கனவில் வந்த கள்வனே...!
அத்தியாயம் – 1
வான்மதியோ தனது வேலை முடிந்தது என்று கதிரவனிடம் தனது பணியை ஒப்படைக்க காத்திருந்தது. குயில்கள் தங்களின் இன்னிசையை இசைக்க பகலவன் என்னும் கதிரவன் பொன்மஞ்சள் நிறத்துடன் தன் கதிர்களை சுமந்தவண்ணம் கடலிலிருந்து எழுந்து வந்தான்.
புலர்காலை புலர்ந்தவுடன் எழுந்த கவிமலர், எழுத்தவுடன் தனது அறையின் ஜன்னலின் கதவைத்திறந்தாள்.. கதிரவனின் வரவைப் பார்த்ததும் மலரும் தாமரை போல கவிமலரின் முகமும் மலர்ந்தது. அந்த காலைப்பொழுதை இரசித்தபடி தனது பொருட்களை எடுத்து வைத்தவள், மணியைப் பார்த்துவிட்டு குளியலறைக்குள் புகுந்தாள்.. சிறிது நேரத்தில் தயாராகி வந்தாள்..
“என்னம்மா.. அதற்குள் ஊருக்கு கிளம்பிவிட்டாய்.. இன்னும் இரண்டு நாள் இருந்துவிட்டு கிளம்பலாம்..” என்றாள் மாலதி
“இல்லங்க எனக்கு வேலை அதிகமாக இருக்கிறது, அதனால் நான் இன்றே கிளம்ப வேண்டும்” என்று பட்டும்படாமல் பேசினாள்
“இரும்மா, உங்க மாமாவை வண்டியேத்தி விட சொல்கிறேன்!” என்றாள் மாலதி..
“இல்லங்க அவருக்கு வேலை இருக்கும்.. நான் போய் கொள்வேன்” என்றாள் கவிமலர்..
“அவர் சொன்னதை மனதில் வைத்துக் கொள்ளாதே..” என்று தயக்கமாகவே கூறினார் மாலதி
“நான் எதையும் மனதில் வைத்துக் கொள்ளவே இல்லை போதுமா..!” என்ற கவிமலர் கலப்பாக சிரித்தாள்..
“சரிம்மா போனவுடன் போன் பண்ணு!” என்று கூறினார் மாலதி.
தன் உடமைகளை எடுத்துக் கொண்டு வந்தவளின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது, ‘ச்சே இது என்ன கண்ணீர்’ என கண்களின் கண்ணீரை அடக்கியவள் மாலதியிடம் விடைப்பெற்றுக் கொண்டு, வெளியே நின்றிருந்த ஆட்டோவில் ஏறினாள்..
ஆட்டோ இரயில் நிலையத்தில் நின்றவுடன், ஆட்டோ டிரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு,மும்பை இரயில் நிலையத்திற்குள் சென்றாள்..
“சென்னை செல்லும் இரயில் மூன்றாம் பிளாட்பாரத்தில் இருந்தது இன்னும் பத்து நிமிடங்களில் புறப்பட தயாராக உள்ளது!” என்று ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வெளியானது..
அறிவிப்பைக் கேட்ட கவிமலர் ரயிலில் ஏறி, தனது இருக்கையில் சென்று அமர்ந்தாள். அவளுக்கு எதிரே இருந்த பெண் சிநேகமாய் புன்னகைக்க, இவளும் புன்னகைத்தாள்..
“நீங்க சென்னையா..?” என்றாள் அந்தப்பெண்
“இல்லை” என்றாள் கவிமலர்.
“பிறகு இந்த டிரைனில் வரீங்க..?” என்றாள் அவள்..
“நான் எங்கு சென்றால் உங்களுக்கு என்ன..?” என்றாள் கவிமலர் எரிச்சலாய் கேட்டாள்..
“இல்ல சும்மா..!” என்றாள் அந்தப்பெண்.
இரயில் கிளம்பியவுடன் தன்னுள் மூழ்கியவளாக, தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் இருப்பதைப் புரிந்துக் கொண்டாள்..
அவளின் நினைவுகள் அனைத்தும் ‘இந்த உலகில் உனக்கென இனி யாரும் இல்லை’ என்ற கருத்து கவிமலரின் மனதில் ஆழமாக பதிந்தது..
தனது யோசனையில் மூழ்கிருந்த கவிமலரை நடப்புக்கு அழைத்து வந்தது அந்த பெண்ணின் குரல்.. கண்விழித்து பார்த்தாள் கவிமலர்..
அவளின் பார்வையை உணர்ந்த அந்தப்பெண், “உங்களை எத்தனை முறை அழைப்பது..!” என்றாள் அவள்
“எதற்கு அழைத்தீர்கள்..?” என்றாள் கவிமலர்
“உங்களின் பெயரைத் தெரிந்துக் கொள்ளத்தான்..” என்றாள் அவள்
“என் பெயர் கவிமலர்..” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்..
“அப்பாடா! இப்பத்தான் உங்களை ஒருவழியாக பேச வைத்திருக்கிறேன்..” என்று பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவள், “என் பெயர் நிலா..” என்று ஒரு புன்னகையுடன் கூறினாள்
“நிலா உங்களின் பெயர் நன்றாக உள்ளது..” என்று புன்னகையுடன் கூறினாள் கவிமலர்..
“அதிசயம்! ஐந்து வார்த்தைகள்.. ஒரு வாக்கியம் முழுதாக முத்தாக பேசிட்டிங்க..!” என்று ஆச்சரியமாக கூறினாள் நிலா.
“நிலா நீங்க என்னை கிண்டல் பண்றீங்க..” என்று கூறிப் புன்னகை சிந்தினாள் கவிமலர்..
“அப்புறம் என்ன கவி? நானும் நீங்க பேசுவீங்க என்று பார்த்தால், நீங்க ட்ரீமில் உக்காந்திருக்கீங்க.. உங்களைப்போல பேசாமல் இருக்க என்னால் எல்லாம் முடியாது..” என்று தயக்கம் சிறிதும் இன்றி, சரமாரியாக பேசினாள் நிலா..
“நிஜத்திலேயே.. என்னைப் போல பேசாமல் இருக்க உன்னால் முடியாது நிலா.. நீயெல்லாம் ஒரு நிமிஷம் பேசாமல் இரு என்று சொன்னால் உன்னுடைய உயிர் உன்னிடம் இருக்காது..” என்று நிலாவைக் கிண்டல் செய்து சிரித்தாள் கவிமலர்..
“கண்டுபிடிச்சீங்க..!” என்று அவளுடன் சேர்ந்து சிரித்தாள் நிலா..
“ஸாரி நிலா.. நான் வேறொரு யோசனையில் இருந்தேன்..” என்று தயக்கமாக கூறினாள் கவிமலர்..
“நட்புக்குள் ஸாரி, தேங்க்ஸ் இரண்டும் வரவே கூடாது..” என்று கண்டித்தவள் கவியின் கைகளை நட்புடன் பற்றிக்கொண்டு புன்னகைத்தாள் நிலா..
‘ஒரு சிறந்த நட்பு உருவாக பலவருடங்கள் தேவையில்லை.. ஒருநோடியே போதும் நாம் நண்பர்களாக!’ என்ற கூற்று உண்மையே என்று நிரூவித்தாள் நிலா..
“சரி இப்போதாவது நீங்கள் உங்களின் ஊரின் பெயரை சொல்லலாம் இல்லையா..?” என்றாள் நிலா
“திருப்பூர்..!” என்றாள் கவிமலர் ஒரு சிறிய புன்னகையுடன்..
“நான் சென்னை, என் அப்பா, அம்மா எல்லாம் மும்பையில் இருக்காங்க.. எனக்கு வேலை சென்னையில் தான்.. அதனால் அவர்களை விட்டுவிட்டு இங்கே வந்துவிட்டேன்..” பொய் கொஞ்சமும், மெய் கொஞ்சமும் கலந்து கவியின் முகத்தைப் பார்த்துக் கூறினாள்.
“ஒரு கேள்வி.. ஓராயிரம் பதில்கள்..” என்று வியந்தவண்ணம் சிரித்தாள் கவிமலர்..
“கவி! உன்னுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்கூட, உன்னிடம் பேச வேண்டும் என்றே தோன்றும்.. உன்னிடம் பழகியவர்களுக்கு நீ நிஜத்திலேயே கவிதைதான்..” என்று மனதில் பட்டத்தை வெளிப்படையாகக் கூறினாள் நிலா..
அவள் கூறுவதைக் கேட்டு கன்னத்தில் கைகளைத் தாங்கிக் கொண்டு “ஹும்ம்!” என்று சிரித்தாள் கவிமலர்.
“ம்ம் உண்மைதான் கவி! இந்த இரயில் பயணத்தில் எனக்கும் ஒரு தோழி கிடைத்திருக்கிறாள்.. உனக்கு தெரியாது கவி.. என்னிடம் நட்பு கொண்டவர்கள் அனைவரும் உள்ளத்தில் நெருங்கவில்லை.. நீ பழகிய சில நொடிகளிலேயே என்னுடைய உயிர்தோழி என்னும் இடத்தை பெற்றுவிட்டாய்.. யூ ஆர் சோ லக்கி..!” என்றாள் நிலா வலது கரத்தை கன்னத்தில் வைத்துக்கொண்டு கூறினாள்.. அவளின் குரலில் உண்மை இருப்பதைக் கவனித்தாள் கவிமலர்..
“சரிடீ வாயாடி!” என்று இருவரும் தங்களின் பேச்சை தொடர்ந்தனர்.. நல்லநட்பு இருவரின் இடையே அழகாக மலர்ந்தது.. இவ்வாறு சென்னை வருவதற்குள் இருவருக்கும் இடையே ஒரு புரிதலும் ஏற்பட்டது.. சென்னை பிளாட்பாரத்தில் இரயில் நின்றது..
இருவரும் சென்னை எக்மோர் இரயில் நிலையத்தில் இறங்கினர்.. அங்கே கவிமலரை திருப்பூர் இரயிலில் அமரவைத்தவள், “சரி கவி நான் கிளம்புகிறேன்.. இது என்னுடைய முகவரி.. இது என்னோட செல்நம்பர் கண்டிப்பாக போன் பண்ணு..!” என்றாள் நிலா
அதை வாங்கிய கவிமலர், நல்ல தோழியை பார்த்த சந்தோஷத்தில், “நீ லீவ் கிடைக்கும் போது கண்டிப்பாக என்னுடைய வீட்டிற்கு வா..” என்று தனது முகவரியை கொடுத்தாள்.
“நான் வரவில்லை என்றால் தான் அதிசயம்!” என்று சிரித்தவள், இரயில் கிளம்பும் அறிவிப்புக்கேட்டு இறங்கிய நிலா, “கவி மறக்காமல் போன் பண்ணு..” என்று கூற கவி, “நீயும் பத்திரமாக வீட்டிற்கு போ..” என்று கூறினாள்..
சரி என தலையசைத்த நிலா இரயில் கிளம்ப, தனது இரயில் தோழிக்கு கையசைத்து விடைக்கொடுத்தாள்.. அவள் முகம் மறையும் வரையில் பார்த்த கவிமலர் அடுத்து என்ன பண்ணுவது என்ற சிந்தனையில் இருந்தாள்..
முதல்நாள் காலையில் கிளம்பியவள், இரண்டாம் நாள் மாலை திருப்பூர் இரயில் நிலையத்தில் இறங்கினாள்.. அங்கிருந்து பழைய பஸ் நிலையத்திற்கு சென்றவள்.. அங்கிருந்து பல்லடம் பஸில் ஏறி வித்யாலயம் பஸ் ஸ்டாப்பில் இறங்கினாள்..
தனது வீட்டிற்கு செல்ல வழியில் இருந்த பசுமையான மரங்கள், கண்களுக்கு குளிர்ச்சியையும் மனதிற்கு நிம்மதியையும் வழங்கியது என்னமோ மறக்க முடியாத உண்மை..
அந்த வீடு அவளின் அன்னை ஜோதி வாழ்ந்த வீடு. அவளுக்குப் பிறகு அது தனது மகளுக்கு கிடைக்கும் படி செய்துவிட்டு இறந்து விட்டாள்.
பெற்ற பெண்ணையே சுமையென கருதும் இந்த உலகத்தில், வளர்த்த பெண்ணிற்கு அவளுக்கு இந்த நிலை ஒருநாள் வரும் என்று யூகித்து அவளுக்கென தனது வீட்டை எழுதிக்கொடுத்து விட்டு சென்ற தனது அன்னையின் பாசத்தை நினைத்தவாறு வீட்டினுள் நுழைந்தாள் கவிமலர்.. கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தாள்..
வீட்டின் உள்ளே இடதுபுறம் சமையலறை அதைக் கடந்து சென்றால், பெரிய ஹால் அதைக் கடந்து சென்றால் இரண்டு படுக்கை அறை அதற்கு பக்கத்தில் இருக்கும் வலது புறம் கதவைத் திறந்தால் மாடிக்குச் செல்லும் பாடிப்படிகள்.. இந்த மாடிப்படிகளுக்கு கேட்டில் இருந்து நேராகவும் வர முடியும்.. அதன் பக்கத்தில் பூக்கள் வைக்க இடமும் இருந்தது.. அதைப் பார்த்து கவிமலரின் கண்கள் கலங்கியது..
சிறு வயதில் இருந்து தனிமையில் இருந்தவளுக்கு இது ஒன்றும் புதிதாக தெரியவில்லை. பெட்டியை எடுத்து ஒரு இடத்தில் வைத்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்து தனது பொருட்களை எடுத்து வைத்தவள் கதவை சாத்திவிட்டு வந்து படுக்கையில் விழுந்தாள். அவள் கண்மூடி கனவில் ஆழ்ந்தாள்..
ஒரு பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தால் கவிமலர். அது குளிர்காலம் என்பதால் செடிக்கொடிகள் பசுமையாக இருப்பதைப் பார்க்க மனதிற்கு நிறைவாக இருந்தது..
அந்த பசுமையில் மனம் ஆழ்ந்திருக்க, “என்ன மலர் உனக்கு இந்த இடம் ரொம்ப பிடித்திருக்கிறது போல தெரிகிறது..” என்றது ஒரு ஆணின் குரல்..
சடாரென்று திரும்பிப் பார்த்தால், அங்கே ஆறடிக்கும் அதிகமான உயரத்துடன், சிவந்த நிறம்..அலையலையாய் கேசம்.. அளவான நெற்றி.. அடர்ந்த புருவங்கள்.. எதிரே இருப்பவரின் மனதைப் படிக்கும் கண்கள்.. கூர்மையான நாசி.. அளவான மீசை அதன் கீழே அழுத்தமான உதடுகள்.. கவிமலரின் கண்கள் அவனை நொடியில் அளவேடுத்தது..
“என்னம்மா அழகாக இருக்கிறேன் இல்ல..” என்றான் உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் கேட்டான் அவன்
“இல்ல..” என்று நொடியில் பதிலத்தவள்.. முகத்தைத் திருப்பி விளையாடும் சிறுவர்களைப் பார்த்தாள்.. பிறகு யோசனையுடன் அவன் பக்கம் திரும்பி, “என் பெயர் மலர் என்று உங்களுக்கு தெரியும்..?” என்று மெதுவாகக் கேட்டாள்..
“உன்னுடைய பெயர் மலர்தானா..! சூப்பர்..! என்னுடைய பெயர் கதிர்நிலவன்.. கதிர் அதாவது சூரியன் சூரியனுக்கு பிடித்த மலர் தாமரை.. அதேபோல நிலவன் என்றால் சந்திரன்.. சந்திரனுக்கு பிடித்த மலர் அல்லி.. இரண்டுமே மலர்கள்.. நீயும் அல்லியின் நிறத்தில் இருக்கிறாய்.. தாமரை மலரின் நிறத்தில் உடை.. ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டும் மலர்க்கு பொருத்தமாக இருந்தது.. சோ உன்னுடைய பெயர் மலர் என்று யுகித்துத் தெரிந்துக் கொண்டான்.. கடைசில் அதுதான் உண்மையும் கூட..!” என்று வியந்தான் கதிர்நிலவன்..
கவிமலரால் அவனின் ரசனையை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.. அவனின் உவமைகள் பார்த்து மனம் அவனிடம் மயங்கியது.. அவனின் பெயர் அந்த நொடியில் அவளின் இதயத்தில் இடம் பிடித்தது..