அத்தியாயம் 1
கதை ஒன்று ஆரம்பம்
தூக்கத்தில் இருந்து அப்போது தான் கண் முழித்தான் விழியன்.
அவனின் நிறம் இன்னுமொரு ஷேட் அதிகமாகியிருந்தாலும் ‘கறுப்பு நிறத்தழகன்’ என்பதற்கான பேச்சு மொழி வழக்கில் அழைக்கப்பட்டிருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்!
ஆனால் அவனின் களையான முகம் நிறத்தை பற்றி எண்ண முடியாதபடி செய்து விட்டது.
சென்னையில் ஒரு பிரபலமான தகவல் தொழில்நுட்ப கம்பெனியில் வேலை. நல்ல சம்பளம், வீடு கார் என்று எல்லா வசதியும் உண்டு!
தூக்கம் முழுவதும் கலைந்திருக்கவில்லை அவனுக்கு.முந்தின இரவில் அலுவலக பணியின் புண்ணியத்தால் நிகழ்ந்த தாமதமான நித்திரை! இன்னும் சற்று நேரம் தூங்கலாம் என்று மறுபடி புரண்டு படுத்தவனின் மேலிருந்த டைரி சரிந்து அவன் பக்கக் படுக்கையில் விழந்தது.
சிறுவயதில் ஆரம்பித்த பழக்கம், எத்தனை தாமதமென்றாலும் அன்றைய நிகழ்வை அதில் இரண்டு வரி எழுதாமல் அவனால் தூங்க முடிவதில்லை.அப்படி எழுதுவதை பத்திரப்படுத்தியும் வைத்திருப்பான்.. தன் அன்னையை கூட அதை படிக்க விடுவதில்லை! அத்தனை பொக்கிஷ பெட்டகம் அவனுக்கு அது!
காலத்தின் கோலம்!இப்படி தனியாய் எழுதி பார்க்க வேண்டியதையெல்லாம் முகநூலில் எழுதி ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய சூழ்நிலையில் இந்த யுகத்தில் அனேகம் பேர் உள்ளனர்! அப்படி செய்வதில் அவனுக்கு சிறிதும் உடன்பாடு இல்லை!
டைரியை அவன் கையில் ஏந்தி அதன் பக்கங்களை புரட்டலானான். முந்தின நாள் இரவில் பாதி எழுதிவிட்டு வைத்த பக்கத்தை காணவில்லை, அதை தேட போக அது காட்டிய பக்கத்தில் அவனின் பார்வையை பதித்தான் விழியன்
----
‘எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! என்னை அவள் படுத்தும் பாட்டில் வேலையை விட்டுவிட்டு வீட்டில் கூட இருந்துவிடலாமென்று இருந்தது!’
----
‘ம்ம்ச்..இதுவா என் கண்ணில் பட வேண்டும்!?’
அலுத்துக் கொண்ட படி ஒரு கையால் தன் தலை கோதிக் விட்டவன் மறுகையால் அதன் பக்கங்களை புரட்ட ஆரம்பித்தான், காலையில் நல்ல விஷயம் எதுவும் கண்ணில் படாதா என்ற நப்பாசையில்! ஆனால் அந்த டைரி முழுவதற்கும் அவளின் விஷயம் மட்டுமே இருந்தது போலும்! டைரியின் பக்கங்களை புரட்ட மற்றொரு நாளும் அதே போல் ஏதோ இருந்தது!
----
‘சற்று முன்பு நடந்த நிகழ்வை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. காபி எடுக்க சென்ற என்னை வழிமறித்து,
“எப்ப உன் சம்மதத்தை சொல்ல போறே? நான் நம்மை பற்றி எங்க வீட்டில் பேசணும் ” என்றாள்.
அவள் உடல்மொழியும், அநாகரிகமாக என்னை நெருங்கி நின்ற விதமும் எரிச்சலை கிளப்ப , நான் பதிலளிக்காமல் அவளை தாண்டி செல்ல முயன்றேன்!
என் வழியை மறித்தாள்.
“ என்னை தொந்திரவு பண்ணாதே , வழியை விடு!” நான் சொன்னதை சிறிதும் சட்டை செய்யாது, மேலும் அபாயகரமாய் என்னை நெருங்கி
“இந்த மாதிரி ஸ்மார்ட்டா இருந்து ஏன் என்னை படுத்திற?”
என் கன்னத்தில் கைவைத்து சொன்னாள்
“தொட்டு பேசாதேன்னு எத்தனை தடவை சொல்றது!” என்றபடி அவள் கையை தட்டி விட்டு அகல நான் முயல, அவள் கையில் கொதித்து கொண்டிருந்த காபியை என் மேல் ஊற்றிவிட்டாள், வேண்டுமென்றே!
----
டைரியை அதற்கு மேல் படிக்காமல் மூடி வைத்தான். அவளை பற்றிய விஷயங்களை இந்த நொடி நினைத்து பார்க்க கூட அவனுக்கு இஷ்டமில்லை. இனிமையான இந்த காலை பொழுதில் அந்த பாதகியை யாராவது நினைப்பார்களா?
‘வேணாம் அழுதிடுவேன், அந்த விஷயத்தை விட்டு வெளியே வா’ அவன் மனம் புலம்ப ஆரம்பிக்கவும், அதை சமாதானப் படுத்தும் விதமாய், அவன் கையில் இருந்ததை கட்டிலுக்கு அடியில் வைத்தாலும்,அவனின் மனம் என்னும் மாயக் குரங்கு , வலி அதிகம் உள்ள விஷயங்களுக்கே அவனை மீண்டும் இழுத்து சென்றது ! அன்று நடந்த சம்பவங்களை யோசிக்க ஆரம்பித்தான்.
அவள் செய்த செயலுக்கு முறைக்க மட்டுமே முடிந்தது.பெண் என்ன சொன்னாலும் நம்பி விடுபவர்கள் ஜாஸ்தியாயிற்றே இந்த ஆபிஸில்!
அவளை முறைத்ததோடு அவன் ஆத்திரம் அடங்கவில்லை, ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை! அந்த இடத்தை விட்டு நேராக ரெஸ்ட் ரூம் சென்றான்.
காபி கரையை அகற்ற படாத பாடு பட்டுக் கொண்டிருக்க அவனை தேடி அங்கு வந்தான் மதன், அவனின் நண்பன்
“என்ன ஆச்சு?”
நண்பனை இவன் பார்த்த பார்வையில், மதனுக்கு எல்லாம் புரிந்து விட்டது!
“என்னால முடியலை. வேலையை விட்டிரலாம்னு இருக்கேன்”
சற்று நேரம் அமைதியாய் யோசித்த மதன்
“இவளுக்காக நீ ஏன் டா நல்ல வேலையை விடணும்? கம்பிளைண்ட் பண்ணிடலாம் வா” என்க
“சே , அவ லைஃப் என்ன ஆகுறது? யோசிக்காம எதை எதையோ செய்றா. விட்டு தள்ளு”
விட்டு பிடிக்கலாம் என்று நினைத்தேனே! விட்டால் பிடிக்க முடியுமா அவளை? எத்தனை முட்டாள்தனமான யோசனை ?! அதன் பிறகு அவளை சமாளிக்க என்ன வெல்லாம் செய்ய வேண்டி இருந்தது!
தொலைப்பேசி அழைப்பு சத்தம் கேட்டு நிகழ்வுக்கு வந்த விழியன், தன் அன்னை ரேணுகாவின் அழைப்பை பார்த்து போனை உயிர்பித்தான்
“என்ன மா”
“டேய் விழியா, நீ உடனே கிளம்பி இங்க ஊருக்கு வா”
“மா, திடீர்னு வான்னா எப்படி மா? ஊர் என்ன அடுத்த தெருவிலா இருக்கு?”
“அது எல்லாம் எனக்கு தெரியாது, எப்படியாவது வந்து சேரு டா”
“எப்படி வரணும்ன்னு , அதையும் நீங்களே சொல்லிடுங்க!”
“எப்படின்ன, பஸ்ல தான்! பஸ் கிடைக்கலைன்ன ரயில் பிடிச்சாவது வாயேன் டா”
பிடித்த பிடி எல்லாம் உடும்பு பிடி தான்
“அம்மா, எதுக்கு மா இத்தனை அவசரம் , யாருக்கு என்ன?”
மகன் பதறிவிட்டானோ என்று எண்ணிய அந்த தாய்
“யாருக்கும் எதுவும் இல்லை டா கண்ணா, நல்ல விஷயமா தான் வரச் சொல்றேன். உனக்கு நிச்சயம் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்கேன்”
காலையில் ஆரம்பித்து போல் இப்போது திரும்பவும் அவனுக்கு எரிச்சலின் அளவு கூடி விட்டது! திடீர் உப்மா போல் என்ன இது திடீர் நிச்சயம்..
“மா இப்ப என்ன மா அவசரம்? இருபத்தாறு இப்ப தான் முடிஞ்சது!”
“விழியா அதிகம் பேசாதே, சொல்றதை செய்.. இங்க எல்லா ஏற்பாடும் செய்தாச்சு, மாப்பிள்ளை நீ வருவது மட்டும் தான் பாக்கி..”
கோபம் தலைக்கேறியது! அன்னையிடம் கோபத்தை காட்ட முடியாதே!
“மா...என்ன மா”
“ஆமா டா, என் அண்ணன் பொண்ணுக்கு சென்னையில் வேலை கிடைச்சிருக்கு..”
அண்ணன் மகள் என்றதும் எரிமலையாய் பொங்கி கொண்டிருந்த எரிச்சல் எல்லாம் சட்டென்று அடங்கி விட்டது.!ஆனாலும் தன் வீண் ஜம்பத்தை விடாமல்
“அதுக்கு?”
“நம்ம வீட்டில் தங்கி வேலைக்கு போகட்டும்னு சொன்னேன், அது சரி வராதுன்னு சொல்லிட்டார் எங்க அண்ணே.”
“அதுக்கு”
“அதுக்கு தான் டா, சரி வர மாதிரி இருக்க இந்த ஏற்பாடு..!”
கல்யாணம் செஞ்சி வைக்க ஒரு காரணம்! தன்னிடம் சொல்லாமல் தன் அன்னை எடுத்த முதல் திடீர் முடிவு!
அம்மா செய்தது அதிகமாயிருந்தாலும், தன் மாமன் மகள் என்றதும் அவன் முகத்தில் ஒரு புன்னகை! அது அப்படியே நிலைக் கொண்டு விட்டதில் பதில் பேசவில்லை அவன்!
அவன் மனம் துள்ளல் போட்டது, அதில் லயித்திருந்தவன் பதில் சொல்ல சற்று தாமதப் படுத்தினான். மறு பக்கம் இருந்த அவன் அன்னைக்கு அவன் நினைப்பு தெரியாமல் இருக்குமா?
“என்னடா , வெண்பான்னு தெரிஞ்சதும் சத்தமே இல்லை..?உனக்கு அவ சரி பட்டு வருவாளா இல்லையா?” சிரிப்பை அடக்கியபடி ரேணுகா தன் மகனிடம் கேட்க
உடனே ஒத்துக்காதே என்று அவன் மைண்ட்ஸ் வாய்ஸ் வேறு எடுத்துக் கொடுத்தது!
அதற்கேற்ப
“ம்ம்..ம்ம்..பரவாயில்லை..அதான் வாக்கு கொடுத்திட்டீங்களே, இனி என்ன செய்ய முடியும்?”
“இல்லை விழியா , உனக்கு பிடிக்கலைன்ன சொல்லு எல்லாத்தையும் மாத்திடலாம்..நம்ம சொந்தத்தில் இன்னொரு பையன் கல்யாணத்துக்கு ரெடியா இருக்காப்ல"
மூளை வார்னிங் சைன் கொடுக்க, அம்மா விளையாடுகிறாள் என்று தெரியாமல்
“ஐய்யோ அம்மா அப்படி எல்லாம் எதுவும்..”
அவன் அவசரமாய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எதிர்தரப்பில் பயங்கர சிரிப்பு சத்தம். கூட்டமாக சிரித்தது போல!
“என்ன மா போனை ஸ்பீக்கரில் போட்டிருக்கீங்களா?”
“ஆமா டா, மாமாவும் உன் சம்மதத்தை கேட்கணும்னு ஆசை பட்டார், அதான்..”
“ஐய்யோ, மா”
அவனுக்கு வெட்கமாகி போனது. தன் இமேஜ் டோட்டல் டேமேஜ்.
“உங்களை... வச்சிடுறேன்” என்றபடி போனை வைத்தவன் இன்பக் கடலில் மூழ்கினான்.