Padmamohan
அமைச்சர்
Semma radhu ma.. summa pinra po
மற்ற நால்வரின் ஒப்பனைகளும் மேக்கப்பும் அதேபோலவே முடிவு செய்யப்பட, ராதிகாவிற்கு ஒப்பனையைக் கலைக்க உதவி செய்துவிட்டு, நாளை காலை பத்து மணிக்கு வருவதாகக் கூறிவிட்டு ஒப்பனையாளர்கள் கிளம்பினார்கள்.
சரியென்று ஒருவழியாக உடைமாற்றிக்கொண்டு, ரிசப்ஷனுக்கான உடையையும் நகைகளையும் பத்திரமாக வைத்து மீண்டும் பர்வதத்திடமே ஒப்படைக்கும்படி துளசியையும் பானுவையும் அனுப்பியவள், “ஆமாம் மேகா, ரிசப்ஷனுக்கு என்ன ஏற்பாடெல்லாம் பண்ணியிருக்கேள்னு என்கிட்டே எதுவமே சொல்லவே இல்லையே,” என்று கேட்க, “எல்லாம் பக்கவா ரெடியாயிண்டு இருக்கு மேடம்,” என்று கூறியவளை எரிக்கும் பார்வை பார்த்து, “எப்படி, இப்போ பியூட்டிஷியன் வந்தாளே அவாளை மாதிரியா?” என்று கேட்டாள்.
“இல்லை, மேடம்...அப்படியில்லை...” என்று மேகா திணற...”சரி போகட்டும் விடு, இதுவரைக்கும் எதுவும் சொல்லலை, இப்போவாவது சொல்லலாம் இல்லையா?” என்று கேட்டாள்.
“பண்ணலாம் மேடம், பாஸோட ஆபீஸ்ல இவென்ட் பத்தின ப்ரேசெண்டேஷன் இருக்கு, இப்போவே வேணும்னாலும் பாக்கலாம்,” என்று உற்சாகமாய்க் கூறினாள் மேகா.
இருவரும் பரத்தின் அலுவலக அறையைச் சென்றடைந்த பொழுது, அறையின் ஜன்னலருகே நின்று அரவிந்தும் பரத்தும் மும்முரமாக எதைப் பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்த இருவரையும் பார்த்து “என்ன” என்பது போல் பரத் புருவம் உயர்த்த, “வாயத் திறந்து பேசற பழக்கமே இல்லையோ இவருக்கு, எப்போ பாத்தாலும் கண்ணைக் காட்டிண்டே இருக்கறது, பகவான் இவருக்கு வாயைக் குடுத்ததை விட இன்னும் ரெண்டு புருவம் எக்ஸ்ட்ராவா குடுத்துருக்கலாம், புருவத்தை ஒசத்தி ஒசத்தி பேச வசதியா இருந்திருக்கும்” என்று நினைத்துக்கொண்டாள் ராதிகா.
“பாஸ், மேடம்க்கு இவன்ட் அரேஞ்ச்மென்ட் பத்தின அப்டேட் குடுக்கணும்,” என்று கூற, சரி என்பது போல் தலையாட்டிவிட்டு இருவரும் பேச்சைத் தொடர்ந்தனர். “உக்காருங்க மேடம், இப்போ ஸ்டார்ட் பண்றேன்” என்று தனது லேப்டாப்பை எதிர் சுவற்றில் இருக்கும் QLED தொலைக்காட்சியில் இணைக்க முற்பட்டாள் மேகா.
உட்காரலாம் என்று அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தவள் கண்ணில் அந்த விஸ்தாரமான அறையின் ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த லெதர் சோபா கண்ணில் பட்டது. அதில் உட்கார்ந்தால் தோதுப்படாது, வேறெங்கு உட்காரலாம் என்று திரும்பியவள் பார்வையில் ஒரு பெரிய மஹாகனி டேபிளும், அதன் பின் இருந்த சுழலும் நாற்காலியும் மேஜைக்கு முன் போடப்பட்ட இரு நாற்காலிகளும் பட்டன.
அங்கிருந்து பார்த்தால் சரியாக இருக்கும் என்று தோன்றவே, போடப்பட்டிருந்த நாற்காலிகளைக் கடந்து சென்று, டேபிளின் மேலிருந்த காகிதங்களை ஒரு பக்கமாக நகர்த்திவிட்டு, லேசாகத் துள்ளி அதன் மீது ஏறி, இரு கைகளையும் தனக்கு இருபுறமும் மேஜையின் விளிம்பில் ஊன்றி, கால் மேல் கால் போட்டு வசதியாக உட்கார்ந்துகொண்டாள் ராதிகா.
அதுவரை அரவிந்திடம் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்த பரத்தின் கவனத்தை ராதிகா உட்கார்ந்த தோரணை ஈர்க்கவே, பேசுவதை நிறுத்திவிட்டு, அவள்புறம் திரும்பி, முதல்முறையாக, அவளை கவனிக்க ஆரம்பித்தான்.
தொலைக்காட்சியில் விளக்கக் காட்சியும் தொடங்க, இருபது நிமிடங்கள் ஓடிய வீடியோவை மௌனமாகப் பார்த்தவள், அது முடிந்ததும், “ஆமா, இந்த டிசைன், பூ அலங்காரம் இதையெல்லாம் யாரு முடிவு பண்ணினா?” என்று மேகாவைப் பார்த்து கேட்டாள். “பாஸ்தான் பண்ணினார் மேடம்,” என்று மேகா பதிலளிக்க, “அப்படியா? இது யாரோட ரிசப்ஷன்?” என்று எதிர்கேள்வி கேட்டாள் ராதிகா.
இது என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி என்பதுபோல, “பாஸோட ரிசப்ஷன் மேடம்” என்று மேகா கூற, “அப்போ ரிசப்ஷனுக்கு உங்க பாஸ் மட்டும் வந்தா போதுமா?” என்று நோகாமல் குண்டு போட்டாள், ராதிகா. “அதெப்படி மேடம், ப்ரைட் (bride) இல்லாம ரிசப்ஷன் எப்படி நடக்கும்? என்று அப்பாவியாக மேகா கேட்க, “இங்க எனக்கு பிடிச்சாமாதிரி ஒண்ணுமே இல்லையே, நான் எதுக்கு வரணும்,” என்று சீரியசாகக் கேட்டாள் ராதிகா. இவர்கள் பேசுவதை இப்போது வெகு சுவாரசியமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் பரத்.
மேகாவிற்கு கிலி பற்றிக்கொண்டது. “இதுல...இதுல என்ன பிடிக்கல மேடம்” என்று திக்கியபடி கேட்க, “எனக்கு பிங்க் ரோஸ் பிடிக்கல, யெல்லோ ரோஸ் மாத்துங்கோ” என்றாள். “ஆனா மேடம், பேக்கிரவுண்ட் யெல்லோ கலர், யெல்லோ ரோஸ் மாத்தினா செட் ஆகாது,” என்று கூற, “அப்போ பேக்கிரவுன்டையும் மாத்துங்கோ,” என்றாள் கூலாக. “ம்ம்...யெல்லோ ரோஸ்க்கு மேட்சா என்ன பேக்கிரவுண்ட் நன்னா இருக்கும்?” என்று கன்னத்தில் விரலால் தட்டி யோசித்தவள் “ஹான், மயில் கலர், அதாவது லைட் கிரீன், லைட் ப்ளூ, பீகாக் ப்ளூ, டார்க் ப்ளூ இந்த கலரெல்லாம் கலந்து பேக்கிரவுண்ட் ரெடி பண்ணுங்கோ,” என்றாள்.
இவ்வளவு நேரம் ராதிகாவிற்கு பதிலளித்துக் கொண்டிருந்த மேகா, இப்போது பரத்தைப் பார்த்து, “பாஸ், எல்லா டெகரேஷன்சும் கிட்டத்தட்ட முடிஞ்சு போச்சு, இருபதாயிரம் பிங்க் ரோஸ் ஆர்டர் பண்ணி, டெலிவரியும் ஆயிடுத்து, அதை அரேஞ் பண்ணவேண்டியதுதான் பாக்கி, இப்போ மாத்த சொன்னா எப்படி பாஸ்?” என்று சப்போர்டுக்குப் போக, “இப்படித்தான் நீங்க இவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்தறேளா? கல்யாணப் பொண்ணுக்கு என்ன பிடிக்கும்னே தெரியாம, என்கிட்டே கலந்து பேசாம ரிசப்ஷனுக்கு நீங்க எப்படி ஏற்பாடு பண்ணினேள்? தமிழ்நாட்டு கல்யாணப் பொண்ணுக்கு மேக்கப் பண்ண தமிழே பேசாத பியூடிஷியன்சை கூட்டிண்டு வந்திருக்கேள், அவாளுக்கு நாம பேசறதும் புரியல, நம்ம சம்பிரதாயங்களும் தெரியல, இதுதான் நீங்க இவென்ட் நடத்தற லட்சணமா?” என்று பொரிந்து தள்ளியவளை எப்படி சமாதானம் செய்வது என்று அறியாமல் கையைப் பிசைந்தபடி மேகா பரத்தைப் பார்க்க, அவன் ராதிகா சொல்வதைச் செய் என்பது போல் சைகை செய்தபடி அவர்களின் சம்பாஷணையை அதிதீவிரமாகக் கவனிக்க ஆரம்பித்தான்.
“ஓகே மேடம், கோவிச்சுக்காதீங்கோ, நான் பிங்க் ரோசை யெல்லோவாகவும் பேக்கிரவுண்டை நீங்க சொன்னா மாதிரியும் மாத்தச் சொல்றேன், ஆனா ஏற்கனவே டெலிவரி வாங்கியிருக்கற பிங்க் ரோசை என்ன பண்றது மேடம்? அதெல்லாம் வேஸ்டா போயிடும், திருப்பியும் குடுக்க முடியாதே?” என்று கேட்டாள்.
“ஏன் திருப்பிக் குடுக்கணும், அந்த பூவையெல்லாம் கற்பகாம்பாள் கோவிலுக்கு அனுப்பி நாளைக்கு அம்மனுக்கு நம்பாத்து உபயத்துல சப்பரம் கட்டச் சொல்லுங்கோ, அதுக்கு மேலையும் பூ மீந்துதுன்னா, கோவிலுக்கு வர்ற சுமங்கலிகளுக்கு குடுக்கச் சொல்லுங்கோ, புண்ணியத்துக்கு புண்ணியமும் கிடைக்கும், பூவும் வெஸ்ட் ஆகாது” என்றாள்.
அடுத்ததாக, “அப்பறம், உங்க பாஸ் ரிசப்ஷனுக்கு என்ன ட்ரெஸ் போட்டுக்கப் போறார்? பட்டு வேஷ்டி பட்டு சட்டைதானா? என்று அமைதியாய் நின்று அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை வம்புக்கு இழுத்தாள். இப்படியான நேரடி வம்பை எதிர்பார்க்காதவன், வந்த புன்னகையை அடக்கிக்கொண்டு பிடிவாதமாய் மௌனம் சாதிக்க, “பாஸுக்கு டிசைனர் ஷெர்வானி ரெடி ஆகி இன்னிக்குதான் டெலிவரி ஆச்சு மேடம், ஒரு நிமிஷம் காட்டறேன் பாருங்கோ,” என்று மேகா அவள் கொண்டுவந்திருந்த ஷெர்வானியைக் காட்டினாள். அடர் நீல நிறத்தில் தங்கப் பூக்கள் நெய்யப்பட்ட ஷெர்வானி பார்க்க அழகாய் இருந்தது, ஆனாலும் ரிசப்ஷன் என்றாலே ஷெர்வானிதான் என்ற எண்ணமே அவளுக்குப் பிடிக்கவில்லை, “நெனைச்சேன், இப்படி க்ளிஷேவா (clishe) ஷெர்வானிதான் வாங்கியிருப்பேள்னு நெனைச்சேன்,” என்று கூறியவள், மேகாவை நோக்கி கையை நீட்டி, “பென் குடு,” என்றாள். “இப்போ எதுக்கு சம்பந்தமில்லாம இவங்க பென் கேக்கறாங்க?” என்று யோசித்தவாறே தன் கையில் இருந்த பேனாவை ராதிகாவிடம் கொடுக்க, அதை வாங்கியவள் மெதுவாக பரத்தின் முன் சென்று நின்றாள்.
அதுவரை கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்த பரத்திற்கு மிக நெருக்கமாக, ஆனால் அவனைத் தொடாமல் நின்றவள், தலை நிமிர்ந்து அவன் கண்களைச் சந்தித்தாள். அவளுடைய பார்வையை தனது ஊடுருவும் பார்வையால் சந்தித்தவன், “இப்போது என்ன செய்யப்போகிறாய்?” என்பதுபோல் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான். அவனுடைய விழி தொடுத்த கேள்விக்கு பதிலளிக்கும் விதத்தில் கையிலிருந்த பேனாவால் அவனுடைய முகத்தை ஒரு பக்கமாகத் திருப்பினாள், ஆச்சரியத்தில் விழிவிரிய அடக்கமாட்டாத புன்னகையுடன் அவள் திருப்பிய திசையில் முகம் திருப்பி நின்றான் பரத். அவன் மீதிருந்த பார்வையை விலக்காமல் “மேகா, உன்னோட பாஸுக்கு ஷேவ் பண்ற பழக்கமே இல்லையா, இப்படி காடட்டமா தாடியை வளர்த்து வெச்சுருக்கார், இந்த முடி காட்டுக்குள்ள அங்கங்க கொஞ்சமாத்தான் முகமே தெரியறது...” என்றபடி மீண்டும் பேனாவால் அவன் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பியவள், அவனுடைய நெற்றியில் சரிந்து விழுந்த, ஜெல் போட்டு அடக்காத முன் நெற்றி முடியையும் பேனாவாலேயே நகர்த்தியவள், “ஒரு வேளை டி ராஜேந்தர் ஃபேனா இருப்பாரோ? என்னவோ போ, அவாவா மொகம், அவாவா இஷ்டம்,” என்று கூறியபடி அவன் கண்களை மீண்டும் சந்தித்தவள், பேனாவால் தனது கன்னத்தில் தட்டியபடி, “ஃபுல் ப்ளாக் சூட்” என்று கூறிவிட்டு, அவனருகில் இருந்து நகர்ந்து, பேனாவை மேகாவிடம் கொடுத்துவிட்டு அறையை விட்டு வெளியேறியவள், கதவருகில் சென்று திரும்பி,
“அப்பறம் ஒரு முக்கியமான விஷயம், உங்க சென்னைக்காராளுக்கு வேணும்னா நாத்தமடிக்கிற சென்ட் போட்டுக்கற பழக்கம் இருக்கலாம், எங்க ஸ்ரீரங்கத்துக்காராளுக்கு சென்ட் போட்டுண்டு நாத்தமடிக்கிற பழக்கம் இல்லை” என்று கூறிவிட்டு திரும்பியும் பாராமல் சென்றுவிட்டாள்...