புரிந்தாலும், அவனாகவே கூறவேண்டும் என்று எண்ணியவர், “இப்போ என்னதான் பண்ணனும்கிற? நீயே சொல்லுப்பா,” என்க, “பொண்களுக்கு எப்பவுமே இந்த செக்யூரிட்டி இன்ஸ்டின்க்ட்ஸ் (Security Instincts) கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கும். எங்கேயும் போயி என்ன வேலையானாலும் செஞ்சுடுவா, ஆனா ஒரு புது இடத்துல தூங்கறதுக்கு முன்ன ஒரு தடவைக்கு நாலு தடவை செக்யூரிட்டியைப் பத்தி யோசிப்பா. ஆனா இந்த பொண்ணு, என்னதான் கோபமா பேசினாலும், வேத்திடம் அப்படிங்கற ஒரு உணர்ச்சியே இல்லாம, படுத்துண்டு சட்டுனு தூங்கிட்டா, அவ பக்கத்தில போயி படுத்துண்டு தூங்க நேக்கு தயக்கம் ஒண்ணும் இல்லை, ஆனா அது அந்த பொண்ணை சங்கடப்படுத்திடுமோன்னு யோசனையா இருக்கு. சரின்னு கௌச்லையோ, சோஃபாலையோ தூங்கவும் ஈகோ ஒத்துக்க மாட்டேங்கறது, ரொம்ப டயர்டா இருக்கு, அத்திம்பேர்,” என்றான் சோர்வாக.
“நீ கொஞ்சம் ஓவராவே யோசிக்கறயோன்னு தோணறது பரத், இதையெல்லாம் பத்தி கவலைப்பட வேண்டிய அந்த பொண்ணே நிம்மதியா தூங்கிண்டு இருக்கா, நீ ஏன்பா மண்டையை உடைச்சுக்கறே, பேசாம நீயும் போயி படுத்துண்டு தூங்கு...” என்று பேசிக்கொண்டே இருக்கையில், அவர் கையிலிருந்து போன் பிடுங்கப்பட்டது, பொறுமையற்றுப் போன நந்தினியால்தான்...
“டேய் பரத், இந்த நேரத்துல என் ஆத்துக்காரரோட உனக்கு என்னடா பேச்சு? பர்ஸ்ட் நைட்ல புது பொண்டாட்டிய விட்டுட்டு அத்திம்பேரோட அரட்டை அடிச்சுண்டு இருக்கே, பேசாம போயி தூங்குடா இல்லைன்னா நான் வருவேன் இப்போ ஹாக்கி பேட் எடுத்துண்டு...உன் மண்டைய ஓடைக்க...தூக்கம் வரதுடா...” என்று காட்டமாய் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தாள் நந்தினி.
“உன்னை யாருடி தூங்கவேண்டாம்னு சொன்னது, நீ பாட்டுக்க தூங்க வேண்டியதுதானே, உன்னை யாரோ கையப் பிடிச்சு தடுத்தாமாதிரி கத்திண்டு இருக்கே, மனுஷனோட டென்ஷன் புரியாம...” என்று அவன் எகிற, ஏதோ பிரச்சினையோ என்றெண்ணி கணவனிடம் என்ன என்பதுபோல் தலையை கேள்வியாய் உயர்த்தினாள்.
அவரும் சிரித்த முகமாய் ஒன்றுமில்லை என்று தலையை ஆட்ட...நிம்மதியானவள்... “தலைகாணி இல்லாம எப்படிடா தூங்கறது, நீதான் என்னோட தலைகாணியோட அர்த்தராத்திரியில அரட்டை அடிச்சுண்டு இருக்கியே...எனக்கு வர்ற கோபத்துக்கு...மரியாதையா போனை வெச்சுட்டு போய் தூங்கு, போனை வைடா...” என்று திட்டிய அக்காவின் பேச்சைக் கேட்டு தன் குழப்பங்களையும் மீறி சிரிப்பு வந்தது பரத்துக்கு. “போம்மா, போ... உன்னோட தலகாணிய அழைச்சுண்டு போய் நன்...னா தூங்கு...” என்றுவிட்டு போனை ஆப் செய்தான் பரத்.
நந்தினியும் ஸ்ரீராமின் சட்டையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் மீண்டும் சேம் பொசிஷனில் படுத்துத் தூங்க ஆரம்பித்தாள். மார்பின் மீது தலை வைத்திருந்த மனைவியின் கூந்தலை மெல்ல வருடி “நந்து குட்டி, உங்க அம்மா ஜீனியஸ்டி,” என்று கூறிய கணவனின் நெஞ்சிலே மேலும் நெருக்கமாய்ப் புதைந்து கொண்டு, “ம்ம்...தெரியும், தெரியும், இருந்தாலும் நீங்க சொன்னேள்னு கார்த்தால நான் அம்மாகிட்ட சொல்றேன்,” என்று தூக்கத்தைத் தொடர்ந்தாள்.
ஸ்ரீராமுடன் பேசிய பிறகும் பரத்தின் மனதிலிருந்து தயக்கம் நீங்கவில்லை, சிறிது நேரம் பால்கனியிலே நின்றிருந்தவனை காலையிலிருந்து திருமணம், வேலை என்று ஓயாமல் அலைந்த அசதி வெகுவாய் அழுத்த அறைக்குள் நுழைந்தான். அத்திம்பேர் கூறியது போல படுக்கையின் இன்னொரு பக்கம் படுத்துக்கொள்ள ஏனோ அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால், அறையின் சிட்டிங் ஏரியாவில் இருந்த ஒரு சோபாவில் அமர்ந்து டீப்பாய் மேலே கால்களைப் போட்டுக்கொண்டு அமர்ந்தவிட்டான். சில கணங்களில் எல்லா எண்ணங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு நித்ரா தேவியும் அவனை சுகமாய் ஆட்கொண்டாள்.
*********
யாரோ தன்னைத் தட்டி எழுப்பியது போன்ற உணர்வு ஏற்பட ராதிகாவிற்கு சட்டென்று விழிப்பு தட்டியது. ஒரு நொடி அவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்றே புரியவில்லை. பிறகுதான் அவள் தன் வீட்டில் இல்லை என்பதும், சென்னையில் கணவன் வீட்டில் இருக்கிறோம் என்பது உரைக்க, சட்டென்று திரும்பி படுக்கையின் மறுபக்கத்தைப் பார்த்தாள். காலியாக இருந்தது. அப்போதுதான், இரவு அவள் பரத்திடம் பேசியதும், அதன் பின்னர் அவன் பால்கனிக்குச் சென்றதும் நினைவுக்கு வந்தது.“எங்கே இவரைக் காணோம், ஆனாலும் கொஞ்சம் அதிகமாத்தான் பேசிட்டேனோ, கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாம, இப்படி தூபரதண்டி மாதிரி படுத்துண்டு தூங்கிருக்கேனே அவர் என்னைப் பத்தி என்ன நெனைச்சிருப்பார். படுக்கையில படுத்துண்டு தூங்கலைன்னா எங்கே போயிருப்பார்? ஒரு வேளை பால்கனிலேயே தூங்கிடாரோ, ஐயோ ஒரே குளுரா இருந்திருக்குமே...ச்சே ஏன்தான் இப்படியெல்லாம் பண்ணறேனோ?” என்று தன்னைத்தானே சாடியபடி படுக்கையறையை விட்டு வெளியே வந்தவளுக்கு சோஃபாவில் அமர்ந்தபடியே தூங்கும் பரத்தைப் பார்த்து ‘ஐயோ’ என்றாகிப் போனது.
“சீ பாவம், என்னாலதான் இவர் இப்படி சோஃபால தூங்கவேண்டியதா ஆயிடுத்து. எழுப்பி வேணா படுக்கையில படுத்துண்டு தூங்கச் சொல்வோமா?” என்று யோசித்தவள், எப்படி எழுப்புவது என்று தயக்கமாய் இருக்க அவனை அப்படியே தூங்குவதற்கு விட்டுவிட்டாள்.
தாய் எடுத்து வைத்திருந்த மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தவள், குளித்துவிட்டு வெளியே வந்து பார்க்கையில் பரத் சோஃபாவில் இல்லாமல் படுக்கையில் படுத்துக்கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான். மனதில் லேசான திருப்தியுடன், அதிக சப்தம் செய்யாமல், அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். வீடே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது.
மெதுவாகக் கீழே இறங்கி வந்தவள், அம்மாவின் அறைக்குச் சென்று பார்க்க, அவர் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார், அவரை எழுப்ப மனமில்லாமல், அறையை விட்டு வெளியே வந்தவள் சமையலறையில் மட்டும் விளக்கு எரிந்துகொண்டு இருந்ததைக் கண்டாள். தயக்கத்தோடு உள்ளே நுழைந்தவளை புதிதாகப் போட்ட டிகாக்ஷன் மணம் வரவேற்றது. ஆழ்ந்த மூச்சுடன் புது டிகாக்ஷனின் மணத்தை உள்ளிழுத்துக்கொண்டே சமையலறைக்குள் வந்த ராதிகாவை “குட் மார்னிங், ராதும்மா...என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டே, மணி அஞ்சுதானே ஆறது” என்று அங்கு காபி குடித்துக்கொண்டிருந்த பர்வதம் வரவேற்றார்.
அவரைப் பார்த்து சங்கோஜமாக புன்னகைத்த ராதிகா, மெல்லிய குரலில், “இல்லைம்மா, நேக்கு எப்போவுமே சீக்கிரம் எழுந்து பழக்கம்தான். அதனால தன்னால முழிப்பு வந்துடுத்து.” என்று கூறினாள்.
“காபி குடிக்கிற பழக்கம் இருக்குல்லியா? இல்லன்னா வேற என்ன குடிக்கிற?” என்று கேட்டபடியே எழுந்தவரிடம், “ம்ம், குடிப்பேன்மா, கார்த்தால காபி குடிச்சாதான் முழுசா முழிச்சுண்ட மாதிரியே எனக்கு. நீங்க உக்காருங்கோம்மா, நானே போட்டுக்கறேன்,” என்று காபி போடப்போனவளைக் கைப்பிடித்து சேரில் உட்காரவைத்து, “இரு நான் போட்டு குடுக்கறேன், எவ்வளவு சக்கரை போடட்டும்” என்றபடி காப்பி கலக்க முற்பட்டார். “ஒரு ஸ்பூன் போறும்மா,” என்றவளின் கையில் ஆவி பறக்கும் காப்பியை கொடுத்தவர், தானும் இன்னொரு காபியைக் கலந்துகொண்டு அவளுடன் அமர்ந்துகொண்டார்.
“காபி சாப்பிடற இந்த கொஞ்ச நாழிதான் நமக்கு கிடைக்கப்போற ஃப்ரீ டைம், இன்னிக்கி நெறைய்ய வேலை இருக்கும்மா ராது, பரத்தோட குரு வரப்போறார், ஏழு மணியில இருந்து எட்டு மணி வரை குரு ஹோரை இருக்கு, அந்த டைம்ல பரத் ருத்ர ஹோமம் பண்ணனும்னு சொல்லிருக்கார், நீயும் அவனோட சேர்ந்து சங்கல்பம் பண்ணிக்கணும், அதுக்கான ஏற்பாடெல்லாம் பண்ணனும், கீது இப்போதான் வாசல்ல கோலம் போட்டுட்டு குளிக்க போனா, நீ தோட்டத்துல போயி பூ பறிச்சுண்டு வா, நான் பூஜை ரூம் சுத்தம் பண்ணிடறேன், இன்னும் அரைமணி நேரத்துல எல்லாம் ரெடியா இருக்கலைன்னா உன் ஆத்துக்காரன் துர்வாசன் இருக்கானே வந்து ருத்ர தாண்டவமே ஆடிடுவான்.” என்றபடி ஒரு பூக்குடலையை அவள் கையில் கொடுத்துவிட்டு பூஜையறையைச் சுத்தம் செய்ய விரைந்தார்.